திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில்

திருவாலங்காடு சிவபெருமானை வழிபடும் முன் வணங்க வேண்டிய பத்ரகாளி அம்மன்

தேவியின் 51 சக்தி பீடங்களில் காளி பீடமாக இருக்கும் தலம்

திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான ரத்தின சபை அமைந்திருக்கும் திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தந்திர சூடாமணி நூல் கூறும் தேவியின் 51 சக்தி பீடங்களில், இது காளி பீடம் ஆகும்.

மிகச்சிறிய இக்கோவிலின் கருவறையில், பத்ரகாளி அம்மன் சாந்த சொரூபியாக எட்டு திருக்கரங்களுடன், முழங்கால்களில் கால்களை மடக்கி நடனமாடும் நிலையில் உள்ளார். பாதங்களை தரையில் ஊன்றி, கணுக்காலில் நடனக் கலைஞரின் மணிகளுடன் காட்சி அளிக்கிறாள்.

இந்த பத்ரகாளி அம்மன் தனி கோவில் கொண்டு எழுந்தருளியதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

 
Next
Next

மாதப்பூர் முத்துகுமாரசாமி கோவில்