
ஆனேகுட்டே விநாயகர் கோவில்
நெற்றியில் நாமம் தரித்த விநாயகர்
கர்நாடகா மாநிலம், உடுப்பியிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் ஆனேகுட்டே விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆனே என்றால் யானை, குட்டே என்பது சிறுகுன்றைக் குறிக்கிறது. யானை முகத்துடன் விநாயகர் குடியிருக்கும் குன்று என்பதே ஆனேகுட்டே என்றானது. கோவில் கருவறையில் விநாயகர் ஒரே கல்லிலான யானை முகம் கொண்ட 12 அடி உயரம் கொண்ட திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த விநாயகர் திருமேனியானது தமிழகத்தில் உள்ள விநாயகரின் வடிவமைப்பு போல் இல்லாமல், யானை போன்ற உருவ அமைப்பில் உள்ளது. இங்கு அமைந்துள்ள விநாயகரின் நான்கு கரங்களில், மேலிரு கரங்கள் வரம் தரும் வரஹஸ்தத்துடனும், கீழ் இரு கரங்கள் சரணடைந்தோரை காக்கும் அபயஹஸ்தத்துடனும் அமைந்திருக்கின்றன. இந்த விநாயகருக்கு நெற்றியில் திருநீறுக்குப் பதிலாக நாமம் அணியப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள விநாயகருக்கு விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்ற பெயர்களும் உண்டு. தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப் படுகின்றது.இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாக பக்தர்களிடம் ஒரு நம்பிக்கையுள்ளது
திருவிழாக்கள்
இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பிரார்த்தனை
கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.

மும்பை சித்தி விநாயகர் கோவில்
நெற்றியில் கண் உள்ள விசித்திர விநாயகர்
மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ளது சித்தி விநாயகர் கோவில். இக்கோவில் 1801-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் என்றால் கேட்டதை, வேண்டியதை அப்படியே அருளும் விநாயகர் என்பது பொருள். மும்பை சுற்றுலாவின் தவிர்க்க முடியாத ஒரு இடம் சித்தி விநாயகர் கோவில்.
இந்த கோவிலில் உள்ள சித்தி விநாயகர் ஒற்றை கருங்கல்லால் ஆனவர். அவர் 2 அடி 6 அங்குல உயரமும், 2 அடி அகலமும் கொண்டவர். மற்ற விநாயகர் கோவிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர், தனது தும்பிக்கையை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் வைத்திருப்பது மிகவும் சிறப்பு. இந்த விநாயகரின் வலது கையில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழ் கையில் ஜெப மாலை வைத்துள்ளார். விநாயகர் பூணூலை ஒத்த, ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிகவும் விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. சித்தி விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் சித்தி மற்றும் ரித்தி(புத்தி) என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இவர்கள் விநாயகரின் பின் பகுதியிலிருந்து முளைத்து இருப்பது போன்றும், வளைந்து முன்பகுதியில் காட்சியளிக்கும் வண்ணம் விக்கிரகம் அமைந்துள்ளது. இரு பெண் தெய்வங்களுடன் காட்சி அளிப்பதால் இந்த விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார். இவரை மராட்டியில் நவசாக கணப்தி, நவச பவனார கணபதி என அழைக்கின்றனர்.
இக்கோவில் மிக நவீன பாணியில் கட்டப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்தாலும் கோவிலின் கோபுரம் தெரியும் வகையில், மிக உயரமாக, 5 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் பிரசாதம், பிரத்தியேக லிஃப்ட் மூலம் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அர்ச்சகர்களால் கணபதிக்கு படைக்கப்படுகின்றது.
சித்தி விநாயகர் கோவிலின் மிக முக்கியமான நாள் செவ்வாய்க் கிழமை. செவ்வாய்க்கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அலை மோதும். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து விடுவார்கள். அடுத்த நாள் புதன்கிழமை அதிகாலை 12.30 மணி வரை நடை திறந்திருக்கும். ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் சங்கடஹர சதுர்த்தி வரும். இதை அங்காரக சதுர்த்தி என்பர். அந்த நாளில் விநாயகரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.
பிரார்த்தனை
குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்தவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கின்றார். வேண்டியது நிறைவேறினால், கோயிலுக்கு வந்து விளக்கேற்றி, எருக்கம்பூ, இலை மாலையை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் பணக்காரராக மாறிவிடுவார்கள் என்று நம்புகிறார்கள். இந்தியாவின் மிக பணக்கார கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்
ஸ்ரீரங்கம் கோவில் உருவாகக் காரணமான உச்சிப்பிள்ளையார்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார் தலங்களில் முதன்மையானது, திருச்சி மாநகரில் அமைந்துள்ள மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் ஆகும். பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் 275 அடி உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த மலையானது தென்தமிழகத்தின் கைலாயம் என்று போற்றப்படுகின்றது. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன.
இந்த மலைக் கோவிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும், தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும்.உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.
தல வரலாறு
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தி திரும்பிய ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் இராவணனின் சகோதரன் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக ராமர், விபீசணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் ராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.
விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், ரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார். சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், ரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் குட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.
விபீசணன் குட்டியதால் ஏற்பட்ட வீக்கத்தை இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் காணலாம்.
ரங்கநாதரின் சிலை வைக்கப்பட்டிருந்த இடம் நீண்ட காலமாக தீவு பகுதியான அடர்ந்த காடுகளுக்குள் மூடப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகள் கடந்து ஒரு சோழ மன்னன் கிளியைத் தேடிக் கொண்டு வரும் போது தற்செயலாக அந்த சிலை இருந்ததைக் கண்டுபிடித்தார். பின்னர் பிரம்மாண்டமான ஸ்ரீரங்கம் கோவிலை கட்டினார்
விநாயகர் சதுர்த்தி விழா - 75 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம்
விநாயக சதுர்த்தியன்று மலைக்கோட்டை கீழ் சன்னதியில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் மலைக்கோட்டை மேல் எழுந்தருளி இருக்கும் உச்சிப் பிள்ளையார் ஆகிய இரு சன்னதிகளுக்கும் தலா 75 கிலோ கொழுக்கட்டை என 150 கிலோ மெகா கொழுக்கட்டை படைக்கப்படுவது வழக்கம். இதற்காக கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஒருநாள் முன்பே கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். பச்சரிசி, மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பின்னர் அவற்றை இருபங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணிநேரம் ஆவியில் வேக வைப்பார்கள். இந்தக் கொழுக்கட்டை சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து கொண்டுவரப்படும். பின்னர் இரண்டு விநாயகருக்கும் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

திருப்புறம்பியம் சாட்சிநாதேசுவரர் கோவில்
விநாயகர் சதுர்த்தியன்று செய்யப்படும் தேன் அபிஷேகத்தை உறிஞ்சும் அதிசய விநாயகர்
கும்பகோணத்தில் இருந்து 11 கி.மீ . தொலலைவிலுள்ள தேவாரத்தலம் திருப்புறம்பியம். இறைவன் திருநாமம் சாட்சிநாதேசுவரர். இறைவியின் திருநாமம் கரும்பன்ன சொல்லம்மை.
தல வரலாறு
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தனமயால், இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப்பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை, வருண பகவான் உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் முழுக்க முழுக்க தேனால் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். மாலை 6:30 மணிக்கு தொடங்கப்படும் அபிஷேகம் விடிய விடிய நடைபெறும். .அபிஷேகம் செய்யப்பெறும் தேன்யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். இந்தத் தேன் அபிஷேகம் நடைபெறும் வேலையில் விநாயகர் செம்பவளத் திருமேனியராய் காட்சித் தருகிறார் வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
விநாயகர் சதுர்த்தி அன்று பிரளயம் காத்த விநாயகரை வணங்கினால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும்.

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
வியக்க வைக்கும் அதிசயத் தூண் - கோவில் தூணுக்குள் வெளியே எடுக்க முடியாதபடி உருளும் கல் பந்து
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை.
நமது முன்னோர்கள் கோவில்களில் வடித்து வைத்துள்ள சிற்பங்களும், கலை நயம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளும் நம்மை பிரமிக்க வைக்கும். அப்படிப்பட்ட ஓர் அற்புதமான வேலைப்பாட்டை, இந்த கோவிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் இருக்கும் ஒரு தூணில் நாம் காணலாம்.
இந்த தூணின் மூன்று பக்கங்களில் சுமார் ஒரு அடி நீளத்திற்கு நீள் செவ்வக துவாரம் அமைந்திருக்கின்றது. தூணுக்குள் கல்லாலான ஒரு பந்து இருக்கின்றது. இந்தப் பந்தை நாம், தூணுக்குள் ஒரு அடி தூரத்திற்கு மேலும் கீழும் நகர்த்த முடியும். ஆனால் அந்தக் கல் பந்தை நாம் தூணை விட்டு வெளியே எடுக்க முடியாது. இப்படி ஒரே கல்லிலான தூணில் மூன்று பக்கம் துவாரம் ஏற்படுத்தி, அதன் உள்ளிருக்கும் கல்லை பந்து போல் வடிவமைத்து ஆடவிட்டு இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.

ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்
விநாயகரும் ஆஞ்சநேயரும் எதிர் எதிரே தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கில், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி.
ஆர்(அத்தி) மரங்கள் அணி, அணியாய் சேர்ந்து காடாகி இருந்த இடமாக இருந்ததால, இந்த ஊருக்கு ஆரணி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் கமண்டல நாகநதிக்கரையில் அமைந்துள்ளது. ஆற்றுப்பாலத்துக்கு இடப்பக்கத்திலிருக்கும் இக்கோவிலுக்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இடப்புறத்தில் படித்துறை விநாயகர் சன்னிதி அமைந்திருக்கின்றது. அவருக்கு எதிர்புறம், கோவிலின் வலப்புறத்தில் ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றார். இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது. இங்கிருக்கும் ஆஞ்சனேயர் கையில் சங்கு, சக்கரம் இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கி துவங்குவதும், அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்வதும் நமது வழிப்பாட்டு முறையாகும். இந்த நடைமுறையை சுட்டிக்காட்டும் விதமாக, கோவிலை வலம் வர ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்து, இறைவனை தரிசித்து கடைசியில் ஆஞ்சநேயரை வணங்கி நமது கோவில் தரிசனத்தை முடிக்கும் விதமாக இக்கோவில் அமைப்பு அமைந்திருக்கின்றது.
பிரார்த்தனை
ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால் உண்டாகும் புத்திர தோஷமும், நாகதோஷமும் நீங்க, இக்கோவிலில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திரகாமேஷ்டி யாகத்தினை செய்தும் தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். பரிகார தலம் என்பதால் திருமணம் செய்ய உகந்த இடமாக விளங்குகின்றது. மேலும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றது.

காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக விளங்கிய அரசு காத்த அம்மன்
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவிலின் தெற்கு கோபுரத்திற்கு அருகில், சன்னதி தெருவில் அமைந்துள்ளது அரசு காத்த அம்மன் கோவில். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலிருந்து வடமேற்கு திசையில் சுமார் அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கருவறையில் அரசு காத்த அம்மன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் வடக்கு நோக்கி வீற்றிருகிறாள். அம்மன் வலது காதில் குண்டலம், இடது காதில் தோடு அணிந்து காட்சி தருகிறாள். இரு கோரைப் பற்களும், நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகை இடது காலால் அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
தல வரலாறு
பார்வதி தேவி, சிவபெருமான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காக காஞ்சியில் தவம் செய்தார் . பார்வதி தேவியின் அந்த தவத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக, அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய எட்டு பெண் தெய்வங்கள் பார்வதி தேவிக்கு காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால் 'அரசு காத்த அம்மன்' என்று பெயர் வந்தது .
செல்வம் பெருக்கும் அம்மன்
அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. 'சம்பத்' என்றால் செல்வம். 'கரி' என்றால் யானை. யானை மீது பவனி வந்து செல்வங்களை வாரி வழங்குவதால் இப்பெயர் வந்தது. இதற்கு அடையாளமாக அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பு இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
வாதம், தோல் நோய், வாய் பேச இயலாதவர்கள் தங்கள் பிரச்சனை தீர இந்த அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணன் கோவில்
நரசிம்ம அவதாரம் எடுக்கு முன்னரே அக்கோலத்தை பெருமாள் காட்டி அருளிய திவ்ய தேசம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திவ்ய தேசம் திருக்கோஷ்டியூர். கருவறையில், சௌமிய நாராயண பெருமாள், பிரம்மாண்டமான வடிவில் ஐந்து தலை நாகத்தின் மேல் பள்ளி கொண்ட கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவிருடன் மற்றும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா மற்றும் அவரது மூன்று மனைவியர்கள் சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி ஆகியோருடன் காட்சி அளிக்கிறார். இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்குப் பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். தாயார் திருநாமம் திருமாமகள்.
ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோவிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஒரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது. விமானத்தின் கீழ்த் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சௌமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபத நாதர் (வைகுண்ட பெருமாள்) என பெருமாள் நான்கு நிலைகளில் அருளுகிறார். பொதுவாக கோவில்களில் உற்சவர் விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது. இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம்.
தல வரலாறு
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார். மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டியருளும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.
திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம்
இத்தலத்தில் வாழ்ந்த திருக்கோட்டியூர் நம்பியிடம், வைணவ ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர் எட்டெழுத்து மந்திரத்தை 'எவருக்கும் வெளியிடக்கூடாது' என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி மக்கள் அனைவரும் கேட்கும்படி, மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். ராமானுஜர் உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தால் (ஓம் என்பது ஓரெழுத்து) திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இதற்குண்டு.
பிரார்த்தனை
இந்தக் கோவிலில் விளக்கு நேர்த்திக் கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி பெருமாளிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில்
நெற்றியில் நாமத்துடன் இருக்கும் நந்தி
புதுக்கோட்டை- ராமேசுவரம் சாலையில் 20 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ஆலங்குடி நாமபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் நாமபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அறம்வளர்த்த நாயகி.
மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில், திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதை மால்விடை என்பார்கள். மால் என்றால் மகாவிஷ்ணு; விடை என்றால் எருது. திரிபுராந்தகர் என்ற மூன்று அசுரர்களை அழிக்க சிவன் செல்லும்போது, மகாவிஷ்ணு நந்தியாகி அவரை சுமந்து சென்றார்.
புதன் பிரதோஷம்
சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இங்கு புதன் பிரதோஷம் சிறப்பாக கருதப்படுகிறது. புதனுக்கும், சனீஸ்வரருக்கும் அதிதேவதை மகாவிஷ்ணு. கருவறை சுவரின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு உள்ளார். இதனால் இங்கு சனி பிரதோஷத்தை விட புதன் பிரதோஷம் சிறப்பாகிறது. புதன் கல்வி அறிவை வழங்குபவர் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்நாட்களில் இங்கு வந்து வழிபடலாம்.
இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும் , வழக்கமாக உடன் இருக்கும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக, இரண்டு ரிஷிகளுடனும் அருள்பாலிக்கிறார். காலடியில், முயலகன் இருக்கிறான். இவரை மேதா தட்சிணாமூர்த்தி என்கின்றனர். ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், நவக்கிரக குரு தலம் உள்ளதால், இத்தலத்தை இரண்டாம் குரு தலம் என்று சிறப்பிக்கின்றனர்.
பிரார்த்தனை
குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் நீங்கவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
ஆங்கிலேய அதிகாரியின் வயிற்று வலியை தீர்த்த பழனி ஆண்டவர்
பழனிமலை தண்டாயுபாணிக்கு, ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகி றது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. தினமும் ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி ஆறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அந்த அலங்காரங்கள்
விளாபூஜை - காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம்
சிறுகாலசந்தி - காலை 8 மணிக்கு வேடர் அலங்காரம்
காலசந்தி - காலை 9 மணிக்கு பாலசுப்ரமணியர் அலங்காரம்
உச்சிகாலம் - பகல் 12 மணிக்கு வைதீகாள் அலங்காரம்
சாயரட்சைபூஜை - மாலை 5.30 மணிக்கு இராஜ அலங்காரம்
அா்த்தஜாம பூஜை - இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரம்
வெண்ணெய்யும், கோதுமை ரொட்டியும் நைவேத்தியம்
சிறுகாலச்சந்தி பூஜையின் போது ( காலை 8.00 - 8.30 மணி ) பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் முடிந்தபின் வேடர் அலங்காரம் செய்யப்படுகிறது. பழனி ஆண்டவருக்கு நைவேத்தியமாக மிளகு, சாம்பார்சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டி படையலாகப் படைக்கப்படுகின்றது. அவருக்கு வெண்ணையும், கோதுமை ரொட்டியும் படைக்கப்படுவதின் பின்னணியில் அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இருக்கின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பழனிப் பகுதியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்றுவலியைத் தீர்த்தருளுமாறு பழனியாண்டவரை அவ்வதிகாரி வேண்டிக் கொண்டார். வலி தீர்ந்தால்தாம் உண்ணும் உணவை பழனியாண்டவருக்குப் படைப்பதாகவும் வேண்டிக்கொண்டார். இறைவன் அவ்வதிகாரியின் தீராத வயிற்று வலியைத் தீர்த்து அருளினார். அன்று முதல் சிறுகாலபூஜையின்போது வெண்ணெய்யும், நெய்யால் சுடப்பட்ட கோதுமை ரொட்டியும் ஆண்டவருக்கு படையாலகச் சேர்த்துப் படைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
நெடுநாட்களாக முடியாமல் இழுத்தடிக்கும் வழக்கு தீராத நோய் போன்ற பிரச்சினைகள் தீர பழனி ஆண்டவரை, அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது நல்லது. வீட்டில் நடைபெறப்போகும் திருமணம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

காஞ்சிபுரம் ஜுரஹரேஸ்வரர் கோவில்
உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் நோய்களை தீர்க்கும் தலம்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஜுரஹரேஸ்வரர் கோவில். இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஒரு சமயம் தேவர்கள் அனைவரையும் வெப்ப நோய் தாக்கியது. வெப்பம் தாக்கியதில் அவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் ஜுரம் ஏற்பட்டது போல் உடல் வெப்பம் மிகுந்து துடித்தனர். பின்பு சிவனை தேவர்கள் சரணடைந்த போது, சுரன் என்கிற அசுரனை அழித்து பின்பு காஞ்சி நகரில் ஜுரஹரேஸ்வரர் என்கிற பெயரில் லிங்க வடிவில் தான் கோவில் கொண்டுள்ளதாகவும், அந்த லிங்கத்தை வழிபட்டால் ஜுரம், காய்ச்சல் தீர்ந்து உடல் வெப்பம் தணியும் எனக் கூறி அருளினார் சிவபெருமான்.
சிவபெருமான் பைரவர், வீரபத்திரர், சோமாஸ் கந்தர், தட்சிணாமூர்த்தி என்பது போன்ற 64 வடிவங்களில் அருள்பாலிக்கிறார். அவற்றில் ஒரு திருமேனி வடிவம்தான் ஜுரஹரேஸ்வரர். இந்த வடிவில் சிவபெருமான் இரண்டு தலைகள், ஏழு கைகள், நான்கு கொம்புகள், மூன்று கால்கள் கொண்ட தோற்றத்தில் காட்சி தருகிறார்.
ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் போன்று இக்கோவிலிலும் பிரணவாகார விமானம் கோபுரம் இருக்கிறது. இந்த கோபுரத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல், ஜுரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று, வெளிச்சம் போன்றவை பக்தர்களின் காய்ச்சல் போன்ற பல நோய்களை போக்குவதாகக் கூறப்படுகிறது. கோயிலின் கருவறையில் கருங்கல்லாலான ஜன்னல் இருக்கிறது.
சிற்பக்கலை பொக்கிஷம்
மிகப் பழமையான கோவில் என்பதாலும் மிக அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதாலும், இக்கோவில் தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இக்கோவிலில் உள்ள சிரிக்கும் தோற்றத்தில் உள்ள நந்தி, கோவில் விமானம் மற்றும் கருவறையின் அமைப்பு, கோவில் விமானத்தின் அடிச் சுற்றில் உள்ள சிற்பங்கள், படிக்கட்டுகள், கோவில் விமானம் மற்றும் கருவறையில் உள்ள கருங்கல் ஜன்னல்கள் ஆகியவற்றின் அழகும், கலை நுணுக்கமும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். காஞ்சிபுரத்தில் நாம் தரிசிக்க வேண்டிய கோவில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகின்றது. இக்கோவில் ஒரு சிற்பக்கலை பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.
பிரார்த்தனை
ஜுரம், காய்ச்சல் போன்ற பல நோய்கள் தீர இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில்.
பெருமாளுக்கு பொரிகடலை மாவு நைவேத்தியம்
தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் அமைந்துள்ளது கோவிலூர் சென்னகேசுவர பெருமாள் கோவில். கருவறையில் மூலவர் சென்னகேசுவரப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சென்னகேசுவர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப் போன்றே காட்சி தருகிறது. பொதுவாக பெருமாள்கோவில்களில் பைரவர் இருப்பதில்லை. ஆனால், இந்தக் கோவிலில் மூலவருக்கு அருகாமையிலேயே பைரவர் குடி கொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் காட்சி தருகிறார். ஆகையால், இந்த ஆஞ்சநேயர் வீர ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர்
பதினேழாம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இந்த ஊர் இருந்த போது இந்தக் கோயிலுக்கு மைசூர் மன்னர்களால், ஸ்ரோத்ரியம் எனப்படும் மானியம் வழங்கப்பட்டது. ஆகையால் இந்த ஊஞக்கு ஸ்ரோத்ரியம் கோவிலூர் என்று பெயர் ஏற்பட்டது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வர் பெருமாளிடம் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தனர். அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர். இவரை திருமலை வெங்கடாஜலபதியின் மூத்த சகோதரர் என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் விதவிதமான நைவேத்தியங்கள் செய்யப்படும். ஆனால் இக்கோவிலில் வித்தியாசமாக, பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிமாவு கடலையை நைவேத்தியமாக படைக்கிறார்கள்
பிரார்த்தனை
கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத் தடை நீங்கவும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும் இந்தக் கோவில் பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

பட்டீஸ்வர கோபிநாதப் பெருமாள் கோவில்
தென்னாட்டின் துவாரகை
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீசுவரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது கோபிநாதப் பெருமாள் கோவில். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சுவாமிநாத ஐயர் இக்கோவிலை தென்னாட்டின் துவாரகை என்று குறிப்பிட்டார். மூலவர் கோபிநாதப் பெருமாள், ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சியளிக்கிறார். இந்த கோவிலின் தல புராணத்தின்படி, பெருமாள் ராமாயணத்தில் அனுமனுக்கு ராமனாக தனது வடிவத்தை காட்டியது இங்குதான்.
1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை ஏந்தி இருக்கும் இரட்டை ஆஞ்சநேயர்
இத்தலம் மகாபாரதத்துடனும் தொடர்புடையது. இங்கு ஒரு காலத்தில் அழகான நீர் அல்லிகள் கொண்ட ஒரு பெரிய குளம் இருந்தது. அல்லி மலர்கள் 1000 இதழ்களுடன் மலர்ந்து காணப்பட்டன. திரௌபதி ஒருமுறை பீமனை அல்லி மலர்களை கொண்டு வர அனுப்பினாள். பீமன் இங்கு அல்லி மலர்களைப் பறிக்க வந்த போது, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த அனுமனை எதிர்கொண்டான். அவன் அனுமனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அனுமனை ஒரு குரங்காக பாவித்து அவருடைய வாலை நகர்த்தி வழி விடச் சொன்னான். ஆனால் அதற்கு பதிலாக அனுமன் தனக்கு வயதாகிவிட்டதாகக் கூறி, பீமனை தன்னுடைய வாலை நகர்த்தச் சொன்னார் பீமன் பலமுறை முயற்சித்தும் தோல்வியுற்றான், அது சாதாரண குரங்காக இருக்காது, மாறாக அனுமன் என்பதை உணர்ந்தான். பீமன் தன் தவறை உணர்ந்து கொண்டதை அனுமன் அறிந்து, தன் விஸ்வரூபத்தின் மூலம் பீமனுக்கு தன்னை வெளிப்படுத்தினான். பீமன் அவரை வணங்கிய பிறகு, அனுமன் திரௌபதியிடம் திரும்ப எடுத்துச் செல்ல 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை அவருக்கு வழங்கினார்.
இக்கோவிலில் தனி சந்நிதியில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். இரண்டு ஆஞ்சநேயகளும் தங்கள் கையில் 1000 இதழ்கள் கொண்ட அல்லி மலரை வைத்திருக்கிறார்கள்.

சென்னை சௌகார்பேட்டை ஏகாம்பரேசுவரர் கோவில்
ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தரும் காமாட்சி அம்மன்
சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று, தங்கசாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஏகாம்பரேசுவரர் கோவில். இக்கோவில், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பாரிமுனையில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது. இறைவியின் திருநாமம் காமாட்சி.
இத்தலத்து அம்பாள் காமாட்சி, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தின் மூலம் உணர்த்தியது போல, இத்தலத்து காமாட்சி அம்பாள் ஆவுடையார் மேல் நின்றபடி சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். அதனால் இங்கு அம்மனே பிரதானமாகவும் கருதப்படுகிறார். அம்பாளின் பாதத்திற்கு முன் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆலயத்தில் அம்பாளுக்கு எதிராக சனீஸ்வரர் வீற்றிருப்பதால், இத்தல அம்மனை வழிபட்டால் சனியின் கெடு பார்வையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பிரார்த்தனை
திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்குகிறது.

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.
திருச்செங்கோடு தலத்தில் சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சி தருவது போல, இத்தலத்தில் கிருஷ்ணனும், ருக்மிணியும் இணைந்த 'சம்மோகன கிருஷ்ணர்' எனும் அபூர்வ கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி இருவரும் இணைந்திருக்கும் கோலத்திற்கு கோபால சுந்தரி என்ற பெயரும் உண்டு.
இக்கோவில் மகாமண்டபத்தின் வலது புற விளிம்பில் ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணருக்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது. கருவறையில், இந்த இருவரும் இணைந்த கோலத்தில் வலப்புறம் ஆண் உருவமும், இடப்புறம் பெண் உருவமும் கொண்டு, சங்கு, சக்கரம் அங்குசம், தாமரை, மலர், கரும்பு வில், மலரம்புகள். வேணு என்ற புல்லாங்குழல் ஆகியவற்றை ஏந்திய எட்டு கரங்களோடு, அழகான தாமரைக் கண்களும், திவ்ய ஆபரணங்களும் அணிந்து, த்ரிபங்க நிலையில், சம்மோகன கிருஷ்ணர் தோற்றமளிக்கிறார்.
பூரணஅலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து ரத்ன கிரீடமும் மயிற்பீலியும் தரித்து கருணை மழை பொழியும் கண்களோடு அருள் பொழியும் கோபாலனும் சுந்தரியும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோகன கிருஷ்ணர் திருகோலத்தை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சகல சௌபாக்யங்களும் வந்து சேரும். கோரும் வரங்கள் யாவும் அனுகூலமாக சித்திக்கும்.அனைத்து சம்பத்துக்களும் சேரும். இத் திருக்கோலத்தை உபாசித்தால் குபேர வாழ்வு பெறலாம்.
சம்மோகன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம்
மரிசீ மகரிஷி இயற்றிய கீழ்க்கண்ட அரிய சக்தி வாய்ந்த சம்மோஹன கிருஷ்ணர் (கோபால சுந்தரி) ஸ்லோகம் நிம்மதியற்ற குடும்பங்களில் மன நிம்மதியையும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும்.
“ஸ்ரீக்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்
பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரீரூபிணம் ததா
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்
இட்சீ சாபம் வேணு வாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் ஸ்ரீக்ருஷ்ண மாஸ்ரயே!”
காலையில் நீராடிய பின்பு மூன்று முறையும், இரவில் உறங்கப் போகும். முன்பு ஒரு முறையும் இந்த ஸ்லோகத்தை சொல்வது அளவற்ற நன்மையைத் தரும். முக்கியமாக திருமணமான பெண்களுக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தரும். திருமணமாகாத பெண்களுக்குக் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.
இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களுக்காக நடத்தப்படும் லட்சார்ச்சனை
இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் ஆண்டிறுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இத்தலத்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடத்தப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எங்கும் இப்படிப்பட்ட லட்சார்ச்சனை நடத்தப்படுவதில்லை.

வடசேரி கிருஷ்ணன் கோவில்
சந்தான வரம் அருளும் பாலகிருஷ்ணன்
நாகர்கோவில் நகரத்தின் வடசேரி பகுதியில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். இத்தலம் தென் திசையின் குருவாயூர் என்று அழைக்கப்படுகிறது. குருவாயூர் கிருஷ்ணனைப் போலவே, இத்தலத்து மூலவர் பாலகிருஷ்ணன் குழந்தை வடிவில், தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய் வைத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் சற்றே மடக்கி நின்றபடி காட்சி அளிக்கிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தபோது அவரது குழந்தை பருவத்தில் கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது ராஜகோபாலர் என்றும் அழைக்கப்பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு மூலவராக கிருஷ்ணரையும், உற்சவராக ராஜகோபாலரையும் வடித்துள்ளனர். உற்சவர் ராஜகோபாலர் ருக்மணி மற்றும் சத்யபாமாவுடன் காட்சி தருகிறார்.
இந்த குழந்தை பாலகிருஷ்ணன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்குகிறார். தினந்தோறும் பாலகிருஷ்ண சாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியன்று நள்ளிரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். அப்போது சுவாமி விசேஷ அலங்காரத்தில் தத்ரூபமாக, குழந்தை போலவே காட்சியளிப்பார்.
தல வரலாறு
கி.பி. 13-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த ஆதித்தவர்ம மகாராஜா, குருவாயூர் கிருஷ்ணனின் சிறந்த பக்தர். ஒருமுறை கிருஷ்ணர் இவரது கனவில் கையில் வெண்ணெயுடன் குழந்தைக் கண்ணனாக காட்சி தந்தார். அது மட்டுமன்றி தனக்கு கோயில் அமைய இருக்கும் இடத்தையும் குருவாயூரப்பனே கூறியுள்ளார். நாளை காலை சூரிய உதயத்தின் போது அருகே இருக்கும் கானகத்திற்கு செல். அடர்ந்த மரச்சோலைக்குள் சிறிய குளம் ஒன்றின் அருகே கருடன் இருப்பான்.அவ்விடமே எனக்கு கோவில் அமைய ஏற்ற இடம் என்று கூறியுள்ளார். அதன்படி மறுநாள் காலை அவ்விடம் வந்த ஆதித்தவர்ம மகாராஜா கருடனை கண்ட இடத்திலேயே கோயில் எழுப்பினார். அதுதான் இப்பொழுது கோவில் அமைந்திருக்கும் இடம். தான் கனவில் கண்ட வடிவத்திலான கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (நவநீதம் என்றால் வெண்ணெய்) என திருநாமம் சூட்டினார்.
குழந்தை கிருஷ்ணருக்கு வெள்ளி தொட்டிலில் தாலாட்டு
ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ணன் சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.
தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, குழந்தை கிருஷ்ணரை வெள்ளி தொட்டிலில் கிடத்தி, தாலாட்டு பாடி பூஜிக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு கிருஷ்ணருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி, பால் பாயாசம், உன்னியப்பம், பால்,பழம்,அரிசிப்பொரி,வெண்ணெய்,அவல்,சர்க்கரை படைக்கின்றனர். தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து பால கிருஷ்ணனை வழிபட்டு வெண்ணையும், பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்
பீடத்தின் வடிவில் காட்சி தரும் அபூர்வ முருகன்
விருத்தாச்சலம் – சேலம் சாலையில், விருத்தாசலம் நகருக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் கோவில். இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். குளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே முருகன் தோன்றியதால் இவர் 'குளஞ்சியப்பர்' எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் 'கொளஞ்சியப்பர்' என திரிந்தது.
கருவறையில் எழுந்தருளி இருக்கும் முருகன், உருவத்திருமேனி கொண்டவர் அல்லர். கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனியினரும் அல்லர். உருவமும் – அருவமும் கலந்த அருவுருவத் திருமேனி கொண்டவர். ஒரு பீடத்தின் வடிவில் இங்கே காட்சி தருபவர். பலிபீட சொரூபமாக இருந்து முருகன் அருள்பாலிக்கிறார். 3 அடி உயரம் கொண்ட சுயம்பு பலிபீடப் பிரதிஷ்டையே மூலஸ்தானம். கருங்கற்பீடத்தின் கீழே முருகனது சடாட்சரம் பொறிக்கப்பெற்ற ஸ்ரீ சக்கரம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அபிசேக ஆராதனைகள் யாவும் பீட வடிவில் திகழும் முருகப்பெருமானுக்கே நிகழ்த்தப் பெறுகின்றன.
பிறந்த 90 நாட்கள் கழித்து குழந்தைக்குப் பெயரிடுதல், சட்டை நகை போடுதல் இங்கு ரொம்பவும் விசேடம். குழந்தை பிறந்ததிலிருந்து இந்தக் கோவிலுக்கு வரும்வரைக்கும் குழந்தைக்கு சட்டை போட மாட்டார்கள்; பொட்டு கூட வைக்க மாட்டார்கள். இந்த சந்நிதிக்கு வந்த பின்னரே குழந்தைக்கு சட்டை போட்டு, பொட்டு வைக்கிறார்கள்.
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மருந்தாகும் முருகனின் விபூதி பிரசாதம்
ப்பெண்ணெயை பக்தர்கள் வாங்கிக் கொண்டு போய் கொளஞ்சியப்பர் சந்நிதியில் வழங்க, அர்ச்சகர் அதனை இறைவன் பாதத்தில் வைத்து வழிபட்டு, முருகனின் பிரசாதமான விபூதியைச் சிறிது அந்த எண்ணெயில் இட்டு வழங்குகிறார். தீட்டுத் தடங்கல் இல்லாது நீராடித் தூய்மையாக இருந்து இவ்வெண்ணெயை பெற்றுத் தடவினால் தீராத பல புறநோய்கள் எல்லாம் குணமாகி விடுகின்றன. ஆறாத புண்கள், கட்டிகள், முதுகுப்பக்க பிளவைகள் முதலிய நோய்களுக்கும், மாடுகளின் கழுத்தில் வரும் காமாலைக் கட்டிகளுக்கும் கொளஞ்சியப்பர் அருள் கலந்த இவ்வெண்ணெய் கைகண்ட மருந்தாக விளங்கி வருகிறது. இவ்வெண்ணெய் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது.
புதுமையான 'பிராது கட்டுதல்' என்ற பிரார்த்தனை நடைமுறையும், பின்னர் நேர்த்திக்கடன் நிறைவேற்ற ராஜினாமா கட்டணம் செலுத்தும் முறையும்
இத்தலத்தில் பக்தர்கள் தம்குறை தீர்க்க வேண்டி செய்யும் பிராது கட்டுதல் என்ற நேர்த்திக்கடன் இங்கே மிகவும் புதுமையாக உள்ளது. இந்த பிராது கட்டுதல், நாம் நமது மேலதிகாரிகளுக்கு எழுதும் ஒரு முறையீட்டு மனுவின் நடைமுறை போல அமைந்துள்ளது. பிராது கட்டுவதற்காக கோயிலின் பிரகாரத்தில் முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். நியாயமான கோரிக்கைகள், 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில், முருகக் கடவுள் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. எந்த ஊரிலிருந்து வருகிறோமோ, அங்கிருந்து கிலோ மீட்டருக்கு 25 காசு வீதம் படிப்பணம் கட்டி வழிபட வேண்டும்.
கோரிக்கை நிறைவேறினால், இந்த தேதியில் நான் வந்து வைத்த பிராது கட்டுதல் நிறைவேறியதால், அதை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என ராஜினாமா கட்டணம் செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தலாம்.
குழந்தை வரம், கடன் தொல்லை, திருடு போன பொருள், ஏமாற்றப்பட்ட பணம், வேலை மாறுதல், குடும்ப கஷ்டம், பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர, தீராத வியாதிகள் போன்றவற்றுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்
நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டுவோருக்கு பலன் தரும் தலம்
காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கிலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கிலும் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. குழந்தையற்ற தம்பதியருக்கு குழந்தை பாக்கியத்தை தரும் பிரதான வழிபாட்டுத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. கருவறையில் மூலவர் புத்திரகாமேட்டீசுவரர் ஒன்பது தலை நாகத்தின் கீழ் எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்தி நீண்ட நாட்களாக தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலை கொண்டிருந்தார். குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, இத்தலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன்பின்னர், அவருக்கு ராமர், பரதன், லட்சுமணன். சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர், அவருக்கு யாகத்தின் பெயரால் புத்திரகாமேட்டீசுவரர் என்றே பெயர் சூட்டினார். கோவிலுக்கு நேரே, வெளியில் தசரதருக்கும் சன்னதி உள்ளது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில், முனிவர் போல கைகளில் ருத்ராட்ச மாலை. கமண்டலம் வைத்து காட்சியளிக்கிறார். தசரதர் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரார்த்தனை
திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் புத்திரகாமேட்டீசுவரரை வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வேண்டி, புத்திரகாமேட்டீசுவரரை வணங்குவோர், ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள் மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைக்கு அள்னதானம் பரிமாறி விரதமிருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமையன்று இங்கு புத்திரகாமேட்டீசுவரருக்கு செவ்வலரிப்பூ மற்றும் கோயிலில் உள்ள பவன் மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று சிவனுக்கு சிவாச்சாரியார்கள், புத்திரகாமேஷ்டி யாகம் நடத்துவர். இதிலும் கலந்து கொள்ளலாம். ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் உண்டாகும் புத்திர தோஷம் நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில்
ராகு- கேது உடன் இருக்க அருள் பாலிக்கும் ஸ்ரீசக்தி விநாயகர்
திருநெல்வேலி தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேது உடன் இருக்க ஸ்ரீசக்தி விநாயகர் அருள் பாலிக்கிறார் . ஸ்ரீவிநாயகருக்கு வலப்பக்கம் உள்ள ஐந்து தலை நாகத்தைப் பெருமாளாகவும், ஒற்றைத் தலை நாகத்தை சிவலிங்கமாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.
ஒருகாலத்தில், இந்த ஊரில் கோவிலே இல்லாமல் இருந்ததாம். இதனால் அங்கே அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்ததாக எண்ணிய ஊர்மக்கள் அதையடுத்து கூடிப் பேசி, இந்த விநாயகர் கோவிலைக் கட்டினார்கள்.விநாயகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும்போது, மக்கள் கூடவே ராகு-கேது (நாக) விக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் .
பிரார்த்தனை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். மாங்கல்ய தோஷம், புத்திர பாக்கிய தோஷம் ஆகியவற்றால் அவதிப்படுவோர், இங்கு நாக பிரதிஷ்டையுடன் அருள் தரிசனம் தரும் ஸ்ரீவிநாயகரை வழிபட, தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருடந்தோறும் ராகு-கேது பெயர்ச்சி அன்று ஸ்ரீகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சண்டி ஹோமம், ஆயுளை விருத்திப்படுத்த ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை இங்கே விமரிசையாக நடைபெறும்.

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தேவாரத்தலம்
வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான், நாரதர் மாங்கனியை சிவபெருமானிடம் தந்த பொழுது அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்று கூறி உலகிற்கு அறிவித்து சிவபெருமானையும், அம்பாளையும் வலம் வந்து வணங்கி கனியைப் பெற்றுக் கொண்டது இத் திருத்தலத்தில்தான். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இத் திருத்தலம் திருவலம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி திருவல்லம் என்றானது.
இக்கோவிலில் விநாயகர், கருவறையில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். அதனால் இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். முருகப் பெருமானுடன் நடந்த போட்டியில் விநாயகப் பெருமான் ஞானப் பழத்துடன் இத்திருத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவரை வணங்கும் பேறு பெறுவோர், பிறப்பற்ற நிலையை அடைவர் என்று சொல்கிறார்கள்.
இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.