திருச்சி நந்தீஸ்வரர் கோவில்

திருச்சி நந்தீஸ்வரர் கோவில்

நந்திக்கு என்று இருக்கும் தனி கோவில்

பிரதோஷ வேளையில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக தரும் தலம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பக்குளம் அருகில் உள்ளது நந்தீஸ்வரர் கோவில்.சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலின் உபகோவிலாகும். இது நந்தியம்பெருமானுக்கான தனிப்பட்ட கோவில் ஆகும். நந்தி வழிபட்ட தலம் இது.

பொதுவாக சிவன் கோவில்களில் இருக்கும் நந்திக்கு பிரதோஷம் நடக்கும். ஆனால், சிவன் இல்லாமல் நந்தி மட்டும் தனித்திருக்கும் இக்கோவிலிலும் பிரதோஷம் சிறப்பாக நடை பெறுகிறது. பிரதோஷ நேரத்தில் சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நின்று நடனம் புரிகிறார். இந்த நேரத்தில் நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு நடுவிலும், நம் பார்வையை செலுத்தி இறைவனை வழிபட வேண்டும் என்பது நியதி. அப்போது சிவதரிசனம், சிவாலய பிரதட்சணம் செய்தால் ஒரு சுற்றுக்கு, கோடி சுற்று சுற்றிய பலன் உண்டாகும் என்கின்றனர். இந்தக் கோவிலில் நந்தீஸ்வரர் மட்டும் தனித்திருப்பதால், பிரதோஷ வேளையில் இங்கு வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

Read More
கொளத்தூர் துளஸீஸ்வரர் கோயில்

கொளத்தூர் துளஸீஸ்வரர் கோயில்

துளசி தீர்த்தப் பிரசாதம் தரும் சிவாலயம்

தாம்பரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப் பெருமாள் கோவில் என்ற ஊருக்கருகில் கொளத்தூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது. இங்கு துளஸீஸ்வரர் திருக்கோவில் எனும் சிவாலயம் உள்ளது. அகத்திய முனிவர் கயிலாயததிலிருந்து தென்பகுதிக்கு செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் துளசி செடிகள் நிறைந்த வனமாக காட்சியளித்த இத்தவத்திற்கு வந்தார். அவர் சிவ வழிபாட்டிற்காக ஏதாவது சிவாலயம் இருக்கின்றதா என்று இத்தலத்தில் தேடினார். அப்போது ‘அகத்தியரே என்னைத் தேடி அலைய வேண்டாம். நான் துளசி செடிகள் சூழ இங்குதான் மறைந்து இருக்கின்றேன்’ என்று அசரீரி ஒலித்தது. அகத்தியர் அசரீரி வந்த திசையில் சென்று பார்த்தபோது, அங்கே சுயம்பு லிங்கம் ஒன்று தென்பட்டது. அகத்தியர் அந்த சிவலிங்கத்திற்கு துளசியை சூட்டி துளசியாலேயே அர்ச்சனை செய்தார். அதனால் இத்தலத்தில் இன்றும், துளஸீஸ்வரரை துளசியால் அர்ச்சித்து துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Read More
கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் கோவில்

கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் வித்தியாசமான தோற்றம்

காரைக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் கோவிலூர். இத்தலத்து இறைவன் திருநாமம் கொற்றவாளீஸ்வரர். இறைவியின் திருநாமம் நெல்லையம்மன். எதிரிகளை வென்றிடப் பாண்டிய மன்னனுக்கு, சிவபெருமான் வாள் கொடுத்த திருத்தலம். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கொற்றவாளீசுவரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது.

பொதுவாக சிவன் கோவில்களில், ஈசான மூலையில் (வடகிழக்கு) நவக்கிரக சன்னதி அமைந்திருக்கும். இந்த சன்னதியில், நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல், நடுவில் சூரியன் நின்ற கோலத்தில் இருக்க, மற்ற நவகிரகங்கள் அவரைச் சுற்றி, அவரவர் திசையை நோக்கியபடி நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில், சூரியன் உட்பட நவக்கிரகங்கள் அனைவரும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு வித்தியாசமான தோற்றமாகும்.

Read More
கூலநாய்க்கன்பட்டி மலையாண்டி சுவாமி கோவில்

கூலநாய்க்கன்பட்டி மலையாண்டி சுவாமி கோவில்

கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் இருக்கும் அரிய காட்சி

நான்கு முகங்களுக்கு பதிலாக ஒரே முகத்துடன் காட்சி அளிக்கும் பிரம்மாவின் அபூர்வ தோற்றம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கூலநாய்க்கன்பட்டி எனும் ஊர். இந்த ஊரில் மலையாண்டி சுவாமி கோவில் என்னும் மிகவும் பழமை வாய்ந்த கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கருவறையில், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான் ஆகிய மூவரும் எழுந்தருளி உள்ளார்கள். இப்படி மும்மூர்த்திகளும் ஒரே கருவறையில் இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.

கருவறையில் சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும், சிவனுக்கு இடதுபுறம் திருமாலும், வலது புறம் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். நான்கு தலைகளுடன் நான்முகன் என்ற பெயரில் அருளும் பிரம்மா, இக்கோவிலில் ஒரே ஒரு தலையுடன், நான்கு கைகளுடன் புடைப்புச் சிற்பமாக காட்சி அளிக்கிறார். பிரம்மாவின் வலக்கையில் அபய முத்திரையும், இடக்கையில் கமண்டலமும், பின் வலக்கையில் தர்ப்பைப் புல் கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் உள்ளன.

நம் நாட்டில் பிரம்மாவுக்கு என்று தனி கோவிலோ அல்லது கோவில்களில் தனிச்சன்னிதியோ இருப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட நிலையில், இக்கோவிலில் பிரம்மா ஒரு அபூர்வமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

Read More
திருநீலக்குடிநீலகண்டேஸ்வரர் கோயில்

திருநீலக்குடிநீலகண்டேஸ்வரர் கோயில்

அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் நடக்கிறது. தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி இருப்பதால்,அந்த விஷத்தன்மையை குறைக்கவே இவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்

Read More
நாலூர் பலாசவனேஸ்வரர் கோவில்

நாலூர் பலாசவனேஸ்வரர் கோவில்

பலாப்பழம் போன்ற திருமேனியை உடைய சிவலிங்கம்

தஞ்சை மாவட்டம் திருச்சேறை அருகே உள்ளது நாலூர். இத்தலத்து இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.

Read More
செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில்

செங்கம் ரிஷபேஸ்வரர் கோவில்

தங்க நிறமாக மாறும் நந்தி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊரில், ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாம் நாள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது, சூரிய ஒளிக்கதிர்கள் இராஜ கோபுரத்தின் மேல் பட்டு நந்தியின் மேல் விழும். அப்படி சூரிய ஒளி விழும் சில நிமிடங்கள், நந்தி தங்க நிறமாக மாறி காட்சியளிக்கும்.

Read More
ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோவில்

ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோவில்

சிவலிங்கத்திற்கு தலைப்பாகை அணிவித்துப் பூஜை செய்யும் தேவாரத்தலம்

விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலமாகும்.இறைவன் பெயர் அரசலீஸ்வரர். இங்கு சுவாமி 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாக அருளுகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்த காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்திற்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.

Read More
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில்

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில்

இனிப்பு,புளிப்பு என இரட்டை சுவையுடன் விளங்கும் தலவிருட்சம்

தென்காசிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூர்.அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கிறார்கள், புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள, மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
சிதம்பரம் நடராஜர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சிதம்பரம் நடராஜர் கோவில்

நமது தேசிய கொடி கோபுரத்தில் ஏற்றப்படும் ஒரே தலம்

ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோவிலின் கோபுரத்தின் மீது ராஜ கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், சுதந்திரத் தினமும் குடியரசு தினமும் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. மேற்கு கோபுரம் வாயில் முன் மண்டபம் அருகே, நாடு சுதந்திரம் அடைந்ததைக் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளனர் தீட்சிதர்கள்.

சுதந்திரத் தினத்தன்று காலை கோயிலில் முதல் கால பூஜை முடிந்தவுடன், கனக சபையில் நடராஜர் பாதத்தின் கீழ் தேசியக் கொடியை வெள்ளி தட்டில் வைத்து தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளைச் செய்வார்கள். நாட்டின் நலனுக்காகவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் பூஜை செய்யப்படுகிறது.

பின்னர், அர்ச்சகர் எடுத்து வர பிரகாரம் வழியாக மேள, தாளம் முழங்கியவாறு தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு வந்து 152 அடி உயரமுள்ள கிழக்கு ராஜகோபுர உச்சியில் தேசியக் கொடியை தீட்சிதர்கள் ஏற்றுவார்கள். பின்னர் அங்கு இருக்கும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்குவார்கள்.

அப்போது கோவிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்படும்.

இதேபோல், குடியரசுத் தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.

Read More
திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் கோவில்

திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் கோவில்

ஆடி அமாவாசையன்று பதிமூன்று கங்கைகள் பொங்கும் கிணறு

தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத் தலம் திருப்பூந்துருத்தி. இறைவன் திருநாமம் புஷ்பவனநாதர். இறைவி சௌந்தர்யநாயகி. இரண்டு ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள ஊர் ஆனது துருத்தி என அழைக்கப்படுகிறது. இத்தலமானது காவிரிக்கும், குருமுருட்டிக்கும் இடையில் அமைந்துள்ளதால் திருப்பூந்துருத்தி எனப்பெயர் பெற்றது.

ஒரு முறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். 'ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திரிவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது? நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார். பின்னர் அவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி பல சிவத்தலங் களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் சிவபெருமானை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, சிவபெருமானையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு சிவபெருமானுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது காசிப தீர்த்தம்.

ஆடி அமாவாசை நாளில் வழிபடுவதால் ஏற்படும் நற்பலன்கள்

ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும்.தடைகள் அகலும். தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இத்தல காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பித்ரு தோஷம் ஒருவரது ஜாதகத்தில் இருக்குமேயானால் ,அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமலும்,நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பதற்கும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அவ்வாறு உள்ளவர்கள், இத்தலத்திற்கு வந்து அமாவாசை நாட்களில்,இறைவன் புஷ் வனநாதரையும், அம்பாள் சௌந்தர்யநாயகியையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் தடைகள் நீங்கி நன்மையே நடக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்து முருகனை புகழ்ந்து அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

Read More
ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில்

ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயில்

ஆவுடையார் மட்டுமே உள்ள சிவாலயம்

வித்தியாசமான அம்சங்கள் உள்ள சிவாலயம்

சிவாலயங்களில் உள்ள சிவலிங்கம் இரண்டு பகுதிகளால் ஆனது. கீழ்ப்பகுதி ஆவுடையார் என்றும் மேல்பகுதி பாணம் என்றும் கூறப்படும். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் என்னும் தலத்தில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவில் மூலவர் சன்னதியில், ஆவுடையார்(லிங்கத்தின் கீழ் பகுதி) மட்டுமே உள்ளது. மேல் பகுதியான பாணம் கிடையாது. இங்கு பாணம் அரூபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தலத்து அம்பிகை யோகாம்பிகை, அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள கருங்கல் பலகணி வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். மேலும் மற்ற சிவாலயங்களில் இருப்பது போல நந்தி, கொடிமரம், பலிபீடம் போன்றவை இங்கு கிடையாது.

சிற்பக்கலையின் பொக்கிஷம்‍ ‍

இத்தலத்து சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கலைநயம் உடையவை. முற்காலத்தில் சிற்பிகள் தங்கள் சிற்ப வேலைக்கு ஒப்பந்தம் போடும்போது, ஆவுடையார் கோவில் கொடுங்கை தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழி பலகணி போன்ற வேலைப்பாடுகளை தவிர வேறு எந்த சிற்ப வேலைப்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று உறுதி அளிப்பார்களாம்.

கோவிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் (Raft),எப்படி ஒரு வீட்டில் கொடுங்கைகளை, தேக்கு மரச் சட்டங்களை இணைத்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பார்களோ, அதேபோல அத்தனை அம்சங்களையும் கல்லிலே வடிவமைத்து இருப்பது காண்போரை வியக்க வைக்கும். இந்த கொடுங்கைக்கூரையில், கற்கள் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டரையடி கனமுள்ள கற்களை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி, அவற்றை செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கனமுள்ள மேலோடு அளவிற்குச் மெல்லிய தாக்கியிருப்பது, சிற்பக் கலையின் உச்சக்கட்ட திறனாகும்.

தற்கால நாகரீகப் பெண்கள் அணியும் நவீன அணிகலன்கள், தங்க நகைகள், சங்கிலிகள் போன்ற விதவிதமான வடிவமைப்பு உள்ள அணிகலன்கள், இங்குள்ள சிற்பங்களில் காணப்படுவது நம்மை பிரமிக்க வைக்கும். சுருங்கச் சொன்னால் இத்தலமானது சிற்பக்கலையின் பொக்கிஷமாகும்.

Read More
வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்

செவ்வாய்க்கிழமை கோவில் என்ற சிறப்பு பெற்ற தலம்

சென்னை வில்லிவாக்கத்தில் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இந்த தலத்தில் அகத்தியருக்கு சிவனும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.

முன்பொரு காலத்தில், வில்லிவாக்கம் பகுதியில் வில்வலன், வாதாபி எனும் இரு கொடிய சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வலனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனை அடையுமாறு செய்தார். வில்வலனைத் திருத்தித் தீய வழியில் இருந்து நல்வழிக்குக் கொண்டு வந்த மையால் இத்தலம் வில்லிவாக்கம் என வழங்கப்படுகிறது.

மார்க்கண்டேயர் அகத்தியருக்கு உணர்த்திய 108 சக்தி திருத்தலத்தினுள் இந்த தலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சொர்ணாம்பிகை அமர்ந்த திருத்தலம் இத்தலமாகும். வில்வ மரங்கள் செறிந்த இத்திருத்தலத்தில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் செவ்வாய்க்கிழமைதோறும் நடு இரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு

நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.

பக்தர்கள் இக்கோயிலை, 'செவ்வாய்க்கிழமை கோயில்' என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

சிவன் கோவிலான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் அம்மன் கோவில்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அதனால்இந்த அகத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும்.

ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத செவ்வாய்க்கிழமை, சிறப்பு மிக்க வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. 5 வாரங்களும் சுவாமி அம்பாளுக்கு விசேஷ சிறப்பு அலங்காரமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.

பிரார்த்தனை

இந்த ஆலயத்தில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு அகத்தீஸ்வர பெருமானை ஆடி மாத செவ்வாய்கிழமை அன்று தரிசித்தால் பலன் கிடைக்கும். குறிப்பாக அனைத்துவிதமான தோஷங்களும் விலகி, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம். ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் செய்து கொள்வர். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

Read More
காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில்

காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில்

யானையின் கீழ் பிரம்மாவும், லட்சுமி நாராயணரும் காட்சி தரும் அபூர்வ சிற்பங்கள்

கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இக்கோவிலின் வடிவமைப்பும், கோவில் சிற்பங்களின் கலை நுணுக்கமும் பார்ப்பவர்களை வியக்க வைக்கும்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னதி விமானத்தை 8 வெள்ளை யானைகள் தாங்கிக் கொண்டிருக்கும். அது போலவே இக்கோவிலிலும் இறைவன் நஞ்சுண்டேசுவரர் விமானத்தை 8 யானைகள் தாங்கியபடி இருக்கின்றன. இதில் ஒரு யானை சிற்பத்திற்கு கீழ் பிரம்மாவும், மற்றொரு யானைக்கு கீழே லட்சுமி நாராயணரும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மற்றொரு யானையின் கீழ் சிம்மம் அமைந்திருக்கின்றது.

கருவறையின் வெளிச்சுவற்றில் பல அழகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ரிஷபத்தின் மேல் காட்சியளிக்கும் சிவபெருமான் பார்வதி, தண்டாயுதபாணியாக முருகப்பெருமான், ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் சிவலிங்கம், பெரிய யாளி உருவங்கள் ஆகியவை நமக்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன. வெளிச்சவற்றின் அடிப்பக்கத்தில் குதிரைப்படை வீரர்களின் அணிவரிசை, அலங்கார வளைவுகள், ஒரே சீராக அமைக்கப்பட்ட பலவிதமான வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Read More
 திருக்கருவிலி சற்குணேஸ்வரர் கோயில்

திருக்கருவிலி சற்குணேஸ்வரர் கோயில்

மறுபிறப்பைத் தடுக்கும் திருக்கருவிலித் தலம்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கருவிலி. இறைவன் திருநாமம் “சற்குணேஸ்வரர்.

திருக்கருவிலித் தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் ‘கரு இல்லை’ என்ற பொருளில் ‘கருவிலி’ எனப்பட்டது. காலப்போக்கில் கருவேலி என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதும் ஆகும். எனவே இவ்வூர் இறைவன் ‘சற்குணேஸ்வரர்’ எனப்படுகிறார். அம்பாள் ‘சர்வாங்க சுந்தரி’ எனப்படுகிறாள்.அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது.

Read More
திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில்

திருப்பாலைவனம் பாலீஸ்வரர் கோவில்

பால்வண்ண மேனியனாக காட்சிதரும் பாலீஸ்வரர்

சென்னை பழவேற்காடு அருகேயுள்ள திருப்பாலைவனம் என்னும் தல த்தில், வெள்ளை நிறத்துடன் பால்வண்ண மேனியனாக, பாலீஸ்வரர் அருள்பாலிக்கிறார், பழவேற்காடு அருகில், கடல் மணற்பரப்பை ஒட்டி அமைந்த தலம் என்பதாலும் பாலை மரங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், ‘திருப்பாலைவனம்’ என்று இத்தலத்துக்குப் பெயர் உண்டாயிற்று.ஒரு சமயம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது, அந்த அமுதத்தையே சிவலிங்கமாக பிடித்து வழிபட்டனர். அமுதத்தால் உண்டானவர் என்பதால் இந்த ஈசனுக்கு ‘அமுதேஸ்வரர்’ என்றும், பாலை மரத்தின் நடுவே கோயில்கொண்டதால் ‘பாலீஸ்வரர்’ என்றும் திருநாமம் ஏற்பட்டது. காலப்போக்கில், சுற்றிலும் அரண்போல பாலை மரம் வளர்ந்துவிட, வெள்ளை லிங்கம் விருட்சத்துக் குள் மறைந்துபோனது. முதலாம் ராஜேந்திர சோழன் தன் படை பரிவாரங்களுடன் இந்தப் பகுதியின் வழியே வந்த போது, ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது, அவர் படையிலிருந்த யானை மற்றும் குதிரைகளைப் படை வீரர்கள் லிங்கம் மறைந்திருந்த பாலை மரத்தில் கட்டிப் போட்டனர். சற்றுநேரத்தில் அவை மயக்கமடைந்து அங்கேயே சரிந்தன. இதனைக் கேள்விப்பட்ட ராஜேந்திர சோழன்,. உடனே மரத்தை வெட்ட ஆணையிட்டார். மரத்தைப் படை வீரர்கள் வெட்டியபோது, அதன் நடுவே வெள்ளை நிற லிங்கத் திருமேனி இருந்ததைக் கண்டு வியப்படைந்தனர். மன்னர்.பாலீஸ்வரருக்கு, அங்கே பிரமாண்டமாய் ஒரு ஆலயத்தை எழுப்பினார். திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரராக அருளும் இறைவனே, இங்கே அமுதேஸ்வரராக அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, இந்தத் தலத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் ஆகியவை அதிகளவில் நடைபெறுகின்றன. அமுதேஸ்வரரை வேண்டிக் கொள்ள தம்பதியர் பூரண ஆரோக்கியத்துடன் நலம் பெற்று வாழ்வர் என்பது பக்தர்களின் நம்பிகை. மாணிக்கவாசகர், தனது திருவாசகத்தில் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார்.

Read More
வில்லியநல்லூர் காளீஸ்வரர் கோவில்

வில்லியநல்லூர் காளீஸ்வரர் கோவில்

நான்கு முகங்கள் கொண்ட க்ருதயுக சண்டிகேஸ்வரர்

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பந்தநல்லூர் பேருந்து சாலையில், குத்தாலத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வில்லியநல்லூர் தலத்தில் அமைந்துள்ளது காளீஸ்வரர் கோவில். இத்தலத்தில் சண்டிகேஸ்வரர் வித்தியாசமான விதத்தில் எழுந்தருளியிருக்கிறார். வழக்கமாக கருவறைச் சுற்றில் இறைவனின் கோமுகத்திற்கு அருகே இருக்கும் சண்டிகேஸ்வரர், இங்கே பிரம்மஸ்தானத்தில், அம்பாளின் கோமுகத்தினருகே அமர்ந்து இருப்பது ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.

சண்டிகேஸ்வரருக்கு, க்ருதயுகத்தில் நான்கு முகம்; திரேதாயுகத்தில் மூன்று முகம்; துவாபரயுகத்தில் இரண்டு; இப்போது நடக்கும் கலியுகத்தில் ஒரு முகம் இருக்கும் என்கின்றன சிவாகம புராணங்கள். இங்கே இருப்பவர் க்ருதயுக சண்டிகேஸ்வரர். அதாவது நான்கு முகங்கள் கொண்டவராக இருக்கிறார். இந்த அமைப்பே இக்கோயிலின் பழமைக்குச் சான்றாக விளங்குகின்றது. க்ருதயுக சண்டேஸ்வரர் என்பதால் இவரை வழிபடுவது நம் நான்கு தலைமுறைப் பாவங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை.

Read More
திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருந்துதேவன்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில்

அம்பிகை நண்டு வடிவத்தில் வழிபட்ட தலம்

கும்பகோணம் - பூம்புகார் சாலையில், கும்ப கோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருந்து தேவன்குடி.முற்காலத்தில் ஈசனின் சாபத்தினால் நண்டாக மாறிய அம்பிகை, திருந்து தேவன்குடித் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.இந்த நிலையில், தான் வளர்த்து வந்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு, இந்திரன்கோபம் கொண்டான் . தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.நண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டது.. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம். கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

Read More
திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவில்

திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவில்

அபூர்வமான அர்த்தநாரீஸ்வர கோலம்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலமான திருவேதிகுடியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில். மூலவர் வேதபுரீஸ்வரர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.

Read More
இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவில்

இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவில்

கல்வியில் முதன்மை பெறச் செய்யும் தேவாரத்தலம்

கும்பகோணத்திலிருந்து ஐந்து கிமீ தொலைவில் உள்ள தேவாரத்தலம், இன்னம்பூர். இங்குள்ள சிவனின் திரு நாமம் எழுத்தறிநாதர். சரிவரப் பேச முடியாதவர்கள், பாடுவதற்கு நல்ல குரல் வளம் வேண்டுவோர் இத்தலத்திர்கு வந்து இறைவன் எழுத்தறிநாதரை தரிசனம் செய்கிறார்கள். கோயில் அர்ச்சகர் தேனை பூவால் தொட்டு நாக்கில் தடவுகிறார். தேன் நாம் கொண்டு செல்ல வேண்டும். எழுத்தறிநாதரின் அருளால் நலம் அடைந்து, நல்ல குரல் வளம் பேச்சு வளம் பெற்றுச் செல்கின்றனர்.தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் அகத்திய முனிவர். அவருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Read More