
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
நரசிம்மரின் யோக நிலையை கலைக்காமல் இருக்க நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாத மணிகள்
நோய்கள் நீங்குவதற்காக உப்பு, மிளகு காணிக்கை
சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.
இக்கோவிலில் யோக நரசிம்மர் தனி சன்னதியில் யோக பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். தனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்
மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கும் அரிய தலம்
சுக்கிர பகவானுக்குரிய பரிகார தலம்
திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சேரன்மாதேவிக்கு மிக அருகில் அமைந்துள்ள தலம் கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தின் மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கின்றனர். இந்தியாவிலேயே மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் உற்சவர் வெங்கடாஜலபதியாகவும் காணப்படுகின்ற நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓரிரு இடங்களில் தான் உள்ளன.
மூலவர் சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும், பின்புறம் யோக நரசிம்மராகவும் காட்சியளிப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.முன்புறம் காட்சிதரும் ஸ்ரீ சுதர்சனர் சங்கு, சக்கரம், அங்குசம், மழு, ஈட்டி, தண்டு, கலப்பை, அக்னி, கத்தி, வேல், வில், பாசம், வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் போன்ற ஆயுதங்களை தாங்கி பதினாறு கரங்களுடன் காட்சித் தருகிறார். இவருக்குப் பின்புறம் காணப்படும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறார்.தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இவர் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளார்.
சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. எனவே இத்தலம் சுக்கிரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகின்றது.
திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் இப் பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயாசம் வழங்கினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும். . இங்குள்ள நரசிம்மருக்குப் பிரதோஷ காலங்களில் தொடர்ச்சியாகப் பதினொன்று பிரதோஷ நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்து வேண்டியது நிறைவேறும்.

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து உருவாக்கிய தீர்த்தம்
உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகளை குணப்படுத்தும் சேஷ தீர்த்தம்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
தேவர்களுக்கு தலைமை தாங்கியதால் பெருமாளுக்கு இங்கு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இத்தலத்திலே ஸ்ரீமந்நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர(ஆதிசேஷ)புரம் என பெயர் பெற்று விளங்கியது.
ஒரு சமயம் பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால், ஆதிசேஷனிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோவிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்

சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் தாயார் அமர்ந்திருக்கும் அபூர்வ காட்சி
சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இங்குள்ள பெருமாள் ஒரு பாதம் முன்னோக்கியும், ஒரு பாதம் பின்னோக்கியும் இருக்கும் நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.
இத்தலத்தில் மட்டும் பெருந்தேவி தாயார் மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் அமர்ந்து சிம்மவாகினியாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக அம்பிகை அல்லது துர்க்கை தான் சிம்மவாகினியாக எழுந்தருள்வார்கள். ஆனால் இந்த கோவிலில் தாயார் சிம்ம பீடத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்
ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டிய நிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில், திருவாரூரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள மஞ்சக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.
ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, அவர் பத்தினியான சீதையும் உடன் செல்கிறாள். அப்போது காட்டில் தனிமையில் இருந்த போது, ராவணனின் மாமன் மாரீசன், மான் உருவில் வந்து மாயம் செய்கிறான். மானை பிடித்து தருமாறு சீதை கேட்டபோது, ராமன் துரத்தி சென்ற நிலையில், சீதை கடத்தப்பட்டாள். ராமபிரான் தன் மனைவியை காணாமல் துயரப்படும்போது ராமனின் மோதிரத்துடன் ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்று சீதை இருக்கும் இடத்தை தெரிந்து வந்த ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டி காட்டிய இடம் என்பதால் அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.
இந்தியாவில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
ஆஞ்சநேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சார்த்தி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலுக்கு அருகாமையில் வடக்கே சிறப்பு மிக்க திருத்தலையாலங்காடு பாலாம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோவிலும், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலும் உள்ளன.

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூா்த்திகளை உள்ளடக்கிய பெருமான்
மும்மூர்த்திகளின் அடையாளமான தாமரை மலர், சங்கு சக்கரம்,நெற்றிக்கண் கொண்ட உற்சவ பெருமாள்
கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.
திருவந்திபுரத்தில் அருளும் தேவநாதப் பெருமாள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூா்த்திகளையும் உள்ளடக்கிய பெருமானாகத் திருக்காட்சியளிக்கின்றாா். முன் ஒரு காலத்தில் அசுரா்களிடமிருந்து தேவா்களைக் காக்க பெருமான் எடுத்த திருக்கோலமே மூம்மூா்த்தி வடிவம். இதனால் இப்பெருமான் 'த்ரிமூா்த்தி” என்றும் “மூவராகிய ஒருவன்” என்றும் வணங்கப்படுகின்றாா்.
தேவா்களுக்குத் தலைவனாக (நாதனாக) இருந்து எம்பெருமான் போா் புரிந்ததால் இவருக்கு தெய்வநாயகன் மற்றும் தேவநாதன் என்ற திருநாமங்கள் வழங்கலாயிற்று. தேவா்களுக்கு மும்மூா்த்திகள் வடிவில் காட்சி தந்ததால் இத்தலத்தின் உற்சவ மூா்த்திக்கு மூவராகிய ஒருவன் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பிரம்மனுக்கு அடையாளமான தாமரை மலரைத் தனது திருக்கரத்திலும் மஹா விஷ்ணுவிற்கு அடையாளமான சங்கு, சக்கரங்களைத் தாங்கியும் சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும் சடா முடியும் தரித்து தேவநாதப் பெருமான் திருக்காட்சி கொடுப்பதால் 'த்ரிமூா்த்தி' என்றும் 'மூவராகிய ஒருவன்' என்றும் வணங்கப்படுகின்றாா்.கருவறை விமானத் தின் கீழ், கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் ஈசனின் வடிவமான ஶ்ரீதெட்சிணாமூா்த்தியும் மேற்கு திசையில் ஶ்ரீநரசிம்மரும் வடக்கில் ஶ்ரீபிரம்மனும் அமைந்துள்ளது இத்தல பெருமான் 'மூவராகிய ஒருவன்' எனும் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. இத்தலத்து எம்பெருமானை வழிபாடு செய்ய, மும்மூா்த்திகளையும் ஒருங்கே வழிபட்ட பேறு அன்பா்களுக்குக் கிட்டும்.
திருமலைக்கு நோ்ந்து கொண்டு செல்லமுடியாதவா்கள் தேவநாதப் பெருமானுக்கு அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனா்.

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
வைகுண்ட பதவி அருளும் திவ்ய தேசம்
அமாவாசை மட்டுமின்றி எல்லா நாட்களும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க கூடிய தலம்
திருநெல்வேலி - திருச்செந்தூர் வழிப்பாதையில் 30 கி.மீ. தூரத்தில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
'குருகு' என்பதற்கு தமிழில் சங்கு என்று பொருள். இத்தல பெருமாளை சங்கன் எனும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்டு பேறு பெற்றதால் இத்தலம் குருகூர் என்று ஆனது. பின்னர் நம்மாழ்வாரால் ஆழ்வார் திருநகரி என்றானது.
முன்னொரு காலத்தில், இத்தலத்தில் ஒரு யானையும், வேடனும் போரிட்டு மடிந்தனர். இங்கு இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். எனவே இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம்.

சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்யும் அஷ்ட நாக கருடாழ்வார்
கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்யும் போது நீல நிறமாகும் அதிசயம்
சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி.
இது பதினெட்டு சித்தர்கள் வழிபட்ட தலமாகும்.இக்கோவில் தென் பத்ரி என்று அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கடலில் குளித்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் அர்த்த சேது என்னும் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் குளித்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகராக இயங்கியபோது, சீனப் பயணி யுவான் சுவாங் இந்தத் துறைமுகம் வழியாக வந்து தான் காஞ்சிபுரம் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் கருட பகவான் சிறந்த வரப்பிரசாதி. இவர் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாக அணிந்து, அஷ்ட நாக கருடனாக காட்சி தருகிறார். இவர் ஒரு நாகத்தை தலையில் கிரீடமாகவும், இரண்டு நாகங்களை காதணிகளாகவும், கழுத்தில் இரண்டு நாகங்களை மாலையாகவும், இரண்டு நாகங்கள் இரண்டு கைகளில் வங்கி போன்ற ஆபரணமாகவும், இடுப்பின் ஒன்றை அரைஞாண் கயிறு போலவும் தரித்திருக்கிறார். வழக்கமான அஞ்சலி முத்திரை இன்றி, இவர் கையில் தாமரையை வைத்திருக்கிறார். மற்றொரு சிறப்பு என்னவென்றால், கருடனின் தலையும் பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது, கருடன் எப்போதும் பெருமாளுக்காக திருவடி சேவை (மகாவிஷ்ணுவின் பாதங்களுக்கு பிரார்த்தனை மற்றும் சேவை) செய்து வருவதைக் காட்டுகிறது. எனவே, கருடாழ்வாருக்கு செய்யும் பிரார்த்தனைகள் நேரடியாக பெருமாளின் பாதங்களில் விழுகின்றன என்பது ஐதீகம்.
இந்த கருடாழ்வார் தான், பழனி மலை முருகன் சிலையை வடித்த போகர் சித்தருக்கு, பறக்கும் சக்தியை அளித்தவர்.
இங்குள்ள கருடாழ்வார் நாகங்களை ஆபரணங்களாக அணிந்து, அஷ்ட நாக கருடனாக காட்சி தருவதால் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக இத்தலம் விளங்குகின்றது. இந்த கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்யும் போது, அந்தப் பாலானது நீல நிறமாக மாறுவது ஒரு தனி சிறப்பாகும். பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இந்த சன்னதியில் நெய் தீபங்களை ஏற்றுகிறார்கள். இவருக்கு பக்தர்கள் நெய்வேத்யமாக அமிர்த கலச கொழுக்கட்டை படைக்கிறார்கள்.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில்
பக்தர்களை பார்த்த வண்ணம் சயனித்திருக்கும் பெருமாளின் அரிதான கோலம்
திருப்பூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இந்த கோவிலில் வீரராகவ பெருமாள், கனகவல்லித்தாயார் மற்றும் பூமிதேவித்தாயாருடன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீகனகவல்லித்தாயார் தனி சன்னிதியில் அமர்ந்த நிலையிலும், ஸ்ரீபூமாதேவி தாயார் நின்ற கோலத்திலும் தனி சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, வீரராகவ பெருமாளை வழிபட்டுச் சென்றனர். இத்தலத்துக்கும், ராமாயணத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. ராமாயண காலத்தில் வாலியின் இருப்பிடமான, நொய்யல் நதியின் தென்பகுதி தற்போது 'வாலிபாளையம்' என்று அழைக்கப்படுகிறது. வாலியின் மனைவி தாரையின் இருப்பிடமே தாராபுரமானது. சுக்ரீவன் வழிபட்ட தலம் ஒன்று, சர்க்கார் பெரியபாளையத்தில் 'சுக்ரீஸ்வரன் கோவில்' என்ற பெயரில் உள்ளது.
இக்கோவில் மூலவர் வீரராகவர் பெருமாள், புஜங்க சயனமாக தென்திசையில் சிரம் வைத்து, வட திசை திருப்பாதம் நீட்டி, மேற்குத் திசை முதுகு காட்டி, கிழக்குத் திசையில் திருமுகம் காட்டி, ஆனந்த நிலையில் பள்ளி கொண்டிருக்கிறார். பொதுவாக சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளின் திருமுகம் மேல் நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் தன்னை வணங்கும் பக்தர்களை பார்த்த வண்ணம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு. இப்படி பக்தர்களை பார்த்த வண்ணம் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வேறு எந்தக் கோவிலிலும் காண முடியாது.

பொன்னேரி திருஆயர்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவில்
அரியும் அரணும் சந்தித்துக் கொள்ளும் அபூர்வ திருவிழா
இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத சந்திப்பு விழா
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருஆயர்பாடியில் ஆரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில். இக்கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது. சோழமன்னன் கரிகாலன் கட்டியதால் கோவிலுக்கு கரிகிருஷ்ண பெருமாள் கோவில் என்ற பெயர் ஏற்பட்டது .
அதேபோன்று பொன்னேரியின் மையப்பகுதியில், ஆரணி ஆற்றங்கரையில் 9-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாள் கரிகிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் சந்திக்கும் 'சந்திப்பு திருவிழா', ஆண்டுதோறும் இப்பகுதியில் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெற்று வருகிறது. அகத்திய முனிவருக்கும், பரத்வாஜருக்கும் கரிகிருஷ்ண பெருமாள், அகத்தீஸ்வரர் ஒருசேர வந்து காட்சி அளித்ததை உணர்த்தும்விதமாக பொன்னேரியில் இவ்விழா நடைபெறுகிறது. அரியும் அரணும் ஒன்றே என உலகத்திற்கு உணர்த்தும் விதமாக இந்த சந்திப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது.
சந்திப்பு திருவிழாவின் போது ஆனந்தவல்லி தாயார், விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் அகத்தீஸ்வர பெருமான் ரிஷப வாகனத்திலும், கரிகிருஷ்ண பெருமாள் கருட வாகனத்திலும் ஒருசேர பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த சந்திப்பு விழா இந்தியாவிலேயே வேறு எங்கும் நடத்தப்படாத திருவிழாவாகும். அப்போது அங்கு கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா.. கோவிந்தா' கோஷமும், 'நமச்சிவாய.. நமச்சிவாய' கோஷமும் விண்ணை பிளக்கும்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்
தமிழகத்திலேயே மிகப்பெரிய திருமேனி உடைய சக்கரத்தாழ்வார்
108 வைணவத் திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருவேங்கடம் அடுத்து மிக முக்கியமான திவ்ய தேசமாக கருதப்படுவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகும். தாயார் திருநாமம் பெருந்தேவித் தாயார்.
இக்கோவிலின் பிரதான குளத்திற்கு அனந்த சரஸ் என்று பெயர். இந்த அனந்த சரஸ் குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார், ஏழு அடி உயரத் திருமேனியுடன் இருக்கின்றார். இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சக்கரத்தாழ்வார் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்கும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும், வாழ்வில் வளமும் நிம்மதியும் அடையலாம் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வரை தரிசனம் செய்து பின்னர் ஸ்ரீவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பசு வெண்ணெய்யில் சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தால் அக்னியால் விளையும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.

மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில்
மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெருமாள் கோவில்
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் பெருமாள்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருமணஞ்சேரி என்னும் தேவார தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது எதிர்கொள்பாடி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில். கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் எதிர்கொள்பாடி என்று அழைக்கப்படும் மேலத்திருமணஞ்சேரி ஆகும். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.
பார்வதி தேவி, சிவபெருமானை பூலோக முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி, அவரை மணம் முடித்த தலம் தான் திருமணஞ்சேரி. திருமணஞ்சேரி தல புராணம், பார்வதி தேவி பசுவாகவும், அவளைக் கவனித்துக்கொள்வதற்காக பெருமாள் மூத்த சகோதரனாக அவளுடன் வந்ததையும் விவரிக்கின்றது. பின்னர், பார்வதி தேவி பரத முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை மணந்தார். அந்த திருமணத்தில் பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து கொடுத்தவர் பெருமாள். அதனால் இக்கோவில் மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர் பெருமக்களையும் முனிவர்களையும், திருமால் வரவேற்று உபசரித்த தலம் தான் எதிர்கொள்பாடி. இன்றும் வருடாந்திர கல்யாண உற்சவத்தின் போது, இக்கோவிலில் இருந்து சிவன் கோவிலுக்கு கல்யாண சீர் (திருமணப் பரிசுகள்) கொண்டு செல்லப்படுவதால் இந்த நம்பிக்கை வலுப்பெற்றது.
கருவறையில் மடியில் லட்சுமி தேவியை இருத்தியபடி பெருமாள் காட்சி தருவது ஒரு சிறப்பாகும். பெருமாள் உற்சவரின் திருநாமம் வரதராஜர்.பொதுவாக கோவில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இதற்கு காரணம் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது, தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு தன் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததால்,அவர்கள் முகமாக, அதாவது, மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீ லட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் லட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்
இடுப்பில் பிச்சுவா கத்தியும், கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தியும் தாங்கிய ஆஞ்சநேயர்
ஆங்கிலேய கலெக்டரின் புற்று நோயை குணப்படுத்திய ஆஞ்சநேயர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்திருக்கிறது காடு அனுமந்தராய சுவாமி கோவில். முற்காலத்தில் கோவில் இருந்த இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு அனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில், கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆஞ்சநேய பக்தரான இவர் நாடு முழுவதும் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்.
காடு அனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் உள்ளார். இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. வலது இடுப்பில் பிச்சுவா கத்தியும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகளும் காணப்படுகிறது. வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சவுகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. முகம் வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தி இருக்கிறது. முகத்தின் வலதுபுறம் சக்கரமும், இடதுபுறம் சங்கும் உள்ளன. பின்புறத்திலுள்ள வாலானது வலது கையைத் தொட்டு முகத்தை நோக்கி மேல்நோக்கிச் சென்று பின் கீழ்நோக்கி வந்து இடது கையை தொட்டு முடிவடைகிறது. வாலில் மூன்று மணிகள் உள்ளன.
1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க காடு அனுமந்தராய சுவாமியை வழிபடுமாறு கூறினர். கலெக்டரும் அவ்வாறே செய்ய நோய் நிவர்த்தியானது. இதற்கு நன்றிக்கடனாக கோவிலில் கர்ப்பக்கிரகத்தை பெரிதாகக் கட்டினார். கோபுரம் கட்ட முயன்ற போது, பக்தர் ஒருவரின் கனவில் அனுமந்தராய சுவாமி தோன்றி, கோபுரம் தேவையில்லை என்று கூறியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்தக் கோவில் ஆஞ்சநேயருக்குரிய தலமாக இருந்தாலும், அவரது நாதனான இராமபிரானுக்கே முதல் பூஜை நடக்கிறது. அதே போல் பிரம்மோற்சவமும் நாராயணனின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மருக்கு நடத்தப்படுகிறது. இங்குள்ள இலட்மி நரசிம்மர் வெகு நாட்களாக காவிரியும், பவானியும் சங்கமமாகும் கூடுதுறையில் தண்ணீரில் ஜலவாசம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் பக்தர் ஒருவருக்குத் தரிசனமளித்தார். அவர் அந்தச் சிலையைக் கொண்டு வந்து இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில்
மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெருமாள் கோவில்
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் பெருமாள்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருமணஞ்சேரி என்னும் தேவார தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது எதிர்கொள்பாடி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில். கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் எதிர்கொள்பாடி என்று அழைக்கப்படும் மேலத்திருமணஞ்சேரி ஆகும். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.
பார்வதி தேவி, சிவபெருமானை பூலோக முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி, அவரை மணம் முடித்த தலம் தான் திருமணஞ்சேரி. திருமணஞ்சேரி தல புராணம், பார்வதி தேவி பசுவாகவும், அவளைக் கவனித்துக்கொள்வதற்காக பெருமாள் மூத்த சகோதரனாக அவளுடன் வந்ததையும் விவரிக்கின்றது. பின்னர், பார்வதி தேவி பரத முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை மணந்தார். அந்த திருமணத்தில் பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து கொடுத்தவர் பெருமாள். அதனால் இக்கோவில் மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர் பெருமக்களையும் முனிவர்களையும், திருமால் வரவேற்று உபசரித்த தலம் தான் எதிர்கொள்பாடி. இன்றும் வருடாந்திர கல்யாண உற்சவத்தின் போது, இக்கோவிலில் இருந்து சிவன் கோவிலுக்கு கல்யாண சீர் (திருமணப் பரிசுகள்) கொண்டு செல்லப்படுவதால் இந்த நம்பிக்கை வலுப்பெற்றது.
கருவறையில் மடியில் லட்சுமி தேவியை இருத்தியபடி பெருமாள் காட்சி தருவது ஒரு சிறப்பாகும். பெருமாள் உற்சவரின் திருநாமம் வரதராஜர்.பொதுவாக கோவில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இதற்கு காரணம் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது, தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு தன் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததால்,அவர்கள் முகமாக, அதாவது, மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீ லட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் லட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில்
சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் ராமபிரானின் ஆபூர்வ தோற்றம்
ராம லட்சுமண சகோதரர்கள் வில்லும் அம்பும் ஏந்தி ஏரியை காத்த அதிசயம்
சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில். மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிட ப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் வகுளாரண்ய ஷேத்திரம் என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அப்பகுதி மதுராந்தகம் என்றும், கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்களம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இக்கோவில் கருவறையில் ராமபிரான் எட்டு அடி உயர திருமேனியுடன், சீதை மற்றும் அவரது சகோதரர் லட்சுமணனுடன் காட்சி தருகிறார். சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண் டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். பொதுவாக கோவில்களில் ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ராமபிரான் சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் தோற்றமானது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக ராமபிரான் இவ்வாறு காட்சி தந்ததார். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இந்த தாயார் சன்னதி திருப்பணியின் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஏரி காத்த ராமர்
சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னர் லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். கோவிலுக்கு பின்புறம் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்து அடிக்கடி கரை உடைப்பு ஏற்படும். இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஆங்கிலேய கலெக்டர் லயோனல் பிளேஸ் ஏரிக்கரையை பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோவிலுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவர் 'உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், இவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் தாயார் சன்னதி திருப்பணியை செய்து தருகிறேன்,'என்றார். மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி ஏரிக்கரையில் காவலாக நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த கலெக்டர் லயோனல் பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்திருந்து ஏரிக்கரையை காத்து நின்றனர் என்று அறிந்தார். பின்பு, தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. 'இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது' என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம். ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, 'ஏரி காத்த ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது.
ராமநவமி பஞ்ச அலங்காரம்
ராமநவமி விழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். ராமநவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும்.

மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில்
சாளக்கிராமத்திலான அபூர்வ நவநீத கிருஷ்ணன்
குழந்தை பாக்கியம் அருளும் ரோகிணி நட்சத்திர வழிபாடு
திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவில், அம்பாசமுத்திரம் தாலுகாவில் அமைந்துள்ளது மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். கருவறையில் மூலவர் நவநீத கிருஷ்ணன், சாளக்கிராமத்திலான திருமேனி உடையவர். அவர் குழந்தை வடிவில், இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டை வைத்துக்கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்தக் கோவில் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், அசதி காரணமாக வெயிலிலேயே படுத்து உறங்க தொடங்கி விட்டார்.அப்பொழுது ஒரு பாம்பு அங்கு வந்து, அவரது தலைக்கு மேலே தனது படத்தை எடுத்து அவருக்கு நிழல் அளித்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுவன், அவரைப் பார்த்து பிற்காலத்தில் நீங்கள் அரச பதவியை அடைவீர்கள் என்றும், அப்படிப்பட்ட நிலையை அடைந்தால், அவர் எதிர்காலத்தை கணித்த தனக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறினான். பின்னர் படிப்பறிவில்லாத மாடு மேய்ப்பவருக்கு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வேலை கிடைத்து, மிகக் கடின உழைப்பால் விரைவில் அமைச்சராக உயர்ந்தார். தன் எதிர்காலத்தை கணித்த சிறுவனைத் தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் இங்கு வந்து, மேலசெவல் என்ற இடத்தில் நவநீத கிருஷ்ணர் கோவிலைக் கட்டினார்.
இந்த நவநீத கிருஷ்ணரை ரோகிணி நட்சத்திர நாளில், பால் பாயசம் படைத்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு, சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில்,மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்து உற்சவரை டோலோத்சவம் நடத்தி நாமசங்கீர்த்தனம் செய்து குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தம்பதிகளின் நட்சத்திரம் கோத்ரம் பெயரில் விசேஷ அர்ச்சனைகள் செய்கிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டு, ஏராளமான வெளியூர் தம்பதிகள் சந்தான பாக்கியம் அடைந்து இருக்கிறார்கள்.
திருமணம் தடை அகல, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய தோஷம் நீங்க, நெஞ்சக நோய் தீர, எதிரிகளை வெற்றிபெற, அதிகாரப் பதவி கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில்
நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில்
வருடம் முழுவதும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் ஒரே பெருமாள் கோவில்
தஞ்சாவூரில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில். கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேச பெருமாள், நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டி ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக காட்சி தருகிறார்.
பொதுவாக பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும். பெருமாள் கோவில்களில் எல்லாம், வடக்கு வாசல் என்பதுதான் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் என்ற பெயரில் திறக்கப்படும். மேலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும் நுழைவு வாசலும் இருக்கும். ஆனால், இந்தக் கோவிலில் வடக்கு நோக்கி இருக்கும் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றுதான் ஒரே நுழைவு வாயில் ஆகும். இக்காரணத்தால், இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள் ஆண்டு முழுவதும், தினமும் நித்திய சொர்க்கவாசல் வழியாக உள்ளே சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வெளியே வரலாம் . எனவே, இந்தத் தலம் நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்ததன் பின்னணியில், ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வேங்கடேச பெருமாள், தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசல் போல நுழைவு வாசல் வைத்து ஒரு கோயில் கட்டு என பணித்தார். இந்தத் தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கலியுக வேங்கடேச பெருமாளாக எழுந்தருளி காட்சி தருவேன். இத்தலத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் ,திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்திய சொர்க்கவாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்ற பலனையும், வைகுண்ட பதவியும் தந்தருள்வேன் என்று கூறி மறைந்தார்.
இக்கோவிலை 12 முறை சுற்றி வந்து நல்லெண்ணெய் தீபம் இட்டு வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் விருத்தி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில்
பாவங்களை நீக்கும், திருமண வரம் அருளும் மோட்சத் தூண்கள்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் ,சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திவ்ய தேசம் திருஆதனூர். பெருமாளின் திருநாமம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன். தாயாரின் திருநாமம் பார்க்கவி.
கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் பாதத்தருகே காமதேனு,காமதேனுவின் மகள் நந்தினி, சிவபெருமான், பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் உள்ளனர்.
கைகளில் ஏடு (ஓலைச் சுவடி), எழுத்தாணி, தலைக்கு மரக்காலை வைத்து, ஜீவாத்மாக்களின் நல்ல மற்றும் தீய செயல்களை கணக்கிட்டு அவர்களை ஆள்வதால், திருமால் 'ஆண்டு அளக்கும் ஐயன்' என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது. திருமாலை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் (ஆ,தன்,ஊர்) ஆதனூர் என்ற பெயர் இவ்வூருக்கு கிட்டியது.
இக்கோவிலில், கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை வலம் வந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டு, பெருமாளின் பாதம், முகத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். இத்தூண்கள் மோட்சத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல இத்தலத்து மோட்சத் தூண்களை இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து, இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங்கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில், இத்தலத்திலும் ஸ்ரீரங்கத்திலும் தான் மோட்சத் தூண்களைக் நாம் காண முடியும்.
வைணவ நவக்கிரக தலங்களில் இத்தலம் குரு பரிகார தலமாகக் கருதப்படுகிறது.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் எழுப்பும் அபூர்வ இசைத் தூண்
ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கிருஷ்ணன் சிற்பம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள திவ்ய தேசம் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
இக்கோவில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. அற்புதமான கற்சிலைகள் ஆலயம் முழுவதும் நிறைந்துள்ளன. கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள், பல வித குரங்குகள், யாளி உருவம் அமைந்த தூண்கள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம். நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை. ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட கிருஷ்ணன் சிற்பத்தின் நுணுக்கம் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
தூண் புடைப்புச் சிற்பங்களாக யானை, காளையை அடக்கும் வீரன், சிம்மம் போன்ற அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோவிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும்உள்ளன.
இந்த ஆலயத்தில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. அதில் ஒன்றை தட்டினால் மூன்று சுரங்களை எழுப்புகிறது . மற்றதில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்தத் இசைத் தூணின் இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு, மாறி மாறி ஊதினால் ஒன்றில் சங்கின் ஒலியும், மற்றதில் எக்காள ஒலியும் கேட்கிறது.
இக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டது. கோவில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோவிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நெல் அளவைத் திருநாள்
நெல் அளவை கணக்கிட, படியளக்கும் பெருமாள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகத்து உயிர்களை காத்து ரட்சிப்பவர் பெருமாள். இதைத்தான் 'பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கத்தில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே, வருஷத்துக்கு ஏழு தடவை படியளக்கிறார். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி ,தை ,மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவை திருநாள், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள்.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையில் இருந்து நம்பெருமாள் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு?; செலவு எவ்வளவு? மீதி இருப்பு எவ்வளவு?... என்று கணக்கிட்டுப் பார்க்க, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகக் கிளம்புகிறார். கணவரின் சரிபங்கான மனைவிக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணர்த்துவதற்காகத்தான், நெல் அளவைத் திருநாள் அன்று பூதேவி ஸ்ரீதேவி சகிதமாக எழுந்தருளுகிறார்.
நம்பெருமாள். ஆரியபட்டாள் வாசல் வழியே வந்து செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப்பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிசாரகம் செய்பவர் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து நம் பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
பெருமாள் அருகில் இருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி, கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன் ஆயிந்தேன்' எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதமான சடாரி சாத்தினாலே அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். உடனே கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல்லை அளக்கத் தொடங்குகிறார். திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து பெரிய கோயில் எனக் கூறி இரண்டாவது மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது. ‘நிரவி விட்டு அள’ என்று ஸ்தானிகர்தான் குரல் கொடுக்கிறார். ‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளை கட்டளையிடுவதாக இது ஐதீகம்.
அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே எம்பெருமானின் நேரடி பார்வை நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் திருக்கொட்டாரத்தில் இருந்து எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும் மக்கள் ஆரோக்கியமும், தானிய உற்பத்தி சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்.
உலகம் யாவுக்கும் படி அளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிப்பது? அதனால் அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி என அளந்து போடப்படுகிறது. தனது நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், அதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார், உலகிற்கெல்லாம் படியளக்கும் பெருமாள். இப்படியாக, ஸ்ரீரங்கத்தில் நெல் அளவை திருநாள் கொண்டாடப்படுகிறது .