பாடி திருவலிதாயநாதர் கோவில்

பாடி திருவலிதாயநாதர் கோவில்

குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள தேவார தலம்

சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம்

சென்னை மாநகரின் ஒரு பகுதியான பாடியில் அமைந்துள்ள தேவார தலம் திருவலிதாயநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருவலிதாயநாதர், திருவல்லீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஜெகதாம்பிகை, தாயம்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

குரு பகவான், தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் இது. குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம். திருமண தடை நீங்க, நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

சிவ குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

வருடத்திற்கு ஒருமுறை, வைகாசி விசாகத்தன்று மட்டும் வீதியுலா வரும் சோமநாத சுவாமி

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

சிவன் கோவில்களில், சிவபெருமான் பார்வதி தேவியோடும், இருவருக்கும் நடுவில் முருகனோடும், சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சியளிப்பார். இக்கோவிலில் சிவபெருமான் குடும்ப சகிதமாக ஒரே இடத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இங்கு பிள்ளையார், சிவபெருமான், முருகன் மற்றும் பார்வதி தேவி சுதை வடிவில் வரிசையாக காட்சி அளிக்க, பிள்ளையாரின் வலதுபுறம் சண்டிகேஸ்வரரும், பார்வதி தேவியின் இடதுபுறம் மனோன்மணி (சிவபெருமானின் உபசக்தி) அம்பிகையும் உடன் இருக்கிறார்கள்.

இவர்கள் அறுவரின் உலோக திருமேனிகளும் இக்கோவிலில் உள்ளன. வைகாசி திருவிழாவின் போது, வைகாசி விசாகத்தன்று சோமநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.திருக்கல்யாணம் முடிந்த பிறகு இந்த அறுவரும் வீதி உலாவுக்கு புறப்படுவார்கள். அப்போது உற்சவர் சோமநாத சுவாமியும், அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஒரு ஒரு மரப்படி சட்டத்திலும், சிவபெருமானின் உபசக்தி மனோன்மணி தனியாக ஒரு சப்பரத்திலும் எழுந்தருள்வார்கள்.

எப்படி திருவாரூர் தியாகராஜர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தேரில் உலா வருவாரோ, அது போல இத்தலத்து சோமநாத சுவாமியின் உற்சவத் திருமேனி, வைகாசி விசாகத்தன்று மட்டும்தான் வீதியுலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

பிரதோஷ நந்தி மற்றும் அதிகார நந்தி இரு வேறு திசைகளில் சாய்ந்தபடி இருக்கும் தேவார தலம்

திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை. இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அதிகார நந்தியும், பிரதோஷ நந்தியும் தங்கள் தலையை சாய்த்தவாறு இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோவிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கோவில் கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய, பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்தது. இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கின்றது.இப்படி இந்த இரு நந்திகளும் இருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

இடக்காலைச் சுற்றியவாறு அமர்ந்து, இரண்டு முனிவர்களுடன் மட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.

இக்கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறையின் தெற்குப் பக்கத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். யோக தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும், இடது கரத்தில் தீச்சுடரைத் தாங்கியவாறும், இடக்காலைச் சுற்றியவாறு யோகப் பட்டம் விளங்கவும் காட்சி தருகிறார். பொதுவாக நான்கு சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இரண்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.

Read More
நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்

நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்

மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் தலம்

சிவன் கோவிலில் பிரசன்ன வெங்கடாசலபதியும், தாயாரும் எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு

கடலூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில். இறைவியின் திருநாமம் புவனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

மண்ணுக்கு அதிபதி பூலோகநாதர் என்பதால் மண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும் இந்த கோவில் மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டால் எளிதில் பிரச்னைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும் தடைபட்ட கட்டுமான பணிகள் எதுவாகினும் இங்கு வந்த பூஜை நடத்தினால் அந்த கட்டிடம் நிவர்த்தி அடையும். வீடு கட்ட விரும்புவோர் இந்த ஆலயத்தில் கற்களை அடுக்கி வேண்டிக் கொண்டால் உடனே வீடு கட்டும் பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இறைவி புவனாம்பிகை நாயகி முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும் என்பது நம்பிக்கை.

சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் வகையில், இக்கோவிலில் தனிச்சன்னதியில் பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயாரும் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிப்பது தனிச்சிறப்பாகும். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

கலை நயத்துடன் அமைக்கப்பட்ட அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரை (பிரணாளம்)

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் இறை வழிபாட்டு தலங்களாக மட்டுமன்றி சிற்பக் கலைக் கூடங்களாகவும் விளங்குகின்றன. நம் கோவில்களின் கட்டிடக்கலை, அதன் தனித்துவமான பாணி, வடிவமைப்பு ஆகியவை நம் முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டுகின்றன. மூலவரின் கருவறை, மண்டபங்கள், தூண்கள், விதானங்கள், கோபுரங்கள், சிற்பங்கள் என்று ஒவ்வொரு பகுதியும் மிகுந்த கலைநயத்துடனும், கற்பனை திறனுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில், சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சோழர் காலத்து கலைத்திறன் மிளிருகின்றது. இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரையை கூட மிகுந்த கலை நயத்துடன் அமைத்திருக்கிறார்கள். இந்த நீர் தாரைக்கு பிரணாளம் என்று பெயர். இக்கோவிலில் உள்ள பிரணாளத்தின் அபிஷேக நீர் வெளியேறும் பகுதியில் காணப்பெறும் சிற்ப அமைப்பு கலை நயத்துடன் துலங்குகின்றது. பிரணாளத்தின் பக்கவாட்டில் சங்கு ஊதும் பூதகணம் திகழ, ஒரு பூதத்தின் பிளந்த வாயிலிருந்து நீர் வெளியே அபிஷேக நீர் கொட்டும் வகையில் அச்சிற்பம் காணப்பெறுகின்றது.

Read More
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

நவக்கிரகங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் திருவாசி இருக்கும் அபூர்வ அமைப்பு

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். ஆஞ்சநேயர் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.

இக்கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. நவக்கிரகங்கள் மனைவியருடன் இங்கே எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் இந்த நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக திருவாசி அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

ஆஞ்சநேயர், நவக்கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரது நேரடிப்பார்வையில் நவக்கிரகங்கள் குடும்பநிலையில் இருப்பதால், இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டை தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்

மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தேவார தலம்

மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் என்ற சிறப்பை கொண்டுள்ளது.

தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் திருப்புவனம் ஆகும். மேலும் இராமேசுவரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம்புண்ணியம் அருளும் தலம். காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து புஷ்பவனேசுவரர் சன்னதி முன் உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு அஸ்தி கரைப்பது, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும்.

கருவறையில் மூலவர் புஷ்பவனேசுவரர் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். நமது முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) அமாவாசை நாட்களிலும், மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களிலும் திதி, தர்ப்பணம் ஆகியனவற்றை செய்து நீர்க்கடன் செய்வது மிகவும் முக்கியம். பித்ருக்கள் திருப்தி அடைந்தால்தான் நமது வாழ்வு வளமாக இருக்கும். முன்னோர் வழிபாடு, தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கவல்லது. நமது பித்ருக்களின் வினைகளை நீக்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவணம் தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீசுவரர் கோவில்

திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீசுவரர் கோவில்

நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படும் தேவார தலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள தேவார தலம் ஊன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மின்னொளியம்மை.

இக்கோவிலில் இறைவன் முன் அமர்ந்திருக்கும் நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதன் பின்னணியில் சுந்தரருடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று உள்ளது.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியார் எனும் பெண்ணை சிவபெருமானை சாட்சியாக வைத்து, அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவபெருமான் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவபெருமானிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவபெருமானோ அமைதியாகவே இருந்தார்.

சுந்தரர் விடவில்லை. 'பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே!' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து 'நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். கோபம் அதிகரித்த சுந்தரர், சிவபெருமான் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து, இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.

சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இத்தல இறைவனுக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர்.கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்த நிலையில் இருப்பதை இன்றும் நாம் காணலாம். அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்தை நோக்கி வரும்போது, அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தாளாம். அதனால்தான் இத்தல அம்பிகைக்கு மின்னொளியம்மை என்று பெயர்.

Read More
ஆத்தூர் காயநிர்மாலேசுவரர் கோவில்

ஆத்தூர் காயநிர்மாலேசுவரர் கோவில்

சீடர்களின் சந்தேகங்களுக்கு விளக்கத்தை அளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்

சேலம் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஆத்தூர். இங்கே அமைந்துள்ள கோட்டைக்கு மிக அருகே உள்ளது, காயநிர்மலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. வசிஷ்ட முனிவருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி தந்த தலம் இது.

இக்கோவிலின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு, தனி விமானமும் உள்ளது. பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் அவர் ஆறு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஆறு சீடர்களில் மூன்று பேர் அமைதியாகவும், மற்ற மூன்று பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்

திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்

வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள காலபைரவர்

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் பிரம்மநாயகி. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீசுவரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும்.

இக்கோவிலில், பொதுவாக தெற்கு நோக்கி இருக்கும் பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் கோவில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

Read More
கொடுவாய் நாகேசுவரர் கோவில்

கொடுவாய் நாகேசுவரர் கோவில்

அஸ்திவாரம் இல்லாமல் மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ள வித்தியாசமான கட்டிட அமைப்பு

அகழி அமைப்பில் அமைந்துள்ள இறைவன், இறைவி சன்னதிகள்

திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையத்திற்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுவாய் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவர்த்தனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

நாகேசுவரர், கோவர்த்தனாம்பிகை சன்னதிகள் இரண்டும், அகழி அமைப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அமைப்பு உள்ளது. அஸ்திவாரத்துக்கு கீழ், பல நூறு அடிக்கு வெறும் மணல் மட்டுமே போடப்பட்டுள்ளது. அருகில், ஆறுகள் ஏதும் இல்லாத நிலையில், மணல் போட்டு அதன் மீது கற்கள் அடுக்கி, கோவில் அமைக்கப்பட்டுள்ளதும், கருவறை, மண்டப சுவர்களை சுற்றிலும், அகழி அமைக்கப்பட்டு, கற்களால் வடிகால் போல் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில், இதைச்சுற்றிலும் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததாக, செவிவழி செய்திகள் சொல்லப்படுகின்றன. நவக்கிரக கோவில் புதுப்பிக்கும்போது, 250 லாரி மணல் மட்டுமே அஸ்திவாரமாக போடப்பட்டுள்ளதை பார்த்து, இப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இப்படி அஸ்திவாரம் இல்லாமல், மணல் மேல் கற்கோவில் அமைந்துள்ளதும், கோவில் அகழி அமைப்பில் உள்ளதும், பழங்கால கட்டட கலையின் சிறப்பை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

இக்கோவிலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்து உள்ளன. யாழி அமைப்பு, அன்னப் பறவை, சுவாமி சன்னதி மேற்கூரையில், சந்திர, சூரிய கிரகணத்தை விளக்கும் பாம்பு பிடிக்கும் கதை, அம்பாள் சன்னதி முன், சுந்தரர் பாடியதையடுத்து, முதலை வாயிலிருந்து குழந்தை வெளியேறுவது, ஆடல் மகளிர் சிற்பங்கள் என அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. மீன், நடனமாடும் பெண், பாம்பு, குதிரையில் ஒரு சிப்பாய் பன்றியைக் கொல்வது, பாம்புடன் பாம்பு பிடிப்பவன், ஒரு புலி ஒரு பெண்ணைத் தாக்குவது போன்ற சிலைகள் கோவிலின் சுவர்களில் உள்ளன. ஒரே கல்லிலான மிக உயரமான தீபஸ்தம்பம், இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பாகும்.

Read More
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

சனகாதி முனிவர்களுடனும், சப்த ரிஷிகளுடனும் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். முற்காலத்தில் இத்தலம் அனுமன் ஆனந்த குடி என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் மானந்த குடி என்றானது.

இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, மற்ற தலங்களை விட மிகவும் விசேஷமான கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவரது பீடத்தில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களும், ரிஷிகளும் இருக்கின்றனர். மேலும் நந்தியும் இந்த பீடத்தில் இடம் பெற்றிருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய கோலத்தை மற்ற தலங்களில் நாம் காண்பது அபூர்வம்.


Read More
காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவில்

காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவில்

நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்

அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்

ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக்கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.

சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார். அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.

சித்திரகுப்தனின் கதை

எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.

பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,

பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார்.பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன். சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள். பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோது, அவன்பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.

சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான். அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத, எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.

சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.

எனவே சித்திரகுப்தனை வணங்கினால், கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.

Read More
தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்

தென்குடித்திட்டை - தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம்

தஞ்சாவூருக்கு வடமேற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் தென்குடித்திட்டை. இறைவன் திருநாமம் வசிட்டேசுவரர். இறைவியின் திருநாமம் உலகநாயகியம்மை.

தமிழகத்தில் குரு பெயர்ச்சிக்கு சிறந்த தலம் என்றால் அது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில்தான். குருபகவான் இக்கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், தெற்கு நோக்கி தனி சன்னதியில், ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். சனி பகவானுக்கு பரிகாரம் செய்ய உகந்த கோவிலிலாகவும் இது விளங்குகின்றது.

நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும். குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர் களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும். குரு பகவானின் அதி தேவதைகளான பிரம்மன், இந்திரன் ஆகியோரை வழிபட்டாலும் குரு மகிழ்ச்சி கொண்டு பலன்களை வழங்குவார். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. மேலும் கடன் தொல்லை அகலவும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படவும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

Read More
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்

திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்

தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கும் பிரதோஷ மூர்த்தி

மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.

பொதுவாக சிவாலயங்களில் பிரதோஷ காலங்களில், கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். உமாதேவியை தனது இடக்கரத்தால் அணைத்திருப்பதால் இவருக்கு அணைத்தெழுந்த நாதர் என்ற பெயரும் உண்டு. இவர் ஒன்றரை அடி உயரத்தில் சிறிய உருவத்துடன் காணப்படுவார். ஆனால் இந்த பிரதோஷ மூர்த்தி, இக்கோவிலில் பெரிய உருவத்துடன் தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூலவராக காட்சி அளிக்கும் பிரதோஷ மூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்

திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோவில்

சிவபெருமானும், முருகனும் வில்லேந்திய கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

சிவபெருமான் வேடனாகவும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தரும் வித்தியாசமான உற்சவ மூர்த்திகள்

புதுச்சேரி மாநிலம் மாவட்டம் காரைக்காலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருவேட்டக்குடி. இறைவன் திருநாமம் சுந்தரேசுவரர், திருமேனி அழகர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி, சாந்தநாயகி.

கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற சுந்தரேசுவரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள் சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை சாந்தநாயகி என அழைக்கின்றனர்.

சிவபெருமான் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது. இங்கு சிவபெருமானின் உற்சவர் வேட மூர்த்தியாக கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம் ஆகும். சிவபெருமான் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தார். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவபெருமான், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம்.

இங்கு வேடன் வடிவில் சிவபெருமான் காட்சி தருவதின் பின்னணியில் மகாபாரதம் கதை ஒன்று உள்ளது. பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான். அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. வேதவியாசர் அர்ச்சுனனிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டி தவமிருந்தார். அவனது தவத்தை கலைப்பதற்காக, துரியோதனன் முகாசுரனை அனுப்பினார் .

பன்றி வடிவில் வந்த அசுரன் அர்ச்சுனனது தவத்தை கலைக்க முயன்றான். அர்ச்சுனன் அசுரனை அம்பால் வீழ்த்தினான். அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்கு வந்து பன்றியை தான் வீழ்த்தியாக கூறி எடுத்துச் செல்ல முயன்றார். அர்ச்சுனன் அவரிடம் பன்றியை தர மறுத்தான். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபத அஸ்திரம் கொடுக்கச் சென்றார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், 'ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதிபெற்றவன்தானா?' என்று சந்தேகம் எழுப்பினாள். சிவன் அவளிடம், 'அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்' என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினான். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனனிடம் கொடுத்தார். அர்ச்சுனன் தனக்கு அருள் செய்ததைப் போல இங்கிருந்து அனைவருக்கும் அருளும்படி வேண்டவே சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார்.

இறைவனின் திருமேனி நாதர் என்ற பெயருக்கு ஏற்ப, இத்தலத்து இறைவனை வழிபட்டால், நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அருளுவார்.

Read More
இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்

இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோவில்

ஐந்து மூலவர்கள் இருக்கும் தேவார தலம்

பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேருக்கும் சிவபெருமான் தனித்தனியே காட்சி கொடுத்த தலம்

வைத்தீசுவரன்கோவில் – திருப்பனந்தாள் சாலையில் உள்ள மணல்மேடு என்ற ஊருக்கு வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் இலுப்பைபட்டு. இத்தலத்தின் புராண பெயர் திருமண்ணிப் படிக்கரை. சிவபெருமான் ஆலகால விஷத்தை பருகியபோது பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த கோவில் இது.

பொதுவாக சிவன் கோவில்களில் ஒரு மூலவர் மட்டும்தான் இருப்பார். அரிதாக சில சிவன் கோயில்களில் இரண்டு மூலவர்கள் இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் ஐந்து மூலவர்கள் அருள் பாலிப்பது ஒரு தனி சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இத்தலத்தில் சில காலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப் பார்த்தும் சிவலிங்கம் எதுவும் கிடைக்க வில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக வணங்கினர். சிவபெருமான் அவர்கள் ஐந்து பேருக்கும், தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவபெருமானிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அனைவருக்கும் அருள் செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். சிவபெருமானும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோவிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கின்றது.

தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். மற்றொரு அம்பிகையான அமிர்தகரவல்லி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடச லிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

கால சர்ப்பங்கள் சாளரத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி

சகல நாக தோஷங்களுக்கான நிவர்த்தி தலம்

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

இக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சாளரத்தில்,இரண்டு கால சர்ப்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருகின்றன. பொதுவாக சன்னதிகளில் அல்லது கோவில் மண்டபங்களில் காட்சி தரும் சர்ப்பங்கள், இங்கு சாளரத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இந்த சாளரத்தில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகிய எட்டு நாகங்களும் சூட்சும ரூபத்தில் இருக்கின்றன. இந்த சாளரத்து நாகங்களை வழிபட்டால் சகல நாக தோஷங்களும் விலகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.

ஒரு சமயம் சிவபெருமானின் திருமேனியில் ஆபரணங்களாக உள்ள நாகங்களுக்கு, சிவபெருமானை வழிபடும் போது தங்களைத்தான் வழிபடுகிறார்கள் என்ற கர்வம் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானின் சாபத்தை பெற்றார்கள். நாகங்கள் சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றபோது, சிவபெருமான் அவர்களை சிவராத்திரி அன்று, ஆலமர விழுதை நாராக எடுத்து, அகத்தி பூவை வைத்து மாலையாக தொடுத்து இத்தலத்தில் தன்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இந்த வழிபாட்டை அன்று தவறவிட்டால் சாப விமோசனம் கிடையாது என்றும் நிபந்தனை விதித்தார். அதனால் தான் இன்றும் இத்தலத்தில் ஆலமர விழுதுகள் தரையை தொடுவதில்லை, அகத்தி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை.

இக்கோவில் சாளரத்தில் சூட்சும ரூபத்தில் இருக்கும் அஷ்ட நாகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இரண்டு தீபம் ஏற்றி , சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, அம்பாள் சன்னதியில் உளுந்து, கொள்ளு தானம் செய்து ஒன்பது வாரங்கள் வழிபட்டால் ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், அனைத்து நாக தோஷங்களும் விலகும்.

Read More
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில்

திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோவில்

சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி இருக்கும் அரிய காட்சி

மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருநின்றியூர். இறைவன் திருநாமம் மகாலட்சுமிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் உலகநாயகி, லோகநாயகி. மகாலட்சுமி இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து இறைவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். மகாலட்சுமி (திருமகள்) வழிபட்டதால் இவ்வூர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது. இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும்.

பொதுவாக, அனைத்து சிவாலயங்களிலும், ஈசானிய(வடகிழக்கு) மூலையில் நவக்கிரகங்கள் மேற்கு திசை முகமாக அமைக்கப்பட்டிருக்கும். நவகிரகங்களின் நடுவில் சூரிய பகவான் கிழக்கு முகமாகவும்,, சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரன் கிழக்கு முகமாகவும், மேற்கில் சனி மேற்கு முகமாகவும், வடக்கில் குரு வடக்கு முகமாகவும், தெற்கில் செவ்வாய் தெற்கு முகமாகவும், வடகிழக்கில் புதன் வடக்கு முகமாகவும், தென் கிழக்கில் சந்திரன் மேற்கு முகமாகவும், வட மேற்கில் கேது தெற்கு முகமாகவும் தென் மேற்கில் ராகு தெற்கு முகமாகவும் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் நேர் முகமாக பார்த்தபடி எழுந்தருளி இருப்பது வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More