சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்மன்
முப்பெரும் சக்தியாக விளங்கும் சிவகாமசுந்தரி அம்மன்
சிவ பக்தர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் கோவில் தான். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக இக்கோயில் விளங்குகின்றது.
இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில், சிவகாம கோட்டம் என்று அழைக்கப்படும் தனி கோவிலில் அன்னை சிவகாம சுந்தரி அம்மன் அருள் பாலிக்கின்றாள். சிவகாம சுந்தரி அம்மன் என்றால், 'சிவனது அழகிய காதலியானவள்' என்று பொருள்படும்.
சிவகாம சுந்தரி அம்மன், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் மகா சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இச்சா சக்தி (விருப்ப சக்தி): இது விருப்பங்களையும், ஆசைகளையும், படைப்பாற்றலையும் குறிக்கும் சக்தி ஆகும். ஞான சக்தி (அறிவு சக்தி): இது அறிவையும், ஞானத்தையும், விவேகத்தையும் குறிக்கும் சக்தி ஆகும். கிரியா சக்தி (செயல் சக்தி): இது செயல்களையும், இயக்கத்தையும், படைத்தலையும், அழித்தலையும் குறிக்கும் சக்தி ஆகும்.
இக்கோவில் கருவறையில், பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட , எழுந்தருளி இருக்கிறாள்.
வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைந்திருக்கின்றது.
தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும் திருப்பாதங்களும் கொண்டு சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் அருள் வழங்குகின்றாள்.
சிவகாம சுந்தரி அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையின் கோவிலில் பதினாறு படிகள் அமைந்துள்ளன. அம்பிகையை மனதிற்குள் நினைத்து, குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஐப்பசிப் பூர விழா
சிவகாமி அம்மன் கோவிலில் நடராஜர் கோயிலில் உள்ளது போலவே தனி கொடிமரம் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசிப் பூர விழா சோழ மன்னர் கால முதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. ஐப்பசிப் பூர விழா 10 தினங்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
ஐப்பசிப் பூர விழாவை முன்னிட்டு சிவகாமியம்மை கோயிலில் கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டு தினமும் சாமி வீதி உலா செல்லுதல் நடக்கும். விழாவின் முக்கிய அம்சமாக தேரோட்டம் மற்றும் சலங்கை உற்சவமும், தபசு உற்சவமும் அதன் பின்னர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
கடலூரில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிதம்பரம்.