இரும்பை மாகாளேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

இரும்பை மாகாளேசுவரர் கோவில்

இசைக்கலையில் சிறந்து விளங்க அம்பிகைக்கு தேன் அபிஷேகம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்தலத்து அம்பிகை மதுரசுந்தர நாயகி தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இங்கு கடுவெளி சித்தர் என்னும் சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் அம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவபெருமானிடம் சொல்வாளாம். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு 'குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவில்

அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிபடும் வித்தியாசமான நடைமுறை

காரைக்குடி நகரின் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோவில். கருவறையில் முத்து மாரியம்மன் நின்ற கோலத்தில் கருணைப் பார்வையும்,கனிவு சிரிப்புமாகக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் . இக்கோவிலில் அம்மனுக்கு தக்காளியால் அர்ச்சனை செய்வதும், தக்காளி மாலை சாத்தியும் வழிபாடு செய்வது வேறு எந்த அம்மன் தலத்திலும் இல்லாத நடைமுறையாகும்.

அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிப்பட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது தனி சிறப்பாகும்.

Read More
முட்டம் நாகேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

முட்டம் நாகேசுவரர் கோவில்

உயர்ந்த பேரழகுடன் கூடிய, நுணுக்கமான வேலைப்பாடு உள்ள அம்பிகையின் ஆபூர்வ சிற்பம்

சிற்பத்தில் தெரியும் திருமாங்கல்ய முடிச்சு மற்றும் இடையில் அணிந்திருக்கும் ஆடையின் முடிச்சு

16 சிறு துவாரங்கள் உள்ள மேகலை என்ற நுணுக்கமான ஆபரணம்

கோயம்புத்தூர் மாநகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது முட்டம் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் முத்துவாளி அம்மன். முத்துக்களால் அமைந்த காதணி அணிந்ததால் இப்பெயர் பெற்றார். 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவில்

அம்பிகை முத்து வாளியம்மன் சிற்ப அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். அம்மனின் சிற்பத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். உயர்ந்த பேரழகுடன் கூடிய இந்த அம்மனின் சிற்பத்தை போன்றதொரு சிற்பம் உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. மதுரை மீனாட்சியம்மன் சிலையையும், இச்சிலையையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது.

நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அம்பிகை, தனது வலது கையில் நீலோத்பல மலரை ஏந்தி உள்ளார். முன்கையில் பரியகம் எனும் ஆபரணம் உள்ளது. இருதோள்களிலும்அடுக்கடுக்காக அரும்புகள் பொருந்திய கடகங்கள் உள்ளன. அவற்றின் நடுவே வட்டமான மலர்மொட்டுக்கள் உள்ளன. அம்பிகையின் கை விரல்களில் உள்ள மோதிரம் மற்றும் ரேகைகளைக் கூட காண முடிகிறது. மூக்கில் மூக்குத்தி அணியவும், காதில் கம்மல் அணியவும் சிறு துவாரங்கள் உள்ளது. மணிக்கழுத்தில் சவடியும் காறைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இவைகளின் நடுவே ஒரு சிறு துவாரம் உள்ளது. இதில் அணிகலனை மாட்டலாம். கழுத்தின் பின்புறம் திருமாங்கல்யத்தின் முடிச்சுகள் சிற்பத்திலேயே செதுக்கப்பட்டுள்ளது மிகவும் அபூர்வமான வேலைப் பாடாகும். தலையில் உள்ள முடி 9 அடுக்குகளாக பூவேலைப்பாடுகளுடன் பொருந்தியுள்ளது. அம்பிகையின் கூந்தலானது பின்னலிட்ட முழு சடையாக இல்லாமல், தற்பொழுது நாகரிக பெண்கள் வைத்திருக்கும் குதிரைவால் சடையாகவும், அந்த சடையில் ரப்பர் பேண்ட் போன்ற முடிச்சு இருப்பதும் நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அமைப்பாகும்.

அம்பிகை திரிபுரை அம்சமானவர். ஆதலால் மணிவயிறும், மார்பும், பிடியளவு இடையுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகை இடையில் உடுத்தியிருக்கும் ஆடையின் முடிச்சும் பின்புறம் காணப்படுகிறது. இடுப்பில் மேகலை என்ற ஆபரணம் சிறப்புடன் விளங்குகின்றது. மேகலை இதழ் இதழாகத் தொங்குகின்றன. மேகலை மாட்டுவதற்கு 16 துவாரங்கள் உள்ளன. கற்சிலையில் துல்லியமாக சிறிய துவாரங்களை ஏற்படுத்துவது என்பது எளிதான காரியமில்லை. 16 கோவை உள்ள மேகலைக்கு கலாபம் எனப் பெயர். இவ்வணிகலனை அணிந்து, அம்பிகை ஒயிலாக கலாப மயில் போல் காட்சியளிக்கிறாள். மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியோடு விளங்கும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் தொழலாம். சுருங்கச் சொன்னால் இந்த அம்பிகையின் சிற்பமானது வேறெங்கும் காணக்கிடைக்காத ஆபூர்வ சிற்பம் ஆகும்.

பௌர்ணமி தினங்களில் அம்பிகைக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

Read More
பத்துகாணி காளிமலை பத்ரகாளி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பத்துகாணி காளிமலை பத்ரகாளி அம்மன் கோவில்

தென்னிந்தியாவின் வைஷ்ணவி தேவி கோவில் என்று போற்றப்படும் பத்ரகாளி அம்மன் கோவில்

மலையின் மீது பொங்கலிடும் தென்னிந்தியாவின் ஒரே புண்ணிய தலம்

கன்னியாகுமரி-கேரள எல்லையான பத்துகாணி அருகே, கன்னியாகுமரி மாவட்டத்தின் திருவட்டாறு தாலுகாவில், கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், உள்ள காளிமலையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தமான பத்ரகாளி அம்மன் கோவில். இக்கோவில் தென்னிந்தியாவின் வைஷ்ணவி தேவி கோவில் என்று போற்றப்படுகின்றது. மலை உச்சியில் இருக்கும் காளிதேவி கோயிலுக்கு ஜீப்பைத் தவிர எந்த வாகனமும் இந்த வழுக்கும் ரோட்டில் போகமுடியாது. நடந்து சென்றால் ஆறு கிலோமீட்டர் தூரம் ஆகும். இதில் இரண்டு கிலோமீட்டர் தூரம் காட்டு வழியாக செல்ல வேண்டும். இந்த மலை மிகவும் வசீகரமான இடம். மலையின் ஒரு பக்கம் கேரளாவின் அழகை மேலிருந்து பார்க்கலாம். மறுபக்கம் தமிழகத்தின் இயற்கை அழகைப் பார்க்கலாம்.

காளிமலையில் துர்காதேவி, தர்ம சாஸ்தா, நாகயட்சி, சப்த கன்னியர் போன்ற தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. குழந்தை பேறு கிடைக்காதவர்கள் குழந்தை கிடைப்பதற்காக இம்மலையில் வந்து நாகயட்சிக்கு பூஜை செய்து அருள் பெற்று செல்கின்றனர். சித்ரா பெளர்ணமிதான் இங்கு விசேஷம். அப்போது பல பெண்கள் பொங்கலிட்டு காளிதேவியை வழிபடுகிறார்கள். தென்னிந்தியாவில் மலையின் மீது பொங்கலிட்டு வழிபடும் ஒரே புண்ணிய தலம் காளிமலை ஆகும்.

அகத்திய முனிவருக்கு மும்மூர்த்திகள் காட்சி தந்த மலை இது. அவர் உருவாக்கிய தீர்த்தம் தான் காளி தீர்த்தம். இந்த காளி தீர்த்தம் கோடையிலும் வற்றாதது. மருத்துவ குணம் கொண்ட இந்த நீரை நோய் தீர்க்கும் மருந்தாக பக்தர்கள் வீடுகளில் பாதுகாத்து வருகிறார்கள்.

துர்காஷ்டமியின் போது கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி, புனித நீர் சுமந்து பாதயாத்திரை செல்வது வழக்கம்.

Read More
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திரிசூலம் திரிசூலநாதர் கோவில்

திருமண வரம் தரும் திரிபுரசுந்தரி

கல்வி, ஞானம், யோகம் அனைத்தும் அருளும் அம்பிகை

சென்னையில் விமானநிலையத்துக்கு அருகில் உள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது திரிசூலம் திரிசூலநாதர் கோவில். இக்கோவிலில் இரண்டு அம்பிகைகள் எழுந்தருளி உள்ளார்கள். திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை இருக்க மற்றொரு பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சந்நிதியில், தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறாள்.

கம்பீரமும் அழகுமாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்பிகை கரங்களில் அட்சமாலையையும், தாமரை மலரையும் ஏந்தியபடி இருக்கின்றாள். திரிபுரசுந்தரி அம்பிகையை வணங்கினால், கல்வி, ஞானம், யோகம் அனைத்தும் பெறலாம். சகல செல்வங்களையும் தந்தருள்வாள் இந்த அன்னை என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது தனிச்சிறப்பாகும். திருமணம் கைகூட வேண்டும், சந்தான பாக்கியம் கிடைக்கவேண்டும், கடனில் இருந்து மீளவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும் பிரார்த்தனை பலித்ததற்காகவும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்து, தரிசிக்கின்றனர்.

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் - புதுத்தாலி மாற்றிக் கொள்ளும் சுமங்கலிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்றாலும் 8, 9, 10 ஆம் நாட்களில் நடைபெறும் பட்டாபிஷேகம், திக்கு விஜயம், அதையடுத்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று மே 8-ந் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

திருமண மேடை ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட, பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். இந்தத் திருக்கல்யாணத்தைக் காண திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய்பெருமாள் ஆகியோர் புறப்பட்டு வருவார்கள். வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் தூவப்படும். அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது புது தாலிச்சரடு மாற்றிக் கொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இப்படி ஒரு நடைமுறை, வேறு எந்த கோவில் திருவிழாவிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.

திருக்கல்யாணம் முடிந்தபின் மீனாட்சி அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில், கோவிலின் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள், மதுரைக்கு திரண்டு வருவார்கள். மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

Read More
மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில்

சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாக காட்சி தரும் அபூர்வ அம்மன்

விளைச்சலுக்கு அருள் வழங்கும் தலம்

கும்பகோணம் -மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் (சூரியனார் கோவிலுக்கு அருகில்) உள்ளது மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள். ஊருக்கு வெளியில், வயல்வெளிகளுக்கு இடையே இந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனின் சிலை ஒரு தாமரை குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.அம்மனின் விருப்பத்திற்கு இணங்க, உரல், உலக்கை ஒலி இல்லாத இடத்தில், அதாவது ஊருக்கு வெளியில் அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த அம்மனின் திருவுருவம் பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாகும். அதனால்தான் இந்த அம்மனுக்கு ஏழுலோகநாயகி என்ற திருநாமம் ஏற்பட்டது.

கருவறையில், ஏழுலோகநாயகி அம்மன் உயரமான திருமேனியுடன் வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். எட்டுத் திருக்கரங்களிலும் சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தி, தலையை சற்று சாய்த்து, கண்களில் கருணை பொங்க தோற்றம் அளிக்கின்றாள்.

இக்கோவில் விளைச்சலுக்கு அருள் வழங்கும் ஒரு சிறப்புமிக்க தலமாகப் போற்றப்படுகிறது.

Read More
ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோவில்

அம்பிகை சுயம்வர பார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம்

திருமணத் தடை நீக்கும் பரிகார தலம்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆக்கூர். இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன்.

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்த போது, அதைக்கான தேவர்களும் முனிவர்களும் அங்கு கூடி இருந்தனர்.அதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனை சமன்படுத்த, அகத்தியனைத் தென்திசைக்குச் செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அகத்தியர் தான் தென்திசை நோக்கிச் செல்வதால், சிவ பார்வதி திருமணத்தைக் காண இயலாத வருத்தத்தை கொண்டிருந்தார். ஆனால், சிவபெருமான் தானே அவரைத் தேடி வந்து அகத்திய முனிவருக்கு, பல தலங்களில் திருமணக் கோலத்தில் காட்சி தருவதாக வாக்களித்தார். அப்படி சிவபெருமான், அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டிய தலங்களுள் இதுவும் ஒன்று.

இக்கோவிலில் சுவாமி சன்னதியின் வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி அமைந்து இருக்கிறது. அம்பாள் மணக்கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் திருமண தடை நீங்க ஒரு சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகின்றது. திருமணம் வேண்டி சுயம்வர பார்வதி ஹோமம் செய்தால் திருமணம் நிச்சயம். இது அன்னை பார்வதி ஈசனை அடைய செய்த வழிபாடு ஆகும். அம்பிகை நாள்தோறும் சுயம்வரபார்வதி மந்திரம் ஜபம் செய்த இடம் ஆக்கூர் ஆகும். சிவபெருமான் அம்பிகையை ஆட்கொண்ட மாதம் பங்குனியில் வரும் வசந்த நவராத்திரி காலம் ஆதலால், இன்றும் இக்கோவிலில் வசந்த நவராத்திரியில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது.

இக்கோவிலில் நடைபெறும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி சந்தான கோபாலகிருஷ்ண யாகம் செய்தல் சிறப்பு. மழலைச் செல்வத்திற்காக பௌர்ணமி தினத்தில் வெண்தாமரை பூவால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

Read More
அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அருப்புக்கோட்டை ஆயிரம் கண் மாரியம்மன் கோவில்

அம்மனின் கருவறை கதவு தானாகவே திறக்கும் அதிசய காட்சி

அருப்புக்கோட்டை நகரின் மேற்குப்பகுதியான பாவடித்தோப்பு என்னுமிடத்தில் அமைந்துள்ளது ஆயிரம் கண் மாரியம்மன் கோவில். 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது கோவில். கோவிலின் பின்பக்கம் பிரம்மாண்டமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதனாலேயே இந்த அம்மனின் திருநாமம் அருள்மிகு தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் என வழங்கப்படுகிறது. கருவறையில் நின்ற கோலத்தில் சாந்த சொரூபியாக திரிசூலம் ஏந்தியவண்ணம் அம்பிகை மாரியம்மன் காட்சி அளிக்கிறாள்.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும் பொங்கல் விழா இந்த வட்டார பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பொங்கல் விழா பன்னிரெண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. தினமும் உற்சவர் புறப்பாடாகி வீதியுலா எழுந்தருளும் வைபவமும் நடைபெறும். எட்டாம் திருவிழாவை ஒட்டி அன்று மாலையில் கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கன பெண்கள் கலந்துகொள்வர்.

கதவு திறக்கும் நிகழ்வைப் பொறுத்து, பொங்கல் அன்று இரவு சரியாக 12:00 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு அதன் பின் கோவில் முழுவதும் தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெறும். ஈரம் காய்ந்த பின் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கிழக்கு, மேற்கு , தெற்கு , வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின் அபிஷேகம் நடைபெறும். கடைசியாக விபூதி அபிஷேகம் நடைபெறும். புது வஸ்திரம் உடுத்தி, அலங்காரங்களும் ஆபரணங்களும் சாத்தி அம்மனை எழில் கோலமாக்கி, நைவேத்திய படையலும் இட்டு, தூப தீபம் காட்டி முடித்து, அர்த்த மண்டபக் கதவை அடைத்துவிடுவார்கள்.

பிறகு தலைமை பூசாரி தேங்காய், வேப்பிலையுடன் வெளியே வந்து கருவறையை 3 சுற்று சுற்றுவார் . தலைமை பூசாரி கருவறையை சுற்றும் போது நிலை கதவில் உள்ள பல மணிகள் தானாக ஆடுவதை கவனித்து பார்த்தால் தெரியும் . பின் கருவறை படியில் கையில் உள்ள தேங்காயை வைத்து சிதறு காய் போடுவார் .

பக்தர்கள் சூழ, பக்தர்களின் கரவொலி மற்றும் மொத்த பக்தர்களும் புல்லரித்து பக்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருக்கும் போது நிலை வாசலில் தேங்காய் உடைபடும். அந்த சத்தம் கேட்ட அடுத்த வினாடி கோவிலின் மிகப் பெரிய இரண்டு கதவுகளும் தானாக திறக்கும்.

கோவிலுக்கு உள்ளே கருவறையிலும் , கதவு அருகிலும் யாரும் இருக்க மாட்டார்கள். இது இன்று நேற்றல்ல, கோவில் உருவான நாளில் இருந்து இந்த அதிசயம் நடந்து கொண்டு வருகிறது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் தாயை வணங்கி செல்வார்கள்.

அந்த வகையில் இந்த வருட பங்குனித் திருவிழாவின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு கடந்த 15.04.2025 அன்று நடை சாத்தப்பட்டு 16.04.2025 அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு நிகழ்ந்தது.

பூக்குழியில் வாடாத மல்லிகைச் சரங்கள்

ஒன்பதாம் திருவிழா அன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், அக்கினிச் சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கும். திருவிழாவின் ஒன்பதாம் நாள் மாலையில், கோவில் முன்பாக இரண்டு ஆள் உயரத்துக்கு, பல டன் விறகுகள் அடுக்கப்பட்டு தீ மூட்டப்படும். மேலும் மேலும் விறகுக் கட்டைகளைப் போட்டுக் கொண்டே இருப்பர். அம்மனுக்கு நேர்ந்துகொண்ட பக்தர்கள் இப்பூக்குழியில் இறங்கி நடப்பர். இதற்குமுன் மல்லிகைச் சரங்களைப் பூக்குழிக்கு நான்கு பக்கங்களிலும் எல்லைக்கோடாக போட்டுவைப்பர். அது தீ ஜூவாலையினால் வாடாமல், கருகாமல் புதுமலர்போலவே மணம் வீசியபடியிருக்கும். அம்மன் பூக்குழியை பார்வையிட்ட பின்னரே மல்லிகைச் சரங்கள் வாடும்.

நேர்த்திக் கடனாக செலுத்தப்படும் பொம்மைகள்

பக்தர்கள் பல்வேறு உருவ பொம்மைகளை வாங்கி, கோவிலை சுற்றி வந்து அம்மனுக்கு செலுத்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

Read More
சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சாக்கோட்டை (கலயநல்லூர்) அமிர்தகலசநாதர் கோவில்

வலக் கரத்தினை உச்சி மீது வைத்து ஒற்றை காலில் தவமிருக்கும் தபசு அம்மன்

மூன்று பௌர்ணமி தினங்களில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில், கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் சாக்கோட்டை . இறைவன் திருநாமம் அமிர்தகலசநாதர். இறைவியின் திருநாமம் அமிர்தவல்லி. அம்மன் அமிர்தவல்லி இறைவனை நோக்கி நின்று திரும்பியுள்ள காட்சி ஒரு தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தை குறித்து மூன்று புராண வரலாறுகள் உள்ளது. ஒன்று ஊழிக் காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியது அதனால் இத்தலம் கலயநல்லூர் என்று வழங்கபடுகிறது. இரண்டாவது பிரம்மன் இங்கு இறைவனை பூஜித்து பேறு பெற்றான். மூன்றாவது இறைவன் உமையம்மையின் தவத்தினை கண்டு அம்மைக்கு வரம் கொடுத்து திருமணம் புரிந்து கொண்டார்.

அம்பிகையின் தபசு கோலத்தை நாம் ஒரு தனி சன்னதியில் காணலாம். தவக்கோலத்தில் இருக்கும் இந்த தபசு அம்மன், வலது காலை மட்டும் தரையில் ஊன்றி இடக்காலை மடக்கி வலது தொடையில் ஏற்றி பொருந்திட மடக்கி பதிந்து பாதம் மேல் நோக்கிட நிற்கிறாள். வலக் கரத்தினை உச்சி மீது உள்ளங்கை கவிழ வைத்து இடக் கரத்தினை திருவயிற்றின் கீழ் அங்கை (உள்ளங்கை) மேல் நோக்க வைத்து நேராக நின்று தவமிருக்கின்றார். இந்த கோவிலில் இந்த சன்னதி தனி சிறப்பு கொண்டு விளங்குகிறது. தபசு அம்மனுக்கு, மூன்று பௌர்ணமி தினங்களில் 48 அகல் விளக்குகள் ஏற்றி, அர்ச்சனை செய்து வழி பட வேண்டும். இதனால் தாமதமாகும் திருமணங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். பல வெளியூர் பக்தர்கள் இங்கு வந்து திருமணத் தடை நீங்க வழிபடுகிறார்கள். மேலும் இக்கோவில் அறுபதாம் திருமணத்திற்கும் உகந்த தலம் ஆகும்.

Read More
நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

ஏழு அடி உயர திருமேனி உடைய அபூர்வ மகாலட்சுமி

மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும்,சங்க நிதியும், பதும நிதியும் இருக்கும் அரிய காட்சி

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் நீலாயதாக்ஷி அம்மன். நீலாயதாக்ஷி அம்மன், இத்தலத்தின் அரசியாக இருந்து பரிபாலனம் செய்வதால், அவருக்கே இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் இங்கு வீதிகளின் பெயர்கள் கூட நீலா வடக்கு வீதி, நீலா தெற்கு மடவிளாகம் என்று இருக்கின்றது. இதுபோல அம்மனின் பெயர் தாங்கிய வீதிகள் வேறு எந்த தலத்திலும் இல்லை.

இக்கோவிலில் இறைவன் சன்னதியின் வாயு மூலையில் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமி பல தனிச்சிறப்புகளை கொண்டவர். இத்தலத்து மகாலட்சுமியானவள் கருங்கல்லால் ஆன ஏழு அடி உயர திருமேனி உடையவள். இவ்வளவு பெரிய திருமேனி உடைய மகாலட்சுமியை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. பொதுவாக சிவாலயங்களில் மகாலட்சுமி இரு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், தனது இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையில், அர்தத ஆசன கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பு ஆகும். மேலும் மகாலட்சுமி தனித்தோ அல்லது இரு யானைகள் உடனிருக்க கஜலட்சுமி கோலத்தில் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் மகாலட்சுமியின் அருகில் இரண்டு ஐராவதங்களும் (நான்கு தந்தங்கள் உடைய தேவலோகத்து வெள்ளை யானை), சங்க நிதியும் பதும நிதியும் (இந்த இரு தெய்வ மகளிரிடமும் தான் குபேரன் தன் செல்வங்களைக் கொடுத்து வைத்துள்ளான்) உடன் இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.

Read More
தேனூர் நந்திகேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தேனூர் நந்திகேஸ்வரர் கோவில்

அம்பிகையின் பின்புறம் அமைந்த மிகப் பெரிய ஸ்ரீ சக்கரம்

வயிற்று நோய்களுக்கு அருமருந்தாகும் அம்பிகையின் அபிஷேக சந்தனம்

திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில்,திருச்சிராப்பள்ளியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தேனூர். இறைவன் திருநாமம் நந்திகேஸ்வரர். இறைவியின் திருநாமம் மகா சம்பத் கௌரி. திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் போற்றப்பட்ட தேவார வைப்பு தலம்.தேவலோக பசுவான காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் காமதேனூர் என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி தேனூர் என்றானது.

நந்திதேவர் தவமியற்றிய தலம் இது.தன்னை வழிபடும் அடியாரின் பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டு, தன் பக்தரைக் கவுரவிக்கும் குணம் கொண்டவர் சிவபெருமான். அந்த வகையில் தன்னை வழிபட்டுப் பேறுபெற்ற நந்தியின் நினைவைப் போற்றும் விதமாக, இத்தல ஈசன் நந்திகேஸ்வரர் என்ற திருப்பெயரோடு அருள் வழங்குகின்றார்.

இத்தலத்து அம்பிகை மகா சம்பத் கௌரி நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.மேல் இரு கரங்களில் மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடும் காணப்படுகிறாள். எழிலார்ந்த அம்பிகையின் திருமுகம் தரிசிப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும். அம்பிகையின் பின்புறம் மிகப் பெரிய ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இப்படி மிகப்பெரிய ஸ்ரீ சக்கரம் பின்புறம் அமைந்த அம்பிகையை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது.

தீராத வயிற்று வலி, குடல் நோய், சூலை நோய் உள்ளவர்களுக்கு இத்தலத்து அம்பிகையின் அபிஷேக சந்தனம் அருமருந்தாக விளங்குகின்றது.நோயுற்றவர்கள் அம்பிகைக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை பயன்படுத்தினால், அவர்களின் நோய் பூரணகுணமாகும் என்பது ஐதீகம். இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இது இருக்கின்றது.

Read More
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்

பள்ளியறை இல்லாத, பள்ளியறை பூஜை நடைபெறாத தேவார தலம்

சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள தேவாரத் தலம், திருமுல்லைவாசல். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர், மாசிலாமணீசர். இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதையம்மை. சத்தியானந்த சவுந்தரி.

எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால், இங்கு பள்ளியறை பூஜையும் நடத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற சிவன் கோவிலில் இருந்து மாறுபட்ட நடைமுறையாகும். சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

Read More
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில்

அம்பிகையும் திருவாசியும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டிருக்கும் அபூர்வ வடிவமைப்பு

பௌர்ணமி அன்று வழிபட்டால் புத்திர பாக்கியம் அருளும் அம்பிகை

நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூர் என்ற ஊரில், காவிரி நதியின் கரையில் அமைந்துள்ளது அசலதீபேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் அசலதீபேஸ்வரர். இறைவியின் திருநாமம் மதுகரவேணி. தீப வழிபாட்டுடன் தொடர்புடைய தலம் என்பதால், இறைவனது சன்னதியில் எப்போதும் அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீபம் அசையாமல் எரிவதால் சுவாமி, அசலதீபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அசலம் என்றால் அசையாதது என்று பொருள். சுவாமி, இத்தலத்தில் தியான கோலத்தில் இருப்பதால், தீபம் அசைவதில்லை.

இத்தலத்தில் அசலதீபேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பாள் மதுகரவேணி கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் அம்பிகை இருவரும் ஒருவருக்கொருவர் வலப்புறமாக காட்சி தரும்படி இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.

தனது சகோதரன் விநாயகருடன் நடந்த போட்டியில் தனக்கு மாம்பழம் கிடைக்காததால் முருகப்பெருமான் கோபித்துக்கொண்டு கைலாயத்தை விட்டு புறப்பட்டார். அவரைத் தேடிக் கொண்டு புறப்பட்ட அம்பிகை தன் மகனை முதன் முதலாக இந்த தலத்தில் கண்டதால், இவ்வூர் மகனூர் என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னர் மருவி மோகனூர் என்று மாறியது.

முருகனை நேரில் பார்த்தவுடனேயே பாசத்தில் இந்த அம்பிகை பால் சொரிந்தாளாம். எனவே இவள் மதுகரவேணி என்று அழைக்கப்படுகிறாள். மது என்றால் பால் என்று பொருள். பவுர்ணமிதோறும் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அந்நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்பிகையை வழிபட்டால், புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

Read More
சமயபுரம் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம்

மாசி மாத கடைசி ஞாயிறு முதல் 28 நாட்கள், பக்தர்களின் நலனுக்காக மாரியம்மன் கடைபிடிக்கும் விரதம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும்.

கருவறையில் மாரியம்மன், தனது திருமுடியில் தங்கக் கிரீடம் அணிந்து, குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளிவீச, இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு மிகப்பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறாள். அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். தனது எட்டு கைகளில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் ஆகியவைகளைத் தாங்கி உள்ளாள். அன்னையின் வலது காலின் கீழ் மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. உட்கார்ந்த கோலத்தில், இந்த அம்மனைப் போல பெரிய திருமேனி உடைய அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த அம்மனின் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டதால் அம்மனுக்கு 'மூலிகை அம்மன்' என்ற பெயரும் உண்டு. சுதை வடிவமானவள் என்பதால் இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.

சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை பிரார்த்திக்கிறார்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மனே, உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும், ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில், அம்மனை மனதில் கொண்டு, ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல், இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது.

அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை அபிஷேகம் செய்வார்கள். இதனை பூச்சொரிதல் என்பார்கள்.

பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு, அம்மனுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே மாரியம்மனுக்கு கொடுக்கப்படுகிறது.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

திருமணத்தின் போது சிவபெருமான், பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு அக்னிகுண்டத்தை வலம் வரும் அரிய காட்சி

சிவபார்வதி திருமணம் நடந்தபோது, அவர்களுடைய வயதை பற்றிய அரிய தகவல்

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

இக்கோவிலில் இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில், சிவபெருமான் கல்யாணசுந்தரர் என்ற திருநாமத்தோடும்,பார்வதி தேவி கோகிலாம்பாள் என்ற திருநாமத்தோடும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற தலங்களில் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்தாலும், இத்தலத்தில் அவர்களின் திருமணக் கோலம் சற்று வித்தியாசமானதாகவும் அரிதாகவும் அமைந்திருக்கின்றது. இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு, திருமண சடங்கிற்கான அக்னிகுண்டத்தை வலம் வரும் நிலையில் காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அரிய காட்சியாகும்.சிவபெருமானின் இடது புறம் திருமண சடங்கிற்கான அக்னி குண்டம் இடம் பெற்றிருக்கின்றது.மேலும் இருவர் கரங்களிலும் திருமண சடங்கின் போது அணிவிக்கப்படும் கங்கணமும் இருக்கின்றது.

இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் நடந்தபோது, சிவபெருமானுக்கு 18 வயது என்றும் பார்வதி தேவிக்கு ஒன்பது வயது என்றும் தல புராணம் குறிப்பிடுகின்றது. இப்படி இவர்கள் திருமணம் நடந்த போது, இவர்களின் வயதை குறிப்பிட்டு இருப்பது ஒரு அரிய தகவலாகும். வேறு எந்த சிவபார்வதி திருமணம் நடைபெற்ற தலத்திலும், அவர்கள் திருமண வயதைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.

இக்கோவில் ஒரு திருமண தடை நிவர்த்தி தலம் ஆகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு உள்ள கல்யாண சுந்தரருக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி, சுவாமி மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் காட்சி தரும் காளி அம்மன்

திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இக்கோவிலில் காளி அம்மன் தனி சன்னதியில் தன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறாள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

ஒருமுறை குரும்பன் என்ற உள்ளூர் தலைவன், சோழ மன்னன் கரிகாலனுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தத் தவறினான். குரும்பன், காளி தேவியின் தீவிர பக்தன். நிலுவைத் தொகையை மீட்பதற்காக மன்னன் தன் பகுதிக்கு படையெடுத்த போது, அரசனையும் அவனது படையையும் தோற்கடிக்க உதவும்படி காளியிடம், குரும்பன் வேண்டிக் கொண்டான். சோழ மன்னன் கரிகாலன், சிவபக்தனாக இருந்ததால் சிவபெருமானிடம் உதவிக்காக வேண்டினான். சிவபெருமான் காளியை கட்டுப்படுத்தவும், கட்டவும் நந்தியை அனுப்பினார். நந்தி காளியை தோற்கடித்து அவளை தங்கச் சங்கிலியால் கட்டினார். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கோவில் காளி தேவியின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளன. இவள் சொர்ண காளி என்று அழைக்கப்படுகிறாள்.

Read More
அச்சுதமங்கலம்  சோமநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

கர்ப்பிணி கோலத்தில் உள்ள அபூர்வ அம்பிகை

சிவபெருமான் போல் நெற்றிக்கண் உடைய அம்பிகை

தினமும் முப்பெரும் தேவியராக அருள் பாலிக்கும் அம்பிகை

உலக ஜீவராசிகளின் கை ரேகைகளை தன் கரத்தில் கொண்ட அம்பிகை

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப்பெற்ற தலம்.

இத்தலத்து அம்பிகை சௌந்தரநாயகிக்கு, சிவபெருமான் போல் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருக்கின்றது. அம்பிகைக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யும்போது அவருடைய மூன்றாவது கண்ணை நாம் தரிசிக்க முடியும்.

இந்த அம்பிகை அபிஷேக நேரங்களில் கர்ப்பிணி பெண் தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள். சந்தனாபிஷேகம் செய்யும்போது , ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இருப்பதுபோன்ற அம்பிகையின் மேடிட்ட வயிற்றை நாம் தரிசிக்க முடியும். இப்படி கர்ப்பிணி தோற்றத்தில் காட்சி அளிக்கும் அம்பிகையை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கர்ப்பிணி கோலத்தில் அம்மன் உள்ளதால், இங்கு உள்ள அம்பாளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த அம்பிகை காலையில் மஹிஷாசுரமர்த்தினியாக சிவப்பு நிற புடவையிலும், மதியம் லட்சுமியாக பச்சை நிறப்புப் புடவையிலும், மாலையில் சரஸ்வதியாக வெள்ளை நிற புடவையிலும் காட்சி அளிக்கின்றாள்.

இந்த அம்மனின் உள்ளங்கையில், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் கை ரேகைகளும் அடங்கி இருப்பதாக ஐதீகம். பாலாபிஷேகம் செய்யும் போது அம்மனின் உள்ளங்கை ரேகைகளை நாம் பார்க்கலாம்.

திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு கிடைக்கும்.

Read More
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்

தனித்துவமான, திருமேனி வடிவமைப்புள்ள அம்பிகை

மூக்குத்தி போடுவதற்கான துவாரமும், தலைப்பின்னலில் ஜடை குஞ்சத்துடன் இருக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் அமைந்துள்ளது சந்திரசூடேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற பெயர்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் மலைமீது அமைந்த ஒரு சில சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோவிலும் ஒன்று. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலை அடைய சுமார் 200 படிகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையானது இத்தலம்.ஹொய்சளர்களால் ஆளப்பட்ட இவ்வூர் ஹோசூர் என்ற பெயர் பெற்றது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோவில் இது ஒன்றேயாகும்.

இத்தலத்து இறைவி மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமேனி உடையவர். ஒரு சமயம் சிவபெருமான், தான் தங்கியிருந்த இத்தலத்திற்கு பார்வதிதேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை நடத்தினார். ஒளிவீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதிதேவிக்கு அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பானது, அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது.

கருவறையில் நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் காட்சி தரும் அம்பிகையின் மூக்கில் மூக்குத்தி போடுவதற்கான துளை அமைந்துள்ளதும், அம்பிகையின் பின்னல் ஜடை ,குஞ்சத்துடன் அமைந்துள்ளதும் அதிசயமான காட்சியாகும். இப்படிப்பட்ட தனித்துவமான வடிவமைப்புள்ள அம்பிகையை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. அம்பிகைக்கு முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசக்ரத்தின் முன் ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம் நடைபெறும். அழகு மிளிரும் திருமுகத்துடன் காட்சி தரும் அம்பிகை, பெண்களுக்கு குழந்தை செல்வம், குடும்ப ஐஸ்வர்யம் அளிப்பதில் வல்லவள்.

Read More
கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில்

மூக்குத்தி அணிய சிற்பியிடம் சிலையில் திருத்தம் செய்ய சொன்ன துர்க்கை அம்மன்

மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமுகாம்பாள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோவில். கிடாத்தலையோடு கூடிய மகிஷாசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தியபோது, அவர்கள் வந்து அபயம் அடையவே துர்க்கை அம்மன், அவனுடைய தலையை வெட்டினாள். அந்தத் தலை விழுந்த இடம் கிடாத்தலைமேடு என்றழைக்கப்படுகிறது.

துர்க்கை அம்மன், மகிஷாசுரனை வதம் செய்த பிறகு தனக்கேற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள இந்தத் தலத்திலுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தார். துர்க்கை அம்மனின் தோஷத்தைப் போக்கியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு துர்காபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது.

இத்தலத்தில் தனி சன்னிதியில், துர்க்கை அம்மன், கிடா வடிவிலுள்ள மகிஷனின் தலை மீது நின்ற திருக்கோலத்தில், சிம்ம வாகனத்தில் எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். இரண்டு கரங்களில் வரத அபய முத்திரையும், ஐந்து கரங்களில் சக்கரம், பானம், கத்தி உள்ளிட்டவற்றை கேடயமாக தரித்தும் ஓர் இடது கரத்தை தொடையில் பதித்த ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

மூக்குத்தி அணியும் துர்க்கை அம்மன்

இங்கு எழுந்தருளியுள்ள துர்க்கைக்கு அழகான மூக்குத்தி ஒன்று அணிவிக்கப்படுகிறது. இந்த மூக்குத்தி அணிவதற்கென்று துர்கை அம்மனின் இடது நாசியில், ஒரு சிறு துவாரம் ஒன்று காணப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உள்ளது. துர்கையம்மனை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்து, சிற்பியிடம் ஒரு துர்க்கை அம்மனின் திருவுருவ சிலை ஒன்றை வடிவமைக்க சொன்னார்கள்.

சிற்பியும் அழகான துர்க்கை சிலையை வடிவமைத்தார். ஒரு நாள் இரவில், சிற்பியின் கனவில் தோன்றிய துர்க்கை அம்மன், 'எனக்கு ஒரு அழகான மூக்குத்தியினை அணிவிக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு சிலையில் நாளை ஒரு திருத்தம் செய்' என்று அம்பாள் சொன்னதும், திடுக்கிட்ட சிற்பி, 'வேலைகள் அனைத்தும் பூர்த்தி ஆகி விட்டதே. இந்த நேரத்தில் நாசியில் நான் உளியை வைத்தால் சிலை பின்னமாகிவிடாதா?' என்று நடுக்க குரலில் சிற்பி கேட்டான்.

துர்க்கை அம்மன் மெல்லிய சிரிப்புடன் 'வருந்தாதே.. என் நாசியின் மீது உன் உளியை மட்டும்வை. பிறகு எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி மறைந்தாள். மறுநாள் காலையில், துர்க்கை அம்மன் கூறியதை போலவே, அம்மன் சிலையில் இருக்கும் நாசி பகுதியில் உளியை வைத்தான். என்ன அற்புதம்! அடுத்த கணமே தானாகவே அங்கு மிகச் சிறிய ஒரு துவாரம் ஏற்பட்டது. நடந்த எல்லாவற்றையும் ஊர் பெரியோர்களிடம் சிற்பி தெரிவித்தார். அன்று முதல் துர்க்கை அம்மனுக்கு மூக்குத்தி அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

துர்க்கை அம்மனின் திருமுகத்தில் அரும்பும் வியர்வைத் துளிகள்

இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், விழாக் காலங்களில் துர்க்கை அம்மனின் திருமுகத்தில் வியர்வைத் துளிகள் அரும்புகின்றன. அதே போல், துர்கைக்கு நேர் எதிரே சுமார் 20 அடி உயரத்தில் சூலம் ஒன்றும் உள்ளது. சூலத்தின் அடிபாகம் 20 அடி ஆழம் வரை பூமிக்கு அடியில் செல்கிறது. துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் போதெல்லாம், இந்த சூலத்திற்கும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

இவை தவிர, ஐந்தடி நீளத்தில் ஒரு சூலமும், ஒரு அடி நீளத்தில் மற்றுமொரு சூலமும் உள்ளன. இதனை ஸ்ரீ சாமுண்டேஸ்வரியின் வடிவமாக பார்க்கப்படுகிறது. எலுமிச்சை பழத்தில் சிறிதளவு தேனை தடவி இந்த சூலத்தில் குத்தி வழிபட்டு வந்தால், ஏவல், பில்லி, சூனியம் விலகும். மேலும், சூலத்திற்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டால், கால்நடைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்கள் அகன்றுவிடும்.

சுவாசினி பூஜைக்கு சுமங்கலியாக வந்த துர்க்கை அம்மன்

1990-ல், 300 சுமங்கலியை அழைத்து 'சுவாசினி பூஜை' நடத்த துர்க்கை சந்நதியில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், 299 சுமங்கலிகள் மட்டுமே பூஜைக்கு வந்திருந்தனர். மனமுருகி துர்க்கையிடம் வேண்டிக் கொண்டனர் விழாவின் ஏற்பாட்டாளர். சரியாக பூஜைகளை ஆரம்பிக்கும் முன்பாக, ஒரு வயதான சுமங்கலியாக வந்திருந்து பூஜைகளில் கலந்து கொண்டு, மங்கள பொருட்களை பெற்றுக் கொண்டு, உணவை உண்டு அதன் பின் மறைந்துவிட்டார்.

விழா ஏற்பாட்டாளர்கள் எங்கு தேடியும், அந்த வயதான சுமங்கலியை காணவில்லை. திடீர் என்று ஒரு பக்தைக்கு அருள் வரவே 'அந்த வயதான சுமங்கலி பெண்ணாக வந்தது நான்தான்’ (துர்க்கை) என்றும், விழா திருப்தியாக இருந்ததாகவும் கூற, அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.

தோஷங்களை நிவர்த்தி செய்யும் துர்க்கை அம்மன்

கன்னி தோஷம், காள தோஷம், நாக தோஷம், திருமண ஸ்தான தோஷம் போன்ற தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறாள் இந்த துர்க்கை அம்மன்.

Read More