நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் திவ்ய தேசம்

திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நான்குவழிச் சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 8 சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இத்தலத்தின் பெருமைகள் பற்றி நரசிம்ம புராணம், ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது.

இத்தலத்தில் பெருமாள் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக இவரை கொண்டாடுகின்றனர்.

பெருமாளுக்கு தினசரி நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம்

இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் 25 அடி நீளம், 15 அடி அகலமுள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட இந்த எண்ணெய், மழைக்கும், வெயிலுக்கும் திறந்த வெளியாக கிணற்றில் இருந்தாலும் கெட்டுப் போகாமல் இருப்பது விசேஷம் ஆகும். இந்த எண்ணெய் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நோய்களைத் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்

இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.

இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய 'அகத்தியம்' என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.

Read More
தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில்

தான்தோன்றிமலையில் திருப்பதி வெங்கடாஜலபதி எழுந்தருளிய கதை

கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தான்தோன்றிமலை.  இங்கு திருப்பதி வெங்கடாஜலபதியே 'கல்யாண வேங்கடரமண சுவாமி’ எனும் திருப்பெயருடன் குன்றின் மேல் எழுந்தருளியிருப்பதால் இத்தலம்  தென்திருப்பதி என்று போற்றப்படுகிறது.. குன்றின் மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வேங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.

 மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அரரசவையில்  டங்கணாச்சாரி என்ற சிற்பி இருந்தார். சிறந்த சிவபக்தர். அவரது மனைவி சுந்தராம்பிகை. இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

ஒரு நாள்  சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தபோது, தெருவில்  ஒரு கூட்டம் 'கோவிந்தா... கோவிந்தா'   என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

சுந்தராம்பிகை  கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து  விசாரித்தாள். அதற்கு அந்த பெண்மணி, ‘அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக் கொண்டு பெருமாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம்’ என்றாள்.

இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனையை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. சுந்தராம்பிகை பிரார்த்தனையை நிறைவேற்ற நினைத்தாள். இதுவரை சுந்தராம்பிகை கணவரிடம் பிரார்த்தனை பற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள்

அதைக் கேட்ட டங்கணாச்சாரி கோபமடைந்தார். 'சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன்' என்று எச்சரித்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.

குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, காரணத்தைக் கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள். அதைக் கேட்ட குண்டலாச்சாரி, 'அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன். நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம்' என்றான். மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. 

அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான். மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான். அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, 'குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்?' என்று கேட்டார். குண்டலாச்சாரி, 'நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமாளை அழைக்க போகிறேன்' என்று கூறினான்.

இதனை கேட்ட சந்நியாசி, 'உன்னால் இக்காரியம் முடியக் கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா!' என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான். 

எப் போதும் போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார். அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 'ஒரே நாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டாரே' என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார். மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். 

டங்கணாச்சாரி, கடும் கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்றார். கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் அங்கு பதுங்கி இருந்தார். அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினார்.

அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினார். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பிகை துடித்தாள். இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, 'கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன்' என்று கூறினார்.

அதைக் கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு 'நான் துளசியை கையால் தொடமாட்டேன்' என்றார். இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து 'இந்த இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல' என்று சொல்லவும், அரை மனதுடன் துளசியை பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி.

அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றிப் புகழ்ந்தனர்.

சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான்.

அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். சிறுவன், அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் சந்நியாசி மறைந்து விட்டார்.

குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும் வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. ;குண்டலாச்சாரி என் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையைக் கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்' என்று கூறியது.

Read More
புன்னைநல்லூர் கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

புன்னைநல்லூர் கோதண்டராமர் கோவில்

சாளக்கிராமத்திலான அபூர்வ இராமர் விக்கிரகம்

தஞ்சாவூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். இந்த ஊரில் மிக பிரசித்திப் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில், சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த கோதண்டராமர்கோவில் அமைந்துள்ளது.. இந்தக் கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சாளக்கிராமம் எனும் கல்லால் ஆனவர். இத்தகைய விக்ரகத்தை வேறெங்கும் காண்பது அரிது.

வைணவ திருமண சம்பிராயபபடி, மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்கிராமத்தையும் பெண் வீட்டார் சீதனமாக அந்தக் காலத்தில் வழங்கி_வந்தனர். சாளக்கிராமம் எனும் கல், ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்கிராமம் தோன்றுகிறது.

நேபாளமன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒரு கட்டத்தில் சம்பந்தியானார்கள். நேபாள மன்னர், மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு தங்கம், வெள்ளி, பட்டாடைகள் முதலிய ஏராளமான சீர்வரிசைகள் வழங்கினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக, சாளக்கிராமத்தை வழங்கினார். பொதுவாக, சாளக்கிராமம் என்பது உள்ளங்கை அளவோ அல்லது அதை விட சற்று பெரிதாகவோ இருக்கும். ஆனால், தஞ்சாவூர் மன்னருக்குச் சீர்வரிசையாக மிகப் பெரிய சாளக்ராமம் வழங்கப்பட்டது.

சிலகாலத்திற்குப் பின் மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ், தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது, இந்த மிகப் பெரிய சாளக்கிராமத்தைக் கொண்டு மன்னர் பிரதாபசிங் அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்தார். கருவறையில் குடி கொண்டிருக்கும் மூலவர், சாளக்கிராமமாக காட்சி தருவது இந்திய அளவில் அரிது என்று ஆச்சார்ய பெருமக்கள் போற்றுகின்றனர்.

ஸ்ரீகோதண்டராமர் ஐந்தடி உயரத்துடன், நின்ற கோலத்தில், ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதாதேவி ஆகியோருடன் ஸ்ரீசுக்ரீவனும் உடனிருக்க சாந்நித்தியத்துடன் கனிவுடனும் கருணையுடனும் சேவை சாதிக்கிறார்

ஸ்ரீகோதண்டராமரை தரிசித்தால், பிறவிப் பயனை அடையலாம். காரியங்கள் யாவும் தடையின்றி நிகழும். பாவங்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

Read More
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

பெருமாள் மூன்றடி மண் தானம் கேட்ட திவ்ய தேசம்

பெருமாள் விண்ணையும் மண்ணையும் அளந்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்த தலம் தான் திருக்கோவிலூர் திவ்ய தேசம். இத்தலத்து பெருமாளின் திருநாமம் உலகளந்த பெருமாள். இவருக்கு உலகளந்த திருவிக்கிரமன் என்ற திருநாமமும் உண்டு. கருவறையில் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். நெடிய திருமேனியுடைய இப்பெருமாள் மரத்தால் ஆனவர். இவர் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். பெருமாளின் காலடியில் தாயார், மிருகண்டு, மகாபலி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.

மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.

பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.

Read More
மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள் கோவில்

மூன்று வாயில்கள் வழியாக தரிசனம் தரும் பெருமாள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17 கி.மீ. தொலைவில் மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோவிலாகும்.

அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள் என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை, நாம் தரிசிக்கலாம்.

பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு, நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம், மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர். பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு ஆசி வழங்குகிறார். பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார். பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு.

கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி நிவர்த்தியடையும் தலம்

'கண் நிறைந்த பெருமாள்' என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் என்கிறார்கள். கண் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், இப்பெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர். இத்தலத்து குளத்தில் நீராடி, கண் நிறைந்த பெருமாளுக்கு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமமிட்டு பூஜித்து ஆரத்தி காட்ட அறுவை சிகிச்சை செய்து பார்வை சரிவர கிடைக்காதவர்களுக்கும் பரிபூரண பார்வை கிட்டும் என்பது அனுபவ நம்பிக்கை.

பித்ரு சாபம், தோஷங்கள் போக்கும் பெருமாள்

முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள் இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது உறுதி.

பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
கும்பகோணம் சாரங்கபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சாரங்கபாணி கோவில்

அட்சய திருதியை - கும்பகோணம் பன்னிரெண்டு கருடசேவை உற்சவம்

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள பன்னிரெண்டு வைணவ கோவில்களிலிருந்து, பன்னிரெண்டு கருட வாகனங்களில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் அருள்பாலிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஏப்.23-ம் தேதி கும்பகோணம் டிஎஸ்ஆர் பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு காட்சி தரவுள்ளனர்.

இதில், ஸ்ரீசாரங்கபாணி, ஸ்ரீசக்கரபாணி, ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீஆதிவராகபெருமாள், ஸ்ரீராஜகோபாலசுவாமி, ஸ்ரீபட்டாபி ராமர், பட்டாச்சாரியார் தெரு ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், ஸ்ரீவேணு கோபால சுவாமி, ஸ்ரீவரதராஜபெருமாள் உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளுவர். அப்போது, எதிரில் ஆஞ்சநேயர் எழுந்தருளியவுடன், அந்த பெருமாளுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.

பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். மேலும் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

Read More
திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோவில்

அம்பு அணையால் ஏரி உடையாமல் காத்த ராமர்

சென்னையில் இருந்து சுமார் 32 கி.மீ. தூரத்திலுள்ள திருநின்றவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது ஏரி காத்த ராமர் கோவில். திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.

திருநின்றவூர் திவ்ய தேசமான பக்தவத்சலப் பெருமாள் கோவிலுக்கும், பூசலார் நாயனாரால் மனக்கோயில் கட்டி வழிபடப்பட்ட இருதயாலீஸ்வரர் கோவிலுக்கும் இடையே உள்ளது இத்தலம். பக்தவத்சலப் பெருமாள் கோவிலை விட, திருநின்றவூர் ஏரிக்கரையில் உள்ள இக்கோவில் மிகப் பிரசித்தமானது என்கிறார்கள். திருநின்றவூர் ஏரியானது தமிழ்நாட்டினிலே அமைந்துள்ள ஏழாவது பெரிய ஏரியாகும்.

கருவறையில் கிட்டத்தட்ட எட்டடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி, இதழோரத்தில் குறுநகை பொலியக் காட்சி தருகிறார் ராமபிரான். உடன் ஆயுதமின்றி லக்ஷ்மணர் தனது வலது கரம் வில்லைப் பிடிப்பதைப் போன்ற பாவனையிலும், சீதா பிராட்டி கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் விளங்குகின்றனர். இந்த விக்கிரகங்கள் அனைத்தும் சுதையால் செயப்பட்டுள்ளன.

பொழுது புலர்ந்தது. திடுக்கிட்டு எழுந்த மக்கள் வெள்ளத்தின் நிலைமையைக் காண வெளியே வந்தனர். அப்போது சிலர் ஏரிக்கரையில் இருந்து, 'ராமர் நம்மைக் கைவிட வில்லை. பாருங்கள் இந்த அதிசயத்தை'என்று கூவியவாறு தலை மேல் கரம் குவித்து ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட மற்றவர்களும் ஏரியை நோக்கி ஓடினர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை உவகையில் ஆழ்த்தியது. கரை முழுவதும் ஒரே சீராக அம்புகள் தைக்கப்பட்டிருந்தன. அம்பு அணைக்குள், தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது. ராமரின் கருணையை எண்ணி, மக்கள் பேரானந்தம் அடைந்தனர். உடனே ஏரிக்கரையில் ராமபிரானுக்குக் கோவில் அமைக்கும் பணிகளைத் துவக்கினர்.

Read More
ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில்

பள்ளி கொண்ட பெருமாள்களில் பெரிய பெருமாள்

திருக்கோயிலூரிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும், சென்னையிலிருந்து 220 கி.மீ. தூரத்திலும் உள்ளது ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில். தாயார் திருநாமம் ரங்கநாயகி.

தமிழகத்திலுள்ள ஶ்ரீரங்கநாதா் திருமேனிகளிலேயே மிகப் பெரிய விக்கிரகத் திருமேனி, ஆதி திருவரங்கத்தில் அமைந்துள்ள அா்ச்சாவதாரத் திருமேனியாகும். இத்தலம் சத்திய யுகமான 'கிருதயுகம்' முதல் திகழ்வதாலும், ஶ்ரீரங்கத்திற்கு முந்தைய திருத்தலமாக இருப்பதாலும் இத்தலம் 'ஆதிதிருவரங்கம்' என்று அழைக்கப்படுகின்றது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீரங்கநாதா், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரிய திருமேனி உடையவர் என்பதால், 'பெரிய பெருமாள்' என்று வணங்கப்படுகின்றாா்.

கருவறையில் மூலவர் ரங்கநாத பெருமாள், சுதையில் உருவான 29 அடி நீள திருமேனியுடன் சைன கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இவருடைய படுக்கையின் நீளம் 24 அடி. இவரது தலைப்பகுதியில் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளுடன் குடையாக உள்ளார் . ஸ்ரீதேவியின் மடியில் தலை சாய்த்துப் பூதேவி அடி வருடப் பள்ளிக் கொண்டிருக்கின்றார். மேலும் தலைப்பகுதியில் கருடன் வணங்கிய கோலத்தில் உள்ளார். வலக்கையைத் தலைக்கு அணைத்து, இடக்கையை உயர்த்தி, பிரம்மாவுக்கு உபதேசிக்கின்ற நிலையில் உள்ளார்.

மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்

இத்தலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஆதி திருவரங்கனின் சயனக் கோலத் திருமேனி சுதையால் அமைக்கப்பட்டது என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. தைலக் காப்பு மட்டுமே சாற்றப்படுகின்றது.ஶ்ரீமந்நாராயணனின் மச்ச அவதாரத் தலமாகவும் இத்தலம் வணங்கப்படுகின்றது. மீன ராசியில் பிறந்த அன்பா்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலம் ஆதி திருவரங்கம் தலமாகும்.

Read More
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்

காலபைரவர் மூச்சு விடும் அதிசயம்

திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி. இத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். தாயார் குறுங்குடிவல்லி

சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இக்கோவிலில் சிவபிரான் 'மகேந்திரகிரி நாதர்' என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்.

இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்க வகையில் இருக்கிறார். உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இவரே, இக்கோவிலின் காவல் தெய்வமாக இருக்கிறார்.

காலபைரவர் சன்னதியில், கருவறையின் மேற்பக்கம் ஒரு விளக்கும், கீழ்பகுதியில் ஒரு விளக்கும் ஏற்றப்பட்டிருக்கும். இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கும். இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாகக் காட்சியளிக்கும். இந்தக் கருவறைக்குள் எந்த திசையிலிருந்தும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் மேற்பகுதியில் உள்ள விளக்கின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டால் அசையும் தீபம் போல ஆடிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.

மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசைவது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூச்சை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூச்சு வெளிவிடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவதை பகதர்கள் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம்.

குழந்தைப்பேறு வேண்டி இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கிறது. இவருக்கு தயிரன்னமும், வடைமாலையும், பூசட்டையும் படைக்கப்படுகிறது.

Read More
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்

கருவறையில் உள்ள மூர்த்தஙகள் அனைத்தும் சுயம்புவாகத் தோன்றிய திவ்ய தேசம்

திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.

கோயிலின் கருவறையில் மூலவர் வானமாமலை என்கின்ற தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடிக்க , பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அமர்ந்திருப்பது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசிக் கொண்டும், சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோர் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.

இத்தலத்தில் பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடியும், மற்றொரு கையை மடியில் வைத்தும் காட்சி அளிக்கிறார். யார் தன் பாதத்தை சரணடைகிறார்களோ அவர்களுக்குத் தன் மடியில் இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள். இத்தகைய பெருமாள் கோலத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

சில தலங்களில் மூலவர் மட்டும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கருவறையிலுள்ள தோதாத்ரி நாதர், பூதேவி, ஸ்ரீதேவி, சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி, ஊர்வசி, திலோத்தமா ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டப்பத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 மூர்த்தங்களும் சுயம்புவாக உருவானவர்கள். இப்படி கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தஙகளும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

Read More
அதம்பார் கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அதம்பார் கோதண்டராமர் கோவில்

ராமாயண நிகழ்வுகளுடன் தொடர்புடைய அதம்பார் தலம்‍ ‍

அதம்பார் கோதண்டராமர் கோவில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது.

பஞ்ச ராம க்ஷேத்திரங்களில் இத்தலமும் ஒன்றாகும். மற்ற நான்கு பஞ்ச ராம க்ஷேத்திரங்கள் தில்லை விளாகம் (வீர கோதண்ட ராமர்) , வடுவூர் கோதண்ட ராமர் (வில்லேந்திய அழகிய ராமன்), பருத்தியூர்(ஸ்ரீ ராமர்), முடிகொண்டான்(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்) ஆகியவை ஆகும்.

பொதுவாக ராம, சீதா, லட்சுமண விக்ரகங்கள் தனித்தனியாக ஒரு பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும். இங்கு மூவர் உருவமும் ஒன்றாக ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இடதுகையில் வில்லும், வலதுகையில் அம்பும் கொண்டு ராமர் நிற்கும் தோரணை நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். வேறு எங்கும் இப்படியான வடிவில் நாம் ராமனைப் பார்க்க முடியாது.

பக்கத்தில் சீதையும், லட்சுமணரும் இருக்க, ராமர் திருவடி கீழ் வாய் பொத்தி உத்தரவு கேட்கும் பணிவான தோற்றத்தில் தாச ஆஞ்சநேயர்.

ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் இத்தலத்திற்கு அருகே இருக்கின்றன. சீதையிடமிருந்து ராமனைப் பிரிக்க, மாரீசன் பொன்மான் உருவில் பொய்மானாக வந்தான். அந்த மாயத் தோற்றத்தில் மயங்கிய சீதா, அதைப் பிடித்துத் தரும்படி கேட்டாள். 'வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது' என்று ராமன் மறுத்தான். சீதையின் முகம் வாடிவிட்டது. 'அவள் ஆசையைக் கெடுப்பானேன்' என்று மனைவியின் மீதுள்ள அன்பின் பொருட்டு, மானைப் பிடிக்கச் சென்றான் ராமன். ஆனால், 'அது மானல்ல! மாரீசன்' என்று தெரிந்ததும், 'உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என்று அதைத் துரத்தினான். மான் பலவகையிலும் மறைந்து மறைந்து ஓடியது. இறுதியில் மானை நோக்கி ராமன் அம்பை எய்த இடம்தான் இந்த 'அதம்பார்' தலம்.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டில்'ராமர் வில்லின் நாணை ஏற்றி இத்தலத்திலிருந்து மானை நோக்கி 'தம் ஹந்தும் கிருத நிச்சய; ஹதம் பார்' என்று உரைத்து அம்பை எய்தார் என்றும், "ஹதம் பார்"என்பதே பின்னர் திரிந்து "அதம்பார்" ஆயிற்று' எனவும் செய்தி உள்ளது.

அந்த அம்பு, பாய்ந்த சென்று மானைத் தைத்த இடம் இத்தலத்தை அடுத்துள்ள 'மாந்தை' (மான்+தை).

மான் அடிபட்டு ஓடிப்போய் உயிர்நீத்த இடம், மாந்தையை அடுத்துள்ள 'கொல்லுமாங்குடி'.

சீதைக்கு மாரீசன் பொன் மானாக வந்தது ''ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் 'நல்ல மான் குடி' என்ற நல்லமாங்குடி.

ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரீசன் வலப்பக்கமாக ஓடியது 'வலம் கை மான்'என்ற வலங்கை மான்.

ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது சீதை, தான் சென்ற வழியை அடையாளம் காட்டுவதற்காக, தனது பாத ஆபரணமாகிய பாதகத்தை (பாத அணிகலன்) கீழே எறிந்தது 'பாடகச்சேரி'.

ராமன், லக்ஷ்மணனிடமிருந்து தாடகை தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்தபுரம்.

Read More
நெடுங்குணம் யோக ராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நெடுங்குணம் யோக ராமர் கோவில்

கைகளில் வில்லும், அம்புமின்றி யோக நிலையில் அமர்ந்திருக்கும் அபூர்வ ராமர்

திருவண்ணாமலையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது நெடுங்குணம் யோக ராமர் கோவில். சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவில், தமிழ்நாட்டில், ராமருக்கு என்று அமைந்த தனிக்கோவிலில் மிகவும் பெரியது.

கருவறையில் ஸ்ரீராமபிரான் வித்தியாசமான கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். எப்பொழுதும் அவர் கையில் ஏந்தி இருக்கும் கோதண்டம் மற்றும் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமர்ந்த நிலையில் வலது கையை சின் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி, கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது ராமபிரானின் மிகவும் அபூர்வமான திருக்கோலம் ஆகும். இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே இடப்புறம் சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர, அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும்.

பிரார்த்தனை

இங்கே ராமபிரான் சாந்தமான கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், அவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயிறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.

Read More
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்

தாயார் பெருமாளைத் தாங்கியிருக்கும் திவ்ய தேசம்

திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது. மூலவர் திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்). உற்சவர் தாடாளன். தாயார் லோகநாயகி.

உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம் பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.

பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கியிருப்பது போல தாயார் லோகநாயகி, திரிவிக்கிரமரை பதக்கமாக தன் மார்பில் தாங்கியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது ஐதீகம். பெண்கள் இவரை வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.

Read More
திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில்

வசிஷ்ட முனிவரிடம் கிருஷ்ணர் நடத்திய லீலை

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணங்குடி. பெருமாள் திருநாமம் லோகநாதர். உற்சவர் தாமோதர நாரயணன். மேலும் இக்கோவில், பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு கிருஷ்ண க்ஷேத்திரங்கள் திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை ஆகியவை ஆகும்.

வசிஷ்ட முனிவர் கிருஷ்ண பக்தியில் மிக சிறந்தவர். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கிருஷ்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,கிருஷ்ணனை விரட்டி சென்றார்.

திருக்கண்ணங்குடியை 'கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகின்றன. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கிருஷ்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,'வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்' என்றார். அதற்கு ரிஷிகள்,'கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் தங்கிவிட்டார். விரட்டி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. கண்ணன் கட்டுண்டு நின்ற படியால், இத்தலம் 'கண்ணங்குடி' ஆனது.

கருடாழ்வாரின் சிறப்புத் தோற்றம்

எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார்.

குழந்தை வரம் அருளும் தலம்

குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

Read More
பள்ளி கொண்டான் பள்ளி கொண்ட பெருமாள் கோவில்
Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

பள்ளி கொண்டான் பள்ளி கொண்ட பெருமாள் கோவில்

பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம்

வேலூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பள்ளி கொண்டான். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் 'பள்ளி கொண்டான்' எனப்பட்டது. பெருமாள் 'உத்தர ரங்கநாதர்' எனப்படுகிறார். 1000-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையானது இக்கோவில்.

பெருமாள் இங்கே தென்திசையில் முடியை வைத்து, வடதிசையில் திருப்பாதங்கள் நீட்டி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார்..மார்பில் திருமகளும், நாபியில் பிரம்மனும், பாதங்களின் பக்கம் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி அளிக்கிறார் எம் பெருமான். திருக்கரம் 'வா' என்று பக்தர்களை, அன்போடு அழைக்கும் விதமாக அமைந்துள்ளது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார்.

பிரிந்த பிரம்மாவையும் சரஸ்வதியையும் இணைத்து வைத்த பெருமாள்‍ ‍

மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளையே மணந்து யாகத்தை தொடங்கினார்.

இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'க்ஷீரநதி' என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள். இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார்.

பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் 'பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.

அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயிலில் பாதுகாக்கப்பட்டது. இன்றும் கூட சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் 'சோட்டா ரங்கநாதர்' எனப்படுகிறார்.

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய தலம்

இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை. திருமணமாகாதவர்கள் இத்திருக்கோவிலுக்கு வந்து பள்ளிகொண்ட பெருமாளை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் இத்தலத்தில் திருமணம் செய்துகொள்ளுபவர்கள் பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்பதும் ஐதீகம். தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.

Read More
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில்

ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் திவ்ய தேசம்

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில், கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில். இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். லட்சுமியை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.

கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார். ஸ்ரீஆதிவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. தாயார் திருநாமம் கோமளவல்லி.

பெருமாளுக்கு அனுதினமும் திருமணம் நடந்த வரலாறு

சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் மோட்சம் அடையவே, அவரைப் போலவே மோட்சம் அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம்,'திருமணம் செய்து கொள்ளாமல் மோட்சம் அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். காலவ முனிவர் அந்த 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.

திருஷ்டி தோஷம் விலக்கும் தலம்

உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

Read More
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்

பெண் வடிவ கருடாழ்வார்

திருவாரூரிலிருந்து சுமார் 30 கி,மீ. தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி கோவில். குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலையும் 'தட்சிண துவாரகை' என்று அழைக்கிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ஸ்ரீவாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது.

பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான். கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ண வர்களின் மாபெரும் நம்பிக்கை. பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர்

கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் கூறுகிறது. கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது. கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. கருடபகவானை நினைத்தாலே விஷ உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் செங்கமலத் தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இப்படி பெண் வடிவில் காட்சி தரும் கருடாழ்வாரை வேறெங்கும் நாம் தரிசிப்பது அரிது. இந்த பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

Read More
சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் கோவில்

துளசி தீர்த்தத்துடன்,மிளகும் பிரசாதமாக வழங்கப்படும் பெருமாள் கோவில்

கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் அபூர்வ காட்சி

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள சூலூர் தலத்தில் அமைந்துள்ளது திருவேங்கடநாதப் பெருமாள் கோவில். முற்காலத்தில் சூரபாண்டியநல்லூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் பின்னர் சூரலூர் என்ற பெயரில் மருவி, தற்பொழுது சூலூர் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் பெருமாள் திருமேனியின் பின்புறம் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இது பெருமாள் கோவில்களில் ஓர் அபூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பு வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். ஆனால் பெருமாளின் பின்புறம் இருப்பதால், பக்தர்களால் ஆஞ்சநேய மூலவரைக் காண இயலாது.

பொதுவாக எல்லாப் பெருமாள் கோவில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் பிரசாதமாக கொடுப்பார்கள். ஆனால், இக்கோவிலில் துளசி தீர்த்தம் வழங்கியபின் சிறிதளவு மிளகு வழங்குகிறார்கள். பெருமாளே, மிளகு கேட்ட வரலாற்றாலும், ஓரு பிடி மிளகு கொடுத்ததன் சிறப்பாலும், இன்றும் இக்கோயிலில் மதியம் பெருமாளுக்கு மிளகு நைவேத்தியம்தான் படைக்கப்படுகிறது. அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்கள். மேலும், வருடம் முழூவதும் மிளகு வைத்துக் காரமாகப் பூசை செய்வதால் இனிப்பான அதாவது, சர்க்கரைப் பொங்கல் தவிர வேறு நைவேத்தியம் இங்கு கிடையாது. பெருமாளின் வெப்பம் குறைய விசேஷ நாட்களில் பச்சரிசியை ஊற வைத்து சர்க்கரை, ஏலக்காய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கலந்து படைப்பதும் உண்டு. மிளகே அக்னி வடிவமாக இருப்பதால் இக்கோவிலில் சுவாமிக்குத் தவிர, சுபகாரியங்களுக்கு அக்னி உபயோகிப்பதில்லை.

இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் அனைத்துவித வேண்டுதல்களும் நிறைவேறியதும் மிளகுகளை நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர்.

Read More
கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் கோவில்

நிலம், வீடு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பெருமாள்

கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது. இக்கோவில் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இக்கோவிலில் உள்ள மூலவர் ஆதிவராகப்பெருமாள் ஆவார். தாயார் அம்புஜவல்லி.

உலகில் முதலில் தோன்றிய இடம் 'வராகபுரி' என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை, 'ஆதிவராகர்' என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக 'வராக சாளக்கிராமம்' உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.

தல வரலாறு

வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்

தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.

இத்தலம் ஞானம் மற்றும் பூமி சம்பந்தமான தோஷ நிவர்த்திக்கு சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள.

Read More
கும்பகோணம் சக்கரபாணி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கும்பகோணம் சக்கரபாணி கோவில்

மூன்று கண்கள், எட்டு கைகள் உடைய சக்கரபாணி பெருமாள்

பெருமாளுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை

கும்பகோணம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சக்கரபாணி கோவிலிலும் ஒன்று. மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள். தாயார் விஜயவல்லி. பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியும் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன் சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ , துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால் ஏவிய 'சக்ராயுதம்', ஜலந்தாசுரனையும் மற்ற அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது. சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி, சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது.

பிரார்த்தனை

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகாமகம்' திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம். சூரிய பகவான் வழிபட்டு நன்மையடைந்ததால், ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது. உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீசக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.

ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம். சுதர்சன ஹோம பூஜையை, இக்கோவிலில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும்.

Read More