
காஞ்சிபுரம் செவிலிமேடு கைலாசநாதர் கோவில்
சிவபெருமான், ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவக்கிரக பதவி அளித்த தலம்
ராகு கேது தோஷ பரிகார தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் ஐந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது செவிலிமேடு கைலாசநாதர் கோவில். மூலவர் கைலாசநாதர் 16 பட்டை கொண்ட லிங்கத் திருமேனியுடன், சோடச லிங்கமாக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்.
இத்தலத்து இறைவனை வழிபட்டுத்தான், ராகு கேது நவக்கிரக பதவியை அடைந்தார்கள். தல புராணங்களின் படி பாற்கடலை கடைந்து அமுதத்தை அரக்கர்கள் கையில் கிடைக்காமல் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, அமிர்தத்தை தேவர்கள் சாப்பிடும்படி செய்தார். தேவர்களுக்கு அமுதத்தை சமமாக பிரித்து படைக்கும் சமயம் சுவர்ணபானு என்கிற அசுரன் அமிர்தம் சாப்பிடும் ஆசையில் தனது உருவத்தை தேவர் போல மாற்றிக்கொண்டு, தேவர்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்தில் சூரிய, சந்திரனுக்கு இடையில் அமர்ந்து அமுதத்தை வாங்கி பருகி விட்டான். இவன் அசுரன் என்பதை அறிந்த சூரிய சந்திரர் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு சுவர்ணபானுவின் தலையை வெட்டினார். அமிர்தத்தை அவன் சாப்பிட்டதால் அவன் இறக்கவில்லை, மாறாக வெட்டுப்பட்ட தலைக்கு கீழ் பாம்பின் உடலும், தலையில்லா உடலின் கழுத்தில் ஐந்து தலை பாம்பு முகமும் தோன்றியது.
இந்த இரண்டும் ராகு – கேது எனப்பட்டனர். இந்த ராகு – கேது ஆகிய இருவரும் காஞ்சிபுரம் வந்தடைந்தனர். இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவனை வழிபட்டு தங்களின் செயலுக்கு மனமுருகி மன்னிப்பு கேட்டனர். சிவனும் அவர்களை மன்னித்தருளி ராகு – கேது ஆகிய இருவருக்கும் நவகிரக பதவி தந்தருளினார்.
ராகு – கேது இருவராலும் வழிபடப்பட்ட சுயம்பு லிங்கம் இது என்பதால்,இக்கோவில் ராகு கேது தோஷ பரிகார தலமாக விளங்குகின்றது.ராகு – கேது தோஷம், பிதுர் சாபங்கள், களத்திர தோஷம் போன்றவை நீங்க இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டால் தோஷம் விலகி நற்பலன்கள் உண்டாகும்.

நரசிங்கன்பேட்டை சுயம்பு நாதர் கோவில்
மனித முக அமைப்புடன் இருக்கும் ராகு கேதுவின் அபூர்வ தோற்றம்
ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்குமான தோஷ நிவர்த்தி தலம்
கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ .தொலைவில் அமைந்துள்ள அமைந்துள்ள தலம் நரசிங்கன்பேட்டை. இறைவன் திருநாமம் சுயம்பு நாதர். இறைவியின் திருநாமம் லோகநாயகி. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆலயமாகும். நரசிம்ம பெருமாள், இரணியாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஹத்தி தோஷத்தை நீக்குவதற்காக சிவபூஜை செய்த தலம் இது. அதனால் இத்தலத்திற்கு 'நரசிங்கபுரம்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், 'நரசிங்கமங்கலம்' என்று வழங்கப்பட்ட இவ்வூர், தற்போது நரசிங்கன்பேட்டை என்றானது.
இத்தலத்தில் ஒரு தனி சன்னதியில் இராகுவும் கேதுவும் அருகருகே மனிதனை போன்ற முக அமைப்புடன் காட்சி தருவது ஒரு அபூர்வமான தோற்றமாகும். பொதுவாக ராகுவும் கேதுவும் ஒருசேர காண்பது அரிதாகும். இங்கு திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்தில் இராகு, கேதுவிற்கு ஒன்பது தீபமேற்றி பாலாபிஷேகம் மற்றும் வஸ்திரங்கள் சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள ராகு கேது தோஷங்கள் யாவும் நீங்கி விரைவில் மணப்பேறு, மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத இருபாலரும் இத்தலத்தில் 9 தீபமேற்றி 9 முறை வலம் வந்து வழிபட்டால், நினைத்தபடி மணவாழ்க்கை அமையும். மகப்பேறு வேண்டுவோர் அவசியம் தரிசிக்க மகப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். ராகுக்கு தனியாகவும் கேதுவுக்கு தனியாகவும் அர்ச்சனை செய்து வழிபடலாம்.
ராகு பரிகாரம் செய்ய திருநாகேஸ்வரம் செல்பவர்களும், கேது பரிகாரம் செய்ய கீழ்பெரும்பள்ளம் செல்பவர்களும் திருபாம்புரம், காளஹஸ்தி செல்பவர்களும் அவசியம் இத்தலத்தில் உள்ள ராகு, கேது பகவானுக்கு தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். தாங்கள் முழுமையாக நற்பலன்களை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

திருக்களாச்சேரி நாகநாதர் கோவில்
நாக தோஷம் நீக்கும் நாகநாதர்
ராகு கேது தோஷ நிவர்த்தி தலம்
மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் பாதையில் 25 கி.மீ. தூரத்தில் (திருக்கடையூருக்குத் தென்மேற்கில் 6 கிமீ தொலைவில்) உள்ளது திருக்களாச்சேரி. இறைவன் திருநாமம் நாகநாதர். இறைவியின் திருநாமம் சிவகாம சுந்தரி. முன்னர் திருகுராசேரி என வழங்கப்பட்ட ஊர் தற்போது திருக்களாச்சேரி என அழைக்கப்படுகிறது.
ஒருமுறை சிவபெருமானும், பிரம்மனும் சொக்கட்டான் ஆடியபோது யார் வென்றது என பிரச்னை ஏற்ப்பட்டபோது பிரம்மன் சிரிக்கிறான். அதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான பிரம்மனை பாம்பாக மாற சபிக்கிறார் இறைவன். சிவபெருமானின் சாபத்தினால் திருக்குரா மர வடிவம் பெற்ற உமையம்மையும், நாகப்பாம்பு வடிவம் பெற்ற பிரமனும், சாபவிமோசனம் பெறுவதற்காக இத்தலத்திற்கு வந்தனர். இத்தலத்தில் நாகநாதரை வழிட்டுத் தவமிருந்து சாபவிமோசனம் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது. விஷ்ணு பிடாரனாகி பிரம்மனின் பேழை திறக்கப்பட்டு ஆடிய தலம் பேழைக்குடி. இங்கு நந்தியின் அருகில் பாம்பு பெட்டியும் பிடாரவடிவமும் உள்ளது. இங்கு உமையம்மை தங்கியிருந்து தவம் செய்யும் காலத்தில் இவ்வூரின் எட்டுத் திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் காவல் புரிந்ததற்கான சான்றுகள் உள்ளன.
மேலும் இத்தலத்தில் நாகநாதரான சிவலிங்கத்தைச் சுற்றிலும் பாம்புப் புற்றும் அப்புற்றில் உள்ள பாம்பு நாளும் சிவலிங்கத்தினை தரிசிப்பதாக கூறுகின்றனர். உமையம்மை திருக்குரா மர வடிவில் நாகநாதர் அருகே நின்று அவரை வழிபட்டு வருகிறாள்.
இங்கேயுள்ள ஸ்ரீநாகநாதரை ராகு காலம் மற்றும் அனைத்து வேளைகளிலும் வழிபட்டால், ராகு கேது தோஷம், நாக தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

நத்தம் வாலீஸ்வரர் கோவில்
பிரதோஷ நாயகர் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
பிரதோஷ காலங்களில் கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரம் உடைய இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போன்ற தோற்றமுடையவர்.பன்னிரு கரங்களில் மான்,மழுவும், முன்னிரு கைகளில் அபய,வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார்.தலையில் ஜடாமகுடம் விளங்க,அதில் வெண்பறை,கங்கை,ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி,இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக் கோவிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர்.
இந்தத் தலத்தில் பிரதோஷ நாயகர் அம்பிகையை தனது இடது கையால் அணைத்திற்கும் தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும்.இதற்கு பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்த முற்பட்ட போது, பார்வதி தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில், சிவபெருமான் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் சிவபெருமான் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது.இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர்.
காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு, பிரதோஷ நாயகருடன் வலம் வரும் திருமண தடை நீக்கும் வழிபாடு
உமா ஆலிங்கனராய் உள்ள இந்தத் தலத்து பிரதோஷ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில் வழிபட்டு பிரதோஷ சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்கு சுண்டல் நிவேதனம் செய்து முல்லை, நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்து, திருமணம் ஆகவேண்டிய பெண்கள் கையில் காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு சுவாமியுடன் மூன்று வலம் வருகையில் திருமணம் கைகூடும். இம்மாதிரி 5 பிரதோஷங்கள் செய்ய வேண்டும். திருமணமாகாத ஆண்களின் தாய், இம்மாதிரி பிரார்த்தனை செய்து வலம் வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடும்.

நத்தம் வாலீஸ்வரர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த அம்பிகை
காலில் பாதச்சலங்கையுடன், பரத நாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் அம்பிகையின் அபூர்வ தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
அம்பிகை ஆனந்தவல்லிக்கு, நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அம்பிகை அபய, வரத முத்திரையுடனும், கைகளில் அங்குசம் பாசம் ஏந்தி, காலில் பாதச்சலங்கையுடன், பரதநாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
இத்தலத்தில் சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில், அதாவது லிங்கோத்பவர் காலத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் நாட்டியமாடியதாக ஐதீகம், அதனால் தான் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்று பெயர்.
அன்னப்பாவாடை நெய்க்குள தரிசனம்
தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று, அம்மனுக்கு அன்னப் பாவாடை வைபவம் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகைகள், பட்சணங்கள், பழவகைகள் ஆகியவை அம்பிகைக்கு முன் படையலிடப்படும். சர்க்கரை பொங்கல் முதலில் அன்ன வகைகள் பாத்தி போல் கட்டப்பட்டு அதில் நெய் ஊற்றப்படும். நெய்க்குளத்தில் அம்மன் உருவம் தோற்றமளிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ராகு, கேது தோஷ நிவர்த்தி தலம்
ஒரு சமயம் அம்பிகைக்கு ஏற்பட்ட சர்ப்ப தோஷத்தை, இத்தலத்து இறைவன் வாலீசுவரர் நிவர்த்தி செய்தார். அதனால் இத்தலம் ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் முதலியவற்றுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
பிரார்த்தனை
கலைகளில் சிறந்து விளங்க இந்த அம்பிகை அருள் புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு தேனாபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், கலைகளில் உன்னத நிலையை அடைய முடியும்.
தாமல் வராகீசுவரர் கோவில்
பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்த அபூர்வ சிவலிங்கத் திருமேனி
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு வாயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாமல். இறைவனின் திருநாமம் வராகீசுவரர், இறைவியின் திருநாமம் கௌரி அம்பாள். காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள சில சிவத்தலங்களை பெருமாள் தசாவதார கோலத்தில் வழிபட்டுள்ளார். அதில் இத்தலம் பெருமாள் வராக மூர்த்தி கோலத்தில் வழிபட்ட தலமாகும். இத்தலத்து சிவலிங்கத் திருமேனியில் பெருமாளின் சங்கு, சக்கரங்கள் பதிந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து. கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து. அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. வராக அவதாரம் எடுத்த திருமாலுடன் மோதிய போது, சிவபெருமானின் திருமேனியில் சங்கு, சக்கரங்கள் பதிந்தன. அதனால் தான் இக்கோவில் சிவலிங்கத் திருமேனியில் சங்கு சக்கரம் பதிந்த அடையாளங்கள் உள்ளன.
இக்கோவிலில் அஷ்ட பைரவர்களும் தூண்களில் எழுந்தருளி உள்ளது தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபட்டால் பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடை விலகும்.
இக்கோவில் காளஹஸ்திக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குகின்றது, அதனால் ராகு கேது தோஷ நிவர்த்திக்கான பூஜைகள் இங்கே நடைபெறுகின்றன.

வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்
கைகள் கட்டப்பட்ட நிலையில் அருள் பாலிக்கும் ராகு, கேது பகவான்
புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாராப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் அகத்தீசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தராம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.
இக்கோவிலில், ராகு பகவான், கேது பகவான் ஆகிய இருவரும் ஒரே திருமேனியாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். இத்தலத்து இறைவன், பக்தர்களின் ராகு கேது தோஷம் நீங்கும் வகையில் அருள்பாலிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதால், அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு, கைகளை கட்டிக்கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இதனால் இக்கோவில், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார தலமாக விளங்குகின்றது. இத்தலத்தில் வழிபட, திருமண தடை விலகும். குழந்தை பாக்கியமின்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் குணமாகும். வயிறு வலி குணமாகும். ராகு கேது பரிகாரத்திற்கு காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.