மீமிசல் கல்யாண ராமசாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மீமிசல் கல்யாண ராமசாமி கோவில்

கருப்பு உளுந்தை பிரசாதமாகத் தந்து குழந்தை பாக்கியம் அருளும் ராமர் கோவில்

புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார் கோயில் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 68 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது மீமிசல் கல்யாண ராமசாமி கோவில். கர்ப்பக் கிரகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.

இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். அதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

Read More
சென்னை வில்லிவாக்கம் சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சென்னை வில்லிவாக்கம் சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில்

மூலவர், உற்சவர் ஆகிய இருவரின் இடுப்பிலும், கயிறு அழுந்திய தடம் பதிந்திருக்கும் கிருஷ்ணன் கோவில்

சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது சௌமிய தாமோதரப் பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி. பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். மகாவிஷ்ணுவின் 12 சிறப்பு பெயர்களில் (துவாதச நாமம் ) ஒன்று தாமோதரன். அந்தப் பெயரில், பெருமாள் கோவில் அமைந்த ஒரு சில தலங்களில் இத்தலமும் ஒன்று.பக்தர்கள் இத்தலத்தில் பெருமாளை குழந்தை கண்ணனாகவே பார்க்கின்றனர்.

கோகுலத்தில் கண்ணன் தன் பால்ய வயதில் பல குறும்புகளை செய்தார் . வளர்ப்புத் தாயான யசோதை தன் மகன் கிருஷ்ணனை வெளியில் செல்லாதபடி. அவன் இடுப்பில் கயிற்றால் கட்டி அதை உரலில் கட்டி வைத்தாள். ஆனாலும் கிருஷ்ணன் உரலையும் சேர்த்து இழுத்துச் சென்று, இரண்டு அசுரர்களுக்கு சாப விமோசனம் கொடுத்தான். இவ்வாறு கயிற்றால் கட்டும்போது, கயிறு அழுத்தியதால் கிருஷ்ணனின் வயிற்றில் தழும்பு ஏற்பட்டது. எனவே, கிருஷ்ணன் தாமோதரன் என அழைக்கப்படுகிறான். 'தாமம்' என்றால் கயிறு, 'உதரம்' என்றால் வயிறு என்று பொருள். அழகாக, புன்னகை ததும்பக் காட்சி தருவதால் மூலவர், 'சௌமிய' தாமோதரப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் மூலவர், உற்சவர் ஆகிய இருவரின் இடுப்பிலும், கயிறு அழுந்திய தடம் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

Read More
ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கண்ணன் கோவில்

உற்சவர் கண்ணனுக்கு கொலுசு சார்த்தி வழிபடும் தனிச்சிறப்பு

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.

உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய கோவில் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும், பாடுவதில், ஆடுவதில், இசைக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெற வேண்டும் என விரும்பும் பக்தர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து காளிங்க நர்த்தனரை பிரார்த்தித்துச் செல்கிறார்கள். பக்தர்கள் உற்சவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய, நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

ஆவணியின் ரோகிணி நட்சத்திர நன்னாளில், ஸ்ரீகிருஷ்ணரின் ஜெயந்தித் திருநாள் அன்று, சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் நடைபெறுவதைக் காணக் கண் கோடி வேண்டும்.

Read More
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்

ஒரு பாதி முகம் கோபமாகவும், மறுபாதி சிரித்த முகமாகவும் காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர்

ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வேத வியாசரின் தந்தை பராசர மகரிஷியால் வழிபட்டதால், இத்தலம் 'பராசர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்பட்டது. 7000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

இக்கோவில் தூணில் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர் மிகவும் விசேடமானவர். இவர் தெற்கு நோக்கி அருள்வதும், வாலின் நுனி தலைக்கு மேல் இருப்பதும் விசேஷ அம்சங்கள் . வயதானவர் போன்ற தோற்றம் காட்டும் இந்த ஆஞ்சநேயர், கிழக்குப்பக்கம் இருந்து தரிசித்தால் கோபமாகவும், மேற்குப்பக்கம் இருந்து தரிசித்தால் சிரித்த முகத்துடனும் காட்சியளிப்பார். இப்படி இருவேறு முக பாவங்களை கொண்ட ஆஞ்சநேயரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்

தினம் இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் கிருஷ்ணர் கோவில்

கேரளா மாநிலம் கோட்டயத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவார்ப்பு எனும் ஊரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில், தினமும் 23 மணி நேரம் 58 நிமிடங்கள் திறந்து இருக்கும். அதாவது இந்த கோயில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படுகின்றது என்பது ஒரு அதிசயமாகும்.

எப்பொழுதும் பசியுடன் இருக்கும் கிருஷ்ணர்

இங்கு எழுந்தருளியிருக்கும் கிருஷ்ணர் எப்போதும் பசித்து இருப்பதால், ஒவ்வொரு நாளும் இரண்டு நிமிடங்கள் தவிர இந்த கோவில் மூடப்படுவதில்லை. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே, இக்கோவிலில் எழுந்து அருளி இருக்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

மற்றொரு சிறப்பாக இந்த கோயில் அர்ச்சகர் கோயில் நடை சாற்றும் வேலையில் கையில் கோடாரி ஏந்தியபடி இருப்பார். கோயில் நடை மூடப்பட்டதும். தந்திரியிடம் கோடாரி கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணர் பசியை தாங்கிக் கொள்ள மாட்டார் என நம்பப்படுவதால், ஒரு வேளை இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கோயில் கதவு திறப்பதில் ஏதேனும் தடங்கல் வந்தால், கதவை உடைப்பதற்காக அந்த கோடாரி பயன்படுத்தலாம் என்பதற்காக அந்த கோடாரி தந்திரியிடம் கொடுக்கப்படுகிறது.

கிரகணத்தின் போதும் மூடப்படாத கோவில்

இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது ​​ஆண்டவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீஆதிசங்கராச்சாரியார், கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்று சொன்னார். அப்போதிருந்து கிரகணத்தின் போதும், இக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் இரவு 11.58 மணி முதல் 12 மணி வரை, வெறும் 2 நிமிடங்கள்தான்.

அதேபோல், இந்த கோவிலில் பிரசாதம் பெறாமல் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. தினமும் இரவு 11.58 மணிக்கு பூசாரி சத்தமாக, "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?" என அழைப்பார். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் இக்கோவில் பிரசாதம் சுவைத்தால், அதன்பிறகு நீங்கள் பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப் பிரச்சனை இருக்காதாம்.

Read More
திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்

ஓணம் பண்டிகை முதன் முதலில் கொண்டாடப்பட்ட கோவில்

பெருமாளின் வாமன அவதாரத்திற்கு என்று அமைந்த வெகு சில கோவில்களில் இத்தலமும் ஒன்று

எர்ணாகுளத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மலையாள திவ்யதேசம் திருக்காக்கரை திருக்காட்கரையப்பன் கோவில் ஆகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் 67-வது திவ்யதேசம் ஆகும். பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன மூர்த்திக்கென்று வெகு சில கோவில்களே உள்ளன. அந்த வெகுசில கோவில்களில் ஒன்றுதான் திருக்காக்கரை திருக்காட்கரையப்பன் கோவில். இந்தியாவிலேயே வாமனருக்கு பிரத்யேகமாகக் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

பெருமாள் தன் திருவடியால் உலகைத் தாவி அளந்த இடம் என்ற பொருள்பட திரு-கால்-கரை என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் வாமன அவதார பெருமாள். இவருக்குக் கதாயுதம் கிடையாது. தாயார் ஸ்ரீபெருஞ்செல்வநாயகி. தாயாருக்குத் தனிச் சன்னதி கிடையாது.

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதின் பின்னணியில் உள்ள புராணம்

பெருமாளின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமான வாமனர் பிறந்த நாளான, ஆவணி மாத துவாதசியில் வரும் திருவோண நட்சத்திரம் அமைந்த நாள், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மகாபலிச்சக்கரவர்த்தி, இந்த நாளன்று திருக்காக்கரையில் உள்ள வாமனர் கோவிலில் அவரின் பிறப்பைக் கொண்டாட, பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாக தலபுராணம் கூறுகின்றது.

மகாபலிச்சக்கரவர்த்தி என்பவன் கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவன். இவன் அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவன். ஆனால் தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவனிடம் ஏற்பட்டு விட்டது. இதை உணர்ந்த மகாவிஷ்ணு, அவன் அகந்தையை வளரவிடாமல் தடுக்கவே குள்ள வடிவெடுத்து வந்தார். மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே, என்றான் மகாபலி. அவனது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து தானம் கொடுப்பதை தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்தான் மகாபலி. எனவே சம்மதித்தான். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே? என கேட்டார். அகந்தை கொண்டிருந்த மகாபலி பணிந்து, தலை வணங்கி நின்றான். பகவானே! இதோ என் தலை. இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை என்றான். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி, தன்னோடு இணைத்து கொண்டார்.

வாமனர் மகாபலியைப் பாதாளத்திற்கு அனுப்புவதற்கு முன், மகாபலி ஒரு வரம் கேட்டான். வருடத்துக்கு ஒருமுறை தனது தேசத்து மக்களைச் சந்திப்பதற்கு அருள்செய்யுமாறு வேண்டிக்கொண்டான். விஷ்ணு பகவானும் ஏற்றுக்கொண்டார். பகவான் மகாபலிக்கு அருள்புரிந்தது ஆவணி மாதம் திருவோண நடசத்திரத் திருநாளில். இதை நினைவுகூரும் வகையில் கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகாபலியும் தான் வேண்டிக் கொண்டபடி இந்த விழாவில் கலந்துகொண்டு குடிமக்களை வாழ்த்துவதாக ஐதீகம்.

இக்கோவிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இவ்விடத்தில் விளக்கேற்றி மகாபலியை வழிபடுகின்றனர்.கேரளபாணியில் ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் வாமன மூர்த்தி அருள்பாலிக்கிறார். இவரை மக்கள் திருக்காக்கரை அப்பன் என செல்லப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டால், அனைத்து வித நலன்களும் பெறலாம்.

Read More
கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில்

பெருமாள் கோவிலில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

தென்காசியில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கடையநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது நீலமணிநாத சுவாமி கோவில். 500 முதல் 1000 ஆண்டுகள் வரை பழமையானது இக்கோவில். கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி, நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக் கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

பெருமாள் கோவிலாக இருந்தாலும், சிவ அம்சமான தட்சிணாமூர்த்தியும் இங்கு எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். நீலமணிநாத சுவாமி பெருமாளின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தட்சிணாமூர்த்தி, மற்ற கோவில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார். இவரது அமைப்பும் வித்தியாசமானது.மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார். இங்கோ, இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி வைத்து காட்சி தருகிறார். வலதுபக்கமாக முகம் வைத்திருக்க வேண்டிய முயலகன், இடது பக்கம் திரும்பியிருப்பது மற்றொரு சிறப்பம்சம்.

Read More
சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில்

குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுக்கும் நடைமுறை

சென்னையின் வடக்கில் அமைந்துள்ள தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில். 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். மூலவர் பெருமாள் வடக்கு நோக்கி இருப்பது இந்தத் தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்பகுதியிலுள்ள பல ஆயிரம் மீனவ மக்களின் குலதெய்வமாக இப்பெருமாள் விளங்குகின்றார்.

இக்கோவிலின் முக்கிய சிறப்பு, பெருமாளுக்கு குழந்தையை தத்து கொடுப்பது. இதை ஒரு பரிகார நிகழ்ச்சியாக பக்தர்கள் கடைபிடிக்கின்றனர். ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், தம் குழந்தையை பெருமாளுக்கு தத்து கொடுப்பர்.பின் பெருமாளிடம் இருந்து குழந்தையை தத்தெடுக்கின்றனர். மலேஷியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்களும், குழந்தைகளை பெருமாளுக்கு தத்து கொடுக்கின்றனர். பெருமாளுக்கு குழந்தைகளை தத்து கொடுத்தால், வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சேர்ந்து, எல்லா வித சொத்துக்களும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை

ஜாதக கோளாறு, திருமண தடை, தோஷம் உள்ளோர், குழந்தைப்பேறுக்காக இங்கு பிரார்த்திக்கின்றனர்.

Read More
தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாமல் தாமோதரப் பெருமாள் கோவில்

வயிற்றில் கயிற்றால் கட்டிய வடுவுடன் காட்சி அளிக்கும் பெருமாள்

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இத்தலத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தாமோதரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் திருமாலழகி.

கேசவன், நாராயணன், மாதவன் கோவிந்தன் விஷ்ணு மதுசூதனன், திருவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் என 12 திருநாமங்கள் பெருமாளுக்கு விசஷேமானவை. இதில் இத்தலம் தாமோதரப் பெருமாளுக்கு உரியதாக திகழ்கிறது. மூலவர் தாமோதரப் பெருமாள் சங்கு சக்கரம் ஏந்தியபடி நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

ஆயர்பாடியில், நந்தகோபர் யசோதை தம்பதியின் மகனாக, திருமால் கண்ணன் என்னும் பெயரில் வளர்ந்தார். சிறுவனான கண்ணன் ஆயர்பாடியில் பலவித குறும்பு விளையாட்டுகளை நடத்தினார். அதில் வெண்ணெய் திருடுதலும் ஒன்று. இதனால் கோபம் கொண்ட கோபியர்கள், கண்ணனைக் கண்டிக்கும்படி, யசோதையிடம் முறையிட்டனர். கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்வதை தடுக்க, யசோதை அவனைக் கயிற்றால் பிணைத்து ஒரு உரலுடன் சேர்த்துக் கட்டி வைத்தாள். அப்போது கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்து, அது வடுவாக மாறியது.. அதனால் தாமோதரன் எனப் பெயர் பெற்றான். 'தாம' என்றால் 'கயிறு' அல்லது தாம்பு என்று பொருள். உதரன் என்றால் 'வயிறு'. அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன் என்பது பொருள். இந்த தாமோதரப் பெருமாளின் தரிசனம் பெற விரும்பிய மகரிஷிகள் பலர், இங்கிருந்த காட்டில் தவமிருந்தனர். அதன் பயனாக காட்சியளித்த பெருமாள் இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.

குழந்தை கண்ணன் வயிற்றில் கட்டிய கயிற்றின் வடுவானது இன்றும் அபிஷேகத்தின் போது மூலவர் விக்கிரகத்தில் காணலாம். மாதம் தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று தாமோதர பெருமாளுக்கு ராஜ அலங்கார சேவை நடக்கும்.

நின்ற கோலத்தில் அருள்புரியும் தாமல் ஸ்ரீ தாமோதர பெருமாள், கிடந்த கோலத்தில் காட்சி அருளும் திருப்பாற்கடல் மற்றும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருப்புட்குழி ஆகிய மூன்று வைணவ தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

பெருமாளுக்கு வெள்ளிக் கொலுசு காணிக்கை

இத்தலத்தில் பெருமாளிடம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன், தாமோதரப் பெருமாளுக்கு தங்கள் காணிக்கையாக வெள்ளிக் கொலுசை அணிவிக்கின்றனர்.

Read More
சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில்

பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து சிறிய சிங்கம் வெளியே வருவது போன்ற அதி அற்புதமான வேலைப்பாடு உள்ள கோமுகம்

திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சேரன்மகாதேவி பக்தவத்சல பெருமாள் கோவில். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

பக்தர்களால் அதிகம் அறியப்படாத இக்கோவில் நம் முன்னோர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை திறனுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கோவில் சுற்றுச்சுவரில் அமைந்துள்ள தூண்களும், சிற்பங்களும், கலை நயம் மிக்க வடிவமைப்புகளும் நம்மை பிரமிக்க வைக்கும். சிம்ம முகம் கொண்ட தூண்கள், நரசிம்மரின் திருவுருவம், அந்த காலத்து நாகரிகத்தின் படி ஆடை, அணிகலன்கள் அணிந்த பெண்மணி முதலில் சிற்பங்களின் அழகு பார்ப்பவர்களின் எண்ணத்தை விட்டு அகலாது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, கருவறை அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் வடிவமைப்பு நம் முன்னோர்களின் ஈடு இணை இல்லாத கற்பனைத் திறனை வெளி காட்டுகின்றது.

கோமுகமானது ஒரு சிறிய சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டதாக இருக்கின்றது. இந்த சிங்கமானது கருவறை சுவரை தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெரிய சிங்கத்தின் வாயிலிருந்து வெளியே வருகின்றது. கோமுகத்தின், மூக்கின் வெளிப்புற முனையின் கீழே ஒன்றன் பின் ஒன்றாக இரட்டை தாமரை மலர்கள் உள்ளன. இந்த தாமரை மலர்கள் சிறிய சிங்கத்தின் வாயிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. சிறிய சிங்கத்தின் அலங்காரங்கள், தலைக்கவசம், பிடரி மற்றும் கூர்மையான பற்கள் கொண்ட சிறிய சிங்கத்தின் நான்கு கால்கள் அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாட்டுடனும், மிக்க அழகுடனும் செய்யப்பட்டுள்ளன.

Read More
உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் கோவில்

பெருமாள் கருவறைக்குள் எழுந்தருளி இருக்கும் ஆஞ்சநேயர்

அட்சதை பிரசாதமாக வழங்கப்படும் தனிச்சிறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ளது சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில். கருவறையில் முதலவர் சீனிவாச பெருமாள் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர். ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோவிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே ஆஞ்சநேயர் இருப்பது சிறப்பம்சம்.

ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மூலவர் சீனிவாச பெருமாள், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், 'எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயா!' என்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோவில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்' என்றார். அதன்படி பக்தர், பெருமாளை கண்டெடுத்து கோவில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.

Read More
வரலட்சுமி விரதம்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வரலட்சுமி விரதம்

தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள்அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்

தாலி பாக்கியம் நிலைக்க பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

லட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள். அவள் பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் கீழ்க்கண்ட பலன்கள் ஏற்படும்.

வரலட்சுமி விரத பலன்கள்

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

3. மங்கல வாழ்வு அமையும்.

4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.

5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

Read More
சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்

தவிட்டுப்பானையில் ஒளித்து வைக்கப்பட்ட தாடாளன் பெருமாள்

கட்டிடப்பணி சிறக்க நிலத்தின் மணலை வைத்து பூமி பூஜை செய்யப்படும் திவ்ய தேசம்

சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். 'தாள்' என்றால் 'பூமி அல்லது உலகம்', 'ஆளன்' என்றால் 'அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு "தாளாளன்' என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது. ஒருசமயம் இத்தலம் அழிந்து போனது. அப்போது இந்தக் கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.

உற்சவமூர்த்தி தாடாளன் பெருமாள், மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.

உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

Read More
கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில்

தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் கருடாழ்வார்

சென்னை ஆவடியில் இருந்து, செங்குன்றம் செல்லும் வழியில் மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில்பதாகை சுந்தரராஜ பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுந்தரவல்லி. இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

பொதுவாக பெருமாள் கோவில்களில், பெருமாள் எதிரில் கருடாழ்வார் நின்ற கோலத்தில் அஞ்சலி முத்திரையுடன் அல்லது கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் கருடாழ்வார், தவம் செய்யும் நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். கருடாழ்வாரின் இந்த தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி, கருட பஞ்சமி என அழைக்கப்படும். அன்று பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடாழ்வாருக்காக, கருட பஞ்சமி என்ற விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.

Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ஆண்டாள் கையில் இருக்கும் கல்யாண கிளியின் சிறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவில். அந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆண்டாளின் சிறப்பு அடையாளங்களாக அவரது சாய்ந்த கொண்டையும், அவரது தோளில் வீற்றிருக்கும் கிளியும் விளங்குகின்றன.

மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத்தோளில் கிளி இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கும். ஆண்டாளின் இடது கையில் உள்ள கிளி கல்யாண கிளி என்று அழைக்கப்படுகின்றது.இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்;, இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்;, கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர். கிளியின் கழுத்துக்கு ஆபரணமாக பனை ஓலையும், பச்சிலைகளும் சாத்தப்படுகின்றன. கிளி அமர்ந்திருக்கும் பூச்செண்டானது நந்தியாவட்டைப் பூ, செவ்வரளிப்பூ ஆகியவற்றால் ஆனது. கிளியை தினசரி மாலை 6.30. மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின் போது தாயார் ஆண்டாளின் இடது தோளில் சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்' எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.

ஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது. ஆண்டாள், பெருமாளிடம் காதல் கொண்டு, காதல் தூது சென்றதால், அந்தக் கிளிக்கு ‘கல்யாணக் கிளி’ என்றும் பெயர் உண்டு .பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை கூறும் பொழுது அதைக் கேட்கும் கிளியும் அடிக்கடி ஞாபகப்படுத்தி ஆண்டாளிடம் பிரார்த்தனையை நினைவு படுத்துமாம். பக்தர்கள் ஒரு கோரிக்கை வைத்தால், அதனை கல்யாணக் கிளி செய்து முடிக்குமாம்.

Read More
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்

அமாவாசை தோறும் பெருமாள் சவுரி முடி அணிந்து கொண்டு, தன் நடையழகை காட்டும் திவ்ய தேசம்

நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். பெருமாள் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் கண்ணபுர நாயகி. உற்சவரின் திருநாமம் சவுரிராஜப்பெருமாள். இந்த கோவிலில், உற்சவர் சௌரிராஜப் பெருமாள் தலையில் முடியுடன் காட்சி தருகிறார். சவுரி என்றால் முடி அல்லது அழகு என்று பொருள்.

108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் போற்றப்படுகின்றது. சில பெருமாள் கோவில்களுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த சொல்வடைகள் உள்ளன. ஸ்ரீரங்கம் - நடை அழகு, ஸ்ரீவில்லிப்புத்தூர் - கோபுரம் அழகு, மன்னார்குடி - மதிலழகு,திருப்பதி - குடை அழகு என்ற வரிசையில் திருக்கண்ணபுரம் நடை அழகு என்பது தனிச்சிறப்பாகும்.

ராவண வதம் முடிந்தபின், ராமபிரான் அயோத்தி திரும்ப தயாரானார். ராவணனின் சகோதரனான விபீஷ்ணன், ராமபிரானைப் பிரிய மனமில்லாது மிகவும் வருந்தினான். விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார். இதை உணர்த்துவது போல் இக்கோவிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சந்நிதி உள்ளது. வீபிஷணர் பெருமாளிடம், 'நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும்' என்று வேண்ட, 'கண்ணபுரத்தில் காட்டுவோம் வா' என்று வீபிஷணணுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார்.

இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் இக்கோவிலில், உச்சிகால பூஜையில் பெருமாள், சவுரி முடியுடன் கைத்தல சேவையில் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது சௌரிராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, சவுரிமுடி அணிவித்து புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அமாவாசையன்று சௌரிராஜப் பெருமாள் உலா செல்லும்போது மட்டுமே,அவருடைய திருமுடி தரிசனத்தை நாம் காண முடியும்.

Read More
பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

பரமந்தூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்

நவபாஷாணத்தால் செய்யப்பட்ட பெருமாள்

பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூவரது திருமேனிகளும் இணைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு

பெருமாளின் தலைக்கிரீடத்தில் கஜலட்சுமி அமைந்திருக்கும் சிறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார் கோவில் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பரமந்தூர்

ஆதிகேசவ பெருமாள் கோவில். ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் வேத வியாசரின் தந்தை பராசர மகரிஷியால் வழிபட்டதால், இத்தலம் 'பராசர க்ஷேத்திரம்' என்றும் அழைக்கப்பட்டது. 7000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

கருவறையில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் 8 அடி உயரத் திருமேனி உடையவராய், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். அவர் நான்கு கைகளுடன், மேல் கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை ஏந்தியுள்ளார், கீழ் வலது கை அபய ஹஸ்தத்திலும் இடது கை கதி ஹஸ்தத்திலும் உள்ளது. பெருமாள் மற்றும் இரு தாயர்கள் திருமேனி நவபாஷாணத்தால் செய்யப்பட்டது.மேலும் மூவரது திருமேனிகளும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படும். இப்படி திருமேனிகள் இணைந்திருக்கும் அமைப்பானது வேறு எந்த பெருமாள் கோவிலிலும் நாம் காண முடியாது. அந்தக் கோவில்களில் எல்லாம் மூவரின் திருமேனிகள் தனித்தனியாகத்தான் இருக்கும். மேலும் பெருமாளின் தலைக்கிரீடத்தில் கஜலட்சுமி அமைந்திருப்பதும் மற்றும் ஒரு சிறப்பாகும்.

இப்பெருமாள் நவபாஷாணத்தால் ஆனவர் என்பதால் திருமஞ்சனம் ஏதும் கிடையாது. வருஷத்துக்கு ஒரு முறை பெருமாளுக்கு தைலக்காப்பு நடைபெறும்.

இந்த பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் அருள்வதாக ஐதீகம். ஆகவே கல்யாண வரம் வேண்டும் அன்பர்கள், இவரின் சன்னதிக்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டி செல்கின்றனர். இந்த பெருமானின் திருவருளால் தடைகள் நீங்கி விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் குழந்தை வரம் வேண்டியும் வெகுநாட்களாக அவதிப்படும் அன்பர்கள் இந்த பெருமாளை வேண்டி வணங்கி செல்கின்றனர். இப்பெருமாள் தீராத நோய்களையும் தீர்த்து வைக்கின்றார்.

Read More
அருகன்குளம் காட்டுராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அருகன்குளம் காட்டுராமர் கோவில்

அசல் ராமரின் அழகோடு ஒப்பிடத் தோன்றும் காட்டுராமர்

ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம்

திருநெல்வேலியில் இருந்து ஐந்து கி.மீ .தொலைவில் அமைந்துள்ளது, அருகன்குளம் எனும் கிராமம். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி அருகன் குளம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு மயில்கள் நிறைந்த அமைதியான வனப்பகுதியில் ராமர் கோயில் அமைந்துள்ளது.காட்டுப்பகுதியில் இந்த கோவில் இருப்பதால் இது காட்டுராமர் கோவில் என அழைக்கப்படுகிறது.இக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது.

ராமபிரான் வனவாசத்தில் இருந்தபோது, சீதையை ராவணன் கடத்தினான். சீதையை ராவணன் கடத்துவதை அருகன்குளம் பகுதியில் வைத்துப் பார்த்த ஜடாயு என்ற கழுகு அரசன், ராவணனை தடுத்து நிறுத்தினான். இதனால் ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் போர் ஏற்பட்டது.இதில் ஜடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். இதில் காயமடைந்த ஜடாயு, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. அந்த வழியாக வந்த ராமரும், லட்சுமணரும் துடித்துக்கொண்டு இருந்த ஜடாயுவை பார்த்தனர். உடனே ராமர், ஜடாயுவை தனது தொடையில் தூக்கிவைத்து தடவிக்கொடுத்தார். அப்போது ஜடாயு, சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச் செல்கிறான் என்ற தகவலை சொல்லியது. மேலும் தான் இறந்ததும் இறுதிச்சடங்கை ராமர் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து விட்டு இறந்தது. அதன்படி ராமபிரான் ஜடாயுவுக்கு, தாமிரபரணி ஆற்றங் கரையில் இறுதிச்சடங்கு செய்தார். அப்போது ஜடாயுவுக்கு தீர்த்தம் கொடுப்பதற்காக ஜடாயு தீர்த்தத்தை உருவாக்கி அதில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தார். ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து தர்ப்பணம் கொடுத்த இடம், தாமிரபரணி நதிக்கரையில் 'ஜடாயுத்துறை' யாக இன்றும் அழைக்கப்படுகிறது.

கோவில் கருவறையில் ராமபிரான் கம்பீரமான தோற்றத்துடன், இடது கையில் அலங்காரமாக வடிவமைக்கப்பட்ட வில்லையும் வலது கையில் வாளையும் ஏந்தி நிற்கிறார், முதுகில் ஒரு அம்பறாத்தூணி தெளிவாகத் தெரியும். அவரது வலது பக்கத்தில், சீதை இடது கையில் ஒரு பூவை ஏந்தியுள்ளார், அவரது இடது பக்கத்தில், லட்சுமணன் முதுகில் ஒரு வில்லையும் வாளையும் ஏந்தியுள்ளார். இந்த மூன்று பெரிய மூர்த்திகளின் அழகு இணையற்றது.இந்த காட்டு ராமரின் அழகுக்கு, அசல் ராமரின் அழகே இணையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் இந்த ராமர் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கிறார்.

தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்
பெருமாள் Alaya Thuligal பெருமாள் Alaya Thuligal

திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்

தென் திருப்பதி என்று போற்றப்படும் தலம்

திருப்பதி வெங்கடாசலபதி நிரந்தரமாக தங்கி இருக்கும் திருவண்ணாமலை

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வடக்கே சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்புறத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை என்ற ஊரில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். பெருமாள் சன்னிதியை அடைய 150 படிகளுக்கு மேல் ஏற வேண்டும். எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் ஒன்பதடி உயரத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். திருப்பதியில் இருப்பது போன்று நின்ற நிலையில் பெருமாள் அருள் பாலிப்பதால் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை காண திருப்பதி வெங்கடாசலபதி தனது பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். அவர் இந்தத் தலத்தை கடந்தபோது நாரதர், ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்து முடிந்துவிட்டது என்று கூறினார்.அதனால் வெங்கடாசலபதி திருப்பதிக்குத் திரும்ப முடிவு செய்தார், இருப்பினும் ஆண்டாள் அவரை இந்த இடத்திலேயே தங்கி, தனக்கும் பக்தர்களுக்கும் தனது மூத்த சகோதரனாக இருந்து தரிசனம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆண்டாளால் அமைதியடைந்த ஸ்ரீனிவாச பெருமாள், அவளுடைய வேண்டுகோளை ஏற்று, இந்த மலையின் உச்சியில் நிரந்தரமாக தங்கினார். திருப்பதி வெங்கடாசலபதி இத்தலத்தில் தங்கி இருப்பதால், இக்கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.

திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தலாம் என்றும் திருப்பதி சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு வந்தாலும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
சளுக்கை சுகர் நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சளுக்கை சுகர் நாராயணப் பெருமாள் கோவில்

ஏழடி உயர திருமேனி உடைய பெருமாள்

குழந்தைப் பேறு அளிக்கும் பெருமாள்

காஞ்சிபுரத்திலிருந்து 39 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 8 கி.மீ.தொலைவிலும் உள்ள சளுக்கை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சுகர் நாராயணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் சுகந்தவல்லித் தாயார். கி.பி.1061 ஆம் ஆண்டு சோழ அரசனான முதலாம் ராஜேந்திர சோழனின் மகனான சோழ கேரளனுடைய நினைவாக, அவருடைய தம்பியால் கட்டப்பட்ட கோவில் இது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்த தலங்களில் இதுவும் ஒன்று.

கருவறையில் மூலவர் சுகர் நாராயணப் பெருமாள் 7 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தருகிறார். அவர் தனது வலது கரத்தில் பிரயோக சக்கரத்தை ஏந்தி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். பெருமாளுடன் ஸ்ரீதேவியும் பூதேவியும் எழுந்தருளி இருக்கிறார்கள். பெருமாளின் முன் சுகப்பிரம்ம மகரிஷியும், பரத்வாஜ முனிவரும் மண்டியிட்டு, பெருமாளை சேவித்த வண்ணம் உள்ளார்கள்.

இந்த பெருமாள், குழந்தைபேறு இல்லாதவர்கள் வேண்டினால் அவர்களுக்கு உடனடியாக குழந்தைப் பேறு அளிக்கும் வரப்பிரசாதி. இங்கு வேண்டிக் கொண்டு குழந்தைபேறு பெற்றவர்கள், மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து குழந்தையின் எடைக்கு சமமாக தங்களால் முடிந்த காணிக்கையை துலாபாரம் நடத்தி சமர்ப்பிகிறார்கள். இது இந்த கோவிலின் விசேஷமான அம்சம் ஆகும்.

Read More