திருவாரூர் தியாகராஜர் கோவில்
எழுந்து நிற்கும் நிலையில் காட்சி தரும் நந்தி
பொதுவாக சிவாலயங்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, சிவபெருமானின் முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில், தியாகராஜப் பெருமானுக்கு முன்பு உள்ள நந்தியோ நின்ற கோலத்தில் உள்ளார், இதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது.
சிவபெருமானின் நண்பரும், தேவாரம் பாடிய மூவர்களில் ஒருவருமான சுந்தரர் திருவாரூரில் வசித்து வந்த பரவை நாச்சியார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்காக அவர் சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தனக்காக தூது செல்ல வேண்டினார். சுந்தரரின் காதலியிடம் துாது சென்றார் சிவபெருமான். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல், திருவாரூர் வீதிகளில் நடந்தே போனார். இதனால் வருத்தமடைந்த நந்தி, இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவபெருமானை நடக்க விடக் கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என்றும் நந்தி முடிவு செய்தார். இதுவே இங்கு நந்தி நின்ற நிலையில் காட்சியப்பதற்கான காரணமாகும்.
பொதுவாக நந்தியின் வடிவமானது கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தில் உலோகத்தினால் நந்தி உருவாக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். மேலும் திருவாரூரைச் சுற்றியுள்ள மற்ற சப்த விடங்கத்தலங்களிலும் நந்தி நிற்கும் நிலையில் இருப்பதும், உலோகத்தினால் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.இவரை தரிசித்தால் தடைகள் அகன்று சுபவிஷயங்கள் நடந்தேறும்.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்
பெண் வடிவ கருடாழ்வார்
திருவாரூரிலிருந்து சுமார் 30 கி,மீ. தொலைவில் உள்ள மன்னார்குடியில் அமைந்துள்ளது ராஜகோபால சுவாமி கோவில். குருவாயூரைப் போலவே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலையும் 'தட்சிண துவாரகை' என்று அழைக்கிறார்கள். இங்கு அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் ஸ்ரீவாசுதேவப் பெருமாள் என்பதாகும். உற்சவரின் திருநாமம் ராஜகோபால சுவாமி. தாயாரின் பெயர், செங்கமலத் தாயார். உற்சவரின் பெயரான ராஜகோபால சுவாமி என்ற பெயரிலேயே ஆலயம் விளங்குகிறது.
பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான். கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ண வர்களின் மாபெரும் நம்பிக்கை. பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர்
கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் கூறுகிறது. கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது. கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. கருடபகவானை நினைத்தாலே விஷ உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் செங்கமலத் தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் காட்சி தருகிறார். இப்படி பெண் வடிவில் காட்சி தரும் கருடாழ்வாரை வேறெங்கும் நாம் தரிசிப்பது அரிது. இந்த பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
பெருமாளின் திருநெற்றியில் தழும்பு அமைந்துள்ள திவ்யதேசம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்யதேசம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவில். இது பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் நீலமேகப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது.
மூலவர் நீலமேகப்பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.
இத்தலத்து உற்சவர் சௌரிராஜப் பெருமாள் என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி’ என்றும், ‘அழகு’ என்றும் பொருள்கள் உண்டு. ஒவ்வொரு பெருமாள் கோவிலுக்கும் தனிச்சிறப்பு இருப்பது போல், இத்தலத்து பெருமாளின் நடை அழகு தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.
உற்சவர் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் ஒரு தழும்பு உள்ளது அதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. ஒருநாள், திருக்கண்ணபுரம் திருக்கோவிலின் அரையர் வந்த போது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோவிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த உற்சவமூர்த்தியைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான் . “டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே” என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டான். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது. அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் வலப்புருவத்துக்கு மேல் ஏற்பட்ட சிறு தழும்பு வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
மணக்கால் அய்யம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் கோவில்
தவம் செய்யும் கோலத்தில் இருக்கும் அம்பிகையின் அபூர்வ காட்சி
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் மணக்கால் அய்யம்பேட்டை. இறைவன் திருநாமம் அபிமுக்தீஸ்வரர். இறைவி அபினாம்பிகை, .முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் 'பெருவேளூர்' எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.
ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,'இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்' என வேண்டினாள்.
கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,'கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,'என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.
கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்
இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்
திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.
கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.
சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்
'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்களின் அரிய தோற்றம்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி.
இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இரண்டாவது அவதாரம் எடுத்து, பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அதனால் இங்கு சனி பகவான் தன்னை வழிபடுபவர்களுக்கு வெறும் நற்பலன்களை மட்டுமே வாரி வழங்குகின்றார். அவரைப் போலவே மற்ற நவக்கிரகங்களும், இத்தலத்தில் தங்களுடைய காரகப் பலன்களை அளிக்காமல் சிவ தியானத்தில் இருக்கின்றன. இந்த காரணத்தினால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் மாறுபட்ட அமைப்பில் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் 'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் காட்சி அளிக்கிறார்கள். இத்தகைய வடிவமைப்பில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பதை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.
நவக்கிரகங்களின் இந்த 'ப' எழுத்து வடிவமைப்பில், சூரியன், சந்திரன், அங்காரகன் ஆகிய மூவரும் பின்புறம் இருக்கிறார்கள். சந்திர பகவானுக்கு வலது புறம் குருபகவான், சனி பகவான், புதன் பகவான் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். அங்காரகனுக்கு இடது புறம் சுக்கிர பகவான், ராகு பகவான், கேது பகவான் ஆகியோர் இருக்கின்றார்கள்.
திருவாரூர் சர்க்கரை விநாயகர் கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழனும், அவரது சந்ததியனரும் வழிபட்ட விநாயகர்
திருவாரூர் கீழ வீதியில் அமைந்துள்ளது சர்க்கரை விநாயகர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த விநாயகர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
தஞ்சையை ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன், இங்குள்ள விநாயகரை வழிபட்ட பிறகு தான் எல்லா காரியத்தையும் தொடங்கியுள்ளார். அவர் குடும்பத்திலும், அவரது வழியினர் குடும்பத்திலும்
குதூகலம் தழைத்தோங்கியது. முற்காலத்தில் இவரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள், இவருக்கு வெல்லம் படைத்து வழிபடலானார்கள். அதனால் இவருக்கு சர்க்கரை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வணங்கிய மன்னனும், அவரது சந்ததியும் வெற்றி அடைந்ததால், பின்னாளில் சந்ததிகளை காக்கும் சர்க்கரை விநாயகர் என்று அழைக்கப்பட்டார். கோவில் மகா மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து, விநாயகப் பெருமானை உற்று நோக்கினால் அவர் நம்மிடம் பேசுவது போன்று தெரியும்.
திருமண தடை நீங்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், நினைத்த காரியம் கை கூடவும் பக்தர்கள் இந்தக் கோவிலில் வேண்டிக் கொள்கின்றனர்.
ருத்ர கங்கை ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் துர்க்கை அம்மன்
காசியில் நீராடிய பலன் அளிக்கும் தலம்
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ளது பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ருத்ரகங்கை என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் பரிமளநாயகி. வேத காலத்தில் சிவன் ருத்ரன் என பெயர் பெற்றிருந்தபோது, ருத்ரனின் கங்கை இங்கு தங்கியதால் இவ்வூருக்கு ருத்ர கங்கை எனப் பெயர். இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. கோச்செங்கட சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. இவ்வூரின் தென்புறம் உள்ள அரசலாற்றில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டால், காசியில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் பின்புறம் முருகப்பெருமானுடன் சிவபெருமானும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் சிற்பம் உள்ளது. இந்த வடிவம் சோமாஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவபெருமானின் தலையில் கங்கையை காணலாம்.
கருவறை கோட்டத்தில் காளியின் ரூபத்தில் துர்க்கை எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக மகிஷன் தலையில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் துர்க்கை அம்மன், இங்கு காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த காளியானவள் தனது கரங்களில் உடுக்கை, பாசாங்குசம், திரிசூலம், கபாலம் ஆகியவற்றை தாங்கி இருக்கின்றாள்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
அமாவாசை தோறும் பெருமாள் சவுரி முடி அணிந்து கொண்டு, தன் நடையழகை காட்டும் திவ்ய தேசம்
நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணபுரம். பெருமாள் திருநாமம் நீலமேகப்பெருமாள். தாயாரின் திருநாமம் கண்ணபுர நாயகி. உற்சவரின் திருநாமம் சவுரிராஜப்பெருமாள். இந்த கோவிலில், உற்சவர் சௌரிராஜப் பெருமாள் தலையில் முடியுடன் காட்சி தருகிறார். சவுரி என்றால் முடி அல்லது அழகு என்று பொருள்.
108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு - திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு -திருமாலிருஞ் சோலை(அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் போற்றப்படுகின்றது. சில பெருமாள் கோவில்களுக்கு தனிச் சிறப்பு வாய்ந்த சொல்வடைகள் உள்ளன. ஸ்ரீரங்கம் - நடை அழகு, ஸ்ரீவில்லிப்புத்தூர் - கோபுரம் அழகு, மன்னார்குடி - மதிலழகு,திருப்பதி - குடை அழகு என்ற வரிசையில் திருக்கண்ணபுரம் நடை அழகு என்பது தனிச்சிறப்பாகும்.
ராவண வதம் முடிந்தபின், ராமபிரான் அயோத்தி திரும்ப தயாரானார். ராவணனின் சகோதரனான விபீஷ்ணன், ராமபிரானைப் பிரிய மனமில்லாது மிகவும் வருந்தினான். விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார். இதை உணர்த்துவது போல் இக்கோவிலில் விபீஷணனுக்கென்றே தனியாக ஒரு சந்நிதி உள்ளது. வீபிஷணர் பெருமாளிடம், 'நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும்' என்று வேண்ட, 'கண்ணபுரத்தில் காட்டுவோம் வா' என்று வீபிஷணணுக்கு இத்தலத்தில் ஒரு அமாவாசை நாளில் பெருமாளாக நடந்து, தன் நடை அழகைக் காட்டி அருள் செய்தார்.
இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் விதத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் இக்கோவிலில், உச்சிகால பூஜையில் பெருமாள், சவுரி முடியுடன் கைத்தல சேவையில் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது சௌரிராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, சவுரிமுடி அணிவித்து புறப்பாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அமாவாசையன்று சௌரிராஜப் பெருமாள் உலா செல்லும்போது மட்டுமே,அவருடைய திருமுடி தரிசனத்தை நாம் காண முடியும்.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
நெற்றிக்கண்ணுடன் மகாலட்சுமி இருக்கும் அபூர்வ தோற்றம்
சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும் தலம்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
அச்சுதன் என்னும் திருமால், பிரிந்து சென்ற தன் மனைவி மங்கலம் என்னும் மகாலட்சுமியை, இத்தலத்து இறைவனைப் பூஜித்து திரும்பப் பெற்றதால் இத்தலத்திற்கு அச்சுதமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவிலில் தனிச்சன்னதியில் மகாவிஷ்ணுடன் எழுந்தருளி இருக்கும் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். அதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
ஒரு சமயம் கஜேந்திரன் என்னும் யானையானது, முதலையிடம் சிக்கிக் கொண்டபோது, ஆதிமூலமே காப்பாற்று என்று மகாவிஷ்ணுவிடம் அபயக்குரல் எழுப்பியது. அப்போது மகாவிஷ்ணு விரைந்து வந்து முதலையிடம் இருந்து யானையை மீட்டு, அதற்கு மோட்சம் அளித்தார். அப்படி யானையை காப்பாற்ற மகாவிஷ்ணு விரைந்து வந்தபோது, மகாலட்சுமியை தனியே விட்டு வந்ததால், மகாலட்சுமி கோபமுற்று அவரை விட்டு பிரிந்து சென்றாள். பிரிந்து சென்ற மகாலட்சுமியை மீண்டும் அடைய, மகாவிஷ்ணு இத்தலத்து இறைவன் சோமநாதரை பூஜை செய்ய ஆரம்பித்தார். 48 ஆண்டுகள் கடந்தும், இறைவன் அவருடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதுவரை எந்த ஒரு பொருளால் இறைவனை யாரும் பூஜை செய்யவில்லையோ, அதைக் கொண்டு பூஜை செய்தால் இறைவன் தம்முடைய கோரிக்கை நிறைவேற்றுவார் என்ற அடிப்படையில், மகாவிஷ்ணு தமக்கு பிரியமான துளசியைக் கொண்டு இறைவனை பூஜை செய்ய ஆரம்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், மகாலட்சுமியை மகாவிஷ்ணுடன் சேர்ந்து இருக்குமாறு பணித்தார். அதற்கு மகாலட்சுமி சிவபெருமானிடம் இருக்கும் நெற்றிக்கண் போல் தனக்கும் ஒன்று வேண்டும் என்று அவரிடம் வரம் கேட்டு நெற்றிக்கண்ணை பெற்றுக்கொண்டார். அதனால் தான் இத்தலத்தில் மகாலட்சுமிக்கு நெற்றிக்கண் அமைந்துள்ளது. மகாலட்சுமியின் இந்த நெற்றிக்கண்ணை, அபிஷேகத்தின் போது நாம் தரிசிக்க முடியும்.
இத்தலத்தில் மகாவிஷ்ணு துளசி கொண்டு சிவபெருமானை பூஜித்ததால், இன்றும் இக்கோவிலில் சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஏடும் வைத்திருக்கும் சண்டிகேசுவரரின் அபூர்வ தோற்றம்
சிவபெருமானிடம் நம் கோரிக்கைகளை குறிப்பெடுத்து சமர்ப்பிக்கும் சண்டிகேசுவரர்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில், சிறு சன்னதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன.
இக்கோவிலில் சண்டிகேசுவரர் தனி சன்னதியில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.பெரும்பாலும் சண்டிகேசுவரர், தன்னுடைய ஆயுதமாக மழுவுடன் காணப்படுகிறார். ஆனால் இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஏடும் வைத்திருப்பது வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும். இக்கோவிலில் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின் போது நாம் சண்டிகேஸ்வரரிடம் நம் கோரிக்கைகளை தெரிவித்தால், அதை அவர் தனது கையில் இருக்கும் ஏட்டில் எழுத்தாணியால் குறிப்பெடுத்துக் கொண்டு, அவற்றை சிவபெருமானிடம் சமர்ப்பித்து விடுவார் என்பது ஐதீகம்.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
சிவ குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
வருடத்திற்கு ஒருமுறை, வைகாசி விசாகத்தன்று மட்டும் வீதியுலா வரும் சோமநாத சுவாமி
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
சிவன் கோவில்களில், சிவபெருமான் பார்வதி தேவியோடும், இருவருக்கும் நடுவில் முருகனோடும், சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சியளிப்பார். இக்கோவிலில் சிவபெருமான் குடும்ப சகிதமாக ஒரே இடத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இங்கு பிள்ளையார், சிவபெருமான், முருகன் மற்றும் பார்வதி தேவி சுதை வடிவில் வரிசையாக காட்சி அளிக்க, பிள்ளையாரின் வலதுபுறம் சண்டிகேஸ்வரரும், பார்வதி தேவியின் இடதுபுறம் மனோன்மணி (சிவபெருமானின் உபசக்தி) அம்பிகையும் உடன் இருக்கிறார்கள்.
இவர்கள் அறுவரின் உலோக திருமேனிகளும் இக்கோவிலில் உள்ளன. வைகாசி திருவிழாவின் போது, வைகாசி விசாகத்தன்று சோமநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.திருக்கல்யாணம் முடிந்த பிறகு இந்த அறுவரும் வீதி உலாவுக்கு புறப்படுவார்கள். அப்போது உற்சவர் சோமநாத சுவாமியும், அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஒரு ஒரு மரப்படி சட்டத்திலும், சிவபெருமானின் உபசக்தி மனோன்மணி தனியாக ஒரு சப்பரத்திலும் எழுந்தருள்வார்கள்.
எப்படி திருவாரூர் தியாகராஜர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தேரில் உலா வருவாரோ, அது போல இத்தலத்து சோமநாத சுவாமியின் உற்சவத் திருமேனி, வைகாசி விசாகத்தன்று மட்டும்தான் வீதியுலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கலை நயத்துடன் அமைக்கப்பட்ட அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரை (பிரணாளம்)
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் இறை வழிபாட்டு தலங்களாக மட்டுமன்றி சிற்பக் கலைக் கூடங்களாகவும் விளங்குகின்றன. நம் கோவில்களின் கட்டிடக்கலை, அதன் தனித்துவமான பாணி, வடிவமைப்பு ஆகியவை நம் முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டுகின்றன. மூலவரின் கருவறை, மண்டபங்கள், தூண்கள், விதானங்கள், கோபுரங்கள், சிற்பங்கள் என்று ஒவ்வொரு பகுதியும் மிகுந்த கலைநயத்துடனும், கற்பனை திறனுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில், சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சோழர் காலத்து கலைத்திறன் மிளிருகின்றது. இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரையை கூட மிகுந்த கலை நயத்துடன் அமைத்திருக்கிறார்கள். இந்த நீர் தாரைக்கு பிரணாளம் என்று பெயர். இக்கோவிலில் உள்ள பிரணாளத்தின் அபிஷேக நீர் வெளியேறும் பகுதியில் காணப்பெறும் சிற்ப அமைப்பு கலை நயத்துடன் துலங்குகின்றது. பிரணாளத்தின் பக்கவாட்டில் சங்கு ஊதும் பூதகணம் திகழ, ஒரு பூதத்தின் பிளந்த வாயிலிருந்து நீர் வெளியே அபிஷேக நீர் கொட்டும் வகையில் அச்சிற்பம் காணப்பெறுகின்றது.
மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்
ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டிய நிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில், திருவாரூரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள மஞ்சக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.
ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, அவர் பத்தினியான சீதையும் உடன் செல்கிறாள். அப்போது காட்டில் தனிமையில் இருந்த போது, ராவணனின் மாமன் மாரீசன், மான் உருவில் வந்து மாயம் செய்கிறான். மானை பிடித்து தருமாறு சீதை கேட்டபோது, ராமன் துரத்தி சென்ற நிலையில், சீதை கடத்தப்பட்டாள். ராமபிரான் தன் மனைவியை காணாமல் துயரப்படும்போது ராமனின் மோதிரத்துடன் ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்று சீதை இருக்கும் இடத்தை தெரிந்து வந்த ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டி காட்டிய இடம் என்பதால் அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.
இந்தியாவில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
ஆஞ்சநேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சார்த்தி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலுக்கு அருகாமையில் வடக்கே சிறப்பு மிக்க திருத்தலையாலங்காடு பாலாம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோவிலும், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலும் உள்ளன.
திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்
தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கும் பிரதோஷ மூர்த்தி
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.
பொதுவாக சிவாலயங்களில் பிரதோஷ காலங்களில், கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். உமாதேவியை தனது இடக்கரத்தால் அணைத்திருப்பதால் இவருக்கு அணைத்தெழுந்த நாதர் என்ற பெயரும் உண்டு. இவர் ஒன்றரை அடி உயரத்தில் சிறிய உருவத்துடன் காணப்படுவார். ஆனால் இந்த பிரதோஷ மூர்த்தி, இக்கோவிலில் பெரிய உருவத்துடன் தனி சன்னதியில் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இப்படி மூலவராக காட்சி அளிக்கும் பிரதோஷ மூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கால சர்ப்பங்கள் சாளரத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
சகல நாக தோஷங்களுக்கான நிவர்த்தி தலம்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
இக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சாளரத்தில்,இரண்டு கால சர்ப்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருகின்றன. பொதுவாக சன்னதிகளில் அல்லது கோவில் மண்டபங்களில் காட்சி தரும் சர்ப்பங்கள், இங்கு சாளரத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இந்த சாளரத்தில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகிய எட்டு நாகங்களும் சூட்சும ரூபத்தில் இருக்கின்றன. இந்த சாளரத்து நாகங்களை வழிபட்டால் சகல நாக தோஷங்களும் விலகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானின் திருமேனியில் ஆபரணங்களாக உள்ள நாகங்களுக்கு, சிவபெருமானை வழிபடும் போது தங்களைத்தான் வழிபடுகிறார்கள் என்ற கர்வம் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானின் சாபத்தை பெற்றார்கள். நாகங்கள் சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றபோது, சிவபெருமான் அவர்களை சிவராத்திரி அன்று, ஆலமர விழுதை நாராக எடுத்து, அகத்தி பூவை வைத்து மாலையாக தொடுத்து இத்தலத்தில் தன்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இந்த வழிபாட்டை அன்று தவறவிட்டால் சாப விமோசனம் கிடையாது என்றும் நிபந்தனை விதித்தார். அதனால் தான் இன்றும் இத்தலத்தில் ஆலமர விழுதுகள் தரையை தொடுவதில்லை, அகத்தி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை.
இக்கோவில் சாளரத்தில் சூட்சும ரூபத்தில் இருக்கும் அஷ்ட நாகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இரண்டு தீபம் ஏற்றி , சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, அம்பாள் சன்னதியில் உளுந்து, கொள்ளு தானம் செய்து ஒன்பது வாரங்கள் வழிபட்டால் ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், அனைத்து நாக தோஷங்களும் விலகும்.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
திருமணத்தின் போது சிவபெருமான், பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு அக்னிகுண்டத்தை வலம் வரும் அரிய காட்சி
சிவபார்வதி திருமணம் நடந்தபோது, அவர்களுடைய வயதை பற்றிய அரிய தகவல்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
இக்கோவிலில் இறைவன் சன்னதியின் சுற்றுச்சுவரில், சிவபெருமான் கல்யாணசுந்தரர் என்ற திருநாமத்தோடும்,பார்வதி தேவி கோகிலாம்பாள் என்ற திருநாமத்தோடும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற தலங்களில் சிவபெருமானும் பார்வதி தேவியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருந்தாலும், இத்தலத்தில் அவர்களின் திருமணக் கோலம் சற்று வித்தியாசமானதாகவும் அரிதாகவும் அமைந்திருக்கின்றது. இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவியின் கரத்தை பற்றிக்கொண்டு, திருமண சடங்கிற்கான அக்னிகுண்டத்தை வலம் வரும் நிலையில் காட்சி தருவது, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அரிய காட்சியாகும்.சிவபெருமானின் இடது புறம் திருமண சடங்கிற்கான அக்னி குண்டம் இடம் பெற்றிருக்கின்றது.மேலும் இருவர் கரங்களிலும் திருமண சடங்கின் போது அணிவிக்கப்படும் கங்கணமும் இருக்கின்றது.
இத்தலத்தில் சிவபெருமான் பார்வதி தேவி திருமணம் நடந்தபோது, சிவபெருமானுக்கு 18 வயது என்றும் பார்வதி தேவிக்கு ஒன்பது வயது என்றும் தல புராணம் குறிப்பிடுகின்றது. இப்படி இவர்கள் திருமணம் நடந்த போது, இவர்களின் வயதை குறிப்பிட்டு இருப்பது ஒரு அரிய தகவலாகும். வேறு எந்த சிவபார்வதி திருமணம் நடைபெற்ற தலத்திலும், அவர்கள் திருமண வயதைப் பற்றிய குறிப்பு இடம் பெறவில்லை.
இக்கோவில் ஒரு திருமண தடை நிவர்த்தி தலம் ஆகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு உள்ள கல்யாண சுந்தரருக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி, சுவாமி மாலையை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கர்ப்பிணி கோலத்தில் உள்ள அபூர்வ அம்பிகை
சிவபெருமான் போல் நெற்றிக்கண் உடைய அம்பிகை
தினமும் முப்பெரும் தேவியராக அருள் பாலிக்கும் அம்பிகை
உலக ஜீவராசிகளின் கை ரேகைகளை தன் கரத்தில் கொண்ட அம்பிகை
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப்பெற்ற தலம்.
இத்தலத்து அம்பிகை சௌந்தரநாயகிக்கு, சிவபெருமான் போல் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருக்கின்றது. அம்பிகைக்கு மஞ்சள் அபிஷேகம் செய்யும்போது அவருடைய மூன்றாவது கண்ணை நாம் தரிசிக்க முடியும்.
இந்த அம்பிகை அபிஷேக நேரங்களில் கர்ப்பிணி பெண் தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள். சந்தனாபிஷேகம் செய்யும்போது , ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு இருப்பதுபோன்ற அம்பிகையின் மேடிட்ட வயிற்றை நாம் தரிசிக்க முடியும். இப்படி கர்ப்பிணி தோற்றத்தில் காட்சி அளிக்கும் அம்பிகையை, வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. கர்ப்பிணி கோலத்தில் அம்மன் உள்ளதால், இங்கு உள்ள அம்பாளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இந்த அம்பிகை காலையில் மஹிஷாசுரமர்த்தினியாக சிவப்பு நிற புடவையிலும், மதியம் லட்சுமியாக பச்சை நிறப்புப் புடவையிலும், மாலையில் சரஸ்வதியாக வெள்ளை நிற புடவையிலும் காட்சி அளிக்கின்றாள்.
இந்த அம்மனின் உள்ளங்கையில், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் கை ரேகைகளும் அடங்கி இருப்பதாக ஐதீகம். பாலாபிஷேகம் செய்யும் போது அம்மனின் உள்ளங்கை ரேகைகளை நாம் பார்க்கலாம்.
திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. பிரிந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழக்கூடிய அமைப்பு கிடைக்கும்.
திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில்
தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
நாடிஜோதிடம் துவங்கிய கோவில்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, அமைந்த தேவார தலம் திருக்காரவாசல். இறைவன் திருநாமம் கண்ணாயிரநாதர். இறைவியின் திருநாமம் கைலாச நாயகி. இக்கோவில் சப்தவிடங்க தலங்களுள் ஆதி விடங்கத் தலம். திருவாரூர், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருவாய்மூர், திருநள்ளாறு, திருநாகைக்காரோணம் ஆகியவை மற்ற சப்தவிடங்கத் தலங்களாகும். இங்குள்ள தியாகராஜர் சன்னதி விசேஷம். இவரது நடனம் 'குக்குட நடனம்' என்று வழங்கப்படுகிறது. அதாவது சேவல் அசைந்து செல்வது போல் இருக்கும்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி 'ஞான தட்சிணாமூர்த்தியாக' அருள்பாலிக்கிறார். அவர், தலையில் குண்டலினி சக்தியுடன் காட்சியளிப்பது அபூர்வமான ஒன்று. ஞானமகாகுருவின் எதிரில் அகத்தியர் சுவடி படிக்கும் காட்சி அமைந்திருக்கிறது. அதனால் நாடிஜோதிடம் துவங்கிய கோவில் இது என்று கருதப்படுகிறது.
பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்
பெருமாளுக்கு புதுமையான திருநாமம் உடைய தலம்
பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் மகிழ்ச்சி இருமடங்காகும் தலம்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், குரு ஸ்தலமான ஆலங்குடியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்.
கருவறையில், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்து பெருமாளின் திருநாமம் வேறு எந்த தலத்திலும் இல்லாத புதுமையான ஒன்று. இத்தலத்து பெருமாள் கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்கள் உள்ளம் மகிழ்வதால், இவருக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இத்தல பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் அவர்களின் மகிழ்ச்சி இருமடங்காகும் என்பது ஐதீகம்.
பெருமாளின் இந்த திருநாமத்துக்கு பின்னணியில் ராமாயண நிகழ்ச்சி ஒன்று உள்ளது. ராவணன் சீதையை கடத்தி சென்றபோது, தன் கணவனுக்கு தான் சென்ற வழி தெரிய வேண்டும் என்று சீதாதேவி, தான் அணிந்திருந்த அணிகலங்களை ஒவ்வொன்றாகக் கழற்றி பூமியில் போட்டுக் கொண்டே போனாளாம். அப்படி அவள் அணிந்திருந்த பாடகம் எனப்படும் காலில் அணியக் கூடிய கொலுசை ஓரிடத்தில் கழற்றிப் போட்டாள். சீதையைத் தேடி புறப்பட்ட ராமனும் லட்சுமணனும் சீதா தேவி கழற்றி எறிந்த அணிகலங்களை ஆங்காங்கே தரையில் கண்டன்ர். ஒரு கிராமத்தில் சீதாதேவியின் பாடகம் எனப்படும் அணிகலன் தரையில் கிடப்பதைப் பார்த்த ராமபிரான், தம்பி லட்சுமணா… இந்த அணிகலனைப் பார். இது யாருடையது? என்று கேட்டபோது, லட்சுமணன் முகம் மலர்ந்து, இது என் அண்ணியாருடையது. அவர் தன் திருப்பாதங்களில் இந்த பாடகங்களை அணிந்திருப்பார். இந்தக் காட்சியை நான் தரிசித்திருக்கிறேன் என்று உளம் மகிழ்ந்து சொன்னானாம். அதுவரை தரையில் விழுந்து கிடந்த மற்ற ஆபரணங்களை ராமபிரான் காட்டிக் கேட்டபோது, இது அண்ணியாருடையதா என்று எனக்குத் தெரியாது என்றே சொல்லி வந்த லட்சுமணன், காலில் அணியும் பாடகத்தைக் கண்டு, இது நிச்சயம் அண்ணியார் அணியும் அணிகலன்தான் என்று உறுதிபடச் சொன்னது, ராமனுக்குப் பெருத்த மகிழ்வைத் தந்ததாம். அண்ணியாரை, ஒரு தெய்வமாக எந்த அளவுக்கு லட்சுமணன் தொழுது வந்திருக்கிறான் என்கிற பக்தி உணர்வு அப்போது வெளிப்பட்டது. பாடகத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ராமபிரான். இதனால் இந்த ஊருக்கு பாடகப்பதி என்றும் (பின்னாளில் பாடகச்சேரி), இங்கு அருள் பாலிக்கும் பெருமாளுக்கு கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள் என்கிற திருநாமமும் வந்தது.