ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்

ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்

சனி பகவானின் கால் ஊனம் சரியான தலம்

உடல் ஊனம், பக்கவாதம், விபத்தால் அங்கங்களின் வலிமை இழப்பு போன்ற குறைபாடுகளை போக்கும் தலம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பிரேமாம்பிகை. அங்குரம் எனக் கூறப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இக்கோவில் இறைவனுக்கு அங்குரேசுவரர் எனப் பெயர் உண்டானது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் கட்டப்பட்டது இந்த ஆலயம்.

அகஸ்தியரால் வழிபடப்பட்ட தலம். சனி பகவான் தனது குறை நீங்கப் பெற்ற தலம் என தலபுராணம் கூறுகிறது. உடல் ஊனம், பக்கவாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களைப் போக்கும் ஒரு சக்திவாய்ந்த பரிகாரத் தலமாக இக்கோவில் விளங்குகின்றது.

இக்தலத்தில் வழிபட்டுதான் சனி பகவானின் கால் ஊனம் சரியானது. இக்கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் விமல லிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமல லிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் கோவிலில், விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

இக்கோவிலில் உள்ள விமல லிங்கம், மிகப் பெரிய அளவில் இருப்பதுடன் ஆலயத்தில் நுழைந்தவுடன் கண்களைக் கவரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

 உடல் சார்ந்த குறைபாடுகள், பக்கவாதம் மற்றும் அங்க வலிமை குறைபாடுகளை நீக்கும் "வெண்ணெய் காப்பு" வழிபாட்டிற்கு இத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் உடல் ஊனத்தையும், மன ஊனத்தையும் விலக்கி அருள்புரிவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு. இக்கோவிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. தென் தமிழகத்தில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடி என்ற இவ்விரு சிவத்தலத்திற்கு எதிரில் மட்டுமேதான் சுடுகாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Read More
பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்

பூந்தோட்டம் அகத்தீஸ்வரர் கோவில்

12 ராசிகள், நந்தி பகவான் அமைந்த பீடத்தின் மேல் எழுந்தருளிருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் இருக்கும் சிறப்பு

திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், திருவாரூரில் இருந்து  21 கி.மீ தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசவர்த்தினி.

 இந்தக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி மிகவும் சிறப்புக்குரியவர். இவருக்கு ராசி மண்டல குருபகவான் என்ற பெயரும் உண்டு. அவர் தெற்கு முகம் நோக்கி கும்ப ராசியைப் பீடமாகக் கொண்டு வீற்றிருக்கிறார். இவர் அமர்ந்திருக்கும் பீடத்தில் 12 ராசி சின்னங்களும், அதற்கு மேல் நந்தி பகவானும் இடம் பெற்றிருக்கிறார்கள். தட்சிணாமூர்த்தி, முழந்தாளிட்ட நிலையில் இருக்கும் நந்தி பகவானின் மேல் தனது இடது கையை வைத்த வண்ணம் காட்சி அளிக்கிறார்.

வழக்கமாக தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுடன் இருப்பார்.  ஆனால் அவர்களுக்கு பதிலாக இங்கு, அகத்திய முனிவரும், கோரக்க சித்தரும் உடன் இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். தட்சிணாமூர்த்திக்கு மேலே விதானத்தில் விநாயகர் எழுந்தருளி இருக்கிறார். இப்படி விநாயகர் தட்சிணாமூர்த்தியின் மேலே எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இருக்கும் கோலம் வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்

இக்கோவிலில் தினமும் குரு ஹோரையின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறும். இக்கோவில் ஆலங்குடி குரு பரிகார தலத்துக்குச் சமமானது. இந்த ராசி மண்டல குருபகவானை பிரதோஷ காலத்தில் வழிபட சகல விதமான நன்மைகள் கிடைக்கும். இவரை வணங்கினால் கிரகப்பெயர்ச்சிகள் மூலம் ஏற்ப்படும் தீமைகளில் இருந்து விடுபடலாம். ஜோதிட ரீதியாக குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

குரு பெயர்ச்சியின் போது, அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரக்காரர்களுக்கும் சிறப்பு ஹோமங்களும், பரிகார பூஜைகளும் இங்கு நடத்தப்படுகின்றன.

Read More