வைத்திகோவில் முத்து மாரியம்மன் கோவில்
காளி தேவி சொரூபத்துடன் பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருக்கும் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மனின் தங்கை
புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வைத்திகோவில் முத்து மாரியம்மன் கோவில். மக்களின் வழக்கில் கொன்னையூர் அம்மன், விராடபுரம் அம்மன், கண்ணப்புரம் அம்மன், சமயபுரம் மாரியம்மன், நார்த்தாமலை அம்மன், தென்னக்குடி அம்மன், வைத்திகோவில் முத்துமாரி அம்மன் ஆகிய ஏழு பேரும் சகோதரிகள் என்கிறார்கள். இவர்களில் கடைக்குட்டி வைத்திகோவில் முத்துமாரியம்மன்.
இங்கு அம்மன் காளி தேவி சொரூபத்துடன், பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்த அம்மன் கன்னிப் பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் முத்துமாரியின் சன்னிதிக்கு வந்து அர்ச்சனை செய்து, கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொண்டால் விரைவில் குழந்தை வரம் வாய்க்கும். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்குக் காப்பரிசி, பால், பட்டுப் பாவாடை மற்றும் தங்கத்திலோ வெள்ளியிலோ பொட்டு செய்து சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய மாங்கல்ய பலம் பெருகும்.இந்தக் கோவிலின் பங்குனித் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். விழாவின் 13 நாட்களும் அரிசியும் வெல்லமும் சேர்ந்த காப்பரிசிதான் அம்மனுக்கு நைவேத்தியம். மேலும் விழாவை யொட்டி, பழைமை மாறாமல் மண் சட்டியில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.