இரங்காபுரம் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில்

பைரவர் தலை மீது வைக்கப் படும் எலுமிச்சைபழம் தானாக சுற்றும் அதிசயம்

வேலூர் மாவட்டம் இரங்காபுரம் மலைமேல் அமைந்துள்ளது அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில். சித்தர்கள் வழிபடும்  கோவிலாக இது விளங்குகின்றது.

இந்தக் கோவிலில் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் தனி சன்னதியில் நின்று காட்சி அளிக்கிறார். இந்த அஷ்டபுஜ காலகண்ட பைரவர், வழக்கமான பைரவர் போல் அல்லாமல், எட்டு கைகளுடன் (அஷ்டபுஜம்) பிரம்மாண்டமாய் தனித்து நின்று காட்சி அளிக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்த இந்த  பைரவர், பக்தர்களின் கஷ்டங்களை உடனடியாக தீர்த்து வைக்கும் வல்லமை பெற்றவர்.

இக் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை, மே மாதம் நடைபெறும் விழாவின் போது இவருக்குப் பொங்கல் வைத்து அருள் வாக்கு வாங்குவார்கள். அந்த விழாவின் சிறப்பு அம்சம் பழம் கொடுப்பது ஆகும்.

பைரவருக்கு அபிஷேகம் அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலைமீது பூ வைத்து அதில் ஒரு எலுமிச்சை பழம் வைப்பார்கள். எலுமிச்சை பழத்தை வைத்ததும் ஒரு ஈ பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தில் சில வினாடிகள் அமர்ந்து விட்டுப் பறந்து சென்றுவிடும்.

அது பறந்து சென்றதும் பைரவர் தலையில் வைக்கப்பட்ட எலுமிச்சைபழம்  தானாக சுற்றிக் கீழே விழும். அதை ஒருவர் கீழே அமர்ந்து பிடித்துக் கொள்வார்.

அதன் பிறகு பலரும் இந்த பைரவரிடம் அருள்வாக்கு கேட்டுச் செல்கின்றனர். பைரவர் உத்தரவுடன் சொல்லப்படும் இந்த அருள்வாக்கால் பல பக்தர்களின் மனக்குறைகள் நீங்கி வருகின்றது.

இந்த பைரவரை மனதார வழிபட்டால் தடைகள் அகலும், பயம் நீங்கும், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.

ஒவ்வொரு வருடமும் இந்த அதிசய நிகழ்வு இக்கோவிலில் நடக்கிறது. இந்த அதிசயத்தை காண ஏராளமான பக்தர்கள் இந்த மலைக்கோவிலுக்கு, வருடந்தோறும் எலுமிச்சை பழம் கொடுக்கும் விழாவிற்கு வருகிறார்கள். சித்தர்கள் அருவமாக வந்து வழிபடும் புனித தலமாக இந்த மலைக்கோயில் கருதப்படுகிறது.

கால பைரவர் வழிபாட்டின் பலன்கள்

கால பைரவர் சனியின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்துபவராகவும் போற்றப்படுகிறார். தேய்பிறை அஷ்டமி தினத்தில் இவரை வழிபடுவது வாழ்வில் ஏற்படும் தடைகளையும், பயத்தையும் போக்கக்கூடியது.

 
Previous
Previous

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவில்

Next
Next

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில்