திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்
அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறும் தனிச்சிறப்பு
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூர் நகரத்தில், புகழ்பெற்ற திவ்ய தேசமான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது தீர்த்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுர சுந்தரி அம்மன்.
கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் சாந்த சொரூபிணியாக நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனுக்கு வேறு எந்த அம்பிகைக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது சிவபெருமானுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. இது இத்தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனின் தனி சிறப்பாகும்.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
எப்பொழுதும் மூடியே இருக்கும் குடைவரை காளி சன்னிதி
காளியின் உருவமாக விளங்கும் சூலம்
கண்ணாடி மூலம் சூலத்தை வணங்கும் நடைமுறை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி.
இக்கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளளது, குடைவரை காளி சன்னிதி. இந்த சன்னிதியின் நுழைவுவாசல் எப்பொழுதும் மூடியே இருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
ஒரு சமயம் சதுர கள்ளி வனத்தில் கார்கவ முனிவர் தியானத்தில் இருந்தார். அப்போது ஒரு அரக்கன் பசியில் உணவு தேடித் திரிந்தான். புலி உருவத்தில் முனிவரை கொல்ல முயன்றான். அதைக்கண்ட முனிவர், 'உனக்கு புலி உருவமே நிலைக்கட்டும்' என்று சாபமிட்டார். பசியின் காரணமாக இப்படிச் செய்து விட்டதாகவும், தனக்கு விமோசனம் அருளும்படியும் அசுரன் முனிவரை வேண்டினான். அதற்கு முனிவர், 'வஜ்ரவனம் என்ற திருப்புனவாசல் பகுதிக்கு பார்வதியும் சிவனும் வரும்போது, பார்வதியின் பார்வை பட்டு உன்னுடைய சாபம் நீங்கும்' என்றார்.
தன் சாப விமோசனத்திற்காக அந்தப் பகுதியில் புலியாகவே சுற்றி வந்தான், அசுரன். ஒரு முறை பார்வதி அந்த வனத்திற்கு வந்தார். அவர் மீது புலியாக இருந்த அசுரன் பாய்ந்தான். அப்போது காளியாக உக்கிர வடிவத்திற்கு மாறிய தேவியின் பார்வை பட்டு,அந்த அசுரனுக்கு சுய உருவம் கிடைத்தது. மேலும் இத்தல அம்பாளின் முன்பு நந்தியாக இருக்கும் வரமும் கிடைத்தது.
தனது உடலில் பாதி உருவத்தை கொடுத்த சிவபெருமானிடம், உக்கிரமான காளி உருவத்தை காட்டியதற்காக அம்பாள் மன்னிப்பு கேட்டாள். ஆனால் சிவபெருமான், 'உனக்கு இந்த உருவம் நன்றாகத்தான் உள்ளது. இருப்பினும், இந்த உருவத்தை உனக்கு துணையாக குடை வரையில் வைத்துக்கொள். சுயரூபத்தோடு வந்து என்னுடன் இரு' என்று கூறியதையடுத்து, அம்பாள் சுய உருவதை அடைந்தார். ஒரு உருவத்தில் இருந்து மறு உருவம் எடுத்ததால், காளியின் உருவ வழிபாடாக சூலம் உள்ளது. அம்பாளின் சன்னிதிக்கு எதிரே இந்த குடைவரை காளி சன்னிதி உள்ளது. காளியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், இந்த சன்னிதியின் நுழைவு வாசல் கதவு மூடியே இருக்கும்.இதனால் அந்த சூலத்திற்கு எதிராக ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துதான் சூலத்தை வணங்க வேண்டும்.
தென்குடி திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில்
மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை
அம்பிகை சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் இருக்கும் அரிய வடிவமைப்பு
கிரக தோஷங்களை நீக்கும் அம்பிகை
தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் தென்குடி திட்டை . இறைவன் திருநாமம் வசிஸ்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.
அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில் வசிஷ்டேஸ்வரருக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் உள்ளார் . பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால் தான், இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார்.மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்றும், சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும் அழைக்கிறார்கள்.
கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், 'உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’' எனக் கூறினார். அதைக் கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, 'எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு' என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து 'இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்' என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
இந்த அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி அம்மன் சன்னதி எதிரில் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டிருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாது. பக்தர்கள் தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை வடக்குவீதி ஆதி காமாட்சியம்மன் கோவில்
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த ஆதி காமாட்சியம்மன்
காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி, அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ள வடக்கு வீதியில் அமைந்திருக்கின்றது ஆதி காமாட்சி அம்மன் கோவில். இத்தலம் அருணாசலேஸ்வரர் கோவிலுடன் இணைந்த கோவிலாகும்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த, புராதன வரலாற்று சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஸ்ரீ காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் காட்சியளிப்பது உலகில் வேறெங்கும் காண இயலாத அபூர்வமான திருக்கோலமாகும். ஸ்ரீலலிதா ஸகஸ்ர நாமத்தில் நிறைவாக கூறியுள்ளது போல, ஸ்ரீசிவா சிவசக்தி ஐக்கிய ரூபினி லலிதாம்பிகா என்ற வாக்கியப்படி, சக்திக்குள் சிவம் ஒடுங்கி, சிவ ஜோதியுள் சக்தி இரண்டறக் கலந்தது இங்குதான். ஆகையால் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய முக்கிய பீடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை மூடிய பாவம் போக்க, பார்வதி தேவி காஞ்சி மாநகரில் காமாட்சியாக அவதரித்தார். காஞ்சிபுரத்தில் பார்வதி தேவி கம்பை நதிக்கரையில் மணலில் லிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படிச் செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி, லிங்கத்தை அம்பிகை தழுவிக் கட்டிக்கொண்டார். அம்பிகையின் இந்த செயலால் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியின் பாவத்தை போக்கி அருளினார். அப்பொழுது பார்வதி தேவி 'உம்மை எப்பொழுதும் பிரியாமலிருக்க உமது மேனியில் இடப்பாகம் அளிக்க வேண்டும்' என சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் 'திருவண்ணாமலை சென்று என்னை நோக்கி தவமிரு. அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்' எனக் கூறி மறைந்தார். திருவண்ணாமலைக்கு வரும் வழியில் காமாட்சி அம்மையார், தவம் செய்ய ஏதுவாக மைந்தனாகிய முருகன், தன் தாய்க்காக வாழை இலை கொண்டு பந்தலமைத்தார். சேயாறு எனப்படும் செய்யாறை உருவாக்கினார். (இன்று கூட அந்த ஊர் வாழைப்பந்தல்” என்றழைக்கப்படுகிறது) பின்னர் திருவண்ணாமலை வந்தடைந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் நுழைந்து. கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை (பவழக்குன்று) வந்தடைந்தர். கௌதம மகரிஷியின் ஆலோசனையின்படி மலைக்கு நேர்கிழக்கு திசையில் பர்ணசாலை அமைத்து தவமியற்றினார்.
அன்னையின் தவத்தை கலைக்க முயன்ற மகிஷாசூரனை எதிர்த்து சப்தமாதர்களும், அஷ்டபைரவர்களும், காளியும், துந்துமியும், அருனைநாயகியும் கடும்போர்புரிந்தனர். ஆனாலும் எருமைதலை கொண்ட மகிஷாசூரனை அழிக்க இயலவில்லை. பின்னர் மகாசக்தி துர்க்கையம்மன், மகிடன் தலையை தனது வாளால் வெட்டி வீழ்த்தி, தனது காலால் அவனது தலையை மிதித்த பின்னர் மகிடன் உயிர் பிரிந்தது. உயிர் பிரிந்து தலையற்று கிடந்த மகிஷாசூரனுடைய அறுபட்ட கழுத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கொடிய அரக்கணுடைய கண்டத்தில் ஒரு சிவலிங்கமா என ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்து காமாட்சி தேவியிடம் கொடுத்தாள் துர்க்கை. தேவியாரின் திருக்கரத்திலேயே ஓட்டிக்கொண்டுவிட்டது அந்த லிங்கம். தன் கையோடு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டதற்கான காரணம் என்னவென்று கௌதம மகரிஷியிடம் கேட்டார் காமாட்சி தேவியார். பல காலமாக மகிஷாசூரனுடைய கண்டத்தில் சிவலிங்கம் இருந்தபடியாலும், அவன் சிவகடாட்சபதவியை அடைந்தவன் என்பதாலும் அவனை கொன்ற இந்த பாவம் நிகழ்ந்தது.
பாவம் தீர நவதீர்த்தங்களில் நீராட்சி சிவபூஜை செய்ய வேண்டு என்று விவரித்தார் கௌதமர். துர்க்கையால் உருவாக்கப்பட்ட கட்க தீர்த்தத்தில் நீராடிய பின்னர் கையில் ஒட்டியிருந்த சிவலிங்கம் விடுபட்டது. அதனை கரை மீது பிரதிஷ்டை செய்து பாபவிநாசகர் என்று பெயரிட்டு பூஜித்து வந்தார்.பின்னர் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும்நன்நாளில் மலைமேல் ஓரு பிரகாசம் உண்டாகி 'பெண்ணே இம்மலையை இடமிருந்து வலமாக சுற்றி நடந்து வா' என்று சொல்லி அக்கணமே மறைந்தது. அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்தபோது சிவபெருமான். பார்வதியை அழைத்து தனது மேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரிஸ்வரராக ஜோதி ரூபமாக காட்சியளித்தார்.
இன்று கூட கார்த்திகை தீபத்திருநாளில் காமிக, ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்நாளில் சரியாக மாலை 6-00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் எழுந்தருளிய பின்னரே மலைமீது தீபஜோதி ரூபமாக காட்சி அளிக்கின்றார். அகிலமே போற்றும் கார்த்திகை தீபப்பெருவிழா தோன்ற காரணமாகஅமைந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது, இந்த வடக்குவீதி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தான் என்று ஸ்காந்தபுராணம் மற்றும் அருணாச்சலபுராண நூல்கள் சான்றளிக்கின்றன.
இந்த அம்மனை கணவனோடு கருத்தொற்றுமை வேண்டுகிற பெண்கள், கணவனது நலம் மேம்பட விரும்பும் பெண்கள் மற்றும் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இத்தலத்திற்கு வந்து தொடர்ந்து 5 வாரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
திருக்கோழம்பியம் கோழம்ப நாதர் கோவில்
அம்பிகை பசுவாக அவதரித்து தவம் செய்த தேவாரத் தலம்
சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்த தலம்
மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. (திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருக்கோழம்பியம். இறைவன் திருநாமம் கோழம்ப நாதர், கோகிலேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.
அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க, பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில், இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்து இருக்கின்றது. இத்தலத்து சிவலிங்கத் திருமேனி நீண்ட பாணத்தை உடையதாக இருக்கின்றது. பிரம்மனுக்காக பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சாப விமோசனம் பெற்ற தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, கயா போன்ற புண்ணிய தலங்களுக்கு ஈடான தலம் இது.
அம்பிகை சௌந்தர்ய நாயகி 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கிறாள். திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால், சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவபெருமானை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது. அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம். தமிழில் 'குளம்பு' என்றால் 'கொழுமம்' என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு 'கோழம்பம்' என்றும், இறைவனுக்கு 'கோழம்பநாதர்' என்றும் பெயர் ஆயிற்று.
இக்கோவிலில் 27 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'வ்யதிபாதயோக' பூஜை ஹோமங்களில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் சீயாத்தமங்கை. இத்தலம் நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் 'கோயில் சீயாத்தமங்கை' என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநாமம் அயவந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் இருமலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி.
இக்கோவிலில் இறைவனும், அம்பிகையும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன், அம்பிகை சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் இரண்டு தனி கோவில்களாக விளங்குகின்றன.
அம்பிகை இருமலர்க்கண்ணம்மை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகை சிவ சொரூபியாக விளங்குகின்றாள். அம்பிகை சிவபெருமானைப் போல் ஜடாமுடி தரித்து, நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்சியளிக்கிறார். அம்பிகையின் ஜடாமுடியில் சூரிய, சந்திர பிறைகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் அம்பிகையின் கழுத்தில் ருத்ராட்ச மணி அலங்கரிக்கின்றது. அம்பிகையின் தனிக் கோவிலில், சிவபெருமானுக்கு அமைந்த பரிவார தெய்வங்கள் போல் நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் அமைந்திருப்பது இத்தலத்து அம்பிகையின் தனிச்சிறப்பாகும்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
சிவகாமசுந்தரி அம்பிகை ஐப்பசி பூர உற்சவம்
நடராஜரிடம் ஆசீர்வாதமும், பட்டு வஸ்திரமும் பெறும் சிவகாமசுந்தரி அம்பிகை
உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெற வாழ நடத்தப்படும் பூர சலங்கை உற்சவம்
பொதுவாக, அம்பிகை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளாகத் தனித்தனியே வெவ்வேறு தலங்களில் காட்சி தருவாள். சிதம்பரம் தலத்தில், இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மகா சக்தியாக சிவகாமசுந்தரி அம்மன் வடிவத்தில் அருள்பாலிக்கிறாள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்பிகைக்காக நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஐப்பசி பூரம் உற்சவம் ஆகும். பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த ஐப்பசி பூர திருவிழாவில் அம்பிகையை குழந்தையாக பாவித்து, பின்னர் பருவமடைந்த பெண்ணிற்கான சடங்குகள் செய்வித்து, திருவிழாவின் இறுதியாக அம்பிகைக்கு இறைவனுடன் திருக்கல்யாணம் நடைபெறும். திருவிழாவின் முதல் எட்டு நாட்களில் அம்பிகை பலவித வாகனங்களிலும், ஒன்பதாம் நாள் தேரிலும் ஏறி வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள், ஐப்பசி பூரத்தன்று அம்பிகைக்கு பருவம் அடைந்ததற்கான சடங்குகள் நடத்தப்படும். அன்று காலையில் சிவகாமசுந்தரி அம்பிகையின் சன்னதியில், உற்சவ மூர்த்தியான சிவகாமசுந்தரி அம்மனுக்கு மஹாபிஷேகம் நடைபெறும். பின்னர் சிவகாமசுந்தரி அம்பிகை சர்வ அலங்காரத்துடன் நடராஜப் பெருமான் சன்னதிக்கு எழுந்தருளி அங்கு நடராஜரிடமிருந்து முதன் முதலில் பட்டு வஸ்திரங்களை யும், திருவருளையும் பெறுவார். இந்த நிகழ்ச்சி பட்டு வாங்கும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எம்பெருமான் நடராஜரிடம் இருந்து பட்டு வஸ்திரங்களை பெற்றுக் கொண்ட பின்னர் அம்பிகை நான்கு பிரகாரங்களிலும், வலம் வந்து மக்கள் அளிக்கும் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக, சீராக ஏற்றுக் கொள்வார்.
ஐப்பசி பூரத்தன்று மாலை 7:00 மணி அளவில் அம்பிகைக்கு பூரச் சலங்கை எனும் பருவமடைந்த பெண்ணிற்கு நடத்தப்படும் சடங்குகள் செய்யப்படும். அப்போது அம்மனின் மடியில் நெல், அவல் ,முளைப்பயிறு, அரிசி ஆகியவற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டி விடுவார்கள். உலக உயிர்கள் யாவும் அன்னையின் மடியில் முளைப்பயறாக உருவாவதைக் குறிப்பிடும் வகையில் அம்பாள் மடியில் இவற்றை வைத்து கட்டுவார்கள். பக்தர்களுக்கு இந்த முறைப் பயறு மற்றும் நெல்,அரிசி,அவல் பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு முளைப்பயறு பிரசாதம் வாங்கி உண்ண, விரைவில் மகப்பேறு உண்டாகும். மேலும் திருமணம் தடை நீங்கி திருமணம் கைகூடும். உலகத்தில் உள்ள 72,000 கோடி ஜீவ ராசிகளும் விவசாயம் செழித்து நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்பது தான் இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாகும்.
மறுநாள் ஐப்பசி உத்திரத்தன்று, காலை அன்னை சிவானந்தநாயகி அம்மன் தபசுக் காட்சி நடைபெறும். மாலையில் கீழவீதி, தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் வைபவமும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கட்டி சிறப்பு ஹோமம், திருமாங்கல்ய தாரணம் ஆகியனவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தெய்வத் தம்பதியின் ஆசி வேண்டி வணங்குவர்.
திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில்
திருவாலங்காடு சிவபெருமானை வழிபடும் முன் வணங்க வேண்டிய பத்ரகாளி அம்மன்
தேவியின் 51 சக்தி பீடங்களில் காளி பீடமாக இருக்கும் தலம்
திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான ரத்தின சபை அமைந்திருக்கும் திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தந்திர சூடாமணி நூல் கூறும் தேவியின் 51 சக்தி பீடங்களில், இது காளி பீடம் ஆகும்.
மிகச்சிறிய இக்கோவிலின் கருவறையில், பத்ரகாளி அம்மன் சாந்த சொரூபியாக எட்டு திருக்கரங்களுடன், முழங்கால்களில் கால்களை மடக்கி நடனமாடும் நிலையில் உள்ளார். பாதங்களை தரையில் ஊன்றி, கணுக்காலில் நடனக் கலைஞரின் மணிகளுடன் காட்சி அளிக்கிறாள்.
இந்த பத்ரகாளி அம்மன் தனி கோவில் கொண்டு எழுந்தருளியதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
இடுப்பில் குழந்தையை தாங்கிய வடிவில் உள்ள அம்பிகையின் அரிய தோற்றம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி 'அம்மா' என்று அழைத்தார். அது கேட்டுப் பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து வந்தார். பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் 'கூப்பிட்டான் குளம்' என்பர். அது இன்று 'கேட்டான் குளம்' என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகர், ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
வல்லம் ஏகௌரியம்மன் கோவில்
இரண்டு திருமுகங்கள் கொண்ட அபூர்வ அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு இரண்டு திருமுகங்கள் அமைந்திருப்பது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது.
போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.
உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம் தரும் நடைமுறை
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள். வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் இத்தலம் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.
கோவை கோனியம்மன் கோவில்
தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்
கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோனியம்மன் கோவில். இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இவ்வூர் மக்கள் இந்த அம்மனை என்று 'கோவையின் அரசி' எனவும் அன்புடன் அழைக்கின்றனர்.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும். கோனியம்மனுக்கு வலப்புறத்தில் நவக்கிரக சந்நிதியில், தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராக வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
நவக்கிரக சன்னதிகளில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார். இங்குள்ள சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி, சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருக்க, அவரது இரு மனைவிகள் உஷா, பிரத்யுஷா உடன் இருக்கின்றனர். சந்திரபகவான், அவரது மனைவிகள் கிருத்திகா, ரோகிணி ஆகியோருடனும், மற்ற நவக்கிரகங்கள் செவ்வாய் பகவான் - சக்திதேவி, புதன் பகவான் - ஞானதேவி, குருபகவான் - தாராதேவி, சுக்கிர பகவான் - சுகீர்த்தி, சனி பகவான் -நீலாதேவி, ராகுபகவான் - சிம்ஹி , கேதுபகவான் - சித்திரலேகா ஆகியோர் தம்பதி சமேதராக காட்சி அளிக்கின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வணங்குவதால், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
எழுமேடு பச்சைவாழியம்மன் கோவில்
பச்சை நிற சேலை மட்டுமே அணியும் அம்மன்
சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு செய்யப்படும் பூஜை
கடலூர்-பண்ருட்டி சாலையில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது எழுமேடு கிராமம். இந்த கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மனுக்கு எப்பொழுதும் பச்சை நிற சேலை மட்டுமே அணிவிக்கிறார்கள். மேலும் காணிக்கையாக பச்சை நிற சேலை மட்டுமே வழங்குகிறார்கள். இந்த அம்மன் இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்குவதால், பூஜை செய்யும்போது, அம்மனுக்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள். இப்படி இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை நிற புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதத்தின் சிறப்பு
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பார்கள். கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசைவரை, இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே.
கேதார கௌரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு, அதன் பலனாக சிவபெருமானும் பார்வதி தேவியும், அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.
ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காக தொடங்கியதே கேதாரகௌரி விரதமாகும். தீபாவளி திருநாளில், கேதார கெளரி நோன்பு கொண்ட நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருச்செங்கோடு கோவில் அர்த்தநாரீஸ்வரர் திருமேனி, வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவுருவம் ஆகும். இந்த திருமேனியின் இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது. தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.
தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும். தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில்
பக்தர்களின் உயிர்நாடியாக இருக்கும் அம்மன்
தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது, நாடியம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும், தன் பக்தர்களின் உயிர்நாடியாக இருப்பதாதாலும் அவளை இப்பெயரிட்டு அழைக் கிறார்கள். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மம் உள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் பட்டு மழவராயர் கோட்டை. அது நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. மழவராயர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட, அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவள் ஓடிச் சென்று ஒரு புதரில் மறைந்து விட்டாள். புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே ஓர் அழகான அம்மன் சிலை இருந்தது. பட்டு மழவராயர், தங்களை நாடி வந்த அம்மனுக்கு அங்கு கோவிலை எழுப்பினார்.இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு 'நாடி' என்கிற பெயர் சூட்டப்படுகிறது. பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.
மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமி
மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும், பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிலிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் மகாலட்சுமியை பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி, லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை,திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால், திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு, அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
பனச்சிகாடு சரஸ்வதி கோவில்
பனச்சிகாடு சரஸ்வதி தேவி
30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளுக்கு இடையே எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி
நவராத்திரியில் சரஸ்வதி தேவிக்கு குழந்தை வடிவ அலங்காரம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையில், கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிக் காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சரஸ்வதி கோவில். கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். இக்கோவில் தட்சிண மூகாம்பிகை கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி சுயம்புவாக தோன்றியவர். இந்த கோவிலில், சரஸ்வதி தேவிக்கு என்று தனி கருவறை கிடையாது. 30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளால் மூடப்பட்ட ஒரு சிறிய செவ்வக குளம் உள்ளது. சரஸ்வதி தேவியின் சிலை கொடிகளின் தோப்பிற்குள் அமைந்துள்ளது. குளத்தில் பாயும் புனித நீர் சிலையின் கால்களைக் கழுவுகிறது. இந்த நீரானது எப்போதும் வறண்டு போகாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ‘நவராத்திரி இசை’ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காட்டமியில், சரசுவதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விசயதசமியன்று காலையில், 'ஏசுதிரினிருத்து' அல்லது 'வித்யாரம்ப விழா' அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்கு அல்லது மணல் மேல், தங்க மோதிரத்துடன் 'அரிசிரீ' என்ற வார்த்தையை எழுதி, தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு பஞ்சாமிர்தம், பால்பாயாசம் செய்து படைத்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கும் இங்கு பிரார்த்திக்கிறார்கள். பாட்டு, இசை, நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக் கொள்ள தொடங்கப்படுகின்றன. இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
சரஸ்வதி சூக்தம் விதி தவறாமல் ஜபம் செய்து உருவாக்கிய சுத்தமான நெய், இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. புத்திக்கும், படிப்பிற்கும் இந்த பிரசாத நெய், மிகவும் உன்னதமானது. நவராத்திரியின்போது, சரஸ்வதியை குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
தில்லை காளியம்மன் கோவில்
தில்லை காளியம்மன்
வெள்ளை புடவை மட்டுமே அணியும் காளியம்மன்
சிதம்பர நடராஜர் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தில்லை காளி கோவில். தமிழகத்தில் இருக்கும் அஷ்ட காளி கோவில்களில் தில்லை காளி கோவிலும் ஒன்றாகும். சிதம்பரத்தின் காவல் தெய்வமாக தில்லை காளியம்மனே திகழ்கிறார். சிவபெருமானை பிரிந்து, காளி தில்லை நகரத்தின் எல்லைக்குச் சென்று அமர்ந்ததன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்தது. அப்போது பார்வதி தேவி, 'சக்தியில்லையேல் சிவனில்லை' என வாதாட, கோபமுற்ற சிவபெருமான் உக்கிர காளியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார். இதனால் சாப விமோசனம் கேட்ட பார்வதி தேவியிடம், 'அசுரர்களை அழிக்கவே உன்னை உக்கிரகாளியாக மாற்றினேன். காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். உன் கடமைகள் முடிந்த பிறகு தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து என்னை நோக்கித் தவம் புரிவாயாக. தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் வந்து இணைவாய்' என்று உரைத்தார்.
காலங்கள் ஓடின. காளி தேவி அரக்கர்களை போரில் அழித்து வெற்றி பெற்றார். சிவபெருமானை அடையும் பொருட்டு கடுமையாக தவம் புரிந்தார். அதே நேரத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட காளி, 'இத்தனை காலமாக நான் தவம் புரிகிறேன். எனக்கு முதலில் காட்சி தராமல் உங்கள் பக்தர்களுக்குக் காட்சி தருவது என்ன நியாயம்? நானும் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறேன். யார் முதலில் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியுற்றவர்கள். அவர்கள் ஊர் எல்லையில் போய் அமர வேண்டும் என்று கூறி ஆடத் தொடங்கினர். தாண்டவத்தின்போது சிவபெருமானின் குண்டலம் கீழே விழ, அதை அவர் தனது கால்களில் எடுத்து தனது காதுகளில் மாட்டி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்.
பெண் என்பதால் சக்தியால் இந்த நடனத்தை ஆட முடியவில்லை. அதனால் தோல்வியுற்று, உக்கிரமாக ஊர் எல்லையில் போய் அமர்ந்தார். அப்போது அனைத்து தேவர்களும் திருமாலும், பிரம்மாவும் அவரை சாந்தம் அடையும்படி கேட்டுக்கொண்டனர். பிரம்மா அவரை நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகத்துடன் உருமாறிக்கொள்ள வேண்டினார். அதைப்போலவே காளி பிரம்மசாமுண்டேஸ்வரியாக பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஒரு சன்னிதியில் உக்கிரமாக எட்டு கைகளோடு காட்சியளிக்கிறார். இன்னொரு சன்னிதியில் சாந்தமாக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார்.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடவை மட்டுமே அணிவிக்கப்படுகிறது. தில்லை காளியன்னைக்கு தினமும் நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.உடம்பு முழுவதும் குங்குமம் காப்பிடுதல் செய்யப்படுகிறது. கண்கள் மட்டும் கருமை தீட்டப்பட்டுக் காட்சியளிக்கிறார். இந்த அம்மனை வழிபட்டால், நோய் நொடி தீரும், பிள்ளை வரம் கிட்டும், திருமணத்தடை விலகும். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள், கடன் தொல்லையிலிருந்து மீள்வார்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை அம்மன்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
சரஸ்வதியுடனும், லட்சுமி தேவியுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்
திருப்புவனம் மின்னனையாள்
மின்னல் வேகத்தில் பக்தர்களுக்கு அருளும் அம்பிகை
மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் இதுவாகும். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து அம்பிகைக்கு ஸ்ரீ சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகிய மீனாள் என பல பெயர்கள் உண்டு. இந்த அம்பிகையின் சன்னதி, இறைவன் சன்னதிக்கு இணையாக, இறைவனுக்கு வலது புறம் அமைந்துள்ளது. அம்பாள் சன்னதிக்கு, கோவிலுக்கு வெளிப்பகுதியிலிருந்தே நேரடியாக வருவதற்கு வழியுண்டு. கருவறையில் அம்பிகை மின்னனையாள் நின்ற கோலத்தில் அபயமும், வரதமும் காட்டி நின்ற கோலத்தில் அருள்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள். தனது திருநாமத்திற்கு ஏற்ப, இத்தலத்து அம்பிகை மின்னனையாள், மின்னலைப் போல ஒரு கணத்தில் கேட்பவர்க்கு அருள் வழங்குகின்றாள்.
திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில்
திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கோடீசுவரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன்.
ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.
அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப் போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.
இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்.