திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்
பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கு பிரம்மதேவரின் அகந்தையை அகற்ற சிவபெருமான் அவரின் தலையை அகற்றி தண்டித்ததால், ‘சீரகண்டீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார்.
இக்கோவிலில் பிரம்மதேவர் தவமிருந்து சிவனிடம் சாப விமோசனம் பெற்றார். இங்கு சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.மற்ற கோவில்களில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அல்லது கோஷ்டத்தில் வீற்றிருக்கும் நிலையில், இங்கு பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் ஒன்றாக தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். பிரம்மா சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக, புன்னகை தவழும் கோலத்தில் காட்சியளிக்கிறார், அவரது கரங்களில் பூ மற்றும் ஜெபமாலைகள் இருக்கின்றன.
இந்த தலத்தில் தரிசனம் செய்தால் பிரம்மா தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.