ஆத்தூர் காயநிர்மாலேசுவரர் கோவில்
சீடர்களின் சந்தேகங்களுக்கு விளக்கத்தை அளிக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தோற்றம்
சேலம் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஆத்தூர். இங்கே அமைந்துள்ள கோட்டைக்கு மிக அருகே உள்ளது, காயநிர்மலேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. வசிஷ்ட முனிவருக்கு இறைவன் ஜோதி வடிவாக காட்சி தந்த தலம் இது.
இக்கோவிலின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு, தனி விமானமும் உள்ளது. பொதுவாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் அவர் ஆறு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஆறு சீடர்களில் மூன்று பேர் அமைதியாகவும், மற்ற மூன்று பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.