சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

பக்தனுக்காக, பொட்டு வைத்துக் கொள்ள சிரம் தாழ்த்திய சென்னி ஆண்டவர்

பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். 1749 அடி உயரம் உடைய இந்த மலைக்கு மேல் செல்ல வாகன வசதிகள் உண்டு. சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.

ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது . அதனால் இந்த மலைக்கு சிரகிரி என்ற பெயரும் உண்டு. (சிரகிரி - சிரம் - சென்னி, கிரி-மலை).அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். பால தேவராய சுவாமிகள் எழுதிய 'கந்த சஷ்டி கவசம்' அரங்கேற்றிய தலம்.

இங்கு முருகன் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். இந்த மலையின் ஒரு பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட பசுவின் உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் இருக்க, இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த சிலை மீது சிற்பி உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது, பின்பு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாறு கூறுகிறது. சிலை இடுப்புக்குக் கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் தயிரானது புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கத்துறையான் என்னும் குடியானவன், இங்கு பண்ணையாரிடம் மாடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். முருக பக்தனான அவரை தடுத்தாட் கொண்ட முருகன், அவர் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்தார். அவனுக்கு முருகன், நிலத்தம்பிரான் என்று நாமக்கரணம் சூட்டினார்.

ஒரு நாள் சிவாச்சார்யார் வராததால், சென்னியாண்டவருக்கு நிலத்தம்பிரானே பூஜை செய்தார். நிலத்தம்பிரான் பூஜையின் போது முருகனின் நெற்றியில் பொட்டு வைக்க முயற்சித்தபோது, அப்போது குள்ளமான தம்பிரானுக்கு ஆண்டவர் நெற்றி எட்டாததால், சென்னி ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தினாராம். அதனால் இன்றும் சென்னியாண்டவரின் தலை தாழ்ந்தபடியே இருக்கிறது.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

சிவ குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

வருடத்திற்கு ஒருமுறை, வைகாசி விசாகத்தன்று மட்டும் வீதியுலா வரும் சோமநாத சுவாமி

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

சிவன் கோவில்களில், சிவபெருமான் பார்வதி தேவியோடும், இருவருக்கும் நடுவில் முருகனோடும், சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சியளிப்பார். இக்கோவிலில் சிவபெருமான் குடும்ப சகிதமாக ஒரே இடத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இங்கு பிள்ளையார், சிவபெருமான், முருகன் மற்றும் பார்வதி தேவி சுதை வடிவில் வரிசையாக காட்சி அளிக்க, பிள்ளையாரின் வலதுபுறம் சண்டிகேஸ்வரரும், பார்வதி தேவியின் இடதுபுறம் மனோன்மணி (சிவபெருமானின் உபசக்தி) அம்பிகையும் உடன் இருக்கிறார்கள்.

இவர்கள் அறுவரின் உலோக திருமேனிகளும் இக்கோவிலில் உள்ளன. வைகாசி திருவிழாவின் போது, வைகாசி விசாகத்தன்று சோமநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.திருக்கல்யாணம் முடிந்த பிறகு இந்த அறுவரும் வீதி உலாவுக்கு புறப்படுவார்கள். அப்போது உற்சவர் சோமநாத சுவாமியும், அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஒரு ஒரு மரப்படி சட்டத்திலும், சிவபெருமானின் உபசக்தி மனோன்மணி தனியாக ஒரு சப்பரத்திலும் எழுந்தருள்வார்கள்.

எப்படி திருவாரூர் தியாகராஜர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தேரில் உலா வருவாரோ, அது போல இத்தலத்து சோமநாத சுவாமியின் உற்சவத் திருமேனி, வைகாசி விசாகத்தன்று மட்டும்தான் வீதியுலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

பிரதோஷ நந்தி மற்றும் அதிகார நந்தி இரு வேறு திசைகளில் சாய்ந்தபடி இருக்கும் தேவார தலம்

திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை. இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அதிகார நந்தியும், பிரதோஷ நந்தியும் தங்கள் தலையை சாய்த்தவாறு இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோவிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கோவில் கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய, பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்தது. இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கின்றது.இப்படி இந்த இரு நந்திகளும் இருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்

மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கும் அரிய தலம்

சுக்கிர பகவானுக்குரிய பரிகார தலம்

திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சேரன்மாதேவிக்கு மிக அருகில் அமைந்துள்ள தலம் கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தின் மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கின்றனர். இந்தியாவிலேயே மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் உற்சவர் வெங்கடாஜலபதியாகவும் காணப்படுகின்ற நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓரிரு இடங்களில் தான் உள்ளன.

மூலவர் சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும், பின்புறம் யோக நரசிம்மராகவும் காட்சியளிப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.முன்புறம் காட்சிதரும் ஸ்ரீ சுதர்சனர் சங்கு, சக்கரம், அங்குசம், மழு, ஈட்டி, தண்டு, கலப்பை, அக்னி, கத்தி, வேல், வில், பாசம், வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் போன்ற ஆயுதங்களை தாங்கி பதினாறு கரங்களுடன் காட்சித் தருகிறார். இவருக்குப் பின்புறம் காணப்படும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறார்.தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இவர் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளார்.

சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. எனவே இத்தலம் சுக்கிரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகின்றது.

திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் இப் பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயாசம் வழங்கினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும். . இங்குள்ள நரசிம்மருக்குப் பிரதோஷ காலங்களில் தொடர்ச்சியாகப் பதினொன்று பிரதோஷ நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்து வேண்டியது நிறைவேறும்.

Read More
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவில்

அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிபடும் வித்தியாசமான நடைமுறை

காரைக்குடி நகரின் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோவில். கருவறையில் முத்து மாரியம்மன் நின்ற கோலத்தில் கருணைப் பார்வையும்,கனிவு சிரிப்புமாகக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் . இக்கோவிலில் அம்மனுக்கு தக்காளியால் அர்ச்சனை செய்வதும், தக்காளி மாலை சாத்தியும் வழிபாடு செய்வது வேறு எந்த அம்மன் தலத்திலும் இல்லாத நடைமுறையாகும்.

அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிப்பட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது தனி சிறப்பாகும்.

Read More
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

இடக்காலைச் சுற்றியவாறு அமர்ந்து, இரண்டு முனிவர்களுடன் மட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.

இக்கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறையின் தெற்குப் பக்கத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். யோக தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும், இடது கரத்தில் தீச்சுடரைத் தாங்கியவாறும், இடக்காலைச் சுற்றியவாறு யோகப் பட்டம் விளங்கவும் காட்சி தருகிறார். பொதுவாக நான்கு சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இரண்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.

Read More
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்

ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து உருவாக்கிய தீர்த்தம்

உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகளை குணப்படுத்தும் சேஷ தீர்த்தம்

கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.

தேவர்களுக்கு தலைமை தாங்கியதால் பெருமாளுக்கு இங்கு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இத்தலத்திலே ஸ்ரீமந்நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர(ஆதிசேஷ)புரம் என பெயர் பெற்று விளங்கியது.

ஒரு சமயம் பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால், ஆதிசேஷனிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோவிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்

Read More
வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில்

முருகன் இளமை, குடும்பஸ்தர், முதுமை என மூன்று கோலங்களில் காட்சி தரும் ஒரே தலம்

குருடராகவும், ஊமையாகவும் இருந்த சிற்பி குழந்தை வடிவ முருகன் சிலையை வடித்த அற்புதம்

சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் 64 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுக்கோட்டை. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வட சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி உண்டு.

இக்கோவிலில் முருகப் பெருமான் இளமை, முதுமை, குடும்பஸ்தர் என்று மூன்று கோலங்களில் காட்சி அருள்வது தனிச்சிறப்பாகும். முருகப் பெருமான், கருவறையில் பாலசுப்பிரமணியராக குழந்தை வடிவில் (இளமை) மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்தில் காட்சி அருள்கிறார். அவர் அருகில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி துறவற கோலத்தில் (முதுமை) அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி வள்ளி, தெய்வயானையுடன் கிரகஸ்த கோலத்தில் (குடும்பஸ்தராக) அருள்பாலிக்கிறார்.

சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோவிலில் தொடக்கத்தில் ஐந்து நிலை ராஜ கோபுரம், சுயம்பு மூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் குழந்தை வடிவ முருகன் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பின்னணியில் முருகன் நடத்திய அற்புத திருவிளையாடல் உள்ளது.

அப்பன்ன சுவாமிகள் என்பவர் வைணவ பக்தர். இருப்பினும் வடசென்னிமலை முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். அவர் ஒரு குழந்தை வடிவ முருகன் சிலையை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மகாப்பெரியவரை நேரில் சந்தித்து, வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால், சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார். அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பி பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமையாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்ய முடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப் பெரியவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். அதற்கு சம்மதம் தெரிவித்த சிற்பி, அப்பன்ன சுவாமிகளை ஏழு நாட்கள் கழித்து வருமாறு சைகையில் தெரிவித்தார்.

ஏழு நாட்கள் கழித்து அப்பன்ன சுவாமிகள் சிற்பியை சந்தித்தபோது, அங்கு குழந்தை வேலன் விக்கிரகத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதற்குள்ளாக அற்புதமான குழந்தை வேலன் சிலையை அழகாக வடித்து முடித்திருந்தார் சிற்பி. இது எப்படி சாத்தியமானது என வியந்து நின்ற அப்பன்ன சுவாமிகள், குழந்தை வேலன் சிலையை பயபக்தியுடன் சிற்பியிடமிருந்து பெற்றுச் சென்று வடசென்னிமலை முருகன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். சேலம் ஆத்தூரில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள வடக்குமரை கிராமத்தில் அப்பன்ன சுவாமிகளது ஜீவ சமாதி உள்ளது.

ஒரே சமயத்தில் முருகப் பெருமானின் மூன்று கோலங்களையும் வணங்கினால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்து முருகப் பெருமானை வணங்கினால் தீமைகள் விலகும் என்பது ஐதீகம்.இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Read More
நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்

நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்

மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் தலம்

சிவன் கோவிலில் பிரசன்ன வெங்கடாசலபதியும், தாயாரும் எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு

கடலூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில். இறைவியின் திருநாமம் புவனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

மண்ணுக்கு அதிபதி பூலோகநாதர் என்பதால் மண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும் இந்த கோவில் மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டால் எளிதில் பிரச்னைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும் தடைபட்ட கட்டுமான பணிகள் எதுவாகினும் இங்கு வந்த பூஜை நடத்தினால் அந்த கட்டிடம் நிவர்த்தி அடையும். வீடு கட்ட விரும்புவோர் இந்த ஆலயத்தில் கற்களை அடுக்கி வேண்டிக் கொண்டால் உடனே வீடு கட்டும் பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இறைவி புவனாம்பிகை நாயகி முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும் என்பது நம்பிக்கை.

சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் வகையில், இக்கோவிலில் தனிச்சன்னதியில் பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயாரும் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிப்பது தனிச்சிறப்பாகும். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

கலை நயத்துடன் அமைக்கப்பட்ட அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரை (பிரணாளம்)

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் இறை வழிபாட்டு தலங்களாக மட்டுமன்றி சிற்பக் கலைக் கூடங்களாகவும் விளங்குகின்றன. நம் கோவில்களின் கட்டிடக்கலை, அதன் தனித்துவமான பாணி, வடிவமைப்பு ஆகியவை நம் முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டுகின்றன. மூலவரின் கருவறை, மண்டபங்கள், தூண்கள், விதானங்கள், கோபுரங்கள், சிற்பங்கள் என்று ஒவ்வொரு பகுதியும் மிகுந்த கலைநயத்துடனும், கற்பனை திறனுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில், சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சோழர் காலத்து கலைத்திறன் மிளிருகின்றது. இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரையை கூட மிகுந்த கலை நயத்துடன் அமைத்திருக்கிறார்கள். இந்த நீர் தாரைக்கு பிரணாளம் என்று பெயர். இக்கோவிலில் உள்ள பிரணாளத்தின் அபிஷேக நீர் வெளியேறும் பகுதியில் காணப்பெறும் சிற்ப அமைப்பு கலை நயத்துடன் துலங்குகின்றது. பிரணாளத்தின் பக்கவாட்டில் சங்கு ஊதும் பூதகணம் திகழ, ஒரு பூதத்தின் பிளந்த வாயிலிருந்து நீர் வெளியே அபிஷேக நீர் கொட்டும் வகையில் அச்சிற்பம் காணப்பெறுகின்றது.

Read More
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

நவக்கிரகங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் திருவாசி இருக்கும் அபூர்வ அமைப்பு

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். ஆஞ்சநேயர் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.

இக்கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. நவக்கிரகங்கள் மனைவியருடன் இங்கே எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் இந்த நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக திருவாசி அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

ஆஞ்சநேயர், நவக்கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரது நேரடிப்பார்வையில் நவக்கிரகங்கள் குடும்பநிலையில் இருப்பதால், இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டை தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்

மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் தாயார் அமர்ந்திருக்கும் அபூர்வ காட்சி

சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இங்குள்ள பெருமாள் ஒரு பாதம் முன்னோக்கியும், ஒரு பாதம் பின்னோக்கியும் இருக்கும் நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

இத்தலத்தில் மட்டும் பெருந்தேவி தாயார் மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் அமர்ந்து சிம்மவாகினியாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக அம்பிகை அல்லது துர்க்கை தான் சிம்மவாகினியாக எழுந்தருள்வார்கள். ஆனால் இந்த கோவிலில் தாயார் சிம்ம பீடத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

Read More
மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்

ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டிய நிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில், திருவாரூரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள மஞ்சக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.

ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, அவர் பத்தினியான சீதையும் உடன் செல்கிறாள். அப்போது காட்டில் தனிமையில் இருந்த போது, ராவணனின் மாமன் மாரீசன், மான் உருவில் வந்து மாயம் செய்கிறான். மானை பிடித்து தருமாறு சீதை கேட்டபோது, ராமன் துரத்தி சென்ற நிலையில், சீதை கடத்தப்பட்டாள். ராமபிரான் தன் மனைவியை காணாமல் துயரப்படும்போது ராமனின் மோதிரத்துடன் ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்று சீதை இருக்கும் இடத்தை தெரிந்து வந்த ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டி காட்டிய இடம் என்பதால் அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.

இந்தியாவில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

ஆஞ்சநேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சார்த்தி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலுக்கு அருகாமையில் வடக்கே சிறப்பு மிக்க திருத்தலையாலங்காடு பாலாம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோவிலும், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலும் உள்ளன.

Read More
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூா்த்திகளை உள்ளடக்கிய பெருமான்

மும்மூர்த்திகளின் அடையாளமான தாமரை மலர், சங்கு சக்கரம்,நெற்றிக்கண் கொண்ட உற்சவ பெருமாள்

கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.

திருவந்திபுரத்தில் அருளும் தேவநாதப் பெருமாள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூா்த்திகளையும் உள்ளடக்கிய பெருமானாகத் திருக்காட்சியளிக்கின்றாா். முன் ஒரு காலத்தில் அசுரா்களிடமிருந்து தேவா்களைக் காக்க பெருமான் எடுத்த திருக்கோலமே மூம்மூா்த்தி வடிவம். இதனால் இப்பெருமான் 'த்ரிமூா்த்தி” என்றும் “மூவராகிய ஒருவன்” என்றும் வணங்கப்படுகின்றாா்.

தேவா்களுக்குத் தலைவனாக (நாதனாக) இருந்து எம்பெருமான் போா் புரிந்ததால் இவருக்கு தெய்வநாயகன் மற்றும் தேவநாதன் என்ற திருநாமங்கள் வழங்கலாயிற்று. தேவா்களுக்கு மும்மூா்த்திகள் வடிவில் காட்சி தந்ததால் இத்தலத்தின் உற்சவ மூா்த்திக்கு மூவராகிய ஒருவன் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பிரம்மனுக்கு அடையாளமான தாமரை மலரைத் தனது திருக்கரத்திலும் மஹா விஷ்ணுவிற்கு அடையாளமான சங்கு, சக்கரங்களைத் தாங்கியும் சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும் சடா முடியும் தரித்து தேவநாதப் பெருமான் திருக்காட்சி கொடுப்பதால் 'த்ரிமூா்த்தி' என்றும் 'மூவராகிய ஒருவன்' என்றும் வணங்கப்படுகின்றாா்.கருவறை விமானத் தின் கீழ், கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் ஈசனின் வடிவமான ஶ்ரீதெட்சிணாமூா்த்தியும் மேற்கு திசையில் ஶ்ரீநரசிம்மரும் வடக்கில் ஶ்ரீபிரம்மனும் அமைந்துள்ளது இத்தல பெருமான் 'மூவராகிய ஒருவன்' எனும் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. இத்தலத்து எம்பெருமானை வழிபாடு செய்ய, மும்மூா்த்திகளையும் ஒருங்கே வழிபட்ட பேறு அன்பா்களுக்குக் கிட்டும்.

திருமலைக்கு நோ்ந்து கொண்டு செல்லமுடியாதவா்கள் தேவநாதப் பெருமானுக்கு அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனா்.

Read More
தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்

திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கான பரிகார தலம்

திருவாரூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தில் தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது.

இக்கோவில் உருவானதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. முன்னர் காலத்தில் இப்பகுதியை ஆண்ட வல்லால மகாராஜன் என்ற அரசனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதி தேவியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டு பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தேவி காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய பார்வதி தேவி அந்த மகாராஜா தலையை வெட்டி விடுகிறார். பார்வதி தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்ட ராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். இருப்பினும் தேவியார் ஆக்ரோஷம் அடங்காத நிலையில் முருகன் நேரில் சென்று தாயாரிடம் ஆக்ரோஷம் தீர்த்ததால் பின்நாளில் இத்தலத்தில் குமரன் கோவில் அமைத்துள்ளனர்.

திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கு சிறந்த பரிகார தலமாக, இப்பகுதியில் இந்த கோவில் விளங்குகின்றது.

Read More
திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்

மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தேவார தலம்

மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் என்ற சிறப்பை கொண்டுள்ளது.

தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் திருப்புவனம் ஆகும். மேலும் இராமேசுவரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம்புண்ணியம் அருளும் தலம். காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து புஷ்பவனேசுவரர் சன்னதி முன் உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு அஸ்தி கரைப்பது, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும்.

கருவறையில் மூலவர் புஷ்பவனேசுவரர் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். நமது முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) அமாவாசை நாட்களிலும், மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களிலும் திதி, தர்ப்பணம் ஆகியனவற்றை செய்து நீர்க்கடன் செய்வது மிகவும் முக்கியம். பித்ருக்கள் திருப்தி அடைந்தால்தான் நமது வாழ்வு வளமாக இருக்கும். முன்னோர் வழிபாடு, தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கவல்லது. நமது பித்ருக்களின் வினைகளை நீக்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவணம் தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோவில்

வைகுண்ட பதவி அருளும் திவ்ய தேசம்

அமாவாசை மட்டுமின்றி எல்லா நாட்களும் முன்னோர்களுக்கு திதி கொடுக்க கூடிய தலம்

திருநெல்வேலி - திருச்செந்தூர் வழிப்பாதையில் 30 கி.மீ. தூரத்தில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரி. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள். இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும்.

'குருகு' என்பதற்கு தமிழில் சங்கு என்று பொருள். இத்தல பெருமாளை சங்கன் எனும் கடலில் வாழும் சங்குகளின் அரசன் வந்து வழிபட்டு பேறு பெற்றதால் இத்தலம் குருகூர் என்று ஆனது. பின்னர் நம்மாழ்வாரால் ஆழ்வார் திருநகரி என்றானது.

முன்னொரு காலத்தில், இத்தலத்தில் ஒரு யானையும், வேடனும் போரிட்டு மடிந்தனர். இங்கு இறந்த ஒரே காரணத்திற்காக இருவரும் வைகுண்டம் சென்றனர். எனவே இத்தலத்தில் வழிபட்டால் பாவங்கள் பறந்தோடி, வைகுண்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த தலத்தில் அமாவாசை மட்டுமின்றி எந்த நாளிலும் இறந்து போன நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் நம் முன்னோர்களின் ஆன்மா நரகம் சென்றிருந்தாலும், நாம் இத்தலத்தில் திதி கொடுத்த உடனேயே விஷ்ணு தூதர்கள் வந்து அவர்களை நரகத்தில் இருந்து வைகுண்டம் அழைத்துச் செல்வார்கள் என்பதும் நம்பிக்கையாகும். மகாளய அமாவாசை அன்று ஆழ்வார் திருநகரி வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் வைகுண்ட பதவி அடைவார்கள் என்பது நிச்சயம். திதி கொடுத்த பின்னர் கோபுரத்திலோ, கோபுரத்தின் அருகிலோ மோட்ச தீபம் ஏற்றலாம்.

Read More
திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீசுவரர் கோவில்

திருவெண்பாக்கம் (பூண்டி) ஊன்றீசுவரர் கோவில்

நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படும் தேவார தலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள தேவார தலம் ஊன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மின்னொளியம்மை.

இக்கோவிலில் இறைவன் முன் அமர்ந்திருக்கும் நந்தியின் வலது கொம்பு உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதன் பின்னணியில் சுந்தரருடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று உள்ளது.

திருவாரூரில் பரவையாரை மணந்து கொண்ட சுந்தரர், திருவொற்றியூரில் சங்கிலியார் எனும் பெண்ணை சிவபெருமானை சாட்சியாக வைத்து, அவளைவிட்டு பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து மணந்து கொண்டார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவொற்றியூரை விட்டு திருவாரூருக்கு கிளம்பினார். சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவபெருமான் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவபெருமானிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவபெருமானோ அமைதியாகவே இருந்தார்.

சுந்தரர் விடவில்லை. 'பரம்பொருளாகிய நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே!' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவருக்கு ஒரு ஊன்று கோலை மட்டும் கொடுத்து 'நான் இங்குதான் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்' என்றார். கோபம் அதிகரித்த சுந்தரர், சிவபெருமான் கொடுத்த ஊன்றுகோலை ஓங்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது. பின் சுந்தரர் தன் யாத்திரையை தொடர்ந்து, இங்கிருந்து காஞ்சிபுரம் சென்றார்.

சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இத்தல இறைவனுக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர்.கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு ஒடிந்த நிலையில் இருப்பதை இன்றும் நாம் காணலாம். அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண்பார்வையை இழந்த சுந்தரர், இத்தலத்தை நோக்கி வரும்போது, அம்பாள் மின்னலைப் போன்ற ஒளி அளித்து வழிகாட்டி மறைந்தாளாம். அதனால்தான் இத்தல அம்பிகைக்கு மின்னொளியம்மை என்று பெயர்.

Read More
முட்டம் நாகேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

முட்டம் நாகேசுவரர் கோவில்

உயர்ந்த பேரழகுடன் கூடிய, நுணுக்கமான வேலைப்பாடு உள்ள அம்பிகையின் ஆபூர்வ சிற்பம்

சிற்பத்தில் தெரியும் திருமாங்கல்ய முடிச்சு மற்றும் இடையில் அணிந்திருக்கும் ஆடையின் முடிச்சு

16 சிறு துவாரங்கள் உள்ள மேகலை என்ற நுணுக்கமான ஆபரணம்

கோயம்புத்தூர் மாநகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது முட்டம் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் முத்துவாளி அம்மன். முத்துக்களால் அமைந்த காதணி அணிந்ததால் இப்பெயர் பெற்றார். 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவில்

அம்பிகை முத்து வாளியம்மன் சிற்ப அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். அம்மனின் சிற்பத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். உயர்ந்த பேரழகுடன் கூடிய இந்த அம்மனின் சிற்பத்தை போன்றதொரு சிற்பம் உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. மதுரை மீனாட்சியம்மன் சிலையையும், இச்சிலையையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது.

நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அம்பிகை, தனது வலது கையில் நீலோத்பல மலரை ஏந்தி உள்ளார். முன்கையில் பரியகம் எனும் ஆபரணம் உள்ளது. இருதோள்களிலும்அடுக்கடுக்காக அரும்புகள் பொருந்திய கடகங்கள் உள்ளன. அவற்றின் நடுவே வட்டமான மலர்மொட்டுக்கள் உள்ளன. அம்பிகையின் கை விரல்களில் உள்ள மோதிரம் மற்றும் ரேகைகளைக் கூட காண முடிகிறது. மூக்கில் மூக்குத்தி அணியவும், காதில் கம்மல் அணியவும் சிறு துவாரங்கள் உள்ளது. மணிக்கழுத்தில் சவடியும் காறைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இவைகளின் நடுவே ஒரு சிறு துவாரம் உள்ளது. இதில் அணிகலனை மாட்டலாம். கழுத்தின் பின்புறம் திருமாங்கல்யத்தின் முடிச்சுகள் சிற்பத்திலேயே செதுக்கப்பட்டுள்ளது மிகவும் அபூர்வமான வேலைப் பாடாகும். தலையில் உள்ள முடி 9 அடுக்குகளாக பூவேலைப்பாடுகளுடன் பொருந்தியுள்ளது. அம்பிகையின் கூந்தலானது பின்னலிட்ட முழு சடையாக இல்லாமல், தற்பொழுது நாகரிக பெண்கள் வைத்திருக்கும் குதிரைவால் சடையாகவும், அந்த சடையில் ரப்பர் பேண்ட் போன்ற முடிச்சு இருப்பதும் நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அமைப்பாகும்.

அம்பிகை திரிபுரை அம்சமானவர். ஆதலால் மணிவயிறும், மார்பும், பிடியளவு இடையுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகை இடையில் உடுத்தியிருக்கும் ஆடையின் முடிச்சும் பின்புறம் காணப்படுகிறது. இடுப்பில் மேகலை என்ற ஆபரணம் சிறப்புடன் விளங்குகின்றது. மேகலை இதழ் இதழாகத் தொங்குகின்றன. மேகலை மாட்டுவதற்கு 16 துவாரங்கள் உள்ளன. கற்சிலையில் துல்லியமாக சிறிய துவாரங்களை ஏற்படுத்துவது என்பது எளிதான காரியமில்லை. 16 கோவை உள்ள மேகலைக்கு கலாபம் எனப் பெயர். இவ்வணிகலனை அணிந்து, அம்பிகை ஒயிலாக கலாப மயில் போல் காட்சியளிக்கிறாள். மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியோடு விளங்கும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் தொழலாம். சுருங்கச் சொன்னால் இந்த அம்பிகையின் சிற்பமானது வேறெங்கும் காணக்கிடைக்காத ஆபூர்வ சிற்பம் ஆகும்.

பௌர்ணமி தினங்களில் அம்பிகைக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

Read More
ஆத்தூர் காயநிர்மாலேசுவரர் கோவில்

ஆத்தூர் காயநிர்மாலேசுவரர் கோவில்

சீடர்களின் சந்தேகங்களுக்கு விளக்கத்தை அளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்

சேலம் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஆத்தூர். இங்கே அமைந்துள்ள கோட்டைக்கு மிக அருகே உள்ளது, காயநிர்மலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. வசிஷ்ட முனிவருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி தந்த தலம் இது.

இக்கோவிலின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு, தனி விமானமும் உள்ளது. பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் அவர் ஆறு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஆறு சீடர்களில் மூன்று பேர் அமைதியாகவும், மற்ற மூன்று பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More