
மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில்
மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெருமாள் கோவில்
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் பெருமாள்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருமணஞ்சேரி என்னும் தேவார தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது எதிர்கொள்பாடி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில். கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் எதிர்கொள்பாடி என்று அழைக்கப்படும் மேலத்திருமணஞ்சேரி ஆகும். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.
பார்வதி தேவி, சிவபெருமானை பூலோக முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி, அவரை மணம் முடித்த தலம் தான் திருமணஞ்சேரி. திருமணஞ்சேரி தல புராணம், பார்வதி தேவி பசுவாகவும், அவளைக் கவனித்துக்கொள்வதற்காக பெருமாள் மூத்த சகோதரனாக அவளுடன் வந்ததையும் விவரிக்கின்றது. பின்னர், பார்வதி தேவி பரத முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை மணந்தார். அந்த திருமணத்தில் பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து கொடுத்தவர் பெருமாள். அதனால் இக்கோவில் மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர் பெருமக்களையும் முனிவர்களையும், திருமால் வரவேற்று உபசரித்த தலம் தான் எதிர்கொள்பாடி. இன்றும் வருடாந்திர கல்யாண உற்சவத்தின் போது, இக்கோவிலில் இருந்து சிவன் கோவிலுக்கு கல்யாண சீர் (திருமணப் பரிசுகள்) கொண்டு செல்லப்படுவதால் இந்த நம்பிக்கை வலுப்பெற்றது.
கருவறையில் மடியில் லட்சுமி தேவியை இருத்தியபடி பெருமாள் காட்சி தருவது ஒரு சிறப்பாகும். பெருமாள் உற்சவரின் திருநாமம் வரதராஜர்.பொதுவாக கோவில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இதற்கு காரணம் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது, தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு தன் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததால்,அவர்கள் முகமாக, அதாவது, மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீ லட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் லட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்
இடுப்பில் பிச்சுவா கத்தியும், கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தியும் தாங்கிய ஆஞ்சநேயர்
ஆங்கிலேய கலெக்டரின் புற்று நோயை குணப்படுத்திய ஆஞ்சநேயர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்திருக்கிறது காடு அனுமந்தராய சுவாமி கோவில். முற்காலத்தில் கோவில் இருந்த இடம் காட்டுப்பகுதியாக இருந்ததால் சுவாமிக்கு காடு அனுமந்தராய சுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில், கிருஷ்ணதேவராயரின் குருவாக இருந்த துறவி ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளால், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆஞ்சநேய பக்தரான இவர் நாடு முழுவதும் எழுநூற்று முப்பத்திரண்டு ஆஞ்சநேயர் கோவில்களை கட்டினார். அதில் 89வதாகக் கட்டப்பட்டது தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவில்.
காடு அனுமந்தராய சுவாமி ஏழு அடி உயரம், மூன்று அடி அகலத்துடன் உள்ளார். இடுப்பில் சலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. வலது இடுப்பில் பிச்சுவா கத்தியும், கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகளும் காணப்படுகிறது. வலது கை அபயஹஸ்தமாகவும், இடது கை சவுகந்திகாமலர் ஏந்திய நிலையிலும் உள்ளது. முகம் வடகிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் வடக்கு நோக்கியும் உள்ளன. கிரீடத்தின் பின் புறத்தில் பட்டாகத்தி இருக்கிறது. முகத்தின் வலதுபுறம் சக்கரமும், இடதுபுறம் சங்கும் உள்ளன. பின்புறத்திலுள்ள வாலானது வலது கையைத் தொட்டு முகத்தை நோக்கி மேல்நோக்கிச் சென்று பின் கீழ்நோக்கி வந்து இடது கையை தொட்டு முடிவடைகிறது. வாலில் மூன்று மணிகள் உள்ளன.
1810ல், கோவை கலெக்டராக இருந்தவர் ஆங்கிலேயரான டீலன்துரை. இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அப்போது சிலர் நோய் நீங்க காடு அனுமந்தராய சுவாமியை வழிபடுமாறு கூறினர். கலெக்டரும் அவ்வாறே செய்ய நோய் நிவர்த்தியானது. இதற்கு நன்றிக்கடனாக கோவிலில் கர்ப்பக்கிரகத்தை பெரிதாகக் கட்டினார். கோபுரம் கட்ட முயன்ற போது, பக்தர் ஒருவரின் கனவில் அனுமந்தராய சுவாமி தோன்றி, கோபுரம் தேவையில்லை என்று கூறியதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இந்தக் கோவில் ஆஞ்சநேயருக்குரிய தலமாக இருந்தாலும், அவரது நாதனான இராமபிரானுக்கே முதல் பூஜை நடக்கிறது. அதே போல் பிரம்மோற்சவமும் நாராயணனின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மருக்கு நடத்தப்படுகிறது. இங்குள்ள இலட்மி நரசிம்மர் வெகு நாட்களாக காவிரியும், பவானியும் சங்கமமாகும் கூடுதுறையில் தண்ணீரில் ஜலவாசம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் பக்தர் ஒருவருக்குத் தரிசனமளித்தார். அவர் அந்தச் சிலையைக் கொண்டு வந்து இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.

மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில்
மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெருமாள் கோவில்
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் பெருமாள்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருமணஞ்சேரி என்னும் தேவார தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது எதிர்கொள்பாடி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில். கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் எதிர்கொள்பாடி என்று அழைக்கப்படும் மேலத்திருமணஞ்சேரி ஆகும். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.
பார்வதி தேவி, சிவபெருமானை பூலோக முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி, அவரை மணம் முடித்த தலம் தான் திருமணஞ்சேரி. திருமணஞ்சேரி தல புராணம், பார்வதி தேவி பசுவாகவும், அவளைக் கவனித்துக்கொள்வதற்காக பெருமாள் மூத்த சகோதரனாக அவளுடன் வந்ததையும் விவரிக்கின்றது. பின்னர், பார்வதி தேவி பரத முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை மணந்தார். அந்த திருமணத்தில் பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து கொடுத்தவர் பெருமாள். அதனால் இக்கோவில் மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர் பெருமக்களையும் முனிவர்களையும், திருமால் வரவேற்று உபசரித்த தலம் தான் எதிர்கொள்பாடி. இன்றும் வருடாந்திர கல்யாண உற்சவத்தின் போது, இக்கோவிலில் இருந்து சிவன் கோவிலுக்கு கல்யாண சீர் (திருமணப் பரிசுகள்) கொண்டு செல்லப்படுவதால் இந்த நம்பிக்கை வலுப்பெற்றது.
கருவறையில் மடியில் லட்சுமி தேவியை இருத்தியபடி பெருமாள் காட்சி தருவது ஒரு சிறப்பாகும். பெருமாள் உற்சவரின் திருநாமம் வரதராஜர்.பொதுவாக கோவில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இதற்கு காரணம் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது, தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு தன் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததால்,அவர்கள் முகமாக, அதாவது, மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீ லட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் லட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில்
சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் ராமபிரானின் ஆபூர்வ தோற்றம்
ராம லட்சுமண சகோதரர்கள் வில்லும் அம்பும் ஏந்தி ஏரியை காத்த அதிசயம்
சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில். மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிட ப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் வகுளாரண்ய ஷேத்திரம் என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அப்பகுதி மதுராந்தகம் என்றும், கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்களம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இக்கோவில் கருவறையில் ராமபிரான் எட்டு அடி உயர திருமேனியுடன், சீதை மற்றும் அவரது சகோதரர் லட்சுமணனுடன் காட்சி தருகிறார். சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண் டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். பொதுவாக கோவில்களில் ராமபிரானுக்கு சீதை சற்று தள்ளி நிற்பது போலவே, சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோவிலில் ராமபிரான் சீதையின் கையை பிடித்தபடி இருக்கும் தோற்றமானது, வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். விபண்டகருக்கு காட்சி தந்தபோது, சீதையின் மீதான அன்பினை வெளிப்படுத்தும் விதமாக ராமபிரான் இவ்வாறு காட்சி தந்ததார். தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இவரைத் தரிசிக்கிறார்கள். இவர்களை வணங்கியபடி விபண்டக மகரிஷியும் மூலஸ்தானத்திற்குள்ளேயே இருக்கிறார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இந்த தாயார் சன்னதி திருப்பணியின் பின்னணியில் ஒரு சுவையான வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
ஏரி காத்த ராமர்
சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னர் லயோனல் பிளேஸ் என்ற ஆங்கிலேயர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தார். கோவிலுக்கு பின்புறம் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்து அடிக்கடி கரை உடைப்பு ஏற்படும். இதனால், வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஆங்கிலேய கலெக்டர் லயோனல் பிளேஸ் ஏரிக்கரையை பலமுறை முயற்சித்தும் பலனளிக்கவில்லை. ஒருசமயம் அவர் இக்கோவிலுக்கு வந்தபோது, அர்ச்சகர்கள் தாயார் சன்னதியை திருப்பணி செய்து தரும்படி கேட்டுக் கொண்டனர். அவர் 'உங்கள் தெய்வத்துக்கு சக்தியிருந்தால், இவ்வருடம் பெய்யும் மழையில் ஏரி உடைப்பெடுக்காமல் இருக்கட்டும். அப்படியிருந்தால், நான் தாயார் சன்னதி திருப்பணியை செய்து தருகிறேன்,'என்றார். மழைக்காலம் துவங்கவே வழக்கம்போல் ஏரி நிரம்பியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நிலையில், ஏரியைப் பார்வையிட அவர் சென்றார். அப்போது, அங்கே இரண்டு இளைஞர்கள் கையிலிருந்த வில்லில் அம்பு பூட்டி ஏரிக்கரையில் காவலாக நின்றனர். அந்த அம்பில் இருந்து மின்னல் போல் ஒளி கிளம்பியது. அதன் பிறகு ஏரிக்கரை உடையவில்லை. மகிழ்ந்த கலெக்டர் லயோனல் பிளேஸ், ராம லட்சுமணரே இளைஞர்களாக வந்திருந்து ஏரிக்கரையை காத்து நின்றனர் என்று அறிந்தார். பின்பு, தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்தார். இச்சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னதியில் உள்ளது. 'இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது' என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம். ஏரி உடையாமல் காத்தருளியதால் சுவாமிக்கு, 'ஏரி காத்த ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது.
ராமநவமி பஞ்ச அலங்காரம்
ராமநவமி விழா இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும். ராமநவமியன்று காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணிவிக்கும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவில் முத்துக் கொண்டை, திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் சுவாமிக்கு ஐந்து வித அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடக்கும்.

மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில்
சாளக்கிராமத்திலான அபூர்வ நவநீத கிருஷ்ணன்
குழந்தை பாக்கியம் அருளும் ரோகிணி நட்சத்திர வழிபாடு
திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவில், அம்பாசமுத்திரம் தாலுகாவில் அமைந்துள்ளது மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் கோவில். 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். கருவறையில் மூலவர் நவநீத கிருஷ்ணன், சாளக்கிராமத்திலான திருமேனி உடையவர். அவர் குழந்தை வடிவில், இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டை வைத்துக்கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்தக் கோவில் உருவானதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், அசதி காரணமாக வெயிலிலேயே படுத்து உறங்க தொடங்கி விட்டார்.அப்பொழுது ஒரு பாம்பு அங்கு வந்து, அவரது தலைக்கு மேலே தனது படத்தை எடுத்து அவருக்கு நிழல் அளித்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுவன், அவரைப் பார்த்து பிற்காலத்தில் நீங்கள் அரச பதவியை அடைவீர்கள் என்றும், அப்படிப்பட்ட நிலையை அடைந்தால், அவர் எதிர்காலத்தை கணித்த தனக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறினான். பின்னர் படிப்பறிவில்லாத மாடு மேய்ப்பவருக்கு திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வேலை கிடைத்து, மிகக் கடின உழைப்பால் விரைவில் அமைச்சராக உயர்ந்தார். தன் எதிர்காலத்தை கணித்த சிறுவனைத் தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் இங்கு வந்து, மேலசெவல் என்ற இடத்தில் நவநீத கிருஷ்ணர் கோவிலைக் கட்டினார்.
இந்த நவநீத கிருஷ்ணரை ரோகிணி நட்சத்திர நாளில், பால் பாயசம் படைத்து வழிபட்டால், குழந்தை இல்லாத தம்பதியருக்கு, சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில்,மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்து உற்சவரை டோலோத்சவம் நடத்தி நாமசங்கீர்த்தனம் செய்து குழந்தை பாக்கியம் பெறுவதற்கு தம்பதிகளின் நட்சத்திரம் கோத்ரம் பெயரில் விசேஷ அர்ச்சனைகள் செய்கிறார்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டு, ஏராளமான வெளியூர் தம்பதிகள் சந்தான பாக்கியம் அடைந்து இருக்கிறார்கள்.
திருமணம் தடை அகல, புத்திர பாக்கியம் கிடைக்க, மாங்கல்ய தோஷம் நீங்க, நெஞ்சக நோய் தீர, எதிரிகளை வெற்றிபெற, அதிகாரப் பதவி கிடைக்க இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
கையில் அன்ன உருண்டை வைத்திருக்கும் அன்னப் பெருமாள்
சுக்கிர தோஷத்தை நிவர்த்திக்கும் தானிய லட்சுமி
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அன்னப் பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். இவர் கைகளில் கலசம், தண்டம், அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவு பஞ்சமில்லாத நிலை ஏற்படும்.
அன்னப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. தானிய லட்சுமிக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண் பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண் மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவங்களின் போது, ஏழாம் திருநாளன்று நம்பெருமாள் வருஷத்துக்கு ஏழு தடவை ஸ்ரீதேவி - பூதேவி துணைவர தானிய லட்சுமி சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார்.

தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில்
நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில்
வருடம் முழுவதும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் ஒரே பெருமாள் கோவில்
தஞ்சாவூரில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில். கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேச பெருமாள், நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டி ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக காட்சி தருகிறார்.
பொதுவாக பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும். பெருமாள் கோவில்களில் எல்லாம், வடக்கு வாசல் என்பதுதான் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் என்ற பெயரில் திறக்கப்படும். மேலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும் நுழைவு வாசலும் இருக்கும். ஆனால், இந்தக் கோவிலில் வடக்கு நோக்கி இருக்கும் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றுதான் ஒரே நுழைவு வாயில் ஆகும். இக்காரணத்தால், இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள் ஆண்டு முழுவதும், தினமும் நித்திய சொர்க்கவாசல் வழியாக உள்ளே சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வெளியே வரலாம் . எனவே, இந்தத் தலம் நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்ததன் பின்னணியில், ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வேங்கடேச பெருமாள், தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசல் போல நுழைவு வாசல் வைத்து ஒரு கோயில் கட்டு என பணித்தார். இந்தத் தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கலியுக வேங்கடேச பெருமாளாக எழுந்தருளி காட்சி தருவேன். இத்தலத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் ,திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்திய சொர்க்கவாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்ற பலனையும், வைகுண்ட பதவியும் தந்தருள்வேன் என்று கூறி மறைந்தார்.
இக்கோவிலை 12 முறை சுற்றி வந்து நல்லெண்ணெய் தீபம் இட்டு வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் விருத்தி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில்
பாவங்களை நீக்கும், திருமண வரம் அருளும் மோட்சத் தூண்கள்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் ,சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திவ்ய தேசம் திருஆதனூர். பெருமாளின் திருநாமம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன். தாயாரின் திருநாமம் பார்க்கவி.
கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் பாதத்தருகே காமதேனு,காமதேனுவின் மகள் நந்தினி, சிவபெருமான், பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் உள்ளனர்.
கைகளில் ஏடு (ஓலைச் சுவடி), எழுத்தாணி, தலைக்கு மரக்காலை வைத்து, ஜீவாத்மாக்களின் நல்ல மற்றும் தீய செயல்களை கணக்கிட்டு அவர்களை ஆள்வதால், திருமால் 'ஆண்டு அளக்கும் ஐயன்' என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது. திருமாலை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் (ஆ,தன்,ஊர்) ஆதனூர் என்ற பெயர் இவ்வூருக்கு கிட்டியது.
இக்கோவிலில், கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை வலம் வந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டு, பெருமாளின் பாதம், முகத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். இத்தூண்கள் மோட்சத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல இத்தலத்து மோட்சத் தூண்களை இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து, இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங்கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில், இத்தலத்திலும் ஸ்ரீரங்கத்திலும் தான் மோட்சத் தூண்களைக் நாம் காண முடியும்.
வைணவ நவக்கிரக தலங்களில் இத்தலம் குரு பரிகார தலமாகக் கருதப்படுகிறது.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் எழுப்பும் அபூர்வ இசைத் தூண்
ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கிருஷ்ணன் சிற்பம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள திவ்ய தேசம் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.
இக்கோவில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. அற்புதமான கற்சிலைகள் ஆலயம் முழுவதும் நிறைந்துள்ளன. கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள், பல வித குரங்குகள், யாளி உருவம் அமைந்த தூண்கள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம். நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை. ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட கிருஷ்ணன் சிற்பத்தின் நுணுக்கம் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
தூண் புடைப்புச் சிற்பங்களாக யானை, காளையை அடக்கும் வீரன், சிம்மம் போன்ற அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோவிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும்உள்ளன.
இந்த ஆலயத்தில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. அதில் ஒன்றை தட்டினால் மூன்று சுரங்களை எழுப்புகிறது . மற்றதில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்தத் இசைத் தூணின் இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு, மாறி மாறி ஊதினால் ஒன்றில் சங்கின் ஒலியும், மற்றதில் எக்காள ஒலியும் கேட்கிறது.
இக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டது. கோவில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோவிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் நெல் அளவைத் திருநாள்
நெல் அளவை கணக்கிட, படியளக்கும் பெருமாள்
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகத்து உயிர்களை காத்து ரட்சிப்பவர் பெருமாள். இதைத்தான் 'பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கத்தில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே, வருஷத்துக்கு ஏழு தடவை படியளக்கிறார். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி ,தை ,மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவை திருநாள், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள்.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையில் இருந்து நம்பெருமாள் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு?; செலவு எவ்வளவு? மீதி இருப்பு எவ்வளவு?... என்று கணக்கிட்டுப் பார்க்க, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகக் கிளம்புகிறார். கணவரின் சரிபங்கான மனைவிக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணர்த்துவதற்காகத்தான், நெல் அளவைத் திருநாள் அன்று பூதேவி ஸ்ரீதேவி சகிதமாக எழுந்தருளுகிறார்.
நம்பெருமாள். ஆரியபட்டாள் வாசல் வழியே வந்து செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப்பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிசாரகம் செய்பவர் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து நம் பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
பெருமாள் அருகில் இருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி, கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன் ஆயிந்தேன்' எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதமான சடாரி சாத்தினாலே அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். உடனே கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல்லை அளக்கத் தொடங்குகிறார். திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து பெரிய கோயில் எனக் கூறி இரண்டாவது மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது. ‘நிரவி விட்டு அள’ என்று ஸ்தானிகர்தான் குரல் கொடுக்கிறார். ‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளை கட்டளையிடுவதாக இது ஐதீகம்.
அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே எம்பெருமானின் நேரடி பார்வை நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் திருக்கொட்டாரத்தில் இருந்து எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும் மக்கள் ஆரோக்கியமும், தானிய உற்பத்தி சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்.
உலகம் யாவுக்கும் படி அளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிப்பது? அதனால் அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி என அளந்து போடப்படுகிறது. தனது நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், அதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார், உலகிற்கெல்லாம் படியளக்கும் பெருமாள். இப்படியாக, ஸ்ரீரங்கத்தில் நெல் அளவை திருநாள் கொண்டாடப்படுகிறது .

மகாபலிபுரம் தலசயனப் பெருமாள் கோவில்
உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம்
மாசி மகத்தன்று நீராடுவது, ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும் திவ்ய தேசம்
மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் திவ்ய தேசம் தலசயன பெருமாள் கோவில். மூலவர் தலசயனப் பெருமாள், வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். மேலும் கருவறையில் மூலவரின் பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி, பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளார்.
இத்தல உற்சவரின் திருநாமம் 'உலகுய்ய நின்றான்' என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான். கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் தலசயனப் பெருமாள் கோவில் தான்.
பெருமாள் கையில் தாமரை மலருடன் இருப்பதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். புண்டரீக மகரிஷி இத்தல பெருமாளின் திருவடியில் தாமரை மலர்களை வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் தாமரை மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த தாமரை மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். பெருமாள் நீர் இரைத்த இந்த கடல் பகுதி அர்த்தசேது என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று, கடல், நதி மற்றும் குளங்களில் நீராடுவது மிக விசேஷமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மாசி மகத்தன்று அந்த நீர் நிலைகளில்கூட, புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது. இத்தலம் தீர்த்தவாரிக்கு பெயர் பெற்றது. ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில், மாசி மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம். இந்த இடத்தில் மாசி மகம் அன்று நீராடுவது, வருடம் முழுவதும் செய்த பாவத்தை நீக்கும். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்
பெருமாளின் எதிரே கருடாழ்வார் இல்லாத திவ்ய தேசம்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம் பத்மநாபசாமி கோவில். இக்கோவிலில் மூலவர் பத்மநாபசாமி, அனந்தசயனம் எனப்படும் யோக நித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோவிலில் உள்ள பெருமாளின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது.
எல்லா பெருமாள் கோவிலிலும், மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், பெருமாளின் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். ஏனென்றால், பெருமாளின் கட்டளைபடி திருவனந்தபுரம் வந்த ராமானுஜரை, திருக்குறுங்குடி கொண்டு விட கருடாழ்வர் சென்றுவிட்டார். அதனால் இத்தலத்தில் பெருமாள் சன்னதி முன்பு கருடாழ்வார் இருக்க மாட்டார்.

செங்கல்பட்டு கணையாழி ஆஞ்சநேயர் கோவில்
கையில் ராமபிரான் தந்த கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுக்கும் ஆஞ்சநேயர்
செங்கல்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது கணையாழி ஆஞ்சநேயர் கோவில். இத்தலத்தின் புராதான பெயர் செங்கழுநீர்பட்டு. பின்னர் இது மருவி செங்கல்பட்டு என்று ஆனது இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. கருவறையில் கணையாழி ஆஞ்சநேயர், நின்ற நிலையில் இருதிருக்கரங்களுடன் வலது கரத்தில் ராமபிரான் தந்த கணையாழியையும் இடது கரத்தினை ஊரு ஹஸ்தமாகவும் கொண்டு அருள்புரிகின்றார்.
ஆஞ்சநேயர் இத்தலத்தில் கையில் கணையாழியோடு (மோதிரத்தோடு) காட்சி கொடுப்பதற்கு ராமாயணத்தின் பின்னணி உள்ளது.
சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்த போது ராமபிரான், சீதையை காணும் பொருட்டு, அவரது பணியாள் என்பதற்கு அடையாளமாய் தமது கணையாழியை கொடுத்து ஆஞ்சநேயரை அனுப்பி வைத்தார். ஆஞ்சநேயர் ஆகாய மார்க்கமாய் இவ்வழியே செல்லும் போது தடாகம் ஒன்றைக் கண்டார். அத்தடாகத்தில் சிறிது இளைப்பாறும் பொருட்டு வானிலிருந்து கீழிறங்கி தடாகத்தில் அமர்ந்து சிரமபரிகாரம் மேற்கொண்டார். அப்போது மோதிரத்தை இத்தலத்தில் வைத்ததாகவும், அதன்பின்னர் இலங்கையை அடைந்து சீதாப்பிராட்டியிடம் காண்பித்ததாகவும், இத்தலபுராணம் தெரிவிக்கின்றது.

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்
நெற்றிக்கண் கொண்ட அபூர்வ ஆஞ்சநேயர்
ஆங்கிலேய பொறியாளரிடம் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு கர்ப்பகிரகம் கட்டிக் கொடுக்கச் சொன்ன நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில். கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப்பெருமாள் கையில் செங்கோல் ஏந்தி, தன் மடியினில் மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு, லட்சுமி நரசிம்மராக 'ஆற்றழகிய சிங்கர்' என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். இக்கோவில் மண்டபத்தில், ஆஞ்சநேயர், தனது பஞ்சலோகத் திருமேனியில், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன், வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
திருவரங்கம் தலத்துடன் தொடர்புடைய நரசிம்ம தலங்கள் மூன்று ஆகும். அவை காவேரியின் வடகரையில் காட்டழகிய சிங்கர், காவேரி தென் கரையில் ஆற்றழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் ஆகும். முற்காலத்தில் திருவரங்கத்திற்க்கு செல்ல பாலம் இல்லாத காரணத்தால், காவேரியில் ஓடம் மூலம் சென்றனர். மாதம் மும்மாரி பெய்து காவேரியில் ஏற்படும் வெள்ள பெருக்கின காரணமாக, மக்கள் அவதியுற்று ரங்கநாதரை தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இப்பகுதி மக்கள் வருந்தி பிரார்த்தனை செய்தததை ஏற்று, ஸ்ரீரங்கநாத பெருமாள் இத்தலத்தில் உபய நாச்சியாருடன் உற்சவராக சேவை சாதிக்கிறார். அதனால் இவ்விடம் ஓடத்துறை என பெயர் பெற்றது.
ஆங்கிலேயர் காலத்தில் இப்பகுதியின் தென் மற்றும் வடகரையை இணைக்க பாலம் அமைத்தபோது மூன்று முறையும் பாலம் இடிந்து விழுந்தது. அச்சமயம் இத்தல நெற்றிக்கண் ஆஞ்சனேயர், ஆங்கிலேய பொறியாளரின் கனவில் தோன்றி, இத்தலத்து லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு கர்ப்பகிரகம் நிர்மாணம் செய்து கொடுத்தால், பாலம் கட்டும் பணி எளிதில் முடிவடையும் என்று கூறினார். அதன்படி ஆங்கிலேய பொறியாளர் கர்ப்பகிரகம் கட்டி கொடுக்க, காவேரி ஆற்றில் பாலம் கட்டும் பணியும் முடிந்தது.

திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாளுக்கு வித்தியாசமாக வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படும் தலம்
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருலோக்கி ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் ஷீரநாயகித்தாயார்,ரங்கநாயகித்தாயார். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கோவில் தல விருட்சம் வில்வம். அதனால் இத்தலத்தில் வித்தியாசமாக பெருமாளுக்கு,சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
மூலவர் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள், திருப்பாற்கடலில் (க்ஷீராப்தி என்றால் சமஸ்கிருதத்தில் பால் என்று பொருள்) எழுந்தருளியுள்ள கோலத்தில், காட்சி அளிக்கிறார். அவர் சயன கோலத்தில் தெற்கு நோக்கியும், வடக்கு நோக்கிய பாதங்களுடன் மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். – ஆதிசேஷன். ஸ்ரீதேவி மற்றும் பூதேவி முறையே அவரது தலை மற்றும் பாதங்களில் அமர்ந்துள்ளனர், மேலும் பிரம்மா அவரது தொப்புளிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம். அவரது திருமேனி மணல், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி மற்றும் பல மூலிகைப் பொருட்களால் செய்யப்பட்ட உருவமாகும். அதனால் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை, தைல காப்பு (சிறப்பு எண்ணெய்) மட்டுமே பூசப்படும்.
தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் கோவில்
ஒருமுறை, விஷ்ணு பகவான் தனது பக்தர்களுக்காக, மகாலட்சுமியைத் தனியாக விட்டுவிட்டு, சிறிது நேரம் பூலோகத்திற்கு வந்தார். விஷ்ணு இல்லாமல் மகாலட்சுமி ஒரு நொடி கூட தனியாக இருக்க முடியாது. எந்த நேரத்திலும் தனிமையில் விடப்படாததற்காக, அவள் வருத்தமடைந்து இந்த இடத்தில் தவம் செய்தாள். இந்த தலத்து தீர்த்தத்தில் மகாலட்சுமி நீராடி, வில்வ மரத்தடியில் தவம் செய்து இறைவனின் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் வரம் பெற்றாள்.
தம்பதிகளுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்த, இக்கோவில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.திருமணமான தம்பதிகளுக்கு இடையே ஏதேனும் தவறான புரிதல்கள் (அல்லது) அவர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். எனவே, திருமணமான தம்பதியினருக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலோ அல்லது பிரிந்திருந்தாலோ, தாயாரை இங்கு வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் நீங்கும்.

கும்பகோணம் ராமசாமி கோவில்
காண்போரை அசரவைக்கும் ஆளுயர சிற்பங்கள்
தென்னக அயோத்தி என சிறப்பு பெற்ற ராமசாமி கோவில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. மூலவர் ராமரும், சீதையும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்ருகனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்கிறார்.
இக்கோவில், கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இக்கோவில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் இருக்கும் சிற்பங்கள் காண்போரை பிரம்மிக்க வைக்கும். இந்த மகாமண்டபத்தில் காணப்படும் சிற்பங்கள் ஆளுயர சிற்பங்களாக உள்ளன. இந்த மண்டபத்தில் உள்ள 64 தூண்களிலும் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் நம்மை அசரடிக்கின்றன. இப்போது போல் எவ்வித தொழில்நுட்ப வசதிகளோ, இயந்திரங்களோ இல்லாத போதும் இங்கு செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் கலை நுணுக்கமும், வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனை உலகிற்கு பறைசாற்றுகின்றது. பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாத பெருமையை கொண்டுள்ளது இக்கோவில் சிற்பங்கள்.
இந்த மண்டபத்து தூண்களில் திருமாலின் பல அவதாரங்கள், மீனாட்சி கல்யாணம்,இராமர், சீதை, லட்சுமணர், அனுமார், சுக்ரீவன் பட்டாபிஷேகம், ரதி, மன்மதன் போன்ற நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் சிற்பங்கள் அமைந்துள்ளன.
இராமாயண ஓவியம்
இக்கோவிலின் உள் பிரகாரத்தில் இராமாயணம் முழுவதும் மூன்று வரிசைகளில், 219 சுவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இப்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தால் இராமாயணம் முழுவதையும் சித்திரத்தில் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு முறை வலம் வரும்போது, ஒவ்வொரு வரிசை என்ற நிலையில் சித்திர இராமாயணம் முழுவதையும் பார்த்து, படித்து அறிந்து கொள்ளலாம். இந்த சித்திர இராமாயணம் நாயக்கர் கால ஓவியக்கலைக்கு ஒரு சான்றாகும்.
சுருங்கச் சொன்னால், கும்பகோணத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக இந்த கோவிலும், இதில் உள்ள கலை நுணுக்கம் மிகுந்த சிற்பங்களும், இராமாயண ஓவியங்ககளும் வெகுவாக கவர்கின்றது.

திருச்சி ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில்
நரசிம்மரின் மடியில், அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கும் மகாலட்சுமி தாயாரின் அபூர்வத் தோற்றம்
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் அமைந்துள்ளது ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் கோவில். திருவரங்கம் தலத்துடன் தொடர்புடைய நரசிம்ம தலங்கள் மூன்று ஆகும். அவை காவேரியின் வடகரையில் அமைந்துள்ள காட்டழகிய சிங்கர், காவேரி தென் கரையில் அமைந்துள்ள ஆற்றழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர் ஆகும். ஆற்றழகிய சிங்கர் ஆற்றின் கரையில் இருந்ததால், காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் என்ற பெயர் வழங்கி நிலைத்தது. எந்தவகையான வெள்ளம் வந்தாலும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரே தெய்வமாக, ஆற்றழகிய சிங்கர் இருக்கிறார். ஆதலால், காவிரிக் ஆற்றைக் கடந்து செல்பவர்களும், வருபவர்களும் அவரை வணங்கி விட்டுச் செல்லுவதும், பலன் பெறுவதும் பழக்கத்தில் இருந்தது.
கருவறையில் மூலவர் ஸ்ரீஆற்றழகிய சிங்கப்பெருமாள் தன் மடியினில் மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டு, லட்சுமி நரசிம்மராக 'ஆற்றழகிய சிங்கர்' என்ற திருநாமத்தோடு கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். மகாலட்சுமி தாயார் கை கூப்பி, அஞ்சலி ஹஸ்தத்துடன் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.
மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்த தலமானது பிரார்த்தனை தலமாகக் கருதப்படுகிறது, வைணவ சமயத்தின்படி தாயாரை வணங்கியப்பிறகு, பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். இதில் தாயாரின் பணியாக கூறப்படுவது என்னவென்றால், பக்தர்களின் குறைகளை திருமாலிடம் எடுத்து கூறுவதே ஆகும். ஆதலால், அந்த பரிபூர்ணமான கைங்கர்யம், இந்த தலத்தில் மகாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் செய்து வருவதால், பக்தர்கள் பெருமாளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பிரார்த்தனை
இத்தலத்தில், திருமணத்தடை நீங்க சனிக்கிழமை 5 வாரம் ஜாதகத்தை வைத்து பூஜையும், வேலை, லட்சுமி கடாட்சம் கிட்டவும், கடன் சுமை நீங்க, குடும்ப ஒற்றுமை, மக்கட்பேறு, வியாபார அபிவிருத்தி போன்றவற்றிற்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில்
பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கும் திவ்யதேசம்
ஆழ்வார் சொன்னதைக் கேட்டு, தனது பாம்பு படுக்கையை சுருட்டிக் கொண்டு கிளம்பிய பெருமாள்
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 51 ஆவது திவ்ய தேசம், சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கோமளவல்லித் தாயார். பொதுவாக பெருமாள் கோவில்களில் சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள், இடமிருந்து வலமாக படுத்திருப்பார். மற்ற கோவில்களில் இருப்பதை போலவே ஆரம்பத்தில் இக்கோவிலிலும், பெருமாள் இடமிருந்து வலமாக தான் சயனித்திருந்தார். பின்னர் அவர் தனது இடது கையை தலைக்கு வைத்துக்கொண்டு, வலமிருந்து இடமாக வித்தியாசமான சயனக் கோலத்தில் காட்சி அளிக்க தொடங்கினார். இதன் பின்னணியில், ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
பன்னிரண்டு ஆழ்வார்களில், நான்காவது ஆழ்வாரான திருமழிசையாழ்வார், திருவெக்கா பெருமாள் கோவிலில் தனது சீடன் கணிக்கண்ணனுடன் சேவை செய்து வந்தார். இவர்களின் ஆசிரமத்தை, ஒரு மூதாட்டி நாள்தோறும் தூய்மை செய்து வந்தார் . தனக்குச் சேவகம் செய்த மூதாட்டிக்கு அவள் வேண்டுகோள்படி, இளமை திரும்பப் பெருமாளிடம் திருமழிசையாழ்வார் வேண்டினார். அவ்வாறே பெருமாளும் அருள, மூதாட்டி இளமையைத் தி்ரும்பப் பெற்றார்.
இச்செய்தியை அறிந்த காஞ்சி மன்னன், தானும் முதுமை நீங்கி இளமை திரும்ப்ப் பெற விரும்பினான். மன்னன் கணிக்கண்ணனிடம், 'தனக்கும் இளமை திரும்புமாறு உங்கள் குருநாதரிடம் சொல்லவேண்டும்' என்று கேட்டார். கணிக்கண்ணனோ, 'குருவின் கருணையை சேவையின் மூலம் பெறலாமே ஒழிய, உத்தரவின் வழியாகப் பெறமுடியாது' என்று சொல்லி மறுத்தார். மன்னன் கோபம் கொண்டு கணிக்கண்ணனை நாடு கடத்துமாறு உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்டதும் மனம் வருந்திய கணிக்கண்ணன் தன் குருவிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தார். தன் சேவையைத் தொடர முடியாத நிலையைச் சொல்லி, அந்த ஊரிலிருந்து வெளியேறுவதாகக் கூறினார். இதைக் கேட்ட திருமழிசையாழ்வார், 'வா இருவரும் சென்று பெருமாளிடம் முறையிடுவோம்' என்று சொல்லிக் கோவிலுக்குச் சென்றனர். அங்கு தன் மனக் குறை வெளிப்படுத்தி, ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார்
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா -துணிவுடைய
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுந்தன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள், என்று பெருமாளுக்கு கட்டளை போட்டுவிட்டு புறப்பட்டார் திருமழிசையாழ்வார். உடனே ஆழ்வார் சொன்னவண்ணம், பெருமாளும் தனது பாம்பு படுக்கையை சுற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார் அவரோடு, பெருமாள் மார்பிலே வாசம் செய்யும் திருமகளும் காஞ்சிமாநகரை விட்டு நீங்கினாள். காஞ்சிபுரம் தன் களையை இழந்தது.
காஞ்சிபுரத்தை விட்டு கிளம்பிச் சென்ற ஆழ்வார், கணிகண்ணன், பெருமாள், திருமகள் ஆகியோர் ஒரு நாள் இரவு தங்கியிருந்த இடம் 'ஓர் இரவு இருக்கை' என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது மருவி 'ஓரிக்கை' என இந்நாளில் அழைக்கப்படுகிறது.
மறுநாள் பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள், கருவறையில் பெருமாள் இல்லாதது கண்டு வருந்தினர். மன்னனிடம் இதைப் பற்றி முறையிட்டனர். காரணத்தையறிந்த மன்னன், தவறையுணர்ந்து ஆழ்வாரைத் தஞ்சம் அடைந்து, சீடனுக்கான நாடு கடத்தும் ஆணையையும் திரும்பப் பெற்றான். ஆழ்வாரும் அவனை மன்னித்து,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள், என்று பெருமாளை பாடினார்.
திருமழிசையாழ்வார் தன் மேல் வைத்திருந்த பக்திக்கும், அவர் பாடும் பாசுரங்களின் மேல் வைத்திருந்த பிரியத்திற்கும் கட்டுப்பட்டு, உடனே பெருமாள் தன் பாம்புப் பாயை சுருட்டிக் கொண்டு ஆழ்வாருடன் திருவெக்கா வந்து, மீண்டும் படுத்துக்கொண்டார். இப்படி ஆழ்வார் சொன்னபடி பெருமாள் நடந்து கொண்டதால் தான், அவருக்கு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
பெருமாள் அவசரமாக திருவெக்கா வந்து மீண்டும் படுத்ததினால்தான், அவர் வலமிருந்து இடமாக படுத்துக் கொண்டார். இப்படி அவர் இக்கோவிலில், திருமழிசை ஆழ்வார் தன்னை புகழ்ந்து பாடுவதை கேட்பதற்காக, வலமிருந்து இடமாக சயனித்திருப்பது ஒரு தனி சிறப்பாகும். பெருமாளின் திருவடிகளை தொழுதபடி சரஸ்வதி தேவி அமர்ந்திருப்பதும் இக்கோவிலின் தனித்துவமான சிறப்பம்சமாகும்.

நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்
தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும் விசேடமான திருமாங்கல்யச் சரடு உற்சவம்
சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது. இந்தத் தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். தூண் வடிவில் உள்ள கருவறையில், மூலவர் லட்சுமி நரசிம்மர், ஐந்தடி உயரத் திருமேனியுடன், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தூண் வடிவில் உள்ள கருவறையில் தாயாருடன் காட்சி தருகிறார். திருக்கரங்களில் சங்கு, சக்கரத்துடன், ஒரு கை அபய ஹஸ்தம் காட்ட, மற்றொரு கை ஸ்ரீ லக்ஷ்மி தேவியை அணைத்துக் கொண்டிருக்க, எழிலே உருவாக, கருணை பொங்கும் முகத்துடன், கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும், தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று நடைபெறும், திருமாங்கல்யச் சரடு உற்சவம் எனும் திருக்கல்யாணம் விசேடமானது. அன்றைய தினம் கல்யாண கோலத்தில் தாயாரும், எம்பெருமானும் காட்சி தருகின்றனர். பத்தாயிரத்திற்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் தாயாருக்கு சாற்றப்பட்டு, பின்னர் அவை சுமங்கலிகளுக்கும், கன்னிப் பெண்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இவற்றை அணிவதன் மூலம் திருமண பந்தம் நீண்டு வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்பதும், மணமாகாத பெண்களுக்கு உடனடியாக வரன் கூடும் என்பதும் ஐதீகம். இந்த நிகழ்வு வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு சிறப்பான நிகழ்வாகும்.
அமெரிக்க ஆஞ்சநேயர்
இங்குள்ள ராமர் சந்நிதி முன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு ‘அமெரிக்க ஆஞ்சநேயர்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. வெளிநாட்டுக்குச் செல்வதில் தடை, பிரச்சனைகள் உள்ளவர்கள் இவரை வேண்டிக் கொண்டு வழிபட்டால் அந்தத் தடையை நீக்கித் தருகிறார் என்பது இவருக்கு இருக்கும் சிறப்பு.

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் காட்சி தரும் 'மாற்றுத் திருக்கோலம்' சேவை
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திவ்யதேசம் திருஇந்தளூர். பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி, சந்திரசாபவிமோசனவல்லி. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுகள் பஞ்சரங்க தலங்கள் சென்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு தை அமாவாசையன்று பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
'மாற்று திருக்கோலம்' என்பது, பெருமாள் மற்றும் நாச்சியார் ஆகியோரின் திருக்கோலம் ஆகும். இது, பெருமாள் நாச்சியார் திருக்கோலம் அல்லது தாயார் பெருமாள் திருக்கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.