சிவபெருமான்
இந்து சமயம் பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களைப் பிரதானமாகப போற்றுகின்றது.இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்திற்கு, சிவபெருமான் முதன்மையான கடவுளாக விளங்குகின்றார். சிவபெருமான் பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால்,இவரை பரமசிவன் என அழைக்கின்றனர்.சிவபெருமான் உருவம்,அருவம்(உருவம் இல்லாத நிலை), அருவுருவம்(உருவமும் அருவமும் கலந்த நிலை) என மூன்று வடிவங்களில் உள்ளார். பொதுவாக சிவ பெருமான் கோயில்களில் அருவுருவமாக, சிவலிங்கத்தின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் பல கோயில்கள் இருக்கின்றன. சிவ பக்தர்கள் பலர் (நாயன்மார்கள்) சிவபெருமானின் பெருமைகளைப் பாடிய பாடல்களின் தொகுப்பே 12 திருமுறைகளாக சைவசமயத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது.இவற்றில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும்,அடுத்த மூன்று திருமுறைகளை அப்பரும், ஏழாம் திருமுறையை சுந்தரரும் பாடியிருக்கிறார்கள்.இந்த மூன்று நாயன்மார்களும் சிவத்தலங்களுக்கு சென்று பாடிய பாடல்கள் தேவாரப் பாடல்கள் எனவும்,இவர்களின் பாடல் பெற்ற தலங்கள் தேவாரத் திருத்தலங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.தேவாரத் திருத்தலங்களின் எண்ணிக்கை மொத்தம் 276 ஆகும்.
சிவபெருமான் நிகழ்த்திய அற்புதங்களையும்,தேவாரத் திருத்தலங்கள் மற்றும் பிற சிவத்தலங்களை பற்றிய அரிய தகவல்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்
சென்னை மாநகரில் , பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரத் தலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இறைவனின் திருநாமம் கபாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள். கற்பகம் என்றாலே வேண்டும் வரங்களை தருபவள் என்று பொருள்.
இத்தலத்தில் முருகப் பெருமான், வள்ளி - தெய்வானை சமேத சிங்கார வேலர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் நடக்கும் பல திருவிழாக்கள் மிகவும் விசேஷமானவை, தனித்துவமானவை. அப்படி நடத்தப்படும் விழாக்களில் தைப்பூச தெப்ப உற்சவமும் ஒன்று. தைப்பூச நாளில் இக்கோவில் சிவன், அம்பாள், முருகன் ஆகிய மூவருக்கும் விழா எடுக்கப்படுவது தனிச்சிறப்பு.
இக்கோவிலில், தைப்பூச தெப்ப உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும் முதல் நாள் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரும், அடுத்த இரண்டு நாட்கள் வள்ளி தெய்வயானை சமேத சிங்காரவேலரும், மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் திருக்குளத்தில் பவனி வருவார்கள்.
கபாலீஸ்வரரின் திருக்கரத்தை பற்றிய நிலையில் அன்னை கற்பகாம்பாள் மணப்பெண் போன்ற கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, தெப்பத்தில் உலா வரும் காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். அதேபோன்று சிங்காரவேலர், ஒரு காலை தரையில் ஊன்றியும், ஒரு காலை மயில் மேல் வைத்தபடியும், வள்ளி - தெய்வானையுடன் கம்பீரமாக, அழகிய கோலத்தில் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
சனி பகவானை வணங்கிய பின் தான் சிவனை வழிபட வேண்டும் என்ற அபூர்வமான நடைமுறை உள்ள தேவார தலம்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநள்ளாறு. இறைவனின் திருநாமம் தர்ப்பாரண்யேசுவரர், இறைவியின் திருநாமம் பிராணேசுவரி. இறைவன் தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழும்புடன் உள்ளார். தரப்பாணேஸ்வரரை சனிபகவான் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணம் கூறுகிறது.
பிராணேசுவரி அம்மன் சன்னதிக்கு முன்னால், சனிபகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் வாயிற் காப்பாளராக சனி பகவானே கருதப்படுகிறார். பொதுவாக சிவனை வழிபட்ட பிறகு தான் நவகிரகங்களை வழிபடுவார்கள். ஆனால் இத்தலத்தில் சனீஸ்வரனை வணங்கிய பிறகு தான் சிவனை வழிபட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. மேலும் சனி பகவானை தவிர, மற்ற எட்டு கிரகங்களும் இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. சனிபகவானது விக்ரகத்தின் கீழே, அவரது சாந்நித்யம் கொண்ட மகாயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சனி பகவானாலேயே அந்த மகாயந்திரம் அருளப்பட்டதால், அதனுடைய சக்தி அளவிட முடியாதது. அதனாலேயே சனிபகவானின் திருச்சன்னதி மிக்க சிறப்பும், சக்தியும், மூரத்திகரமும் பெற்று விளங்குகிறது.
பிரார்த்தனை
இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. சனித் தொல்லை தீர நள தீர்த்தத்திலும், முன் ஜென்ம சாபவங்கள் விலக பிரம்ம தீர்த்தத்திலும், கலைகளில் தேர்ச்சி பெற வாணி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்
சனி காயத்ரி மந்திரம் :
காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்
எமதர்மனுக்கு புதிய வேலைக் கிடைத்த தேவாரத் தலம்
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு சண்டிகேசுவரர் மட்டுமே இருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இரண்டு சண்டிகேசுவரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் ஆதி சண்டிகேசுவரர். மற்றொருவர் எம சண்டிகேசுவரர்.
பிறக்க முக்தி எனும் சிறப்புடையது திருவாரூர் தலம். அதனால் இத்தலத்தில் பிறந்தவரகள் அனைவரும் சிவ கணங்கள் என்னும் தகுதியைப் பெறுகிறார்கள். இக்காரணத்தினால் எமதர்மன் அவர்களை நெருங்க முடியாது. இறைவனே முக்தி பேறு தந்து அவர்களை அழைத்துச் செல்வதால், இத்தலம் முக்தித் தலம் என்றழைக்கப்படுகிறது.ஆதலால் திருவாரூரில் தனக்கு வேலை இல்லையே என்று எமதர்மன் சிவபெருமானிடம் முறையிட்டான். அவன் மனக்குறையைப் போக்குவதறகாக, சிவபெருமான் அவனுக்கு சண்டிகேசுவரர் பதவி கொடுத்தார். இக்கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் எமதர்மன் ஒரு காலை ஊன்றி கையில் முகத்தைத் தாங்கி நமக்குக் காட்சி தருகிறார். எமதர்மன் இறைவனை வேண்டி, சண்டிகேசுவரர் பதவி பெற்று தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டதால், எமபயமுள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால் நன்மை பயக்கும்.
இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.
சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.
பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்
தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.
பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.
பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.
கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.
இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.
பிரார்த்தனை
இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.
கவடக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் சிவலிங்கம்
கருவறையில் சிவபெருமானுடன் காட்சி தரும் சப்த கன்னியர்கள்
கரூரில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் குளித்தலை. இறைவன் திருநாமம் கடம்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். கருவறையில் சிவபெருமான் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு அம்சமாகும். அதனால் இத்தலம் காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.
பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோவில்களில் உபசன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்குத் தனியாக கோவில் அமைந்திருக்கும். ஆனால், இக்கோவிலில், சப்த கன்னியர்கள் மூலவர் கடம்பவனநாதரின் பின்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இதுபோல மூலஸ்தானத்தில் சப்த கன்னியர்கள் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.
ராமர் வழிபட்ட தீர்த்தாண்டதானம்
தை மாத அமாவாசையில் திதி கொடுத்தால் நற்பலன்களை தரும் தலம்
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் திருநாமம் சகல தீர்த்தமுடையவர்.இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இத்தலத் தீர்த்தமான கடலில் நீராடி, பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இராமபிரான், இலட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது இவ்விடத்தில் சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தார். ராமரும் மகிழ்ச்சியுடன் அந்த நீரை அருந்தினார். தீர்த்தாண்டதானத்தில் ராமர் இருப்பதையறிந்து அங்கு வந்த அகத்தியர், 'ராவணன் சிறந்த சிவபக்தன். சிவபெருமானின் அருள் இல்லாமல் அவனை வீழ்த்துவது கடினம். சிவபெருமானை வணங்கிய பின்னர் இலங்கைக்கு செல்லுங்கள்' என்று தெரிவித்தார். இதனையடுத்து அருகே உள்ள திருப்புனல்வாசலில் வீற்றிருக்கும் விருத்தபுரீஸ்வரரை நினைத்து ராமர் வழிபட்டார்.
இதனால் மகிழ்ந்த சிவபெருமான் ராமர் முன்பு தோன்றினார். பின்னர் ராமருக்கு அருள் புரிந்த சிவபெருமான், அருகிலுள்ள கடற்கரையில், தந்தை தசரதனுக்கு தர்ப்பணம் செய்து விட்டு இலங்கைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது வருணபகவான், 'ராமர் வழிபட்ட இடத்தில் சிவபெருமான் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்க வேண்டும், ராமருக்கு தீர்த்தம் கொடுத்ததால், அப்பகுதிக்கு தீர்த்தாண்டதானம் என்று பெயர் விளங்க வேண்டும். அங்குள்ள கடலில் நீராடி ஈசனை வழிபடுபவர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடியதற்கு ஒப்பான பலனை பெற வேண்டும்' என்று வரமளிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமானும் அப்பகுதியில் சர்வதீர்த்தேஸ்வரராக கோவில் கொண்டார் என்பது புராணம்.
ராமர் தர்ப்பணம் செய்த கடற்கரையில் பக்தர்கள் இன்றும் தர்ப்பணம் செய்துவிட்டு, ஈரத்துணியுடன் சர்வதீர்த்தேஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும். பூர்வ ஜென்ம தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இது கருதப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தை மாத அமாவாசையில் இங்கு திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும். இங்கு திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களது ஆத்மா அமைதி பெறும் என்பது ஐதீகம்.
கையில் திரிசூலம் ஏந்தி இருக்கும் சனிபகவானின் அபூர்வ தோற்றம்
கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி. இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.
திருநள்ளாறு,திருநாரையூர், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், வழுவூர் போன்ற சனிப் பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோவிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவர் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இப்படி திரிசூலம் ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.
இத்தலத்து அனுமன், கோரை பற்களோடு எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான காட்சியாகும்.
நந்திக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நெய் மீது ஈ, எறும்பு மொய்க்காத அதிசயம்
மாட்டுப் பொங்கலன்று நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்யும் நடைமுறை
புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில், பொன்னமராவதிக்கு அருகே உள்ள வேந்தன்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது நெய் நந்தீஸ்வரர் கோவில். இறைவன் சொக்கலிங்கேசுவரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி அம்மன். இக்கோவிலில் உள்ள நந்தியின் பெயராலேயே இவ்வாலயம் புகழ்பெற்று விளங்குகிறது.
தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டும் பொழுது, கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டுவரப்பட்டன. அதில் பெரிய நந்தி தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் வைக்கப்பட்டது. இதனால் வேந்தன்பட்டி நந்தியை 'தம்பி நந்தி' என்றும் சொல்கிறார்கள். இங்குள்ள நந்தீஸ்வரர், தஞ்சாவூர் நந்தீஸ்வரருக்கு தம்பியாக கருதப்படுவதால் இந்தப் பெயர் வந்ததாம்.
இத்தலத்து நந்திக்கு நெய் அபிஷேகம் செய்தால் உடல் பிணி நீங்கும் என்பதால் இந்த நந்திக்கு நெய் அபிஷேகம் அடிக்கடி நடைபெறுகிறது. அதனால், இங்குள்ள நந்தி, நெய் நந்தீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார்.பொதுவாக நம் வீட்டில் அல்லது வெளியில் சிறிதளவு நெய் கொட்டினாலும் எறும்பு, ஈக்கள் குவிந்துவிடும். ஆனால் இந்த நந்தீஸ்வரருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். நெய் மீது ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. இதற்கு நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாக அமைந்த அமைப்பாக உள்ளது. இந்த சக்கரம் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நந்தி மீது அபிஷேகம் செய்யப்படும் நெய் மீது ஈயும், எறும்பும் மொய்ப்பதில்லை. நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. நெய் பல லிட்டர் கணக்கில் இருந்தும்,அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.
இந்த ஆலயத்தில் மாட்டுப் பொங்கல் அன்று, நந்தியின் அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகம் செய்யும் நடைமுறை உள்ளது. இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறை ஆகும். பின் பழங்கள், பூக்கள், இனிப்பு பலகாரங்கள், போன்றவற்றைக் கொண்டு நந்தியை அலங்காரம் செய்கிறார்கள்.
இக்கோவில் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.
ஆலயத்துளிகள் வாசகர்களுக்கு,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!
அபூர்வமான ஆறடி உயரமுள்ள சூரியபகவான்
மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ளது கைலாசநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் காமாட்சி. பிரம்மதேவன் சிவனால் ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்துக்கு வந்து வழிபட்டதால், இந்த ஊருக்கு (பிரமன்+ஊர்) பிரமனூர் என பெயர் ஏற்படடது.
பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள சூரியபகவான் சிலை மிகவும் அபூர்வமானது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சூரியபகவான் இறைவனை பார்த்த வண்ணம், சுவாமியின் இடப்பாகம் எழுந்தருளி உள்ளார்.
பொதுவாக சூரிய பகவான், சூரியபகவான் இறைவனின் வலப்பாகத்தில் தான் இருப்பார். இத்தகைய சூரிய பகவானை, இந்தியாவின் வேறு எந்த தலத்திலும் நாம் காண்பது அரிது.
மகர சங்கராந்தி
சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் தினமே மகர சங்கராந்தி ஆகும். சூரியபகவான் வான்வெளியில் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் தான் மகர சங்கராந்தி. சமசுகிருதத்தில் 'சங்கரமண' என்றால், 'நகரத் துவங்கு' என்று பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. தமிழகத்தில் இந்நாள், பொங்கல் பண்டிகை எனவும், இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால், அறுவடை திருவிழாவாகவும், சூரியனுக்கு வரவேற்பும், நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
காசி காலபைரவருக்கு இணையான குண்டடம் கொங்கு வடுகநாதர்
கோவை - மதுரை நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்! ' என்று திருமுருக கிருபானந்த வாரியார் கூறி இருக்கிறார். அதாவது காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி கால பைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.
முன்னொரு காலத்தில், விடங்கர் என்ற முனிவர் இந்த காட்டில் தவம் இருக்கும்போது அரக்கர்களால் தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவ வேண்டும் என்று காசி விசுவநாதரை மனமுருக வேண்டினார். காசி விசுவநாதர் விடங்கரின் பிரார்த்தனைக்கு இணங்கி வடுக பைரவரை அனுப்பினார். பைவர் இடையூறு செய்த அரக்கர்களை அழித்தார், பின் இலந்தை மரத்தின் அடியில் இருந்த புற்றில் நிரந்தரமாய்க் குடிகொண்டார். அருகே ஒர் அரசமரத்தடியில் பாம்பாட்டீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சேர நாட்டிலிருந்து மிளகு விற்க வரும் வியாபாரிகள் இந்த அரசமரத்தடியில் இளைப்பாறுவது வழக்கம். ஒரு நாள் காலபைரவர் வயதான அந்தணர் தோற்றத்தில், மிளகு வியாபாரியிடம் சென்று தனக்கு உடல்நிலை சரியில்லை, கஷாயம் வைக்க மிளகு கொஞ்சம் கேட்கிறார், ஆனால் கொடுக்க நினைக்காத வியாபாரி மாட்டு வண்டியில் உள்ள மூட்டையில் மிளகு இல்லை பயறு என்று பொய் சொல்லிவிடுகிறார்.
மதுரை சென்று சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் விலை பேசி மிளகு மூட்டைகளை விற்று விட்டார்கள். மிளகு மூட்டையை பரிசோதித்துப் பார்க்க, அவை பச்சைப் பயறாக இருப்பதைப் பார்த்து ஏமாற்றி விட்டதாய் கோபப்படுகிறார் மன்னர். வியாபாரிகள் ஒரு பெரியவர் மிளகு கேட்டதாகவும் தாங்கள் மிளகு கொடுக்க மறுத்து மூட்டையில் உள்ளது பச்சைப் பயிறு என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். நம்ப மறுக்கிறார் மன்னர். அப்போது பைரவர் திருவிளையாடல் புரிகிறார், எந்த வியாபாரியிடம் மிளகு கேட்டாரோ அந்த விபாபாரி மேல் அருள் வந்து நான்தான் மிளகு மூட்டைகளைப் பயிறு மூட்டைகளாக மாற்றினேன் என்று சொல்கிறார் பைரவர். அப்போதும் மன்னருக்கு நம்பிக்கை வரவில்லை.என் மகன், மகள் இருவரும் உடல்நிலை சரியில்லாதவர்கள் அவர்களைச் சரி செய்தால் நம்புவதாகச் சொல்கிறார்.
பைரவர் மன்னரிடம் புற்றில் இருக்கும் என்னைக் கோவில் கட்டிக் குடியமர்த்து .அபிஷேகம் செய்து மிளகு சாற்றி வழிபடு. உன் குழந்தைகளைக் குணப்படுத்துகிறேன் என்கிறார். பாண்டிய மன்னரும் அவ்வாறு செய்ய, குழந்தைகள் எட்டு நாட்களில் நலம் பெற்றார்கள்.. பேசமுடியாது இருந்த பெண் குழந்தை பேசியது, நடக்க முடியாது இருந்த ஆண் குழந்தை பைரவர் அருளால் நடந்தது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால், பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. கொங்கு நாட்டுக் காசியாக, குண்டடம் விளங்குகின்றது.
பிரார்த்தனை
தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். இவரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கிவிடும். பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.
ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது. வெண்பொங்கல் நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும், வெட்டப்பட்ட பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சிலர் பரிகாரத்துக்காக விளக்கேற்றுகிறார்கள்.
ஒரே கோவிலில் இரண்டு நவக்கிரகங்கள் அமைப்பு இருக்கும் அபூர்வ காட்சி
தென்காசி நகரில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் உலகம்மை. ஆயிரம் ஆண்டுகள் மேல் பழமையானது இக்கோவில்.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் அவரவர் திசையை நோக்கியபடி எழுந்தருளி இருப்பார்கள். அரிதாக சில கோவில்களில் நவக்கிரகங்கள் நேர் வரிசையில் அமைந்து இருப்பார்கள். ஆனால், தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் உள்ள நவக்கிரகங்கள், மண்டபத்தில் அவரவர் திசையிலும், மண்டபத்தின் முன்னால் நேர் வரிசையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள். இப்படி ஒரே கோவிலில் நவக்கிரகங்கள் இரண்டு விதமாக அமைந்திருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்
பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.
5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.
மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு செல்லலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சாதாரணமாக வெண்ணெய்தான் நெய்யாக உருகுவது இயற்கை. ஆனால் இக்கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் நெய், வெண்ணெயாக மாறுவது ஒரு அதிசய நிகழ்வாகும்.
ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூரில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர். இறைவியின் திருநாமம் வண்டமர் பூங்குழலி. திருக்குவளை தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து இறைவனுக்குரிய நடனம் பிருங்க நடனம். வண்டு மலருக்குள் குடைந்து, குடைந்து ஆடுதல் போன்றதுதான் பிருங்க நடனம்.
சிவபெருமானின் திருமுடி கண்டதாக பிரம்மா பொய்கூறியதால் அவருக்கு சாபம் உண்டாகிறது. எனவே படைக்கும் தொழில் தடைபடுகிறது.நவகிரகங்களுக்கு தோஷம் உண்டாயிற்று. இதனால் நவகிரகங்களும் தத்தமது வேலையை சரியாக செய்ய முடியாமல் திணறுகின்றன. இங்கு,நவக்கிரகங்கள் தங்கள் தோஷம் நீங்க, தென்திசை நோக்கி வக்கிரமின்றி வரிசையாக நின்று இறைவனை வழிபட்டதால், இக்கோவிலில், அவை ஒரே திசை நோக்கி வரிசையாக காட்சி அளிக்கின்றன.நவக்கிரகங்களின் குற்றம் நீக்கியருளியதால், இத்தல இறைவனுக்கு கோளிலிநாதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இதனால், கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் சிறப்பு. இதனையே, 'கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி
பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.
தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.
நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி
ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.
அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.
வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கு திருஷ்டி பொட்டாக வைக்கப்படும் திருவண்ணாமலை மகாதீப முதல் மை
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம், சிவன் அக்னி பிழம்பாக நின்றதை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் பெரும் தீபமாகும். இது திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாய் சிவன் காட்சியளித்ததைச் சிறப்பிக்கிறது,
ஐந்து அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, 1500 மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும். இந்த மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும். திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பெற்றவர்கள் பர்வதராஜ குலத்தினர். இந்தப் பர்வத ராஜ குலத்தினரே மகாதீபம் அணைந்த பின் தீபக் கொப்பரையை மலையிலிருந்து இறக்கி கோவில் வசம் ஒப்படைப்பார்கள். இந்தக் கொப்பரையில் இருந்து எடுக்கப்படும் முதல் மை, வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி வெங்கடேசுவர பெருமாளுக்கும், மலையப்ப சுவாமிக்கும் திருஷ்டி பொட்டாக வைக்கப்படுகின்றது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று திருவண்ணாமலை நடராஜப் பெருமானுக்கும் சாற்றப்படுகின்றது.
கழுத்தில் கபால மாலை அணிந்து காட்சி தரும் கால பைரவர்
கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 79 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில். இக்கோவிலில் ஆட்சிபுரீஸ்வரர் , உமையாட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளியம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோவிலில் இருக்கும் கால பைரவர் வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார். மிக சிறிய உருவ தோற்றத்துடன் இருக்கும் இந்த கால பைரவர் கழுத்தில் ஆளுயர கபால மாலை அணிந்து காட்சி தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் கால பைரவர் தெற்கு அல்லது வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பார். ஆனால் இத்தலத்தில் கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய நிலையில் இருக்கும் கால பைரவரை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
இவரை வழி பட்டால் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். தொழில் தொடங்கும் முன்பும் இவரை வழிபட வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் அரிய காட்சி
நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் தலம்
திருவாரூர் - வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாய்மூர். இறைவன் திருநாமம் வாய்மூர்நாதர். இறைவியின் திருநாமம் பாலினும் நன்மொழியம்மை. திருவாய்மூர் தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். தியாகராஜர் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. அப்பர் திருஞானசம்பந்தர் ஆகிய இரு நாயன்மார்களுக்கும் ஒரே நேரத்தில் இறைவன் அம்மையப்பனாக காட்சி அளித்த ஒரே திருத்தலம் திருவாய்மூர்.
நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து விமோசனம் பெற்றார். பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் தங்களுக்கு உரிய திசையை நோக்கிய வண்ணம் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. நவக்கிரகங்களின் இத்தகைய அமைப்பை நாம் ஒரு சில இடங்களில் மட்டுமே காண முடியும். இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரக தோஷங்கள் விலகும்.
உமாதேவிக்கு மிகவும் பிடித்தமான தேவார தலம்
மகாலட்சுமி சிவபூஜை செய்த தலம்
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருத்தங்கூர். இறைவன் திருநாமம் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல்நீர் பூவுலகம் முழுவதையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி உலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது.
உமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது.
சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி, இக்தலத்தில் சிவகங்கை தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கி, சிவபூஜை செய்து தனது பாவத்தை போக்கிக் கொண்டாள்.
நவக்கிரகங்கள் சிவலிங்கம் நிறுவி வழிபட்ட தேவாரத் தலம்
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருத்தங்கூர். இறைவன் திருநாமம் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. தென்னை மரங்கள் வளம் பெற்ற ஊராதலின் 'தெங்கூர்' என்று இத்தலத்திற்கு பெயர் வந்தது. அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.
ஒரு சமயம் சுக்கிரன் மகாவிஷ்ணுவின் சாபம் பெற்று ஒற்றைக் கண்ணுடன் மறைந்து வாழ்ந்து வந்தார். மகாவிஷ்ணுவின் சாபத்திலிருந்து விடுபட சிவனை வழிபடுவதே சிறந்தது என்று எண்ணி சுக்கிரன் இத்தலம் வந்து சிவபெருமானை ஒரு லிங்கம் நிறுவி வழிபட்டார். வெள்ளிமலைநாதர், அம்பாள் பெரியநாயகியுடன் சுக்கிரனுக்கு காட்சி தந்து வேண்டய வரத்தை அருளினார். சுக்கிரனுக்கு அருள் கிடைத்ததைக் கண்ட மற்ற எட்டு கிரகங்களும் தங்களது பெயர்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்து வழிபடுவோர் சகல நவக்கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம்.
அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.
கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி
இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
தர்மதேவதை நந்தி வடிவில் எழுந்தருளி இருக்கும் தேவாரத்தலம்
திருமண வரம் அருளும் நந்தி தேவர்
விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவெண்ணைநல்லூர். இறைவன் திருநாமம் கிருபாபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. சிவபெருமான் முதியவர் தோற்றத்தில் வந்திருந்து, சுந்தரரை ஆட்கொண்ட தலம் இது.
தர்மதேவதையே நந்தி வடிவில் இக்கோவிலில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தாங்களும் மாலை போட்டு, நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பூர்வ ஜென்ம பாவம் விலக இக்கோவிலில் யாகம் செய்கிறார்கள். உடல் ஆரோக்கியம், தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது. இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள்.
சிறுவனாக வந்த பிரம்ம தேவனின் பூஜையை ஏற்றுக் கொள்வதற்காக தன் சிவலிங்க பாணத்தை தாழ்த்திய சிவபெருமான்
வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானது. ‘திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு.
திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் ஆகும்.
பிரம்மதேவன், சாபவிமோசனம் பெற, இத்தலத்து கோவில் அர்ச்சகர் சிவநாதன்-நயினாநந்தினி தம்பதிக்கு, சிவசர்மன் என்ற பெயருடன் மகனாகப் பிறந்தார். சிவசர்மன் தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையை இழந்தார். சிவசர்மனுக்கு உரிய பருவம் வந்ததும், உபதேசமும், சிவ தீட்சையும் தம் மகனுக்குச் செய்விக்கும்படி அன்னை நயினாநந்தினி உறவினர்களிடம் கேட்டாள். அவர்கள் அதற்கு மறுத்ததுடன் பூஜா உரிமையையும், சொத்துக்களையும் தமக்கே எழுதித்தரக் கூறினர். வேறு வழியற்ற அவள் சிவபெருமானைச் சரணடைந்தாள்.
அவள் கனவில் தோன்றிய சிவபெருமான், பிரம்ம தீர்த்தக் கரையில் நாளை அதிகாலை உன் மகனை நீராட்டி வை என்று சொன்னார். ஈசன் சொன்னது கார்த்திகை மாத சனிக்கிழமை. மறுநாள் அதிகாலை (கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு) சிவபெருமான் சொன்னபடியே தன் மகனுடன் காத்திருந்தாள். வயோதிக அந்தணராக வந்த சிவபெருமான், சிறுவனுக்கு பிரும்மோபதேசமும், சிவ தீட்சையும் செய்வித்தார். கரையேறி வந்தவர் மகா லிங்கமாக மறைந்து விட்டார். ஈசன் கனவில் சொன்னபடியே சிறுவனை யானை மீது திருமஞ்சனக் குடத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மன்னர்கள் ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவு திறந்துகொண்டது. குடத்துடன் உள்ளே சென்ற சிறுவனோ, மரபு வழுவாமல் முறைப்படி பூஜைகளைச் செய்ய முற்பட்டான். அப்போதுதான், அபிஷேகம் செய்ய தன்னுடைய உயரம் போதாமையால் வருந்தினான். சிறுவனின் வருத்தம் அறிந்த பெருமான். சிவபாணத்தைச் சாய்த்து, அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக மார்க்கபந்தீசுவரர் காட்சி அளிக்கிறார். சிருஷ்டிகர்த்தாவாக விளங்கும்போது பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, சிறுவனாக வந்து வருந்தியபோது காட்டி, அந்த அபிஷேகத்தையும் ஏற்றருளிய நாள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு ஆகும்.
கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தமாடி வழிபட்டால் குழந்தை பேறு அருளும் இறைவன்
கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறன்று, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு, விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடி கோயிலில் உறங்குகிறார்கள். அவர்கள் கனவில் பெருமான் காட்சி தந்தால் அடுத்த வருடமே கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த சிம்மக்குள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.
முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.
இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
பனை காய்கள் ஒரு வருடம் கருப்பாகவும், மறுவருடம் வெள்ளையாகவும் காய்க்கும் அதிசய பனை மரம்
இக்கோவில் தலமரமாக பெண்பனை மரம் உள்ளது. இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கு பிரம்மதேவரின் அகந்தையை அகற்ற சிவபெருமான் அவரின் தலையை அகற்றி தண்டித்ததால், ‘சீரகண்டீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார்.
இக்கோவிலில் பிரம்மதேவர் தவமிருந்து சிவனிடம் சாப விமோசனம் பெற்றார். இங்கு சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.மற்ற கோவில்களில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அல்லது கோஷ்டத்தில் வீற்றிருக்கும் நிலையில், இங்கு பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் ஒன்றாக தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். பிரம்மா சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக, புன்னகை தவழும் கோலத்தில் காட்சியளிக்கிறார், அவரது கரங்களில் பூ மற்றும் ஜெபமாலைகள் இருக்கின்றன.
இந்த தலத்தில் தரிசனம் செய்தால் பிரம்மா தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்களின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி.
இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இரண்டாவது அவதாரம் எடுத்து, பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அதனால் இங்கு சனி பகவான் தன்னை வழிபடுபவர்களுக்கு வெறும் நற்பலன்களை மட்டுமே வாரி வழங்குகின்றார். அவரைப் போலவே மற்ற நவக்கிரகங்களும், இத்தலத்தில் தங்களுடைய காரகப் பலன்களை அளிக்காமல் சிவ தியானத்தில் இருக்கின்றன. இந்த காரணத்தினால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் மாறுபட்ட அமைப்பில் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் 'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் காட்சி அளிக்கிறார்கள். இத்தகைய வடிவமைப்பில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பதை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரகங்களின் இந்த 'ப' எழுத்து வடிவமைப்பில், சூரியன், சந்திரன், அங்காரகன் ஆகிய மூவரும் பின்புறம் இருக்கிறார்கள். சந்திர பகவானுக்கு வலது புறம் குருபகவான், சனி பகவான், புதன் பகவான் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். அங்காரகனுக்கு இடது புறம் சுக்கிர பகவான், ராகு பகவான், கேது பகவான் ஆகியோர் இருக்கின்றார்கள்.
வருடம் முழுவதும் நந்தி வாயில் இருந்து தண்ணீர் அருவியாய் பாயும் அதிசயம்
சென்னை - திருப்பதி சாலையில், சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி என்ற கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் வாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. காரியாற்றின் கரையில் உள்ளதால் இவ்வூர் காரிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, 'கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார்.
இக்கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்தக் குளம் உள்ளது. இந்தத் தீர்த்தம் நந்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தீர்த்தக்குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து தண்ணீர், தீர்த்தக் குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. நந்தியின் வாயிலிருந்து நீர் அருவியாய் பாய்கிறது .இந்த நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீர் வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களும் அளவு மாறாமல் அதே அளவு நீர் வெளியேறுகின்றது. இந்த நீர் மிகவும் சுவை மிகுந்ததாகவும், இனிப்புத் தன்மை உடையதாகவும் இருக்கின்றது.
அந்தரத்தில் தொங்கும் 2000 கிலோ எடையுள்ள அதிசய கல் தூண்
தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் கல்யாண காமாட்சி கோவில். இந்த கோயில் கோட்டை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.
சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை 2000 கிலோ. இதனால் இத்தூண் 'தொங்கும் தூண்' என்று அழைக்கப்படுகின்றது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது . மண்டபத்தின் விதானத்தில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே கால் மாறி ஆடும் நடராஜர் அருள்புரிகிறார். மதுரையை அடுத்து இந்த தலத்தில் தான் நடராஜரின் கால்மாறி ஆடும் கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும்.
ஸ்ரீசக்கரத்தின் மீது எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி
பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது, ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்ப வடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கோவிலின் வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனுக்கும் அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி தரும் தனிச்சிறப்பு
குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்க அருளும் லட்சுமி நாராயணர்
கோயம்புத்தூர் மாநகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், துடியலூரை அடுத்து அமைந்துள்ளது வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் விஸ்வநாயகி. இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூன்று யுகங்களைக் கண்ட பெருமை வாய்ந்த கோவில் இது.
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பசியால் தளர்ந்து இக்கோவிலுக்கு வந்தபோது, இறைவனும் இறைவியும் வேடுவ தம்பதிகளாகத் தோன்றி அவருக்கு 'வன முருங்கைக்கீரை' சமைத்து அமுது படைத்தனர். விருந்தளித்த காரணத்தால் இத்தல இறைவன் 'விருந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலின் தனித்துவமான சிறப்பு அம்சங்களில் ஒன்று, நிபந்தனையற்ற பக்தியும் மற்றும் சேவையில் ஈடுபடும் சிறிய திருவடி, பெரிய திருவடி என அழைக்கப்படும் அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதாகும். இக்கோவிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர் சன்னதிக்கு அருகே இவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை, உடனே நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்கவும் இங்குள்ள லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.