தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கான பரிகார தலம்
திருவாரூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தில் தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது.
இக்கோவில் உருவானதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. முன்னர் காலத்தில் இப்பகுதியை ஆண்ட வல்லால மகாராஜன் என்ற அரசனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதி தேவியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டு பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தேவி காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய பார்வதி தேவி அந்த மகாராஜா தலையை வெட்டி விடுகிறார். பார்வதி தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்ட ராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். இருப்பினும் தேவியார் ஆக்ரோஷம் அடங்காத நிலையில் முருகன் நேரில் சென்று தாயாரிடம் ஆக்ரோஷம் தீர்த்ததால் பின்நாளில் இத்தலத்தில் குமரன் கோவில் அமைத்துள்ளனர்.
திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கு சிறந்த பரிகார தலமாக, இப்பகுதியில் இந்த கோவில் விளங்குகின்றது.