அம்மன்
பார்வதிதேவி இந்து சமயத்தில் முப்பெரும் தேவியர் எனப் போற்றப்படும் பெண் தெய்வங்களில் ஒருவராவார்.இந்த மூன்று தெய்வங்களில்,சரஸ்வதி தேவி கல்வி கடவுளாகவும், லட்சுமி தேவி செல்வத்தை அருளுபவளாகவும்,பார்வதிதேவி வீரத்தை கொடுப்பவராகவும் போற்றப்படுகின்றனர்,பார்வதிதேவி,சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் துணைவியார் ஆவார்.விநாயகர்,முருகன் ஆகிய இருவரும் இவரின் பிள்ளைகளே ஆவார்கள்.
பார்வதிதேவி சிவபெருமானை அடைவதற்காக சிவபூஜை செய்த தலங்கள் பல உண்டு.அதுபோல சிவபெருமானிடம் மந்திரோபதேசம் பெற்ற தலங்களும்,தான் பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் பெற பசுவாகவும், மயிலாகவும் வடிவெடுத்து சிவ பூஜைசெய்த தலங்களும் இருக்கின்றன.பார்வதிதேவி மானிட ரூபமெடுத்து பாண்டியனின் மகளாக வளர்ந்து பின்னர் சிவபெருமானை கரம்பிடித்து ஸ்ரீமீனாட்சியாக அரசாண்ட தலம்தான் மதுரை..
இப்படி பல தலங்களில் பல கோலங்களில் காட்சி தரும் பார்வதி தேவியின் அருள் சிறப்பையும், அவர் காட்சிதரும் வடிவத்தின் சிறப்பம்சங்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்.
தினம் தினம் தன் முக பாவனையை மாற்றிக் கொள்ளும் திரிபுரசுந்தரி அம்மன்
விழுப்புரம் மாவட்டம், மைலம் வட்டம், ஆலகிராமம் கிராமத்தில் அமைந்துள்ளது எமதண்டீஸ்வர சுவாமி கோவில். இறைவன் திருநாமம் எமதண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம்- விழுப்புரம் இடையில் உள்ளது கூட்டேரிப்பட்டு. இங்கிருந்து மேற்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார். இந்த அம்மன் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்புக்குரிய அம்சமாகும். திரிபுரசுந்தரி அம்மன் வாரத்தில் ஏழு தினங்களிலும் ஏழு விதமான முகபாவங்களோடு காட்சி கொடுப்பார். இவ்வாலய அம்பாள் ஞாயிற்றுக்கிழமை குழந்தை முகம் கொண்டும், திங்கள், வெள்ளிக்கிழமைகளில் புன்சிரிப்புடனும், செவ்வாய், புதன்கிழமைகளில் கோப முகத்துடனும், வியாழன், சனிக்கிழமைகளில் யோக, தியான நிலையிலும் காட்சிதருவது சிறப்பு. ஏழு வாரங்கள் அவரவர் ராசிக்கேற்ற வண்ணத் துணிகளில் நெய் தீபமேற்றி, அம்பாளை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
மாசி பௌர்ணமியன்று தீர்த்த நீராடும் அம்பிகை
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 8வது தலம் ஆகும். 'கலி' (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், 'திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது.
கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி பௌர்ணமியின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி பௌர்ணமியன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கின்றது. முற்காலத்தில் இக்கோவிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே, அவருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வயிற்றுவலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக் கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை மாசி பௌர்ணமியன்று ,அவளது பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.
ஆங்கிலேய அதிகாரியை அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி
தேனி-போடி சாலையில் கோடாங்கிப்பட்டி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தேனிக்கு அருகிலுள்ள குச்சனூரில் புற்றுக் கோவில் இருந்தது. இந்த கோவிலுக்கு ஊர் மக்கள் ஓர் அங்காள பரமேஸ்வரியின் சிலையைச் செய்ய விரும்பினார்கள். அதன்படி சுப்புத் தேவர் என்பவர், போடிக்கு அருகே உள்ள ஊருக்குச் சென்று அங்காள பரமேஸ்வரியின் சிலையை உருவாக்கினார்.
அந்த சிலையை தங்கள் வசித்த வந்த குச்சனூருக்குக் கொண்டு செல்ல ஊர் மக்கள் சுமந்து வந்தனர். அப்போது போடிக்கு அருகே கோடாங்கிப்பட்டி எனும் ஊரை வந்து அடைந்தபோது களைப்பு உண்டானதால் அங்கு சிலையை இறக்கி வைத்துவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர். அன்னையின் திருவுளம் அங்கேயே தங்கிவிட எண்ணியது போலும். அதனால் கீழே இறக்கி வைக்கப்பட்ட திருவுருவச்சிலை மீண்டும் எடுக்கவே முடியாதபடி நிலைத்து நின்றுவிட்டது. இதனால் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஊர் மக்கள் கண்ணீர்விட்டுப் புலம்பி, 'எங்கள் தாய் இருக்கும் இடமே எங்களுக்கான இடம்' என்று உறுதி கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.
அன்னை குடிகொண்ட இடத்தில் ஒரு கோவிலை எழுப்ப விரும்பி போடி ஜமீன்தாரைச் சந்தித்து விண்ணப்பம் செய்தனர், அவரோ இப்போது சிலை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஆங்கிலேயர் ஒருவரே அந்த இடத்துக்கு உரிமையாளர் என்றும் கூறினார். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று ஆலயம் கட்டிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினார். அவர்களும் அவ்விதமே அந்த ஆங்கிலேயரை அணுகி அங்காள அம்மனுக்குக் கோவில் கட்ட அனுமதி கேட்டனர். அந்த ஆங்கில அதிகாரியோ கோபமடைந்து, அவர்களை விரட்டியடிக்க தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயந்துபோன ஊர் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.
அன்றிரவு ஆங்கில அதிகாரியின் மாளிகை எங்கும் தீ பரவியது. அது ஊரெங்கும் பற்றியது. ஆங்கிலேயரும் அவரது காவலர்களும் மாளிகையை விட்டு ஓடினர். தெய்வ அருள் வந்த மூதாட்டி ஒருத்தி, 'அங்காளம்மனுக்கு சொந்தமான இடத்தைக் கொடுத்து விடுங்கள்! உங்களைப் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ளுங்கள்' என்று அறிவித்தாள். ஆங்கிலேய அதிகாரிகள் மிரண்டனர். காவலர்கள் இப்போது ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க வரும்படி ஊர்மக்களைக் கெஞ்சுகிறார்கள். அதிகாரிகள் ஊர் மக்களை வணங்கித் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். அம்மன் நிலை கொண்ட கோடாங்கிப்பட்டி ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர், மேலும், 'ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான இடம் அது' என்று செப்பு சாசனத்தையும் வழங்கினர்.
மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கண்கண்ட தெய்வமாக கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி விளங்கி வருகிறாள். இங்கு இவளுக்கு வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜைகள், மாசி அமாவாசை மற்றும் ஆடி மாத விழாக்கள் விசேஷமானவை. ஒருமுறை இவளை தரிசித்தால் போதும், அச்சங்கள் இல்லாத சிறப்பான வாழ்வை அடையலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
இச்சா சக்தியாய் விளங்கும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை மீஞ்சூர் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேலூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது திரிபுரசுந்தரி அம்மன் கோவில். இறைவன் திருநாமம் திருமணங்கீசர்,. அம்மனின் மற்றொரு திருநாமம் திருவுடை அம்மன்.
ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.
மிளகு பயிறு ஆன அதிசயம்
அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.
மூன்று அம்மன்களின் பௌர்ணமி தரிசனம்
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, 'வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டாராம்.
இத்தலத்து ஈசன் திருமணங்கீசரையும் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனையும் வணங்கினால் திருமண வரம், மக்கட் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மாசி அமாவாசை மயானக் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்கு திசையில் 20 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில். அங்காள பரமேஸ்வரிக்கு பல ஆலயங்கள் உள்ளன என்றாலும், அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். இக்கோவிலில் மாசி மாத அமாவாசையன்று நடைபெறும் மயானக் கொள்ளை பிரசித்தி பெற்றது. மயானக் கொள்ளை விழா நடக்கும்போது, பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அர்ப்பணிக்கிறார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.
மயானக் கொள்ளை விழா உருவான பின்னணி வரலாறு
பிரம்மன் தனக்கு ஐந்து தலை உள்ளது என்ற காரணத்தால் அகந்தை கொண்டான். எனவே பிரம்மனின் ஒரு தலையை காலபைரவர் மூலம் கொய்து வரச் சொன்னார் சிவபெருமான். ஆனால் ஒரு தலையைக் கிள்ளியவுடன் மற்றொரு தலை அங்கே தோன்றியது. சிவபெருமானே தலையைக் கொய்யச் சென்றார். ஆனால், ஒவ்வொன்றாகக் கிள்ள, அது முளைத்துக்கொண்டே இருந்தது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 1000வது தலையைக் கிள்ளியவுடன் கீழே போடாமல் வைத்துக்கொண்டார். ஆனால் நெடுநேரமாகியும் கீழே போடாததால் அந்த பிரம்மனின் கபாலம் கையிலேயே ஒட்டிக்கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுத்துத் திரியலானார். ஆனால் அவ்வாறு எடுக்கும் பிச்சையையும் பிரம்ம கபாலம் விழுங்கிவிடும்.
பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்வதற்குக் காரணமாக இருந்த பரமேஸ்வரியை "நீ கந்தலாடையுடன் ராட்சஸ உருவுடன் அலைவாய்' என சாபமிட்டாள் சரஸ்வதி. அதன்படி பரமேஸ்வரி,பல இடங்களில் அலைந்து திரிந்து, இறுதியில் மேல்மலையனூரில், மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் .வந்து அமர்ந்தாள் . மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி, உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவபெருமானுக்கு உணவு சமைத்தாள். பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினாள். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள். அப்போதே சிவனைப் பிடித்திருந்த பிரும்மஹத்தி தோஷம் நீங்கியது.
ஈஸ்வரி மூன்றாம் கவளத்தை இறைத்து பிரும்ம கபாலத்தை பூமிக்குள் அழுத்திய நாள் மாசி அமாவாசை. அந்நாளே மயானக் கொள்ளையாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாத சிவ ராத்திரிக்கு மறுநாள் அமாவாசை தினத்தன்று அங்காளி தனது முழு பூரண பலத்தோடும் வலுவோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியாக விளங்கும் அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் அனைத்துக்கும் உணவை சூரை இடும் நாளே 'மயானக் கொள்ளை'. அவ்வாறு சூரையிட்ட அங்காளியை, விஷ்ணு பூமிக்குள் தள்ளிவிட்டதாகவும், பின்னர் பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு. அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்ட மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றால் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.
பிரார்த்தனை
கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானை போல் நெற்றிக்கண் உடைய அம்பாள்
சிவராத்திரியன்று இரவில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும் விசேட நடைமுறை
வேலூர்- சென்னை நெடுஞ்சாலையில் , 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ளது வளையாத்தூர். இறைவன் திருநாமம் வளவநாதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இறைவன், மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதால், அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில்,விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
கோவிலில் நுழைந்ததும் நாம், நின்ற நிலையில், நான்கு கைகளுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை, தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது.சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோவிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள்.
இந்த அம்பிகையின் நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்பாளுக்கு சிவராத்திரியன்று சிறப்பு பூஜை
பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இந்த அம்பிகைக்கு இரவில் பூஜை செய்கிறார்கள். சிவபெருமானுக்கு நான்கு கால பூஜை நடைபெறும் போது, அம்பாளுக்கு முதல் காலமும் மூன்றாம் காலமும் விசேஷ பூஜை நடைபெறும். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறையாகும்.
கிரக தோஷ நிவர்த்தி தலம்
வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும், இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.
திருகு பீடம் எனப்படும் அபூர்வ வடிவமைப்பு கொண்ட பீடத்தின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகை
திருமண வரம் அருளும் கற்பகாம்பிகை
திருச்சியிலிருந்து மேற்கே கரூர் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுகமணி பக்தவத்ஸலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கற்பகாம்பிகை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
இறைவி கற்பகாம்பிகை தெற்கு நோக்கி அமைந்துள்ள சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார். மேலிரு கரங்களில் தாமரை மலர் தாங்கி இருக்கின்றார். கீழிரு திருக்கரங்களில் அபய வரத முத்திரைகள் விளங்குகின்றன.
இத்தலத்து இறைவி கற்பகாம்பிகையின் சிலையானது 'திருகு பீடம்' எனப்படும் ஒரு சிறப்பு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருகு பீடம் (screw type base) என்பது சிற்பக்கலையில் மிகவும் அரிதான, திருகப்பட்ட அல்லது சுருள் வடிவமைப்பு கொண்ட ஒரு சிறப்பு பீட அமைப்பாகும். பொதுவாக கோவில்களில் இறைவன், இறைவியின் சிலைகள், சிலை அடிப்பீடத்தில் நேராக வைக்கப்படும், அதனால் சிலையை நேராகத் தூக்க முடியும். ஆனால் இத்தலத்து கற்பகாம்பாள் சிலை, ஒரு திருகு அடிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதில் சிலையைத் திருகித்தான் தூக்க வேண்டும். அந்த நாட்களில் சிலை திருட்டைத் தடுப்பதற்கான ஏற்பாடாக இது இருந்திருக்க வேண்டும். இத்தகைய திருகு பீட அமைப்பானது ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் மற்றும் மயிலாப்பூர் கற்பகாம்பாள் போன்ற சில அபூர்வமான கோயில் சிலைகளின் அடியில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
கற்பகம் என்றால் தேவலோகத்தில் உள்ள, கேட்ட வரங்களை வழங்கும் கற்பக விருட்சம் போன்றவள் என்று பொருள். பக்தர்களின் கோரிக்கைகளை கற்பகத் தருவாக இருந்து நிறைவேற்றித் தருவதால், அன்னைக்கு கற்பகாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இத்தலத்து அம்பிகை கற்பகாம்பாளை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கருவறையில் ஊஞ்சலில் ஆடும் காளியம்மன்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் 'ராஜமாதங்கீசுவரி,
இக்கோவில் பிரகாரத்தின் வடக்கு புறத்தில் 'ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மரத்தினால் ஆன திருமேனி உடையவள். தனது எட்டு கைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இப்படி கருவறையில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தரும் அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஊஞ்சலில் ஆடும்போது இந்தக் காளியம்மனின் தரிசனம் பெறுவது விசேஷம். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். பத்ரகாளி அம்மனின் மூலவர் விக்கிரகமே விழாக்காலங்களில், வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
வளைகாப்பு நாயகி குங்குமவல்லி அம்மன்
திருச்சி மாநகரின் ஒரு பகுதியான உறையூர், முற்காலத்தில் சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கியது. உறையூரின் மத்தியில் அமைந்துள்ளது, சுமார் 1800 ஆண்டுகள் பழமையான தான்தோன்றீஸ்வரர் கோவில். இக்கோவில் கர்ப்பிணி பெண்களுக்கான கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
சூரவாதித்தன் என்ற சோழ மன்னனின் மனைவி காந்திமதி. சிவ பக்தையான இவள், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை தினமும் வழிபடும் வழக்கம் உள்ளவள. காந்திமதி கருவுற்றிருந்த சமயம் ஒருநாள், தாயுமான சுவாமியை தரிசிக்க திருச்சி மலைக்குச் சென்றபோது களைப்பின் காரணமாக நடக்க முடியாமல். மயங்கி அமர்ந்தாள். அப்போது காந்திமதியின் முன் தோன்றிய சிவபெருமான், நீ மிகவும் பிரயாசைப்பட்டு என்னை தேடி வர வேண்டாம். உன்னைப் பார்க்க நானே வந்துவிட்டேன். உனக்கு காட்சி தந்த இந்த இடத்தில் லிங்க ரூபமாக, 'தான்தோன்றி ஈசனாக' எப்போதும் இருந்து உன்னைப் போன்ற கர்ப்பிணிப் பெண்களை காத்து நிற்பேன் என்று கூறி மறைந்தார். சிவபெருமானுடன் பார்வதி தேவியும் இந்தத் தலத்தில் குங்குமவல்லியாக எழுந்தருளி பெண்களின் மங்கலம் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். இவள் வளைகாப்பு நாயகி என்றும் திருச்சி மாநகரப் பெண்களால் அன்போடு அழைப்படுகிறாள்.
கோவில் கருவறையில் தான்தோன்றீஸ்வரர் கிழக்கு முகமாக ஏழடி கொண்ட பிரமாண்ட வடிவாக அருள்கிறார். குங்குமவல்லி, இரு கரங்களில் அங்குசம் மற்றும் தாமரை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறாள்.
குங்குமவல்லி தேவிக்கு, ஒவ்வொரு ஆண்டும் வளையல் காப்புத் திருவிழா ஆடிப்பூரம் மற்றும் தை மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் மூன்று நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இந்த வளையல் விழா வெகு பிரசித்தம்.
விழாவின் முதல் நாளில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமவல்லி அம்மனுக்கு சுகப்பிரசவம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் இரண்டாம் நாள் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள். விழாவின் மூன்றாம் நாளில் திருமணமாகாத கன்னிப்பெண்கள் தங்களின் திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க வளையல்களைக் காணிக்கையாக தருவார்கள்.. வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாள்களிலும் குங்குமவல்லி வளையல் அலங்காரத்தில் வெகு அழகாகக் காட்சி அளிப்பாள். பிறகு பூஜை வழிபாட்டுக்குப் பின்னர் காணிக்கையாகப் பெறப்பட்ட வளையல்கள் பிரசாதமாகத் தரப்படும்.
இந்தத் தலத்தில் வழிபட்டால் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணம் கைகூட, குழந்தைப்பேறு உண்டாக மாநிலம் முழுவதிருந்தும் ஏராளமான பெண்கள், கூட்டம் கூட்டமாக இந்த கோவிலுக்கு வருகிறார்கள். வேண்டுதல் நிறைவேறி குழந்தைப் பிறந்தவுடன் இங்கு வந்து வளையல் மாலை போடும் சடங்கு அநேகமாக எல்லா நாளிலும் இங்கு நடக்கிறது. சுருங்கச் சொன்னால் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இந்த கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்கும் ஸ்ரீராஜமாதங்கீசுவரி
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி. இறைவிக்கு அஞ்சனாட்சி, கடம்பவனவாசினி என்று மேலும் 16 பெயர்கள் உண்டு. அம்பிகை, ஸ்ரீ சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும், அரசர்க்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்குபவள்.
பிரம்மதேவனின் புதல்வரான மதங்க முனிவரின் மகளாக பிறந்தமையால், மாதங்கி என அழைக்கப்படுகிறார். அம்பிகை மாதங்கி, சிவபெருமானை இத்தலத்துக்கு அருகில் உள்ள திருவெண்காட்டு தலத்தில் திருமணம் புரிந்தாள். அதனால் இங்கு திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
சரஸ்வதி தேவிக்கு கல்வி உபதேசம் செய்தவள்
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது ஐதீகம். புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி 'அக்ஷராப்பியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குகின்றனர். இந்த அம்பிகையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும்.
திருமண தடை நீங்க மட்டை தேங்காயுடன் அர்ச்சனை
திருமணத் தடை உள்ளவர்கள்அஷ்டமி அன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை, 11 மாதங்கள் வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அப்படி செய்தால் 11 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.
சிவபெருமானை தன் தலையில் சூடியிருக்கும் கோடியம்மன்
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோடியம்மன் கோவில். தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
முன்னொரு காலத்தில், தற்போது கோடியம்மன் கோவில் இருக்கும் பகுதியானது தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. சிவபெருமானை வழிபட்ட தஞ்சன் என்ற அரக்கன் அவரிடம் பல வரங்களைப் பெற்றான். பின்னர் தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக ( (பவளம் – சிவப்பு நிறம்) மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது.
சிவனின் பிரதிநிதியாக வந்து அசுரனை அழித்ததால், கோடியம்மன் சிவபெருமானையே தனது தலையில் சுமந்து கொண்டாள். சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல, இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
குழந்தைச் செல்வம் கிட்டவும், செய்வினை நீங்கவும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
காளியாட்டத் திருவிழா
மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்டத் திருவிழா என்கிறார்கள். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளன.
அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்
வேறு எந்த தலத்திலும் இல்லாத அம்பிகையின் சிறப்பு திருநாமம்
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.
பிரார்த்தனை
சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.
தவம் செய்யும் கோலத்தில் இருக்கும் அம்பிகையின் அபூர்வ காட்சி
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் மணக்கால் அய்யம்பேட்டை. இறைவன் திருநாமம் அபிமுக்தீஸ்வரர். இறைவி அபினாம்பிகை, .முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் 'பெருவேளூர்' எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.
ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,'இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்' என வேண்டினாள்.
கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,'கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,'என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.
ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் கட்டிய கோவில்
கையில் கிளி ஏந்திய துர்க்கை அம்மன்
திண்டிவனத்திலிருந்து வடமேற்கே 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம் ரவிகுல மாணிக்கேசுவரர் கோவில். இறைவியும் திருநாமம் மாணிக்கவல்லி. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்தக் கோவில் மாமன்னர் ராஜராஜனின் சகோதரியான குந்தவை நாச்சியாரால் கட்டப்பட்டது. ரவி குல மாணிக்கமான ராஜராஜன் மேல் கொண்ட பேரன்பினால், குந்தவை இந்தக் கோவிலுக்கு ரவிகுல மாணிக்கேஸ்வரர் என்று பெயர் சூட்டினார். இந்த ஆலயம் சிறந்த கட்டிடக்கலை அம்சங்களுடன் திகழ்கின்றது. இந்த ஊருக்கும் ராஜராஜபுரம் என்று குந்தவை பெயர் சூட்டினார்.
இந்தக் கோவில் இறைவன் சன்னதியின் வடக்கு சுற்றுச்சுவரில் எட்டுக் கரங்களுடன் காட்சி தரும் துர்க்கையின் ஒரு கரத்தில் கிளி உள்ளது ஒரு தனி சிறப்பாகும்.
அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறும் தனிச்சிறப்பு
சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூர் நகரத்தில், புகழ்பெற்ற திவ்ய தேசமான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது தீர்த்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுர சுந்தரி அம்மன்.
கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் சாந்த சொரூபிணியாக நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனுக்கு வேறு எந்த அம்பிகைக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது சிவபெருமானுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. இது இத்தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனின் தனி சிறப்பாகும்.
எப்பொழுதும் மூடியே இருக்கும் குடைவரை காளி சன்னிதி
காளியின் உருவமாக விளங்கும் சூலம்
கண்ணாடி மூலம் சூலத்தை வணங்கும் நடைமுறை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி.
இக்கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளளது, குடைவரை காளி சன்னிதி. இந்த சன்னிதியின் நுழைவுவாசல் எப்பொழுதும் மூடியே இருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
ஒரு சமயம் சதுர கள்ளி வனத்தில் கார்கவ முனிவர் தியானத்தில் இருந்தார். அப்போது ஒரு அரக்கன் பசியில் உணவு தேடித் திரிந்தான். புலி உருவத்தில் முனிவரை கொல்ல முயன்றான். அதைக்கண்ட முனிவர், 'உனக்கு புலி உருவமே நிலைக்கட்டும்' என்று சாபமிட்டார். பசியின் காரணமாக இப்படிச் செய்து விட்டதாகவும், தனக்கு விமோசனம் அருளும்படியும் அசுரன் முனிவரை வேண்டினான். அதற்கு முனிவர், 'வஜ்ரவனம் என்ற திருப்புனவாசல் பகுதிக்கு பார்வதியும் சிவனும் வரும்போது, பார்வதியின் பார்வை பட்டு உன்னுடைய சாபம் நீங்கும்' என்றார்.
தன் சாப விமோசனத்திற்காக அந்தப் பகுதியில் புலியாகவே சுற்றி வந்தான், அசுரன். ஒரு முறை பார்வதி அந்த வனத்திற்கு வந்தார். அவர் மீது புலியாக இருந்த அசுரன் பாய்ந்தான். அப்போது காளியாக உக்கிர வடிவத்திற்கு மாறிய தேவியின் பார்வை பட்டு,அந்த அசுரனுக்கு சுய உருவம் கிடைத்தது. மேலும் இத்தல அம்பாளின் முன்பு நந்தியாக இருக்கும் வரமும் கிடைத்தது.
தனது உடலில் பாதி உருவத்தை கொடுத்த சிவபெருமானிடம், உக்கிரமான காளி உருவத்தை காட்டியதற்காக அம்பாள் மன்னிப்பு கேட்டாள். ஆனால் சிவபெருமான், 'உனக்கு இந்த உருவம் நன்றாகத்தான் உள்ளது. இருப்பினும், இந்த உருவத்தை உனக்கு துணையாக குடை வரையில் வைத்துக்கொள். சுயரூபத்தோடு வந்து என்னுடன் இரு' என்று கூறியதையடுத்து, அம்பாள் சுய உருவதை அடைந்தார். ஒரு உருவத்தில் இருந்து மறு உருவம் எடுத்ததால், காளியின் உருவ வழிபாடாக சூலம் உள்ளது. அம்பாளின் சன்னிதிக்கு எதிரே இந்த குடைவரை காளி சன்னிதி உள்ளது. காளியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், இந்த சன்னிதியின் நுழைவு வாசல் கதவு மூடியே இருக்கும்.இதனால் அந்த சூலத்திற்கு எதிராக ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துதான் சூலத்தை வணங்க வேண்டும்.
மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை
அம்பிகை சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் இருக்கும் அரிய வடிவமைப்பு
கிரக தோஷங்களை நீக்கும் அம்பிகை
தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் தென்குடி திட்டை . இறைவன் திருநாமம் வசிஸ்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.
அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில் வசிஷ்டேஸ்வரருக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் உள்ளார் . பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால் தான், இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார்.மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்றும், சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும் அழைக்கிறார்கள்.
கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், 'உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’' எனக் கூறினார். அதைக் கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, 'எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு' என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து 'இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்' என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.
இந்த அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி அம்மன் சன்னதி எதிரில் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டிருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாது. பக்தர்கள் தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த ஆதி காமாட்சியம்மன்
காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி, அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ள வடக்கு வீதியில் அமைந்திருக்கின்றது ஆதி காமாட்சி அம்மன் கோவில். இத்தலம் அருணாசலேஸ்வரர் கோவிலுடன் இணைந்த கோவிலாகும்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த, புராதன வரலாற்று சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஸ்ரீ காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் காட்சியளிப்பது உலகில் வேறெங்கும் காண இயலாத அபூர்வமான திருக்கோலமாகும். ஸ்ரீலலிதா ஸகஸ்ர நாமத்தில் நிறைவாக கூறியுள்ளது போல, ஸ்ரீசிவா சிவசக்தி ஐக்கிய ரூபினி லலிதாம்பிகா என்ற வாக்கியப்படி, சக்திக்குள் சிவம் ஒடுங்கி, சிவ ஜோதியுள் சக்தி இரண்டறக் கலந்தது இங்குதான். ஆகையால் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய முக்கிய பீடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை மூடிய பாவம் போக்க, பார்வதி தேவி காஞ்சி மாநகரில் காமாட்சியாக அவதரித்தார். காஞ்சிபுரத்தில் பார்வதி தேவி கம்பை நதிக்கரையில் மணலில் லிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படிச் செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி, லிங்கத்தை அம்பிகை தழுவிக் கட்டிக்கொண்டார். அம்பிகையின் இந்த செயலால் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியின் பாவத்தை போக்கி அருளினார். அப்பொழுது பார்வதி தேவி 'உம்மை எப்பொழுதும் பிரியாமலிருக்க உமது மேனியில் இடப்பாகம் அளிக்க வேண்டும்' என சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் 'திருவண்ணாமலை சென்று என்னை நோக்கி தவமிரு. அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்' எனக் கூறி மறைந்தார். திருவண்ணாமலைக்கு வரும் வழியில் காமாட்சி அம்மையார், தவம் செய்ய ஏதுவாக மைந்தனாகிய முருகன், தன் தாய்க்காக வாழை இலை கொண்டு பந்தலமைத்தார். சேயாறு எனப்படும் செய்யாறை உருவாக்கினார். (இன்று கூட அந்த ஊர் வாழைப்பந்தல்” என்றழைக்கப்படுகிறது) பின்னர் திருவண்ணாமலை வந்தடைந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் நுழைந்து. கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை (பவழக்குன்று) வந்தடைந்தர். கௌதம மகரிஷியின் ஆலோசனையின்படி மலைக்கு நேர்கிழக்கு திசையில் பர்ணசாலை அமைத்து தவமியற்றினார்.
அன்னையின் தவத்தை கலைக்க முயன்ற மகிஷாசூரனை எதிர்த்து சப்தமாதர்களும், அஷ்டபைரவர்களும், காளியும், துந்துமியும், அருனைநாயகியும் கடும்போர்புரிந்தனர். ஆனாலும் எருமைதலை கொண்ட மகிஷாசூரனை அழிக்க இயலவில்லை. பின்னர் மகாசக்தி துர்க்கையம்மன், மகிடன் தலையை தனது வாளால் வெட்டி வீழ்த்தி, தனது காலால் அவனது தலையை மிதித்த பின்னர் மகிடன் உயிர் பிரிந்தது. உயிர் பிரிந்து தலையற்று கிடந்த மகிஷாசூரனுடைய அறுபட்ட கழுத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கொடிய அரக்கணுடைய கண்டத்தில் ஒரு சிவலிங்கமா என ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்து காமாட்சி தேவியிடம் கொடுத்தாள் துர்க்கை. தேவியாரின் திருக்கரத்திலேயே ஓட்டிக்கொண்டுவிட்டது அந்த லிங்கம். தன் கையோடு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டதற்கான காரணம் என்னவென்று கௌதம மகரிஷியிடம் கேட்டார் காமாட்சி தேவியார். பல காலமாக மகிஷாசூரனுடைய கண்டத்தில் சிவலிங்கம் இருந்தபடியாலும், அவன் சிவகடாட்சபதவியை அடைந்தவன் என்பதாலும் அவனை கொன்ற இந்த பாவம் நிகழ்ந்தது.
பாவம் தீர நவதீர்த்தங்களில் நீராட்சி சிவபூஜை செய்ய வேண்டு என்று விவரித்தார் கௌதமர். துர்க்கையால் உருவாக்கப்பட்ட கட்க தீர்த்தத்தில் நீராடிய பின்னர் கையில் ஒட்டியிருந்த சிவலிங்கம் விடுபட்டது. அதனை கரை மீது பிரதிஷ்டை செய்து பாபவிநாசகர் என்று பெயரிட்டு பூஜித்து வந்தார்.பின்னர் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும்நன்நாளில் மலைமேல் ஓரு பிரகாசம் உண்டாகி 'பெண்ணே இம்மலையை இடமிருந்து வலமாக சுற்றி நடந்து வா' என்று சொல்லி அக்கணமே மறைந்தது. அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்தபோது சிவபெருமான். பார்வதியை அழைத்து தனது மேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரிஸ்வரராக ஜோதி ரூபமாக காட்சியளித்தார்.
இன்று கூட கார்த்திகை தீபத்திருநாளில் காமிக, ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்நாளில் சரியாக மாலை 6-00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் எழுந்தருளிய பின்னரே மலைமீது தீபஜோதி ரூபமாக காட்சி அளிக்கின்றார். அகிலமே போற்றும் கார்த்திகை தீபப்பெருவிழா தோன்ற காரணமாகஅமைந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது, இந்த வடக்குவீதி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தான் என்று ஸ்காந்தபுராணம் மற்றும் அருணாச்சலபுராண நூல்கள் சான்றளிக்கின்றன.
இந்த அம்மனை கணவனோடு கருத்தொற்றுமை வேண்டுகிற பெண்கள், கணவனது நலம் மேம்பட விரும்பும் பெண்கள் மற்றும் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இத்தலத்திற்கு வந்து தொடர்ந்து 5 வாரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
அம்பிகை பசுவாக அவதரித்து தவம் செய்த தேவாரத் தலம்
சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்த தலம்
மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. (திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருக்கோழம்பியம். இறைவன் திருநாமம் கோழம்ப நாதர், கோகிலேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.
அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க, பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில், இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்து இருக்கின்றது. இத்தலத்து சிவலிங்கத் திருமேனி நீண்ட பாணத்தை உடையதாக இருக்கின்றது. பிரம்மனுக்காக பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சாப விமோசனம் பெற்ற தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, கயா போன்ற புண்ணிய தலங்களுக்கு ஈடான தலம் இது.
அம்பிகை சௌந்தர்ய நாயகி 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கிறாள். திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால், சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவபெருமானை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது. அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம். தமிழில் 'குளம்பு' என்றால் 'கொழுமம்' என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு 'கோழம்பம்' என்றும், இறைவனுக்கு 'கோழம்பநாதர்' என்றும் பெயர் ஆயிற்று.
இக்கோவிலில் 27 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'வ்யதிபாதயோக' பூஜை ஹோமங்களில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் சீயாத்தமங்கை. இத்தலம் நன்னிலம் - திருமருகல் - நாகூர் சாலை வழியில் அமைந்திருக்கிறது. திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. சென்றவுடன் 'கோயில் சீயாத்தமங்கை' என்ற வழிகாட்டி கல் உள்ளது. அவ்விடத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இறைவன் திருநாமம் அயவந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் இருமலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி.
இக்கோவிலில் இறைவனும், அம்பிகையும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார்கள். இறைவன், அம்பிகை சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் இரண்டு தனி கோவில்களாக விளங்குகின்றன.
அம்பிகை இருமலர்க்கண்ணம்மை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகை சிவ சொரூபியாக விளங்குகின்றாள். அம்பிகை சிவபெருமானைப் போல் ஜடாமுடி தரித்து, நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் காட்சியளிக்கிறார். அம்பிகையின் ஜடாமுடியில் சூரிய, சந்திர பிறைகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் அம்பிகையின் கழுத்தில் ருத்ராட்ச மணி அலங்கரிக்கின்றது. அம்பிகையின் தனிக் கோவிலில், சிவபெருமானுக்கு அமைந்த பரிவார தெய்வங்கள் போல் நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், பைரவர் அமைந்திருப்பது இத்தலத்து அம்பிகையின் தனிச்சிறப்பாகும்.
சிவகாமசுந்தரி அம்பிகை ஐப்பசி பூர உற்சவம்
நடராஜரிடம் ஆசீர்வாதமும், பட்டு வஸ்திரமும் பெறும் சிவகாமசுந்தரி அம்பிகை
உலக உயிர்கள் அனைத்தும் நலம் பெற வாழ நடத்தப்படும் பூர சலங்கை உற்சவம்
பொதுவாக, அம்பிகை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்திகளாகத் தனித்தனியே வெவ்வேறு தலங்களில் காட்சி தருவாள். சிதம்பரம் தலத்தில், இந்த மூன்று சக்திகளும் ஒன்றாக இணைந்து மகா சக்தியாக சிவகாமசுந்தரி அம்மன் வடிவத்தில் அருள்பாலிக்கிறாள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்பிகைக்காக நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது ஐப்பசி பூரம் உற்சவம் ஆகும். பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த ஐப்பசி பூர திருவிழாவில் அம்பிகையை குழந்தையாக பாவித்து, பின்னர் பருவமடைந்த பெண்ணிற்கான சடங்குகள் செய்வித்து, திருவிழாவின் இறுதியாக அம்பிகைக்கு இறைவனுடன் திருக்கல்யாணம் நடைபெறும். திருவிழாவின் முதல் எட்டு நாட்களில் அம்பிகை பலவித வாகனங்களிலும், ஒன்பதாம் நாள் தேரிலும் ஏறி வீதி உலா வருவாள்.
பத்தாம் நாள், ஐப்பசி பூரத்தன்று அம்பிகைக்கு பருவம் அடைந்ததற்கான சடங்குகள் நடத்தப்படும். அன்று காலையில் சிவகாமசுந்தரி அம்பிகையின் சன்னதியில், உற்சவ மூர்த்தியான சிவகாமசுந்தரி அம்மனுக்கு மஹாபிஷேகம் நடைபெறும். பின்னர் சிவகாமசுந்தரி அம்பிகை சர்வ அலங்காரத்துடன் நடராஜப் பெருமான் சன்னதிக்கு எழுந்தருளி அங்கு நடராஜரிடமிருந்து முதன் முதலில் பட்டு வஸ்திரங்களை யும், திருவருளையும் பெறுவார். இந்த நிகழ்ச்சி பட்டு வாங்கும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. எம்பெருமான் நடராஜரிடம் இருந்து பட்டு வஸ்திரங்களை பெற்றுக் கொண்ட பின்னர் அம்பிகை நான்கு பிரகாரங்களிலும், வலம் வந்து மக்கள் அளிக்கும் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக, சீராக ஏற்றுக் கொள்வார்.
ஐப்பசி பூரத்தன்று மாலை 7:00 மணி அளவில் அம்பிகைக்கு பூரச் சலங்கை எனும் பருவமடைந்த பெண்ணிற்கு நடத்தப்படும் சடங்குகள் செய்யப்படும். அப்போது அம்மனின் மடியில் நெல், அவல் ,முளைப்பயிறு, அரிசி ஆகியவற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டி விடுவார்கள். உலக உயிர்கள் யாவும் அன்னையின் மடியில் முளைப்பயறாக உருவாவதைக் குறிப்பிடும் வகையில் அம்பாள் மடியில் இவற்றை வைத்து கட்டுவார்கள். பக்தர்களுக்கு இந்த முறைப் பயறு மற்றும் நெல்,அரிசி,அவல் பிரசாதமாக வழங்கப்படும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு முளைப்பயறு பிரசாதம் வாங்கி உண்ண, விரைவில் மகப்பேறு உண்டாகும். மேலும் திருமணம் தடை நீங்கி திருமணம் கைகூடும். உலகத்தில் உள்ள 72,000 கோடி ஜீவ ராசிகளும் விவசாயம் செழித்து நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்பது தான் இந்த சம்பிரதாயத்தின் நோக்கமாகும்.
மறுநாள் ஐப்பசி உத்திரத்தன்று, காலை அன்னை சிவானந்தநாயகி அம்மன் தபசுக் காட்சி நடைபெறும். மாலையில் கீழவீதி, தேரடியில் ஓட்டம் பிடித்து விளையாடும் வைபவமும், மாலை மாற்றல், கன்னூஞ்சல், பூர்வாங்க கலச பூஜை, காப்பு கட்டி சிறப்பு ஹோமம், திருமாங்கல்ய தாரணம் ஆகியனவும் நடைபெறும். இதைத் தொடர்ந்து பக்தர்கள் தெய்வத் தம்பதியின் ஆசி வேண்டி வணங்குவர்.
திருவாலங்காடு சிவபெருமானை வழிபடும் முன் வணங்க வேண்டிய பத்ரகாளி அம்மன்
தேவியின் 51 சக்தி பீடங்களில் காளி பீடமாக இருக்கும் தலம்
திருவள்ளூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் கோவில். சிவபெருமானின் ஐந்து நடன சபைகளில் ஒன்றான ரத்தின சபை அமைந்திருக்கும் திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோவில் அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. தந்திர சூடாமணி நூல் கூறும் தேவியின் 51 சக்தி பீடங்களில், இது காளி பீடம் ஆகும்.
மிகச்சிறிய இக்கோவிலின் கருவறையில், பத்ரகாளி அம்மன் சாந்த சொரூபியாக எட்டு திருக்கரங்களுடன், முழங்கால்களில் கால்களை மடக்கி நடனமாடும் நிலையில் உள்ளார். பாதங்களை தரையில் ஊன்றி, கணுக்காலில் நடனக் கலைஞரின் மணிகளுடன் காட்சி அளிக்கிறாள்.
இந்த பத்ரகாளி அம்மன் தனி கோவில் கொண்டு எழுந்தருளியதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, "நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்" என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, "என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்" என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
இடுப்பில் குழந்தையை தாங்கிய வடிவில் உள்ள அம்பிகையின் அரிய தோற்றம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை, பெரியநாயகி.
திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி 'அம்மா' என்று அழைத்தார். அது கேட்டுப் பெரியநாயகி அம்மை அங்கு தோன்றி திருஞானசம்பந்தரை இடுப்பில் வைத்துக்கொண்டு கோவிலுக்கு அழைத்து வந்தார். பிள்ளையைத் தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்ம வித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் 'கூப்பிட்டான் குளம்' என்பர். அது இன்று 'கேட்டான் குளம்' என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகர், ஞானசம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இரண்டு திருமுகங்கள் கொண்ட அபூர்வ அம்மன்
தஞ்சையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏகௌரியம்மன் கோவில் உள்ளது. சோழ மன்னர்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள். இந்த தேவி அக்னி கிரீடம் அணிந்து, எட்டு திருக்கரங்களுடன், பத்மபீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். ஒன்றன்மீது ஒன்றாக அமைந்த இரண்டு திருமுகங்களுடன் காட்சி தருகிறாள். ஒரு தலை கோரைப் பல்லுடன் உக்கிரமாக உள்ளது. இதற்கு மேலுள்ள மற்றொரு தலை அமைதியே வடிவமாக உள்ளது. தீயவர்களை அழிக்க உக்கிரமுடன் ஒரு முகம், வழிபடும் அடியவர்களின் துயர் நீக்க சாந்தமுடன் மற்றொரு முகத்துடனும் காட்சி அளிக்கிறாள். எட்டு கைகளில் சூலம், கத்தி, உடுக்கை, நாகம், கேடயம், மணி, கபாலமும், பார்வதியின் அம்சத்தை உணர்த்தும் விதமாக கிளியும் உள்ளது. இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு இரண்டு திருமுகங்கள் அமைந்திருப்பது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.
அம்மனுக்கு ஏகௌரி என்ற பெயர் வந்த வரலாறு
முன்னொரு காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து, ஒரு பெண்ணை தவிர யாராலும் தன்னை வெல்ல முடியாது என்ற வரத்தை பெற்றான். பின்னர் தஞ்சன், ஆணவத்தால் முனிவர்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமைப் படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சனின் கொடுமைகள் குறித்து முறையிட்டனர். சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து அரக்கனை அழிக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி சிம்ம வாகன மேறி எட்டுக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தி புறப்பட்டாள். தேவிக்கும், தஞ்சனுக்கும் கடும்போர் ஏற்பட்டது.
போரின் இறுதியில், தஞ்சன் எருமைக் கடாவாக மாறி தேவியைத் தாக்கினான். தேவி எருமைக் கடாவாக வந்த அரக்கனை வாளால் தலை வேறு, உடல் வேறு என இரண்டு துண்டாக்கினாள்.
உயிர் பிரியும் நேரத்தில் தஞ்சன் தேவியைப் பணிந்து, இந்த பகுதி எனது பெயரால் தஞ்சாபுரி என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினான். தேவி, அவன் கேட்ட வரத்தை வழங்கினாள் . அரக்கனை வதைத்த பின்னும், அம்மனின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. அதே உக்கிரத்துடன் வல்லத்தில் அலைந்து திரிந்தாள். இதனால் நாடெங்கும் வறட்சி உண்டாயிற்று. நாடெங்கும் பஞ்சம், பசி, பட்டினி என மக்கள் தவித்தனர். நிலைமையை உணர்ந்த சிவபெருமான் பார்வதியை ;ஏ கவுரி; சாந்தம் கொள் என்று கேட்டுக்கொண்டார். அம்மையின் கோபம் சற்று தணிந்தது. நெல்லிப்பள்ளம் என்ற குளத்தில் மூழ்கினாள். அப்போது பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து அங்கேயே எழுந்தருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு ஏகௌரி அம்மனாக அருள்புரிந்து வருகிறாள். அம்மன் அரக்கனை வதம் செய்தது ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். எனவே அன்றைய தினம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, தீ மிதித்து அம்மனை சாந்தப் படுத்துகின்றனர்.
குழந்தை பாக்கியத்திற்கு எலுமிச்சை பழச்சாறு பிரசாதம் தரும் நடைமுறை
குழந்தை வரம் வேண்டி இத்தலத்துக்கு வரும் பெண்களுக்கு எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக எலுமிச்சை பழச்சாறை பிரசாதமாகத் தருகிறார்கள். வேறு எந்த தலத்திலும் இப்படி ஒரு நடைமுறை இல்லை.
ஏகௌரி அம்மனின் இருபுறமும் ராகு கேது எழுந்தருளி இருக்கிறார்கள். அதனால் இத்தலம் கால சர்ப்ப தோஷம் , களத்திர தோஷம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாக இருக்கிறது.
தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் நவக்கிரகங்கள்
கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோனியம்மன் கோவில். இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இவ்வூர் மக்கள் இந்த அம்மனை என்று 'கோவையின் அரசி' எனவும் அன்புடன் அழைக்கின்றனர்.
பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் தனித்தனியாக அமர்ந்து அருள்பாலிப்பார்கள். ஆனால் கோனியம்மன் கோவிலில் நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷமானது ஆகும். கோனியம்மனுக்கு வலப்புறத்தில் நவக்கிரக சந்நிதியில், தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்கள் தம்பதி சமேதராக வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
நவக்கிரக சன்னதிகளில் வழக்கமாக சூரியபகவான் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள் வழங்குவார். இங்குள்ள சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். கோனியம்மன் வடக்கு நோக்கிய நிலையில் அருள்பாலிப்பதால் ஆகமவிதிப்படி, சூரியபகவான் மேற்கு நோக்கி உள்ளார். சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருக்க, அவரது இரு மனைவிகள் உஷா, பிரத்யுஷா உடன் இருக்கின்றனர். சந்திரபகவான், அவரது மனைவிகள் கிருத்திகா, ரோகிணி ஆகியோருடனும், மற்ற நவக்கிரகங்கள் செவ்வாய் பகவான் - சக்திதேவி, புதன் பகவான் - ஞானதேவி, குருபகவான் - தாராதேவி, சுக்கிர பகவான் - சுகீர்த்தி, சனி பகவான் -நீலாதேவி, ராகுபகவான் - சிம்ஹி , கேதுபகவான் - சித்திரலேகா ஆகியோர் தம்பதி சமேதராக காட்சி அளிக்கின்றனர்.
இந்த நவக்கிரகங்களை வணங்குவதால், சனி தோஷம், சுக்ர தோஷம் என அனைத்துவிதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
பச்சை நிற சேலை மட்டுமே அணியும் அம்மன்
சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு செய்யப்படும் பூஜை
கடலூர்-பண்ருட்டி சாலையில் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது எழுமேடு கிராமம். இந்த கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அம்மனுக்கு எப்பொழுதும் பச்சை நிற சேலை மட்டுமே அணிவிக்கிறார்கள். மேலும் காணிக்கையாக பச்சை நிற சேலை மட்டுமே வழங்குகிறார்கள். இந்த அம்மன் இந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்குவதால், பூஜை செய்யும்போது, அம்மனுக்கு மிகவும் பிடித்தமான சிலம்பு மற்றும் உடுக்கையை இசைத்தவாறு பூஜை செய்கிறார்கள். இப்படி இசைத்தவாறு பூஜை செய்வது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
திருமண பாக்கியம் கிடைக்கவும், பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு பச்சை நிற புடவை சாத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
கேதார கௌரி விரதம்
கேதார கௌரி விரதத்தின் சிறப்பு
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பார்கள். கேதார கௌரி விரதம் ஐப்பசி மாதத்தில் அமாவாசை நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரட்டாசி மாத சுக்கில பட்ச தசமி முதல் ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசைவரை, இருபத்தொரு நாட்கள் கைக்கொள்ளும் விரதமாகும். இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே.
கேதார கௌரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கேதாரம் என்பது இமயமலைச்சாரலைக் குறிப்பதாகும். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு, அதன் பலனாக சிவபெருமானும் பார்வதி தேவியும், அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.
ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காக தொடங்கியதே கேதாரகௌரி விரதமாகும். தீபாவளி திருநாளில், கேதார கெளரி நோன்பு கொண்ட நாளில், வயது முதிர்ந்த தம்பதிக்கு புத்தாடை வழங்கி, மங்கலப் பொருட்கள் கொடுத்து நமஸ்கரித்தால், பிரிந்த தம்பதியும் ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருச்செங்கோடு கோவில் அர்த்தநாரீஸ்வரர் திருமேனி, வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவுருவம் ஆகும். இந்த திருமேனியின் இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது. தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.
தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். தீபாவளியையொட்டி கேதார கௌரி நோன்பிருக்கும் பெண்மணிகள், திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும். தீபாவளித் திருநாளில், கேதார நோன்பு இருந்தாலும், இல்லையென்றாலும் அன்றைய நாளில், சிவபார்வதியை வணங்குவதும், பசுவுக்கு அன்னமிடுவதும் விசேஷ பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.
பக்தர்களின் உயிர்நாடியாக இருக்கும் அம்மன்
தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது, நாடியம்மன் கோவில். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாலும், தன் பக்தர்களின் உயிர்நாடியாக இருப்பதாதாலும் அவளை இப்பெயரிட்டு அழைக் கிறார்கள். கருவறையில் தீ ஜுவாலை, கிரீடம் நான்கு கரங்களில் கத்தி, சூலம், கேடயம், கபாலம் ஏந்தி ஆயுதபாணியாகக் காட்சி தருகிறாள். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மம் உள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்தவர் பட்டு மழவராய நாயக்கர். அவர் பெயரால் விளங்கி வந்த கோட்டை இருந்த இடத்தின் பெயர் பட்டு மழவராயர் கோட்டை. அது நாளடைவில் சுருங்கி பட்டுக்கோட்டை ஆகிவிட்டது. மழவராயர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றார். அங்கே தெய்வீகக் களையோடு ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டார். அரசரைப் பார்த்ததும் அந்த பெண் ஓட, அரசரும் அவளைத் துரத்திக் கொண்டு ஓடினார். அவள் ஓடிச் சென்று ஒரு புதரில் மறைந்து விட்டாள். புதர் அருகே சென்று பார்த்தபோது, அங்கே ஓர் அழகான அம்மன் சிலை இருந்தது. பட்டு மழவராயர், தங்களை நாடி வந்த அம்மனுக்கு அங்கு கோவிலை எழுப்பினார்.இப்பகுதியில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு 'நாடி' என்கிற பெயர் சூட்டப்படுகிறது. பௌர்ணமி பூஜை செய்து இங்குள்ள நாகலிங்க மரத்தில் சரடு கட்டினால் எப்படிப்பட்ட தோஷம் இருந்தாலும் விலகி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் பல்லாயிரக்கணக்கானோர், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி பெருந்திருவிழாவாக மாவிளக்கு போடும் அதிசயம் நடப்பது இந்த கோவிலில் மட்டும்தான்.
மகாலட்சுமி
மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும், பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிலிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் மகாலட்சுமியை பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி, லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை,திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால், திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு, அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.
திருவக்கரை வக்ரகாளியம்மன்
தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது வக்ரகாளியம்மன் சந்நிதி.
பொதுவாக காளி கோவில், ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து இருப்பது வித்தியாசமான ஒன்றாகும்.
வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்டு பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம் அணிந்திருக்கிறாள்.
காளியம்மனின் வலப்புறம் உள்ள நான்கு திருக்கரங்களிலும் மேலிருந்து முறையே பாசம், சக்கரம், வாள் மற்றும் கட்டாரி ஆகியவற்றை ஏந்தி காட்சித் தருகின்றாள். அதேபோல இடப்புறத்தில் மேலிருந்து முறையே உடுக்கை வைத்திருக்கும் பாவனையுடன் ஒரு திருக்கரம், அடுத்து கேடயம் மற்றும் கபாலம் ஏந்தியிருக்கும் இரு திருக்கரங்கள் மற்றும் இறுதியாக இடதுகாலை ஒட்டிக் கை விரல்களை லாவகமாக மடக்கி ஆள்காட்டி விரலால் அம்மன் தனது இடது பாதத்தைச் சுட்டிக்காட்டும் பாவனையில் அமைந்த திருக்கரம் என நான்கு திருக்கரங்களுடன் அருள்புரிகின்றாள். அன்னையின் மார்பிற்கு குறுக்கே மண்டை ஓட்டு மாலை காணப்படுகிறது. தர்மத்திற்கு எதிராக அக்கிரமம் செய்பவர்களை அழித்து அவர்களது மண்டை ஓடுகளை சேர்த்து மாலையாக அணிந்துள்ளாள்.
வக்கிரகாளி தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்புரிகின்றாள். கோரைப் பற்களுடன் சினம் கக்கும் பெரிய உருண்டை விழிகளால் பூமியை நோக்குகின்றாள். அம்மன் வலது காலைச் சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றியபடியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந் துள்ள காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜப் பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை, வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.
சம்காரம் பண்ணியதால் வக்ரகாளி ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.
ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும் என்பது ஐதீகம்.
பௌர்ணமி இரவு, அமாவாசை நண்பகல் ஜோதி தரிசனம்
பௌர்ணமி இரவு 12 மணிக்கும், அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம் ஆகும்.