நாகப்பட்டினம் குமரன் கோவில்
மயிலுக்கு பதில் யானை வாகனமாக விளங்கும் முருகன் தலம்
நாகப்பட்டினம் நகரத்தில், நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ளது குமரன் கோவில். இக்கோவிலில் மூலவராக, முருகப் பெருமான் வள்ளி தேவசேனாபதியாக 'மெய்கண்ட மூர்த்தி' என்னும் நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான். இதன் காரணமாக, மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் புதைந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோவில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோவில்.
தோல் நோய் தீர்க்கும் முருகன் தீர்த்தம்
இந்தக் கோவிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். பின்னர் அவர் பல தலங்களுக்குச் சென்று அங்கு தமிழில் கவி பாடி வழிபட்டு வந்தார். அவர் சிதம்பரம் கோவிலில் உயிர் நீத்தார். அப்போது இக்கோவிலில் மாலை வேளை பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது முருகன் அசரீரியாக, அழகு முத்துவின் ஆன்மா என்னுடன் ஐக்கியமாக இங்கே வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் வழி விடுங்கள் என்று உத்தரவிட்டார். இந்த நிகழ்வு இன்றும் வைகாசி விசாகத்தன்று இங்கு அனுசரிக்கப்படுகின்றது.
தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக பக்தர்களின் நம்பிக்கை.
செல்வ விருத்தி அளிக்கும் குபேரன் தலம்
இக்கோவிலின் வடக்கு பிரகாரத்தில் குபேரனுக்காக தனி சன்னதி அமைந்துள்ளது. அதனால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்
சாய்ந்த நிலையில், சயனக் கோலத்தில் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி
கண் நோய்களை தீர்க்கும் அகத்தீஸ்வரர்
திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில், சுமார் ஒன்பது கி.மீ. தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகே இருக்கிறது, பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி. இறைவனார் பெயர் `பெருமுடி பரமேஸ்வரனார் என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்' என்றும், `அகத்தீஸ்வரமுடையார்' என்றும் பெயர்பெற்றார். இக்கோவில் ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது.
கருவறைக்குள் அகத்தீஸ்வரர்,சுயம்புலிங்க மூர்த்தியாக வடக்குத் திசை நோக்கி சாய்ந்த நிலையில், கிழக்குத் திசை பார்த்து ஆனந்த சயனக் கோலத்தில் காட்சியளித்து வருவது மிகவும் விசேஷமானது. இப்படி சிவலிங்கத் திருமேனி சாய்ந்த நிலையில், சயனக் கோலத்தில் இருக்கும் தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவரை வழிபட்டால், கண் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட, சிவபெருமான் கண் நோய் தீர்த்த வரலாறு
இக்கோவில் இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன் பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டில் கூத்தன் என்னும் சிவபக்தன், இத்தலத்தில் வாழ்ந்துவந்தார். அவருக்கு நல்லமங்கை என்று ஒரு மகள் இருந்தாள். சிறுவயதில் அவளின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கிவிட்டது. கூத்தன் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பார்வை குறைபாடு சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் நல்லமங்கை பார்வை முழுவதையும் இழந்தாள்.
வெளியூர்களில் வாழும் பெரும் வைத்தியர்களிடம் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று கூத்தன் முடிவு செய்து, அதற்கெனப் பணத்தைச் சேர்க்கத் தொடங்கினான். கி.பி 1268, ஆண்டில், ஹொய்சாள மன்னன் ராமநாதன் இக்கோவிலில் திருப்பணி செய்ய ஆரம்பித்தான். அவனிடம் இருந்த நிதி தீர்ந்து விட்டதால், கோயில் வேலை அப்படியே நின்றுபோனது. இறைவனின் திருப்பணி நின்றுபோனதால் மனம் வருந்திய கூத்தன், தன் மகள் நல்லமங்கையின் கண் வைத்தியத்துக்கென வருடக்கணக்காக உழைத்துச் சேர்த்து வைத்திருந்த மூன்று கழஞ்சு பொன்னையும் கோயில் திருப்பணிக்குக் கொடை அளித்தான். அதனால் கோவில் திருப்பணிகள் நடந்து முடிந்தன.
மகள் கண் வைத்தியத்துக்குச் சேர்த்து வைத்திருந்த பொன்னை, கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு விட்டதால் கூத்தன் வைத்திய செலவுக்கு மீண்டும் பணம் சேர்க்க வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி இத்தலத்து இறைவன் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் அருளால் நல்லமங்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெரிய ஆரம்பித்தது. சில நாள்களில் அவளுடைய கண்கள் பிரகாசமாகி முழுமையாகப் பார்வை திரும்பியது. கூத்தன் இறைவனுடைய அருளை நினைத்து நெக்குருகினான். தன் துயர் துடைக்க இறைவன் இருக்கும்போது தனக்குப் பணம் எதற்கு என்று முடிவுசெய்து அவன் சேர்க்கும் பணத்தையெல்லாம் இறைவனின் திருப்பணிக்கே வழங்கினான். இறைவனுக்கு கழஞ்சு பொன் பட்டம் செய்து சாற்றித் தன் நன்றியைத் தெரிவித்தான்.
இந்தப் பொன் கொடுத்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் வடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
தில்லையாடி சரணாகரட்சகர் கோவில்
சனி பகவான் சன்னதியின் விசேட அமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. தன்னிடம் சரணடைந்தவர்களை இத்தலத்து இறைவன் காத்து அருள்வதால், 'சரணாகரட்சகர்' என்று அழைக்கப்படுகிறார்.
முக்காலத்தில் இத்தலத்தின் பெயர் தில்லைவனம் என்று இருந்தது. பின்னர் தேவேந்திரன் தில்லைவனத்திலிருந்த இந்த இறைவனை வணங்கி, தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது.
இத்தலத்தில் சனி பகவான் சன்னதி, இறைவன் சரணாகரட்சகர் சன்னதிக்கும், இறைவி பெரியநாயகி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது ஒரு விசேடமான அமைப் பாகும். இது போன்ற சனி பகவான் சன்னதி அமைப்பு திருநள்ளாறு தலத்தில்தான் இருக்கின்றது.
சனி பகவான் பூஜை செய்த தலம்
சனி பகவான் மக்களின கர்ம வினைகளை, ஒரு நீதிபதி போல் சீர் தூக்கிப் பார்த்து, அதற்கேற்ப பலன்களைத் தருபவர். ஆனால் கடமையை சரியாகச் செய்யும் அவருக்கு அவப்பெயர்தான் மிஞ்சுகின்றது. தனக்கு ஏற்படும் அபவாதத்தை நீக்கிக் கொள்ளவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான் இத்தலத்துக்கு வந்து இறைவன் சரணாகரட்சகரை வழிபட்டார். சனி பகவான் பூஜையினால் மனம் மகிழ்ந்த இறைவன, சனி பகவானை வழிபட்டவர்களுக்கு அவர் நற்பலன்களைக் கொடுக்கும் சக்தியைக் அளித்தார்.
இத்தலத்து சனி பகவானுக்கு ருத்ர ஹோமம், அபிஷேகம் செய்து வழிபடுவது தற்பலன்களைத் தரும். ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இவரை வழிபட்டால் சகல பிரச்சனைகளும் நீங்கும்.
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குறைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காரைக்குடி நூற்றியெட்டு பிள்ளையார் கோவில்
ஒரே கோவிலில், பல கோலங்களில் காட்சிதரும் நூற்றியெட்டு பிள்ளையார்கள்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது நூற்றியெட்டு பிள்ளையார் கோயில். இக்கோவிலில் 108 பிள்ளையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 54 பிள்ளையார் விக்ரகங்கள் மேல் வரிசையிலும், மீதி 54 விக்கிரகங்கள் கீழ் வரிசையிலும் அமைந்துள்ளன. இது இந்து சமயக் கோட்பாட்டின்படி 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்களின் (12x9=108) அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மேல் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை இடது பக்கம் சுழித்தும், கீழ் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை வலது பக்கம் சுழித்தும் இருக்கின்றன.
தாமரை மலர் மேல் நிற்கும் பிள்ளையார், வல்லப கணபதி, மகா கணபதி, சித்தி புத்தி விநாயகர், மூஷிக கணபதி, சிம்ம வாகனத்தின் மேல் வீற்றிருக்கும் ஹேரம்ப கணபதி, சங்கு சக்கரம் ஏந்திய விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகியவை இங்கு எழுந்தருளி இருக்கும் விநாயகரின் சில கோலங்கள் ஆகும். நூற்றியெட்டு பிள்ளையார்களை ஒரு சேர தரிசிக்க முடியும் என்பதால், பல வெளியூர் மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றார்கள்.
ஒரு கோவிலில் 108 பிள்ளையாளர்களை ஒரு சேர தரிசிப்பது என்பது ஒரு அரிய காட்சியாகும். இப்படி 108 பிள்ளையார்கள் இங்கே எழுந்தருளி இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது..சிவகங்கையை ஆண்ட ராணி ஒருத்தி, தனது பிரார்த்தனை நிறைவேறினால் 108 பிள்ளையார் கோவில்களுக்கு சென்று வழிபடுவதாக வேண்டிக் கொண்டாள். ஆனால் விநாயகர் பிரதான தெய்வமாக இருக்கும் ஒவ்வொரு கோவிலையும் கண்டுபிடித்து வழிபட காலம் அதிகம் பிடிக்கும் என்பதால், இங்கு 108 விநாயகர்களை கொண்ட ஒரு கோவில் கட்டி, அந்த கோவிலில் வழிபட்டு தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினாள்.
பிள்ளையார், அவரை வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் என்று நம்பப்படுவதால், இங்கு உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர். அதனால், மக்கள் புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து பிள்ளையாரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். புது முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் பிள்ளையாரை வழிபட்டால், அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இங்கு பிள்ளையாரை குளிர்விப்பதற்கு, பக்தர்கள், அவருக்கு மிக விருப்பமான லட்டு மற்றும் மோதகம் ஆகியவைகளை காணிக்கையாகப் படைக்கின்றனர்.
மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
இச்சா சக்தியாய் விளங்கும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை மீஞ்சூர் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேலூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது திரிபுரசுந்தரி அம்மன் கோவில். இறைவன் திருநாமம் திருமணங்கீசர்,. அம்மனின் மற்றொரு திருநாமம் திருவுடை அம்மன்.
ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.
மிளகு பயிறு ஆன அதிசயம்
அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.
மூன்று அம்மன்களின் பௌர்ணமி தரிசனம்
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, 'வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டாராம்.
இத்தலத்து ஈசன் திருமணங்கீசரையும் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனையும் வணங்கினால் திருமண வரம், மக்கட் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கீழக்கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்தை மாற்றும் தலம்
கும்பகோணம் மகாமகம் குளம் மேல் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கீழக்கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பாம்பிகை. பிரம்மாவுக்கு அருளியதால் சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய தலம். இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களுக்கு ஞானம் கிடைப்பது மட்டுமின்றி, அவர்கள் வாழ்வில் சுபிட்சம் நிலவும் என்பது ஐதீகம்.
கொற்கை என்று தலத்திற்கு பெயர் வரக் காரணம்
முன்னொரு காலத்தில் 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் இப்பகுதியில் உள்ள அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது இருட்டிவிடவே, இங்கிருந்த பொது மடத்தில் தங்கினார். இந்த மடத்தில் ஏற்கெனவே நிறைய பக்தர்கள் தங்கியிருந்தனர்.
கோரக்கர் பயணக் களைப்பில் நன்றாக உறங்கிவிட்டார். நள்ளிரவு வேளையில் திடீரென கண்விழித்த கோரக்கர், மடத்தில் தங்கியிருந்த சிவபக்தை ஒருவரின் சேலைத்தலைப்பு தன் கை மேல் விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனம் வருந்திய அவர், உடனே இதற்கு பிராயச்சித்தம் தேடி, அரிவாளால் தன் இரு கைகளையும் வெட்டிக் கொண்டார்.
பின் இந்த மடத்திலேயே சில காலம் தங்கி, தனது இந்த தோஷம் நீங்க இங்கிருந்த சந்திர புஷ்கரணியில் நீராடி, தனது குறுகிய கையால் தாளம் போட்டு, இத்தல ஞானபுரீஸ்வரரையும், புஷ்பவல்லியையும் தினமும் வணங்கி வந்தார். கோரக்கரின் பக்தியில் மகிழ்ந்தார் சிவபெருமான்.
சிவனின் அருளால் சித்தரின் கை கொஞ்ம், கொஞ்சமாக வளர்ந்தது. கோரக்கர் கை வெட்டுப்பட்டதால் இத்தலம் கோரக்கை எனவும், சிறிது காலம் குறுகிய கைகளில் பூஜை செய்ததால் குறுக்கை எனவும் வழங்கப்பட்டு தற்போது கொற்கை ஆனது.
பிரம்மஞானபுரீஸ்வரர் பெயர்க் காரணம்
பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் எடுத்துக்கொண்டு போய் கடலுக்கடியில் ஒளித்து வைத்துக்கொண்டனர். வேதங்களை மீட்டு மகாவிஷ்ணு பிரம்மாவிடம் கொடுத்தார். இருந்தாலும் பிரம்மனால் முன்பு போல் இயல்பாக படைப்புத்தொழிலை செய்ய முடியவில்லை. எனவே அவர் விஷ்ணுவின் ஆலோசனைப்படி இத்தலம் வந்து, சந்திர புஷ்கரிணியில் நீராடி, அடிப்பிரதட்சணம் செய்து சிவனை வழிபட்டு வந்தார். ஒரு ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில், சிவன் பிரம்மனுக்கு ஞானம் கொடுத்தார். இதனால் பிரம்மா மீண்டும். சிறப்பாக படைப்புத் தொழில் புரிந்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மஞானபுரீஸ்வரர் ஆனார்.
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம்
இத்தலத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடியோ,தங்ளது பிறந்த நட்சத்திர நாளிலோ, ஆவணி அவிட்டத்தன்றோ அடிப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தால் தலையெழுத்தே மாறிவிடும் என்பது ஐதீகம்.
குழந்தைகளின் கல்வியறிவு, வியாபார விருத்தி, மன உளைச்சல் நீங்க, தோஷங்கள் நிவர்த்தியாக இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
கும்பகோணம் சக்கரபாணி கோவில்
மூன்று கண்கள், எட்டு கைகள் உடைய சக்கரபாணி பெருமாள்
பெருமாளுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை
கும்பகோணம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சக்கரபாணி கோவிலிலும் ஒன்று. மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள். தாயார் விஜயவல்லி. பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தியும் காட்சி தருகிறார். மூன்று கண்களுடன் சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ , துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய திருமால் ஏவிய 'சக்ராயுதம்', ஜலந்தாசுரனையும் மற்ற அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது. சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி, சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது.
பிரார்த்தனை
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகாமகம்' திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக் கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம். சூரிய பகவான் வழிபட்டு நன்மையடைந்ததால், ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது. உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீசக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும்.
ஜாதகத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம். சுதர்சன ஹோம பூஜையை, இக்கோவிலில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
மாசி அமாவாசை மயானக் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்ப்பணிக்கிறார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.
மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு
பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.
பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் .வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.
ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.
பிரார்த்தனை
கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்
சிவபெருமானை போல் நெற்றிக்கண் உடைய அம்பாள்
சிவராத்திரியன்று இரவில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும் விசேட நடைமுறை
வேலூர்- சென்னை நெடுஞ்சாலையில் , 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ளது வளையாத்தூர். இறைவன் திருநாமம் வளவநாதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இறைவன், மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதால், அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில்,விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
கோவிலில் நுழைந்ததும் நாம், நின்ற நிலையில், நான்கு கைகளுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை, தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது.சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோவிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள்.
இந்த அம்பிகையின் நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்பாளுக்கு சிவராத்திரியன்று சிறப்பு பூஜை
பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இந்த அம்பிகைக்கு இரவில் பூஜை செய்கிறார்கள். சிவபெருமானுக்கு நான்கு கால பூஜை நடைபெறும் போது, அம்பாளுக்கு முதல் காலமும் மூன்றாம் காலமும் விசேஷ பூஜை நடைபெறும். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறையாகும்.
கிரக தோஷ நிவர்த்தி தலம்
வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும், இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.
திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில்
சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலம்
சிவபெருமானின் இருதயமாக விளங்கும் தலம்
ஒருமுறை வழிபட்டாலே கோடிமுறை வழிபட்ட பலனைத் தரும் தலம்
செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலை வழியில், 14 கி. மீ. தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது ருத்திர கோடீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெண்ணின் நல்லாள் என்கிற அபிராம நாயகி. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலமான வேதகிரீஸ்வரர் கோவிலுக்கும் முந்தையது. இத்தலத்தை கோடி ருத்ரர்கள் (சிவனடியார்கள்) பூஜித்ததால், 'ருத்ர கோடி தலம்' என்ற பெயர் பெற்றது. இறைவன் ருத்திர கோடீஸ்வரர் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி எழுந்தருளி இருக்கின்றார். திருநாவுக்கரசரால் பாடப்பட்ட வைப்பு தலம் இது. இந்த பெரிய கோவிலில் ஒன்பது முக வில்வ விருட்சம் மற்றும் உருத்திராட்ச விருட்சமும் உள்ளன.
சிவராத்திரி அன்று வழிபட வேண்டிய சிறப்பு தலங்கள் திருவைகாவூர், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், ஓமாம்புலியூர் கோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகியவை ஆகும். இக்கோவில் உட்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு பழங்கால கவிதையில், காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, காளஹஸ்தி, காஞ்சி போன்ற தலங்களில் உள்ள கோவில்கள் சிவபெருமானின் உடலாகவும், திருக்கழுக்குன்றம் ருத்திர கோடீஸ்வரர் கோவில் அவரின் இருதயம் ஆகவும் விளங்குகின்றது என்று குறிப்பிட்டு இருப்பதிலிருந்து இக்கோவிலின் தனிச்சிறப்பு நமக்கு விளங்குகின்றது.
ஒரு சமயம் தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிப்பதற்காக சிவபெருமான் தன் திருமேனியில் இருந்து ஒரு கோடி ருத்திரர்களை தோற்றுவித்தார். அவர்கள் அசுரர்களுடன் போரிட்டு, அவர்களை அழித்தனர். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர்க்க சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமான், அவர்கள் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவபூஜை செய்தால் பாவம் விலகும் என்று அருளினார். ஒரு கோடி ருத்திரர்களும் திருக்கழுக்குன்றம் தலத்தில் தனித்தனியே சிவலிங்கம் அமைத்து, அபிஷேக ஆராதனை செய்தனர். பூஜையின் முடிவில் ஒரு கோடி லிங்க உருவத்தையும் தன்னுள் அடக்கி சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார். கோடிருத்திரர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவனின் திருநாமம் ருத்ரகோடீஸ்வரர் எனவும், தலம் ருத்ர கோடி தலம் எனவும் ஆயிற்று.
"ருத்திர கோட்டீஸ்வரர்" என ஒரு முறை கூறும்போதே பாவம் விலகும், புன்னியம் உண்டாகும். ருத்திர கோட்டீஸ்வரரை வழிபட்டால் பலன் கோடியாக பெருகும். நாம் இத்தலத்தில் ஒரு முறை தானம் செய்தாலும், ஜெபம் செய்தாலும் அது கோடி முறை செய்ததற்கு ஈடான பலனைத் தரும். பிரதோஷ காலங்களில் இறைவனை திருநந்தி தேவரும் பெருஞ்சிறப்புடன் வழிபடும் தலம். சித்தர்கள் வழிபடும் பெருமை மிக்க தலம். மூன்று பிரதோஷ காலங்களில் வழிபட்டால் பிள்ளை பேறு நல்கும் பெரும்பதி இது.
கோடி ருத்திரர்கள் சிவராத்திரி வழிபாடு செய்த தலம் என்பதால், சிவராத்திரியன்று இங்கு வழிபடுவது சிறந்த பலன்களை கொடுக்கும்.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்
ஆதிசேஷன் இழந்த தன் பலத்தை மீண்டும் பெற்ற தலம்
ஆதிசேஷன் சிவராத்திரி அன்று வழிபட்ட தலங்கள்
கும்பகோணம் நகரத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற தலம் நாகேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி அம்மன். இத்தலம் தெற்கு திசையில் உள்ளதால் ‘கீழ்க்கோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள நாகர் கோவில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இத்தலம் நாக தோஷ பரிகாரத் தலமாகும். சூரியன் வழிபட்டதால் 'பாஸ்கரஷேத்திரம்' என்றும், பிரளய காலத்தில் வில்வம் விழுந்த இடம் என்பதால் 'வில்வ வனம்' என்றும் அழைக்கப்படுகிறது.
நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளால் பூமியை தாங்கிக்கொண்டு இருப்பவர். எப்போதும் அவர் பூமியை தாங்கிக் கொண்டு இருந்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தார். இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு அதனை நீக்கி வலிமை பெறக் கருதி சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். அதைக் கேட்ட சிவபெருமான், ஆதிசேஷனை சோழநாட்டில் காவிரிநதி ஓடும் சிவாலயங்களுக்கு சென்று வழிபடும் படி கூறினார். அதன்படி ஆதிசேஷன் பல தலங்களையும் தரிசித்து இறுதியாக கும்பகோணம் வந்தார்.
ஒரு சிவராத்திரியில் ஆதிசேஷன், முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு ஆதிசேஷனுக்கு, பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையையும்,வேறு பல நலன்களையும் வழங்கினார்.
திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி கோவில் கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. இறைவன் திருநாமம் நாகேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிறையணியம்மன்.இது நவக்கிரகங்களில் ராகு தலமாகும். ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க சிவராத்திரியன்று முதல் காலத்தில் பூஜித்த தலம் . கோவில் வெளிப்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் ராகு பகவான் தன் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகில் உள்ளது. இறைவன் திருநாமம் சேசபுரீஸ்வரர், பாம்புரநாதர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி .
நாகூர் நாகநாதர் கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் நாகநாதர். இறைவியின் திருநாமம் நாகவல்லி.
இந்த நான்கு தலங்களும் சிவராத்திரி அன்று ஆதிசேஷன் வழிபட்ட தலங்கள் என்பதால், சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தால் உடலில் உள்ள எல்லா வியாதிகளும் நீங்கும் என்றும், சர்ப்பதோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நாக தோஷம் நீங்கும்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
பெருமாளின் திருநெற்றியில் தழும்பு அமைந்துள்ள திவ்யதேசம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்யதேசம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவில். இது பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் நீலமேகப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது.
மூலவர் நீலமேகப்பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.
இத்தலத்து உற்சவர் சௌரிராஜப் பெருமாள் என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி’ என்றும், ‘அழகு’ என்றும் பொருள்கள் உண்டு. ஒவ்வொரு பெருமாள் கோவிலுக்கும் தனிச்சிறப்பு இருப்பது போல், இத்தலத்து பெருமாளின் நடை அழகு தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.
உற்சவர் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் ஒரு தழும்பு உள்ளது அதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. ஒருநாள், திருக்கண்ணபுரம் திருக்கோவிலின் அரையர் வந்த போது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோவிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த உற்சவமூர்த்தியைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான் . “டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே” என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டான். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது. அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் வலப்புருவத்துக்கு மேல் ஏற்பட்ட சிறு தழும்பு வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கும் அரிய காட்சி
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.
பொதுவாக சிவாலயங்களில், கருவறையின் பின்புறம் கோஷ்டத்தில் சிவபெருமான் லிங்கோத்பவராக, அக்னி பிழம்பிலிருந்து வெளிப்படும் உருவமாக, எழுந்தருளி இருப்பார். இது சிவபெருமானின் 25 மூர்த்தங்களில் ஒன்றாகும். லிங்கோத்பவர் என்பது சிவபெருமான் ஆதி அந்தம் (தொடக்கமும் முடிவும்) இல்லாத அக்னி தூணாகத் தோன்றி, பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்தையை அடக்கிய காட்சியை உணர்த்தும் ஒரு சிறப்பு வடிவமாகும்.
லிங்கோத்பவர் மூர்த்தத்தின் புராண பின்னணி
ஒரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது, இருவருக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான நெருப்புத் தூண் தோன்றியது. இருவரும் அதன் அடியையும் முடியையும் தேடி கிளம்பினார்கள். தூணின் அடியைக் காண வராஹமாக (பன்றி) விஷ்ணுவும், முடியைக் காண அன்னமாக பிரம்மாவும் சென்றனர். இருவராலும் காண முடியவில்லை.அந்த நெருப்புத் தூணின் நடுவிலிருந்து சிவபெருமான், தலை, கை, கால்களுடன் வெளிப்பட்டார். இதுவே லிங்கோத்பவர் (லிங்கத்திலிருந்து உதித்தவர்) எனப்படுகிறது. இதை குறிப்பிடும் வகையில் எல்லா சிவாலயங்களிலும் கோஷ்டத்தில், லிங்கோத்பவர் சிற்பத்தின் மேல்பகுதியில் பிரம்மா அன்னமாகவும், கீழ்ப்பகுதியில் பன்றியாக விஷ்ணுவும், லிங்கத்திற்கு நடுவில் சிவபெருமானும் காட்சி தருவார்கள்.
ஆனால் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில், கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய காட்சியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு
மகா சிவராத்திரி அன்று இரவு லிங்கோத்பவ காலத்தில் (நடுநிசி) சிவனை லிங்கோத்பவராக வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. லிங்கோத்பவர் வழிபாட்டின் மூலம் அஞ்ஞானம் அகன்று, ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோவில்
வேறு எந்த தலத்திலும் இல்லாத அபூர்வ, பஞ்சலோகத்திலான மூலவர் பெருமாள் திருமேனி
கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒரு பகுதியான சிங்காநல்லூரில் அமைந்துள்ளது உலகளந்த பெருமாள் கோவில். இக்கோவில் 'ஸ்ரீ த்ரி விக்கிரமநாராயண சுவாமி திருக்கோயில்' என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கோயில்களில் ஒன்று. இக்கோவிலின் நுழைவாயிலில் பெரிய அளவிலான சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் வாயிற்காப்பாளர்களாக காட்சியளிக்கிறார்கள்.
1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கரிகால் சோழன் மன்னரால் கட்டப்பட்டது. போர் சம்பந்தமாக கரூர் வந்த கரிகால் சோழ மன்னன், வெள்ளலூர் வந்த போது, அருகிலுள்ள சிங்காநல்லூர் ஊரிலுள்ள மக்களின் நலன் கருதி, சிங்காநல்லூர் பகுதியை அவர்களுக்குச் சாசனம் செய்து விட்டு, இக்கோவிலையும் நிர்மாணித்தான். இது சம்பந்தமான குறிப்புகள் மூலவர் விக்கிரகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
கருவறையில் மூலவர் உலகளந்த பெருமாள் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை விண்ணை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர் எட்டு கைகளுடன் காட்சியளிக்கும் மூலவர், இரு கைகள் அபய முத்திரைகளுடனும், மற்ற ஆறு கைகள் ஒவ்வொன்றும் முறையே சக்கரம், கதை, அம்பராத்தூணி, வில், கேடயம், பிரயோகச் சக்கரம் ஆகியவை கொண்டு அபயம் அளிக்கும் வகையிலும் தோற்றமளிக்கிறார். இந்தப் பெருமாளின் தனிச்சிறப்பு என்னவென்றால் இவரது திருமேனி பஞ்சலோகத்தால் (ஐம்பொன்னால்)உருவாக்கப்பட்டதான். இப்படி பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்ட மூலவரை நாம் எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது. மேலும், உற்சவர் உலகளந்த பெருமாளும் பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவருடன் உற்சவர் தாயார்கள் ஸ்ரீ தேவி, பூதேவி எழுந்தருளி இருக்கின்றனர்.
கோவிலின் தல வரலாறு
பூமியில் மன்னர் மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவம் கொண்டு, யாகம் வளர்த்து தானம் செய்த போது, அவரது ஆணவத்தை அகற்ற, வாமனர் (இளங்கலை பிராமணர்) அவதாரம் தரித்த மகாவிஷ்ணு, அவரிடம் தானமாக உலகில் மூன்று அடிகள் கேட்க, தன்னிடம் தானம் கேட்க வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறியாத மகாபலிச் சக்கரவர்த்தி, தானமாக மூன்று அடிகளை அளந்து எடுத்துக் கொள்ளுமாறு பணிக்க, அவ்வாறே மகாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொண்டு, முதல் படிநிலை கொண்டு பூவுலகம் முழுமையும், இரண்டாம் படிநிலை கொண்டு விண்ணுலகம் முழுமையும் ஆட்கொண்டு, மூன்றாவது படிநிலைக்கான இடத்தை மகாபலியிடம் வினவ, தன் தவறை அப்போதுதான் உணர்ந்த மகாபலி, மகாவிஷ்ணுவிடம் தன் தலைமேல் மூன்றாவது அடியை வைக்கப் பணித்து, அதனால் பாதாளம் நோக்கி வீழ்ந்தார் என்பது புராணம். மண்ணுக்கும் விண்ணுக்கும் கால்களை நோக்கிய கோலத்தில் உலகளந்த பெருமாள் ஆகவும், மகாபலிச் சக்கரவர்த்திக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்து மூவுலகம் ஆட்சி புரியும் த்ரி விக்கிரமநாராயண சுவாமி ஆகவும் அருள்பாலிக்கும் இடமே சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இத்திருத்தலம்.
திருவிழாக்கள்
ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும் இக்கோவிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். வைக்குண்ட ஏகாதசியின் போது சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமர்சையாக இங்கு கொண்டாடப்படும்.
மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில்
அறுபடை வீடுகளுக்கும் முந்தைய முருகன் தலம்
கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து உடுமலைப்பேட்டை செல்லும் பாதையில் மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருப்புகழ் தலம் செஞ்சேரிமலை.
முருகப்பெருமான், தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலம் சுவாமிமலை. ஆனால் முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் உபதேசித்த தலம் ஒன்று உண்டு. அத்தலம்தான் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சேரிமலை.
சூரபத்மனை அழிப்பதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு சிவபெருமான் சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்த திருத்தலம் இது என்பதால், முருகன் தலங்களில் மிகவும் பழமையானது என்னும் தனிச்சிறப்புடையது இத்தலம். அறுபடை வீடுகளுக்கும் முந்தையது.
முருகன் தன் கைகளில் சேவலும், பாம்பும் ஏந்தியிருக்கும் தனிச்சிறப்பு
கருவறையில் தாமரை பீடத்தில் நின்ற கோலத்துடன் ஆறுமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் முருகப்பெருமான். வலது கரங்களில் அங்குசம், கத்தி, கேடயம், சர்ப்பம், மணி, அபய முத்திரையுடனும், இடது கரங்களில் சேவல், பாசம், வில், அம்பு, கதை, வரத முத்திரையுடனும் அருளாசி வழங்குகிறார். வலது பக்கத்தில் இருக்கும் கடைசி கையில் பாம்பையும், இடது பக்கத்தில் இருக்கும் மேல் கையில் சேவலையும் வைத்திருக்கிறார். இடது கையில் சேவலே ஒரு போர்க் கருவி போல ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத தனிச்சிறப்பாகும். பொதுவாக மற்ற திருத்தலங்களில் ஆறுமுகங்களுடன் காட்சி தரும் முருகனை தரிசித்தால் நாம் கண் முன்னே 5 முகங்களை தரிசிக்கலாம். பின்னால் ஒரு முகம் இருக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் 'எட்டு திசைக்கும் நான் காவலாக இருந்து பக்தர்களை காத்து வருகின்றேன்' என்று வேலாயுதசாமி கூறுவது போல், எட்டுதிசையை பார்க்கும் விதத்தில் ஆறுமுகங்களை கொண்டு காட்சி தருகிறார். வலது பக்கம் மயில் வாகனம் அமைந்துள்ளது.
தல வரலாறு
சூரனின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதனை ஏற்று சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து முருகப்பெருமானைத் தோற்றுவித்தார். சூரனை அழிக்கும் தருணம் நெருங்கியது.ஆனால் சூரர்கள் மாயையில் வல்லவர்கள் என்பதால் அவர்களை அழிக்க சத்ருசம்ஹார மந்திர உபதேசத்தை, முருகப்பெருமான் பெறுவது அவசியம் என்று பார்வதிதேவி விரும்பினார். அதனால் அந்த மந்திரத்தை குமரனுக்கு உபதேசிக்கும்படி, பார்வதிதேவி சிவபெருமானிடம் வேண்டினார்.
சிவபெருமான், முருகப்பெருமானை அழைத்து,'குமரா! சத்ருசம்ஹார மந்திர உபதேசம் தானாக கிடைத்து விடாது. என்னை நினைத்து கடும் தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.நான்கு வேதங்களாக இருக்கும் கடம்ப மரமும், தர்ப்பையும், கங்கை தோன்றும் இடமும், மகாவிஷ்ணுவுக்கு சிவ தீட்சை அளித்த இடமும் உள்ள இடத்தில் தவம் செய்' என்று வழி கூறினார். சிவபெருமானின் அருளாசியுடன் தவம் புரிவதற்கு ஏற்ற இடத்தை தேடி முருகப் பெருமான் பூலோகம் வந்தார்.அப்போது, இந்த திருத்தலத்தில், நான்கு வேதங்களுக்கு இணையான கடம்ப மரமும், கங்கைக்கு நிகரான ஞானதீர்த்த சுனைநீரும், அருகேயே தர்ப்பையையும், சற்று தொலைவில் சின்னமலையில் சிவதீட்சை பெற்ற மகாவிஷ்ணுவும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க, 'தாம் தவம் இருக்க சரியான இடம் இது' என்று முருகப்பெருமான் தீர்மானித்து அங்கேயே தவம் செய்தார்.
பல ஆண்டு காலம் தவம் செய்த குமரனின் தவத்தை மெச்சி, சிவபெருமான் அவர் முன் தோன்றினார். பின்னர் தன் மகனுக்கு, எதிரிகளை அழிக்க வல்ல மந்திரமான சத்ருசம்ஹார மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை கற்று தேர்ந்ததால் மந்திர வேலாயுதசாமி என்று அழைக்கப்பட்ட முருகப்பெருமானுடன், மலை என்பதன் பதமான கிரியும் இணைந்ததால் மந்திரகிரி' வேலாயுத சுவாமி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.
பிரார்த்தனை
இங்குள்ள தலவிருட்சமான கடம்ப மரத்தை 12 முறை சுற்றி வந்து முருகப்பெருமான் சன்னதியில் தீபம் ஏற்றி வேண்டினால் மனஅமைதி, தொழிற்தடை நீங்குதல், எதிரிகள் நீங்குதல், திருமண வரம், குழந்தை பேறு முதலிய நற்பலன்களை அடையலாம். மேலும், ஜாதக ரீதியான தோஷங்கள், கிரக தோஷம், மனநோய் மற்றும் தீய சக்தி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
அபூர்வக் கோலத்தில் வீற்றிருக்கும் யோக பைரவர்
மதுரை-காரைக்குடி சாலையில், 62 கிமீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருத்தளி நாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி.
வான்மீகி மகரிஷி புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதால் இத்திருத்தலத்திற்கு திருப்புத்தூர் என்ற பெயர் வந்தது.
சிவபெருமான் ஆடும் தாண்டவத்தில் ஏழு வகைகள் உண்டு. அவை, ஆனந்த தாண்டவம், சந்தியதாண்டவம், காளிகா தாண்டவம், திருப்புரத் தாண்டவம், கெளரி தாண்டவம், சம்ஹார தாண்டவம், மற்றும் உமைத் தாண்டவம் ஆகியவை ஆகும். சிவபெருமானின் கௌரி தாண்டவத்தை காண விரும்பிய திருமாலின் துணைவி மகாலட்சுமி கீழ் திசை ஈசனை நோக்கிக் கடுந்தவமிருந்தாள் அவள் முன் சிவபெருமான் தோன்றி கௌரித் தாண்டவம் ஆடிய ஆலயமாகும். ஆதலின் திரு வழிபட்ட ஆலயம் என்னும் பொருள்பட திருத்தளிநாதர் ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது
இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தின் திருத்தளிநாதரைத் தரிசிக்க வந்த காசி பைரவரே, இங்கு யோக பைரவராக அருள்கிறார் என்பது ஐதீகம். ஆக, இவரை ஆதி பைரவர் என்றும் போற்றுகிறார்கள். நம் நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அருளும் பைரவ மூர்த்திகளும் இவரிடமிருந்தே தோன்றியதாக திருத்தளிநாதர் கோவில் தல வரலாறு சொல்கிறது.
இவரை, குலதெய்வமாகக் கொண்ட மருது சகோதரர்கள், எப்போது போருக்குச் சென்றாலும் இந்த யோக பைரவரை வழிபட்ட பிறகுதான் செல்வார்களாம்.
இக்கோவிலில் தனிச் சன்னதியில் யோகா பைரவர் எழுந்தருளி இருக்கிறார். இவர் வலக்கரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோகநிலையில் காட்சி தருகிறார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் 'யோக பைரவர்' என்று அழைக்கப்படுகின்றார். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது. இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது விசேஷம். இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று.
பிரார்த்தனை
தேய்பிறை அஷ்டமி அன்று இவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு போன்றவை விலக இவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக சிறப்பு ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் இவ்வாலயத்தில் செய்யப்படுகின்றன.
நவகிரகங்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதனால், கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும். 'ஆபத்துத்தாரண பைரவர்' என்று அழைக்கப்படும் இவர் எல்லா தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல், திருமணத்தடை போன்ற பிரச்னைகளை நீக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார். இந்த யோக பைரவர். வெண் பூசணி, தேங்காய் போன்றவற்றில் நெய் தீபம் ஏற்றிவைத்து இவரை வழிபட்டால், எதிரிகள் பணிந்து போவார்கள். பங்காளிச் சண்டை முடிவுக்கு வரும். அதேபோல், ஒரு துணியில் மிளகு சுற்றி முடிந்து வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். கண் திருஷ்டிகளும் விலகும்.
சிதம்பரம் நடராஜர் கோவில்
நடனத்திற்கு அதிபதியான நடராஜர்
பரதநாட்டியத்தின் 108 கரணச் சிற்பங்கள்
நடராஜர் என்றால் 'நடனக்கலைகளின் அரசன்' அல்லது 'ஆடலரசன்' என்று பொருள். இது 'நடா' (நடனம்) மற்றும் 'ராஜா' (அரசன்) ஆகிய இரு சமஸ்கிருத வார்த்தைகளின் சேர்க்கையால் உருவானது. இது சிவபெருமானின் நடன வடிவம் (ஆனந்த தாண்டவம்) ஆகும். சிவபெருமானது இந்த நடனம் ஆனந்தத்தின் அடையாளமாகவும், அகங்காரத்தை அழித்து முக்தி தரும் வடிவமாகவும் வழிபடப்படுகிறது.
நடனத்திற்கு அதிபதியான நடராஜர் எழுந்தருளி இருக்கும் தேவாரத் தலமான சிதம்பரம் கோவிலில், பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும் நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில் 20 சிற்பங்களும் உள்ளன. இந்த நாட்டிய சிற்பங்கள் அந்த கால சிற்பிகளின் நாட்டிய அறிவையும், சிற்பக்கலை திறமையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
பரதநாட்டியத்தில் கை, கால், உடல் அசைவுகளின் ஒருங்கிணைந்த இசைவு 'கரணம்' எனப்படும். 'கரன்' என்றால் கை, 'அண்' என்றால் அசைவு எனப் பொருள்படும், உடல் உறுப்புகளால் செய்யப்படும் செய்கையே கரணம். இது கை முத்திரைகள் (ஹஸ்தங்கள்), கால் அசைவுகள் (சாரிகள்), மற்றும் உடல் நிலை (ஸ்தானகம்) ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த, முழுமையான இயக்கமாகும். நாட்டிய சாஸ்திரத்தின்படி, சிவபெருமானால் அருளப்பட்ட மொத்தம் 108 கரணங்கள் தாண்டவங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கரணங்கள் நாட்டியத்திற்கு அழகையும், கம்பீரத்தையும் அளிக்கும் முக்கிய அங்கங்களாகும்.
பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தில் 108 வகை கரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சிதம்பரம் நடராஜர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் போன்ற பழமையான கோயில்களில் 108 கரணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில்
சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தரும் வீர ஆஞ்சநேயர்
செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது 1100 ஆண்டுகள் பழமையான செங்கல்பட்டு கோதண்டராமசாமி (வீர ஆஞ்சநேயர்) கோவில். கருவறையில் ராமபிரான், ஸ்ரீ பட்டாபிராமன் என்ற திருநாமத்தோடு, வீராசனத்தில் ஞான முத்திரையுடன் சீதாதேவியுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். .அருகில் லக்ஷ்மணர் நின்றபடியும் ,பரதன் ,சத்ருகன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் கிழே அமர்ந்தபடி உள்ளார்கள் , ராமபிரானோடு சத்ருகனும், பரதனும் உடன் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
இக்கோவிலின் வாயு மூலையில் வீர ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் தனது வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தில் தாமரை ஏந்தியபடியும் தனது தனது காலால் சனி பகவானை அழுத்திய படியும் காட்சி தருகிறார் ,இது ஒரு அபூர்வமாக காணக்கூடிய தோற்றம் ஆகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
சனிபகவானுக்குரிய பரிகார தலம்
அனுமன் சீதையைத் தேடி, சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு தாவ முயன்ற போது, அவரை ஏழரை சனி காலம் நெருங்க இருப்பதால் சனிபகவான் அவரை பிடித்துக் கொண்டார். அனுமன் தான் முக்கிய காரணத்திற்காக இலங்கை செல்ல இருப்பதால், தன்னை பின்னர் பிடித்துக் கொள்ளுமாறு சனி பகவானிடம் கூறினார். சனிபகவானும் அவரை அப்போது விட்டுவிட்டார். பின்னர் வானரப் படைகள், சேதுக்கரையில் இருந்து இலங்கைக்கு கற்பாறைகளை கொண்டு பாலம் அமைத்துக் கொண்டிருந்த போது சனி பகவான் மீண்டும் வந்தார். அனுமன் சனி பகவானை தன் தலையை மட்டும் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சனியும் அவ்வாறே அனுமன் தலையை பிடித்துக் கொண்டார். ஆனால் அனுமன் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவர் தலையில் தூக்கிய பாறைகளுக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்குண்டு தவித்தார். அதனால் அனுமன் தலையில் இருந்து விடுபட்டு, அனுமன் காலை பிடிக்க முயற்சி செய்தார். அந்த நேரத்தில் அனுமன் காலால் மிதித்து தரையில் அழுத்தினார். சனிபகவான் அனுமனிடம் தன்னை விட்டுவிடும்படி மன்றாடினார். தன்னை விடுவித்த அனுமனிடம் சனி பகவான் உன் பக்தர்கள் அனைவரையும், ஏன் உங்களை ஒரு கணம் நினைப்பவர்களைக் கூட நான் பிடிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார். அனுமாரே சனிபகவானை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் என்றால் அவரை தரிசித்து வழிபட்டால் சனி பகவானின் கொடூர பார்வையில் இருந்து பக்தர்களை காத்து விடிவு அளிக்கிறார் என்பது உண்மை. அதனால் தான் இத்தலம் , சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கத்திலிருந்து விடுபட வேண்டிக் கொள்ளும் சிறந்த பரிகார தலமாக விளங்குகின்றது.
சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில்
திருகு பீடம் எனப்படும் அபூர்வ வடிவமைப்பு கொண்ட பீடத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகை
திருமண வரம் அருளும் கற்பகாம்பிகை
திருச்சியிலிருந்து மேற்கே கரூர் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இறைவி கற்பகாம்பிகை தெற்கு நோக்கி அமைந்துள்ள சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார். மேலிரு கரங்களில் தாமரை மலர் தாங்கி இருக்கின்றார். கீழிரு திருக்கரங்களில் அபய வரத முத்திரைகள் விளங்குகின்றன.
இத்தலத்து இறைவி கற்பகாம்பிகையின் சிலையானது 'திருகு பீடம்' எனப்படும் ஒரு சிறப்பு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருகு பீடம் (screw type base) என்பது சிற்பக்கலையில் மிகவும் அரிதான, திருகப்பட்ட அல்லது சுருள் வடிவமைப்பு கொண்ட ஒரு சிறப்பு பீட அமைப்பாகும். பொதுவாக கோவில்களில் இறைவன், இறைவியின் சிலைகள், சிலை அடிப்பீடத்தில் நேராக வைக்கப்படும், அதனால் சிலையை நேராகத் தூக்க முடியும். ஆனால் இத்தலத்து கற்பகாம்பாள் சிலை, ஒரு திருகு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதில் சிலையைத் திருகித்தான் தூக்க வேண்டும். அந்த நாட்களில் சிலை திருட்டைத் தடுப்பதற்கான ஏற்பாடாக இது இருந்திருக்க வேண்டும். இத்தகைய திருகு பீட அமைப்பானது ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் மற்றும் மயிலாப்பூர் கற்பகாம்பாள் போன்ற சில அபூர்வமான கோயில் சிலைகளின் அடியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
கற்பகம் என்றால் தேவலோகத்தில் உள்ள, கேட்ட வரங்களை வழங்கும் கற்பக விருட்சம் போன்றவள் என்று பொருள். பக்தர்களின் கோரிக்கைகளை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால், அன்னைக்கு கற்பகாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இத்தலத்து அம்பிகை கற்பகாம்பாளை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில்
அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி தரும் தனிச்சிறப்பு
குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்க அருளும் லட்சுமி நாராயணர்
கோயம்புத்தூர் மாநகரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், துடியலூரை அடுத்து அமைந்துள்ளது வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் விஸ்வநாயகி. இக்கோவில் 1400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூன்று யுகங்களைக் கண்ட பெருமை வாய்ந்த கோவில் இது.
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பசியால் தளர்ந்து இக்கோவிலுக்கு வந்தபோது, இறைவனும் இறைவியும் வேடுவ தம்பதிகளாகத் தோன்றி அவருக்கு 'வன முருங்கைக்கீரை' சமைத்து அமுது படைத்தனர். விருந்தளித்த காரணத்தால் இத்தல இறைவன் 'விருந்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலின் தனித்துவமான சிறப்பு அம்சங்களில் ஒன்று, நிபந்தனையற்ற பக்தியும் மற்றும் சேவையில் ஈடுபடும் சிறிய திருவடி, பெரிய திருவடி என அழைக்கப்படும் அனுமனும், கருடனும் ஒரே இடத்தில் காட்சி அளிப்பதாகும். இக்கோவிலில் அமைந்துள்ள லட்சுமி நாராயணர் சன்னதிக்கு அருகே இவர்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகளை, உடனே நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், குடும்பத்தில் மன ஒற்றுமை மேலோங்கவும் இங்குள்ள லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.