காஞ்சிபுரம் ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்
மனித உருவில் அபூர்வமான தோற்றத்தில் காட்சியளிக்கும் ராகு கேது பகவான்
ராகு-கேது பரிகார தலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பின்புறம், ஜவஹர்லால் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோவில்.
பொதுவாக சிவாலயங்களில் ராகுவும் கேதுவும் நவக்கிரக சன்னதியில் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். அதில் ராகு மனித முகத்துடனும், பாம்பு உடலுடனும், கேது பாம்பு முகத்துடனும் மனித உடலுடனும் காட்சியளிப்பார்கள். ஆனால் ராகு கேதுவை வித்தியாசமான நிலையிலும், அபூர்வமான தோற்றத்திலும் நாம், இக்கோவிலில் தரிசிக்கலாம்.
இக்கோவிலில் சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் ராகு, கேதுவை தன் கைகளில் ஏந்தி இருக்கிறார். மற்றுமொரு சிறப்பு, ராகுவும் கேதுவும் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்கள். இது போன்று காட்சியளிக்கும் ராகு, கேதுவை நாம் வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாது.
இந்தக் கோவிலில் நவக்கிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் மூலவர் ஸ்ரீமாகாளீஸ்வரரைச் சுற்றி அமைந்துள்ளனர்.
ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் சொல்கிறது. அதனால் இக்கோவில், ராகு-கேது பரிகார தலமாக திகழ்கிறது. இங்கு வழிபட்டால், திருமணத் தடை நீங்குவதோடு, கால சர்ப்ப தோஷம், புத்ர தோஷம், பித்ரு சாப தோஷம் ஆகிய அனைத்தும் நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், ராகு காலத்தில் இங்கு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.
சிவபெருமான் கைகளில் ராகு கேது
படம்,தகவல் உதவி : திரு. சந்திரசேகர், மதுரை
மனித உருவில் காட்சியளிக்கும் ராகு கேது பகவான்