சிவபெருமான்
இந்து சமயம் பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களைப் பிரதானமாகப போற்றுகின்றது.இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்திற்கு, சிவபெருமான் முதன்மையான கடவுளாக விளங்குகின்றார். சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால்,இவரை பரமசிவன் என அழைக்கின்றனர்.சிவபெருமான் உருவம்,அருவம்(உருவம் இல்லாத நிலை), அருவுருவம்(உருவமும் அருவமும் கலந்த நிலை) என மூன்று வடிவங்களில் உள்ளார். பொதுவாக சிவ பெருமான் கோயில்களில் அருவுருவமாக, சிவலிங்கத்தின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் பல கோயில்கள் இருக்கின்றன. சிவ பக்தர்கள் பலர் (நாயன்மார்கள்) சிவபெருமானின் பெருமைகளைப் பாடிய பாடல்களின் தொகுப்பே 12 திருமுறைகளாக சைவசமயத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது.இவற்றில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும்,அடுத்த மூன்று திருமுறைகளை அப்பரும், ஏழாம் திருமுறையை சுந்தரரும் பாடியிருக்கிறார்கள்.இந்த மூன்று நாயன்மார்களும் சிவத்தலங்களுக்கு சென்று பாடிய பாடல்கள் தேவாரப் பாடல்கள் எனவும்,இவர்களின் பாடல் பெற்ற தலங்கள் தேவாரத் திருத்தலங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.தேவாரத் திருத்தலங்களின் எண்ணிக்கை மொத்தம் 276 ஆகும்.
சிவபெருமான் நிகழ்த்திய அற்புதங்களையும்,தேவாரத் திருத்தலங்கள் மற்றும் பிற சிவத்தலங்களை பற்றிய அரிய தகவல்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும.
பைரவர் இரட்டை வாகனத்துடன் இருக்கும் அரிய தோற்றம்
கல்வியில் சிறக்க அருளும் இரட்டை வாகன பைரவர்
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆமூர் ரவீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவள்ளி. இத்தலத்து இறைவனை வழிபட்டு சூரியபகவான் தன்னுடைய அதீத உஷ்ணத்தை குறைத்துக் கொண்டார். எனவே இத்தலம் சூரிய தோஷம், பித்ரு தோஷம், ஜாதக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரத்தலமாக விளங்குகின்றது.
பொதுவாக சிவாலயங்களில் பைரவர் தெற்குத் திசை நோக்கி தான் எழுந்தருளியிருப்பார். ஆனால், இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரரின் சன்னதி மண்டபப் பகுதியில், மேற்குத் திசை நோக்கி இரட்டை வாகனத்தில் பைரவர் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பைரவர் தனது வாகனமான நாயுடன் தான் காட்சி அளிப்பார் . ஆனால், இக்கோவிலில் வலதுபுறத்தில் நாய் வாகனத்துடனும், இடதுபுறத்தில் ரிஷப வாகனத்துடனும் பைரவர் எழுந்தருளியிருப்பதால், இவர் இரட்டை வாகன பைரவர் என்றழைக்கப்படுகிறார். இந்த இரட்டை வாகன பைரவர் கல்விக்கு அதிபதியாக போற்றப்படுகிறார். தேர்வுகளை எழுதுவோர் இந்த சன்னதியில் வந்து பைரவரை வழிபட்டுச் சென்றால் கல்வியில் சிறந்து விளங்குவர், அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் திக்கிப் பேசும் குழந்தைகள், படிக்காத குழந்தைகள் இந்த இரட்டை வாகன பைரவரை வழிபட்டு தங்கள் நாவில் தேன் தடவிச் சென்றால் அவர்களது குறைகள் நீங்கும்.
மும்மூர்த்திகளும் எழுந்தருளி இருக்கும் அரிதான காட்சி
சுவாசம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்க வழிபட வேண்டிய தலம்
உத்திரமேரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வயலக்காவூர் வாசீஸ்வரர் கோவில். இக்கோவில் வானதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி .வயல் என்ற புல் வகை இவ்வூரிலுள்ள குளத்தில் மிகுதியாக வளர்வதால், இவ்வூர் ‘வயலக்காவூர்’ என்று அறியப்படுகிறது. இந்த புல் வகையை கூரை வேய பயன்படுத்துகிறார்கள். இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது.
மூலவரின் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை காணப்படுகின்றனர். இக்கோவிலில் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில், பெருமாள் காட்சி தருவது ஒரு அரிதான காட்சியாகும். மும்மூர்த்திகளும் இங்கு எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்திற்கு மும்மூர்த்தி தலம் என்று பெயர்.
வாசி என்பது யோகத்தில், மூச்சின் இயக்கத்தைக் குறிக்கிறது. மூச்சை நெறிப்படுத்துவது வாசி எனப்படும். இத்தலத்து இறைவன் வாசீஸ்வரரை வழிபட்டால் சுவாசம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வியக்க வைக்கும் அதிசயத் தூண் - கோவில் தூணுக்குள் வெளியே எடுக்க முடியாதபடி உருளும் கல் பந்து
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை.
நமது முன்னோர்கள் கோவில்களில் வடித்து வைத்துள்ள சிற்பங்களும், கலை நயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வேலைப்பாட்டை, இந்த கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் இருக்கும் ஒரு தூணில் நாம் காணலாம்.
இந்த தூணின் மூன்று பக்கங்களில் சுமார் ஒரு அடி நீளத்திற்கு நீள் செவ்வக துவாரம் அமைந்திருக்கின்றது. தூணுக்குள் கல்லாலான ஒரு பந்து இருக்கின்றது. இந்தப் பந்தை நாம், தூணுக்குள் ஒரு அடி தூரத்திற்கு மேலும் கீழும் நகர்த்த முடியும். ஆனால் அந்தக் கல் பந்தை நாம் தூணை விட்டு வெளியே எடுக்க முடியாது. இப்படி ஒரே கல்லிலான தூணில் மூன்று பக்கம் துவாரம் ஏற்படுத்தி, அதன் உள்ளிருக்கும் கல்லை பந்து போல் வடிவமைத்து ஆடவிட்டு இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
சிவபெருமான் காசியிலிருந்து வந்து தங்கிய தலம்
தட்சிணாமூர்த்தியை கை கூப்பி வணங்கும் சனகாதி முனிவர்கள்
விருதுநகரில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள தலம், சிவகாசி காசி விஸ்வநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.
சிவன் காசியிலிருந்து வந்து தங்கிய இடம் என்பதால் சிவன் காசி என்று அழைக்கப்பட்ட இவ்வூர், சிவகாசி என்று சுருங்கியது. வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி உள்ளன.
இக்கோவிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள், தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் அருள்பாலிக்கின்றனர். இப்படி சனகாதி முனிவர்கள் கை கூப்பி வணங்கும் நிலையில் காட்சி அளிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
மனித உருவில் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ராகு கேது பகவான்
ராகு-கேது பரிகார தலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பின்புறம், ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்.
பொதுவாக சிவாலயங்களில் ராகுவும் கேதுவும் நவக்கிரக சன்னதியில் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். அதில் ராகு மனித முகத்துடனும், பாம்பு உடலுடனும், கேது பாம்பு முகத்துடனும் மனித உடலுடனும் காட்சியளிப்பார்கள். ஆனால் ராகு கேதுவை வித்தியாசமான நிலையிலும், அபூர்வமான தோற்றத்திலும் நாம், இக்கோவிலில் தரிசிக்கலாம்.
இக்கோவிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் ராகு, கேதுவை தன் கைகளில் ஏந்தி இருக்கிறார். மற்றுமொரு சிறப்பு, ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்கள். இது போன்று காட்சியளிக்கும் ராகு, கேதுவை நாம் வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாது.
இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் மூலவர் ஸ்ரீமாகாளீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ளனர்.
ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. அதனால் இக்கோவில், ராகு-கேது பரிகார தலமாக திகழ்கிறது. இங்கு வழிபட்டால், திருமணத் தடை நீங்குவதோடு, கால சர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், ராகு காலத்தில் இங்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.
சின்முத்திரையோடு காட்சி தரும் தட்சிணாமூர்த்தி
நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள திருக்காந்தளில் அமைந்துள்ளது ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவில். உதகமண்டலத்தில் அமைந்த பழமையான சிவாலயம் இக்கோவில் ஆகும். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.
மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல், இத்தலத்தில், தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ள யோக தட்சிணாமூர்த்தி, சின் முத்திரையோடு காட்சி தருகிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும். இந்த சின் முத்திரையானது ஞானப் பொருளின் அடையாளக் குறிப்பாகத் திகழ்கின்றது.. சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்கினால் நற்பலன் கிடைக்கும்.
கையில் கதாயுதம் வைத்திருக்கும் பைரவரின் அபூர்வ தோற்றம்
பைரவருக்கு முக்கியத்துவம் தரும் தலம்
சண்டிகேஸ்வரருக்கு பதிலாக வீதியுலா செல்லும் பைரவர்
காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நகர சூரக்குடி. இத்தலத்து இறைவன் திருநாமம் தேசிகநாதர். இறைவியின் திருநாமம் ஆவுடை நாயகி. சூரியன் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்ததாலும் முன்பு 'சூரியக்குடி' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் 'சூரியக்குடி' என்ற பெயர் மருவி 'சூரக்குடி' என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் 'தேசிகநாதபுரம்' என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பைரவர் சூலம், பாசக் கயிறு, தடி அல்லது தண்டாயுதம் போன்ற ஆயுதங்களைக் கைகளில் வைத்திருப்பார். ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி அளிப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள ஆனந்தபைரவரே, இக்கோவிலின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவபெருமான் மற்றும் அம்பாளை வணங்குகின்றனர். இங்கு சிவபெருமான் மற்றும் அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே, பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில், இவ்வாறு செய்யப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன. அதன்பின்னர் பைரவர் பிரகார உலா செல்கிறார். சிவன் கோயில்களில் நடக்கும் விழாக்களில், சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வார்கள். ஆனால் இங்கு நடக்கும் ஆனி உத்திரத் திருவிழாவில், சண்டிகேஸ்வரருக்கு பதிலாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷமாகும்.
வெள்ளை நிறத்துடன், பால்வண்ண மேனியனாக காட்சி தரும் பாலீஸ்வரர்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பழவேற்காடு செல்லும் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ளது திருப்பாலைவனம் என்னும் தலம். இத்தலத்து இறைவன் திருநாமம் பாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் லோகாம்பிகை. பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும், பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று.
இத்தலத்து இறைவன் பாலீஸ்வரர், வெள்ளை நிறத்துடன் பால்வண்ண மேனியனாக அருள்பாலிக்கிறார், ஒரு சமயம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது, அந்த அமுதத்தையே சிவலிங்கமாக பிடித்து வழிபட்டனர். அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில் கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது.
காலப்போக்கில், சுற்றிலும் அரண்போல பாலை மரம் வளர்ந்து விட, வெள்ளை லிங்கம் விருட்சத்துக்குள் மறைந்து போனது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் படை பரிவாரங்களுடன் இந்தப் பகுதியின் வழியே வந்தபோது, ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது, அவர் படையிலிருந்த யானை மற்றும் குதிரைகளைப் படை வீரர்கள் லிங்கம் மறைந்திருந்த பாலை மரத்தில் கட்டிப் போட்டனர். சற்று நேரத்தில் அவை மயக்கமடைந்து அங்கேயே சரிந்தன. இதனைக் கேள்விப்பட்ட ராஜேந்திர சோழன்,. உடனே மரத்தை வெட்ட ஆணையிட்டார். மரத்தைப் படை வீரர்கள் வெட்டியபோது, அதன் நடுவே வெள்ளை நிற லிங்கத் திருமேனி இருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் பாலீஸ்வரருக்கு, அங்கே பிரமாண்டமாய் ஒரு ஆலயத்தை எழுப்பினார்.
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக அருளும் இறைவனே, இங்கே அமுதேஸ்வரராக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகியவை அதிகளவில் நடைபெறுகின்றன. அமுதேஸ்வரரை வேண்டிக் கொள்ள தம்பதியர் பூரண ஆரோக்கியத்துடன் நலம் பெற்று வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிகை.
மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.
அதிசயமான நேரம் காட்டும் கல்
வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் மார்க்கபந்தீசுவரர் ஆவார். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானதாகும்.
இக்கோவிலில் உள்ள அதிசயம், மணி காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல். கோவிலின் உள்ளே தென்புறத்தில் 'நேரம் காட்டும் கல்' உள்ளது. இதை மணிகாட்டிக் கல் என அழைப்பதும் உண்டு. அர்த்த சந்திரவடிவில் உள்ள காலம் காட்டும் கல்லின் ஒருபுறம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் ஒன்று முதல் ஆறு வரை எண்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மற்றொரு புறமும் ஆறு முதல் 12 என்ற வரிசையில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், மற்றொரு பாகம் பிற்பகலையும் காட்டும். மணிகாட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய பள்ளமான பகுதி ஒன்று இருக்கும். அதன் மேல் சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் மணிக்காக குறிக்கப்பட்டுள்ள கோட்டின் மீது விழும். அதைப் பார்த்து மணியைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆதிகாலத்தில் மேலை நாட்டினர், 'கிளாசிக்கல் க்ளாக்' எனும் மணல் கடிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அறிவியல் அதிகமாக வளராத ஆதிக்காலத்திலையே, சூரியனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசித்தவர்கள், தமிழர்கள். மேலை நாட்டினர் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோது, விண்ணைப் பார்த்து சிந்தித்தவன் தமிழன். தமிழர்கள் சூரியனைப் பயன்படுத்தி கடிகாரம் கண்டுபிடித்து, பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர், சூரியனையும், கோயில் கோபுரத்தையும் வைத்து நேரம் அறிந்துகொண்டிருந்தனர், தமிழர்கள். அதன் பின்னர் சிறிய கருங்கல்லை வைத்து தன்னுடைய தொழில்நுட்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்கள். சிறியதாக ஒரு கருங்கல்லை வைத்து பன்னிரண்டு மணிநேரத்தை பார்க்கும்படி வடிவமைத்துள்ளார்கள்.வானியல் மாற்றங்களைத் தெரிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லை. பருவநிலையையும் மற்றும் பருவகால மாற்றங்களையும் அறிந்துகொள்ள மணிகாட்டும் கல்லைத் தவிர இன்னும் பல கற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.
சனகாதி ரிஷிகள் உடன் இல்லாமல் இருக்கும், இடது கையில் நாகத்தை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான கோலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலின் தெற்கே பாம்பாறு ஆறு பாய்ந்து கோவிலுக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள கடலைச் சென்றடைகிறது. தமிழில் புனல் என்பது நதியைக் குறிக்கும். எனவே புனல்-வாசல் என்பது கடலில் நுழையும் நதியின் நுழைவாயில் (வாசல்) என்று பொருள்படும். அதுவே இத்தலத்தின் பெயராக அமையக் காரணமாகும்.
இக்கோவிலில் தென் புற கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய திருமேனியுடன் அமர்ந்த காலத்தில் காட்சி தருகிறார். சுற்றி உள்ள 14 மாவட்டங்களில் இவ்வளவு பெரிய தட்சிணாமூர்த்தி வடிவம் இல்லை. இவருக்கு யோக வ்யாக்ஞான தட்சிணாமூர்த்தி என்று பெயர்.
இந்த தட்சிணாமூர்த்தியானவர், வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும், வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் நாகத்தை ஏந்தி இருப்பது ஒரு அரிதான காட்சி ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியுடன், சனகாதி ரிஷிகள் என்று அழைக்கக்கூடிய சனகர், சனாதனர், சனந்தனர் சனத்குமாரர் ஆகியோர், இந்த வடிவத்திலே இல்லை. இவருடைய திருமேனியில் ஜடாமகுடம், ஜடைக்கிரீடம் இல்லை. இவருடைய பின்புறம் கல்லால மரமும் இல்லை.
கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் இருக்கும் அரிய காட்சி
நான்கு முகங்களுக்கு பதிலாக ஒரே முகத்துடன் காட்சி அளிக்கும் பிரம்மாவின் அபூர்வ தோற்றம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கூலநாய்க்கன்பட்டி எனும் ஊர். இந்த ஊரில் மலையாண்டி சுவாமி கோவில் என்னும் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கருவறையில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் எழுந்தருளி உள்ளார்கள். இப்படி மும்மூர்த்திகளும் ஒரே கருவறையில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும், சிவனுக்கு இடதுபுறம் திருமாலும், வலது புறம் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். நான்கு தலைகளுடன் நான்முகன் என்ற பெயரில் அருளும் பிரம்மா, இக்கோவிலில் ஒரே ஒரு தலையுடன், நான்கு கைகளுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி அளிக்கிறார். பிரம்மாவின் வலக்கையில் அபய முத்திரையும், இடக்கையில் கமண்டலமும், பின் வலக்கையில் தர்ப்பைப் புல் கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் உள்ளன.
நம் நாட்டில் பிரம்மாவுக்கு என்று தனி கோவிலோ அல்லது கோவில்களில் தனிச்சன்னிதியோ இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட நிலையில், இக்கோவிலில் பிரம்மா ஒரு அபூர்வமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
ஒரே சிவலிங்கத்தில் இரண்டு பாணங்கள்
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப்படுகிறார்.
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க, தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். இத்தலத்து இறைவனை வழிபட்டு இழந்த பதவியை மீண்டும் பெற்றான்
இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் 'தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.
நவக்கிரகங்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் வித்தியாசமான தோற்றம்
காரைக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் கோவிலூர். இத்தலத்து இறைவன் திருநாமம் கொற்றவாளீஸ்வரர். இறைவியின் திருநாமம் நெல்லையம்மன். எதிரிகளை வென்றிடப் பாண்டிய மன்னனுக்கு, சிவபெருமான் வாள் கொடுத்த திருத்தலம். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கொற்றவாளீசுவரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது.
பொதுவாக சிவன் கோவில்களில், ஈசான மூலையில் (வடகிழக்கு) நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். இந்த சன்னதியில், நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல், நடுவில் சூரியன் நின்ற கோலத்தில் இருக்க, மற்ற நவகிரகங்கள் அவரைச் சுற்றி, அவரவர் திசையை நோக்கியபடி நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், சூரியன் உட்பட நவக்கிரகங்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.
மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பு
அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மஹாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால், 15 நாட்கள் என்பது பொருள். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மஹாளய பட்சம் என்று கூறுகிறோம்.
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது நல்ல பலனைத் தரும். மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 1ம் நாள் - பிரதமை - செல்வம் சேரும் 2ம் நாள் - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 3ம் நாள் - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 4ம் நாள் - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 5ம் நாள் - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 6ம் நாள் - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 7ம்நாள் - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும். 8ம் நாள் - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 9ம் நாள் நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 10ம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 11ம் நாள் - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 12ம் நாள் - துவாதசி - ஆபரணங்கள் சேரும். 13ம் நாள் - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 14ம் நாள் - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 15ம் நாள் - மஹாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும்.
தர்ப்பணம் கொடுக்கும் போது குளக்கரை, நதிக்கரை அல்லது கடற்கரை என ஏதாவது ஒரு நீர்நிலைக்கு அருகில் வைத்தே தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது நியதி. காசி, ராமேஸ்வரம், கயா, திருச்சி அம்மா மண்டபம், கன்னியாகுமரி , விளமல், தீர்த்ததாண்டதானம், திருச்செந்தூர், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர் முதலான தலங்கள் தர்ப்பணம் கொடுக்க சிறந்த தலங்கள் ஆகும்.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து, அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை.
இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
நந்தியம்பெருமான் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கும் தேவாரத் தலம்
தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.
அப்பர் பெருமான் தனது வாழ்நாள் முழுவதும், பல சிவாலயங்களுக்குச் சென்று, புதர் மண்டிக் கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, கோவில்களைப் பேணிப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அவர் உழவாரத் தொண்டு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இக்கோவில் அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலம் என்பதால், இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சினார். திருஞானசம்பந்தருக்கு தனது தரிசனத்தை தர விரும்பிய இறைவன், தன் எதிரில் இருந்த நந்தியை சற்றே விலகி இருக்கச் செய்தார். அதனால்தான் இத்தலத்தில் நந்தியம்பெருமான், மற்ற தலங்களை போல் இறைவனின் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருக்கிறார்.
தலையில் கிரீடம் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனியே தோன்றும் வண்ணம் அமைந்த சிற்ப வடிவமைப்பு
காரைக்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நகர சூரக்குடி. இத்தலத்து இறைவன் திருநாமம் தேசிகநாதர். இறைவியின் திருநாமம் ஆவுடை நாயகி.
சூரியன் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்ததாலும் முன்பு 'சூரியக்குடி' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் 'சூரியக்குடி' என்ற பெயர் மருவி 'சூரக்குடி' என்று அழைக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் 'தேசிகநாதபுரம்' என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது.
கோவில் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மேலும் தட்சிணாமூர்த்தியின் முதுகுப் பகுதியும், ஆல மரத்தின் தண்டுப் பகுதியும் தனித்தனியே தோன்றும் வண்ணம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு சிறப்பாகும். இது நம் முன்னோர்களின் சிற்பக்கலை திறனையும், அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.
நுணுக்கமான, அழகான விரல் அளவு சிற்பங்கள் நிறைந்த கோவில்
மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்ட சிற்பங்கள்
தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில், தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர்(பிரம்மபுரீஸ்வரர்). இறைவி அல்லியங்கோதை.
இக்கோவில் அக்காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இக்கோவிலிலுள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஒரு அடி அளவுக்கு உள்பட்டு, மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சுவர்களில் தூண் போன்ற வடிவில் செதுக்கப்பட்டு, கையடக்க அளவில் பூவேலைப்பாடுகளும், ஆடல் மகளிர் சிற்பங்களும் நிறைய இடம்பெற்றுள்ளன. தூண் சிற்பங்கள், ஆடல் அணங்குகளின் சிற்பங்கள், இராமாயணச் சிற்பங்கள் போன்றவற்றைக் கொண்டு ஒரு கலைப்பெட்டகமாக, இக்கோவில் விளங்குகின்றது. நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு சிறிய அளவில் மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இக்கோவிலை பார்க்கத் தவறுவதில்லை.
கருவறை கோஷ்டத்தில் சீதை, இலக்குவனனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லல் தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், காலசம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேடன் மீது அரிதுயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.
உடுக்கை இடுப்புடையாள் என்பது போல பெண் சிற்பங்களில் இடுப்பு பகுதி உடுக்கை வடிவில் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோல, கை, கால், கண் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ள விதமும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
கோவில் திருச்சுற்றின் வலது புறத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் மேலே கோபுரத்தில் பிச்சாடனர் சிற்பம் உள்ளது. இதில், காலில் காலணி, கையில் திருவோடு, கழுத்தணிகள், கையணிகள், காதுகளில் வளையங்கள் உள்ளிட்டவற்றுடன் நடக்கும் பாவனையில் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் வேலைப்பாடுகள் வித்தியாசமாக உள்ளன. தூண்களிலும், சுற்றுச் சுவரிலும் ஏராளமான நடன மங்கை சிற்பங்கள் மிக நுணுக்கமாக ஆள்காட்டி விரல் அளவில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பங்களும் ஒரு காரணத்தைக் குறிப்பிடுகின்றது.
அர்த்த மண்டப புறச்சுவர்களின் தெற்குப்பகுதியில் பூதகணங்கள் சூழ காட்சியளிக்கும் கணபதி, வடக்குப்பகுதியில் மகிஷாமர்த்தினி உள்ளனர். விமான முதல் தள கோஷ்டங்களில் சிவனின் அழகு வடிவங்கள் அனைவரையும் ஈர்க்கின்றன. இவ்வாலய விமானத்தில் உள்ள ஆண் சிற்பத்தை முன் மாதிரியாகக்கொண்டே ஓவியர் மணியம், கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் கதாநாயகனான வந்தியத்தேவனை வரைந்தார் என்று கருதுகின்றனர்.
வாமன அவதாரத்தின் போது ஏற்பட்ட தோஷத்தை நீக்க, மகாவிஷ்ணு வழிபட்ட தலம்
எந்நேரமும் திரை போடப்பட்டிருக்கும் மூலவர் சன்னதி
சில விநாடிகள் மட்டுமே தரிசனம் தரும் வாமனபுரீசுவரர்
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமாணிகுழி. இறைவன் திருநாமம் வாமனபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அம்புஜாட்சி, மாணிக்கவல்லி.
மகாவிஷ்ணு பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்தார். மகாபலியை தர்மத்திற்காக அழித்தாலும் அதற்குரிய பழி நீங்க, மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை, ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோவில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி).
இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம், இங்கு மூலவர் வாமனபுரீசுவரரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சன்னதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால், அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது. இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.
இங்கு இறைவனும் இறைவியும் இணைந்து கர்ப்பகிரகத்தில் அருள்புரிகிறார்கள். ஏனைய தலங்களில் போல் இங்கு இறைவனை ஆலயம் திறந்து இருக்கும்போது எல்லாம் தரிசனம் செய்ய முடியாது. பூஜை முடிந்தவுடன் சில விநாடிகள் மட்டுமே இறைவனை தரிசனம் செய்ய முடியும். இறைவனும் இறைவியும் கருவறையில் இணைந்து இருப்பதால், அவர்களுக்கு காவல் புரிய ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரர், இறைவன் இறைவிக்கு முன் திரைசீலையாக உள்ளார். எனவே அவருக்கு தான் முதல் அர்ச்சனை, தீபாரதனை ஆகியவை நடைபெறுகின்றன.
முகம் வெள்ளை நிறத்திலும், உடல் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அபூர்வ நடராஜர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மானூர் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது பெரியாவுடையார் கோவில். 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த கோவில்.இத்தலத்து மூலவர் பெரியாவுடையாருக்கு பிரகதீஸ்வரர் என்ற திருநாமும் உண்டு. இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத்து இறைவனை வழிபட்டால் ஏழு ஜன்மங்களின் பாவங்கள் கூட விலகும் என்பது ஐதீகம்.
கைலாயத்தில் ஞானப்பழம் முருகனுக்கு கிடைக்காததால், கோபம் கொண்ட முருகன் பழனி மலைக்கு வந்து விடுகிறார். முருகனைத் தேடிக்கொண்டு சிவனும் சக்தியும் பூலோகத்தில் பழனி மலைக்கு அருகில் வந்து இறங்குகிறார்கள். அப்படி இறங்கிய இடத்தின் இயற்கை எழிலை கண்ட பரமேஸ்வரன் அங்கேயே வீற்றிருந்து அருள்பாலிக்க நினைத்துவிட்டார். ஆனால் உமையவளோ தன் மகன் முருகனை காண பழனிக்கே செல்ல அனுமதிக்கும் படி சிவனிடம் வேண்ட சிவனும் சம்மதிக்கிறார். பிரிய மனமில்லாமல் நாயகி விடைபெற்றதால் அன்னை பிரியா நாயகி என்றும், விடை கொடுக்க மனமில்லாமல் சிவன் விடை கொடுத்ததால் பிரியா விடையார் என்றும் அழைக்கப்பட்டார்கள். இதுவே காலப்போக்கில் மருவி பெரியாவுடையார், பெரியநாயகி ஆனது.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார். எப்படியென்றால், அவரது உடல் மட்டும் முழுக்க கருப்பு நிறத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் கூடிய நிலையில் கல்லால் அமைந்திருக்கின்றது. இப்படி இருவேறு வண்ண நிறத்தில் காட்சியளிக்கும் நடராஜர் சிலையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. இவர் தனித்தே அருள்பாலிக்கிறார்.
அபூர்வ கருப்பு வெள்ளை நடராஜர்: திண்டுக்கல் அருகே உள்ள மானூர் பகுதியில் உள்ளது பெரியாவுடையார் திருக்கோயில். சுமார் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம் ஏழு ஜன்மங்களின் பாவங்களையும் கூட விலக்கும் தலமாக விளங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள இறைவன் பெரியாவுடையாரை, பிரகதீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள நடராஜ சுவாமியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். எப்படியெனில், உடல் முழுக்க கருப்பு வண்ணத்திலும், முகம் மட்டும் வெள்ளை வண்ணத்திலும் அமைந்த நிலையில் கல்லில் வடிக்கப்பட்டவர். நடராஜரின் அருகில் சிவகாமி அம்பாளும் கிடையாது. தனித்தே அருள்பாலிக்கிறார்.
பொதுவாக பிரதோஷ நாயனார் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் காணப்படுவார். ஆனால் இங்குள்ள பிரதோஷ நாயனார் தாண்டவ நிலையில், கையில் டமருகத்துடன் காணப்படுகிறார்.
அர்ச்சகர்கள் சிவலிங்கத்தை தொடாமல் அபிஷேகம் செய்யும் தேவாரத் தலம்
உத்தராயண காலத்தில் செந்நிறமாகவும், தட்சிணாயன காலத்தில் வெண்மை நிறமாகவும் மாறும் அபூர்வ லிங்கம்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
ஒரு முறை இப்பகுதியில் வெள்ளம் வந்த போது பார்வதிதேவி இங்குள்ள சிவனை அணைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்கத்திருமேனியில் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல் லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வரிவரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம். பார்வதிதேவி இந்த லிங்கத்தை அணைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். இது இத்தலத்தின் மாபெரும் சிறப்பம்சமாகும்.
இது தவிர இன்னொரு அதிசயத்தையும் இத்தலத்து மூலவர் ஜலநாதீசுவரரின் சிவலிங்கத் திருமேனியில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த சிவலிங்கம் செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும். தட்சிணாயன காலத்தில் இதே சிவலிங்கம் வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும்.
இரட்டை பைரவர்கள் அருள் பாலிக்கும் தலம்
திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன். முறப்பநாடு, நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. நவகைலாய தலங்களில் இக்கோவில் குரு தலம் ஆகும்.
இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால், காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.
பொதுவாக சிவாலயங்களில் ஒரு பைரவர் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலின் வடகிழக்கு பகுதியில், தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
கஞ்சனூருக்கு இணையான சுக்கிர பரிகாரத் தலம்
தூத்துகுடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் உள்ளது. தூத்துகுடியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம். கைலாசநாதர் இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கயலாய தலங்களில் இத்தலம் ஒன்பதாவது தலமாகும். இத்தலம் சுக்கிரனின் ஆட்சிப் பெற்ற கோவிலாகும்.
இத்தல இறைவனை வழிபடுவது கஞ்சனூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்குவதற்கு சமமாகும். சுக்கிரன் தலமாதலால் இங்கு வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி தீமைகள் விலகும். திருமணம் நல்லபடி அமையும், இல்லறம் சுகம் பெறும், உடல் ஆரோக்கியம், மனநிம்மதி பெற்று மரண பயம் நீங்கி நன்மக்கட் பேறு பெற்று, என்றும் இன்பமாக வாழலாம்.
தூத்துகுடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆத்தூர் என்ற ஊரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் உள்ளது. தூத்துகுடியில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம். கைலாசநாதர் இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி அம்மன். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கயலாய தலங்களில் இத்தலம் ஒன்பதாவது தலமாகும். இத்தலம் சுக்கிரனின் ஆட்சிப் பெற்ற கோவிலாகும்.
இத்தல இறைவனை வழிபடுவது கஞ்சனூர் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்குவதற்கு சமமாகும். சுக்கிரன் தலமாதலால் இங்கு வழிபடுவோருக்கு சுக்கிர தோஷம் நீங்கி தீமைகள் விலகும். திருமணம் நல்லபடி அமையும், இல்லறம் சுகம் பெறும், உடல் ஆரோஅகியம், மனநிம்மதி பெற்று மரண பயம் நீங்கி நன்மக்கட் பேறு பெற்று என்றும் இன்பமாக வாழலாம்.
குபேர பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு பொன்னும் பொருளும் பெற்றார். பிரதான கருவறைக்கு மேலே உள்ள விமானத்தில், செல்வத்தின் அதிபதியான குபேர பகவான், தனது துணைவியார்களான சங்க நிதி மற்றும் பதும நிதியுடன், யானை மீது சவாரி செய்யும் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் மட்டுமே காணப்படும் குபேர பகவானின் அரிய சிலை இது. சிவபெருமானை பிரார்த்தனை செய்த பிறகு, செல்வத்தையும் செழிப்பையும் வேண்டி பக்தர்கள் கோபுரத்தில் இருக்கும் இந்த குபேர பகவானை இந்த இறைவனை வழிபடுவது வழக்கம்.
சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி அமைந்துள்ள அபூர்வ தோற்றம்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில்,10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பொன் விளைந்த களத்தூர் என்ற கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் முன்குடுமீஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி அம்மன். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில் சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது.
இப்படி சிவலிங்கத் திருமேனியில், குடுமி அமைந்ததற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் ஒருவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அப்பாக்கியம் வேண்டி சிவனுக்கு 108 கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்தான். அவ்வாறு கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று. ஒருசமயம் மன்னன் இக்கோவிலுக்கு சுவாமியைத் தரிசிக்க வந்தான். அவ்வேளையில் பூஜையை முடித்த அர்ச்சகர், சுவாமிக்கு அணிவித்த மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார். மன்னர் வந்திருப்பதை அறிந்த அர்ச்சகர், மனைவிக்கு சூடிய மாலையை கோவிலுக்கு எடுத்து வந்தார்.
சிவனுக்கு அணிவித்த மாலை எனச் சொல்லி அதை மன்னனுக்கு அணிவித்தார். மன்னர் மாலையில் முடி இருந்த காரணத்தைக் கேட்டார். அர்ச்சகர் அவரிடம் 'லிங்கத்தின் சடாமுடியில் இருந்த முடியே அது!' என பொய் சொல்லிவிட்டார். மன்னன் தனக்கு சிவனிடம் முடியைக் காட்டும்படி கூறினான். அர்ச்சகர் மறுநாள் காட்டுவதாகச் சொல்லிவிட்டார். மன்னன் மறுநாள் தனக்கு அந்த தரிசனம் கிடைக்காவிட்டால், அர்ச்சகருக்கு கடும் தண்டனை கொடுக்க நேரிடும் என எச்சரித்துச் சென்றான். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சிவனை வேண்டினார். மறுநாள் மன்னர் வந்தார். அர்ச்சகர் பயத்துடனே சிவலிங்கத்தின் முன்பு தீபாராதனை காட்டினார். என்ன ஆச்சர்யம்! சிவலிங்க பாணத்தின் முன் பகுதியில் கொத்தாக முடி இருந்தது. மன்னனும் மகிழ்ந்தான். இவ்வாறு அர்ச்சகருக்காக குடுமியுடன் காட்சி தந்ததால் இவர், 'முன்குடுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
யானையின் கீழ் பிரம்மாவும், லட்சுமி நாராயணரும் காட்சி தரும் அபூர்வ சிற்பங்கள்
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலின் வடிவமைப்பும், கோவில் சிற்பங்களின் கலை நுணுக்கமும் பார்ப்பவர்களை வியக்க வைக்கும்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னதி விமானத்தை 8 வெள்ளை யானைகள் தாங்கிக் கொண்டிருக்கும். அது போலவே இக்கோவிலிலும் இறைவன் நஞ்சுண்டேசுவரர் விமானத்தை 8 யானைகள் தாங்கியபடி இருக்கின்றன. இதில் ஒரு யானை சிற்பத்திற்கு கீழ் பிரம்மாவும், மற்றொரு யானைக்கு கீழே லட்சுமி நாராயணரும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மற்றொரு யானையின் கீழ் சிம்மம் அமைந்திருக்கின்றது.
கருவறையின் வெளிச்சுவற்றில் பல அழகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ரிஷபத்தின் மேல் காட்சியளிக்கும் சிவபெருமான் பார்வதி, தண்டாயுதபாணியாக முருகப்பெருமான், ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் சிவலிங்கம், பெரிய யாளி உருவங்கள் ஆகியவை நமக்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன. வெளிச்சவற்றின் அடிப்பக்கத்தில் குதிரைப்படை வீரர்களின் அணிவரிசை, அலங்கார வளைவுகள், ஒரே சீராக அமைக்கப்பட்ட பலவிதமான வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில்.இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். மூலத்தானத்திற்கே யானை வந்து வழிபட்ட தலம் என்பதால், இத்தலத்தின் கருவறை மிகவும் பெரியதாக அமைந்துள்ளது. இவ்வளவு பெரிய கருவறை இந்தியாவில் உள்ள எந்த சிவத்தலத்திலும் காண முடியாது.
கோவிலின் சுற்று பகுதியில் மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.தட்சிணாமூர்த்தியின் காலடியில் முயலகன் இருக்க, அவரது வலது புறம் இரண்டு சீடர்களும், இடது புறம் இரண்டு சீடர்களும் காட்சி அளிக்கிறார்கள்.அவர் எழுந்தருளி இருக்கும் பீடத்தின் கீழ் நாகமும், மானும் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.இப்படி நாகத்துடனும், மானுடனும் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கான பரிகார தலம்
சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் (மப்பேடு வழி), திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். இக்கோவிலானது முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், 1112ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இக்கோவிலானது நரம்பு சம்பந்தமான, வலிப்பு முதலிய நோய்களுக்கு பரிகார தலமாக விளங்குகிறது . இவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரியவர் நரம்பு நோயால் பாதிப்படைந்தார். இந்த நோயை குணப்படுத்த நிறைய செலவு ஆகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் இவர் இக்கோவில் இறைவன் சோழீஸ்வரரை பிராத்தனை செய்தார் . சோழீஸ்வரர் அவரின் பிராத்தனைக்கு செவிமடுத்து அவரை குணப்படுத்தினார் , அந்த பெரியவர் நோய் குணப்படுத்த வைத்திருந்த பணத்தில் இக்கோவிலுக்கு கொடிக்கம்பத்தை நிறுவினார் . அதிலிருந்து இக்கோவிலுக்கு நரம்பு சம்பந்தமான நோய்களில் பாதித்தவர்கள் வந்து பிராத்தனை செய்து வருகின்றனர். ஒவ்வொரு திங்கள் கிழமையும் எல்லா ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பிராத்தனை செய்கின்றனர்.
கிரகண நேரத்தில் நடை திறந்திருக்கும் கோவில்
மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கைலாசநாதர்
சென்னை பல்லாவரத்தில் இருந்து அனகாபுத்தூர் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தரப்பாக்கம் எனும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் கைலாசநாதர் இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு. இத்தலத்து ஆவுடையார் சிறியதாக இருக்கிறார்.
பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோவில்களின் நடை அடைக்கப்படும். இதற்கு காரணம் சூரிய, சந்திர கிரகணம் நிகழும் நேரம் தோஷமானதாகக் கருதப்படுவது தான். ஆனால் இக்கோவிலில் கிரகண வேளையில் நடை திறந்து, கிரகண துவக்கத் திலும், முடியும் நேரத்திலும் விசேஷ அபிஷேகம் செய்கின்றனர். இது கிரகண கோவில் என்பதை உணர்த்தும் விதமாக முன் மண்டபத் திலுள்ள ஒரு தூணில், சூரிய, சந்திரரை ராகு, கேது விழுங்கும் சிற்பம் உள்ளது.
இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி
நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இத்தலத்து மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சியளிப்பது ஒரு தனிச் சிறப்பாகும். மேலும் இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இப்படி இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் சிவலிங்கத் திருமேனியை நாம் வேறு எந்த கலத்திலும் தரிசிக்க முடியாது.
சிவ பெருமான், அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ நேரத்தில் தான் அருந்தினார் என்பதால், இந்த சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் விஷக்கடி பட்டவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் விஷக்கடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
நந்தி மீது அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தி
வேலூர் - ஆம்பூர் - கிருஷ்ணகிரி சாலையில், வேலூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் வாணியம்பாடி. இத்தலத்து இறைவன் திருநாமம் அதிதீசுவரர். இறைவி பெரியநாயகி. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. காசியப முனிவரின் மனைவி, அதிதி வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அதிதீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
பிரம்மதேவனால் ஊமையாகும்படி சபிக்கப்பட்ட சரஸ்வதி தேவி (வாணி ), இத்தல இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். வாணி ஊமைத் தன்மை மாறி, உரக்கப் பாடிய இடம் வாணி பாடி என்று அழைக்கப் பெற்று பின்னாளில் மருவி வாணியம்பாடி என மாறியது.
இக்கோவில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார். தட்சிணாமூர்த்தியின் இந்த தோற்றம் இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
பிரதோஷ வகைகள்
சிவாலயங்களில் மாதத்தில் இருமுறை பிரதோஷ வழிபாடு செய்யப்படுகிறது. பிரதோஷ வழிபாட்டில் 20 வகைகள் உள்ளன. அவை, நித்திய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாசப் பிரதோஷம், நட்சத்திரப் பிரதோஷம், பூரண பிரதோஷம், திவ்யப் பிரதோஷம், தீபப் பிரதோஷம், அபயப் பிரதோஷம் (சப்தரிஷி பிரதோஷம்), மகா பிரதோஷம், உத்தம மகா பிரதோஷம், ஏகாட்சர பிரதோஷம், அர்த்தநாரி பிரதோஷம், திரிகரண பிரதோஷம், பிரம்மப் பிரதோஷம், அட்சரப் பிரதோஷம், கந்தப் பிரதோஷம், சட்ஜ பிரதோஷம் மற்றும் மேலும் சில. ஒவ்வொரு பிரதோஷ வகைக்கும் தனிப்பட்ட வழிபாட்டு முறைகளும், பலன்களும் உண்டு.
நித்திய பிரதோஷம்
தினமும் மாலை வேளையில் சூரிய அஸ்த்தமனத்திற்கு முந்தைய 90 நிமிடங்கள் நித்திய பிரதோஷம் எனப்படும். இந்த நேரத்தில் தினம் தோறும் சிவனை வணங்குவது நல்லது.
பட்சப் பிரதோஷம்
அமாவாசைக்குப் பிறகு வரும் திரயோதசி திதியில் வரும் பிரதோஷம்.
மாசப் பிரதோஷம்
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷம்.
நட்சத்திரப் பிரதோஷம்
குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் பிரதோஷம்.
பூரண பிரதோஷம்
பௌர்ணமி திதியில் வரும் பிரதோஷம்.
திவ்ய பிரதோஷம்.
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் முன்ஜென்ம கர்மம் விலகும்.தீராத வியாதிகள் தீரும். வழக்கு தொல்லைகள் அகலும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோகத்தால் ஆன சிவலிங்கத்திற்கு அபிழேகம் செய்தும் பூரண பலனை பெறலாம்.
தீபப் பிரதோஷம்
தீபங்கள் ஏற்றி வழிபடப்படும் பிரதோஷம். உங்கள் வயது என்னவோ அதற்க்கு ஏற்றார் போல் அதே எண்ணிக்கையில் விளக்கேற்றி வணங்கலாம்.
மகா பிரதோஷம்
தேய்பிறை திரயோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது மகா பிரதோஷம் எனப்படும். அன்று முறையாக விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சப்தரிஷி பிரதோஷம்
பிரதோஷ காலத்தில் முறையாக பூஜைகளை முடித்த பின், வெட்ட வெளியில், வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்தத ரிஷி மண்டலம் என்று சொல்லக்கூடிய நட்ச்சத்திர கூட்டம் தெரியும். அந்த ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். ஒரு வேலை வானம் தெளிவாக தெரியாவிட்டால் கிழக்கு முகம் நின்று சப்த ரிஷிகளை மனதில் தியானித்து வணங்கலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம்
வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷத்தை ஏகாட்ச்சர பிரதோஷம் என்பார்கள். அன்றைய தினம் சிவாலயம் சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி வழிபட்டால் கோடி தோஷம் விலகும்.
அர்த்தநாரி பிரதோஷம்
வருடத்தில் இரண்டு முறை மட்டும் மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் சிவாலயம் சென்று வழிபட்டால் ஓன்று சேர்ந்து வாழலாம். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் எல்லா நம்மையும் பெறலாம். பிரித்தவர்கள் கூடுவார்கள்.
திரிகரண பிரதோஷம்
வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள். இதை முறையாக கடைபிடித்தால் இல்லாமை என்ற சொல் இல்லாமல் போய்விடும். அஷ்ட லக்ஷ்மிகளின் அருளாசியும் கிட்டும்.
பிரம்ம பிரதோஷம்
பிரம்மாவிற்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்க,ஒரு வருடத்தில் வரும் நான்கு சனிக்கிழமைகளில் வந்த சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்த பிரதோஷத்தை கடிபிடித்தால் முன்னோர் சாபம், முன்வினை பாவம் எல்லாம் விலகிவிடும்.
ஆட்சரப பிரதோஷம்
வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு இந்த பெயர். தாருகா வனத்து ரிஷிகள் தான் என்ற அகந்தை கொண்டு ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனார் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்கு பாடம் புகட்டினார். தங்கள் தவறை உணர்ந்த ரிஷிகள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தெரிந்தே தவறுகள் செய்தவர்கள் இதை அனுஷ்டிக்கலாம்.
கந்தப் பிரதோஷம்
சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன் வழிபட்டதால், இந்த பெயர் வந்தது. முருகனருள் வேண்டுபவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
சட்ஜ பிரபா பிரதோஷம்
தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறைபிடிக்க பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை அவர்கள் அனுஷ்ட்டித்ததால் கிருஷ்ணன் பிறந்தான். வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைபிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷம்
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷம் முறையாக கடைபிடித்தால், அஷ்ட்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், கீர்த்தி, செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷம்
வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷம். இப்படி ஒன்பது பிரதோஷம் வருவது மிக மிக அரிது. அப்படி வந்தால், அதை நீங்கள் அனுஷ்ட்டித்தால் சகல கிரக தோஷமும் விலகும். தடை பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை எல்லாம் கிட்டும்.
துத்த பிரதோஷம்
வருடத்தில் பத்து மகா பிரதோஷம் வந்து (இதற்கு வாய்ப்புகள் குறைவுதான்), அந்த பத்து பிரதோஷத்தையும் அனுஷ்ட்டித்தால் இந்த உலகமே கையில் கிடைத்த மாதிரி உச்சாணி கொம்புக்கு போவார்கள்.