திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயில்
அபரஞ்சி தங்கத்தினால் செய்யப்பட்ட அழகர் விக்ரகம்
திருமாலிருஞ்சோலை உற்சவமூர்த்திக்கு அழகர் என்றும், சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது.
’அபரஞ்சி’ என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள்.உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில்.
அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் விக்கிரகம் கருத்து விடும் என்ற அச்சமே காரணம்.
திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில்
மூலவரும், உற்சவரும் ஒரே தோற்றம் கொண்டிருக்கும் திவ்ய தேசம்
திருக்கண்ணங்குடி என்னும் திவ்ய தேசம் திருவாரூரிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தலத்தில் உள்ள மூலவர் திருநாமம் லோகநாதப் பெருமாள். தாயார் லோகநாயகி. உற்ஸவர் தாயாரின் திருநாமம் அரவிந்தநாயகி..திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்னவென்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே முக சாயலில் இருப்பது தான். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். கல்லால் ஆன மூலவரைப் போலவே உலோகத்தால் ஆன உற்சவரும் அதே கண்கள், மூக்கு, வாய் என்று அச்சு எடுத்தாற்போல அமைந்திருக்கும் தோற்றம் உவகை கொள்ள வைக்கிறது. இது வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
கோவிலடி அப்பக்குடத்தான் கோவில்
அப்பக்குடம் ஏந்திய பெருமாள்
தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு அருகில் உள்ள திவ்ய தேசமான கோவிலடி தலத்து பெருமாள் அப்பக்குடத்தான்,தனது வலது திருக்கரத்தில் அப்பக்குடத்தை அணைத்தவாறு சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், 'ஆதி ரங்கம்' என்னும் பொருள்பட 'அப்பால ரங்கம்' என்னும் பெயர் ஏற்பட்டது.
பெருமாள் அப்பத்தை உணவாக ஏற்றுக்கொண்ட திவ்ய தேசம்
உபரிசிரவசு என்பவன் பாண்டிய மன்னன்,. ஒரு நாள் வேட்டையாடச் சென்ற போது மதம் பிடித்த யானை ஒன்று கௌதமரின் ஆஸ்ரமத்தில் நுழைவதைப் பார்த்து, அதன் மீது அம்பெய்தான். மேலும் சீற்றமடைந்த அந்த யானை, வேதமோதிய வேதியன் ஒருவனைக் கொன்றது. இதனால் மன்னனுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' பிடித்தது. தன் பலமெல்லாம் இழந்து உடல் நலக்குறைவால் துன்பப்பட்டான்.இதனால் உபரிசிரவசு தன் அரசைத் துறந்து புண்ணியத் தலங்களில் புனித நீராடச் சென்றான். புரசங்காடுகள் நிறைந்த கோயிலடிக்கு வந்தவுடன் தெய்வ அனுக்கிரஹம் கிடைத்தது போல உணர்வு ஏற்பட்டதால் இத்தலத்தின் விசேஷத்தைத் தனது குலகுருவிடம் கேட்டான். அதற்கு அவர், துர்வாசரின் சாபத்தால் அசுரர்களால் துரத்தப்பட்டு பதவியிழந்த இந்திரனை மீண்டும் தேவலோக அதிபதி ஆக்கப் பெருமாள் இங்கு அருளினார் என்று எடுத்துக் கூறினார், 'சிறப்புமிக்க இத்தலத்தில் நீ தவம் செய்தால் உன் தோஷமும் விரைவில் நீங்கும்' என்று வழி காட்டினார். கோயிலடியில் உபரிசிரவசு மன்னன்தன் தோஷம் நீங்க தினசரி ஆயிரம் வேதியர்களுக்கு அன்னம் வழங்கி வந்தான். அதனால் அவன் மீது பெருமாள் கருணை கொண்டார். ஒரு நாள், அதிகாலையிலேயே ஒரு பிராமணர் வந்துவிட்டார். மன்னனின் பூஜை ஆரம்பிப்பதற்கு முன்பே, 'மிகவும் பசிக்கிறது எப்போது உணவு தயாராகும்" எனப் புலம்பத் தொடங்கினார். மன்னன் அவசர அவசரமாய் பூஜைகளை ஆரம்பித்து முடித்தான். பிராமணருக்கு உணவு பரிமாறச் சொன்னான். பிராமணர் ஒற்றை ஆளாக அத்தனை உணவையும் உண்டு விட்டார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். பிராமணர் அரை வயிறே நிரம்பியதாக முறையிட்டார். மன்னன்மீண்டும் உணவு சமைத்து பரிமாறிகிறேன் என்றான். மன்னனிடம், வேதியர் உருவில் வந்த பெருமாள் . 'மன்னனே! நான் சற்றே ஓய்வு எடுக்க வேண்டும், அந்தி சாய்ந்ததும் எனக்கு ஒரு குடம் நிறைய அப்பங்களைக் கொண்டு வா' என்று கூறிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார் .ஒரு குடம் முழுக்க அப்பம் நிரப்பப்பட்டு அந்தணராக வந்த பெருமாளின் அருகில் வைக்கப்பட்டது. அதில் ஒன்றைத் தின்று விட்டு மன்னனைப் பார்த்துச் சிரித்தார் பிராமணர். மன்னன் ஏதோ பரவசமாக உணர, பிராமணர் உடனே பெருமாளாக மாறி மன்னன் உபரிசிரவசுக்கு காட்சி தந்தார். அப்பத்தை விரும்பிக் கேட்டுத் தின்றதால், அன்று முதல் இந்தப் பெருமாளுக்கு 'அப்பக் குடத்தான்'என்ற வித்தியாசமான திருநாமம் ஏற்பட்டது. இன்றைக்கும் இரவு வேளையில் அப்பால ரங்கநாதருக்கு அப்பம்தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.
ஸ்ரீரங்கம்ரங்கநாதர் கோவில்
ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரம் திருவிழா
நம்பெருமாளுக்கு முகச்சவரம் செய்யும் வித்தியாசமான நிகழ்ச்சி
பெருமாளுக்கு பழைய சோறும், மாவடுவும் நைவேத்தியமாக படைக்கப்படுவதின் பின்னணிக் கதை
ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம். பிரம்மதேவன் கொண்டாடிய முதல் உற்சவம் `பங்குனி உத்திரம்’ என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம்.
ஸ்ரீரங்.கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவம் சற்று வித்தியாசமானது. இந்த உற்சவம் பழைய சோறும் மாவடுவும் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்தில் கலந்து கொள்ள பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு, ஜீயர்புரம் என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு முடிதிருத்தும் தொழிலாளர்களால் நடத்தப்படும் மண்டகப்படியில் கலந்து கொள்கிறார். சிகை அலங்காரம் செய்யும் தொழிலாளி ஒருவர் பெருமாளுக்கு நிலைக்கண்ணாடியை காண்பித்து, நிலைக் கண்ணாடியில் தெரியும் அவருடைய பிம்பத்திற்கு முகம் திருத்தம் பாவனை செய்கிறார். அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. வித்தியாசமான இந்த உற்சவத்தில் கலந்து கொண்ட பெருமாளுக்கு பழைய சோறும், மாவடுவும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
இந்த பழைய சோறு.. மாவடுவுக்குப் பின்னால், நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு கதை உள்ளது. ஒரு சமயம் ஜீயர்புரம் என்னும் காவிரிக்கரை அருகே உள்ள கிராமத்தில், வயதான பாட்டி மற்றும் அவளது பேரன் ரங்கனும் வசித்து வந்தனர். பாட்டி ஸ்ரீரங்கம் அரங்கன் மேல் மிகுந்த பக்தி உடையவள், ஒரு நாள் பேரன் ரங்கன், சவரம் செய்து கொண்டு திரும்பி வந்து விடுகிறேன் என்று பாட்டியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். சவரம் செய்து கொண்டு காவிரியில் குளிக்க இறங்கியவன், காவிரி வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டான். அரங்கனது அருளினால், அவன் மீது மாறாத பக்தி கொண்ட பேரன் உயிர் பிழைத்து, ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்தின் அருகே கரை சேர்த்தான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து அரங்கனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளே என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். தான் வீடு செல்லும் வரை பாட்டியைப் பார்த்துக் கொள்ளும்படி வேண்டினான். பின் அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டான்.
அதே சமயம் வெகு நேரமாகியும் திரும்பி வராத பேரனை நினைத்து அந்தப் பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுதபடியும்... பேரனை நினைத்து அழுதபடியும் காவிரிக்கரைக்குச் சென்றாள். காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆறுதல் படுத்த அரங்கன். முகத்திருத்தம் செய்த முகத்தோடு, குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் ரங்கனாக அங்கு வந்தார். பேரனை கண்ட பாட்டி மகிழ்ச்சி அடைந்து, அவனை வீட்டுக்கு கூட்டிச் சென்று, பசித்திருந்த பேரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிடச் சொன்னாள்.
பேரனின் உருவத்தில் பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், உண்மையான பேரன் ரங்கன் வீட்டிற்கு வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் அரங்கன் சிரித்தபடியே அங்கிருந்து மறைந்தார். பாட்டியும் பேரனும் ரங்கநாத பெருமாளின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து, பழைய சோறும்.. மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள், இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவில் இதை நடத்தி வருகிறார்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில்
ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி.
பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதியாக கருதப்படுகிறது. இத்தலத்தில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில், இந்த ஊரில் உள்ள சிவா, விஷ்ணு கோயில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.
உத்தமர் கோவில்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
சிவபெருமானின் தோஷத்தை நீக்கிய திவ்ய தேசம்
திருச்சி சேலம் வழியில், சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்ய தேசம் உத்தமர் கோவில். பெருமாளின் திருநாமம் புருசோத்தமன். இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் மனைவியருடன் அருள்பாலிக்கிறார்கள். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே தலத்தில் தரிசிப்பது அபூர்வம்.
சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்
ஒரு சமயம், சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி அவரை தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் உத்தமர் கோவில் தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் 'பூரணவல்லி' என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.
மும்மூர்த்திகளின் திருவீதி உலா
கார்த்திகை தீப திருவிழாவன்று, மும்மூர்த்திகளும் ஒன்றாக திருவீதி உலா வருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்..
மும்மூர்த்திகளும் மனைவியருடன் எழுந்தருளி இருப்பதால், தம்பதியர் இங்கு வழிபட்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. வாரிசு இல்லாமல் தவிப்பவர்கள், கொடிய நோயால் துடிப்பவர்கள், இங்குள்ள புருஷோத்தமனிடம் மனம்விட்டு பிரார்த்தித்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்
நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் திவ்ய தேசம்
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நான்குவழிச் சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 8 சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இத்தலத்தின் பெருமைகள் பற்றி நரசிம்ம புராணம், ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் பெருமாள் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக இவரை கொண்டாடுகின்றனர்.
பெருமாளுக்கு தினசரி நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம்
இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் 25 அடி நீளம், 15 அடி அகலமுள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட இந்த எண்ணெய், மழைக்கும், வெயிலுக்கும் திறந்த வெளியாக கிணற்றில் இருந்தாலும் கெட்டுப் போகாமல் இருப்பது விசேஷம் ஆகும். இந்த எண்ணெய் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நோய்களைத் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்
இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.
இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய 'அகத்தியம்' என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
பெருமாள் மூன்றடி மண் தானம் கேட்ட திவ்ய தேசம்
பெருமாள் விண்ணையும் மண்ணையும் அளந்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்த தலம் தான் திருக்கோவிலூர் திவ்ய தேசம். இத்தலத்து பெருமாளின் திருநாமம் உலகளந்த பெருமாள். இவருக்கு உலகளந்த திருவிக்கிரமன் என்ற திருநாமமும் உண்டு. கருவறையில் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். நெடிய திருமேனியுடைய இப்பெருமாள் மரத்தால் ஆனவர். இவர் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். பெருமாளின் காலடியில் தாயார், மிருகண்டு, மகாபலி ஆகியோர் காட்சி தருகிறார்கள்.
மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார்.ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான்.அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான், துர்க்கையைக் காண முடியும். ஆனால், 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே துர்க்கை அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில்
காலபைரவர் மூச்சு விடும் அதிசயம்
திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குறுங்குடி. இத்தலத்தில் பெருமாள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியுள்ளார். தாயார் குறுங்குடிவல்லி
சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இக்கோவிலில் சிவபிரான் 'மகேந்திரகிரி நாதர்' என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறார்.
இங்கே பெருமாள் சன்னதியில் காலபைரவர் அதிசயிக்கதக்க வகையில் இருக்கிறார். உள் பிரகாரத்தை சுற்றி வரும்போது பிரமாண்டமான தோற்றத்தில் இருக்கும் இவரே, இக்கோவிலின் காவல் தெய்வமாக இருக்கிறார்.
காலபைரவர் சன்னதியில், கருவறையின் மேற்பக்கம் ஒரு விளக்கும், கீழ்பகுதியில் ஒரு விளக்கும் ஏற்றப்பட்டிருக்கும். இவைத் தவிர பக்கவாட்டில் இரண்டு சரவிளக்குகளும் இருக்கும். இந்த நான்கு தீபங்களும் எரியும்போது தெரியும் பிரகாசமான ஒளியில் பைரவர் ரூபம் அழகாகக் காட்சியளிக்கும். இந்தக் கருவறைக்குள் எந்த திசையிலிருந்தும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் மேற்பகுதியில் உள்ள விளக்கின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டால் அசையும் தீபம் போல ஆடிக் கொண்டேயிருக்கும். கீழே உள்ள விளக்கின் தீப ஒளி எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கும்.
மேல் இருக்கும் விளக்கு மட்டும் வெளிபக்கமாகவும் , உள்பக்கமாகவும் அசைவது பைரவர் விடும் மூச்சு காற்று என சொல்லபடுகிறது. அதாவது பைரவர் மூச்சை இழுக்கும்போது தீபம் உள்பக்கமாகவும், மூச்சு வெளிவிடும்போது தீபம் வெளிப்பக்கமாகவும் அசைகிறது. மற்ற தீபங்கள் எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் அசையாமல் இருக்கும்போது அவருடைய முகத்துக்கு பக்கத்தில் இருக்கும் விளக்கு மட்டும் உள்பக்கம் வெளிபக்கமாக அசைவதை பகதர்கள் நேரில் கண்கூடாகப் பார்க்கலாம்.
குழந்தைப்பேறு வேண்டி இங்கே வழிபாடு நடத்துபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கிறது. இவருக்கு தயிரன்னமும், வடைமாலையும், பூசட்டையும் படைக்கப்படுகிறது.
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்
கருவறையில் உள்ள மூர்த்தஙகள் அனைத்தும் சுயம்புவாகத் தோன்றிய திவ்ய தேசம்
திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.
கோயிலின் கருவறையில் மூலவர் வானமாமலை என்கின்ற தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடிக்க , பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அமர்ந்திருப்பது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசிக் கொண்டும், சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோர் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.
இத்தலத்தில் பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடியும், மற்றொரு கையை மடியில் வைத்தும் காட்சி அளிக்கிறார். யார் தன் பாதத்தை சரணடைகிறார்களோ அவர்களுக்குத் தன் மடியில் இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள். இத்தகைய பெருமாள் கோலத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.
சில தலங்களில் மூலவர் மட்டும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கருவறையிலுள்ள தோதாத்ரி நாதர், பூதேவி, ஸ்ரீதேவி, சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி, ஊர்வசி, திலோத்தமா ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டப்பத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 மூர்த்தங்களும் சுயம்புவாக உருவானவர்கள். இப்படி கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தஙகளும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்
தாயார் பெருமாளைத் தாங்கியிருக்கும் திவ்ய தேசம்
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது. மூலவர் திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்). உற்சவர் தாடாளன். தாயார் லோகநாயகி.
உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம் பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.
பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கியிருப்பது போல தாயார் லோகநாயகி, திரிவிக்கிரமரை பதக்கமாக தன் மார்பில் தாங்கியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது ஐதீகம். பெண்கள் இவரை வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில்
வசிஷ்ட முனிவரிடம் கிருஷ்ணர் நடத்திய லீலை
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கண்ணங்குடி. பெருமாள் திருநாமம் லோகநாதர். உற்சவர் தாமோதர நாரயணன். மேலும் இக்கோவில், பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற நான்கு கிருஷ்ண க்ஷேத்திரங்கள் திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணமங்கை ஆகியவை ஆகும்.
வசிஷ்ட முனிவர் கிருஷ்ண பக்தியில் மிக சிறந்தவர். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கிருஷ்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,கிருஷ்ணனை விரட்டி சென்றார்.
திருக்கண்ணங்குடியை 'கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகின்றன. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கிருஷ்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால் கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன்,'வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்' என்றார். அதற்கு ரிஷிகள்,'கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்தருள வேண்டும்' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன் இத்தலத்தில் தங்கிவிட்டார். விரட்டி வந்த வசிஷ்டரும் கிருஷ்ணர் நடத்திய லீலையை அறிந்து கொண்டார். இந்நிகழ்வு நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் திருக்கண்ணன்குடி. கண்ணன் கட்டுண்டு நின்ற படியால், இத்தலம் 'கண்ணங்குடி' ஆனது.
கருடாழ்வாரின் சிறப்புத் தோற்றம்
எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார்.
குழந்தை வரம் அருளும் தலம்
குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில்
ஒவ்வொரு நாளும் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் திவ்ய தேசம்
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில், கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில். இங்கு, லட்சுமியை தன் இடது தோளில் ஏந்தியபடி காட்சி தருகிறார் நித்ய கல்யாணப் பெருமாள். லட்சுமியை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார். ஸ்ரீஆதிவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. தாயார் திருநாமம் கோமளவல்லி.
பெருமாளுக்கு அனுதினமும் திருமணம் நடந்த வரலாறு
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் மோட்சம் அடையவே, அவரைப் போலவே மோட்சம் அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம்,'திருமணம் செய்து கொள்ளாமல் மோட்சம் அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். காலவ முனிவர் என்பவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள். காலவ முனிவர் அந்த 360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள். இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று, பெருமாள் பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார்.
திருஷ்டி தோஷம் விலக்கும் தலம்
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள். இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும். அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோவில்
பெருமாளின் திருநெற்றியில் தழும்பு அமைந்துள்ள திவ்யதேசம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நன்னிலம்-காரைக்கால் செல்லும் சாலையில் அமைந்துள்ள திவ்யதேசம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவில். இது பஞ்சகிருஷ்ண தலங்களில் ஒன்றாகும். இந்தக் கோவில் நீலமேகப்பெருமாள் கோவில் எனவும் அறியப்படுகிறது.
மூலவர் நீலமேகப்பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.
இத்தலத்து உற்சவர் சௌரிராஜப் பெருமாள் என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். ‘சவுரி’ என்ற சொல்லுக்கு ‘முடி’ என்றும், ‘அழகு’ என்றும் பொருள்கள் உண்டு. ஒவ்வொரு பெருமாள் கோவிலுக்கும் தனிச்சிறப்பு இருப்பது போல், இத்தலத்து பெருமாளின் நடை அழகு தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.
உற்சவர் சௌரிராஜப் பெருமாளின் நெற்றியில் ஒரு தழும்பு உள்ளது அதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. ஒருநாள், திருக்கண்ணபுரம் திருக்கோவிலின் அரையர் வந்த போது, டில்லி சுல்தானின் படைகள், இத்திருக்கோவிலின் உயர்ந்த மதில்களை இடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைபதைத்தார். திரும்பி, பக்கத்திலிருந்த உற்சவமூர்த்தியைப் பார்த்தபோது, பகவான் வழக்கம்போல் புன்னகை மலர சேவை சாதித்துக் கொண்டிருந்தான் . “டில்லி சுல்தானின் இந்த அட்டூழியத்தை, சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாயே” என்று சொல்லி, கையிலிருந்த தாளத்தை எம்பெருமானை நோக்கி வீசியெறிந்தார். அது பகவானின் புருவத்தில் பட்டு ரத்தமும் கொட்டியது. உடனே அந்த ரத்தத்தைத் துடைத்து, இறைவனிடம் கதறியழுது, தன்னை மன்னித்துவிடும்படி வேண்டினார். அந்த வேண்டுதலுக்கு பலனும் உடனே கிடைத்தது. மறுநாள், டில்லி தளபதி, தனது அடுத்த இலக்காக மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலைப் படையெடுத்து அழிப்பதற்காகத் தனது வீரர்களை மதுரையம்மதிக்குச் செல்லும்படி ஆணையிட்டான். அதனால் திருக்கண்ணபுரம் திருக்கோயில் அடியோடு நாசமாவதிலிருந்து மயிரிழையில் தப்பியது. அரையர் தாளத்தை வீசியதால் சௌரிராஜப் பெருமானின் வலப்புருவத்துக்கு மேல் ஏற்பட்ட சிறு தழும்பு வடுவை இன்றும் நாம் தரிசிக்கலாம்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருப்பதி ரத சப்தமி உற்சவம்
தை மாதத்தில், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.
திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விசேஷமானது. இந்தத் திருவிழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையப்பசாமி ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். ஆனால் தை மாதம் ரத சப்தமியன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும்,ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். ரதசப்தமி அன்று நடைபெறும் வாகன சேவைகள்
சூரிய பிரபை வாகனம் - அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை.
சிறிய சேஷ வாகனம் - காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை
கருட வாகனம் - பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை
அனுமந்த வாகனம் - மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை
கல்ப விருட்ச வாகனம் - மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை
சர்வ பூபால வாகனம் - மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை
சந்திரபிரபை வாகனம் - இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை
சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்
திருநாங்கூர் பதினொரு பெருமாள்கள் கருட சேவை
பெரிய திருவடி எனப்படும், கருடாழ்வார் மீது பெருமாள் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை'. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பதினொரு பெருமாள்கள் கருட சேவை உற்சவம், 19.01.2026 திங்கள் கிழமை இரவு நடைபெறுகின்றது.
108 திவ்ய தேசங்களில் திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. அவை
1. திருமணிமாடக் கோவில்
2. திருக்காவளம்பாடி
3. திருஅரிமேய விண்ணகரம்
4. திருவண்புருடோத்தமம்
5. திருச்செம்பொன்செய் கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன்பள்ளி
தை அமாவாசைக்கு மறுதினம் மதிய வேளையில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திவ்ய தேசங்களில் இருந்து, ஸ்ரீநாராயணப் பெருமாள் (மணிமாடக் கோவில்), ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோவில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள், தங்க கருட வாகனத்தில் , திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருள்வார்கள். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி, ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார்.
அதையடுத்து, இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும்.
மேலும் பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசித்த புண்ணியம்
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது. அதாவது, இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால், அதற்கு ஈடான இன்னொரு திவ்யதேச பெருமாளை தரிசித்த புண்ணியமும் கிட்டும். மணிமாடக் கோவில் எம்பெருமானை வழிபடுவதால், இமயமலை பத்ரிநாத்திலுள்ள திருபத்ரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும். திருவைகுந்த விண்ணகரம் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீவைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர். அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரை பெருமாளை சேவித்த பாக்கியததை அருள்கிறார். திருத்தேவனார் தொகை பெருமாள், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தை பெருமாளை தரிசித்த பலனை அருள்கிறார். திருவண்புருஷோத்தம பெருமாளை தரிசித்தால் ராமன் அவதரித்த அயோத்தி திவ்ய தேசத்தை தரிசித்த பலன் கிட்டும். செம்பொன்செய் கோவில் பெருமாள் காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். திருத்தெற்றியம்பலம் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளைச் சேவித்த புண்ணியத்தைத் தருவார். திருவெள்ளக்குளம் பெருமாள் திருமலை வேங்கடநாதனை தரிசித்த புண்ணியம் தருவார். திருமணிக்கூடம் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வணங்கிய நற்பலன்களைத் தருவார். திருக்காவளம்பாடி பெருமாள், காஞ்சிபுரம் பாடக பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். திருபார்த்தன்பள்ளி பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வழிபட்ட பலனை தருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம்
ஆண்டாளுக்கு செய்யப்படும் 'சவுரி அலங்காரம்' எனும் சிறப்பு அலங்காரம்
மார்கழி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தது. மாதத்தின் 30 நாள்களுக்கும் ஆண்டாள் அருளிய 30 பாசுரங்களையும் பக்தர்கள் பாடி வழிபடுவர். ஆண்டாள் அவதரித்த தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் மார்கழி திருப்பாவை பாடல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதன் ஒரு பகுதியாக ஆண்டாளுக்கு எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறும் .
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 8 நாள்கள் மார்கழி எண்ணெய்க் காப்பு உற்சவம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் 30 நாள்களும் நடைபெற்று வந்த இந்த வைபவத்தை மாத நிறைவின் 7 நாள் வைபவமாக ஸ்ரீராமாநுஜர் மாற்றி அமைத்தார். பிறகு, தோன்றிய மணவாள மாமுனிகள் இந்தத் திருத்தலத்தின் வைபவம் குறித்து அறிந்து தரிசிக்க வருகை புரிந்தார். ஆனால், அவர் வருவதற்குள் மார்கழி முடிந்துவிட்டது. எனவே, வருந்தி ஆண்டாளிடம் முறையிட்டார். ஆண்டாள், கோவில் ஆச்சார்யர்களின் கனவில் தோன்றி மாமுனிக்காக தை முதல்நாளன்றும் நீராட்டு உற்சவம் தொடர வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதன்படி எட்டாம் நாளும் உற்சவம் நடைபெற்றது.
இந்த மார்கழி எண்ணெய் காப்பு வைபவத்தின் போது ஒவ்வொரு நாளும் காலையில் கள்ளழகர் திருக்கோலம், கண்ணன் அவதாரகோலம், பெரியபெருமாள் அலங்காரம், மகாராணி திருக்கோலம், முத்தங்கி சேவை, தங்கக் கவசம் அணிந்து அலங்காரத் திருக்கோலம் என நாளும் ஓர் அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தருளுவார். பின்னர், அன்றைய தினத்தின் பாவைப் பாசுரம் பாடப்படும். 8 நாள்களும் திருமுக்குளத்துக் கரையில் அமைந்துள்ள நீராட்டு மண்டபத்தில் தினசரி மாலை எண்ணெய்க் காப்பு சாற்றும் உற்சவம் நடைபெறும்.
300-க்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் இளநீர், தாழம்பூ, பசும்பால், நெல்லிக்காய், நல்லெண்ணெய் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட தைலத்தை ஸ்ரீஆண்டாளுக்குச் சாத்துவர். சவுரி முடியோடு நெற்றிச்சுட்டி, ஜடை என சகல அலங்காரத்துடன் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி தருவாள்.
'சவுரி அலங்காரம்' என்பது, ஆண்டாள் தாயாருக்கு சவுரி (குதிரை முடி) கொண்டு செய்யப்படும் ஒரு சிறப்பு அலங்காரமாகும். இது மிகவும் பாரம்பரியமான அலங்காரங்களில் ஒன்றாகும். இந்த சவுரி அலங்காரத்துடன், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ஆண்டாள் தாயார் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
எண்ணெய்க் காப்பு முடிந்து ஆண்டாள் பத்தி உலாத்துதல் நடைபெறும். பின்னர், திருமஞ்சனமாகி நீராட்டு நடைபெறும். பொன்குடத்தால் ஆண்டாள் நீராட்டு நடக்கும். நிறைவு திருநாளன்று பெரியாழ்வார் சந்நிதியில் ஆண்டாள் எழுந்தருளுவார். அங்கே 'கணு' உற்சவம் நடைபெறும்.
திருமணம் ஆகாதவர்கள், சவுரி முடியோடு காட்சி தரும் ஆண்டாளை தரிசித்தால் விரைவில் திருமணம் ஆகும் , மக்கள் செல்வம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
கூடாரவல்லித் திருநாள்
வரன் கூடாத மகளிருக்கு கல்யாண யோகம் அளிக்கும் கூடாரவல்லித் திருநாள்
கூடாரவல்லி திருநாள் என்பது மார்கழி மாதம் 27-ஆம் நாள் பெருமாள் கோவில்களில், குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான வைபவம் ஆகும். ஆண்டாள் இயற்றிய திருப்பாவை 30 பாசுரங்களும், நாளுக்கு ஒரு பாசுரமாக 30 நாட்கள் மார்கழி மாதத்தில் ஓதுவது வழக்கம். பெருமாள் கோவில்களில் காலை பூஜையை 'திருப்பாவை பூஜை' என்று சொல்வதும் உண்டு.
ஆண்டாள் தனது நோன்பை நிறைவு செய்து, பெருமாளுடன் இணைந்ததாகக் கருதப்படும் நாள் மார்கழி 27-ஆம் நாள் ஆகும். இந்நாளில், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற 27-ஆம் திருப்பாவை பாசுரத்தின்படி, பெருமாளுக்கு அக்காரவடிசல் (நெய் வடியும் சர்க்கரைப் பொங்கல்) மற்றும் வெண்ணெய் நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடுவார்கள். இது திருமண வரங்கள் அருளும், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் நாள் ஆகும். 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற அந்தப் பாசுரத்தின் முதல் சொல்லையே திருநாள் பெயராக வைத்து விட்டனர்.
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், திருமாலான கண்ணனையே கரம் பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பை கடைப்பிடித்தாள். அப்போது ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் கொண்ட தொகுப்பே திருப்பாவை ஆகும். இப்பாசுரங்கள் நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதி. அதில், கண்ணனையும், அழகரையும், அரங்கனையும் போற்றிப் பாடியிருக்கிறார் ஆண்டாள்.
இந்நூல், பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் கூறி, அந்நோன்பு நோற்க்கும் விதத்தை விளக்குகிறது. இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில், இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டலில் திருப்பாவை பாடப்படுகிறது.
கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள். பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான் கோவிந்தன். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்
"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"
என்று பாடி பரவசம் கொள்கிறாள். கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். ஆண்டாள் விண்ணப்பித்த சிறிது காலத்திலேயே அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள் கோதை. அதன் பின்னர், கோதையானவள் ஸ்ரீஆண்டாள் என்று அழைக்கப்படலானார் என்கிறது புராணம். எனவே, ஆசைப்படி, வேண்டுதல்படி, தங்கள் குலதெய்வமான கள்ளழகருக்கு, நேர்த்திக்கடனைச் செலுத்தமுடியவில்லை கோதையால்! அதாவது, அக்கார அடிசில் சமர்ப்பிக்கவில்லை.
ஆண்டாள் காலத்துக்குப் பின்னர் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் பிறந்த, உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், அழகருக்கு முன்பாக வந்து அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, 'நூறு தடா அக்கார அடிசில்' நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார். பிறகு, அந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கே ஸ்ரீவில்லிபுத்தூ திருத்தலத்தில், ஆண்டாள் வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல், உடையவரை 'அண்ணா...' என்று அழைத்தாராம். "பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" - ஒரு பாவையாக இருந்தபோது, அவளது மனோபீஷ்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியவர் தகப்பன். அதையடுத்து தமையன். எனவே ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாள் ஆண்டாள் என சொல்லி சிலாகிக்கிறது ஆண்டாள் புராணம்.
ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், மார்கழி மாதம் வரும் கூடாரவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். ஆண்டாளை அன்றைய தினம் சேவிப்பது திருமகளை நேரிலேயே தரிசிப்பதற்கு நிகரானது. இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.
திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு முடிந்ததும், ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் உற்சவ சிலை சந்நிதியில் இல்லாமல், சந்நிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அவர் அன்றைய நாளில் ஸ்ரீராமாநுஜரை வரவேற்பதற்காகத்தான் என்கிறார்கள். கூடாரவல்லி நாளின்போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
கூடார வல்லித் திருநாளில், இந்த பாடலைப்பாடி,ஆண்டாளிடம் திருமணத் தடை உள்ளவர்கள் பிரார்த்தனையை வைத்தால், வரன் கூடாத மகளிருக்கு கல்யாண யோகம் கைகூடிவரும். நாம் விரும்பியவர்கள் மட்டுமில்லாமல் நம்மை விட்டு விலகிய உறவுகளையும் கூடச் செய்யும் அற்புதமான பாசுரம் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" பாடல்.
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்
என்னை பெற்ற தாயார் என்ற வித்தியாசமான திருநாமம் கொண்ட மகாலட்சுமி
சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவ லட்சுமி
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநின்றவூர். பெருமாளின் திருநாமம் பக்தவத்சல பெருமாள் . தாயாரின் திருநாமம் என்னை பெற்ற தாயார். மகாலட்சுமி என்னும் திருமகள் தனது தந்தையான சமுத்திர ராஜனிடம் கோபித்துக் கொண்டு நின்ற இடம் தான் திருநின்றவூர். இத்தலத்து தாயார் 'என்னைப் பெற்ற தாயார்' என்ற திருநாமம் பெற்றதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு 'திரு'வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் 'திருநின்றவூர்' ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). மகாலட்சுமி வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம், "பகவானே! தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்" என்றான். அதற்கு பெருமாள், "நீ முன்னே செல். நான் பின்னால் வருகிறேன்"என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம், நான் உனக்கு தந்தையல்ல, நீயே "என்னைப்பெற்ற தாயார்" எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும்" என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே, மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். பக்தன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் இங்கு வந்ததால் அவரது திருநாமம் "பக்தவத்சலன்" ஆனது. சமுத்திரராஜன் மகாலட்சுமியை "என்னைப்பெற்ற தாயே" என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
ஒரு சமயம் குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது, இத்தலத்து "என்னைப்பெற்ற தாயாரை"வழிபட்டு தனது இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக அருள் பாலிக்கின்றார். எனவே, இங்கு வந்து வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களையும் திருமகள் தந்தருளுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில்
நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படும் திவ்ய தேசம்
நித்தமும் திறந்திருக்கும் பரமபத சொர்க்க வாசல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கிமீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்கோஷ்டியூர். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104-வது திவ்ய தேசம் இக்கோவில் ஆகும்.பெருமாளின் திருநாமம் சவுமிய நாராயண பெருமாள். தாயாரின் திருநாமம் திருமாமகள்.
பொதுவாக, பெருமாள் கோவில்களில் அதிகாலை, மாலை நேரங்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் மட்டுமே நள்ளிரவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசியன்று திறந்து அன்று மட்டுமே பக்தர்கள் அந்த வாசல் வழியாக செல்லுவார்கள். ஆனால், இங்கு வைகுண்ட பரமபத அமைப்பு வழியாக தினமும் பக்தர்கள் சென்று வழிபடலாம்.