திருசோபுரம் சோபுரநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்
மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி
கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.
இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
      
      திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக, அவர்களிடம் வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள். 
உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜ கோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ  வைக்கச் சொன்னான். அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான். 
முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.
      
      தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.
      
      காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.
ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், நடராஜப் பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்கு வீதியுலா வருவது வழக்கம். ஆனால்,ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக, ஒரு பரிசலில் எழுந்தருளியும், அவருக்கு முன்னால் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் இசை முழங்கிக் கொண்டு செல்ல, காவிரி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.
இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் கோவில்
ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கயம்பாளையம் அமைந்துள்ளது. இங்குதான் காவிரியின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். இக்கோவில் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் நட்டாற்றீஸ்வரரும், கீழ் தளத்தில் நல்லநாயகி அம்பாளும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை, சிவபெருமான்தென்புலம் அனுப்பினார். அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு, சிவபெருமான் அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார். ஒரு சமயம், அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியாக உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய, பாவம் போகும் என அகத்தியர் உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து காவிரியில் நடு இடத்தைத் தேர்ந்தெடுத்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து அகத்தியர் பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சி இறைவனுக்குப் படைத்தார். அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால், அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
பிராத்தனை
நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடல், வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.
      
      நத்தம் வாலீஸ்வரர் கோவில்
பிரதோஷ நாயகர் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
பிரதோஷ காலங்களில் கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரம் உடைய இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போன்ற தோற்றமுடையவர்.பன்னிரு கரங்களில் மான்,மழுவும், முன்னிரு கைகளில் அபய,வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார்.தலையில் ஜடாமகுடம் விளங்க,அதில் வெண்பறை,கங்கை,ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி,இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக் கோவிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர்.
இந்தத் தலத்தில் பிரதோஷ நாயகர் அம்பிகையை தனது இடது கையால் அணைத்திற்கும் தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும்.இதற்கு பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்த முற்பட்ட போது, பார்வதி தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில், சிவபெருமான் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் சிவபெருமான் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது.இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர்.
காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு, பிரதோஷ நாயகருடன் வலம் வரும் திருமண தடை நீக்கும் வழிபாடு
உமா ஆலிங்கனராய் உள்ள இந்தத் தலத்து பிரதோஷ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில் வழிபட்டு பிரதோஷ சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்கு சுண்டல் நிவேதனம் செய்து முல்லை, நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்து, திருமணம் ஆகவேண்டிய பெண்கள் கையில் காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு சுவாமியுடன் மூன்று வலம் வருகையில் திருமணம் கைகூடும். இம்மாதிரி 5 பிரதோஷங்கள் செய்ய வேண்டும். திருமணமாகாத ஆண்களின் தாய், இம்மாதிரி பிரார்த்தனை செய்து வலம் வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடும்.
      
      குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்
ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர தரிசிக்கக்கூடிய அபூர்வ காட்சி
துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருக்கும் அரிய தோற்றம்
புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில். மலை குன்றின் அடிப் பகுதி, மேல் பகுதி என இந்த மலையை சுற்றி மட்டும் மொத்தம் 4 கோவில்கள் உள்ளன. இங்கு பாறைகளிலே செதுக்கப்பட்ட சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
பொதுவாக எல்லா சிவன் கோயில்களும் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் இறைவன் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் அமைந்திருக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம், அவர்கள் நீண்ட வரிசையில் அமைந்திருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் இல்லை. இதற்கு பதிலாக சுற்றுப்புற பிரகாரத்தில் நின்று மலையைப் பார்த்தால் 63 நாயன்மார்களின் வடிவங்களும் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நடுவில் ரிஷப வாகனத்தின் மேல் சிவபெருமான், பார்வதி அமர்ந்து இருக்கிறார்கள். சிவபெருமான் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் வடிவமைத்திருப்பது, நினைந்து, நினைந்து வியக்கும் வண்ணம் ஓர் அற்புத இக்காட்சியாக அமைந்துள்ளது. இப்படி ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும், ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோவிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம் ஆகும்.
இக்கோவில் வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்தத் துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் உள்ளனர். துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருப்பது போன்ற அமைப்பு, வேறு எங்குமே கிடையாது. இங்கு உள்ள துவாரபாலகர் சிலைகள் மட்டுமே சிரித்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற துவாரபாலகர்களின் சிற்பங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர் சிலைகள், குகைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.
      
      சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
சங்கு, சிப்பி, கிளிஞ்சல்களாலான அபூர்வ வெள்ளை நிற நந்தி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரத்தில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோவில். இக்கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஒன்றின் மேல் ஒன்றாக, சிவலிங்க வடிவில் தாணுமாலயன் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்கள்.
இக்கோவில் கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் மிகப்பெரிய வெள்ளை நிற நந்தியை நாம் காணலாம்.இந்த நந்தியானது 13 அடி உயரமும் 21 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டது. இந்த நந்தி வெள்ளை நிற சுண்ணாம்பு, சங்கு, சிப்பி, கிளிஞ்சல்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்டதாகும். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நந்திகளில், இந்த நந்தியும் ஒன்றாகும்
      
      திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
பைரவர், காலபைரவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் அபூர்வ காட்சி
விஷக்கடிக்கு நிவாரணம் அளிக்கும் விபூதி பிரசாதம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால் அமைந்துள்ள ஒரே தலம் திருமங்கலம். நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதத்தைக் கொண்டு இங்குள்ள இறைவன் சாமவேதீசுவரர் என்றழைப்பது தனிச்சிறப்புடையது. இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
பொதுவாக சிவன் கோவில்களில் பைரவர் அல்லது காலபைரவர் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால், இக்கோவிலில், கிழக்கு பிரகாரத்தில் பைரவரும், காலபைரவரும் சேர்ந்து எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். காலபைரவர் தனது திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். இந்த இரட்டை பைரவர்களுக்கு அர்த்த ஜாம பூஜை செய்த பிறகு தரப்படும் விபூதி பிரசாதமானது, விஷக்கடியால் ஏற்படும் துன்பங்களை நிவர்த்தி செய்கிறது. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
      
      இராஜபதி கைலாசநாதர் கோவில்
லிங்க வடிவில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள்
தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் தலம்
திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூர் என்ற ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இராஜபதி கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலை வழிபடுவது கும்பகோணம் அருகில் உள்ள, கேதுத் தலமான கீழப்பெரும்பள்ளம் திருக்கோயிலை வழிபடுவதற்கு சமமாகும் என கூறப்படுகிறது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இத்தலம், தென் காளஹஸ்தி என்று போற்றப்படுகின்றது. இத்தலத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது.
அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டபோது அவர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று தனது சீடருக்கு உபாயம் சொன்னார். உரோமச முனிவர் 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அந்த மலர்களை தொடர்ந்து சென்றார். அந்த தாமரை மலர்கள் ஒதுங்கிய தலங்களில் வழிபட்டு, உரோமச முனிவர் முக்தி அடைந்தார். அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தென்திருப்பேரை 8. ராஜாதிபதி 9. சேர்ந்தபூமங்கலம் ஆகிய கோவில்கள், நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இப்படி நவகிரகங்கள் லிங்க வடிவில் எழுந்தருளி இருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இந்த லிங்க வடிவில் இருக்கும் நவகிரகங்களுக்கு பக்தர்கள் தம் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
      
      பரிதிநியமம் பரிதியப்பர் கோவில்
சூரிய பகவான் சிவபெருமானை கை கூப்பி வணங்கி நிற்கும் அரிய காட்சி
சிவன் கோவிலில் மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருகருகே இருக்கும் அபூர்வ காட்சி
தஞ்சாவூரில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் பரிதிநியமம். இறைவன் திருநாமம் பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.
சூரிய பகவான் தனது தோஷம் நீங்க வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. எனவே இத்தலம் பித்ரு தோஷ பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் சூரிய பகவான் மூலவர் பரிதியப்பரை கை கூப்பி வணங்கும் நிலையில் எழுந்தருளி உள்ளார். இது ஒரு அரிய காட்சியாகும். இப்படி இறைவன் முன்பு, சூரிய பகவான் வணங்கி நிற்கும் நிலையை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.
மூலவர் பரிதியப்பரின் கருவறை பின்புற கோஷ்டத்தில், மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். இப்படி மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருகருகே சிவன் கோவிலில் எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வ காட்சியாகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவான் பித்ருகாரகன் என்று அறியப்படுகிறார். ஜாதக ரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம் என சொல்லப்படுகிறது. காத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , சூரிய திசை நடப்பவர்கள் , சிம்ம லக்னம் , சிம்ம ராசியில் பிறந்தவர்கள் , சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் முதலியோர் தமிழ் மாத வளர்பிறை முதல் ஞாயிற்றுக்கிழமை இத்தலம் வந்து பரிதியப்பரையும், சூரியனையும் வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
நோயினால் நீண்ட நாள் அவதிப்படுபவர்கள், தீராத நோயினால் அவதியுறுபவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால், நலம் அடைவார்கள்.
      
      பிரம்மதேசம் கைலாசநாதர். கோவில்
நம் முன்னோர்களின் கட்டிடக்கலைத்திறனுக்கும், சிற்பத்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலையில் உள்ள அம்பாசமுத்திரம் என்ற ஊரிலிருந்து, 4 கி.மீ. தூரத்தில் உள்ள தலம் பிரம்மதேசம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. ராஜ ராஜ சோழனால் இக்கோவில் கட்டப்பட்டு, பின்னர் விஜயநகர பேரரசர்களால் விரிவாகப்பட்டது. பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலுக்கு சென்று வந்தால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முற்காலத்தில் இந்த கோவில் மிகப் பெரிய கோட்டையாக இருந்துள்ளது. ஆக எதிரிகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பிக்கும் விதமாக இக் கோவிலின் கட்டுமானங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் இராஜ கோபுர கதவுகள் மரத்தால் செய்யப்பட்டது ஆகும். இதின் சிறப்பம்சம் என்ன என்றால், அக்காலத்தில் அந்நியர்கள் படையெடுப்பின் போது, அந்த கதவுகளை யானைகளை கொண்டு முட்டச் செய்து எதிரிகள் திறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கதவுகளில் கூர்மையாண ஆணிகள் சிறிய இடைவெளியில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை யானையை கொண்டு கதவுகளில் மோதச் செய்தால் அந்த ஆணிகள் வெளியேறி முட்டும் யானைகளின் மீது குத்தி காயப்படுத்தும் படி இக்கதவுகளை அமைத்து இருந்தார்கள்.
கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவிலான வட்டவடிவக் கல்லின் மீது நின்று பார்க்கும்போது, கோவிலின் மூன்று கோபுரங்களும் தெரிவது அக்கால கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும், எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது, கட்டிடக் கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது.
இக்கோவிலுக்குள் நுழைந்ததும் அழகிய கூரை போன்ற அமைப்புடைய முகப்பு மண்டபம் காணப்படுகிறது. முதன்முதலாகப் இந்தக் கூரையைப் பார்ப்பவர்களுக்கு ஒரு கணம், இது மரக்கூரையோ என்ற ஐயம் கண்டிப்பாக எழும். ஏனெனில், மரத்தில் செய்யப்பட்டது போல, அத்தனை நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு கல்லால் ஆனதாக இந்தக் கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இக் கோவிலில் உள்ள திருவாதிரை மண்டபத்தில் கல்லில் செதுக்கிய யாழிகளே தூண்களாக உள்ளன. இந்த மண்டபத்தின் முன்புறம் மேலே குரங்குகள் தாவிச் செல்வதை போன்ற சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண்களில் இராமன், வாலியை மறைந்திருந்து தாக்கும் இராமயண சிற்பம் உள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இராமன் ஒரு தூணிலும், போர் புரியும் வாலி - சுக்ரீவன் மற்றொரு தூணிலும் இருக்க, ராமன் இருக்கும் தூண் அருகே நின்றால் வாலி -சுக்ரீவன் தெரியும் படியும், வாலி - சுக்ரீவன் இருக்கும் தூண் அருகே நின்றால் ராமர் தெரியாத படியும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள நந்தி ஒரே கல்லில் மிகவும் பிரம்மாண்டமாகவும், கலைநயத்துடனும் செதுக்கப்பட்டது என்ற சிறப்பை கொண்டது. சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்ததாக இந்த நந்தி காட்சி அளிக்கின்றது. நந்தி உள்ள முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில், ஒரே கல்லால் ஆன கல் சங்கிலி, அதன் நுனியில் ஒரு மணியும், அதனுடன் மணியின் நாக்கும் காணப்படுகிறது. இது, அக்கால சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.
      
      திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்
திருவண்ணாமலை மகாதீபத்தின் சிறப்புகள்
பஞ்சபூதங்களுக்குரிய தலங்களில் நெருப்புக்குரியது திருவண்ணாமலை. இத்தலத்தை நினைத்தாலே முக்தி தரும். இங்கு சிவபெருமானே மலையாக அமர்ந்திருப்பதாக ஐதீகம். அதனால் தான் மலையை கிரிவலமாக வந்து வழிபடுவது, சிவபெருமானை வலம் வந்து வணங்குவதற்கு இணையாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலையின் சிறப்புகளுக்கு முதன்மையானதாக இருப்பது திருக்கார்த்திகை அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் தான். இது போல் மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த கோவிலிலும் கிடையாது. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும். இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது..
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால் அந்த மந்திரத்தை 3 கோடி முறை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும், பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கிய படி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
தீபத் திருநாளில் 5 முறை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,'தீப மங்கள ஜோதி நமோ !நம' என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அப்போது நாமும் கிரிவலம் வருவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.
கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.
கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
      
      பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்
12 ராசிகள், நந்தி பகவான் அமைந்த பீடத்தின் மேல் எழுந்தருளிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் இருக்கும் சிறப்பு
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசவர்த்தினி.
இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்புக்குரியவர். இவருக்கு ராசி மண்டல குருபகவான் என்ற பெயரும் உண்டு. இவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் 12 ராசி சின்னங்களும், அதற்கு மேல் நந்தி பகவானும் இருக்க, அந்த நந்தி பகவானின் மேல் தனது இடது கையை வைத்த வண்ணம் தட்சிணாமூர்த்தி காட்சி அளிக்கிறார். வழக்கமாக தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுடன் இருப்பார். ஆனால் அவர்களுக்கு பதிலாக இங்கு, அகத்திய முனிவரும், கோரக்க சித்தரும் உடன் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இருக்கும் கோலம் வேறு எங்கும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்
இக்கோவிலில் தினமும் குரு ஹோரையின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோவில் ஆலங்குடி குரு பரிகார தலத்துக்குச் சமமானது. இந்த ராசி மண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் வழிபட சகல விதமான நன்மைகள் கிடைக்கும். இவரை வணங்கினால் கிரகப்பெயர்ச்சிகள் மூலம் ஏற்ப்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம்.
      
      மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவில்
சிவப்பு நிற சேலை உடுத்தும் அபூர்வ சிவலிங்கம்
மயிலாடுதுறையில் அமைந்துள்ள தேவாரத்தலம் மாயூரநாத சுவாமி கோவில். அம்பிகையின் திருநாமம் அபயாம்பிகை. அம்பிகை இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று.
அம்பாள் அபயாம்பிகை சன்னதிக்கு வலப்புறத்தில் அனவித்யாம்பிகை' என்ற பெண் பெயர் கொண்ட ஒரு சிவலிங்கம் இருக்கிறது. இந்த சிவலிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில் திருவையாறில் நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தீவிர சிவ பக்தர்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக, காவிரிக்கரையிலுள்ள, மயிலாடுதுறை மாயூரநாத சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஆசை. அங்கே ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா ஸ்நானம் விழாவில் கலந்து கொண்டு காவிரியில் நீராட வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஆனால் அவர்கள் வருவதற்குள் ஐப்பசி 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே வருத்தத்துடன் மயிலாடுதுறையில், மாயூரநாத சுவாமியை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவபெருமான், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார் அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது தம்பதியர்களுக்காக சிவபெருமான் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை ‘முடவன் முழுக்கு' என்கின்றனர்.
அத்தம்பதியர் இக்கோவிலில் சிவபெருமானுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, நாதசர்மா என்ற அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் ‘அனவித்யாம்பிகை’ என்ற பெயரில் இருக்கிறது. பொதுவாக, சிவலிங்கத்துக்கு வேட்டி அணிவிப்பதே வழக்கம். ஆனால், அனவித்யாம்பிகை லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். இது ஒரு வித்தியாசமான நடைமுறையாகும். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள்.
      
      திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்
சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம்
மகாலட்சுமியே குபேரனிடம் திருமாங்கல்யத்திற்கு பொன் கொடுத்த தலம்
மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம். இறைவன் திருநாமம் பூலோகநாதர்.
இறைவியின் திருநாமம் பூலோகநாயகி. இறைவன், இறைவிக்கு இப்படிப்பட்ட திருநாமம் அமைந்த தலம் வேறு எங்கும் இல்லை. பூலோகவாசிகளுக்கு, சிவபெருமான் தனது
திரு மணக் கோலத்தை தரிசிக்க அருள் புரிந்த தலம். சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம் இது. இதனால் தான் இந்த ஊர் திருமாங்கல்யம் என்று முதலில் அழைக்கப்பட்டு வந்து பின்னர் திருமங்கலம் என்று மருவியது.
திருமணஞ்சேரியில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது அதில் கலந்து கொண்டு தரிசிக்க தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான் குழுமி இருந்தனர். இந்த தருணத்தில் பூலோகவாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காண முடியாது வருந்துகின்றனரே என்ற எண்ணம் அம்மையப்பன் மனதில் தோன்றியது. உடனே, ஸப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுவது போல், ஏழு அடி எடுத்து வைத்தனர். அம்மையும், அப்பனும் எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு 'திருமாங்கல்யம்' செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர்.
இத்திருமணத்திற்கு மகாலட்சுமியே குபேரனிடம் பொன் எடுத்துக் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. இதற்கு சான்றாக குபேரன் திருமாங்கல்யத்தை தனது தலையில் வைத்து சுமந்து செல்லும் சிற்பம் ஒன்றும் இந்த ஆலயத்தில் உள்ளது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும். இந்த ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சன்னிதியில் வைத்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது சிறப்பு.
இவ்வூரின் அருகாமையில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.
      
      கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில்
கையில் கமண்டலம் ஏந்திருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
தேனி மாவட்டம், கம்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில். இங்கு சிவன், பெருமாள் கோவில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடி மரத்துடன் இருப்பது தனிச்சிறப்பாகும். தாயார் திருநாமம் அலமேலு மங்கை. அம்பிகையின் திருநாமம் காசி விசாலாட்சி. பல நூறு ஆண்டுகள் பழமையானது இக்கோவில்.
காசி விஸ்வநாதர் சன்னதியின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். இவர் இடது கையில் கமண்டலம் ஏந்தி இருப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். யோக பட்டை அணிந்திருக்கும் இவரது தலைக்கு மேலே கல்லால மரம், காலுக்கு கீழ் முயலகன் மற்றும் சீடர்கள் கிடையாது. பீடத்தில் நாகம் மட்டும் இருக்கிறது. தனது பக்தர்களின் சாப விமோசனத்திற்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் இவர் கையில் கமண்டல தீர்த்தத்துடன் காட்சி அளிக்கிறார்.
குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவருக்கு வன்னி இலையால் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
      
      ஒன்பத்து வேலி வன்மீகநாதர் கோவில்
பிறந்த நாளில் வந்து வழிபட வேண்டிய கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்து வேலி கிராமத்தில், குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, வன்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சோமகலா அம்பாள். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கம் என்பதால் வன்மீகநாதர் என பெயர் வந்தது. வன்மீகம் என்பதற்கு புற்று என்று பொருள். சோமகலா அம்பாள், சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள் வழங்கி வருகிறார்.
ஒன்பத்து வேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுநர்களும் கணிதமேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்து வேலியாகும்.
பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில், ஒன்பத்து வேலி வன்மீக நாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்து வேலி வன்மீக நாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீக நாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் .ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும் .9 என்பது செவ்வாய்க்குரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை , செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீக நாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்.
எண்கணித ஜோதிடர்களும் நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம் வன்மீக நாதர் சுவாமி கோவில் ஆகும்.
இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் தங்கள் பிறந்த நாளில் வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
      
      சிவசைலம் சிவசைலநாதர் கோவில்
எழுந்து நிற்க தயாராகும் நிலையில் காட்சி தரும் நந்தி
முதுகில் தழும்புள்ள, உயிரோட்டமுள்ள நந்தி
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கி.மீ தொலைவில் அமையப் பெற்றுள்ள தேவார வைப்புத் தலம் சிவசைலம் சிவசைலநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பரமகல்யாணி. இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இருக்கும் நந்தி மிகவும் அழகான, உயிரோட்டமுள்ள ஒரு சிலையாகும். இந்த நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது, அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
ஒரு சமயம், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக, சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி இந்திரன், தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து, நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான். சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும், சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி, சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான். சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று எழ, மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த, நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியதாம். இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருப்பதையும் நாம் காணலாம். உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும், இந்த நந்தியின் மீது நாம் பார்க்க முடியும். இந்த நந்தி தற்போதும் எழுந்திருக்க தயாராகும் கோலத்திலேயே அற்புதமாக காட்சியளிப்பது சிறப்பம்சம் ஆகும். மேலும் இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும், அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும், அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன. இந்த நந்தி சிற்பத்தின் கலை அம்சம் நம்மை நிச்சயம் பிரம்மிப்பில் ஆழ்த்தும்.
இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால், அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் மணிவிழாக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
      
      திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்
பக்தர்களின் பசியைப் போக்கிய பரமன்
சிவபெருமான், காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலம்
தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருசோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவனுக்கு சோற்றுத்துறை நாதர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திருநாமம் அன்னபூரணி, ஒப்பிலா அம்மை.
‘சோறு' என்றால் 'முக்தி' என்ற பொருளும் உண்டு. பசிப்பிணி போக்கியதால் இத்தலத்து மூலவர் 'ஓதனவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். 'ஓதனம்' என்றால் 'அன்னம்' என்று பொருள். இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப் பற்றிய பிறவிப் பிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. அம்பிகையை மனதார வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில், இத்தலம் மூன்றாவது தலமாகும்.
ஒரு முறை திருச்சோற்றுத்துறை பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், பஞ்சத்தை தீர்த்து உணவு வழங்குமாறு முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் 'அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். அருளாளன், இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் வழங்கிய சிவபெருமானுக்கு தொலையாச்செல்வர் என்ற பெயரும் உண்டு. இத்தலம் காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும்.
இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும், அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது. சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும் அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.
      
      இரும்பை மாகாளேசுவரர் கோவில்
நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தின் மேல், நடுவில் இருக்கும் சூரியனைச் சுற்றி தனியாக எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் ஒரு சில தலங்களில் தான் தங்கள் மனைவியுடனும் அல்லது வாகனத்துடனும் காட்சி அளிப்பார்கள். ஆனால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியுடன் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.