திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்
சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம்
மகாலட்சுமியே குபேரனிடம் திருமாங்கல்யத்திற்கு பொன் கொடுத்த தலம்
மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம். இறைவன் திருநாமம் பூலோகநாதர். இறைவியின் திருநாமம் பூலோகநாயகி. இறைவன், இறைவிக்கு இப்படிப்பட்ட திருநாமம் அமைந்த தலம் வேறு எங்கும் இல்லை.
பூலோகவாசிகளுக்கு, சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை தரிசிக்க அருள் புரிந்த தலம். சிவபெருமான் பார்வதி தேவி திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்த தலம் இது. இதனால் தான் இந்த ஊர் திருமாங்கல்யம் என்று முதலில் அழைக்கப்பட்டு வந்து, பின்னர் திருமங்கலம் என்று மருவியது. இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
திருமணஞ்சேரியில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த போது அதில் கலந்து கொண்டு தரிசிக்க தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான் குழுமி இருந்தனர். இந்த தருணத்தில் பூலோகவாசிகளான சாதாரண மக்கள் நம் திருமணத்தைக் காண முடியாது வருந்துகின்றனரே என்ற எண்ணம் அம்மையப்பன் மனதில் தோன்றியது.
உடனே, ஸப்தபதி என்ற சடங்கை நிறைவேற்றுவது போல், ஏழு அடி எடுத்து வைத்தனர். அம்மையும், அப்பனும் எந்தத் தலத்தில் தங்களது திருமணத்திற்கு 'திருமாங்கல்யம்' செய்யப்பட்டதோ, அந்தத் தலத்திற்கு வந்து நின்று காட்சி தந்தனர்.
இத்திருமணத்திற்கு மகாலட்சுமியே குபேரனிடம் பொன் எடுத்துக் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. இதற்கு சான்றாக குபேரன் திருமாங்கல்யத்தை தனது தலையில் வைத்து சுமந்து செல்லும் சிற்பம் ஒன்றும் இந்த ஆலயத்தில் உள்ளது. எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும்.
ஈசனும், அம்பாளும் மக்களுக்கு அருள்பாலிக்க இங்கு வந்த அதே தருணத்தில், வசிஷ்டர்- அருந்ததி முதலானோரும் இங்கு வந்தனர். அவர்கள் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்ய தலைப்பட்டனர். அதனை அவர்கள் செவ்வனே நடத்தி பூர்த்தி செய்யும் வேளையில், அந்த வேள்வித் தீயில் இருந்து, சிவபெருமான் ‘காலசம்ஹார மூர்த்தி’யாக காட்சி தந்தார். அதுவும் எமனை காலால் உதைத்து, சூலத்தால் குத்துவதற்கு எத்தனித்தபடியும், மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவியிருக்கும் நிலையிலும் அந்தக் காட்சி இருந்தது.
இந்த ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சன்னிதியில் வைத்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்வது சிறப்பு.
இவ்வூரின் அருகாமையில் புகழ் பெற்ற திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன.
மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம்