புன்னைநல்லூர் கோதண்டராமர் கோவில்
ஆஞ்சநேயர் சன்னதி மண்டபத்தில் கூரையின் உட்புறத்தில் செதுக்கப்பட்ட பன்னிரண்டு ராசிகளின் அரிய காட்சி
பக்தர்கள், தரையில் வரையப்பட்ட, தங்கள் ராசி தொடர்பான வண்ண கட்டத்தில் நின்று ஆஞ்சநேயரை பிரார்த்திக்கும் முறை
தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். இந்த ஊரில் மிக பிரசித்திப் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில், சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த கோதண்டராமர்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையில் உள்ள விக்ரகங்கள் அனைத்தும் சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள். இத்தகைய விக்ரகத்தை வேறெங்கும் காண்பது அரிது.
இக் கோவிலில் தனி அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்’. ’வீர’ செயல் பல செய்து இலங்கை சென்று, அண்ணல் ஸ்ரீராமனின் மோதிரத்தை அன்னை ஸ்ரீசீதாப்பிராட்டியிடம் கொடுத்து தாயாரின் துயர் துடைத்தவர் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி. பின்பு அன்னையைக் கண்ட ’ஜய’ செய்தியினை ஸ்ரீராமபிரானிடம் கூற வருபவர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர்.
ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் தூக்கிய வலக்கையும், வெற்றிச் சின்னமாகிய தாமரை ஏந்திய இடக்கையுமாக விசுவ ரூபமாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். சாதிக்க முடியாதையும் சாதித்தவர் (அன்னையை காண கடலை தாண்டியவர்), வீரன் (எதிரியாம் இராவணனின் இலங்கையில் புகுந்தவர்), ஜயம் கொண்டவர்- கொடுப்பவர் (கடலை தாண்டி, எதிரியாம் இராவணனின் இலங்கையில் அன்னையை கண்டவர்).
இந்த ஜெய்வீரர் ஆஞ்சநேயர் சன்னதியின் எதிரில், கூரையின் உட்புறத்தில் முழுமையான ராசி மண்டலம், அதாவது ஜாதகக் கட்டத்தில் காணப்படும் பன்னிரண்டு வீடுகள் செதுக்கப்படுள்ளது. இந்த பன்னிரண்டு வீடுகளுக்கு சரியாக ஒத்திருக்கும் வகையில், தரையில் கீழே மற்றொரு விளக்கப்படம் உள்ளது. இந்த விளக்கப்படத்தில் பன்னிரண்டு வீடுகளும் வெவ்வேறு வண்ண கட்டங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள. அந்தந்த ராசிக்கான வண்ணங்கள் அந்த விளக்கப்படத்தில் உள்ளன. ஸ்ரீஜயவீர ஆஞ்சநேய மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்யும் போது, பக்தர்கள் தங்கள் ராசி தொடர்பான வண்ண கட்டத்தில் நின்றால், அவர்களின் விருப்பம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்த பன்னிரண்டு ராசி மண்டல கட்டம் வேறு எந்த பெருமாள் கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.
காஞ்சிபுரம் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவில்
திருமால் ஒளி வடிவில் காட்சி தந்த திவ்ய தேசம்
கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் பெருமாளுக்கு விளக்குகள் ஏற்றி வழிபடும் தலம்
திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி சொரூபமாக எழுந்தருளினார். அது போல வைணவ மரபில், காஞ்சிபுரத்தில் பெருமாள் விளக்கொளி பெருமாளாக (ஒளி வடிவிலான பெருமாளாக) அவதரித்தார். அவருக்கு தீபப் பிரகாசர் என்ற பெயரும் உண்டு. தர்ப்பை வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் ஒளி வடிவில் காட்சி தந்ததால், இப் பகுதிக்கு தூப்புல் எனவும், திருத்தண்கா எனவும் பெயர்.இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் திருநாமம் மரகதவல்லி.
108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகரின் அவதாரத் தலம் இது.
இத்தலத்தில் பெருமாள் ஒளியாகக் காட்சி தந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது. படைத்தல் கடவுளான பிரம்மதேவர், தனக்கு பூலோகத்தில் கோவில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு, சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால், அந்த யாகத் திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சரஸ்வதி, பிரம்மா நடத்தும் யாகம், வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடட்டும் என சாபம் இட்டாள். பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம், தனது யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் 'விளக்கொளி பெருமாள்' என்றும் 'தீபப்பிரகாசர்' என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்.
இந்தப் புராண நிகழ்வை முன்னிட்டுத்தான், கார்த்திகை தீபத் திருநாளன்று, பக்தர்கள் திருத்தண்கா (தூப்புல்) பகுதியில் அமைந்துள்ள விளக்கொளி பெருமாள் (தீபப் பிரகாசர்) கோவிலுக்கு வருகை தருகின்றனர். அங்கு அவர்கள் பெருமாளுக்கு விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.
கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
12 அடி உயர கல் கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்
அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது
இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு
1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோவில் கட்டப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
கம்பமாக காட்சியளிக்கும் பெருமாள்
அரியலூருக்கு கிழக்கே 6 கிமீ தொலைவில் உள்ள கல்லங்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் கோவில். இத்தலம் 'தென்னகத்தின் சின்ன திருப்பதி' என்று போற்றப்படுகிறது
இந்க் கோவிலில் உள்ள பெருமாள் 12 அடி உயர கம்பத்தில் நாமத்தோடு உருவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். இந்த கம்பத்தையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. அந்தக் கம்பத்தின் கீழே ஆஞ்சநேயர் இருக்கிறார். இந்த ஆஞ்சநேயர் ருத்ர அம்சம் கொண்டவராக, கம்பத்தை தாங்கிப் பிடித்தவராக காட்சி தருகிறார். இவர் கதை இல்லாமல் வடக்குமுகம் பார்த்த ஒரு கண் ஆஞ்சநேயராக உள்ளார். இக்கோவிலில் தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. மூலவர் பெருமாளே கம்பத்தில் இருப்பதால், தாயாரும் உடன் இருப்பதாக ஐதீகம்.
பெருமாள் கம்பத்தில் எழுந்தருளிய வரலாறு
1751-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மங்கான் படையாட்சி எனும் பெரும் விவசாயி இருந்தார். அவர் நிறைய மாடுகளைக் கொண்டிருந்தார். அவற்றில், சினைமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிவராமல் போனது. அவர் அந்த மாட்டை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது கனவில் வந்த பெரியவர் ஒருவர், காணாமல் போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்துக்கும், மாவிலங்கை மரத்துக்கும் இடையில் உள்ள சங்கு இலைப் புதரில் கன்றுடன் உள்ளது என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான் படையாட்சி. அங்கு கன்றுடன் நின்றிருந்த பசு அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது தானாகவே பாலைச் சொரிந்திருந்தது. அதன்பின், ஏழாவது நாள் இரவு மீண்டும் மங்கான் படையாட்சி கனவில் தோன்றிய பெரியவர், கல் கம்பத்தை நிலைநிறுத்தி நாளும் வணங்குமாறு கூறினார். மேலும் அவர் கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றியதாகவும் தானே கலியுக வரதராசப் பெருமாள் எனக் கூறி மறைந்தார். பின்னர், மங்கான் படையாட்சியால் அந்த 12 அடி உயரமுள்ள கல்கம்பம் கல்லங்குறிச்சி கிராமத்தில் நிலைநிறுத்தப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டது.
பிரார்த்தனை
இக்கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல மாவட்ட மக்களுக்கு பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது. அதனால் சனிக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோவிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோவிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தாங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக பெருமாளே திதி கொடுக்கும் தலம்
காசி, கயா, ராமேசுவரம் முதலான புண்ணிய தலங்களுக்கு இணையான தலம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது நென்மேலி திருத்தலம். மூலவர் திருநாமம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். உற்சவர் திருநாமம் ஸ்ரீ ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணப் பெருமாள். உற்சவர் பெருமாள்தான் இங்கு முன்னோர்களுக்காக சிராத்தம் செய்து வைக்கின்றார் என்பது ஐதீகம்.
பித்ரு தோஷம் இருந்தால், நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான். இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ, திதியோ கொடுக்கவே இல்லை. பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு என பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக, இத்தலத்து பெருமாளே திதி கொடுத்து நம் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்கிறார். பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. நென்மேலியில் பெருமாளே திதி கொடுப்பதால், இத்தலம் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் கூறப்படுகிறது.
தல வரலாறு
இத்தலம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள். யக்ஞநாராயண சர்மா வரியாக வசூலித்த பணத்தையெல்லாம், நென்மேலி பெருமாளுக்கே தம்பதியர் இருவரும் செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், 'எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே' என வருந்தினார்கள். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது தல வரலாறு.
அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோவிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம். இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் சிராத்த காரியங்கள் செய்யப்படுகின்றன. இங்கு, காலை முதல் மதிய வேளைக்குள் சிராத்தம் செய்யப்படுகிறது. வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டையும் எள்ளும் கலந்த துவையல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியை அவர்களுக்கு உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் சிராத்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து சிராத்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.
இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம். வீட்டில் சகல தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.
மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
சன்னதியின் மேற்கூரையில் தங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். பெருமாளின் சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. இச்சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கின்றன. இந்த நவக்கிரகங்கள், அந்தந்த கிரகங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்களுக்குரிய மரங்கள்/ தாவரங்கள் சூரியன் - எருக்கு மரம்; சந்திரன் - பலாசு மரம்; செவ்வாய் - கருங்காலி மரம்; புதன்- நாயுருவி, சுக்கிரன் - அத்தி மரம்; குரு- ஆல மரம்; சனி- வன்னி மரம்; ராகு - அருகம்புல்; கேது- வெற்றிலைக்கொடி ஆகியவை ஆகும்.
நசரத் பேட்டை அகரம்மேல் பச்சை வாரணப் பெருமாள் கோவில்
பெருமாள் பச்சை நிற யானையாக வடிவெடுத்த தலம்
சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள நசரத் பேட்டை என்ற இடத்திற்கு அருகில், அகரம்மேல் என்னும் ஊரில் அமைந்துள்ளது பச்சை வாரணப் பெருமாள் கோவில்.தாயார் திருநாமம் அமிர்தவல்லி தாயார்.இக்கோவில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.ஸ்ரீ ராமானுஜரின் மருமகனும், அவரது இரண்டு சீடர்களில் ஒருவருமான முதலியாண்டான் (கி.பி 1027 - கி பி 1132) அவதரித்த தலம் இது. முதலியாண்டானின் இயற்பெயர் தாசரதி. இந்த கிராமம் அவரது பெயரால் தசரதி பேட்டை என்று பெயரிடப்பட்டது, பின்னர் நசரத்பேட்டை என்று மாறியது.
கருவறையில் மூலவர் பச்சை வாரணப் பெருமாள், ஸ்ரீ தேவி பூதேவியுடன் மிகப்பெரிய திருமேனியுடன் ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை நீட்டியும் மிக அழகாக காட்சிதருகிறார். பெருமாளின் இந்த திருநாமம் மகாபாரத நிகழ்ச்சியுடன் தொடர்புடையது.
பாண்டவர்களில் மூத்தவரான தருமர் யாகம் செய்தபோது துஷ்டர்கள் அதை செய்ய விடாமல் தடுத்தனர். அப்போது கிருஷ்ணர் பச்சை நிற யானை வடிவெடுத்து, துஷ்டர்களை விரட்டினார். அதனால் இங்கு இறைவனுக்கு பச்சை வாரணப் பெருமாள் என்ற பெயர். பெருமாளின் இந்தப் பெயர் காரணத்திற்கு, மற்றொரு மகாபாரத நிகழ்ச்சியும் உள்ளது. மகாபாரதப் போரின் போது அஸ்வத்தாமன் என்ற யானை கொல்லப்பட்டபோது, தருமர் தனது குருவான துரோணாச்சாரியாரிடம், அவரது மகனான அஸ்வத்தாமன் கொல்லப்பட்டதாக பொய் சொன்னார். இந்தச் செய்தியைக் கேட்ட துரோணாச்சாரியார் திசை திருப்பப்பட்டு அதிர்ச்சியடைந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திருஷ்டத்யும்னரால், துரோணாச்சாரியார் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். இந்தப் பாவத்திலிருந்து விடுபட, நாரத முனிவரின் ஆலோசனையின் பேரில், தருமர் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். கிருஷ்ணர் யாகத்திலிருந்து பச்சை யானை வடிவில் தோன்றி அவரை ஆசீர்வதித்தார். எனவே, அவர் சமஸ்கிருதத்தில் ஹரித வாரண பெருமாள் (ஹரித என்றால் பச்சை மற்றும் வாரண என்றால் யானை) அல்லது தமிழில் பச்சை வாரண பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தருமரின் பிரார்த்தனைகளை ஏற்று, பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளினார்
கோவில் கொடிக் கம்பத்தின் முன்னே விளக்கு கம்பம் உள்ளது. அதன் முன் சிறிய யானை சிலை உள்ளது. யானைக்கு நேராக விளக்கு கம்பத்தில் ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது . இது இக்கோவிலின் சிறப்பை விளக்குகின்றது.
மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்
காவியுடை அணிந்த ஆஞ்சநேயர்
பெருமாள் கோவிலில் எழுந்தருளி இருக்கும் விநாயகர் மற்றும் தட்சிணாமூர்த்தி
சென்னை மாநகரம் தாம்பரம் பகுதியிலிருந்து 9 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில். தாயார் திருநாமம் செங்கமலவல்லி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் ராஜகோபாலசுவாமி தன் கைகளில் சங்கையும், சக்கரத்தையும் இடம் மாற்றி ஏந்திருப்பது தனி சிறப்பாகும்.
இக்கோவில் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். கால்நடைகள் நோயின்றி வாழவும், பசுக்கள் நன்கு பால் சுரக்கவும், ராஜகோபாலருக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
பொதுவாக சிவன் கோவில்களில் தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோவிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் தட்சிணாமூர்த்தியும் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்.
ராஜகோபாலர் கோவிலுக்கு எதிரே சற்று தூரத்தில் ஆஞ்சநேயர், தனிக்கோவிலில் இருக்கிறார். இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி இருக்கும் இவர், கையில் கதாயுதம் இல்லாமல், 'அஞ்சலி வரத ஆஞ்சநேயராக' காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி தெய்வம் என்பதால், இவருக்கு காவியுடையை பிரதானமாக அணிவித்து அலங்காரம் செய்யப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
ஆஞ்ச நேயரின் மார்பில் ராமபிரான், எப்போதும் வாசம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, ஆஞ்சநேயர் ராமபிரானை வணங்கும் விதமாக கைகளை மார்பில் குவித்து, இரு கட்டை விரல்களையும் மார்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள மன தைரியம் உண்டாகும், குரு மீதான மரியாதை அதிகரிக்கும்.
மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில்
சங்கும், சக்கரமும் இடம் மாறி இருக்கும் பெருமாளின் வித்தியாசமான தோற்றம்
சென்னை மாநகரம் தாம்பரம் பகுதியிலிருந்து 9 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோவில். தாயார் திருநாமம் செங்கமலவல்லி. இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
கருவறையில் மூலவர் ராஜகோபாலர் நான்கு கைகளுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் கோவில்களில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் பெருமாள் வைத்திருப்பார். ஆனால் இத்திருத்தலத்தில் வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் வைத்திருக்கும் கோலத்தில் அருள் பாலிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கிருஷ்ணராக அவதரித்த மகாவிஷ்ணு, குருக்ஷேத்ர போரின்போது, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தார். போரில் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதி பூண்டிருந்த அவர், போர் அறிவிப்பிற்காக, சங்கு மட்டும் வைத்துக்கொண்டார். அவரது சங்கின் ஒலியைக் கேட்டதுமே, எதிரிப்படையினர் அஞ்சி நடுங்கினர். இவ்வாறு கிருஷ்ணர் குருக்ஷேத்ர போரின்போது, வலது கையில் சங்கு வைத்து ஊதியதன் அடிப்படையில் இங்கு மகாவிஷ்ணு, வலது கையில் சங்கு வைத்தபடி காட்சி தருகிறார். வலது கையில் இருக்க வேண்டிய சக்கரம், இடது கையில் இருக்கிறது.
சிவன் சன்னதிகளில்தான், கோஷ்டத்தில் விநாயகர் இருப்பார். ஆனால், இக்கோயிலில் பெருமாள் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர் இருப்பது தனி சிறப்பாகும். மேலும் கோஷ்டத்தில் ஒரு கையில் தண்டம், மற்றோர் கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தரும் இரண்டு பெருமாள் திருமேனிகளையும் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் வலது காலை மடக்கி அமர்ந்து, இடது கையை தரையில் ஊன்றியபடி, பிரயோகச் சக்கரத்துடன் பரமபதநாதர் காட்சி தருகிறார். இவரிடம் வேண்டிக்கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில்
கருடன் தன் இரு கைகளிலும் ஆமை, யானை ஆகியவற்றை பிடித்துக் கொண்டிருக்கும் அபூர்வ சிற்பம்
திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருக்குறுங்குடி நின்ற நம்பி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் பல அற்புதமான, நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றது.
இக்கோவிலில் கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம், கருடன் ஆமை, யானை ஆகியவற்றை தன் இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு, முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. கருடனின் இடது கையில் ஆமையும் அதன் அருகில் ஆலமரம் ஒரு கிளை முறிந்த நிலையில் இருப்பதும், முறிந்த கிளையில் ஆல இலையின் வடிவம் தத்ரூபமாக கனி மற்றும் மொட்டுக்களோடு வடித்திருப்பதும், தலைகீழாகத் தவம் புரியும் வால்கில்ய (மிகச் சிறிய உருவம் உடையவர்கள்) முனிவர்களும், சிறகுகள் விரிந்த நிலையில் கருடன் பறப்பது போன்ற அமைப்பும், கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும், அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் இந்த அற்புதமானதும், அரியதுமான சிற்பத்தின் சிறப்புகள் ஆகும்.
இந்த சிற்பத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சியானது, மகாபாரதத்தின் முதல் பகுதியான ஆதி பர்வத்தின் உட்பிரிவான ஆஸ்தீக பர்வத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
கருங்குளம் வெங்கடாசலபதி கோவில்
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள்
திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் சுமார் 18 கி. மீ தொலைவில் உள்ள கருங்குளத்தில் இருக்கும் வகுளகிரி என்ற சிறிய மலைக் குன்றின் மீது அமையப் பெற்றுள்ளது கருங்குளம் வெங்கடாசலபதி கோவில். மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளும், சாலை வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
திருப்பதியிலிருந்து பெருமாள் இங்கு வந்தமையால் இந்த கோவில் 'தென் திருப்பதி' என்று சிறப்பிக்கப்படுகிறது. திருப்பதிக்குப் போக முடியாத பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை இந்த வகுளகிரி பெருமாள் கோவிலில் நிறைவேற்றலாம்.
பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது. இங்கு மூலவர் பெருமாள் சந்தன கட்டைகளாக இருந்தாலும், பால், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்தும் இதுவரை எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை என்பது அதிசயமாக கருதப்படுகிறது.
சந்தனக்கட்டை வடிவில் பெருமாள் எழுந்தருளிய வரலாறு
முற்காலத்தில் சுபகண்டன் என்னும் அரசன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு முறை கண்ட மாலை என்னும் கொடிய நோய் பீடித்தது. தனது அந்த கொடிய நோய் நீங்க அவன் பெருமாளை பல கோவில்கள்தோறும் சென்று வழிபட்டு வந்தான். அப்படி அவன் ஒரு முறை திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை வணங்கி தன் நோய் தீர மனமுருக வேண்டி நின்றான். அவனது பக்திக்கு இறங்கிய திருப்பதி பெருமாள், அன்று இரவு சுபகண்டனின் கனவில் தோன்றி, எனக்குச் சந்தனக் கட்டைகளால் தேர் ஒன்றைச் செய்வாயாக அப்படி செய்யும் போது அவற்றில், இரண்டு சந்தனக் கட்டைகள் மிச்சமாக இருக்கும். அந்த சந்தன கட்டைகளை தெற்கே இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வகுளகிரி மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் நோய் நீங்கப் பெறுவாய் என கூறி அருள் புரிகிறார்.
கனவில் இருந்து திடுக்கிட்டு எழுந்த மன்னன் சுபகண்டன், மறுநாளே திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளுக்கு சந்தன மரக் கட்டைகளைக் கொண்டு தேர் செய்யத் தொடங்கினான். அவன் தேரை செய்து முடிக்கும் தருவாயில் அவனது கனவில் பெருமாள் கூறியவாறே, இரண்டு சந்தன கட்டைகள் மிச்சமாகின்றன. அந்த சந்தன கட்டைகளை எடுத்துக் கொண்டு, தென் பாண்டி நாட்டை அடைந்த சுபகண்டன், அங்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் இருந்த வகுளகிரி பகுதியை கண்டறிந்து கனவில் பெருமாள் கூறியபடியே தான் கொண்டு வந்திருந்த சந்தன கட்டைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்து தாமிரபரணியில் மூழ்கி பெருமாளை வழிபட அவனது நோய் நீங்கப் பெற்றதாக இக் கோவில் வரலாறு கூறப்படுகிறது.
இங்கு மலை மீது உள்ள கோவிலின் கருவறையில் சுபகண்டனால் கொண்டு வரப்பட்ட இரண்டு சந்தன கட்டைகளில் தான் பெருமாள் எழுந்தருளி காட்சியளிக்கிறார். சந்தன கட்டைகளுக்கு வஸ்திரம் அணிவித்து, திருநாமம் சாத்தி பெருமாள் அலங்காரம் செய்யப்படுகிறது.
தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) சீனிவாசப் பெருமாள் கோவில்
அமிர்த கலசம் ஏந்திய ஆஞ்சநேயரின் அபூர்வ தோற்றம்
திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவில், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தில்லை ஸ்தானம் (திருநெய்த்தானம்) என்ற கிராமத்தில் அமைந்துள்ள வைணவத் தலம் சீனிவாசப் பெருமாள் கோவில். கருவறையில் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன், நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இக்கோவிலின் வடக்குப் பகுதியில் அனுமன் கையில் அமிர்த கலசத்தை ஏந்தியபடி அருள்புரிகிறார். அனுமனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். இதன் பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. சீதாதேவி வனவாசத்தின் போது ஒரு நாள் மயக்கமடைய, அனுமன் கலசத்தில் இருந்த அமிர்தத்தை சீதைக்கு தர, சீதையின் மயக்கம் தெளிந்ததாம். சீதையின் நோய் தீர்த்த அமிர்த கலசத்துடன் கூடிய இந்த அனுமனை வேண்டுவதால் நோய்கள் குணமாவதாக பக்தர்களின் நம்பிக்கை.
வியாபாரம் பெருகவும், திருமணம் விரைந்து நடக்கவும், நோய்கள் தீரவும் அனுமனிடம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெண்ணெய் காப்பிட்டு, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
திருவையாறு சப்தஸ்தானத் தலங்களில் இத்தலமும் ஒன்று.
காஞ்சிபுரம் திருக்கள்வனூர் ஆதிவராகப் பெருமாள் கோவில்
அம்மனின் சக்தி பீடத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம்
இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலின் உள்ளே அமைந்துள்ளது. பெருமாள் திருநாமம் கள்வப்பெருமாள் (ஆதிவராகப் பெருமாள்). தாயார் திருநாமம் அஞ்சிலை வல்லி நாச்சியார் (சவுந்தர்யலட்சுமி).
சைவக் கோவில்களுக்குள் பாடல் பெற்ற பெருமாள் கோவில் (திவ்ய தேசம்) அமைந்திருப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் தலத்திலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் மட்டுமே. முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த திவ்யதேசம் காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே ஒரு தூணுக்கு இடையில் சந்நிதி போன்ற ஒரு சிறிய இடத்தில் அமைந்துள்ளது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். மூலவர் ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள் (கள்வப்பெருமாள் ) நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கிய அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். தாயாருக்கு தனி சன்னதி இல்லை. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திரு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் தாயாருடன் இணைந்திருப்பதை போல், இத்தலத்திலும் தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார் பெருமாளுடன் இணைந்திருக்கின்றார். முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி, ஒருமுறை தனது அழகைப் பற்றி அகங்காரம் கொண்டபோது, விஷ்ணு அவளுக்கு சாபமிட்டார். சாபத்தால் தன் அழகை இழந்த மகாலட்சுமி, அதை மீண்டும் பெறுவதற்காக காமாட்சி அம்மனை நாடினாள். அப்போது, மகாலட்சுமியும் காமாட்சியும் பேசிக் கொண்டிருந்ததைக் கள்ளத்தனமாக விஷ்ணு மறைந்திருந்து கேட்டார். இதை அறிந்த காமாட்சி, விஷ்ணுவை 'கள்வன்' என்று செல்லமாக அழைத்தார். அதனால், இந்தக் கோவிலில் பெருமாள், கள்வப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
திருக்கள்வனூர் பெருமாளை வணங்குபவர்களுக்கு, இழந்த அழகு, செல்வம், கணவன்-மனைவி ஒற்றுமை ஆகியவை திரும்பக் கிடைக்கும். திருகள்வனூர் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால் அண்ணன் - தங்கை ஒற்றுமை சிறப்பாக அமையும் என்பத ஐதீகம். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வம் என்பதால், பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் ஏதும் கிடையாது. தனியாக விழாக்களும் கிடையாது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கநாதருக்கு, மாமனார் தீபாவளி சீர் அளிக்கும் சாளி உற்சவம்
தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கம். அந்த வழக்கப்படி, தன் மகள் ஆண்டாளை ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு மணமுடித்து தந்த பெரியாழ்வார், தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் செய்யும் வைபவமானது ஸ்ரீரங்கம் கோவிலில் தீபாவளியன்று 'சாளி உற்சவம்' என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோவிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும். அதன்பின், கோவிலில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகித் தாயார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள், அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள்.
காலை பத்து மணியளவில் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். பின்னர் பெரியாழ்வார் தன் மாப்பிள்ளைக்கு தீபாவளி சீர் சமர்ப்பிப்பார். ஒவ்வொருவரும் தன் குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை, தன் மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். பெரியாழ்வாரின் சார்பில், அரையர்கள் நம்பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், 'சாளி உற்சவம்' என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் 'ஜாலி உற்சவம்' என்றாகிவிட்டது. வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் நம்பெருமாள் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும், பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை.
தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகள் தீபாவளி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது அவர்களின் திருமண வாழ்வில் வளம் மற்றும் மகிழ்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கையாகும்.
திருநாவாய் முகுந்தன் கோவில்
பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம்
அமாவாசையன்று பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் தரும் திவ்ய தேசம்
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார்.
இந்த நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் மிக மிக அரிதான தரிசனத்தை இங்கே வழங்கி அருள்பாலிக்கிறார். இது அரிதினும் அரிதான காட்சியாகும். இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த திவ்யதேசம்
மதுரைக்கு வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்யதேசம் திருமோகூர், பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தை தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.
மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, ‘மோகன க்ஷேத்ரம்’ என்றும், சுவாமிக்கு, 'பெண்ணாகி இன்னமுதன்' என்றும் பெயர் உண்டு.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருமலையானுக்கு தினமும் புதிய மண் சட்டியில் நைவேத்தியமாகும் தயிர் சாதம்
திருமலை வேங்கடவன் கோவிலில் பலவிதமான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருப்பதி லட்டு. பல்வேறு வகையான பட்சணங்கள், திருமலையின் பெரிய மடைப்பள்ளியில் தயார் செய்யப்பட்டாலும், திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுவது வெறும் தயிர் சாதம் மட்டும்தான். அதுவும் மண் பாத்திரத்தில் வைக்கப்பட்டதாக இருக்கும். புத்தம் புதிய மண் பாத்திரத்தில் வைத்து எடுத்து செல்லும் தயிர் சாதம் மட்டும், குலசேகர ஆழ்வார் படியை தாண்டி திருமலையானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. திருமலையானுக்கு ஒவ்வொரு நாளும் புதிய மண் சட்டியில் பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத்துக்கு முன்பு உள்ள குலசேகரப்படியை தாண்டிச் செல்வதில்லை. அவனுக்கு படைக்கப்பட்ட தயிர் சாதம் மற்றும் மண் சட்டி ஆகியவற்றை பிரசாதமாக பெறுவது சாதாரணமான விஷயமல்ல. அவ்வாறு கிடைப்பது வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாக பக்தர்களால் கருதப்படுகிறது. இப்படி மண்சட்டியில் தயிர்சாதம் நிவேதனம் செய்யப்படுவதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதர். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார். ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோவிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தார். அப்படியே கோவிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோவிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, 'நீயே எல்லாம்' என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்து விடுவார். இந்நிலையில், கோவிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார். அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார். அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் தினமுமொரு புது மண் சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
உலகளவில் புகழடைந்த, வைணவ குருமாரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். இவர், கர்னாடகத்தின் மாண்டிய மாவட்டத்தில் சிறுப்புத்தூர் எனும் ஊரில் அனந்தன் என்னும் இயற்பெயரில் பிறந்தவர். சுவாமி இராமானுசர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், இராமனுசர் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து மலர் கைங்கர்யம் செய்வதையே வாழ்க்கையின் பலனாக கொண்டு திருமலையிலேயே வாழ்ந்தவர்.
திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, கருவறையின் பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். அந்தக் கடப்பாரை, திருமலை நந்தவனத்தின் தண்ணீர் தேவைக்காக அனந்தாழ்வான் வெட்டிய குளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கடப்பாரைதான், திருமலைவாசனுக்கு தினமும் முகவாயில் பச்சை கற்பூரம் சார்த்தும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்தது.
திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு, நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. திருவரங்கத்தைப் போல்
நந்தவனமும், தபோவனமும் திருவேங்கடத்தில் அமைக்க முடியவில்லையே' என்பதுதான் அவருடைய ஆதங்கம். அலருடைய மனக்குறையை அறிந்த சீடர் அனந்தாழ்வான், தாம் அந்த கைங்கர்யத்தை செயவதாக தனது குருவிடம் தெரிவித்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு திருமாலை தொடுத்து சேவை செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவர் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.
திருமலையில் நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
பின்னர் நந்தவனத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். 'நானும் உங்களுக்கு உதவுகிறேன்' என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.
அனந்தாழ்வான் வெட்டிய மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, அந்தச் சிறுவனை எதற்கு சிரமப்படுத்த வேண்டும் என நினைத்து அவனை அனுப்பிவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார்.
ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான். சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.
'தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள்' 'என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.
'சரி, தம்பி' என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. 'மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே' என்று மனைவியைக் கேட்க, 'சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை' என்று பதில் சொல்லி சமாளித்தாள்.
சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான்.
இதனால், கோபம் தலைக்கேற கடப்பாரையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.
அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும், தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.
மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்ய வந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 'அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்' என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.
பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.
'சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க' என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.
'அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்' என்று அசரீரியாகக் கேட்டார்.
'கருணைக் கடலே! என்னை மன்னியுங்கள் சுவாமி' என்றார்.
'சரி. ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?' என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.'சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்' என்றார்.
அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதைநினைவுபடுத்தும் விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.
மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில்
மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை
சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது ஆதிகேசவப் பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் ஸ்ரீமயூரவல்லித் தாயார்.
முன்னொரு காலத்தில் பிருகு முனிவர் இத்தலத்தில் தவம் செய்தார். அவருக்கு பெருமாள் சயனக் கோலத்தில், சுருள்சுருளான கேசத்துடன் காட்சி தந்தார். அதனால் பெருமாளுக்கு சயன கேசவர் என்றும், ஆதிகேசவ பெருமாள் என்றும் திருநாமம் அமைந்தது. கருவறையில் ஆதிகேசவ பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி உடன் இருக்கவில்லை.
ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரின் அவதார திருத்தலம் இது. லக்ஷ்மிதேவியே பேயாழ்வாருக்கு குருவாக இருந்து அருளியதாக ஸ்தல புராணம் சொல்கிறது.
ஸ்ரீமயூரவல்லித் தாயார் பெருமாளுக்கு வலப்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இத்தல தாயார், இரு கைகளில் அபய முத்திரை, வரத முத்திரைகளை தாங்கியும், மேல் இரு கைகளில் தாமரைப் பூவை கொண்டும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். பிருகு மகரிஷியின் மகளாகப் பிறந்ததால் இவளுக்கு, 'பார்க்கவி' என்றும் பெயருண்டு. வெள்ளிக்கிழமை தோறும் காலையில் விசேஷ ஹோமம், மாலை 6.30 மணிக்கு மணிக்கு, 'ஸ்ரீசூக்த வேத மந்திரம்' சொல்லி, வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் ஸ்ரீமயூரவல்லித் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும். திருமண தோஷம் நீங்க, கல்வி சிறக்க, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், இவளுக்கு வில்வ அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்கிறார்கள்
காஞ்சிபுரம் பச்சைவண்ணப் பெருமாள் கோவில்
மரகதத் திருமேனியுடன் பச்சை நிறத்தில் காட்சி தரும் பெருமாள்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது பச்சைவண்ணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் மரகதவல்லி. கருவறையில் மூலவர் பச்சைவண்ணப் பெருமாள் மரகதத் திருமேனியுடன் பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில், தாயார்கள் உடனில்லாமல் தனித்து காட்சி அளிக்கிறார். பெருமாள் பச்சை நிறவண்ணத்தில் இப்படி காட்சி தருவதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சப்தரிஷிகளில் ஒருவரான மரீச்சி என்னும் மகரிஷி, மகாவிஷ்ணுவின் பரமபக்தர். ஒருசமயம் அவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரத்தின் மீது சந்தேகம் வந்தது. அனைத்திலும் உயர்ந்தவராக இருக்கும் விஷ்ணு எதற்காக மனிதனாக ராம அவதாரம் எடுக்க வேண்டும்? அப்படியே எடுத்திருந்தாலும் தன் மனைவியை ராவணன் கவர்ந்து செல்ல விட்டிருப்பாரா? என பல வகையிலும் தனக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டார். பதில் தெரியாத நிலையில் மகாவிஷ்ணுவிடமே கேட்க எண்ணி அவரை வணங்கி இத்தலத்தில் தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். அவரிடம், "நீங்கள்தான் உண்மையில் ராமாவதாரம் எடுத்தீர்களா? எல்லாம் தெரிந்திருக்கும் நீங்கள் எப்படி சீதையை ராவணன் கடத்திச்செல்ல விட்டீர்கள்? அப்படியே இருந்தாலும் சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல வேண்டுமென உங்களுக்கு தெரியாதா? அதை ஆஞ்சநேயரின் உதவியுடன் தான் கண்டுபிடிக்க வேண்டுமா?" என தனது சந்தேகங்களை மகரிஷி கேட்டார். அவரிடம், "நான்தான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இந்த அவதாரம், என் மீது அன்பு கொண்டவர்களுக்கு அருள்புரிவதற்காகவே எடுக்கப்பட்டது. எனக்கு சேவை செய்ய விருப்பம் கொண்ட சிவனே, ஆஞ்சநேயராக அவதரித்தார். எனது தரிசனம் பெற விரும்பிய அனைவருக்கும் இந்த அவதாரத்தில் காட்சி கொடுத்தேன். பிள்ளைகள் தங்கள் தந்தையின் சொல்லை மதித்து கேட்க வேண்டும், சகோதரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மருமகள் தனது புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மதிப்பு கொடுத்து அனுசரணையாக நடக்க வேண்டும், கணவனது சொல்லை எந்த சூழ்நிலையிலும் மீறக்கூடாது, மைத்துனர்கள் அண்ணியிடம் எந்த முறையில் பழக வேண்டும், ஆணும், பெண்ணும் எப்படி இருக்க வேண்டும், என சராசரி குடும்ப வாழ்க்கையின் நன்னடத்தைகளை உணர்த்துவதற்காகவும் இந்த அவதாரம் அமைந்தது" என்று சொல்லி பச்சைநிற மேனியனாக ராமரைப் போலவே காட்சி தந்தார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த மகரிஷி குழப்பம் நீங்கி தெளிவடைந்தார். தனக்கு அருள்புரிந்தது போல மக்களுக்கும் அருள்புரிய வேண்டினார். மகாவிஷ்ணுவும் பச்சைநிறப் பெருமாளாகவே இத்தலத்தில் தங்கினார்.
இக்கோவிலின் எதிரில் திவ்ய தேசமான பவளவண்ணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களையும் தரிசித்தால் புண்ணியம் என்பது சான்றோர்களின் வாக்கு.
புதன் தோஷம் நீங்கும் தலம்
புதன் கிரகத்திற்குரிய நிறம் பச்சை. புதன் கிரகத்தின் அதிதேவதை மகாவிஷ்ணு. எனவே பச்சை நிறத்தில் இருக்கும் இந்த பச்சை வண்ணப் பெருமாளுக்கு, பச்சைநிற வஸ்திரம் சாத்தி, துளசி அர்ச்சனை செய்து வழிபட்டால் புதன் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
திப்பிரமலை பாலகிருஷ்ணன் கோவில்மலை
ஸ்ரீ கிருஷ்ணன் தன் தாயார் யசோதையோடு இருக்கும் அபூர்வ காட்சி
ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில், கொளச்சலுக்கு அடுத்து அமைந்துள்ளது திப்பிரமலை பாலகிருஷ்ணன் கோவில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், சேர நாட்டு கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.
கோவில் கருவறையில் 13 அடி உயரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். வலது பக்கத்தில் தாய் யசோதா மகனின் காலடியில் நிற்கிறார். தாய் யசோதாவின் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கரண்டியும் உள்ளது. இப்படி ஸ்ரீ கிருஷ்ணன் கருவறையில் தன் தாயார் யசோதையோடு காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வ காட்சியாகும். ஸ்ரீ கிருஷ்ணர் நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மேலே உயர்த்திய கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ்நோக்கி உள்ள கைகளில் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கதையும் ஏந்தி அருள்புரிகிறார்.
இத்தலம் தன் தாயின் வயிற்றில் இருந்தபடியே தன் தந்தைக்கு, ஸ்ரீ கிருஷ்ணன் விஸ்வரூப காட்சி அளித்த தலமாக கருதப்படுகிறது. எனவே இத்தலம் கருமாணித்தாழ்வார் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்து கிருஷ்ணரின் சிலையானது, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை ஆகவும், தென்னிந்தியாவின் முதல் பெரிய கிருஷ்ணர் சிலை ஆகவும் விளங்குகின்றது. இத்தலத்து கிருஷ்ணர் தானாக வளர்வதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும், கிருஷ்ணரின் வளர்ச்சிக்கு ஏற்ப இத்தலத்தின் கூரை மூன்று முறை இடித்து உயர்த்தப்பட்டுள்ளது. தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை பூஜித்த முனிவர் ஒருவர் பின், அதனைக் கட்டுப்படுத்தியதாகவும் உள்ளூர் மக்களிடையே கருத்துள்ளது.
குழந்தை வரம் இல்லாதோர் இக்கோவில் கிருஷ்ணரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.