இரங்காபுரம் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில்

இரங்காபுரம் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில்

பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம்

வேலூர் மாவட்டம் இரங்காபுரம் மலைமேல் அமைந்துள்ளது அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில். சித்தர்கள் வழிபடும் வழிபடும் கோவிலாக இது விளங்குகின்றது. இந்தக் கோவிலில் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் தனி சன்னதியில் நின்று காட்சி அளிக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த இந்த பைரவர், பக்தர்களின் கஷ்டங்களை உடனடியாக தீர்த்து வைக்கும் வல்லமை பெற்றவர்.

இக் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை, மே மாதம் நடைபெறும் விழாவின் போது இவருக்குப் பொங்கல் வைத்து அருள் வாக்கு வாங்குவார்கள். அந்த விழாவின் சிறப்பு அம்சம் பழம் கொடுப்பது ஆகும். பைரவருக்கு அபிஷேகம் அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலைமீது பூ வைத்து அதில் ஒரு எலுமிச்சை பழம் வைப்பார்கள். எலுமிச்சை பழத்தை வைத்ததும் ஒரு ஈ பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தில் சில வினாடிகள் அமர்ந்து விட்டுப் பறந்து சென்றுவிடும். அது பறந்து சென்றதும் பைரவர் தலையில் வைக்கப்பட்ட எலுமிச்சைபழம் தானாக சுற்றிக் கீழே விழும். அதை ஒருவர் கீழே அமர்ந்து பிடித்துக் கொள்வார்.அதன் பிறகு பலரும் இந்த பைரவரிடம் அருள்வாக்கு கேட்டுச் செல்கின்றனர். பைரவர் உத்தரவுடன் சொல்லப்படும் இந்த அருள்வாக்கால் பல பக்தர்களின் மனக்குறைகள் நீங்கி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் இந்த அதிசய நிகழ்வு இக்கோவிலில் நடக்கிறது.இந்த அதிசயத்தை காண ஏராளமான பக்தர்கள் இந்த மலைக்கோவிலுக்கு வருபழம் கொடுக்கும் விழாவிற்கு வருகிறார்கள்.

Read More
திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்

பள்ளியறை இல்லாத, பள்ளியறை பூஜை நடைபெறாத தேவார தலம்

சீர்காழியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள தேவாரத் தலம், திருமுல்லைவாசல். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர், மாசிலாமணீசர். இறைவியின் திருநாமம் அணிகொண்ட கோதையம்மை. சத்தியானந்த சவுந்தரி.

எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் பள்ளியறை இல்லை. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்பாள் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்பாளுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவபெருமான் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால், இங்கு பள்ளியறை பூஜையும் நடத்துவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற சிவன் கோவிலில் இருந்து மாறுபட்ட நடைமுறையாகும். சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

Read More
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்

தட்சிணாமூர்த்தியின் காலடியில் நந்தி இருக்கும் அரிய தோற்றம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்பைஞ்ஞீலி. இறைவனின் திருநாமம் ஞீலிவனேஸ்வரர். இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன . ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். இந்த கோவில் 1400 வருடங்களுக்கு மேல் பழமையானது. ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. எம பயத்தை போக்கக்கூடிய தலம் இது.

இத்தலத்தில் இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி கற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். அவரது வலது பாதத்தின் கீழ் வழக்கம் போல் முயலகன் காட்சி தருகின்றான். மடித்து வைத்திருக்கும் அவரது இடது காலின் கீழ் பக்கம் நந்தி காட்சி அளிக்கிறது. சிவபெருமானின் அம்சம் தட்சிணாமூர்த்தி என்பதால் நந்தி தேவர் அவருக்கு வாகனமாக எழுந்தருளி இருக்கிறார். நந்தி தேவர் வழிபட்ட தலம் இது. அதனால் தான் அவர் தட்சிணாமூர்த்தியின் காலடியில் எழுந்தருளி இருக்கிறார். இப்படி நந்தி தேவருடன் காட்சியளிக்கும் தட்சிணாமூர்த்தியை நாம் வேறு தலங்களில் தரிசிப்பது அரிது.

அறிவு, தெளிவு, ஞானம் ஆகியவற்றை அருள்பவர் இந்த தட்சிணாமூர்த்தி (த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம்). தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

Read More
திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோவில்

பாவங்களை நீக்கும், திருமண வரம் அருளும் மோட்சத் தூண்கள்

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலும் ,சுவாமிமலையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள திவ்ய தேசம் திருஆதனூர். பெருமாளின் திருநாமம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன். தாயாரின் திருநாமம் பார்க்கவி.

கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடுடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் பாதத்தருகே காமதேனு,காமதேனுவின் மகள் நந்தினி, சிவபெருமான், பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் உள்ளனர்.

கைகளில் ஏடு (ஓலைச் சுவடி), எழுத்தாணி, தலைக்கு மரக்காலை வைத்து, ஜீவாத்மாக்களின் நல்ல மற்றும் தீய செயல்களை கணக்கிட்டு அவர்களை ஆள்வதால், திருமால் 'ஆண்டு அளக்கும் ஐயன்' என்று அழைக்கப்படுகிறார். தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது. திருமாலை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் (ஆ,தன்,ஊர்) ஆதனூர் என்ற பெயர் இவ்வூருக்கு கிட்டியது.

இக்கோவிலில், கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை வலம் வந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டு, பெருமாளின் பாதம், முகத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். இத்தூண்கள் மோட்சத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதே போல இத்தலத்து மோட்சத் தூண்களை இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து, இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங்கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில், இத்தலத்திலும் ஸ்ரீரங்கத்திலும் தான் மோட்சத் தூண்களைக் நாம் காண முடியும்.

வைணவ நவக்கிரக தலங்களில் இத்தலம் குரு பரிகார தலமாகக் கருதப்படுகிறது.

Read More
திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோவில்

நீடித்த ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் அருளும் கள்ள வாரண பிள்ளையார்

மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ .தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருக்கடையூர். இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவியின் திருநாமம் அபிராம வ‌ல்லி.

இத்தலத்தில் அமிர்தகடேசுவரர் சன்னதி வலதுபுறம், நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில், கள்ள வாரண விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. கள்ள வாரண விநாயகர் சன்னதி, விநாயகரின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகும்.

கள்ள வாரண விநாயகர் தனது தும்பிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். இவருடைய தோற்றத்திற்கு பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது விநாயகரை வழிபட மறந்தனர் . இதனால் விநாயகப் பெருமான் அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். விநாயகர் ஒளித்து வைத்த அமிர்த குடம், லிங்கமாக மாறி அமிர்தகடேசுவரர் ஆனது.

சிவபெருமான் விநாயகரை வழிபட்டு, அமிர்தம் பெறுமாறு தேவர்களுக்கு வழி காட்டினார். அதன்படி தேவர்கள் திருக்கடவூரில் கணபதியை வழிபட்டு அமிர்தம் கிடைக்கப் பெற்றனர். இந்தத் தலத்தில் விநாயகப் பெருமானை வணங்கினால் அமிர்தம் அருந்தாமலேயே நீடித்த ஆயுளைப் பெறலாம் என்பது ஐதீகம். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

Read More
திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி

திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூர் அரநெறி

தஞ்சாவூர் பெரிய கோவில் விமானத்துக்கு மாதிரியாக திகழ்ந்த சன்னதி விமானம்

நமிநந்தி அடிகள் நாயனாருக்காக, சிவபெருமான் தண்ணீரில் விளக்கெரிய செய்த அற்புதம்

தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்களில், மூன்று தலங்களில் மட்டும் தான் இரண்டு சன்னதிகள் தனித்தனியே தேவார பாடல்கள் பெற்றுள்ளன. அவை திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகியவை ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோவிலில் புற்றிடம் கொண்ட நாதர் சன்னதியும், அசலேசுவரர் சன்னதியும் தனித்தனியே தேவாரப் பாடல்களில் போற்றப்பட்டுள்ளன. ஒரு மன்னருடைய வேண்டுகோளின்படி இறைவன் சலியாது எழுந்தருளி இருப்பதால், அசலேசுவரர் எனப் பெயர் பெற்றார்.

இந்த அசலேசுவரர் சன்னதி தியாகராஜர் கோவில் வளாகத்தின் அக்னி மூலை (தென்கிழக்கு) பகுதியில் அமைந்துள்ளது. அசலேசுவரர் கருவறை, அர்த்த மண்டபம், வெளியிலுள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகிய பகுதிகளே திருவாரூர் அரநெறி என்ற தேவாரத் தலமாக கருதப்படுகிறது. இந்த சன்னதியின் விமானம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் கட்டிட வடிவமைப்பை மாதிரியாக கொண்டுதான், பிரகதீஸ்வரர் கோவில் விமானம் அமைக்கப்பட்டது. அசலேசுவரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழாது.

நமிநந்தியடிகள் நாயனார் என்பவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். சிவபெருமானின் தீவிர பக்தர். அனுதினமும் திருவாரூர் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவார்.

ஒரு நாள் அவர் இக்கோவிலுக்குச் சென்றபோது, அதில் எண்ணெய்/நெய் இல்லாததால் விளக்குகள் அணையப் போவதைக் கண்டார். தொலைவில் வசிப்பதால், விளக்கு எரிய வைக்க எண்ணெய்க்காக பக்கத்து வீடுகளை அணுகினார். அக்கம்பக்கத்தினர், வித்தியாசமான சமய நம்பிக்கை கொண்டவர்கள். உங்களுடைய சிவபெருமான் பெரிய கடவுளாக இருந்தால் இந்த விளக்குகளை தண்ணீர் கொண்டு எரிய வைக்க முடியும் என்று கேலி செய்தார்கள். ஏமாற்றமடைந்த நமிநந்தியடிகள் மீண்டும் கோவிலுக்குச் சென்று, இறைவன் முன் கதறி அழுதார். சிவபெருமான், நமிநந்தியடிகள் முன் தோன்றி, கோவில் குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து விளக்கேற்றச் சொன்னார். அடிகளார் அவ்வாறு தண்ணீரை நெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தியபோது, முன்னெப்போதையும் விட கோவில் விளக்குகள் பிரகாசித்தன. இச்சம்பவத்தையும், அடிகளாரின் பக்தியையும் கேள்விப்பட்ட சோழ மன்னன், அடிகளாரை ஆலய நிர்வாகத் தலைவராக்கியதுடன், இக்கோவிலுக்கு ஆதரவாக பல மானியங்களையும் வழங்கினார்.

நமிநந்தி அடிகள் நாயனார் இத்தலத்தில் தண்ணீரால் விளக்கேற்றிய செய்தியை தனது தேவாரத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.

Read More
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர்  கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்

சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் எழுப்பும் அபூர்வ இசைத் தூண்

ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கிருஷ்ணன் சிற்பம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள திவ்ய தேசம் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.

இக்கோவில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. அற்புதமான கற்சிலைகள் ஆலயம் முழுவதும் நிறைந்துள்ளன. கை விளக்கேந்திய பெண் சிற்பங்கள், பல வித குரங்குகள், யாளி உருவம் அமைந்த தூண்கள் ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம். நம்மாழ்வார் சன்னதியில் உள்ள இராமாயண சிற்பங்கள் மிகவும அருமை. ஒரு சாண் உயரத்தில் செதுக்கப்பட்ட கிருஷ்ணன் சிற்பத்தின் நுணுக்கம் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும்.

தூண் புடைப்புச் சிற்பங்களாக யானை, காளையை அடக்கும் வீரன், சிம்மம் போன்ற அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோவிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும்உள்ளன.

இந்த ஆலயத்தில் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. அதில் ஒன்றை தட்டினால் மூன்று சுரங்களை எழுப்புகிறது . மற்றதில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்தத் இசைத் தூணின் இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு, மாறி மாறி ஊதினால் ஒன்றில் சங்கின் ஒலியும், மற்றதில் எக்காள ஒலியும் கேட்கிறது.

இக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டது. கோவில் சிற்பம், இசை, கட்டிடக்கலையில் மட்டுமல்ல ஓவியத்திலும் சிறந்து விளங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் கோவிலைச் சுற்றி உள்ள பிரகாரச் சுவர்களில் 108 திவ்யதேசப் பெருமாள்களின் உருவங்கள் ஓவியங்களாய்த் தீட்டப் பட்டுள்ளன. பல் வேறு வரலாற்றுக் கதைகளும் ஓவியங்களாய்த் வரையப்பட்டுள்ளன.

Read More
வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில்

வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில்

திருநாள்ளாறு தலத்திற்கு இணையான தலம்

சனியால் அகல பாதாளத்தில் விழுந்தவர்கள் நன்மை பெற வழிபட வேண்டிய தலம்

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 21 கி.மீ தொலைவில் (குணசீலத்திற்கு முன்னால் 2 கி.மீ ), அமைந்துள்ளது வாத்தலை பாதாள ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாதாள ஈஸ்வரி. சப்த ரிஷிகள் வழிபட்ட தலம்.

ஒரு சமயம் சனி பகவான் சிவபெருமானை ஏழரை நாழிகை நேரம் பிடிக்க முற்பட்ட போது, சனியிடம் இருந்து தப்பிக்க சிவபெருமான் பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். அதனால் தான், இத்தலத்து இறைவனுக்கு பாதாள ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு ஏற்றார்போல் இத்தலத்து மூலவரை தரிசிக்க, நாம் தரைமட்டத்தில் இருந்து பல படிகள் கீழே இறங்கி செல்ல வேண்டும். சிவபெருமானை பிடிக்க வந்த சனி பகவான் மூலவருக்கு எதிரில் இடதுபுறம் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி முதலிய சனி தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய பரிகாரத் தலம் இது. அதனால் இத்தலம் திருநள்ளாறுக்கு இணையான தலம் என்று போற்றப்படுகிறது.சனிபகவனால் பாதிக்கப்பட்டு பெரிய இழப்பை சந்தித்தவர்கள், இந்த தலத்தில் வழிபட்டால் அந்த இழப்பிலிருந்து மீண்டு வரலாம். இந்த தலத்தை தரிசனம் செய்த பிறகு படி ஏறி மேலே செல்லும் போது முழுவதும் சனி தோஷம் நிவர்த்தி ஆகி நமது வாழ்க்கை அடுத்த கட்டம் நோக்கி முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில்

அம்பிகையும் திருவாசியும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டிருக்கும் அபூர்வ வடிவமைப்பு

பௌர்ணமி அன்று வழிபட்டால் புத்திர பாக்கியம் அருளும் அம்பிகை

நாமக்கல் நகரில் இருந்து தெற்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோகனூர் என்ற ஊரில், காவிரி நதியின் கரையில் அமைந்துள்ளது அசலதீபேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் அசலதீபேஸ்வரர். இறைவியின் திருநாமம் மதுகரவேணி. தீப வழிபாட்டுடன் தொடர்புடைய தலம் என்பதால், இறைவனது சன்னதியில் எப்போதும் அணையாதீபம் எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீபம் அசையாமல் எரிவதால் சுவாமி, அசலதீபேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அசலம் என்றால் அசையாதது என்று பொருள். சுவாமி, இத்தலத்தில் தியான கோலத்தில் இருப்பதால், தீபம் அசைவதில்லை.

இத்தலத்தில் அசலதீபேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்பாள் மதுகரவேணி கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் அம்பிகை இருவரும் ஒருவருக்கொருவர் வலப்புறமாக காட்சி தரும்படி இத்தலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அமைப்பை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.

தனது சகோதரன் விநாயகருடன் நடந்த போட்டியில் தனக்கு மாம்பழம் கிடைக்காததால் முருகப்பெருமான் கோபித்துக்கொண்டு கைலாயத்தை விட்டு புறப்பட்டார். அவரைத் தேடிக் கொண்டு புறப்பட்ட அம்பிகை தன் மகனை முதன் முதலாக இந்த தலத்தில் கண்டதால், இவ்வூர் மகனூர் என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னர் மருவி மோகனூர் என்று மாறியது.

முருகனை நேரில் பார்த்தவுடனேயே பாசத்தில் இந்த அம்பிகை பால் சொரிந்தாளாம். எனவே இவள் மதுகரவேணி என்று அழைக்கப்படுகிறாள். மது என்றால் பால் என்று பொருள். பவுர்ணமிதோறும் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அந்நேரத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்பிகையை வழிபட்டால், புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

Read More
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் நெல் அளவைத் திருநாள்

நெல் அளவை கணக்கிட, படியளக்கும் பெருமாள்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திவ்ய தேசம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உலகத்து உயிர்களை காத்து ரட்சிப்பவர் பெருமாள். இதைத்தான் 'பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்' என்று வழக்கத்தில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே, வருஷத்துக்கு ஏழு தடவை படியளக்கிறார். சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி ,தை ,மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவை திருநாள், ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.

நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி - பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள்.

நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையில் இருந்து நம்பெருமாள் இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு?; செலவு எவ்வளவு? மீதி இருப்பு எவ்வளவு?... என்று கணக்கிட்டுப் பார்க்க, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாகக் கிளம்புகிறார். கணவரின் சரிபங்கான மனைவிக்கு எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று நமக்கு உணர்த்துவதற்காகத்தான், நெல் அளவைத் திருநாள் அன்று பூதேவி ஸ்ரீதேவி சகிதமாக எழுந்தருளுகிறார்.

நம்பெருமாள். ஆரியபட்டாள் வாசல் வழியே வந்து செங்கமலத் தாயார் சன்னிதி எனப்படும் திருக்கொட்டாரம் முன்பு நாலு கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அப்போது பாசிப்பயறும் பானகமும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. செங்கமலத் தாயார் சன்னிதி பூஜை பரிசாரகம் செய்பவர் ஒரு தட்டில் வெற்றிலைப் பாக்கு வைத்து நம் பெருமாளை எதிர் சென்று வணங்கி வரவேற்கிறார். அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.

பெருமாள் அருகில் இருக்கும் ஸ்தானிகர் அருளிப்பாடி, கார் அளப்பானை அழைக்கிறார். ஸ்தானிகர் குரல் கேட்டு, 'ஆயிந்தேன் ஆயிந்தேன்' எனச் சொல்லி விரைந்து சென்று பெருமாள் முன்பு மிகப் பணிவாக நிற்கிறார் அளவைக்காரர். அவருக்கு தீர்த்தம், சந்தனம், மஞ்சள்பொடி அளித்து, பரிவட்டம் கட்டி, சடாரி சாத்தி மரியாதை செய்யப்படுகிறது. பெருமாள் பாதமான சடாரி சாத்தினாலே அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். உடனே கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல்லை அளக்கத் தொடங்குகிறார். திருவரங்கம் என சொல்லி முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து பெரிய கோயில் எனக் கூறி இரண்டாவது மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது. ‘நிரவி விட்டு அள’ என்று ஸ்தானிகர்தான் குரல் கொடுக்கிறார். ‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளை கட்டளையிடுவதாக இது ஐதீகம்.

அந்தக் காலத்தில் இருந்து எல்லாமே எம்பெருமானின் நேரடி பார்வை நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை. தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களும் திருக்கொட்டாரத்தில் இருந்து எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக்கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும் மக்கள் ஆரோக்கியமும், தானிய உற்பத்தி சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்.

உலகம் யாவுக்கும் படி அளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிப்பது? அதனால் அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி என அளந்து போடப்படுகிறது. தனது நேரடிப் பார்வையில் 'நெல் அளவை' கண்ட நம்பெருமாள், அதன் பிறகு ஸ்ரீதேவி பூதேவியுடன் இணைந்து பூந்தேரில் எழுந்தருளி வீதி உலா வருகிறார், உலகிற்கெல்லாம் படியளக்கும் பெருமாள். இப்படியாக, ஸ்ரீரங்கத்தில் நெல் அளவை திருநாள் கொண்டாடப்படுகிறது .

Read More
மகாபலிபுரம் தலசயனப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மகாபலிபுரம் தலசயனப் பெருமாள் கோவில்

உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம்

மாசி மகத்தன்று நீராடுவது, ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும் திவ்ய தேசம்

மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் திவ்ய தேசம் தலசயன பெருமாள் கோவில். மூலவர் தலசயனப் பெருமாள், வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட குருவருளும், திருவருளும் கிட்டும். கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். மேலும் கருவறையில் மூலவரின் பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி, பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளார்.

இத்தல உற்சவரின் திருநாமம் 'உலகுய்ய நின்றான்' என்பதாகும். இந்தக் கோவிலை எழுப்பிய மன்னன் பாராங்குசன், பாம்பு புற்றினுள் மறைந்திருந்த இந்த உற்சவரைக் கோவிலில் எழுந்தருள்வித்தான். கலிகாலத்தில் நம்மை எல்லாம் காத்து இந்தப் புவியை உய்விக்க வந்தவர் இந்த பெருமாள். இந்த உற்சவரின் கையில் புண்டரீகரின் தாமரை மலர் மொட்டு உள்ளது. அதனை உற்சவர், மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம் தலசயனப் பெருமாள் கோவில் தான்.

பெருமாள் கையில் தாமரை மலருடன் இருப்பதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். புண்டரீக மகரிஷி இத்தல பெருமாளின் திருவடியில் தாமரை மலர்களை வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் தாமரை மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். அதற்காக கடல்நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால் ஒரு முதியவராக உருக்கொண்டு முனிவரிடம் வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல்நீரை உமக்காக இரைக்கிறேன் என்று அனுப்பினார். முனிவரும் உணவு வாங்கிவந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரைக் காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத்தைப் பார்க்க, தான் வைத்த தாமரை மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். பெருமாள் நீர் இரைத்த இந்த கடல் பகுதி அர்த்தசேது என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று, கடல், நதி மற்றும் குளங்களில் நீராடுவது மிக விசேஷமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மாசி மகத்தன்று அந்த நீர் நிலைகளில்கூட, புண்ணிய நதியாகிய கங்கையும் கலந்திருப்பதாக கருதப்படுகிறது. இத்தலம் தீர்த்தவாரிக்கு பெயர் பெற்றது. ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இரைத்த இந்த அர்த்தசேது கடலில், மாசி மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம். இந்த இடத்தில் மாசி மகம் அன்று நீராடுவது, வருடம் முழுவதும் செய்த பாவத்தை நீக்கும். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும்.

Read More
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில்

நந்திகேஸ்வரரும், அவரது மனைவி நந்திகேஸ்வரியும் மனித உருவில் இருக்கும் அபூர்வ காட்சி

காஞ்சிபுரம் மாநகரில் நெல்லு கார தெரு பகுதியில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர் கோவில் . திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கியதால், இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர். கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும்.

இத்தலத்தில் நந்திகேஸ்வரரும் அவரது மனைவி நந்திகேஸ்வரியும், மனித உருவில் கோவிலின் பாதுகாவலர்களாக எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். சிவபெருமான் இந்த உலகத்தில் திருநடனம் ஆடிய போது, அதனைக் காண்பதற்கு, நந்தி பகவான் விரும்பினார். மேலும் அந்த திருநடனத்தை தனது துணைவி நந்திகேஸ்வரியுடன் மனித உருவில் காண விரும்பியதால் தான் அவர்கள் இருவரும் இங்கு மனித ரூபத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள் என்று தலபுராணம் கூறுகிறது.

Read More
திருமாகறல் திருமாகறலீஸ்வரர்  கோவில்

திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோவில்

உடும்பின் வால் போன்று காட்சி அளிக்கும் அபூர்வ சிவலிங்கம்

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில், 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி.

காட்டில் வாழும் உடும்பு என்னும் பிராணியானது எதைப்பற்றிக் கொண்டாலும், அதை இறுக பற்றிக் கொள்ளும் தன்மை உடையது. இத்தலத்தில் உடும்பின் வால் போல் சிவலிங்கத் திருமேனி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி உடும்பின் வால் போன்று சிவலிங்கம் இருப்பதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

ஒரு சமயம் மும்மூர்த்திகளில் தானே சிறந்தவன் என்று பிரம்மா அகந்தை கொண்டபோது சிவபெருமான் அவரை சபித்தார். தனது சாபம் நீங்க பிரம்மா இத்தலம் வந்து ஒரு லிங்கம் பிரதிஷடை செய்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். பின்பு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப் பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள்தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். தினந்தோறும் வீட்டுக்கு ஒருவர் என்ற முறையில் மன்னனுக்கு சென்று கொடுத்து வந்தனர்.

ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அந்த சிறுவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன் பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால், நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பிவிட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான்.அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான்.

காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் கூடச் சென்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்து கொண்டு திரும்பினான். அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில் விடிமாகறல் என்று வழங்கப்படுகிறது. அரண்மனைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் பொன்னிற உடும்பு ஒன்று தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி, சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும்படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன்படியே செய்தான். அதனால்தான் இக்கோயிலில் சிவலிங்கம் உடும்பின் வால் அளவு உள்ளது.

பல வியாதிகளை குணப்படுத்தும் அபிஷேக தீர்த்தம்

இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் இத்தலத்தில் பூஜை செய்யப்படுகிறது.

Read More
சமயபுரம் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம்

மாசி மாத கடைசி ஞாயிறு முதல் 28 நாட்கள், பக்தர்களின் நலனுக்காக மாரியம்மன் கடைபிடிக்கும் விரதம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில். ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும்.

கருவறையில் மாரியம்மன், தனது திருமுடியில் தங்கக் கிரீடம் அணிந்து, குங்கும நிற மேனியுடன், நெற்றியில் வைரப்பட்டை ஒளிவீச, இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு மிகப்பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறாள். அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். தனது எட்டு கைகளில் கத்தி, உடுக்கை, தாமரை, திரிசூலம், கபாலம், மணி, வில், பாசம் ஆகியவைகளைத் தாங்கி உள்ளாள். அன்னையின் வலது காலின் கீழ் மூன்று அசுரர்களின் தலைகள் காணப்படுகின்றன. உட்கார்ந்த கோலத்தில், இந்த அம்மனைப் போல பெரிய திருமேனி உடைய அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. இந்த அம்மனின் திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டதால் அம்மனுக்கு 'மூலிகை அம்மன்' என்ற பெயரும் உண்டு. சுதை வடிவமானவள் என்பதால் இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.

சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் விரதம் இருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனை பிரார்த்திக்கிறார்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மனே, உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சௌபாக்கியங்கள் கிடைக்கவும், ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில், அம்மனை மனதில் கொண்டு, ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைபிடிப்பது வழக்கம். அடுப்பு தீயில் தாளிக்காமல், காலில் செருப்பு அணியாமல், இளநீரும் நீர் மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருக்கும் விரதம் இது.

அம்மனின் பச்சை பட்டினி விரதம் இனிதே நடைபெற வேண்டும் என்பதற்காக கருவறையில் உள்ள அம்மனுக்கு பக்தர்கள் பூக்களை அபிஷேகம் செய்வார்கள். இதனை பூச்சொரிதல் என்பார்கள்.

பூச்சொரிதல் நாள் முதல் 28 நாட்களுக்கு, அம்மனுக்கு தளிகை, நெய்வேத்தியம் கிடையாது. இளநீர், கரும்பு, பானகம், துள்ளுமாவு, நீர்மோர் மட்டுமே மாரியம்மனுக்கு கொடுக்கப்படுகிறது.

Read More
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்

பெருமாளின் எதிரே கருடாழ்வார் இல்லாத திவ்ய தேசம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம் பத்மநாபசாமி கோவில். இக்கோவிலில் மூலவர் பத்மநாபசாமி, அனந்தசயனம் எனப்படும் யோக நித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோவிலில் உள்ள பெருமாளின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது.

எல்லா பெருமாள் கோவிலிலும், மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், பெருமாளின் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். ஏனென்றால், பெருமாளின் கட்டளைபடி திருவனந்தபுரம் வந்த ராமானுஜரை, திருக்குறுங்குடி கொண்டு விட கருடாழ்வர் சென்றுவிட்டார். அதனால் இத்தலத்தில் பெருமாள் சன்னதி முன்பு கருடாழ்வார் இருக்க மாட்டார்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

திருமணத்தின் போது சிவபெருமான், பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு அக்னிகுண்டத்தை வலம் வரும் அரிய காட்சி

சிவபார்வதி திருமணம் நடந்தபோது, அவர்களுடைய வயதை பற்றிய அரிய தகவல்

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

இக்கோவிலில் இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில், சிவபெருமான் கல்யாணசுந்தரர் என்ற திருநாமத்தோடும்,பார்வதி தேவி கோகிலாம்பாள் என்ற திருநாமத்தோடும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற தலங்களில் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்தாலும், இத்தலத்தில் அவர்களின் திருமணக் கோலம் சற்று வித்தியாசமானதாகவும் அரிதாகவும் அமைந்திருக்கின்றது. இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு, திருமண சடங்கிற்கான அக்னிகுண்டத்தை வலம் வரும் நிலையில் காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அரிய காட்சியாகும்.சிவபெருமானின் இடது புறம் திருமண சடங்கிற்கான அக்னி குண்டம் இடம் பெற்றிருக்கின்றது.மேலும் இருவர் கரங்களிலும் திருமண சடங்கின் போது அணிவிக்கப்படும் கங்கணமும் இருக்கின்றது.

இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் நடந்தபோது, சிவபெருமானுக்கு 18 வயது என்றும் பார்வதி தேவிக்கு ஒன்பது வயது என்றும் தல புராணம் குறிப்பிடுகின்றது. இப்படி இவர்கள் திருமணம் நடந்த போது, இவர்களின் வயதை குறிப்பிட்டு இருப்பது ஒரு அரிய தகவலாகும். வேறு எந்த சிவபார்வதி திருமணம் நடைபெற்ற தலத்திலும், அவர்கள் திருமண வயதைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.

இக்கோவில் ஒரு திருமண தடை நிவர்த்தி தலம் ஆகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு உள்ள கல்யாண சுந்தரருக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி, சுவாமி மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திருவையாறு ஐயாரப்பர் கோவில்

திருவையாறு ஐயாரப்பர் கோவில்

எமபயத்தை நீக்கும் ஆட்கொண்டார்

நாட்பட்ட வியாதிகளை தீர்க்கும் ஆட்கொண்டார் வழிபாடு

தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி மீ தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு. இறைவன் திருநாமம் ஐயாரப்பர். இறைவியின் திருநாமம் தர்ம சம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி.

தெற்கு கோபுர வாசலில் இடது புறமாக ஆட்கொண்டார் சன்னதியும், வலது புறமாக உய்யக்கொண்டார் சன்னதியும் இருக்கின்றன. திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல, திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டும். கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக ஐதீகம். இந்த ஆட்கொண்டேசரே, திருவையாறு மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

ஆட்கொண்டார் எமபயத்தை போக்கி அருள் புரிபவர். முன்னொரு காலத்தில் சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் தந்தையும், தாயும் இறந்தபின் மிக்க வருத்தம் கொண்டு, தல யாத்திரை மேற்கொண்டான். அப்போது வழியில் திருப்பழனம் என்ற ஊரில் தங்கியிருந்தான். ஒருநாள் இரவு அவனது கனவில் யமன் தோன்றி 'இன்றைக்கு ஐந்தாம் நாள் உன் உயிரை நான் பறித்து விடுவேன்' என்று உணர்த்தினார். அதைக் கேட்டு அச்சிறுவன் அஞ்சி வசிஷ்ட முனிவரை அணுக, அவரது அறிவுரையின்படி திருவையாறு சென்று சிவதரிசனம், பஞ்சாக்கர ஜபம் முதலியன செய்து வரலானான். வசிஷ்ட முனிவரும் சிறுவனுக்காக ஜபம் செய்யலானார். யமன் ஐந்தாம் நாள் சிறுவன் முன் தோன்றினான். ஐயாற்று எம்பெருமான் துவாரபாலகரை ஏவி அந்தணச் சிறுவனைக் காக்குமாறு பணித்தார். அஞ்சாது எதிர்த்த யமனை துவாரபாலகர்கள் அடக்கினர். பின் சிவபெருமானும் தெற்கு வாயிலின் மேற்புறத்தே தோன்றி சுசரிதனுக்கு ஆயுள் அருளி, எமனையும் சிறுவனின் உயிரை பறிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

இவ்விதம் சிறுவனுக்கு எம பயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான் ஆவார். தனது காலின் கீழ் எமனை மிதித்தவாறு அருளும் அவரது திருவுருவம் அற்புதமானது.

இந்தச் சம்பவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அஷ்டமி அன்று ஆகும். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாத காலாஷ்டமி தினத்தன்று காலை காவிரியில் தீர்த்தவாரியும், ஆட்கொண்டார் சந்நிதியில் விசேஷ அபிஷேகங்கள், எண்ணற்ற அளவில் வடை மாலை சாத்துதல் போன்ற வைபவங்களும், இரவு எம் வாகனத்தில் ஆட்கொண்டார் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறும்.

ஆட்கொண்டார் எமபயத்தை நீக்குபவர் என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற சாந்தி நிகழ்ச்சிகளை இவ்வாலயத்தில் நடத்திக் கொள்வது மிகவும் சிறப்பானது.

Read More
வேளிமலை குமாரசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வேளிமலை குமாரசாமி கோவில்

முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்த தலம்

முருகன் வள்ளியுடன் மட்டும் இருக்கும் அரிய காட்சி

நோய்களை தீர்க்கும் கஞ்சிப் பிரசாதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேளிமலை குமாரசாமி கோவில். பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில், கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோவில் ஆகும். முருகனுக்கும், வள்ளி குறத்திக்கும் காதல் வேள்வி நடந்த மலை என்பதால் வேளிமலை என்றும், திருமண பருவமான குமார பருவத்தில் முருகபெருமான் இங்கு குடிகொண்டதால் குமாரகோவில் என்றும் இத்தலத்துக்கு பெயர் வந்தது.

வள்ளிதேவி நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் தோன்றினார் என்றும், நம்பிராஜன் என்ற வேடர் தலைவரால் வளர்க்கப்பட்ட அவர் தினை புனங்காக்க வேளி மலைக்கு வந்ததாகவும், இங்கு வள்ளியை சந்தித்த முருகன் அவர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. வனப்பிரதேசமான வேளி மலையில் தினைப்பயிருக்கு காவல் காத்த குறத்தி இன பெண்ணான வள்ளிதேவியின் அழகில் மயங்கிய முருகப் பெருமான் திருமணம் செய்வதற்காக வள்ளியை காதலித்ததாகவும், முதலில் வள்ளி சம்மதிக்காததால் கிழவன் வேடத்தில் வந்து காதல் கதைகள் கூறி வசப்படுத்தியதாகவும் செவிவழி கதைகள் கூறுகின்றன.

வள்ளிதேவி திருமணத்துக்கு சம்மதித்த பிறகும் பெற்றோரும், சகோதரர்களும் சம்மதிக்காமல் போனதால் வள்ளிதேவியை மலையில் இருந்து முருகபெருமான் அழைத்து வந்த போது வள்ளி தேவியின் சகோதரர்கள் சண்டை போட்டதாகவும், இறுதியில் முருகபெருமானிடம் தோல்வி கண்டு அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

இதற்கு சான்றுகளாக வேளிமலையில் வள்ளிகுகை, கல்யாண மண்டபம், வள்ளிசுனை, வள்ளிகாவு போன்றவை இன்றும் காட்சி தருகின்றன. இவை திருக்கல்யாண நிகழ்ச்சியில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள், மேற்கண்ட சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. மலையில் இருந்து வள்ளிதேவியோடு முருகபெருமான் வரும் போது உறவினர்கள் சண்டை போடும் சம்பவத்தை இப்போதும் குறவர் இன மக்கள், குறவர் படுகளம் என்ற நிகழ்ச்சி நடத்தி நினைவுபடுத்தி வருகின்றனர்.

இது போல், முருகபெருமானுக்கு வள்ளிதேவியின் பெற்றோர் சீதனமாக வள்ளி சோலை, வட்டச்சோலை, கிழவன்சோலை, வள்ளிக் காவு நந்தவனம், வாணியங் கோட்டுகோணம் போன்ற இடங்களை கொடுத்ததாக திருக்கல்யாண விழாவின் போது தேவசம் போர்டு அதிகாரிகளால் சொத்துப் பட்டியல் பொதுமக்கள், பக்தர்கள் முன்னிலையில் வாசித்து காட்டும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

கோவில் கருவறையில் மூலவர் முருகப் பெருமான் சுமார் 8 அடி 8 அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இடக் கரம் இயல்பான நிலையில் பாதத்தை நோக்கியிருக்க, வலக் கரம் வரத முத்திரையுடன் திகழ்கிறது. இவர் பெரும்பாலான நாட்களில் சந்தனக் காப்புடன் தரிசனம் தருகிறார். முருகப் பெருமானுக்கு இடப் புறம் சுமார் 6 அடி 2 அங்குல உயரத்தில் வள்ளிதேவி எழுந்தருளி இருக்கிறார். இங்கு, முருகப் பெருமானின் அருகில் வள்ளிதேவியை மட்டுமே தரிசிக்க முடியும். அவர்களுடன் தெய்வயானை எழுந்தருளவில்லை. இதுவே இக் கோவிலின் தனிச்சிறப்பாகும்.

இக்கோவிலில் வெள்ளிக் கிழமை தோறும் நடக்கும் கஞ்சிதர்மம் பிரசித்திப் பெற்றது. அப்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் கஞ்சியானது பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றது.

Read More
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் காட்சி தரும் காளி அம்மன்

திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவார தலம் திருப்பாச்சூர். இறைவன் திருநாமம் வாசீஸ்வரர். இறைவியின் திருநாமம் தங்காதலி. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

இக்கோவிலில் காளி அம்மன் தனி சன்னதியில் தன் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காட்சி தருகிறாள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

ஒருமுறை குரும்பன் என்ற உள்ளூர் தலைவன், சோழ மன்னன் கரிகாலனுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தத் தவறினான். குரும்பன், காளி தேவியின் தீவிர பக்தன். நிலுவைத் தொகையை மீட்பதற்காக மன்னன் தன் பகுதிக்கு படையெடுத்த போது, அரசனையும் அவனது படையையும் தோற்கடிக்க உதவும்படி காளியிடம், குரும்பன் வேண்டிக் கொண்டான். சோழ மன்னன் கரிகாலன், சிவபக்தனாக இருந்ததால் சிவபெருமானிடம் உதவிக்காக வேண்டினான். சிவபெருமான் காளியை கட்டுப்படுத்தவும், கட்டவும் நந்தியை அனுப்பினார். நந்தி காளியை தோற்கடித்து அவளை தங்கச் சங்கிலியால் கட்டினார். இந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் வகையில், இந்தக் கோவில் காளி தேவியின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளன. இவள் சொர்ண காளி என்று அழைக்கப்படுகிறாள்.

Read More
திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்

திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்

தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பாஷாண லிங்கேஸ்வரர்

பாஷாண லிங்கத்தை குளிர்விக்கும் நீர் பிரசாதமாக வழங்கப்படும் தலம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில்,ஆற்காட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். இந்த பாஷாண லிங்கம் 650 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலில் ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் உருவாக்கப்பட்ட பாஷாண லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை குளிர்விக்கும் நீரானது, தீராத நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகின்றது

விஜயநகர பேரரசின் கீழ், குறுநில மன்னர்களான திம்மிரெட்டி, பொம்மி ரெட்டி ஆகியோர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர்.இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து வந்தார்.

ஒரு சமயம் அந்தப் பகுதியில் தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் அனைவரும் அவதிப்பட்டனர்.இரக்க குணமும், இறைப் பற்றும் மிக்க சதாசிவராயர், இதனைக் கண்டு வேதனை அடைந்தார். நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம்,மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி பணித்தார். மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார்.

சந்திர பாஷாணம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும்,மருத்துவகுணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 7 அங்குலம் தான்.

கி.பி.1379–ம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், திமிரி நகரின் கோட்டையில் இந்த பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் இந்த பிரதிஷ்டை விழா நடந்தது. ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது.திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகையும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன் மீது எப்போதும் நீர் விழுமாறு செய்யப்பட்டது. அந்த நீரே மருத்துவ குணம் கொண்டது. அதுவே இங்கு பிரசாதமாகவும் மருந்தாகவும் வழங்கப்படுகிறது. இந்த நீரானது தீராத நோய்களையும் தீர்க்கும் தன்மை கொண்டது.

மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த லிங்கத்தின் அபிஷேக தீர்த்த பிரசாதம் இதய நோய், சிறுநீரக நோய், மன நோய், சரும நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை

Read More