
வைரவன் கோயில் காலபைரவர் கோவில்
காசிக்கு நிகரான காலபைரவர் தலம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கும்பகோணம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் வைரவன்கோயிலில் அமைந்துள்ள காலபைரவர் கோவில், காசி காலபைரவருக்கு இணையான தலமாகப் போற்றப்படுகின்றது. இத்தலத்தில் காலபைரவர் எழுந்தருளி இருப்பதின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
முருகப்பெருமானிடம் உபதேசம் பெற கயிலையில் இருந்து வந்த சிவபெருமானுடன் அனைத்து தேவர்களும் வந்தனர். இவர்களில் பைரவர் மட்டும் சிவபெருமானின் ஆணைப்படி வைரவன் கோவில் எனும் இடத்தில்,காவியியின் வடகரையில் தென்முகமாக அமர்ந்து கொண்டார். அவர் நோக்கிய இடத்தில் ஒரு மயானமும் உள்ளது. இது காசிக்கு நிகரான பெருமை கொண்ட தலம். காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை அம்சங்களையும் இவரும் கொண்டிருக்கிறார். இங்கு பைரவரை பிரதிஷ்டை செய்த ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாகி, அதுவே ஈச்சங்குடியானது. தேவர்கள் நின்று வழிபட்ட இடம் தேவன்குடியானது. கணபதி பூஜித்த இடம் கணபதி அக்ரஹாரம் ஆனது. தேவி உமையாள் புரத்திலும், நந்தி மதகிலும், கங்கை கங்காபுரத்திலும் நின்று பைரவரை வழிபட்டார்கள் என்கிறது தலபுராணம்.
இத்தனை பெருமைகள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை.
காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும், பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத் தடை விலகும், புத்திர பாக்கியம் கிட்டும், சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும், இழந்த பொருள்கள் மீண்டும் கிடைக்கும். பகை நீங்கும், நினைத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மேலும், அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம், ஞாயிறு, வியாழக்கிழமை நாள்களில் உச்சிக்காலத்தில் வணங்குவது நல்ல பலனைத் தரும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் ராகு காலத்தில் வணங்குவது மிகவும் சிறந்த பலனைத்தருகிறது. இந்தத் தலத்தில் நவகிரகங்களையும் தன் நெஞ்சுப் பகுதியில் தாங்கி இருக்கும் ஶ்ரீகாலபைரவரை பூஜிப்பது. நவகிரக தோஷங்களின் நிவர்த்திக்காக தனித்தனியே நவகிரகங்களை பூஜிப்பதற்கு நிகரானது. இங்கு ஶ்ரீகாலபைரவரை பூஜை செய்து வணங்கினால், நவகிரகங்களின் தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே இவரை வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனியின் பாதிப்பு விலகி நல்லவையே நடக்கும்.

தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்
திருமணத் தடை நீ்க்கும் அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை
பலவிதமான நோய்களைத் தீர்க்கும் அபிஷேக விபூதி
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில், சுங்குவார் சத்திரத்திலிருந்து இடதுபக்கம் திரும்பிச்சென்றால் 10 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது தென்னேரி கிராமம். இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது. இவ்வூரிலுள்ள ஏரி, திரையனேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பெற்றது. ஏரியின் பெயரே மருவி இன்று தென்னேரி ஆனது.
கருவறையில் பெரிய வட்டவடிவ ஆவடையாருடன சுவாமி ஆபத்சகாயேஸ்வரர் காட்சி தருகிறார். தன்னை நாடி வருகின்ற தனது பக்தர்களின் துயர்களை துடைத்து ஆனந்த வாழ்வளிக்கிறார் ஆபத்சகாயேஸ்வரர். சுவாமி ஆபத்சகாயேஸ்வரர் மீது அஷ்டகந்தம் சாற்றிய ரட்சை வைத்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். ரட்சையை அணிந்து கொள்வதால் திருமணயோகமும்,பல நோய்களும் தீருவதாக ஐதீகம். எட்டுவகையான வாசனைப் பொருட்களின் கலவையே அஷ்டகந்தம் எனப்படுகிறது.கோரோசனை, வெண்சந்தனம்(அ)சந்தனம்(அ) அத்தர், பச்சைக்கற்பூரம், ஜவ்வாது , கறுப்பு அகில், புனுகு, கஸ்தூரி, குங்குமப்பூ ஆகியவை, அஷ்ட கந்தத்திலுள்ள வாசனைப் பொருட்களாகும்.
சுவாமிக்கு பிரதோஷத்தன்று வடைமாலை சாற்றப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்க, அதை உண்பவர்களுக்கு நோய்கள் தீருவதாகக் கூறுகின்றனர். அபிஷேக விபூதி பெற்று அதை நீரில் இட்டு உட்கொண்டு வந்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
மூன்று பெண் உருவங்களுக்கு, வெறும் நான்கு கால்களை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட வினோதமான சிற்பம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
நம் கோவில்கள், நம் முன்னோர்கள் கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் ஒரு தூணில், ஆறு அங்குல நீளம், ஆறு அங்குல அகலம் உள்ள ஒரு சதுர பரப்பளவில், மூன்று பெண் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் நடுவில் இருக்கும் பெண் நம்மை நேராக பார்த்த நிலையிலும், மற்ற இரு பெண்களில் ஒருத்தி தனது உடலை வலது பக்கம் சாய்த்த நிலையிலும், மற்றொருத்தி இடது பக்கம் சாய்த்த நிலையிலும் காட்சியளிக்கின்றனர்.
இந்த சிற்பத்தில் வினோதம் என்னவென்றால், மூன்று பெண்களுக்கு ஆறு கால்கள் இன்றி, வெறும் நான்கு கால்களை கொண்டே வடிவமைத்திருக்கிறார்கள். நடுவில் இருக்கும் பெண்ணின் இரு கால்கள் ஆனது மற்ற இரு பெண்களுக்கும், பொதுவான கால் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கற்பனைத் திறனும், அதை நுணுக்கமான சிறிய சிற்பமாக செதுக்கி இருக்கும் விதமும், நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ விநாயகர்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி.
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் லிங்கோத்பவ வலம்புரி விநாயகரின் தோற்றமானது அபூர்வமான ஒன்றாகும். இவர் சிவலிங்க உருவம் கொண்டு, அதில் நான்கடி உயர திருமேனியுடன், புடைப்புச் சிற்பமாக வலம் சுழித்த துதிக்கையுடன் காட்சி தருகிறார். அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இப்படி சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருக்கும் விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன கோவிலில் கனு உற்சவம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் கனு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அப்போது, விவசாயிகள் தங்களது வயலில் புதியதாக விளைந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் ஆகியவற்றை காமாட்சியம்மனுக்கு படைப்பதற்காக கொண்டு வருவார்கள். அவற்றைக் கொண்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படும்.
கனு உற்சவத்தையொட்டி, மூலவர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். உற்சவர் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் கேடயத்தில் உலா வந்து கோவில் வளாகத்துக்குள் உள்ள கனு மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு தேவியர் மூவருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
கனு உற்சவம் என்பது பெண்கள் தங்கள் சகோதரர்கள் நலமுடன் வாழவும், உணவுத் தட்டுப்பாடு வராமல் மகிழ்ச்சி நிலவவும் வேண்டி காமாட்சி அம்மனுக்கு நடத்தப்படுகிறது. காய்கறிகள் மீது பிரியமானவள் காமாட்சி என்பதால் அம்மனுக்கு 'சாகம்பரி' என்ற பெயரும் உண்டு. எனவே கனு உற்சவத்தின்போது காய்கறிகள், பழங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்மன் சந்நிதிகளில் ஏராளமான மரக்கிளை, காய், கனிகளால் பரப்பி வைத்து அம்பிகையை அலங்காரம் செய்வர். இதற்கு ‘சாகம்பரி அலங்காரம்' என்று பெயர்.
சாகம்பரியைப் பற்றி ஆதிசங்கரர் தன்னுடைய முதல் நூலான கனகதாரா ஸ்தோத்திரத்தில் 'கீர்தேவதேதி'என்னும் பாடலில் "சாகம்பரீதி' எனக் குறிப்பிடுகின்றார்.
காஞ்சிப் பெரியவர் விரும்பிய சாகம்பரி அலங்காரத்திற்கு, ஏற்பாடு செய்த காமாட்சி அம்மன்
ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார். அங்கிருந்த சாஸ்திரியிடம், 'பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள். இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும். அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்' என்றார். இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!, என்று நினைத்த சாஸ்திரி, 'அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!' என்றார் பணிவுடன். காஞ்சிப் பெரியவர் அவரிடம்,'அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன். அவள் பாத்துக்குவா'என்று சொல்லி விட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது. பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது. பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார்
அம்பிகையை சாகம்பரியாக தரிசித்த பெரியவர், பக்தர்களிடம், 'பொங்கலன்று சூரியனை வழிபட்டால் ஆரோக்கியம் உண்டாகும். இன்று தர்ப்பணம் செய்வது அவசியம். அம்பாளை சாகம்பரியாக தரிசித்தால் நினைத்தது நிறைவேறும். நாளை கோபூஜை செய்யுங்கள். நாளை மறுநாள் உடன்பிறந்தவர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்'என்று சொல்லி ஆசியளித்தார்.

திருசோபுரம் சோபுரநாதர் கோவில்
தட்சிணாமூர்த்தியின் திருமேனியைத் தட்டினால் மரத்தை தட்டின ஒலி எழும் அதிசயம்
மஞ்சள் வஸ்திரத்திற்கு பதிலாக வித்தியாசமாக வெள்ளை வஸ்திரம் அணியும் தட்சிணாமூர்த்தி
கடலூர் – சிதம்பரம் சாலையில், 18 வது கி.மீ. தொலைவில் உள்ள ஆலப்பாக்கம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ.தூரத்தில் உள்ள தேவார தலம் திருச்சோபுரம். இறைவன் திருநாமம் சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சோபுர நாயகி, தியாகவல்லியம்மை.கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி முதல் குலோத்துங்கனின் பட்டத்து மனைவியான தியாகவல்லியால் திருப்பணி செய்யப்பட்ட காரணத்தால், இத்தலம் தியாகவல்லி என்று பெயர் பெற்றது.
இத்தலத்து தட்சிணாமூர்த்தி சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார். மேலும் அவர், இத்தலத்தில் இசையின் வடிவமாக அருளுகிறார். கருங்கல்லாலான இவரது திருமேனியை தட்டிப் பார்த்தால், மரத்தை தட்டினால் எந்த ஓசை எழுமோ, அந்த ஓசை கேட்கிறது. இத்தகைய தட்சிணாமூர்த்தியை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இவர் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு ஞானத்தை அருள்வதால், இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவிக்காமல், வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது மற்றுமொரு சிறப்பம்சம்.
இசையில் வல்லமை பெற விரும்புபவர்கள், இசையின் வடிவமாக விளங்கும் இவருக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை நந்தி உயிர் பெற்றெழுந்து கால் மாற்றி அமர்ந்த அதிசயம்
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள பெரிய நந்தி தனது வலது காலை மடக்கி இடது காலை முன்வைத்து அமர்ந்துள்ளது. இதன் பின்னணியில் ஆச்சரியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.
முன்னொரு காலத்தில், திருவண்ணாமலை கோவிலை முகலாய மன்னன் ஒருவன் கைப்பற்றினான். அப்போது ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டை சுமந்துக் கொண்டு சென்றனர். உடனே முகலாய மன்னன், எதற்காக இந்த காளைமாட்டை சுமந்து செல்கிறீர்கள் என்று கேட்டான். உடனே சிவபக்தர்கள், இந்த காளை மாடு, எங்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். எங்கள் இறைவனை சுமப்பவரை நாங்கள் சுமப்பது எங்களுக்கு இந்த பிறவியில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு கோபமுற்ற முகலாய மன்னன், அந்த காளை மாட்டை இரண்டு துண்டாக வெட்டினான். .எங்கே உங்கள் ஈசன் வந்து இதை ஒன்று சேர்த்து உயிர் கொடுப்பாரா என்று ஏளனமாக வினவினான். அதிர்ச்சி அடைந்த சிவ பக்தர்கள் அண்ணாமலையார் சன்னதிக்கு ஓடோடி சென்று கண்ணீர் மல்க முறையிட்டனர். அப்போது அண்ணாமலையார் அசரீரியாக, அவர்களிடம் வடக்கு திசையில் ஒருவன் ஓம் நமச்சிவாய மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பான் அவனை அழைத்து வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து சிவபக்தர்கள் வடக்கு திசை நோக்கி சென்றனர். அங்கு வாலிபன் ஒருவன் ஓம் நமச்சிவாய என்று சொல்லியபடி ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தான். வாலிபனை பார்த்த சில பக்தர்கள் இவன் காளை மாட்டுக்கு உயிர் கொடுப்பானா என்று சந்தேகப்பட்டார்கள். அடுத்த வினாடி அவர்களை நோக்கி புலி ஒன்று பாய்ந்தது. அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை சொல்லி புலியை தடுத்து நிறுத்தினான். இதனால் வாலிபன் மீது நம்பிக்கை கொண்ட சிவபக்தர்கள், அண்ணாமலையார் கோவிலில் நடந்ததை அவனிடம் விவரித்தார்கள்.
உடனே அந்த வாலிபன் கோவிலுக்கு புறப்பட்டான். கோவிலுக்குள் வந்ததும் இரண்டு துண்டாக வெட்டுப்பட்டு கிடந்த காளை மாட்டை பார்த்தான். கண்ணீர் மல்க நமச்சிவாய மந்திரத்தை கூறினான். அவன் சொல்ல சொல்ல வெட்டுப்பட்டு கிடந்த மாடு ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது.
இதைக் கண்டு ஆத்திரமும் அவமானமும் அடைந்த முகலாய மன்னன், இந்த வாலிபனுக்கு இன்னும் சில போட்டிகள் வைக்க விரும்புகிறேன். அதில் இந்த வாலிபன் வெற்றி பெற்றால் என்னிடம் உள்ள பொருட்கள் அனைத்தையும் இந்த ஆலயத்துக்கு தந்து விடுகிறேன். இல்லையென்றால் இந்த ஆலயத்தை இடித்து தகர்த்து விடுவேன என்றான். அவனது இந்த சவாலை வாலிபன் ஏற்றுக் கொண்டான். உடனே முகலாய மன்னன் ஒரு தட்டு நிறைய மாமிசத்தை கொண்டு வர உத்தரவிட்டான். அந்த மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள். அவருக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் அவை பூக்களாக மாறட்டும் என்றான். அவன் உத்தரவுப்படி மாமிசத்தை அண்ணாமலையார் அருகே கொண்டு சென்றனர். அப்போது அந்த வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அடுத்த வினாடி மாமிச துண்டங்கள் அனைத்தும் பல்வேறு வகை பூக்களாக மாறின.
இதையும் முகலாய மன்னனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாலிபனுக்கு அடுத்த போட்டியாக ராஜ கோபுரத்தின் அருகே உள்ள பெரிய நந்தியை உயிர் பெற்று எழ வைக்கச் சொன்னான். அப்படி உயிர் பெற்றெழுந்த நந்தியை கால்களை மாற்றி அமர வைக்க வேண்டும் என்றும் சவால் விட்டான். இந்த சவாலையும் ஏற்றுக் கொண்ட வாலிபன் நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்தான். அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல நந்தி உயிர் பெற்று எழுந்தது. தனது கால்களை மாற்றி அமர்ந்தது. இதை கண்டதும் முகலாய மன்னனுக்கு கை-கால்கள் நடுங்கியது. அண்ணாமலையார் ஆலயத்துக்கு நிறைய பொன்னும் பொருளும் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினான்.
முகலாய மன்னனுக்கு அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய வாலிபன்தான் பிற்காலத்தில் வீரேகிய முனிவராக மாறி திருவண்ணாமலை வடக்கில் உள்ள சீனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். அவர் நினைவாக அந்த ஊரில் ஒரு மடம் உள்ளது. அவரைப் போற்றும் வகையில் ராஜகோபுரம் அருகே கால் மாற்றி அமர்ந்த நந்தி தனது தலையை வடக்கு திசை நோக்கி லேசாக சாய்த்தபடி உள்ளது. அன்று முதல் பெரிய நந்தி தனது வலது காலை மடித்தும் இடது காலை முன்வைத்தும் அமர்ந்துள்ளது.

தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவபெருமான் பக்தனுக்காக வயலில் விவசாய வேலை பார்த்த தலம்
கடலூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலுள்ள தேவாரத்தலம் திருத்திணை சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில். தற்போது இந்தத் தலம், தீர்த்தனகிரி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் நீலாம்பிகை, ஒப்பிலா நாயகி.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். அவர்கள் தினமும் தாங்கள் உணவு அருந்துவதற்கு முன் யாராவது ஒருவருக்காவது உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
ஒருநாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக எவரும் அத் தம்பதியரின் வீட்டுக்கு செல்லாதபடி செய்துவிட்டார். அதனால், விவசாயி தன் வயலில் வேலை செய்யும் பணியாளர்கள் யாருக்காவது உணவு அளிக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் வயலுக்குச் சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. அப்போது, சிவபெருமான் முதியவர் வடிவம் தாங்கி அங்கே வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் அவரிடம், 'நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் வயலில் எனக்கு ஏதாவது வேலை கொடுத்தாள், அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்' என்றார். விவசாயியும் ஒப்புக்கொண்டு, தன் வயலை உழும்படி கூறினார். முதியவர் வயலில் இறங்கி உழுதார்.
தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு வயலுக்குத் திரும்பினர். அப்போது, வயலில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. நிலத்தை உழுத உடனேயே இத்தனை பயிர் விளைந்ததை கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி, சந்தேகத்துடன் முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினார். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் 'ஒரே நாளில் பயிர் விளைந்தது எப்படி?' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். சிரித்த முதியவர் சிவனாக சுயரூபம் காட்டி அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, இத்தலத்தில் சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சிவபெருமான், சுயம்புலிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். வயலில் வேலை செய்ததால் சிவபெருமான், 'விவசாயி' என்றும் பெயர் பெற்றார்.அவர் நிலத்தை உழ ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார் என்பதால், அவையும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.
நடராஜரின் தாண்டவத்திற்கு இசைக்கும் திருமால், பிரம்மா
இத்தலத்தில் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் நடராஜரின் திருவடிக்கு கீழே, திருமால் சங்கு ஊதியபடியும், பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கின்றனர். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். திருமாலும் பிரம்மாவும் இசைத்துக் கொண்டிருப்பதால், இவர்கள் இருவரையும் 'இசையமைப்பாளர்' என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது. நடனம், இசை பயில்பவர்கள் இவருக்கு பூஜை செய்து வேண்டிக்கொண்டால், கலையில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.
ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், நடராஜப் பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்கு வீதியுலா வருவது வழக்கம். ஆனால்,ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக, ஒரு பரிசலில் எழுந்தருளியும், அவருக்கு முன்னால் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் இசை முழங்கிக் கொண்டு செல்ல, காவிரி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.
இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் கோவில்
ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கயம்பாளையம் அமைந்துள்ளது. இங்குதான் காவிரியின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். இக்கோவில் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் நட்டாற்றீஸ்வரரும், கீழ் தளத்தில் நல்லநாயகி அம்பாளும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை, சிவபெருமான்தென்புலம் அனுப்பினார். அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு, சிவபெருமான் அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார். ஒரு சமயம், அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியாக உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய, பாவம் போகும் என அகத்தியர் உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து காவிரியில் நடு இடத்தைத் தேர்ந்தெடுத்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து அகத்தியர் பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சி இறைவனுக்குப் படைத்தார். அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால், அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
பிராத்தனை
நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடல், வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.

நத்தம் வாலீஸ்வரர் கோவில்
பிரதோஷ நாயகர் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
பிரதோஷ காலங்களில் கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரம் உடைய இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போன்ற தோற்றமுடையவர்.பன்னிரு கரங்களில் மான்,மழுவும், முன்னிரு கைகளில் அபய,வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார்.தலையில் ஜடாமகுடம் விளங்க,அதில் வெண்பறை,கங்கை,ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி,இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக் கோவிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர்.
இந்தத் தலத்தில் பிரதோஷ நாயகர் அம்பிகையை தனது இடது கையால் அணைத்திற்கும் தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும்.இதற்கு பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்த முற்பட்ட போது, பார்வதி தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில், சிவபெருமான் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் சிவபெருமான் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது.இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர்.
காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு, பிரதோஷ நாயகருடன் வலம் வரும் திருமண தடை நீக்கும் வழிபாடு
உமா ஆலிங்கனராய் உள்ள இந்தத் தலத்து பிரதோஷ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில் வழிபட்டு பிரதோஷ சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்கு சுண்டல் நிவேதனம் செய்து முல்லை, நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்து, திருமணம் ஆகவேண்டிய பெண்கள் கையில் காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு சுவாமியுடன் மூன்று வலம் வருகையில் திருமணம் கைகூடும். இம்மாதிரி 5 பிரதோஷங்கள் செய்ய வேண்டும். திருமணமாகாத ஆண்களின் தாய், இம்மாதிரி பிரார்த்தனை செய்து வலம் வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசலை பெருமாள் கடந்து செல்லும் ஒரே முருகன் தலம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம், மதுரைக்கு தென்மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
இக்கோவில் ஒரு குடைவரைக் கோவிலாகும். ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும், முருகப்பெருமானின் கையிலுள்ள வேலுக்கே பால் அபிஷேகமும், மஞ்சன நீராட்டுகளும் நடைபெறுகின்றன. முருகப்பெருமானின் இடப்பக்கம் தெய்வானையும், வலப்பக்கம் நாரதரும் வீற்றிருக்கின்றனர். இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவபெருமான்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி, ஒரே குடவரையில் இங்கு அருளுகின்றனர். குடவரையின் மேற்குப் பகுதியில் சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைக்கு கிழக்குப் பகுதியில் பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். அவருக்கு இருபுறமும் மகாலட்சுமி மற்றும் மதங்கமாமுனிவர் திருவுருவங்களும் உள்ளன. இக்கோவிலில் பவளக்கனிவாய் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிப்பது, வேறு எந்த தலத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால், இவருக்கு 'மால் விடை' எனும் சிறப்பு பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு எந்த தலத்திலும் இல்லை.
முருகப்பெருமானின் திருத்தலத்திலேயே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுவது திருப்பரங்குன்றத்தில் மட்டும்தான் என்பதும் சிறப்புக்குரியது. வைகுண்ட ஏகாதசி அன்று, இக்கோவிலில் உள்ள கம்பத்துடி மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியில் உள்ள பெரிய கதவிற்கு சந்தனம் பூசி, மாலைகள் சாற்றப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த பெரிய கதவு தான், சொர்க்கவாசல் ஆக கருதப்பட்டு வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கடந்து செல்கிறார்.

ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
மணித்துளி தரிசனம் தந்து பிறவா நிலை தரும் பெருமாள்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.மூலவர் வைகுண்டநாதர் ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும்.தாயார் வைகுண்டநாச்சியார். உற்சவர் கள்ளபிரான் பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்.தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளன.
இந்த தலத்திலேயே, கைலாசநாதர் கோவிலும் உள்ளது. ஒரே ஊரில் கைலாசநாதர் கோவிலும், வைகுண்ட நாதர் கோவிலும் அமைந்திருப்பது வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
இந்த வைகுண்டநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்ற பெருமாள் கோவில்களை விட சற்று வித்தியாசமாக அனுசரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வார்கள். அதே தருணம் மூலவர் வைகுண்ட பெருமாள் சன்னதியை அடைத்து விடுவார்கள். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒருசில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இதற்கு மணித்துளி தரிசனம் என்று பெயர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாண்டி நாட்டு நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.

வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்
வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்
திதிகளில் பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை.பெருமாளுக்கு இருக்கப்படும் விரதங்களில் மிக முக்கியமானது ஏகாதசி விரதம்.
ஏகாதசி விரதம்
முன்னொருகாலத்தில் வாழ்ந்த முரன் என்னும் அசுரன் தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்திவந்தான். அவர்கள் தங்களை காப்பாற்றும் படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். முரனுடன் விஷ்ணு போரிட்டு வெற்றி பெற்றார். பிறகு சென்று ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முரன், பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, விஷ்ணு தன் உடலிலுள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் தோற்றுவித்தார். அவள் முரனுடன் போரிட்டு வென்றாள்.
அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார் பெருமாள். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என அழைக்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாகவும் வரமளித்தார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏகாதசி திதி விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுவதால், ஏகாதசி தினத்தில் விரதம் இருந்தால் திருமாலின் அருளை முழுவதுமாக பெற முடியும். ஏகாதசி விரதம், பாவங்களை போக்குவதுடன் மோட்சத்தை தரக் கூடியது. வாழ்நாள் முழுவதும் ஏகாதசி விரதம் இருப்பவருக்கு மறுபிறவி கிடையாது. தேவர்களுக்கு நிகரான அந்தஸ்தினை அவர்கள் பெறுவார்கள். அதிலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி உற்சவம்
பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்கத் தோன்றிய மது - கைடபர் ஆகிய அசுரர்கள் தேவர்கள், முனிவர்கள் என அனைவருக்கும் தொல்லை கொடுத்தனர். அவர்களை அழிக்க விஷ்ணு ஒரு மாதம் தொடர்ந்து போரிட்டார். பின்பு அவர்களை சம்ஹாரம் செய்தார். ஆனால் அவர்கள் விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின் காரணமாக வைகுண்டப் பதவியை அடைந்தனர். அப்படி அவர்கள் பரம பத வாசலை அடைந்தநாள் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி. அன்று பெருமாள் அவர்களுக்காக வைகுண்ட வாசலைத் திறந்தருளினார். பெருமாளைச் சரணடைந்த அசுரர்கள், 'தங்களுக்கு மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்ட வாசலைத் திறந்தருளியது போல பெருமாள் கோயில்களில் இந்த நாளில் சொர்க்க வாசலைக் கடக்கிறவர்களுக்கும் வைகுண்ட வாசலைத் திறந்தருள வேண்டும் என்றும் அந்த நாள் ஒரு உற்சவமாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்றும் வேண்டிக்கொண்டனர். பெருமாளும் அதற்கு இசைந்தார். அந்த ஏகாதசி திதியே வைகுண்ட ஏகாதசி எனப் போற்றப்படுகிறது.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியா விட்டாலும், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்களையும் நீக்கக் கூடியது. வைகுண்ட ஏகாதசி அன்று இறப்பவர்களுக்கும் மறுபிறவி என்பது கிடையாது. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர்.

சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள்
சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்கள்
பெருமாள் கோவில் என்றால் அங்கு பொதுவாக சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறும். ஆனால் சொர்க்கவாசலே இல்லாத பெருமாள் கோவில்கள் பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறாது. அப்படிப்பட்ட சில பெருமாள் கோவில்களின் விவரங்களை இந்த பதிவில் நாம் காணலாம்.
1. 108 திவ்யதேச கோவில்களில் ஒன்றான கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில், பெருமாள் நேரடியாக வைகுண்டத்தில் இருந்து மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணம் முடிப்பதற்காக வந்ததாக ஐதீகம். வைகுண்டத்தில் தான் எழுந்தருளி இருக்கும் ரதத்துடனேயே வந்து காட்சி தருவதால், இவரை வணங்கினாலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்பதால் இந்த கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது.
2. காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் என்னும் ஸ்ரீ பரமபதநாதப் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. இந்த ஆலத்தில் மூலவர் பெயரே வைகுண்டப் பெருமாள் என்பது தான். இந்த பெருமாளுக்கு பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு. இவரை தரிசித்தாலே சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
3. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூர் நித்ய சொர்க்கவாசல் தலமாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவப் பெருமாளும், ராமானுஜரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளும் போது சொர்க்கவாசல் திறக்கப்படுவது போது மணியால் ஆன கதவுகள் திறக்கப்படும்.
4. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜபெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் கிடையாது. இக்கோவில் பூலோகத்து விண்ணகரம் என்பதால் இந்த கோவிலில் பரமபத வாசல் கிடையாது. இந்த கோவிலே பரமபதமாக கருதப்படுவதால், மற்ற பெருமாள் கோவில்களைப் போல் இங்கு சொர்க்கவாசல் கிடையாது.
5. திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் கிடையாது. ஸ்ரீதேவியை மணம் முடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக இங்கு வந்த விட்டதால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக கருதப்படுகிறது. இவரை வணங்கினால் முக்தி கிடைக்கும். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலைப் போன்று இங்கும் தட்சிணாயன வாசல், உத்திராயண வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளது.
காஞ்சிபுரம் சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சிபுரம் பவள வண்ண பெருமாள், திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆகிய கோவில்களிலும் சொர்க்கவாசல் இல்லை.

திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில்
சிம்ம வாகனத்தில் விஷ்ணு துர்க்கை
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம், வேதத்தின் பெயரால், சாமவேதீசுவரர் என்று அழைக்கப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இறைவியின் திருநாமம் லோகநாயகி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய தேவாரம் வைப்பு தலம் இது.
பொதுவாக சிவாலயங்களில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை அம்மன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பாள். ஆனால் இக்கோவிலில் அமைந்துள்ள விஷ்ணு துர்க்கை மகிஷ வாகனமின்றி, சிம்ம வாகனத்தில் இருப்பது தனிச் சிறப்பாகும். திருமணமாகாத பெண்கள், இந்த சிம்ம வாகன துர்க்கையை 11 வெள்ளிக்கிழமைகள் வழிபட்டு, முடிவில் மஞ்சள் காப்பணிந்து நேர்த்தி செய்தால், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோவில்
பிரம்ம சாஸ்தா நிலையில், மயில்மேல் அமர்ந்த முருகனின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் அருகே, திருமணஞ்சேரி தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம். இறைவன் திருநாமம் பூலோகநாதர். இறைவியின் திருநாமம் பூலோகநாயகி. பூலோகவாசிகளுக்கு, சிவபெருமான் தனது திருமணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம் இது.
இத்தலத்தில் கருங்கல் திருமேனி கொண்ட முருகனின் உயரம் சுமார் 4 அடி, அகலம் 3 அடி. முருகன் கையில் ஜெப மாலையுடன், மயில்மேல் அமர்ந்த திருக்கோலத்தில்,வலது காலை மடித்தும் இடது காலை தொங்கவிட்டும் , 'பிரம்ம சாஸ்தா' நிலையில் காட்சி தருகிறார். கிரீடம், கழுத்தணி, மார்பில் சூலம் போன்ற தொங்கலணி போன்ற ஆபரணங்களுடன் தியான நிலையில் அருள் புரிகிறார். துன்பத்தில் இருப்பவர்கள், 'பிரம்ம சாஸ்தா' நிலையில் எழுந்தருளி இருக்கும் இத்தலத்து முருகனை, வழிபாடு செய்தால் வாழ்வில் மாற்றம் வரும்.

சாலாமேடு அஷ்டவராகி அம்மன் கோவில்
உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவில்
விழுப்புரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோவில் உள்ளது. உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது.
திருமாலின் வராக அம்சமாக கருதப்படும் வராகியம்மன், ராஜ ராஜேஸ்வரி அம்மனின் குதிரைப்படைத்தலைவியாகவும், பத்மாவதி அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த எட்டு தெய்வங்களையும் உள்ளடக்கிய கோவில் தான் சாலாமேட்டில் அமைந்துள்ளது.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வராகியை வணங்கினால் பகைவரை அழித்து பக்தரை காத்திடுவாள். கொடிய ஏவல், பில்லி சூனியத்தில் இருந்தும் காப்பாற்றுவாள். வராகியை வணங்கும் எவருக்கும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.ஞாயிறு கிழமைகளில் வாராகியை வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மன நல பாதிப்புகள் நீங்கும். வீடு நிலம் தொடர்பான பிரச்சினைகள்தீர செவ்வாய்கிழமைகளில் வராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை வழிபடலாம். குழந்தை பேறு கிடைக்க வியாழக்கிழமை வழிபடலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் வியாழக்கிழமை வழிபடலாம். வெள்ளிக்கிழமை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
கேட்ட வரம் தரும் வராகி காயத்ரி மந்திரம்
வராகி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்போருக்கு கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வராகி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இழந்த செல்வம், சொத்து, சொந்தங்களை மீட்டுத் தரும் வராகி அம்மன்
வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கருநீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டினால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம்.

சிறுபுலியூர் கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்
குழந்தை வடிவில் பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கொல்லுமாங்குடி என்னும் இடத்தில் இருந்து, கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்யதேசம் சிறுபுலியூர். மூலவர் பெயர் தலசயனப் பெருமாள். தாயார் பெயர் திருமாமகள் நாச்சியார். உற்சவர் பெயர் கிருபா சமுத்திரப் பெருமாள். சிதம்பரம் நடராசர் அருளியபடி வியாக்கிரபாதர்(புலிக்கால் முனிவர்), திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாளை வணங்கி மோட்சம் பெற்றதால் இத்தலத்திற்கு திருச்சிறுபுலியூர் எனப் பெயராயிற்று.
பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலம் ஸ்ரீரங்கம், மற்றொன்று திருச்சிறுப்புலியூர். ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக சயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். பெருமாள் பள்ளி கொண்ட தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், சயன நிலையில் உள்ளார். கருடாழ்வாருக்கு பெருமாள் அபயமளித்த தலமாக இருப்பதால், பூமிக்கு கீழ் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சன்னதி உள்ளது.
மாங்கல்ய தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம், குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு இது பரிகாரத் தலமாக விளங்குகின்றது. தீராத நோய், மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில்
மானுட உருவம் கொண்டு அம்பிகை இறைவனை பூஜை செய்த தலம்
திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கோவிந்தவல்லி. கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். இந்த அம்பிகைக்கு சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் உண்டு.
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது, அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த சிவபெருமான், அம்பிகையை நோக்கி 'பூலோகத்தில் திண்ணக்கோணம் அடைந்து பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான் பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக' என்று பார்வதி தேவிக்கு சாபமிட்டு அதற்கான விமோசனத்தையும் அருளினார். அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து, சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரம் பெற்று மீண்டும் அடைந்தது இந்தக் கோவிலில்தான்.
சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு, பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்சவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
சரசுவதி தேவி வீணையை வித்தியாசமாக ஏந்தி இருக்கும் அரிய காட்சி
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
இக்கோவிலில், இறைவி ஞானாம்பிகை சன்னதியின் பின்பக்கம் சரசுவதி தேவி, மூன்றரை அடி உயரத் திருமேனியுடன், சற்று வித்தியாசமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.பொதுவாக சரசுவதி தேவி, வீணையை தன் மடியிலிருத்தி தன் கை விரல்களால் அதை மீட்டும் நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில் சரசுவதி தேவி வீணையை தன் இடது கரத்தில் செங்குத்தாக, தம்புராவை வைத்திருப்பது போல் காட்சி அளிப்பது, வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.