தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.
கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி
இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீசுவரர் கோவில்
தர்மதேவதை நந்தி வடிவில் எழுந்தருளி இருக்கும் தேவாரத்தலம்
திருமண வரம் அருளும் நந்தி தேவர்
விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவெண்ணைநல்லூர். இறைவன் திருநாமம் கிருபாபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. சிவபெருமான் முதியவர் தோற்றத்தில் வந்திருந்து, சுந்தரரை ஆட்கொண்ட தலம் இது.
தர்மதேவதையே நந்தி வடிவில் இக்கோவிலில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தாங்களும் மாலை போட்டு, நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பூர்வ ஜென்ம பாவம் விலக இக்கோவிலில் யாகம் செய்கிறார்கள். உடல் ஆரோக்கியம், தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது. இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள்.
தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். பூர்வ ஜென்ம பாவம் விலக யாகம் செய்கிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது மேலும் ஒரு விசேசம். இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள்.
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்
பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்
கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.
இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.
பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்
பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கு பிரம்மதேவரின் அகந்தையை அகற்ற சிவபெருமான் அவரின் தலையை அகற்றி தண்டித்ததால், ‘சீரகண்டீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார்.
இக்கோவிலில் பிரம்மதேவர் தவமிருந்து சிவனிடம் சாப விமோசனம் பெற்றார். இங்கு சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.மற்ற கோவில்களில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அல்லது கோஷ்டத்தில் வீற்றிருக்கும் நிலையில், இங்கு பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் ஒன்றாக தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். பிரம்மா சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக, புன்னகை தவழும் கோலத்தில் காட்சியளிக்கிறார், அவரது கரங்களில் பூ மற்றும் ஜெபமாலைகள் இருக்கின்றன.
இந்த தலத்தில் தரிசனம் செய்தால் பிரம்மா தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
எப்பொழுதும் மூடியே இருக்கும் குடைவரை காளி சன்னிதி
காளியின் உருவமாக விளங்கும் சூலம்
கண்ணாடி மூலம் சூலத்தை வணங்கும் நடைமுறை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி.
இக்கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளளது, குடைவரை காளி சன்னிதி. இந்த சன்னிதியின் நுழைவுவாசல் எப்பொழுதும் மூடியே இருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
ஒரு சமயம் சதுர கள்ளி வனத்தில் கார்கவ முனிவர் தியானத்தில் இருந்தார். அப்போது ஒரு அரக்கன் பசியில் உணவு தேடித் திரிந்தான். புலி உருவத்தில் முனிவரை கொல்ல முயன்றான். அதைக்கண்ட முனிவர், 'உனக்கு புலி உருவமே நிலைக்கட்டும்' என்று சாபமிட்டார். பசியின் காரணமாக இப்படிச் செய்து விட்டதாகவும், தனக்கு விமோசனம் அருளும்படியும் அசுரன் முனிவரை வேண்டினான். அதற்கு முனிவர், 'வஜ்ரவனம் என்ற திருப்புனவாசல் பகுதிக்கு பார்வதியும் சிவனும் வரும்போது, பார்வதியின் பார்வை பட்டு உன்னுடைய சாபம் நீங்கும்' என்றார்.
தன் சாப விமோசனத்திற்காக அந்தப் பகுதியில் புலியாகவே சுற்றி வந்தான், அசுரன். ஒரு முறை பார்வதி அந்த வனத்திற்கு வந்தார். அவர் மீது புலியாக இருந்த அசுரன் பாய்ந்தான். அப்போது காளியாக உக்கிர வடிவத்திற்கு மாறிய தேவியின் பார்வை பட்டு,அந்த அசுரனுக்கு சுய உருவம் கிடைத்தது. மேலும் இத்தல அம்பாளின் முன்பு நந்தியாக இருக்கும் வரமும் கிடைத்தது.
தனது உடலில் பாதி உருவத்தை கொடுத்த சிவபெருமானிடம், உக்கிரமான காளி உருவத்தை காட்டியதற்காக அம்பாள் மன்னிப்பு கேட்டாள். ஆனால் சிவபெருமான், 'உனக்கு இந்த உருவம் நன்றாகத்தான் உள்ளது. இருப்பினும், இந்த உருவத்தை உனக்கு துணையாக குடை வரையில் வைத்துக்கொள். சுயரூபத்தோடு வந்து என்னுடன் இரு' என்று கூறியதையடுத்து, அம்பாள் சுய உருவதை அடைந்தார். ஒரு உருவத்தில் இருந்து மறு உருவம் எடுத்ததால், காளியின் உருவ வழிபாடாக சூலம் உள்ளது. அம்பாளின் சன்னிதிக்கு எதிரே இந்த குடைவரை காளி சன்னிதி உள்ளது. காளியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், இந்த சன்னிதியின் நுழைவு வாசல் கதவு மூடியே இருக்கும்.இதனால் அந்த சூலத்திற்கு எதிராக ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துதான் சூலத்தை வணங்க வேண்டும்.
கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்
இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.
கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.
சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்
'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்களின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி.
இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இரண்டாவது அவதாரம் எடுத்து, பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அதனால் இங்கு சனி பகவான் தன்னை வழிபடுபவர்களுக்கு வெறும் நற்பலன்களை மட்டுமே வாரி வழங்குகின்றார். அவரைப் போலவே மற்ற நவக்கிரகங்களும், இத்தலத்தில் தங்களுடைய காரகப் பலன்களை அளிக்காமல் சிவ தியானத்தில் இருக்கின்றன. இந்த காரணத்தினால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் மாறுபட்ட அமைப்பில் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் 'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் காட்சி அளிக்கிறார்கள். இத்தகைய வடிவமைப்பில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பதை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரகங்களின் இந்த 'ப' எழுத்து வடிவமைப்பில், சூரியன், சந்திரன், அங்காரகன் ஆகிய மூவரும் பின்புறம் இருக்கிறார்கள். சந்திர பகவானுக்கு வலது புறம் குருபகவான், சனி பகவான், புதன் பகவான் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். அங்காரகனுக்கு இடது புறம் சுக்கிர பகவான், ராகு பகவான், கேது பகவான் ஆகியோர் இருக்கின்றார்கள்.
தென்குடி திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில்
மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை
அம்பிகை சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் இருக்கும் அரிய வடிவமைப்பு
கிரக தோஷங்களை நீக்கும் அம்பிகை
தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் தென்குடி திட்டை . இறைவன் திருநாமம் வசிஸ்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.
அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில் வசிஷ்டேஸ்வரருக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் உள்ளார் . பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால் தான், இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார்.மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்றும், சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும் அழைக்கிறார்கள்.
கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், 'உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’' எனக் கூறினார். அதைக் கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, 'எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு' என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து 'இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்' என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
இந்த அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி அம்மன் சன்னதி எதிரில் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டிருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாது. பக்தர்கள் தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்
சனி பகவான் பொங்கு சனீஸ்வரராக இரண்டாவது அவதாரம் எடுத்த தலம்
கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி. சனி பகவானின் தந்தையான சூரிய பகவான் இத்தலத்து இறைவன் அக்னீஸ்வரரை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றான்.
சனி பகவான் உலகத்திற்கே நீதிபதியாக இருந்து, பாரபட்சம் பார்க்காமல் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமக்கு நற்பலன்களையோ அல்லது தண்டனையோ அளிப்பார். நமது பூர்வ ஜென்ம ஜென்ம புண்ணியம் மிகுந்திருந்தால் அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். செய்த பாவம் அதிகமாக இருந்தால், நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பார்.இப்படி கொடுக்கப்படும் தண்டனை மூலம் நமது பாவத்தைப் போக்கி புண்ணியம் கிடைத்திட வழிவகுப்பார்.ஆனால் நமது பாவத்தினால் ஏற்பட்ட துன்பங்களுக்கு சனி தோஷம் தான் காரணம் என்று சனிபகவானை குறிப்பிடுவது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது.
சனி பகவான் தனது அவப் பெயரை போக்கிக் கொள்வதற்காக, தனது தந்தை சூரிய பகவான் வழிபட்ட இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்தார். சிவன் அருளால் சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக, இரண்டாவது அவதாரம் எடுத்தார். இங்கு நற்பலன்களை மிகுந்து அளிப்பதால் அவருக்கு பொங்கு சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த பொங்கு சனீஸ்வரர் நிறைந்த செல்வங்களையும், நீண்ட ஆயுளையும் தந்து அருளுகின்றார்
இங்கு பொங்கு சனீஸ்வரர் தனி சன்னதியில் கைகளில், ஏர் கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய ஊரு முத்திரையுடன் காட்சி தருகிறார். உழைப்பின் பெருமையை உணர்த்துவதற்காக அவர் தனது கையில் ஏர் கலப்பையை ஏந்தி இருக்கிறார். இப்படி கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனி பகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
திருக்கோழம்பியம் கோழம்ப நாதர் கோவில்
அம்பிகை பசுவாக அவதரித்து தவம் செய்த தேவாரத் தலம்
சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்த தலம்
மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. (திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருக்கோழம்பியம். இறைவன் திருநாமம் கோழம்ப நாதர், கோகிலேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.
அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க, பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில், இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்து இருக்கின்றது. இத்தலத்து சிவலிங்கத் திருமேனி நீண்ட பாணத்தை உடையதாக இருக்கின்றது. பிரம்மனுக்காக பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சாப விமோசனம் பெற்ற தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, கயா போன்ற புண்ணிய தலங்களுக்கு ஈடான தலம் இது.
அம்பிகை சௌந்தர்ய நாயகி 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கிறாள். திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால், சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவபெருமானை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது. அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம். தமிழில் 'குளம்பு' என்றால் 'கொழுமம்' என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு 'கோழம்பம்' என்றும், இறைவனுக்கு 'கோழம்பநாதர்' என்றும் பெயர் ஆயிற்று.
இக்கோவிலில் 27 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'வ்யதிபாதயோக' பூஜை ஹோமங்களில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
'ட' என்ற தமிழ் எழுத்து வடிவில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் சதுர வடிவில், அவரவர் அவரவர்க்குரிய திசையை நோக்கிய வண்ணம் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் நவக்கிரகங்கள் சதுர வடிவில் அமைந்திராமல், 'ட' என்ற தமிழ் எழுத்து வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களின் இந்த 'ட' வடிவ அமைப்பை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் சீயாத்தமங்கை. இத்தலம் நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் 'கோயில் சீயாத்தமங்கை' என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநாமம் அயவந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் இருமலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி.
இக்கோவிலில் இறைவனும், அம்பிகையும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன், அம்பிகை சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் இரண்டு தனி கோவில்களாக விளங்குகின்றன.
அம்பிகை இருமலர்க்கண்ணம்மை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகை சிவ சொரூபியாக விளங்குகின்றாள். அம்பிகை சிவபெருமானைப் போல் ஜடாமுடி தரித்து, நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்சியளிக்கிறார். அம்பிகையின் ஜடாமுடியில் சூரிய, சந்திர பிறைகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் அம்பிகையின் கழுத்தில் ருத்ராட்ச மணி அலங்கரிக்கின்றது. அம்பிகையின் தனிக் கோவிலில், சிவபெருமானுக்கு அமைந்த பரிவார தெய்வங்கள் போல் நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் அமைந்திருப்பது இத்தலத்து அம்பிகையின் தனிச்சிறப்பாகும்.
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அரிய காட்சி
நவக்கிரக தோஷத்தை நிவர்த்திக்கும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம், சித்தநாதேசுவரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதுபோல இக்கோவிலில், வழக்கமாக தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி அதற்கு மாறாக, மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள்.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி. காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவான கோவில் இது. பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப் பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமாக விருத்தபுரீசுவரர் விளங்குகின்றார். தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள சிவலிங்க மூர்த்தி இதுவாகும். தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, அதனை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது. ஆனால் இக்கோவில் சிவலிங்கம் சுற்றளவில் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது (சுற்றளவு 82.5அடி). சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.
செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்.
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அந்தணர் வேடத்தில் தோன்றி அரசனின் பிரச்சனையை தீர்த்த பொய்யாமொழி பிள்ளையார்
மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் தான்தோன்றீசுவரர். இறைவியின் திருநாமம் வாள் நெடுங்கன்னி அம்மன்.
இக்கோவில் தெற்கு குளக்கரையில் உள்ள ஒரு சன்னதியில் வீற்றிருக்கும் பிள்ளையார், பொய் சொல்லா பிள்ளையார் (பொய்யாமொழி பிள்ளையார்) என்று அழைக்கப்படுகிறார். இவர் அரசருக்கு அவருடைய பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் வகையில் பிராமண வேடத்தில் தோன்றியவர், எனவே இவர் பொய்யாமொழி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் கோச்செங்கட்சோழன் தான்தோன்றீசுவரர் கோவில் கட்டத் துவங்கினான். கோவில் பணிகள் நடக்கும் போது, முதலில் கோவிலுக்கான மதில் சுவரை எழுப்பினான். காலையில் கட்டப்பட்ட மதில் சுவர் இரவில் தானாக விழுந்து விடும். இப்படி பலமுறை நடந்தது. கோச்செங்கட்சோழனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பொல்லாப் பிள்ளையார் அந்தண ரூபத்தில் வந்து மன்னனிடம் என்ன பிரச்னை என்று கேட்கிறார். அதற்கு மன்னன், சிவனுக்கு கோவில் கட்ட வேண்டும், ஆனால் மதில் சுவர் கட்டியவுடன் இடிந்து விழுந்து விடுகிறது என்றான். அதற்கு விநாயகர், நீ இங்குள்ள குளத்தில் மூன்றே முக்கால் நாழிகை மூழ்கி எழுந்து பார். உனக்கு எல்லாம் சரியாகும் என்றார். மன்னனுக்கோ, குளத்தில் மூழ்கினால் மதில் சுவர் எப்படி நிற்கும் என்று சந்தேகம். இதையறிந்த விநாயகர், காசியை விட இந்த குளத்திற்கு வீசம் அதிகம். நீ குளித்து எழுந்து பார் என்றார். அதன்படி கோச்செங்கட்சோழன் குளத்தில் மூழ்கி எழ, மதில் சுவரில் இருந்து கருவறை வரை எல்லாம் சரியாக அமைந்தது.
இப்படி கோச்செங்கட்சோழனுக்கு அருளிய பொல்லாப் பிள்ளையார் நம் அனைவர்களுக்கும் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்கிறார்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
இடுப்பில் குழந்தையை தாங்கிய வடிவில் உள்ள அம்பிகையின் அரிய தோற்றம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி 'அம்மா' என்று அழைத்தார். அது கேட்டுப் பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து வந்தார். பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் 'கூப்பிட்டான் குளம்' என்பர். அது இன்று 'கேட்டான் குளம்' என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகர், ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
வியக்க வைக்கும் அதிசயத் தூண் - கோவில் தூணுக்குள் வெளியே எடுக்க முடியாதபடி உருளும் கல் பந்து
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை.
நமது முன்னோர்கள் கோவில்களில் வடித்து வைத்துள்ள சிற்பங்களும், கலை நயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வேலைப்பாட்டை, இந்த கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் இருக்கும் ஒரு தூணில் நாம் காணலாம்.
இந்த தூணின் மூன்று பக்கங்களில் சுமார் ஒரு அடி நீளத்திற்கு நீள் செவ்வக துவாரம் அமைந்திருக்கின்றது. தூணுக்குள் கல்லாலான ஒரு பந்து இருக்கின்றது. இந்தப் பந்தை நாம், தூணுக்குள் ஒரு அடி தூரத்திற்கு மேலும் கீழும் நகர்த்த முடியும். ஆனால் அந்தக் கல் பந்தை நாம் தூணை விட்டு வெளியே எடுக்க முடியாது. இப்படி ஒரே கல்லிலான தூணில் மூன்று பக்கம் துவாரம் ஏற்படுத்தி, அதன் உள்ளிருக்கும் கல்லை பந்து போல் வடிவமைத்து ஆடவிட்டு இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
சனகாதி ரிஷிகள் உடன் இல்லாமல் இருக்கும், இடது கையில் நாகத்தை ஏந்திய தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான கோலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி. திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலின் தெற்கே பாம்பாறு ஆறு பாய்ந்து கோவிலுக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள கடலைச் சென்றடைகிறது. தமிழில் புனல் என்பது நதியைக் குறிக்கும். எனவே புனல்-வாசல் என்பது கடலில் நுழையும் நதியின் நுழைவாயில் (வாசல்) என்று பொருள்படும். அதுவே இத்தலத்தின் பெயராக அமையக் காரணமாகும்.
இக்கோவிலில் தென் புற கோட்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய திருமேனியுடன் அமர்ந்த காலத்தில் காட்சி தருகிறார். சுற்றி உள்ள 14 மாவட்டங்களில் இவ்வளவு பெரிய தட்சிணாமூர்த்தி வடிவம் இல்லை. இவருக்கு யோக வ்யாக்ஞான தட்சிணாமூர்த்தி என்று பெயர்.
இந்த தட்சிணாமூர்த்தியானவர், வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும், வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது இடது கையில் நாகத்தை ஏந்தி இருப்பது ஒரு அரிதான காட்சி ஆகும். இந்த தட்சிணாமூர்த்தியுடன், சனகாதி ரிஷிகள் என்று அழைக்கக்கூடிய சனகர், சனாதனர், சனந்தனர் சனத்குமாரர் ஆகியோர், இந்த வடிவத்திலே இல்லை. இவருடைய திருமேனியில் ஜடாமகுடம், ஜடைக்கிரீடம் இல்லை. இவருடைய பின்புறம் கல்லால மரமும் இல்லை.
கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில்
ஒரே சிவலிங்கத்தில் இரண்டு பாணங்கள்
சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம், கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுரர் கோவில். இறைவன் திருநாமம் ஆரண்யேசுரர். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் 'ஆரண்யேசுரர்' என்று அழைக்கப்படுகிறார்.
விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்காரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோகத் தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க, தேவகுருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான். இத்தலத்து இறைவனை வழிபட்டு இழந்த பதவியை மீண்டும் பெற்றான்
இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் 'தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை.
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்
திருப்புவனம் மின்னனையாள்
மின்னல் வேகத்தில் பக்தர்களுக்கு அருளும் அம்பிகை
மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் இதுவாகும். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து அம்பிகைக்கு ஸ்ரீ சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகிய மீனாள் என பல பெயர்கள் உண்டு. இந்த அம்பிகையின் சன்னதி, இறைவன் சன்னதிக்கு இணையாக, இறைவனுக்கு வலது புறம் அமைந்துள்ளது. அம்பாள் சன்னதிக்கு, கோவிலுக்கு வெளிப்பகுதியிலிருந்தே நேரடியாக வருவதற்கு வழியுண்டு. கருவறையில் அம்பிகை மின்னனையாள் நின்ற கோலத்தில் அபயமும், வரதமும் காட்டி நின்ற கோலத்தில் அருள்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள். தனது திருநாமத்திற்கு ஏற்ப, இத்தலத்து அம்பிகை மின்னனையாள், மின்னலைப் போல ஒரு கணத்தில் கேட்பவர்க்கு அருள் வழங்குகின்றாள்.