நாகப்பட்டினம் காயாரோகணேசுவரர் கோவில்

நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு நடத்தப்படும் தனித்துவமான ஆடிப்பூரத் திருவிழா

நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில் ஆகும். இறைவியின் திருநாமம் நீலாய தாட்சி. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.
ஆடித் திங்களில் வரும் பூரம் நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த உலகை படைத்தும், காத்தும் வரும் உமாதேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதும் ஆடிப்பூரம் அன்றுதான்.
எல்லா கோவில்களிலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போல், நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் இந்த தலத்தில் தான் அம்பிகை கன்னிப் பருவம் எய்தினாள். அதனால் இந்தக் கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சிகள் சற்று தனித்துவமான முறையில் நடைபெறுகின்றது. இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடிப்பூரத்தன்று திருவிழா நிறைவு பெறும்.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் நீலாயதாக்ஷி அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் நீலாயதாக்ஷி அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரத்தன்று மாலையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் வீதி உலா வருவார்.

தகவல், படங்கள் உதவி : திரு மணிபாலா குருக்கள்

ஆடிப்பூரம் காலை அலங்காரம்

ஆடிப்பூரம் மாலை அலங்காரம்

பீங்கான் ரதம்

 
Next
Next

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்