திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தரும் திருப்புகழ் தலம்
திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் வண்டார் குழலம்மை. நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.
இக்கோவிலில் முருகன் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆலய முகப்பிலும் மற்றும் சிவசன்னிதியின் உட்பிரகாரச் சுற்றின் முதல் திருச்சன்னிதியிலும், வள்ளி தெய்வயானை தேவியரோடு கூடிய மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் ஆறு திருமுகங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார். மூன்றாவது, சிவசன்னிதியின் பின்புறத்தில், வலது கோடியில், இரு தேவியரோடு, மயிலும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.