திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்
சனி பகவான் பொங்கு சனீஸ்வரராக இரண்டாவது அவதாரம் எடுத்த தலம்
கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி. சனி பகவானின் தந்தையான சூரிய பகவான் இத்தலத்து இறைவன் அக்னீஸ்வரரை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றான்.
சனி பகவான் உலகத்திற்கே நீதிபதியாக இருந்து, பாரபட்சம் பார்க்காமல் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமக்கு நற்பலன்களையோ அல்லது தண்டனையோ அளிப்பார். நமது பூர்வ ஜென்ம ஜென்ம புண்ணியம் மிகுந்திருந்தால் அளவற்ற நன்மைகளையும், சிறந்த முன்னேற்றத்தையும் அளிப்பார். செய்த பாவம் அதிகமாக இருந்தால், நாம் செய்யும் தவறுகளுக்கு தகுந்தபடி தண்டனை கொடுப்பார்.இப்படி கொடுக்கப்படும் தண்டனை மூலம் நமது பாவத்தைப் போக்கி புண்ணியம் கிடைத்திட வழிவகுப்பார்.ஆனால் நமது பாவத்தினால் ஏற்பட்ட துன்பங்களுக்கு சனி தோஷம் தான் காரணம் என்று சனிபகவானை குறிப்பிடுவது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது.
சனி பகவான் தனது அவப் பெயரை போக்கிக் கொள்வதற்காக, தனது தந்தை சூரிய பகவான் வழிபட்ட இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்தார். சிவன் அருளால் சனி பகவான் இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக, இரண்டாவது அவதாரம் எடுத்தார். இங்கு நற்பலன்களை மிகுந்து அளிப்பதால் அவருக்கு பொங்கு சனீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த பொங்கு சனீஸ்வரர் நிறைந்த செல்வங்களையும், நீண்ட ஆயுளையும் தந்து அருளுகின்றார்
இங்கு பொங்கு சனீஸ்வரர் தனி சன்னதியில் கைகளில், ஏர் கலப்பை, காகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, அபய ஊரு முத்திரையுடன் காட்சி தருகிறார். உழைப்பின் பெருமையை உணர்த்துவதற்காக அவர் தனது கையில் ஏர் கலப்பையை ஏந்தி இருக்கிறார். இப்படி கைகளில் ஏர் கலப்பை, காகக் கொடி ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரக மண்டலத்தில் சனியின் திசை மேற்கு. அதே போல் இத்தலமும் மேற்கு பார்த்து அமைந்துள்ளது. சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனி பகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
திருக்கோழம்பியம் கோழம்ப நாதர் கோவில்
அம்பிகை பசுவாக அவதரித்து தவம் செய்த தேவாரத் தலம்
சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்த தலம்
மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. (திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருக்கோழம்பியம். இறைவன் திருநாமம் கோழம்ப நாதர், கோகிலேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.
அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க, பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில், இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்து இருக்கின்றது. இத்தலத்து சிவலிங்கத் திருமேனி நீண்ட பாணத்தை உடையதாக இருக்கின்றது. பிரம்மனுக்காக பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சாப விமோசனம் பெற்ற தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, கயா போன்ற புண்ணிய தலங்களுக்கு ஈடான தலம் இது.
அம்பிகை சௌந்தர்ய நாயகி 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கிறாள். திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால், சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவபெருமானை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது. அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம். தமிழில் 'குளம்பு' என்றால் 'கொழுமம்' என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு 'கோழம்பம்' என்றும், இறைவனுக்கு 'கோழம்பநாதர்' என்றும் பெயர் ஆயிற்று.
இக்கோவிலில் 27 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'வ்யதிபாதயோக' பூஜை ஹோமங்களில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில்
பிரம்மா அமர்ந்த கோலத்தில் கை கூப்பி வணங்கி நிற்கும் அரிய காட்சி
சிதம்பரம்-கடலூர் சாலையில் (புதுச்சத்திரம் மற்றும் பி.முட்லூர் வழியாக) 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில். மூலவர் முத்துக்குமார சுவாமி சன்னதிக்கு வலதுபுறம் விசுவநாதர் சன்னதியும், அருகில் தென் திசை நோக்கி விசாலாட்சி அம்பிகை சன்னதியும் இருக்கின்றது.
இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் பிரம்மா மிகவும் விசேஷமானவர். பொதுவாக சிவன் கோவில்களில் கருவறை சுற்றுச்சுவரில் பிரம்மா, நின்ற நிலையில்தான் இருப்பார். ஆனால் இக்கோவிலில் பிரம்மா, அமர்ந்த கோலத்தில் இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு பொருள் தெரியாததால் முருகனால் தண்டிக்கப்பட்ட இவர் தன்னை விடுவிக்கும்படி கேட்பதாக ஐதீகம். பிரம்மாவின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
12 அடி உயர கல் கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்
அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது
இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு
1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோவில் கட்டப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்
அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது
இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு
1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோவிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில்
முன்புறம் ஐந்து முகமும், பின்புறம் ஒரு முகமும் இருக்கும் முருகனின் அபூர்வ தோற்றம்
முருகனின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை செய்யப்படும் தனிச்சிறப்பு
சிதம்பரம்-கடலூர் சாலையில் (புதுச்சத்திரம் மற்றும் பி.முட்லூர் வழியாக) 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.
மூலவர் முத்துக்குமார சுவாமி சன்னதிக்கு வலதுபுறம் விசுவநாதர் சன்னதியும், அருகில் தென் திசை நோக்கி விசாலாட்சி அம்பிகை சன்னதியும் இருக்கின்றது.
கருவறையில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். முத்துக்குமார சுவாமிக்கு ஆறுமுகங்கள் உள்ளன. நம் பார்வையில் ஐந்து முகங்கள் தெரியும். ஒரு முகம் சுவாமியின் பின்புறம் உள்ளது. ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை செய்யப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். செவ்வாய்க்கிழமையில் இவருக்கு செவ்வரளி மாலை சாத்தி சத்ருசம்ஹார திரிசதி என்னும் எதிரி பயம் போக்கும் அர்ச்சனை நடக்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதைச் செய்ய திருமணத் தடை நீங்கும்.
கோவில் திருவிழாவின் போது சிவனுக்குரிய ரிஷபம், இந்திரனுக்குரிய ஐராவத யானை, ஆடு , இடும்பன் ஆகிய வாகனங்களில் முருகன் பவனி வருகிறார்.
மாமாகுடி சிவலோகநாத சுவாமி கோவில்
மகாலட்சுமி சிவபூஜை செய்த தலம்
லட்சுமி கடாட்சம் அருளும் பிரதோஷ கால தீப வழிபாடு
மயிலாடுதுறை - செம்பனார்கோயில் - ஆக்கூர் - திருக்கடையூர் வழித்தடத்தில், ஆக்கூர் முக்கூட்டு சாலையிலிருந்து 2 கி. மீ. தொலைவில் மாமாகுடி சிவலோகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் சிவலோகநாதர். இறைவி சிவகாமசுந்தரி. இக்கோவில் தேவார வைப்புத்தலமாகும்.
அமிர்தத்தைப் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த புராண நிகழ்வு நடைபெற்ற தலம் இது. பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்திற்கு இணையான பல புனித வஸ்துக்களும் அதிலிருந்து கிடைத்தன. காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் முதலான பல உயர்வான விஷயங்களுடன் தன்வந்திரி பகவானும், செல்வத்திற்கு அதிபதியான திருமகளும் தோன்றினர். இவர்கள் அனைவரும் இத்தலத்தை சுற்றியுள்ள தலங்களில் சிவபூஜை செய்தனர். பாற்கடலில் தோன்றிய அலைமகளான மகாலட்சுமி சிவபூஜை செய்த தலம் தான் திருமால்குடி. இதன் பலனாக திருமாலைத் தன்னுடைய பதியாக ஏற்று மகிழ்ந்த தலமும் இதுதான். இதனால் இத்தலமானது திரு + மால் + மா + குடி என்று வழங்கப்பெற்றது. முதலில் வருகிற 'மால்' என்பது திருமாலையும், அதன்பின்னேயே வருகிற 'மா' ஆனது லட்சுமியையும் குறிக்கிறது. இவ்விருவரும் நிலைத்திட்ட ஊர் குடி எனப்பட்டது. பின்னர் காலப்போக்கில் திருமாமாகுடி என பெயர் மாறியது. திருமகள் புண்ணிய நீராடிய தீர்த்தமானது லட்சுமி தீர்த்தம் என்கிற பெயரில் ஆலயத்திற்கு அருகிலேயே இருக்கிறது.பெரும்பாலான சிவாலயங்களில் கஜலட்சுமியாய் எழுந்தருளி இருக்கும் திருமகள், இத்தலத்தில் இருகரங்களிலும் தாமரை ஏந்தியவளாய் காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்.
மகாலட்சுமி இத்தலத்து இறைவனை பூஜை செய்த போது, அனைத்து தேவர்களும் இங்கு தங்கி இருந்தபடியால் இத்தலமே ஒரு சிவலோகம் போலக் காட்சியளித்ததாம். அதனாலேயே இத்தலத்து ஈசருக்கு சிவலோகநாதர் என்கிற திருநாமம் உண்டானது. பிரதோஷ காலமான அந்தி நேரத்தில் சிவலோகநாதருடைய சன்னதியில் விளக்கேற்றி வணங்கிட, இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமி வழிபட்ட தலங்களை தரிசிக்கும்போது வறுமை, கடன் முதலான தோஷங்கள் நீங்கி செல்வநிலை தழைத்திடும் என்பது சூட்சுமம். அதிலும் மகாலட்சுமி அவதரித்த இந்தத் தலத்தில் வழிபட்டால், நம் பின்வரும் பல தலைமுறைகளுக்கு இந்த புண்ணியப் பலன் கிடைத்திடும் என்பது ஐதீகம்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒன்றாக சேர்ந்திருக்கும் அபூர்வக் கோலம்
சிங்கத்தின் வாயில் உருளும் கல்
சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் தாரமங்கலம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.
இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும். அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார். பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.
இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
'ட' என்ற தமிழ் எழுத்து வடிவில் நவக்கிரகங்கள் அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் சதுர வடிவில், அவரவர் அவரவர்க்குரிய திசையை நோக்கிய வண்ணம் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் நவக்கிரகங்கள் சதுர வடிவில் அமைந்திராமல், 'ட' என்ற தமிழ் எழுத்து வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களின் இந்த 'ட' வடிவ அமைப்பை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் சீயாத்தமங்கை. இத்தலம் நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் 'கோயில் சீயாத்தமங்கை' என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநாமம் அயவந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் இருமலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி.
இக்கோவிலில் இறைவனும், அம்பிகையும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன், அம்பிகை சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் இரண்டு தனி கோவில்களாக விளங்குகின்றன.
அம்பிகை இருமலர்க்கண்ணம்மை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகை சிவ சொரூபியாக விளங்குகின்றாள். அம்பிகை சிவபெருமானைப் போல் ஜடாமுடி தரித்து, நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்சியளிக்கிறார். அம்பிகையின் ஜடாமுடியில் சூரிய, சந்திர பிறைகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் அம்பிகையின் கழுத்தில் ருத்ராட்ச மணி அலங்கரிக்கின்றது. அம்பிகையின் தனிக் கோவிலில், சிவபெருமானுக்கு அமைந்த பரிவார தெய்வங்கள் போல் நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் அமைந்திருப்பது இத்தலத்து அம்பிகையின் தனிச்சிறப்பாகும்.
திருநறையூர் சித்தநாதேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அரிய காட்சி
நவக்கிரக தோஷத்தை நிவர்த்திக்கும் தட்சிணாமூர்த்தி
கும்பகோணம்- குடவாசல் பாதையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநறையூர். இறைவன் திருநாமம் சித்தநாதேசுவரர். இறைவி சௌந்தர நாயகி. இந்த ஊரின் புராண பெயர் நரபுரம், குபேரபுரம், பிரமபுரம், சுகந்தவனம், திருநறையூர்ச்சித்திரம். சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் தேவேஸ்வரர் என்றும், சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் எனவும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம், சித்தநாதேசுவரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அதுபோல இக்கோவிலில், வழக்கமாக தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி அதற்கு மாறாக, மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்தியையும், கிரகங்களையும் வழிபடுகிறார்கள்.
நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக பெருமாளே திதி கொடுக்கும் தலம்
காசி, கயா, ராமேசுவரம் முதலான புண்ணிய தலங்களுக்கு இணையான தலம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது நென்மேலி திருத்தலம். மூலவர் திருநாமம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். உற்சவர் திருநாமம் ஸ்ரீ ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணப் பெருமாள். உற்சவர் பெருமாள்தான் இங்கு முன்னோர்களுக்காக சிராத்தம் செய்து வைக்கின்றார் என்பது ஐதீகம்.
பித்ரு தோஷம் இருந்தால், நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான். இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ, திதியோ கொடுக்கவே இல்லை. பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு என பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக, இத்தலத்து பெருமாளே திதி கொடுத்து நம் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்கிறார். பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. நென்மேலியில் பெருமாளே திதி கொடுப்பதால், இத்தலம் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் கூறப்படுகிறது.
தல வரலாறு
இத்தலம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள். யக்ஞநாராயண சர்மா வரியாக வசூலித்த பணத்தையெல்லாம், நென்மேலி பெருமாளுக்கே தம்பதியர் இருவரும் செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், 'எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே' என வருந்தினார்கள். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது தல வரலாறு.
அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோவிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம். இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் சிராத்த காரியங்கள் செய்யப்படுகின்றன. இங்கு, காலை முதல் மதிய வேளைக்குள் சிராத்தம் செய்யப்படுகிறது. வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டையும் எள்ளும் கலந்த துவையல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியை அவர்களுக்கு உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் சிராத்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து சிராத்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.
இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம். வீட்டில் சகல தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.
விராலிமலை சண்முக நாதர் கோவில்
முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை
மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திருப்புகழ் தலம் விராலிமலை சண்முக நாதர் கோவில். 1500 வருடப் பழைமை வாய்ந்த கோவில் இது. முனிவர்களும், தேவர்களும் மரங்களாக விரவி முருகனை வழிப்பட்டதால், விரவி மலை என்று அழைக்கப்பட்டு, பின்பு அதுவே மருவி, விராலி மலையாயிற்று. மலை மீது உள்ள கோவிலுக்கு செல்ல 207 படிகள் உள்ளனஅருணகிரிநாதர், முருகப் பெருமானிடம் ஞானோபதேசம் பெற்ற தலம்.
கருவறையில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும் பத்து அடி உயரத்தில் அசுர மயில் மீதமர்ந்து, வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் வஜ்ராயுதமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். தீபாராதனை காட்டும் பொழுது மூன்று முகங்கள் பக்தர்களுக்குத் தெரிகிறது. பின்புறம் உள்ள கண்ணாடியில் மற்ற மூன்று முகங்களையும் தரிசிக்க முடிகிறது.
ஐந்து வயதிற்குள் குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும். ஜாதகத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் பார்வையால் ஏற்படும் தோஷம் இது. இதனால் ஆயுள், உடல்நலம் பாதிக்க கூடும். தாய், தந்தை, தாய்மாமனுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வை ஏற்பட்டால் தோஷம் மறையும். இதிலிருந்து விடுபட முருகப்பெருமானுக்கு பரிகார பூஜை செய்யலாம்.
இக்கோவிலில் முருகனுக்கு குழந்தையை தத்து கொடுத்து, பின் தவிட்டுக்கு குழந்தையை பெற்றுக் கொள்ளும் நடைமுறை இருக்கின்றது. பிரார்த்தனைப்படி குழந்தை பிறந்தவுடன் குழந்தையை முருகனிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தையின் மாமன்மார்கள் அல்லது உறவினர்கள் குழந்தைக்கு பதிலாக தவிட்டை தந்து சுவாமியிடம் குழந்தையை பெற்றுக் கொண்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
இப்பரிகாரத்தின் மூலம் தோஷம் நீங்குவதோடு, முருகனருளால் குழந்தையின் ஆயுள், ஆரோக்கியம் கூடும்.
நசரத்பேட்டை காசி விசுவநாதர் கோவில்
நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தரும் அபூர்வ தோற்றம்
துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி இருக்கும் அரிய காட்சி
சென்னை பூந்தமல்லியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நசரத் பேட்டை காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. புராண காலத்தில் இவ்வூர் 'புருஷமங்களம்', 'தருமபுரி ஷேத்ரம்' முதலான பெயர்களால் அழைக்கப்பட்ட பெருமை உடையது.
காசியில் உள்ளது போல இத்தலத்து விசுவநாதரின் சிவலிங்கத் திருமேனி மிகவும் சிறியது.கருவறையின் நுழைவுவாசலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி காட்சி தருவது ஒரு அரிய காட்சியாகும்.
இந்த கோவிலில் கார்கோடக மகரிஷி ஈசனை பூஜித்து வழிபட்டதாக ஐதீகம். கார்கோடக மகரிஷி காசியிலிருந்து இவரை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கார்கோடக மகரிஷியின் ஜீவசமாதி அருகிலுள்ள பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் இருக்கின்றது.
இந்தக் கோவிலில் நந்தி பகவான் தனது தலையை வலது பக்கம் சற்று சாய்த்து, புன்னகை தவழும் முகத்துடன் தனது கால்களை மடித்து அமர்ந்திருக்கிறார். அவரது திருமேனியை சலங்கை மணிகளும், ஆபரணங்களும் அலங்கரிக்கின்றன. அவரது மடிந்த இடது முன் பாதத்தின் கீழ் பாம்பு ஒன்று காட்சி அளிக்கிறது. இங்குள்ள பாம்பு, இத்தலத்தில் முக்தி பெற்ற கார்கோடக மகரிஷியைக் குறிக்கின்றது. இப்படி நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அபூர்வ தோற்றமாகும்.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
சன்னதியின் மேற்கூரையில் தங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். பெருமாளின் சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கின்றன. இந்த நவக்கிரகங்கள், அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களுக்குரிய மரங்கள்/ தாவரங்கள் சூரியன் - எருக்கு மரம்; சந்திரன் - பலாசு மரம்; செவ்வாய் - கருங்காலி மரம்; புதன்- நாயுருவி, சுக்கிரன் - அத்தி மரம்; குரு- ஆல மரம்; சனி- வன்னி மரம்; ராகு - அருகம்புல்; கேது- வெற்றிலைக்கொடி ஆகியவை ஆகும்.
நசரத் பேட்டை அகரம்மேல் பச்சை வாரணப் பெருமாள் கோவில்
பெருமாள் பச்சை நிற யானையாக வடிவெடுத்த தலம்
சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நசரத் பேட்டை என்ற இடத்திற்கு அருகில், அகரம்மேல் என்னும் ஊரில் அமைந்துள்ளது பச்சை வாரணப் பெருமாள் கோவில்.தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார்.இக்கோவில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஸ்ரீ ராமானுஜரின் மருமகனும், அவரது இரண்டு சீடர்களில் ஒருவருமான முதலியாண்டான் (கி.பி 1027 - கி பி 1132) அவதரித்த தலம் இது. முதலியாண்டானின் இயற்பெயர் தாசரதி. இந்த கிராமம் அவரது பெயரால் தசரதி பேட்டை என்று பெயரிடப்பட்டது, பின்னர் நசரத்பேட்டை என்று மாறியது.
கருவறையில் மூலவர் பச்சை வாரணப் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிகப்பெரிய திருமேனியுடன் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார். பெருமாளின் இந்த திருநாமம் மகாபாரத நிகழ்ச்சியுடன் தொடர்புடையது.
பாண்டவர்களில் மூத்தவரான தருமர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதை செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர் பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சை வாரணப் பெருமாள் என்ற பெயர். பெருமாளின் இந்தப் பெயர் காரணத்திற்கு, மற்றொரு மகாபாரத நிகழ்ச்சியும் உள்ளது. மகாபாரதப் போரின் போது அஸ்வத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டபோது, தருமர் தனது குருவான துரோணாச்சாரியாரிடம், அவரது மகனான அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக பொய் சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார் திசை திருப்பப்பட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திருஷ்டத்யும்னரால், துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். இந்தப் பாவத்திலிருந்து விடுபட, நாரத முனிவரின் ஆலோசனையின் பேரில், தருமர் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். கிருஷ்ணர் யாகத்திலிருந்து பச்சை யானை வடிவில் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். எனவே, அவர் சமஸ்கிருதத்தில் ஹரித வாரண பெருமாள் (ஹரித என்றால் பச்சை மற்றும் வாரண என்றால் யானை) அல்லது தமிழில் பச்சை வாரண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தருமரின் பிரார்த்தனைகளை ஏற்று, பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளினார்
கோவில் கொடிக் கம்பத்தின் முன்னே விளக்கு கம்பம் உள்ளது. அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது. யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோவிலின் சிறப்பை விளக்குகின்றது.
சிதம்பரம் நடராஜர் கோவில்
சிவகாமசுந்தரி அம்பிகை ஐப்பசி பூர உற்சவம்
நடராஜரிடம் ஆசீர்வாதமும், பட்டு வஸ்திரமும் பெறும் சிவகாமசுந்தரி அம்பிகை
உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெற வாழ நடத்தப்படும் பூர சலங்கை உற்சவம்
பொதுவாக, அம்பிகை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளாகத் தனித்தனியே வெவ்வேறு தலங்களில் காட்சி தருவாள். சிதம்பரம் தலத்தில், இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மகா சக்தியாக சிவகாமசுந்தரி அம்மன் வடிவத்தில் அருள்பாலிக்கிறாள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்பிகைக்காக நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஐப்பசி பூரம் உற்சவம் ஆகும். பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த ஐப்பசி பூர திருவிழாவில் அம்பிகையை குழந்தையாக பாவித்து, பின்னர் பருவமடைந்த பெண்ணிற்கான சடங்குகள் செய்வித்து, திருவிழாவின் இறுதியாக அம்பிகைக்கு இறைவனுடன் திருக்கல்யாணம் நடைபெறும். திருவிழாவின் முதல் எட்டு நாட்களில் அம்பிகை பலவித வாகனங்களிலும், ஒன்பதாம் நாள் தேரிலும் ஏறி வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள், ஐப்பசி பூரத்தன்று அம்பிகைக்கு பருவம் அடைந்ததற்கான சடங்குகள் நடத்தப்படும். அன்று காலையில் சிவகாமசுந்தரி அம்பிகையின் சன்னதியில், உற்சவ மூர்த்தியான சிவகாமசுந்தரி அம்மனுக்கு மஹாபிஷேகம் நடைபெறும். பின்னர் சிவகாமசுந்தரி அம்பிகை சர்வ அலங்காரத்துடன் நடராஜப் பெருமான் சன்னதிக்கு எழுந்தருளி அங்கு நடராஜரிடமிருந்து முதன் முதலில் பட்டு வஸ்திரங்களை யும், திருவருளையும் பெறுவார். இந்த நிகழ்ச்சி பட்டு வாங்கும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எம்பெருமான் நடராஜரிடம் இருந்து பட்டு வஸ்திரங்களை பெற்றுக் கொண்ட பின்னர் அம்பிகை நான்கு பிரகாரங்களிலும், வலம் வந்து மக்கள் அளிக்கும் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக, சீராக ஏற்றுக் கொள்வார்.
ஐப்பசி பூரத்தன்று மாலை 7:00 மணி அளவில் அம்பிகைக்கு பூரச் சலங்கை எனும் பருவமடைந்த பெண்ணிற்கு நடத்தப்படும் சடங்குகள் செய்யப்படும். அப்போது அம்மனின் மடியில் நெல், அவல் ,முளைப்பயிறு, அரிசி ஆகியவற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டி விடுவார்கள். உலக உயிர்கள் யாவும் அன்னையின் மடியில் முளைப்பயறாக உருவாவதைக் குறிப்பிடும் வகையில் அம்பாள் மடியில் இவற்றை வைத்து கட்டுவார்கள். பக்தர்களுக்கு இந்த முறைப் பயறு மற்றும் நெல்,அரிசி,அவல் பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு முளைப்பயறு பிரசாதம் வாங்கி உண்ண, விரைவில் மகப்பேறு உண்டாகும். மேலும் திருமணம் தடை நீங்கி திருமணம் கைகூடும். உலகத்தில் உள்ள 72,000 கோடி ஜீவ ராசிகளும் விவசாயம் செழித்து நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்பது தான் இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாகும்.
மறுநாள் ஐப்பசி உத்திரத்தன்று, காலை அன்னை சிவானந்தநாயகி அம்மன் தபசுக் காட்சி நடைபெறும். மாலையில் கீழவீதி, தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் வைபவமும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கட்டி சிறப்பு ஹோமம், திருமாங்கல்ய தாரணம் ஆகியனவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தெய்வத் தம்பதியின் ஆசி வேண்டி வணங்குவர்.
மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்
காவியுடை அணிந்த ஆஞ்சநேயர்
பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்தி
சென்னை மாநகரம் தாம்பரம் பகுதியிலிருந்து 9 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில். தாயார் திருநாமம் செங்கமலவல்லி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் ராஜகோபாலசுவாமி தன் கைகளில் சங்கையும், சக்கரத்தையும் இடம் மாற்றி ஏந்திருப்பது தனி சிறப்பாகும்.
இக்கோவில் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்கள் நன்கு பால் சுரக்கவும், ராஜகோபாலருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
பொதுவாக சிவன் கோவில்களில் தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோவிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் தட்சிணாமூர்த்தியும் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்.
ராஜகோபாலர் கோவிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோவிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், 'அஞ்சலி வரத ஆஞ்சநேயராக' காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இவருக்கு காவியுடையை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
ஆஞ்ச நேயரின் மார்பில் ராமபிரான், எப்போதும் வாசம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்கும் விதமாக கைகளை மார்பில் குவித்து, இரு கட்டை விரல்களையும் மார்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மன தைரியம் உண்டாகும், குரு மீதான மரியாதை அதிகரிக்கும்.
திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில்
திருவாலங்காடு சிவபெருமானை வழிபடும் முன் வணங்க வேண்டிய பத்ரகாளி அம்மன்
தேவியின் 51 சக்தி பீடங்களில் காளி பீடமாக இருக்கும் தலம்
திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான ரத்தின சபை அமைந்திருக்கும் திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தந்திர சூடாமணி நூல் கூறும் தேவியின் 51 சக்தி பீடங்களில், இது காளி பீடம் ஆகும்.
மிகச்சிறிய இக்கோவிலின் கருவறையில், பத்ரகாளி அம்மன் சாந்த சொரூபியாக எட்டு திருக்கரங்களுடன், முழங்கால்களில் கால்களை மடக்கி நடனமாடும் நிலையில் உள்ளார். பாதங்களை தரையில் ஊன்றி, கணுக்காலில் நடனக் கலைஞரின் மணிகளுடன் காட்சி அளிக்கிறாள்.
இந்த பத்ரகாளி அம்மன் தனி கோவில் கொண்டு எழுந்தருளியதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
மாதப்பூர் முத்துகுமாரசாமி கோவில்
பழநி முருகன் போலவே ஒரே உருவ ஒற்றுமை கொண்ட மாதப்பூர் முத்துக்குமாரசாமி
பல்லடத்திலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொல்லையில் உள்ளது மாதப்பூர். இத்தலத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது முத்துகுமாரசாமி கோவில். கோவிலுக்கு செல்ல 40 படிக்கட்டுகள் உள்ளன. ஞான பழத்துக்காக கோபித்துக்கொண்ட முருகன், பழநிமலையில் அமர்ந்தார். அவரைத் தேடி வந்த சிவனும் பார்வதியும் இக்குன்றின் மீது ஏறி நின்று மகனே நீ எங்கே இருக்கின்றாய்? என குரல் எழுப்பிய போது, பழநியில் அமர்ந்திருந்த முருகன் தாய், தந்தையருக்காக இங்கு காட்சியளித்ததாக தல வரலாற்றில் குறிப்புகள் உள்ளன. மாதாவுக்கு மகன் காட்சியளித்ததால் மாதா ஊர் என வழங்கப்பட்டு பின் மருவி மாதப்பூர் என ஆனது.
பழநி கோவில் உருவான சமகாலத்தில்தான், இக்கோவிலும் உருவானது. இக்கோவிலில், தனிச்சன்னிதியில் முருகன், முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்தில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முத்துக்குமாரசாமியும் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். பழநி முருகன் மேற்கு நோக்கியும், இம்முருகன் கிழக்கு நோக்கியும் இருப்பதுதான் ஒரே வித்தியாசம். முருகன் என்றாலே அழகன்தான். ஆனால் இத்தலத்து முருகனோ பேரழகு கொண்டவர். முருகன் சன்னதிக்கு அருகில் சிவபெருமான் மதிமாலீஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி தேவி மரகதாம்பிகை என்ற திருநாமத்துடனும் தனித் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்கள். பழனியில் இப்படி முருகனுடன், இறைவனும் இறைவியும் எழுந்தருளவில்லை.
சஷ்டி விரதம் இருந்து இத்தலத்து முருகனை வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும்; மழலைச் செல்வம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத் திருமேனி
மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று
செவ்வாய் தோஷ பரிகார தலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி. காசியில் உள்ள விசுவநாதர் கோவிலுக்கு முன்னதாக உருவான கோவில் இது. பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப் பழமையான ஊராகக் கருதப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும் (லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது. தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமாக விருத்தபுரீசுவரர் விளங்குகின்றார். தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள சிவலிங்க மூர்த்தி இதுவாகும். தஞ்சை பிரகதீசுவரர் சிவலிங்கம் பெரியது, அதனை விட கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவலிங்கம் உயரத்தில் மிகவும் பெரியது. ஆனால் இக்கோவில் சிவலிங்கம் சுற்றளவில் எல்லாவற்றையும் விட மிகப் பெரியது (சுற்றளவு 82.5அடி). சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும்.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள் 14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார் 7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.
செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்.