சேலம் கோட்டை பெருமாள் கோவில்

கொடி மரத்துக்கு முன் கருடனும், கொடி மரத்துக்கு பின் ஆஞ்சநேயரும் இருக்கும் தனிச்சிறப்பு

உருவத்தில் மூன்றாம் இடம் வகிக்கும் ஆஞ்சநேயர்

சேலம் மாநகரின் மத்திய பகுதியில், மணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கோட்டை பெருமாள் கோவில். பெருமாளின் திருநாமம் அழகிரி நாத பெருமாள், சௌந்தரராஜப் பெருமாள். தாயாரின் திருநாமம் சுந்தரவல்லித் தாயார். இது 108 அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்‌. இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது‌. சேலத்தில் உள்ள வைணவ கோவில்களுக்கெல்லாம் தலைமையாக கருதப்படுவது கோட்டை பெருமாள் கோவில்.

கோவில் கருவறையில், பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருமண கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயார் சுந்தரவல்லி பத்மாசனத்தில் யோக வடிவில் அமர்ந்து தனிச் சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் வேறு எந்த தலத்திலும் காண கிடைக்காத காட்சியாக, கொடி மரத்துக்கு முன் கருடனும், கொடி மரத்துக்கு பின் ஆஞ்சநேயர் திருவுருவங்களும் அமைந்துள்ளன. ராமனைத் தவிர எவருக்கும் தலை வணங்காத அனுமன், அழகிரிநாதருக்குப் பணிந்து கொடி மரத்தின் முன் இருகரம் கூப்பி மிக கம்பீரத்துடன் அருளுகிறார்.

இக்கோவிலில் உள்ள ஆஞ்சனேயர் வரலாற்று காலத்தில் இருந்து உருவத்தில் மூன்றாம் இடம் வகிக்கிறார். நாமக்கல் ஆஞ்சனேயர் முதலாவதாகவும், சுசீந்த்ரம் தாணுமாலய ஆஞ்சனேயர் இரண்டாவதாகவும், கோட்டை அழகிரி நாதர் ஆஞ்சனேயர் மூன்றாவதாகவும் விளங்குகின்றார்கள்.

பௌர்ணமியில் பகல் நேரத்திலும், அமாவாசை தினத்தில் மாலை, இரவு வேளைகளிலும் இந்தக் கோயிலில் வழிபடுவது மிகவும் நல்லது. இங்கு பெருமாள் திருமண கோலத்தில் காட்சி தருவதால் இங்கு வந்தால் திருமணத்தடை நீங்கும்‌. குழந்தை பேறு கிட்டும்‌.

கொடி மரத்துக்கு பின் ஆஞ்சநேயர்

கொடி மரத்துக்கு முன் கருடன்

 
Previous
Previous

மணக்கால் அய்யம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோவில்

Next
Next

உத்தமர் கோவில்