திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
எப்பொழுதும் மூடியே இருக்கும் குடைவரை காளி சன்னிதி
காளியின் உருவமாக விளங்கும் சூலம்
கண்ணாடி மூலம் சூலத்தை வணங்கும் நடைமுறை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி.
இக்கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளளது, குடைவரை காளி சன்னிதி. இந்த சன்னிதியின் நுழைவுவாசல் எப்பொழுதும் மூடியே இருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
ஒரு சமயம் சதுர கள்ளி வனத்தில் கார்கவ முனிவர் தியானத்தில் இருந்தார். அப்போது ஒரு அரக்கன் பசியில் உணவு தேடித் திரிந்தான். புலி உருவத்தில் முனிவரை கொல்ல முயன்றான். அதைக்கண்ட முனிவர், 'உனக்கு புலி உருவமே நிலைக்கட்டும்' என்று சாபமிட்டார். பசியின் காரணமாக இப்படிச் செய்து விட்டதாகவும், தனக்கு விமோசனம் அருளும்படியும் அசுரன் முனிவரை வேண்டினான். அதற்கு முனிவர், 'வஜ்ரவனம் என்ற திருப்புனவாசல் பகுதிக்கு பார்வதியும் சிவனும் வரும்போது, பார்வதியின் பார்வை பட்டு உன்னுடைய சாபம் நீங்கும்' என்றார்.
தன் சாப விமோசனத்திற்காக அந்தப் பகுதியில் புலியாகவே சுற்றி வந்தான், அசுரன். ஒரு முறை பார்வதி அந்த வனத்திற்கு வந்தார். அவர் மீது புலியாக இருந்த அசுரன் பாய்ந்தான். அப்போது காளியாக உக்கிர வடிவத்திற்கு மாறிய தேவியின் பார்வை பட்டு,அந்த அசுரனுக்கு சுய உருவம் கிடைத்தது. மேலும் இத்தல அம்பாளின் முன்பு நந்தியாக இருக்கும் வரமும் கிடைத்தது.
தனது உடலில் பாதி உருவத்தை கொடுத்த சிவபெருமானிடம், உக்கிரமான காளி உருவத்தை காட்டியதற்காக அம்பாள் மன்னிப்பு கேட்டாள். ஆனால் சிவபெருமான், 'உனக்கு இந்த உருவம் நன்றாகத்தான் உள்ளது. இருப்பினும், இந்த உருவத்தை உனக்கு துணையாக குடை வரையில் வைத்துக்கொள். சுயரூபத்தோடு வந்து என்னுடன் இரு' என்று கூறியதையடுத்து, அம்பாள் சுய உருவதை அடைந்தார். ஒரு உருவத்தில் இருந்து மறு உருவம் எடுத்ததால், காளியின் உருவ வழிபாடாக சூலம் உள்ளது. அம்பாளின் சன்னிதிக்கு எதிரே இந்த குடைவரை காளி சன்னிதி உள்ளது. காளியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், இந்த சன்னிதியின் நுழைவு வாசல் கதவு மூடியே இருக்கும்.இதனால் அந்த சூலத்திற்கு எதிராக ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துதான் சூலத்தை வணங்க வேண்டும்.
சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் சீயாத்தமங்கை. இத்தலம் நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் 'கோயில் சீயாத்தமங்கை' என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநாமம் அயவந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் இருமலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி.
இக்கோவிலில் இறைவனும், அம்பிகையும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன், அம்பிகை சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் இரண்டு தனி கோவில்களாக விளங்குகின்றன.
அம்பிகை இருமலர்க்கண்ணம்மை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகை சிவ சொரூபியாக விளங்குகின்றாள். அம்பிகை சிவபெருமானைப் போல் ஜடாமுடி தரித்து, நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்சியளிக்கிறார். அம்பிகையின் ஜடாமுடியில் சூரிய, சந்திர பிறைகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் அம்பிகையின் கழுத்தில் ருத்ராட்ச மணி அலங்கரிக்கின்றது. அம்பிகையின் தனிக் கோவிலில், சிவபெருமானுக்கு அமைந்த பரிவார தெய்வங்கள் போல் நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் அமைந்திருப்பது இத்தலத்து அம்பிகையின் தனிச்சிறப்பாகும்.
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அரிய காட்சி
நவக்கிரக தோஷத்தை நிவர்த்திக்கும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம், சித்தநாதேசுவரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதுபோல இக்கோவிலில், வழக்கமாக தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி அதற்கு மாறாக, மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள்.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி. காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவான கோவில் இது. பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப் பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமாக விருத்தபுரீசுவரர் விளங்குகின்றார். தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள சிவலிங்க மூர்த்தி இதுவாகும். தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, அதனை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது. ஆனால் இக்கோவில் சிவலிங்கம் சுற்றளவில் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது (சுற்றளவு 82.5அடி). சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.
செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அந்தணர் வேடத்தில் தோன்றி அரசனின் பிரச்சனையை தீர்த்த பொய்யாமொழி பிள்ளையார்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.
இக்கோவில் தெற்கு குளக்கரையில் உள்ள ஒரு சன்னதியில் வீற்றிருக்கும் பிள்ளையார், பொய் சொல்லா பிள்ளையார் (பொய்யாமொழி பிள்ளையார்) என்று அழைக்கப்படுகிறார். இவர் அரசருக்கு அவருடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் பிராமண வேடத்தில் தோன்றியவர், எனவே இவர் பொய்யாமொழி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் கோச்செங்கட்சோழன் தான்தோன்றீசுவரர் கோவில் கட்டத் துவங்கினான். கோவில் பணிகள் நடக்கும் போது, முதலில் கோவிலுக்கான மதில் சுவரை எழுப்பினான். காலையில் கட்டப்பட்ட மதில் சுவர் இரவில் தானாக விழுந்து விடும். இப்படி பலமுறை நடந்தது. கோச்செங்கட்சோழனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொல்லாப் பிள்ளையார் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும், ஆனால் மதில் சுவர் கட்டியவுடன் இடிந்து விழுந்து விடுகிறது என்றான். அதற்கு விநாயகர், நீ இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கி எழுந்து பார். உனக்கு எல்லாம் சரியாகும் என்றார். மன்னனுக்கோ, குளத்தில் மூழ்கினால் மதில் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர், காசியை விட இந்த குளத்திற்கு வீசம் அதிகம். நீ குளித்து எழுந்து பார் என்றார். அதன்படி கோச்செங்கட்சோழன் குளத்தில் மூழ்கி எழ, மதில் சுவரில் இருந்து கருவறை வரை எல்லாம் சரியாக அமைந்தது.
இப்படி கோச்செங்கட்சோழனுக்கு அருளிய பொல்லாப் பிள்ளையார் நம் அனைவர்களுக்கும் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்கிறார்.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
சனகாதி ரிஷிகள் உடன் இல்லாமல் இருக்கும், இடது கையில் நாகத்தை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான கோலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலின் தெற்கே பாம்பாறு ஆறு பாய்ந்து கோவிலுக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள கடலைச் சென்றடைகிறது. தமிழில் புனல் என்பது நதியைக் குறிக்கும். எனவே புனல்-வாசல் என்பது கடலில் நுழையும் நதியின் நுழைவாயில் (வாசல்) என்று பொருள்படும். அதுவே இத்தலத்தின் பெயராக அமையக் காரணமாகும்.
இக்கோவிலில் தென் புற கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய திருமேனியுடன் அமர்ந்த காலத்தில் காட்சி தருகிறார். சுற்றி உள்ள 14 மாவட்டங்களில் இவ்வளவு பெரிய தட்சிணாமூர்த்தி வடிவம் இல்லை. இவருக்கு யோக வ்யாக்ஞான தட்சிணாமூர்த்தி என்று பெயர்.
இந்த தட்சிணாமூர்த்தியானவர், வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும், வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் நாகத்தை ஏந்தி இருப்பது ஒரு அரிதான காட்சி ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியுடன், சனகாதி ரிஷிகள் என்று அழைக்கக்கூடிய சனகர், சனாதனர், சனந்தனர் சனத்குமாரர் ஆகியோர், இந்த வடிவத்திலே இல்லை. இவருடைய திருமேனியில் ஜடாமகுடம், ஜடைக்கிரீடம் இல்லை. இவருடைய பின்புறம் கல்லால மரமும் இல்லை.
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தரும் திருப்புகழ் தலம்
திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் வண்டார் குழலம்மை. நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.
இக்கோவிலில் முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆலய முகப்பிலும் மற்றும் சிவசன்னிதியின் உட்பிரகாரச் சுற்றின் முதல் திருச்சன்னிதியிலும், வள்ளி தெய்வயானை தேவியரோடு கூடிய மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் ஆறு திருமுகங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார். மூன்றாவது, சிவசன்னிதியின் பின்புறத்தில், வலது கோடியில், இரு தேவியரோடு, மயிலும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்
திருப்புவனம் மின்னனையாள்
மின்னல் வேகத்தில் பக்தர்களுக்கு அருளும் அம்பிகை
மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் இதுவாகும். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து அம்பிகைக்கு ஸ்ரீ சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகிய மீனாள் என பல பெயர்கள் உண்டு. இந்த அம்பிகையின் சன்னதி, இறைவன் சன்னதிக்கு இணையாக, இறைவனுக்கு வலது புறம் அமைந்துள்ளது. அம்பாள் சன்னதிக்கு, கோவிலுக்கு வெளிப்பகுதியிலிருந்தே நேரடியாக வருவதற்கு வழியுண்டு. கருவறையில் அம்பிகை மின்னனையாள் நின்ற கோலத்தில் அபயமும், வரதமும் காட்டி நின்ற கோலத்தில் அருள்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள். தனது திருநாமத்திற்கு ஏற்ப, இத்தலத்து அம்பிகை மின்னனையாள், மின்னலைப் போல ஒரு கணத்தில் கேட்பவர்க்கு அருள் வழங்குகின்றாள்.
திருக்கருக்காவூர் முல்லைவனநாதர் கோவில்
திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை
கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் அருளும் அம்பிகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் (தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் 20 கிலோமீட்டர்) அமைந்துள்ள தேவார தலம் திருக்கருக்காவூர். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை. இத்தலத்து அம்பிகையை வணங்கினால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதுகாப்பாக இருந்து கருசிதைவு ஏற்படாமல் காத்திடுவாள். அதுமட்டுமல்ல பல வருடம் குழந்தை செல்வம் இல்லாத ,டாக்டர்கள் கைவிரித்த தம்பதிகளுக்கும் குழந்தை செல்வம் அருளுபவள் இத்தல அம்பிகை. எனவே இந்த அம்பிகைக்கு 'கரு காத்த நாயகி' என்று பெயர். வடமொழியில் 'கர்ப்பரட்சாம்பிகை' எனப் பெயர். சுருங்கச் சொன்னால், இத்தலம் கரு,கருகாத ஊர் ஆகும்.
நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்ப்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இத்தலத்து இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரட்சித்தபடியால் கர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். அம்பாள் கர்ப்பரட்சாம்பிகையிடம் திருமணம் கூடிவர, குழந்தைப் பாக்கியம் உண்டாக, சுகப்பிரசவம் ஏற்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
குழந்தைப் பாக்கியம் கிடைக்க செய்யப்படும் பிரார்த்தனை
இத்திருக்கோவில் அம்பாள் சன்னதியில், நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.
சுகப்பிரசவம் ஏற்பட
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, எந்தவிதமான கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவமாகும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதாரண வலி தோன்றினால், அப்போது மந்திரித்த விளக்கெண்ணெய்யை வயிற்றில் தடவினால் வலி நின்று நிவாரணம் கிடைக்கும்.
தங்கத் தொட்டில் பிரார்த்தனை
குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தைப் பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே முதல் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் நெய் மந்திரிக்கும்போது அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தம்பதியர் பெற்றுத் தங்கத் தொட்டிலில் இடுவதும், குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இடுவதும் இங்கு முக்கிய பிரார்த்தனையாகும்.
திருவையாறு ஐயாறப்பர் கோவில்
விஷ்ணு சொரூபமாக எழுந்தருளி விளங்கும் திருவையாறு தர்மசம்வர்த்தினி
வெள்ளிக்கிழமை இரவுகளில் மகாலட்சுமி தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்கும் வித்தியாசமான சம்பிரதாயம்
தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு ஐயாறப்பர் கோவில். இத்தலத்து இறைவிக்கு தர்மசம்வர்த்தனி என்று பெயர். மேலும் இந்த அம்பிகைக்கு, அறம்வளர்த்தநாயகி, தர்மாம்பிகை, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அம்பிகையின் சக்தி பீடங்களில் இத்தலம், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்து அம்பிகை அறம்வளர்த்தநாயகி, தனி கோவிலில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் அம்பாள், இங்கே விஷ்ணு சொரூபிணி. நான்கு திருக்கைகள் கொண்ட அம்பிகை தனது மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலக் கீழ்க்கரம் அபய ஹஸ்தம் காட்டியும் இருக்கின்றாள். இடக் கீழ்க்கரம் தொடையைத் தொட்டு ஊன்றியபடி, மஹாவிஷ்ணு ஊன்றியிருப்பாரே, அதேபோல வைத்தபடி தரிசனம் காட்டுகிறாள். திருமாலின் அம்சமாக, அம்பிகை தனது கோலத்தை இங்கே நின்று காட்சி தருகிறாள். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோவில்கள் இல்லை.
அம்பாள், விஷ்ணு சொரூபம் என்பதால், இக்கோவிலில் இன்று அளவும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை இரவுகளில், மகாலட்சுமி வந்து தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்க, தீபாராதனை நடைபெறும். அதாவது விஷ்ணுவைச் சந்திக்க,மகாலட்சுமி வந்திருக்கிறார் என்று ஐதீகம்.
அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
இத்தலத்தில் பெண்கள் தர்மம் செய்தால் அது இரட்டிப்பு பலன் தரும் என்பது நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் செய்யும், தர்மமும், அறச்செயல்களுமே அக்குடும்பத்தைப் பல விதங்களில் கவசமாக நின்று காக்கிறது. எனவே அதன் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தவே அம்பிகை இங்கு தர்ம சம்வர்த்தினியாகக் காட்சி அளிக்கிறாள்.
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
காதுகளில் பெரிய கம்மலுடன் காட்சியளிக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர். சூரிய தோஷ பரிகாரங்களுக்கு பெயர் பெற்றது இந்தத் தலம்.
இக்கோவிலில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராக இரண்டு கரங்களுடன் அழகாகக் காட்சி தருகிறார். இவரது வடிவமானது திருப்பரங்குன்றத்து முருகனை போல் அமைந்திருக்கின்றது.இவரது காதுகளில் வட்ட வடிவமான பெரிய அளவில் கம்மலுடன் (தோடு) தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம் ஆகும். இப்படிப்பட்ட முருகப்பெருமானின் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருமாணிகுழி வாமனபுரீசுவரர் கோவில்
வாமன அவதாரத்தின் போது ஏற்பட்ட தோஷத்தை நீக்க, மகாவிஷ்ணு வழிபட்ட தலம்
எந்நேரமும் திரை போடப்பட்டிருக்கும் மூலவர் சன்னதி
சில விநாடிகள் மட்டுமே தரிசனம் தரும் வாமனபுரீசுவரர்
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமாணிகுழி. இறைவன் திருநாமம் வாமனபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி.
மகாவிஷ்ணு பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்தார். மகாபலியை தர்மத்திற்காக அழித்தாலும் அதற்குரிய பழி நீங்க, மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை, ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோவில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி).
இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம், இங்கு மூலவர் வாமனபுரீசுவரரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சன்னதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால், அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.
இங்கு இறைவனும் இறைவியும் இணைந்து கர்ப்பகிரகத்தில் அருள்புரிகிறார்கள். ஏனைய தலங்களில் போல் இங்கு இறைவனை ஆலயம் திறந்து இருக்கும்போது எல்லாம் தரிசனம் செய்ய முடியாது. பூஜை முடிந்தவுடன் சில விநாடிகள் மட்டுமே இறைவனை தரிசனம் செய்ய முடியும். இறைவனும் இறைவியும் கருவறையில் இணைந்து இருப்பதால், அவர்களுக்கு காவல் புரிய ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரர், இறைவன் இறைவிக்கு முன் திரைசீலையாக உள்ளார். எனவே அவருக்கு தான் முதல் அர்ச்சனை, தீபாரதனை ஆகியவை நடைபெறுகின்றன.
புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
கையில் மான் மற்றும் சிங்கத்துடனும் காட்சி தரும் துர்க்கையின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். காவிரிநதி இங்கு,கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.
பொதுவாக சிவாலயங்களில் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை அம்மன் எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் துர்க்கை அம்மன் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த துர்க்கையின் காலடியில் அரிக்கண்டன், நவக்கண்டன் என்னும் இரண்டு வீரர்கள் தங்கள் சிரசை துர்க்கைக்கு காணிக்கையாக செலுத்தும் நிலையில் காணப்படுகிறார்கள். இதனால் இந்த துர்க்கைக்கு பலி துர்க்கை என்ற பெயரும் உண்டு.
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
திருமணத் தடை நீங்க ஆவணி மூலம் அன்று வளையல் கட்டி அம்பாளுக்கு பிரார்த்தனை
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர்.
ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், பெரியநாயகி அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ரதிதேவி சிவனால் எரிக்கப்பட்ட தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். எனவே பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இத்தலத்தில் வேண்டிக் கொள்கிறார்கள்.
புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
அகத்திய முனிவரின் கமண்டலத்தை கவிழ்த்த விநாயகரின் தோஷத்தை போக்கிய தேவார தலம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி.
புராணத்தின்படி, ஒரு காலகட்டத்தில் நாட்டில் பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அகத்திய முனிவர் தனது கமண்டலத்தில் புனித நீர் கொண்டு வந்தார். அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்த நீரை விநாயகர் காக உருவம் கொண்டு கவிழ்த்ததால் காவிரி நதி தோன்றியது. இந்த நீர் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து வழிந்து ஓடி காவிரி நதியை சுமந்து, நிலங்களை வளப்படுத்தியது. கமண்டலத்தில் இருந்த புனித நீரை வீணாக்கியதால், அகத்திய மனித முனிவர் கோபமடைந்து விநாயகரை காகமாகவே இருக்க சபித்தார். அகத்தியரின் சாபத்திலிருந்து விடுபட விநாயகர் இந்தக் கோவிலுக்கு வந்து கோவில் குளத்தில் நீராடினார். குளத்தில் நீராடி எழுந்தவுடன் காக்கை வடிவில் இருந்த விநாயகரின் நிறம், பொன்னிறமாக மாறியது. எனவே இந்த இடம் பொன்செய் (பொன் - தங்கம், சேய் - மாற்றம்)என்று பெயர் பெற்றது. இப்பெயரே பின்னர் புஞ்சை என்று ஆனது. பொன்னிற காக்கை வடிவில் இருந்த விநாயகர், இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.
புஞ்சை (திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்
நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்.இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். மூலத்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால், இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத்தலத்திலும் காண முடியாது.
கோவிலின் சுற்று பகுதியில் மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, அவரது வலது புறம் இரண்டு சீடர்களும், இடது புறம் இரண்டு சீடர்களும் காட்சி அளிக்கிறார்கள்.அவர் எழுந்தருளி இருக்கும் பீடத்தின் கீழ் நாகமும், மானும் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.இப்படி நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு நடத்தப்படும் தனித்துவமான ஆடிப்பூரத் திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில் ஆகும். இறைவியின் திருநாமம் நீலாய தாட்சி. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.
ஆடித் திங்களில் வரும் பூரம் நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த உலகை படைத்தும், காத்தும் வரும் உமாதேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதும் ஆடிப்பூரம் அன்றுதான்.
எல்லா கோவில்களிலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போல், நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் இந்த தலத்தில் தான் அம்பிகை கன்னிப் பருவம் எய்தினாள். அதனால் இந்தக் கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சிகள் சற்று தனித்துவமான முறையில் நடைபெறுகின்றது. இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடிப்பூரத்தன்று திருவிழா நிறைவு பெறும்.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் நீலாயதாக்ஷி அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் நீலாயதாக்ஷி அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரத்தன்று மாலையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் வீதி உலா வருவார்.
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்
அக்னி கிரீடம் தரித்த சனி பகவானின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரான மயிலாடுதுறையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் மயூரநாதர் கோவில். இறைவியின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் வேதப் பிரதிஷ்டை முறையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு சில தலங்களில் மட்டும் தான் அவை வேத ஆகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும். நவக்கிரகங்கள் வேதாகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும் போது, சூரிய பகவான் நடுவில் எழுந்தருளி இருப்பார். பாவக்கிரகங்களான சனி ,செவ்வாய், ராகு, கேது ஆகிய நால்வரும் வெளிச்சுற்றில் நான்கு மூலைகளில் எழுந்தருளிப்பார்கள். சுபகிரகங்களான சந்திரன்,புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் சூரிய பகவானுக்கும் பாவக்கிரகங்களுக்கும் நடுவில் எழுந்தருளி இருப்பார்கள். நவகிரகங்களில் சனி பகவான் தான் வழக்கமாக அணியும் ராஜ கிரீடத்திற்கு பதிலாக, 'ஜுவாலா கேசம்' (அக்னி கிரீடம்) அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். பொதுவாக மாரியம்மன் போன்ற உக்கிரக நிலையில் உள்ள தெய்வங்கள் தான் அக்னி கிரீடம் அணிந்து இருப்பார்கள். இப்படி அக்னி கிரீடம் தரித்த சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோவில்
தலையில் குடுமியுடன், தியான நிலையில் உள்ள முருகன்
வாய் பேச முடியாதவர்கள் வழிபட வேண்டிய கோவில்
கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பேணுபெருந்துறை. தற்போது 'திருப்பந்துறை' என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் சிவானந்தேசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இத்தலத்தில் முருகன் தான் சிறப்புக்கு உரியவர். ஆடி கிருத்திகை இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் சுவாமி சன்னிதியின் முன்பு முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்னும் திருநாமத்துடன், சின் முத்திரையுடன், கண் மூடி நின்ற நிலையில் தியானம் செய்யும் கோலத்தில் இருக்கின்றார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.
பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தார். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். எனவே வாய்பேசமுடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் கோவில் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாட்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
இரும்பை மாகாளேசுவரர் கோவில்
கையில் ஏடு ஏந்தியிருக்கும் சந்திரனின் அபூர்வ தோற்றம்
கல்வி , கலைகளை பக்தர்களுக்கு அருளும் கலா சந்திரன்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இக்கோவில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் ஏடு ஒன்றை ஏந்தியிருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். கையில் ஏடு வைத்திருப்பது, இவர் கல்வி, கலைகளுக்கு காரகனாக விளங்குகிறார் என்பதை குறிப்பிடுகிறது. எனவே இவர் கலா சந்திரன் என்று குறிப்பிடப்படுகின்றார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மனோதிடம் அதிகரிக்கவும் இவரை வழிபடலாம். ஒருவருக்கு மாதத்தில், உத்தேசமாக, இரண்டரை நாள் வரை சந்திராஷ்டமம் வரும். இந்த காலத்தில் மனோதிடம் குறையும். செயல்களில் தடை உண்டாகும் என்பது ஜோதிடவிதி. இந்த பாதிப்பு சந்திராஷ்டம காலத்தில் ஏற்படக்கூடாது என வேண்டி, கலா சந்திரனுக்கு பால்சாதம் நைவேத்யம் செய்து வழிபடலாம்.
.