சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்
தவிட்டுப்பானையில் ஒளித்து வைக்கப்பட்ட தாடாளன் பெருமாள்
கட்டிடப்பணி சிறக்க நிலத்தின் மணலை வைத்து பூமி பூஜை செய்யப்படும் திவ்ய தேசம்
சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். 'தாள்' என்றால் 'பூமி அல்லது உலகம்', 'ஆளன்' என்றால் 'அளந்தவன்' என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு "தாளாளன்' என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது. ஒருசமயம் இத்தலம் அழிந்து போனது. அப்போது இந்தக் கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.
உற்சவமூர்த்தி தாடாளன் பெருமாள், மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.
உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.