மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்

அக்னி கிரீடம் தரித்த சனி பகவானின் அபூர்வ தோற்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைநகரான மயிலாடுதுறையின் மையப்பகுதியில் அமைந்துள்ள தேவாரத் தலம் மயூரநாதர் கோவில். இறைவியின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட தலம் இது.

பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் வேதப் பிரதிஷ்டை முறையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு சில தலங்களில் மட்டும் தான் அவை வேத ஆகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும். நவக்கிரகங்கள் வேதாகம விதிப்படி அமைக்கப்பட்டிருக்கும் போது, சூரிய பகவான் நடுவில் எழுந்தருளி இருப்பார். பாவக்கிரகங்களான சனி ,செவ்வாய், ராகு, கேது ஆகிய நால்வரும் வெளிச்சுற்றில் நான்கு மூலைகளில் எழுந்தருளிப்பார்கள். சுபகிரகங்களான சந்திரன்,புதன், குரு, சுக்கிரன் ஆகிய நால்வரும் சூரிய பகவானுக்கும் பாவக்கிரகங்களுக்கும் நடுவில் எழுந்தருளி இருப்பார்கள். நவகிரகங்களில் சனி பகவான் தான் வழக்கமாக அணியும் ராஜ கிரீடத்திற்கு பதிலாக, 'ஜுவாலா கேசம்' (அக்னி கிரீடம்) அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். பொதுவாக மாரியம்மன் போன்ற உக்கிரக நிலையில் உள்ள தெய்வங்கள் தான் அக்னி கிரீடம் அணிந்து இருப்பார்கள். இப்படி அக்னி கிரீடம் தரித்த சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்

பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்

பக்தர்களின் நோய்களை தீர்த்து வைக்கும் வைத்தீஸ்வரன்

வட வைத்தீஸ்வரன் கோவில் என்று போற்றப்படும் தலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளைப்பாக்கம் எனும் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள கோவிலின் இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர், வைத்தீஸ்வரன். இறைவியின் திருநாமம் தையல் நாயகி. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இத்தலத்து இறைவன் தன்னை நாடிவரும் பக்தர்களின் நோய்களை தீர்த்து வைப்பதால், இந்த கோவில் வட வைத்தீஸ்வரன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இப்படி இந்த கோவில் சிறப்பு பெயர் பெற்றதற்கு பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

முற்காலத்தில் ஒரு சமயம் இந்த கோவிலின் அர்ச்சகர் மகனை பாம்பு கடித்தது. அர்ச்சகர் தனது மகனை இறைவன் முன் நிறுத்தி பிரார்த்தனை செய்தார். அப்போது இறைவன், பசுவின் வடிவில் வந்து சிறுவனின் பாம்பு கடித்த பகுதியை நக்கினார். உடனே அர்ச்சகரின் மகன் குணமடைந்து எழுந்தான். இதனால் இத்தலத்து இறைவனின் குணப்படுத்தும் சக்தி வெளிச்சத்திற்கு வந்தது. அதுவரை மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டு வந்த இறைவன், இந்த சம்பவத்திற்கு பின்னால், வைத்தியநாத சுவாமி, வைத்தீஸ்வரன் என்று அழைக்கப்பட்டார். இத்தலமும் வட வைத்தீஸ்வரன் கோவில் என்று பெயர் பெற்றது. இந்த கிராமத்தின் முந்தைய பெயர் சோழவளவன் நாடு. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த கிராமம் பிள்ளை நக்கிய பக்கம் என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் பிள்ளைப்பாக்கம் என்று ஆனது.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

நெற்றிக்கண்ணுடன் மகாலட்சுமி இருக்கும் அபூர்வ தோற்றம்

சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும் தலம்

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

அச்சுதன் என்னும் திருமால், பிரிந்து சென்ற தன் மனைவி மங்கலம் என்னும் மகாலட்சுமியை, இத்தலத்து இறைவனைப் பூஜித்து திரும்பப் பெற்றதால் இத்தலத்திற்கு அச்சுதமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் தனிச்சன்னதியில் மகாவிஷ்ணுடன் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். அதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

ஒரு சமயம் கஜேந்திரன் என்னும் யானையானது, முதலையிடம் சிக்கிக் கொண்டபோது, ஆதிமூலமே காப்பாற்று என்று மகாவிஷ்ணுவிடம் அபயக்குரல் எழுப்பியது. அப்போது மகாவிஷ்ணு விரைந்து வந்து முதலையிடம் இருந்து யானையை மீட்டு, அதற்கு மோட்சம் அளித்தார். அப்படி யானையை காப்பாற்ற மகாவிஷ்ணு விரைந்து வந்தபோது, மகாலட்சுமியை தனியே விட்டு வந்ததால், மகாலட்சுமி கோபமுற்று அவரை விட்டு பிரிந்து சென்றாள். பிரிந்து சென்ற மகாலட்சுமியை மீண்டும் அடைய, மகாவிஷ்ணு இத்தலத்து இறைவன் சோமநாதரை பூஜை செய்ய ஆரம்பித்தார். 48 ஆண்டுகள் கடந்தும், இறைவன் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதுவரை எந்த ஒரு பொருளால் இறைவனை யாரும் பூஜை செய்யவில்லையோ, அதைக் கொண்டு பூஜை செய்தால் இறைவன் தம்முடைய கோரிக்கை நிறைவேற்றுவார் என்ற அடிப்படையில், மகாவிஷ்ணு தமக்கு பிரியமான துளசியைக் கொண்டு இறைவனை பூஜை செய்ய ஆரம்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், மகாலட்சுமியை மகாவிஷ்ணுடன் சேர்ந்து இருக்குமாறு பணித்தார். அதற்கு மகாலட்சுமி சிவபெருமானிடம் இருக்கும் நெற்றிக்கண் போல் தனக்கும் ஒன்று வேண்டும் என்று அவரிடம் வரம் கேட்டு நெற்றிக்கண்ணை பெற்றுக்கொண்டார். அதனால் தான் இத்தலத்தில் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் அமைந்துள்ளது. மகாலட்சுமியின் இந்த நெற்றிக்கண்ணை, அபிஷேகத்தின் போது நாம் தரிசிக்க முடியும்.

இத்தலத்தில் மகாவிஷ்ணு துளசி கொண்டு சிவபெருமானை பூஜித்ததால், இன்றும் இக்கோவிலில் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

Read More
பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்

பிள்ளைப்பாக்கம் வைத்தீஸ்வரன் கோவில்

சூலாயுதம் ஏந்தி இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இறைவியின் திருநாமம் தையல் நாயகி.

இக்கோவிலில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவர் கால தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார். இவர் கையில் சூலாயுதம் ஏந்தி நாக ஆபரணத்துடன் காட்சியளிக்கிறார். இப்படி சூலாயுதம் ஏந்திய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

நாகாபரணம் அணிந்த இவரை வணங்கினால் நாக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
தொடுகாடு பீமேஸ்வரர் கோவில்

தொடுகாடு பீமேஸ்வரர் கோவில்

ஜோதிடக் கலை தொடர்புடைய முதல் படைப்பு எழுதப்பட்ட தலம்

ஒரு முருங்கைக் காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலே நைவேத்தியம் படைக்கப்படும் வித்தியாசமான நடைமுறை

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் தொடுகாடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பீமேஸ்வரர் கோவில். பீமேஸ்வரரின் முந்தைய பெயர் வீமேஸ்வரர், காலப்போக்கில் அது பீமேஸ்வரர் ஆனது. இறைவியின் திருநாமம் நகைமுகவல்லி . இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இக்கோவில் இறைவன் வீமேஸ்வரர் சொல்லச் சொல்ல, 63 நாயன்மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் 'வீமேஸ்வர உள்ளமுடையான்' என்னும் ஜோதிட நூலை இயற்றினார். ஜோதிடத்துடன் தொடர்புடைய முதல் படைப்பு, இந்த கோவிலில் தான் எழுதப்பட்டது என்பது இத்தலத்தின் சிறப்பாகும். எனவே இத்தலம் ஜோதிடத்தின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இங்கு பூஜையின் போது ஒரு முருங்கைக்காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே, தினமும் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு நடத்துகின்றனர். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத வித்தியாசமான நடைமுறை ஆகும்.

இத்தலத்தில் கற்புக்கரசி நளாயினி தனது கணவரின் சாப விமோசனம் பெற வழிபாடு செய்தார். எனவே, திருமணத்தில் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது தங்கள் மனைவியைப் பிரிந்தவர்கள், பீமேஸ்வரரை பிரார்த்தனை செய்தால், அவர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். இத்தலத்து இறைவன் திருமேனியானது 16 பட்டைகள் கொண்ட சோடச லிங்கமாக விளங்குவதால், இவரை வழிபட்டால் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.

Read More
இரும்பை மாகாளேசுவரர் கோவில்

இரும்பை மாகாளேசுவரர் கோவில்

கையில் ஏடு ஏந்தியிருக்கும் சந்திரனின் அபூர்வ தோற்றம்

கல்வி , கலைகளை பக்தர்களுக்கு அருளும் கலா சந்திரன்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இக்கோவில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் ஏடு ஒன்றை ஏந்தியிருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். கையில் ஏடு வைத்திருப்பது, இவர் கல்வி, கலைகளுக்கு காரகனாக விளங்குகிறார் என்பதை குறிப்பிடுகிறது. எனவே இவர் கலா சந்திரன் என்று குறிப்பிடப்படுகின்றார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மனோதிடம் அதிகரிக்கவும் இவரை வழிபடலாம். ஒருவருக்கு மாதத்தில், உத்தேசமாக, இரண்டரை நாள் வரை சந்திராஷ்டமம் வரும். இந்த காலத்தில் மனோதிடம் குறையும். செயல்களில் தடை உண்டாகும் என்பது ஜோதிடவிதி. இந்த பாதிப்பு சந்திராஷ்டம காலத்தில் ஏற்படக்கூடாது என வேண்டி, கலா சந்திரனுக்கு பால்சாதம் நைவேத்யம் செய்து வழிபடலாம்.

.

Read More
காரைக்கால் காரைக்கால் அம்மையார் கோவில்

காரைக்கால் காரைக்கால் அம்மையார் கோவில்

சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மார்

புதுச்சேரி மாநிலத்திலுள்ள காரைக்காலில் அமைந்துள்ளது காரைக்கால் காரைக்கால் அம்மையார் கோவில். சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண் இனத்தைச் சேர்ந்தவர். சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டச் சிறப்புக்குரியவர். இசைத் தமிழால் இறைவனைப் பாடியவர். சிவபெருமானால் மாங்கனி தந்து அவர் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு, அவர்தம் பக்தியின் சிறப்பை நமக்கு உணர்த்துகின்றது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா காரைக்காலம்மையார் கோவிலில் நடைபெறுவது வழக்கம்.

சிவபெருமான் மாங்கனி தந்து காரைக்கால் அம்மையாரை ஆட்கொண்ட வரலாறு

காரைக்காலிலுள்ள குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்காரைக்கால் அம்மையார். இவர் இயற் பெயர் புனிதவதி. சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். புனிதவதி வளர்ந்து திருமண வயதை அடைந்ததும், பரமதத்தன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அப்போது சிவபெருமான், ஒரு சிவனடியார் வேடத்தில் அங்கு வந்தார் சிவன். தாம் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது உணவு தருமாறும் புனிதவதியை வேண்டினார். அப்போது உணவு தயாரகவில்லை என்பதால் தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.

சிவபெருமான் கொடுத்த மாங்கனி

இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை உண்ட பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான். கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது இரண்டாவது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் பெற்ற வரம்

காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்தில் கணவருடன் சேர நினைத்து அது இயலாமல் போகவே, கணவனுக்கு தேவையற்ற இந்த இளமையும், அழகும், தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார். காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், 'அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,'இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்' என்று கேட்டார். உடனே சிவபெருமான், 'அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம். 63 நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார்தான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

சிவபெருமானைத் துதித்து, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருஇரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம் போன்ற நூல்களைப் பாடியுள்ளார்.

பிள்ளை வரம் தரும் மாங்கனித் திருவிழா

இந்த ஆண்டு மாங்கனி திருவிழா ஜூலை மாதம் 8 முதல் 11ம் தேதி வரை, கைலாசநாதர் கோவிலில் நடைபெறுகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 8-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 9ந் தேதி காரைக்கால் அம்மையாருக்கும், பரம தத்தருக்கும் திருக்கல்யாணமும், 10-ந் தேதி சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெற்றது. பிச்சாண்டவர் வீதியுலாவின்போது பக்தர்கள், தங்கள் நேர்த்திக்கடனை தீர்க்கும் வகையில், மாங்கனிகளை வாரி இறைப்பார்கள். அப்போது மக்கள் உயரமான இடத்திலிருந்து வீதியில் மாங்கனிகளை வீசுவர். மாடிகளிலிருந்து இறைக்கப்படும் மாம்பழங்கள் வானத்திலிருந்து மாம்பழ மழை பொழிவதைப் போல் தெரியும். இந்த மாங்கனிகளை பிடித்து சாப்பிட்டால் திருமணம் கை கூடும் என்பதும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதும் ஐதீகம் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாங்கனிகளை தங்களது சேலையில் தாங்கி பிடித்துக் கொள்வர்.ஜூலை 11-ந் தேதி வெள்ளிக்கிழமை, அம்மையாருக்கு, சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

Read More
திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்

திருக்குரக்குக்கா குந்தளேசுவரர் கோவில்

ஆஞ்சநேயர் தன்னுடைய குண்டலத்தை படைத்து சிவபெருமானை வழிபட்ட தேவார தலம்

மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குரக்குக்கா. இறைவன் திருநாமம் குந்தளேசுவரர். இறைவியின் திருநாமம் குந்தளநாயகி.

ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது. இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி, இறைவன் குந்தளேசுவரர் சன்னதி எதிரே அமைக்கப்பட்டுள்ளது. திருமால், ராமாவதாரம் எடுத்தபோது, அவருக்கு உதவுவதற்காக சிவபெருமானே ஆஞ்சநேயராக வந்தார். எனவே, ஆஞ்சநேயர் சிவஅம்சம் ஆகிறார். அவ்வகையில் இத்தலத்தில் சிவபெருமானே, தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே இவரை, 'சிவஆஞ்சநேயர்' என்றும், 'சிவபக்த ஆஞ்சநேயர்' என்றும் அழைக்கிறார்கள். இந்தத் திருநாமம் உடைய ஆஞ்சநேயர் வேறு எங்கும் கிடையாது. இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.

ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை இமயமலைக்கு அனுப்பினார். ஆஞ்சநேயரும் சிவலிங்கம் எடுத்து வரச் இமயமலைக்குச் சென்றார். இதனிடையே ஆஞ்சநேயர் வர கால தாமதம் ஆனதால், சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அதன்பின்பு லிங்கத்துடன் வந்த ஆஞ்நேயர், ராமர் சிவபூஜை செய்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டார். மேலும், மணல் லிங்கத்தை தனது வாலால் உடைக்க முயன்றார். முடியவில்லை.

சிவ அபச்சாரம் செய்ததால் மன்னிப்பு வேண்டிய ஆஞ்சநேயர் இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அப்போது சிவபெருமானுக்கு மலருடன், தான் காதில் அணிந்திருந்த குண்டலத்தையும் படைத்து வணங்கி மனஅமைதி பெற்றார். ஆஞ்சநேயர் குண்டலம் வைத்து வழிபடப்பட்டவர் என்பதால், இத்தல சிவன் 'குண்டலகேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

பிரார்த்தனை

இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்

எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில்

பிராணாயாமம் செய்து கொண்டு, காயத்ரி மந்திரம் கேட்கும் தோரணையில் இருக்கும் அபூர்வ நந்தி

ஆபரண அலங்காரங்களுடன் இருக்கும் மிகவும் அழகான நந்தி

சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் வழியில், ஒரகடம் சாலை சந்திப்பில் இருந்து சுமார் நான்கு கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தெய்வநாயகி. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இக்கோவிலில் அமைந்திருக்கும் நந்தி, வேறு எந்த கோவிலிலும் காண முடியாத பல தனித்துவமான அம்சங்கள் கொண்டவராக விளங்குகின்றார். இந்த விசித்திரமான நந்தியில் அழகான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உள்ளன. இந்த ஆபரணங்கள், ஆடைகள் அனைத்தும் அதன் உடலில் அதில் செதுக்கப்பட்டுள்ளன.

நந்தி கழுத்தில் விரிவான அலங்காரங்களை அணிந்துள்ளார். ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட மாலைகள், ஒரு இரும்புச் சங்கிலி, சலங்கை மற்றும் மணிகளால் செய்யப்பட்ட மாலை ஆகியவை அவற்றில் அடங்கும். நான்கு வேதங்களைத்தான் அவர் தனது கழுத்தில் ஆபரணங்களாக அணிந்துள்ளார். அவரது நெற்றியில் ஒரு அழகான நெத்தி சுட்டி அலங்கரிக்கிறது. மேலும் அவரது உடலில் அழகாக செதுக்கப்பட்ட வஸ்திரம் (சால்வை) மற்றும் ஒரு ஒட்டியானம் (இடுப்பு அலங்காரம்) அமைந்துள்ளது.

இந்த நந்தி 'ரஜோ குண' நந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்தி தேவர் அமர்ந்திருக்கும் தோற்றமானது, 'பிராணயாம கோலம்' (சுவாசப் பயிற்சி செய்தல்) என்று அழைக்கப்படுகிறது. மேலும் நந்தியின் காதுகள் வழக்கத்திற்கு மாறாக நிமிர்ந்த வடிவத்தில் கூர்மையாக செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நந்திகேசுவரர் பிராணயாம செய்து, காயத்ரி மந்திரத்தைக் கேட்கும் தோரணையில் இருக்கின்றார்.

நந்தியின் பற்களின் வரிசை கூட மிகவும் துல்லியமாக, மிகச்சிறிய விவரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. நந்தி வலது பக்கத்தில் நாக்கை நீட்டி நாசியை அடைந்து காணப்படுகிறது. ஒரு முன் கால் பின்னோக்கி மடிக்கப்பட்டுள்ளது, மற்றொன்று நீட்டிய நிலையில் உள்ளது. பின் கால்களில், ஒன்று மடிக்கப்பட்டுள்ளது, மற்றொரு கால் அதன் வயிற்றுக்குக் கீழே செல்கிறது, இந்த கால் மறுபுறம் நீட்டிக் காணப்படுகிறது. அதேபோல் வால் வயிற்றுக்குக் கீழே சென்று அதன் இடது பக்கத்தில் நீண்டுள்ளது.

சுருங்கச் சொன்னால், இந்த நந்தி தேவர் நமது முன்னோர்களின் சிற்பக்கலை திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

Read More
பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி உள்ள தேவார தலம்

மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர்.

ரதி வழிபட்டதால் ரதீசுவரர் என்றும், பாண்டவர்கள் வழிபட்டுள்ளதால் பாண்டதவேசுவரர் என்றும், அக்னிதேவன் வழிபட்டுள்ளதால் அக்னீஸ்வரர் என்றும் மற்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.தீரா வெண்குஷ்டத்தால் அவதியுற்ற ஹரிச்சந்திர மகாராஜா இத்தலத்தில் நீராடி, இறைவனின் கட்டளைப்படி வைகாசி விசாக நன்னாளில் தயிர் சாதம் நிவேதனம் செய்து, ஆபத்சகாயரை வணங்கி, வழிபட்டு விமோசனம் பெற்றுள்ளார். வெண்குஷ்ட நோய் உள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட நிவாரணம் கிடைக்கும்.

பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில் அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்திகள் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இதில் மேதா தட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது ஐதீகம்.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதம்

தீராத வியாதிகளைத் தீர்க்கும் குஞ்சிதபாத தரிசனம்

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கித் திருநடனம் ஆடும் கோலத்தில் நமக்கு காட்சி தருகிறார். நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.

சிவபெருமான் தனது இடது பாகத்தை, தன் மனைவி பார்வதி தேவிக்கு கொடுத்து விட்டார். சிவபெருமானே, நடராஜர் என்னும் பெயரில் நடனம் ஆடுகிறார். அவர் நடனம் ஆடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் அவளுக்கு வலிக்குமே என, இடது காலை உயர்த்திக் கொண்டார்.

எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் சிவபெருமான் கோபம் அடைந்து, எமனை இடது காலால் எட்டி உதைத்தார். தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.

அதனால் நடராஜப் பெருமானைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக அவரது இடது காலைத் தரிசிக்க வேண்டும். நடராஜப் பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசனம் செய்தால், தீராத வியாதியும் நீங்கும். செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.

குஞ்சிதபாதம் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. மூலிகை வேர்களால் செய்யப்பட்ட ஒரு மாலை நடராஜரின் தூக்கிய பாதத்திற்கு அணிவிக்கப்படும்போது, அந்த மாலைக்கு 'குஞ்சிதபாதம்' என்று பெயர். மேலும், இந்த மாலையை நடராஜரின் பாதங்களில் அணிவிப்பது ஒரு சிறப்பு பூஜையாக கருதப்படுகிறது.

Read More
செப்பறை அழகிய கூத்தர் கோவில்

செப்பறை அழகிய கூத்தர் கோவில்

உலகில் முதல் முதலில் செய்யப்பட்ட நடராஜர் சிலை

சிதம்பரத்திற்கு அடுத்து நடராஜ பெருமான் தேரோட்டம் நடைபெறும் ஒரே தலம்

திருநெல்வேலி மாநகரிலிருந்து 33 கி.மீ. தொலைவில் (ராஜவல்லிபுரம் கிராமம் வழியாக) அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில். மூலவர் திருநாமம் நெல்லையப்பர். இறைவியின் திருநாமம் காந்திமதி. உற்சவர் அழகிய கூத்தர் (நடராஜர்).

.சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்துமுடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் தோன்றினாலும், அதற்கு பதிலாக தங்கத்தினால் சிலையைச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனக் கருதி தங்கத்தால் மற்றொரு நடராஜர் சிலையைச் செய்ய ஆணையிட்டான். சிற்பி அதனையும் சிறப்பாக செய்து முடித்தார். ஆனால் மன்னன் வந்து காணும்போது அந்த தங்க நடராஜர் சிலை மீண்டும் தாமிரச் சிலையாகவே மாறி காட்சியளித்தது. இதனால் வருந்திய மன்னரின் கனவில் தோன்றிய சிவபெருமான், நான் உன் கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிவேன். பிறர் கண்ளுக்குத் தாமிரமாகவே தெரிவேன் என்று கூறியருளினார். இதனால், மகிழ்ந்த மன்னர் அந்த இரண்டாவதாக செய்யப்பட்ட நடராஜரையே சிதம்பரத்தில் நிறுவினான்.

முதலில் செய்யப்பட்ட தாமிரச்சிலையை வைத்திருந்த சிற்பியின் கனவில் தோன்றிய சிவபெருமான் அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு தென்னாட்டுக்குச் செல்லுமாறு அவனுக்கு ஆணையிட்டார். அதன்படி அவன் கொண்டுவந்த முதல் தாமிர நடராஜர் சிலையே பின்னர் இங்கு செப்பறையில் அழகிய கூத்தராக அமர்ந்தார்.

கோவில் அமையப்பெற்றுள்ள இப்பகுதியை மணப்படைவீடு என்னும் நகரை தலைநகராகக் கொண்டு ராமபாண்டியன் என்னும் மன்னனர் ஆட்சி செய்து வந்தார். ராமபாண்டிய மன்னர் திருநெல்வேலியில் உறையும் சுவாமி நெல்லையப்பர் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். அதன் காரணமாக தினமும் திருநெல்வேலி சென்று சுவாமி நெல்லையப்பரை தரிசித்த பிறகே உணவருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதனால் அவரால் ஆற்றைக் கடந்து திருநெல்வேலிக்கு செல்லமுடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் மனம்வருந்தி உணவருந்தாமலே இருந்தார். அன்று இரவில் மன்னரின் கனவில் சுவாமி நெல்லையப்பர் தோன்றி,'இனிமேல் உன் மாளிகைக்கு அருகிலேயே நான் கோவில் கொள்ள முடிவு செய்துள்ளேன் என கூறியதுடன், சிதம்பரத்திலிருந்து சிற்பி ஒருவன் தனது நடனம் புரியும் வடிவமுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டு. கோவில் கட்டுமிடத்தின் அருகே குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு, என திருவாய் மலர்ந்தருளினார்.

அதன்படியே, சிற்பி ஒருவர் வடதிசையிலிருந்து நடராஜரின் விக்ரகம் ஒன்றை சுமந்து வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே சற்று நேரம் இளைப்பாறும் பொருட்டு, அச்சிலையை அவர் ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார். ராமபாண்டியன் அதிர்ச்சியடைந்து சிலையை தேடிச்சென்றார். அப்பொழுது ஓரிடத்தில் (தற்பொழுது கோவில் அமையபெற்றுள்ள இடத்தில்) சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது, நடராஜரின் சிலை இருப்பதனையும், . அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டார். உடனே ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது, சுவாமி உத்தரவிட்டபடியே பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் செப்பு தகடுகளால் வேயப்பட்ட நடன சபை ஒன்றை உருவாக்கி தனி சன்னதி அமைத்தார். இவர் நெல்லையப்பரின் மீது கொண்டிருந்த பக்தியால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு ஸ்ரீ நெல்லையப்பர் என்றும், அம்மைக்கு ஸ்ரீ காந்திமதி என்றும் திருநெல்வேலி திருக்கோவிலின் பெயரையே சூட்டிமகிழ்ந்தார்.

செப்பு தகடுகளால் வேயப்பட்ட தாமிரசபைக்குள் சிவகாமி அம்மை உடனாய அழகியகூத்தர் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அழகியகூத்தப்பெருமானுக்கு,. நடைபெறும் ஆனி உத்திரம் மற்றும் மார்கழி திருவாதிரை அபிஷேகத்திற்கு வருடந்தோறும் பழனியில் இருந்து பஞ்சாமிர்தம் வரவழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் திருவாதிரைக்கு முதல் நாள் நடராஜ பெருமான் திருத்தேரில் உலா வருவார். சிதம்பரம் தலத்திற்கு அடுத்தபடியாக இங்கு தான் நடராஜ பெருமானுக்கு என தனித்தேர் உள்ளது என்பது தனிச்சிறப்பாகும்.

Read More
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் ஆஷாட நவராத்திரி

தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர். வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார்.

இக்கோவிலில் எழுந்தருளி உள்ள வாராகி அம்மனுக்கு, ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா ஆனி மாதம் அமாவாசை தினத்தன்று தொடங்கி (இந்த ஆண்டு 25.06.2025 முதல்) 10 நாட்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை.

இவ்விழாவில் முதல் நாள் சுமார் 100 கிலோ கொண்ட இனிப்பு வகைகளான ஜாங்கிரி, லாடு, குலோப்ஜாமுன், மைசூர்பாகு, பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் தினமும் சிறப்பு அலங்காரமாக மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனிவகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் ஆகியவை நடைபெறும்.

வராகி அம்மனுக்கு உகந்த நிறம் பச்சை நிறம் என்பதால், வராகி விரதம் இருக்கும் நாட்களில் பச்சை நிற விரிப்பின் மீது அமர்ந்து, இலுப்பை எண்ணெயைத் தீபமாக ஏற்றி வழிபடலாம். வளர்பிறை பஞ்சமி திதியில், வராகி அம்மனை வழிபட்டால் தீய சக்திகள் விலகி நன்மைகள் ஏற்படும்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஏடும் வைத்திருக்கும் சண்டிகேசுவரரின் அபூர்வ தோற்றம்

சிவபெருமானிடம் நம் கோரிக்கைகளை குறிப்பெடுத்து சமர்ப்பிக்கும் சண்டிகேசுவரர்

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில், சிறு சன்னதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன.

இக்கோவிலில் சண்டிகேசுவரர் தனி சன்னதியில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.பெரும்பாலும் சண்டிகேசுவரர், தன்னுடைய ஆயுதமாக மழுவுடன் காணப்படுகிறார். ஆனால் இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஏடும் வைத்திருப்பது வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இக்கோவிலில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின் போது நாம் சண்டிகேஸ்வரரிடம் நம் கோரிக்கைகளை தெரிவித்தால், அதை அவர் தனது கையில் இருக்கும் ஏட்டில் எழுத்தாணியால் குறிப்பெடுத்துக் கொண்டு, அவற்றை சிவபெருமானிடம் சமர்ப்பித்து விடுவார் என்பது ஐதீகம்.

Read More
பஞ்சேஷ்டி அகத்தீசுவரர் கோவில்

பஞ்சேஷ்டி அகத்தீசுவரர் கோவில்

மிருதங்கம் வாசிக்கும் நந்திகேசுவரர்

சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், 31 கி.மீ தொலைவில், செங்குன்றம், காரனோடை ஊர்களைக் கடந்தால் வரும் தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் இறைவனுக்கு, அகத்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.

பத்தாம் நூற்றாண்டு முதலாம் இராஜராஜனால் கட்டப் பட்ட பஞ்சேஷ்டி, அகத்தீசுவரர் கோவிலின் இராஜகோபுரத்தில் செதுக்கப் பட்ட நந்திதேவரின் அரிய காளை மாட்டு முகமும், மனித உடலும் கொண்ட நந்திகேசுவரர் சிற்பம் உள்ளது.

இந்த நந்தி தேவர், காளை முகம், மற்றும் 4 கைகளுடன் அலிதாசனத்தில் (இயக்கத்தைப் பரிந்துரைக்கிறார்) நின்று காணப்படுகிறார். வலது மேல் கரம் திரிசூலத்தை ஏந்தியும், இடது மேல் கரம் உடுக்கை ஏந்தி உள்ளதையும், கீழ் வலது மற்றும் இடது கைகள் மிருதங்கம் வாசிப்பதைக் காணலாம்.

நந்தி தேவர் மிருதங்கம் வாசிக்கும் இந்த கோலத்தை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.

சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும்போது, நந்திதேவர் மிருதங்கத்தை வாசித்தார். நந்திதேவர் மிருதங்கம் வாசிப்பதன் மூலம், ஆடலுக்கும் பாடலுக்கும் தேவையான தாளங்களை வகுத்தார். சிவபெருமான் நடனமாடும்போது, நந்திதேவர் மிருதங்கம் வாசித்து, அதை அழகுபடுத்துகிறார். எனவே, நந்திதேவர் மிருதங்கம் வாசிப்பது என்பது ஆன்மீக மற்றும் இசை ரீதியாக ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

Read More
அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

சனி பகவான் தனது வாகனமான காகத்தின் மேல் காலை வைத்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்

திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை.இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.

இக்கோவிலில், நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரர் வலது காலை தூக்கி, காகத்தின் மீது வைத்தபடி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அருகிலேயே மற்றொரு சனீஸ்வரர் நின்ற கோலத்தில் தனியாகவும் இருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரு சனீஸ்வரருக்கும் எள் படைத்து வழிபடுகின்றனர்.

இங்குள்ள காலபைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதும், துர்க்கை அம்மன் தெற்கு பார்த்தபடி இருப்பதும் வித்தியாசமான தரிசனம் ஆகும்.

Read More
திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்

திருக்கள்ளில் சிவாநந்தீஸ்வரர் கோவில்

பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்யும் வித்தியாசமான நடைமுறை

சென்னை - பெரியபாளயம் சாலையிலுள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருக்கள்ளில். இத்தலத்தை தற்போது திருகண்டலம் என்று அழைக்கிறார்கள். இறைவன் திருநாமம் சிவாநந்தீஸ்வரர். இறைவி திருநாமம் ஆனந்தவல்லி அம்மை.

இக்கோவிலில் பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்வது ஒரு வித்தியாசமான நடைமுறையாகும். காணாமல் போன பொருட்களை திரும்பப் பெறவும், திருமணத் தடைகள் நீங்கவும் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மிளகாய் பொடி அபிஷேகம் என்பது ஒரு சக்தி வாய்ந்த சடங்காகும். இது எதிர்மறை சக்திகளை நீக்கி, கிரகங்களின் செல்வாக்கை எதிர்த்து, பக்தர்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றது. பொருட்கள் கிடைத்தவுடன், பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். இந்த நடைமுறை பைரவரின் அருளைப் பெறவும், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றவும் செய்யப்படுகிறது.

Read More
தேவராயன் பேட்டை (திருச்சேலூர்) மச்சபுரீஸ்வரர் கோவில்

தேவராயன் பேட்டை (திருச்சேலூர்) மச்சபுரீஸ்வரர் கோவில்

மகாவிஷ்ணு மச்ச அவதாரத்தின் போது சிவபெருமானை வழிபட்ட தலம்

மீன் ராசிக்கான பரிகார தலம்

கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் பிறந்த தலம்

கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள பண்டாரவாடை (19 கி.மீ.) என்ற ஊருக்கு மிக அருகில் அமைந்துள்ள தேவராயன் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது மச்சபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. மகாவிஷ்ணு முதல் அவதாரமான மச்ச அவதாரம் எடுத்து, இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டதால் இறைவன் மச்சபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இது ஒரு திருஞானசம்பந்தர் பாடிய தேவார வைப்புத் தலமாகும். முருகப்பெருமான் மீது கந்த சஷ்டி கவசம் பாடிய பால தேவராயன் சுவாமிகள் பிறந்த புண்ணிய தலம். தஞ்சை பெரிய கோவிலுக்கும் முற்பட்ட கோவில் இது.

ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனிடமிருந்து ஹயகிரீவன் என்ற அரக்கன் படைப்புக்குரிய வேதங்களை கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். இதனால் படைப்புத்தொழில் தடைபட மகாவிஷ்ணு மச்சஅவதாரம் எடுத்து கடலுக்கடியி்ல் சென்று அரக்கனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்து படைப்புத் தொழிலை காப்பாற்றினார். அரக்கனைக் கொன்ற தோஷத்திலிருந்து வீடுபட இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு சுய உருவம் அடைந்தார். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து வழிபட்டதால் வைணவர்களும் வழிபடும் சிவஸ்தலமாக விளங்குகிறது. இவ்வாலயம் மீன் ராசி பரிகாரத் தலமாக விளங்குகிறது.

திங்கள்கிழமை, பிரதோஷம், உச்சிக் காலத்தில் மச்சபுரீஸ்வரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும். குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், பார்வைக் குறைபாடு, செவித்திறன் அதிகரித்தல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். மீன ராசிக்காரர்கள், வேதம் ஓதுவோர், ஜோதிடர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வழிபட வேண்டிய கோவில் இது.

Read More
பாடி திருவலிதாயநாதர் கோவில்

பாடி திருவலிதாயநாதர் கோவில்

குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள தேவார தலம்

சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம்

சென்னை மாநகரின் ஒரு பகுதியான பாடியில் அமைந்துள்ள தேவார தலம் திருவலிதாயநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருவலிதாயநாதர், திருவல்லீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஜெகதாம்பிகை, தாயம்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

குரு பகவான், தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் இது. குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம். திருமண தடை நீங்க, நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

சிவ குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

வருடத்திற்கு ஒருமுறை, வைகாசி விசாகத்தன்று மட்டும் வீதியுலா வரும் சோமநாத சுவாமி

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

சிவன் கோவில்களில், சிவபெருமான் பார்வதி தேவியோடும், இருவருக்கும் நடுவில் முருகனோடும், சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சியளிப்பார். இக்கோவிலில் சிவபெருமான் குடும்ப சகிதமாக ஒரே இடத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இங்கு பிள்ளையார், சிவபெருமான், முருகன் மற்றும் பார்வதி தேவி சுதை வடிவில் வரிசையாக காட்சி அளிக்க, பிள்ளையாரின் வலதுபுறம் சண்டிகேஸ்வரரும், பார்வதி தேவியின் இடதுபுறம் மனோன்மணி (சிவபெருமானின் உபசக்தி) அம்பிகையும் உடன் இருக்கிறார்கள்.

இவர்கள் அறுவரின் உலோக திருமேனிகளும் இக்கோவிலில் உள்ளன. வைகாசி திருவிழாவின் போது, வைகாசி விசாகத்தன்று சோமநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.திருக்கல்யாணம் முடிந்த பிறகு இந்த அறுவரும் வீதி உலாவுக்கு புறப்படுவார்கள். அப்போது உற்சவர் சோமநாத சுவாமியும், அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஒரு ஒரு மரப்படி சட்டத்திலும், சிவபெருமானின் உபசக்தி மனோன்மணி தனியாக ஒரு சப்பரத்திலும் எழுந்தருள்வார்கள்.

எப்படி திருவாரூர் தியாகராஜர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தேரில் உலா வருவாரோ, அது போல இத்தலத்து சோமநாத சுவாமியின் உற்சவத் திருமேனி, வைகாசி விசாகத்தன்று மட்டும்தான் வீதியுலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More