குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்
ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர தரிசிக்கக்கூடிய அபூர்வ காட்சி
துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருக்கும் அரிய தோற்றம்
புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில். மலை குன்றின் அடிப் பகுதி, மேல் பகுதி என இந்த மலையை சுற்றி மட்டும் மொத்தம் 4 கோவில்கள் உள்ளன. இங்கு பாறைகளிலே செதுக்கப்பட்ட சிற்பங்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
பொதுவாக எல்லா சிவன் கோயில்களும் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் இறைவன் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் அமைந்திருக்கும். அதுவும் ஒரே நேரத்தில் காண முடியாத வண்ணம், அவர்கள் நீண்ட வரிசையில் அமைந்திருப்பார்கள். ஆனால் இந்த கோவிலில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் கருவறை சுற்றுப்பிரகாரத்தில் இல்லை.
அதற்கு பதிலாக சுற்றுப்புற பிரகாரத்தில் நின்று மலையைப் பார்த்தால் 63 நாயன்மார்களின் வடிவங்களும் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு நடுவில் ரிஷப வாகனத்தின் மேல் சிவபெருமான், பார்வதி அமர்ந்து இருக்கிறார்கள். சிவபெருமான் பார்வதியையும், 63 நாயன்மார்களையும் ஒருசேர ஒரே நேரத்தில் பார்க்கும் வகையில் வடிவமைத்திருப்பது, நினைந்து, நினைந்து வியக்கும் வண்ணம் ஓர் அற்புதக் காட்சியாக அமைந்துள்ளது.
இப்படி ஒரே பார்வையில் அத்தனை நாயன்மார்களையும், ரிஷபத்தில் அமர்ந்த சிவன் பார்வதி என அனைவரையும் பார்க்க முடிவது தமிழகத்தில் இந்தக் கோவிலில் மட்டும்தான். இது ஒரு சிற்ப அதிசயம் ஆகும்.
இக்கோவில் வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்தத் துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் உள்ளனர். துவார பாலகர்கள் சிரித்த வண்ணம் இருப்பது போன்ற அமைப்பு, இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள துவாரபாலகர் சிலைகள், குகைகளை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குடுமியான்மலை