திருவையாறு ஐயாறப்பர் கோவில்

விஷ்ணு சொரூபமாக எழுந்தருளி விளங்கும் திருவையாறு தர்மசம்வர்த்தினி

வெள்ளிக்கிழமை இரவுகளில் மகாலட்சுமி தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்கும் வித்தியாசமான சம்பிரதாயம்

தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு ஐயாறப்பர் கோவில். இத்தலத்து இறைவிக்கு தர்மசம்வர்த்தனி என்று பெயர். மேலும் இந்த அம்பிகைக்கு, அறம்வளர்த்தநாயகி, தர்மாம்பிகை, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அம்பிகையின் சக்தி பீடங்களில் இத்தலம், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.

இத்தலத்து அம்பிகை அறம்வளர்த்தநாயகி, தனி கோவிலில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் அம்பாள், இங்கே விஷ்ணு சொரூபிணி. நான்கு திருக்கைகள் கொண்ட அம்பிகை தனது மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலக் கீழ்க்கரம் அபய ஹஸ்தம் காட்டியும் இருக்கின்றாள். இடக் கீழ்க்கரம் தொடையைத் தொட்டு ஊன்றியபடி, மஹாவிஷ்ணு ஊன்றியிருப்பாரே, அதேபோல வைத்தபடி தரிசனம் காட்டுகிறாள். திருமாலின் அம்சமாக, அம்பிகை தனது கோலத்தை இங்கே நின்று காட்சி தருகிறாள். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோவில்கள் இல்லை.

அம்பாள், விஷ்ணு சொரூபம் என்பதால், இக்கோவிலில் இன்று அளவும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை இரவுகளில், மகாலட்சுமி வந்து தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்க, தீபாராதனை நடைபெறும். அதாவது விஷ்ணுவைச் சந்திக்க,மகாலட்சுமி வந்திருக்கிறார் என்று ஐதீகம்.

அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

இத்தலத்தில் பெண்கள் தர்மம் செய்தால் அது இரட்டிப்பு பலன் தரும் என்பது நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் செய்யும், தர்மமும், அறச்செயல்களுமே அக்குடும்பத்தைப் பல விதங்களில் கவசமாக நின்று காக்கிறது. எனவே அதன் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தவே அம்பிகை இங்கு தர்ம சம்வர்த்தினியாகக் காட்சி அளிக்கிறாள்.

தகவல், படங்கள் உதவி : திரு. ராஜ்குமார், திருவையாறு

 
Next
Next

மஹாளய அமாவாசை