திருநாவாய் முகுந்தன் கோவில்

பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம்

அமாவாசையன்று பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் தரும் திவ்ய தேசம்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இத்தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் 'நாவாய் முகுந்தன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில், வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் திருநாமம் மலர்மங்கை நாச்சியார்.

இந்த நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.

மூலவர் நாவாய் முகுந்தன், கால்கள் பாதி உள்ளே பதிந்த நிலையில் மிக மிக அரிதான தரிசனத்தை இங்கே வழங்கி அருள்பாலிக்கிறார். இது அரிதினும் அரிதான காட்சியாகும். இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.

 
Previous
Previous

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

Next
Next

காஞ்சிபுரம் ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்