பனச்சிகாடு சரஸ்வதி கோவில்
பனச்சிகாடு சரஸ்வதி தேவி
30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளுக்கு இடையே எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி
நவராத்திரியில் சரஸ்வதி தேவிக்கு குழந்தை வடிவ அலங்காரம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையில், கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிக் காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சரஸ்வதி கோவில். கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். இக்கோவில் தட்சிண மூகாம்பிகை கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி சுயம்புவாக தோன்றியவர். இந்த கோவிலில், சரஸ்வதி தேவிக்கு என்று தனி கருவறை கிடையாது. 30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளால் மூடப்பட்ட ஒரு சிறிய செவ்வக குளம் உள்ளது. சரஸ்வதி தேவியின் சிலை கொடிகளின் தோப்பிற்குள் அமைந்துள்ளது. குளத்தில் பாயும் புனித நீர் சிலையின் கால்களைக் கழுவுகிறது. இந்த நீரானது எப்போதும் வறண்டு போகாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ‘நவராத்திரி இசை’ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காட்டமியில், சரசுவதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விசயதசமியன்று காலையில், 'ஏசுதிரினிருத்து' அல்லது 'வித்யாரம்ப விழா' அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்கு அல்லது மணல் மேல், தங்க மோதிரத்துடன் 'அரிசிரீ' என்ற வார்த்தையை எழுதி, தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு பஞ்சாமிர்தம், பால்பாயாசம் செய்து படைத்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கும் இங்கு பிரார்த்திக்கிறார்கள். பாட்டு, இசை, நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக் கொள்ள தொடங்கப்படுகின்றன. இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
சரஸ்வதி சூக்தம் விதி தவறாமல் ஜபம் செய்து உருவாக்கிய சுத்தமான நெய், இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. புத்திக்கும், படிப்பிற்கும் இந்த பிரசாத நெய், மிகவும் உன்னதமானது. நவராத்திரியின்போது, சரஸ்வதியை குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.