தில்லையாடி சரணாகரட்சகர் கோவில்
சனி பகவான் சன்னதியின் விசேட அமைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. தன்னிடம் சரணடைந்தவர்களை இத்தலத்து இறைவன் காத்து அருள்வதால், 'சரணாகரட்சகர்' என்று அழைக்கப்படுகிறார்.
முக்காலத்தில் இத்தலத்தின் பெயர் தில்லைவனம் என்று இருந்தது. பின்னர் தேவேந்திரன் தில்லைவனத்திலிருந்த இந்த இறைவனை வணங்கி, தில்லையில் ஆனந்த தாண்டவம் ஆடியதுபோல் இந்த தலத்திலும் திருநடனம் புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், இந்திரனுக்காக ஆனந்த நடனம் ஆடியருளியதால் தில்லையாடி என பெயர் பெற்றது.
இத்தலத்தில் சனி பகவான் சன்னதி, இறைவன சரணாகரட்சகர் சன்னதிக்கும், இறைவி பெரியநாயகி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது ஒரு விசேடமான அமைப் பாகும். இது போன்ற சனி பகவான் சன்னதி அமைப்பு திருநள்ளாறு தலத்தில்தான் இருக்கின்றது.
சனி பகவான் பூஜை செய்த தலம்
சனி பகவான் மக்களின கர்ம வினைகளை, ஒரு நீதிபதி போல் சீர் தூக்கிப் பார்த்து, அதற்கேற்ப பலன்களைத் தருபவர். ஆனால் கடமையை சரியாகச் செய்யும் அவருக்கு அவப்பெயர்தான் மிஞ்சுகின்றது. தனக்கு ஏற்படும் அபவாதத்தை நீக்கிக் கொள்ளவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான் இத்தலத்துக்கு வந்து இறைவன் சரணாகரட்சகரை வழிபட்டார். சனி பகவான் பூஜையினால் மனம் மகிழ்ந்த இறைவன, சனி பகவானை வழிபட்டவர்களுக்கு அவர் நற்பலன்களைக் கொடுக்கும் சக்தியைக் அளித்தார்.
இத்தலத்து சனி பகவானுக்கு ருத்ர ஹோமம், அபிஷேகம் செய்து வழிபடுவது தற்பலன்களைத் தரும். ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இவரை வழிபட்டால் சகல பிரச்சனைகளும் நீங்கும்.
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குறைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.