
கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்
எதிரி பயம் போக்கும் நிமிஷாம்பாள்
கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். நிமிஷாம்பாள் 'என்பதற்கு கண நேரத்தில் வரம் அளிப்பவள்' என்பது பொருள். 'கிருஷ்ண சிலா' என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது.
பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்
முன்னொரு காலத்தில், முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.
பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி 'நிமிஷாம்பாள்' என பெயரிட்டான்.
கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம் நீங்கும். திருமணத் தடைகளால் பாதிப்புற்ற பிள்ளையையோ, பெண்ணையோ இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, வேண்டிச் சென்றால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர்.

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்
சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட தலம்
சிவலிங்கத்தின் பின்புற தரிசனம் கிடைக்கும் கோவில்
மதுரை மாநகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி இணையும் சந்திப்பில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. மக்கள் இப்பிறப்பில் செய்த பாவங்களை சிவபெருமான் இந்த பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால் இக்கோவில் மூலவர் சொக்கநாதரை, இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கின்றனர். சிவபெருமான் தன்னை தானே அர்ச்சித்துக்கொண்ட சிறப்புடையது இந்தக் கோவிலாகும். அன்னை மீனாட்சி மத்தியபுரி அம்பாள் என்ற பெயரில் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக செம்பில்தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியில், கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.
எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது.
மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சியை, ஈசன் சுந்தரேஸ்வரராக வந்து மணந்து கொண்டார். பின் பாண்டிய மன்னராக பொறுப்பேற்க தயாரானார். அரசபீடத்தில் அமர்வதற்கு முன்தாக சிவபூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்தார். இதன் அடிப்படையில் இங்கு சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.
திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் இக்கோயில் அம்மனுக்கு 'மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு. மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால் புது கட்டிடம் கட்டத் துவங்குபவர்கள், பிடி மண்ணை எடுத்து வந்து வழிபடுவதுண்டு. தலைமை பதவி கிடைக்கவும், பணி உயர்வு பெறவும் சிவனுக்கு, 'ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டி கொள்கிறார்கள்.

திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்
திருநாங்கூர் பதினொரு பெருமாள்கள் கருட சேவை
பெரிய திருவடி எனப்படும், கருடாழ்வார் மீது பெருமாள் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை'. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. அவை
1. திருமணிமாடக் கோவில்
2. திருக்காவளம்பாடி
3. திருஅரிமேய விண்ணகரம்
4. திருவண்புருடோத்தமம்
5. திருச்செம்பொன்செய் கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன்பள்ளி
தை அமாவாசைக்கு மறுதினம் மதிய வேளையில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திவ்ய தேசங்களில் இருந்து, ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோவில்), ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோவில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள், தங்க கருட வாகனத்தில் , திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருள்வார்கள். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி, ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார்.
அதையடுத்து, இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும்.
மேலும் பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசித்த புண்ணியம்
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது. அதாவது, இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால், அதற்கு ஈடான இன்னொரு திவ்யதேச பெருமாளை தரிசித்த புண்ணியமும் கிட்டும். மணிமாடக் கோவில் எம்பெருமானை வழிபடுவதால், இமயமலை பத்ரிநாத்திலுள்ள திருபத்ரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும். திருவைகுந்த விண்ணகரம் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீவைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர். அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரை பெருமாளை சேவித்த பாக்கியததை அருள்கிறார். திருத்தேவனார் தொகை பெருமாள், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தை பெருமாளை தரிசித்த பலனை அருள்கிறார். திருவண்புருஷோத்தம பெருமாளை தரிசித்தால் ராமன் அவதரித்த அயோத்தி திவ்ய தேசத்தை தரிசித்த பலன் கிட்டும். செம்பொன்செய் கோவில் பெருமாள் காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். திருத்தெற்றியம்பலம் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளைச் சேவித்த புண்ணியத்தைத் தருவார். திருவெள்ளக்குளம் பெருமாள் திருமலை வேங்கடநாதனை தரிசித்த புண்ணியம் தருவார். திருமணிக்கூடம் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வணங்கிய நற்பலன்களைத் தருவார். திருக்காவளம்பாடி பெருமாள், காஞ்சிபுரம் பாடக பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். திருபார்த்தன்பள்ளி பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வழிபட்ட பலனை தருகிறார்.

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
தை அமாவாசை நாளில் முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்க வழிபட வேண்டிய தலம்
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கமான சித்திரை முதல்நாள், ஆடிமாதப் பிறப்பு, ஐப்பசி மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு மற்றும் அனைத்து அமாவாசை தினங்களும் புண்ணிய காலங்கள். அனைத்து அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம் என்ற போதும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை அனைத்து அமாவாசைகளிலும் வழிபாடு செய்ய இயலாதவர்களாக இருந்தால் தவறாமல் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாட்டைச் செய்ய வேண்டியது அவசியம். காரணம், ஆடிமாத அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்படுகிறார்கள். இரண்டு மாதப் பயணத்தில் புரட்டாசி மாதம் அவர்கள் பூமிக்கு வந்து சேர்கிறார்கள். புரட்டாசி மாதம் முன்னோர்கள் பூமியில் உறையும் காலம். அதனால்தான் அந்த மாதத்தைப் புனிதமான மாதமாகக் கருதிக் கடைப்பிடிக்கிறோம். உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கியிருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்லமுறையில் போற்றி அனுப்புவோமோ அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளைச் செய்து வழிபட்டு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
சீர்காழியிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலமாக திருவெண்காடு விளங்குகிறது. காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் ஆறு புண்ணிய க்ஷேத்திரங்களில், திருவெண்காடும் ஒன்று. இந்தக் கோயிலில் அக்னி தீர்ததம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.
சந்திர நீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில், ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியை விட மூன்று மடங்கு பலனைத் தரக்கூடிய இந்த ருத்ர பாதத்தை, முறையாக வழிபட்டால், நம்முடைய 21 தலைமுறை பாவ வினைகளை நீக்கும் என்பது இந்தக் கோவிலில் இருக்கும் ஐதீகமாகும் .
தை அமாவாசை நாளில் வழிபட்டால் நன்மை பயக்கும் பிற புண்ணியத் தலங்கள் திலதர்ப்பணபுரி, திருவிளமர், ராமேஸ்வரம், தீர்த்தாண்டதானம், பவானி கூடுதுறை, கருங்குளம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருக்கண்ணபுரம், திருப்புல்லாணி, திருப்புள்ளம் பூதங்குடி ஆகியவை ஆகும்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்
ஆங்கிலேய படைத்தளபதி சுட்ட தோட்டாக்களைப் பூக்களாக ஏற்றுக் கொண்ட சமயபுரம் மாரியம்மன்
பதினெட்டாம் நூற்றாண்டில், திருச்சி நகரை கைப்பற்றுவதில் பிரஞ்ச் படைகளுக்கும், ஆங்கிலேய படைகளுக்கும் இடையே போர் மூண்டது. ஆங்கிலப் படைகளுக்கு ராபர்ட் கிளைவ் தலைமை ஏற்று நடத்தினார். ராபர்ட் கிளைவ் தலைமையின்கீழ் டால்டன், லாரன்ஸ், ஜின் ஜின் என்ற தளபதிகள் பணியாற்றினர். ஆங்கிலப் படை தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள், போர் தளவாடங்கள் ஆகியவற்றை சமயபுரத்தில் ஒரு கொட்டகை அமைத்து பாதுகாத்தனர். அதனால் இரவு நேரத்தில், ஊர் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டனர். அப்போது ராபர்ட் கிளைவ் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், தளபதி ஜின் ஜின், நள்ளிரவில் ஆயுதக் கிடங்கை பாதுகாக்க சுற்றி வந்து கொண்டு இருந்தான்.
அப்போது மஞ்சள் ஆடை உடுத்தி, ஒரு பெண் இரண்டு கைகளிலும் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஜின் ஜின் நிற்குமாறு கட்டளையிட்டான். ஆனால், அந்தப் பெண்ணோ நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள். உடனே அந்தப் பெண்ணை நோக்கி தன் கைத் துப்பாக்கியால் சுட்டான். ஆனால் என்ன ஆச்சரியம் ! அவன் கை துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் எல்லாம் பூக்களாக மாறி அந்தப் பெண்ணின் தலை மீது விழுந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர் மக்கள்,'நீங்கள் சுட்டது எங்கள் தெய்வம் சமயபுரம் மாரியம்மனைத்தான். நீங்கள் பெரிய தெய்வ குற்றத்தை இழைத்து விட்டீர்கள்' என்றார்கள்.அதற்கு ஜின் ஜின், ' வந்தது உங்கள் தெய்வம் மாரியம்மன் என்றால் கோவிலுக்குள் இப்போது அந்த தெய்வம் இருக்க முடியாது. வாருங்கள் கோவிலுக்குள் சென்று பார்ப்போம்' என்று ஊர் மக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தான். அப்போது கருவறையில் அம்மனின் உருவத்தைக் காண முடியவில்லை. திடீரென ஒரு பேரொளி கருவறையை நிரப்பியது. அதன்பின்னர் மக்களால் அம்மன் உருவத்தைப் பார்க்க முடிந்தது. மக்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மனை விழுந்து வணங்கினார்கள். தளபதி ஜின் ஜினுக்கு உடனே கண் பார்வை பறி போனது. பின்னர் ஊர் மக்களின் அறிவுரையை கேட்டு, ராபர்ட் கிளைவும், ஜின் ஜினும் சமயபுரம் மாரியம்மனிடம் மன்னிப்புக் கேட்டு வணங்கினர். மூன்று நாள் கழித்து தளபதி ஜின் ஜினுக்கு கண்பார்வை மீண்டும் கிடைத்தது. ராபர்ட் கிளைவிற்கு அம்மை நோயும் நீங்கியது.
இந்த நிகழ்விலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்
சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அபூர்வ அமைப்பு
தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தலம் புளியரை. இறைவன் திருநாமம் சதாசிவ மூர்த்தி. இறைவியின் திருநாமம் சிவகாமி. புளிய மரத்தடியில் சிவபெருமான் காட்சி அளித்ததால், இத்தலம் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.
கோவிலுக்கு செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பொதுவாக சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாகும். நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.
மூலவராக சதாசிவ மூர்த்தி விளங்கினாலும், தட்சிணாமூர்த்திக்கே சிறப்புத் தலமாக பார்க்கப்படுகின்றது. யோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள், கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கே வந்து இவரை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். தாலி பாக்கியம் கிட்டும், தார தோஷம் நிவர்த்தியாகும், குழந்தைப்பேறு, தொழில் வளம் முதலான சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
குரு, இராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்
பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.
மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.
கருவறையில், மேற்கு நோக்கியபடி பூவராக சுவாமியின், திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. இப்பிரசாதத்திற்கு, முஸ்தாபி சூரணம் என்று பெயர்.
பூவராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்
ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கும் தலம்
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தலம் குச்சனூர். இத்தலத்தில் சனிபகவான், தனிக் கோவிலில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்து மூலவரான சனீஸ்வர பகவான், பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் தன்னுள் ஐக்கியம் என்பதை குறிப்பிடும் வகையில் மூன்று ஜோடி கண்களுடனும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம்,, அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என நான்கு கரங்களுடனும், இரண்டு பாதங்களுடனும் காட்சியளிக்கிறார். ஏழரை சனியின் தாக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறைந்து நன்மை ஏற்படும் என்பது ஐதீகம்.
பல நூற்றாண்டிற்கு முன்பு தினகரன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அந்த மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தை பிறக்காமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இறைவனை தினம்தோறும் பூஜித்து வந்தான். அப்போது ஒரு அசரீரி குரல் ஒலித்தது. 'உன் வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான். அவனை நீ பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தால் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறியது'. மன்னனும் அவன் வீட்டிற்கு வந்த பிராமண சிறுவனினை வளர்த்து வந்தான். வளர்ப்பு மகனின் பெயர் சந்திரவதனன். பின்னர் மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சதாகன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தான். ஆனால் மன்னனுக்கு பிறந்த குழந்தையை விட, வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு அதிகமான அறிவாற்றலும், திறமையும் இருந்தது. இதனால் மன்னனின் முதல் வாரிசான சந்திரவதனனுக்கே முடிச்சூட்டப்பட்டது.
அந்த சமயம் மன்னன் தினகரனுக்கு ஏழரைச்சனி பிடித்தது. 'வளர்ப்பு மகனாக இருந்தாலும் எனக்கு முடிசூட்டிய என் தந்தைக்கு சனி பகவானின் தாக்கம் இருக்கக்கூடாது' என்ற எண்ணம் சந்திரவதனனுக்கு தோன்றியது. இதனால் சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால், சனியின் உருவத்தைப் வடிவமைத்து வழிபட்டான். 'தன் தந்தைக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படக் கூடாது என்றும், தன் தந்தைக்கு ஏற்பட இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும், அந்த சனி பகவானிடம் வேண்டிக் கொண்டான் சந்திரவதனன். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனி பகவான் ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனை பிடித்துக் கொண்டார். வேண்டுதலை நிறைவேற்றி அதன்பின்பு, சந்திரவதனனின் முன்தோன்றிய சனி பகவான் 'உன்னை போன்ற நியாயமாக நடந்து கொள்பவர்களை நான் பிடிக்க மாட்டேன் என்றும், இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை தான்' என்றும் கூறி மறைந்தார்.
இதன்பிறகு சந்திரவதனன் சனிபகவானை வணங்குவதற்காக குச்சுப்புல்களை சேகரித்து, ஒரு கூரை அமைத்து, சனிபகவானுக்கு ஒரு கோவில் எழுப்பி வழிபட்டு வந்தார். குச்சினால் அமைக்கப்பட்ட கோவில் உருவாக்கப்பட்டதால் இந்த ஊருக்கு குச்சனூர் என்ற பெயர் வந்தது. அந்த நாளிலிருந்து சனியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய் தோஷம், குழந்தையின்மை, திருமணத்தடை உள்ளிட்ட தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலத்தில், வேறு எந்த சனீஸ்வரன் எழுந்தருளியுள்ள தலத்திலும் இல்லாதவாறு, பக்தர்கள் மண் காக பொம்மையை தங்கள் தலையை ஒருமுறை சுற்றி காக பீடத்தில் வைத்து விட்டு, பின்னர் சனிபகவானை வழிபடும் முறை இருக்கிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவூடல் திருவிழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் திருவூடல் திருவிழா முதல், மறுநாள் நடைபெறும் மறுவூடல் திருவிழா வரை காணும் தம்பதியர்களின் வாழ்வில் பிரச்சனைகள் வராது. குடும்ப ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால்தான் 'திருவூடல் கண்டால் மறுவூடல்இல்லை? என்ற சொல் வழக்கில் வந்தது.
பிருங்கி முனிவர் என்பவர் தீவிர பக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டார். ஒருமுறை சிவபெருமானை வழிபடுவதற்காக பிருங்கி முனிவர் கைலாயத்திற்கு சென்றார்.அப்போது சிவபெருமானின் அருகில் பார்வதியும் அமர்ந்து இருந்தார். இதைக்கண்ட பிருங்கி முனிவர் சிவபெருமானை மட்டும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வண்டு வடிவம் எடுத்து, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையில் புகுந்து மூன்று முறை சிவனை மட்டும் வலம் வந்தார். இதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தேவி என்னை கண்டு வணங்க பிரியமில்லாத உனக்கு, உடல் இயக்கத்திற்கு தேவையான, நான் அளிக்கும் சக்தி மட்டும் எதற்கு? அதை என்னிடம் திருப்பி கொடுத்துவிடு என்றார். பிருங்கி முனிவரும் தன் உடல் சக்தியை பார்வதி தேவியிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். சக்தி இழந்து நின்ற பிருங்கி முனிவரிடம் சிவபெருமான், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் தனக்கு மோட்சத்தை அருளுமாறு வேண்டினார்.
சிவபெருமான் அந்த வரத்தை பிருங்கி முனிவருக்கு கொடுக்க முற்பட்டபோது, பார்வதிதேவி அதனை தடுத்தார். ஆனால் சிவபெருமான் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளிக்க எண்ணினார். இதனால் சிவபெருமான் மீது பார்வதிதேவிக்கு ஊடல் ஏற்பட்டது. அதனால் அவர் சிவபெருமானைப் பிரிந்து ஆலயத்துக்குள் வந்து கதவை பூட்டிக் கொண்டார். சிவபெருமான் முதலில் பக்தனுக்கு வரத்தை அளித்துவிட்டு பின்னர் பார்வதி தேவியை சமாதானம் செய்யலாம் என்று எண்ணினார்.அதன்படி அன்றிரவு ஓரிடத்தில் தனியாக தங்கிய சிவபெருமான் மறுநாள் காலையில் பிருங்கி முனிவருக்கு வரத்தை அளித்தார். பின்னர் மாலையில் பார்வதிதேவியை சந்தித்து அவரது ஊடலை போக்கினார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் மாட்டுப்பொங்கலன்று திருவூடல் திருவிழா என்று நடத்தப்படுகிறது.
அன்று காலை இறைவனும், இறைவியும் மாடவீதிகளை மூன்று முறை வலம் வருவார் கள். அன்று மாலை திருவண்ணாமலை திருவூடல் தெருவில், சிவனும், பார்வ தியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படும். ஊடல் அதிகமானதும் அம்பாள் கோவிலுக்குள் சென்று விடுவார். அவரது சன்னிதி கதவுகள் மூடப்படும். இதையடுத்து அம்மனை, ஈசன் சமாதானம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அவர் சமாதானம் ஆகாததால் அண்ணாமலையார், அன்று இரவு அருகில் உள்ள குளன் கோவிலில் சென்று தங்குவார். மறுநாள் காலையில், அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. ஆண்டுக்கு இரண்டு தடவை மட்டுமே அண்ணாமலையார், தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் நடைபெறும். அதில் ஒன்று, திருவூடல் திருவிழா அன்று நடைபெறும் கிரிவலம் ஆகும். மாலையில் அண்ணாமலையார் ஆலயம் திரும்பி , அங்கு உண்ணாமுலையம்மனை சமரசம் செய்து ஊடலைத் தீர்த்தார். இறுதியில் அண்ணாமலையாரும். உண்ணாமுலையம்ம னும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இப்படி காட்சி தருவதை மறுவூடல்' என்பர்கள்,
கணவன் மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த திருவூடல் திருவிழா, வேறு எந்த சிவாலயத்திலும் வெகுவிமரிசையாக நடைபெறுவதில்லை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தைப்பொங்கலன்று சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்
கல் யானை கரும்பு தின்ற அதிசயம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு தைப்பொங்கல் அன்றும், சிவபெருமான் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. சோமசுந்தரர் சித்தராக வந்து கோயிலிலுள்ள கல் யானைக்குக் கரும்பு கொடுத்து உண்ண வைத்தது ஒரு தைப்பொங்கல் நாள் என்பதால், வருடம் தோறும் தைப்பொங்கலன்று இக்கோவிலில் இவ்விழா நடைபெற்று வருகிறது. இந்த தினத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி, மக்களும் கரும்பை படைக்கின்றனர். கரும்பு தின்றதாக கூறப்படும் வெள்ளைக்கல் யானையை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சோமசுந்தரேஸ்வரர் சன்னிதிக்கு இடப்புறத்தில் இன்றும் நாம் பார்க்கலாம். தைப்பொங்கல் தினத்தில் இந்த கல்யானையை தரிசிப்பது சிறப்பு.
முன்னொரு காலத்தில், மதுரையை அபிஷேக பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அப்போது சோமசுந்தர கடவுள், சித்தரின் வடிவம் எடுத்து மதுரை மாநகரில் பல அதிசயங்களை நிகழ்த்தினார். முதியவரை இளைஞராகவும், இளைஞரை முதியவராகவும், பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் ஆக்கினார். ஊமைகளை பேசவும் குருடர்களை பார்க்கவும் செய்யவைத்தார். ஊசியை நிறுத்தி அதன் மேல் தன்னுடைய பெருவிரலை மட்டும் ஊன்றி நின்று நடனம் ஆடினார்.
சித்தர் நிகழ்த்திய அதிசயங்களைப் பற்றி அறிந்ததும், மன்னனே தன்னுடைய பரிவாரங்களுடன் சித்தரைத் தேடி வந்தான். இதுபற்றி அறிந்ததும் சித்தர், மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாயு மூலையில் அமர்ந்து யோக தியானத்தில் ஆழ்ந்தார். இந்த இடம் சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகே உள்ளது. மன்னன் சித்திரை பார்க்க கோவிலுக்கு வந்தான். மன்னனோடு வந்த பாதுகாவலர்கள், சித்தரின் யோகத்தை கலைக்க முற்பட்டு, கையை ஓங்கினர். ஓங்கிய நிலையிலேயே அவர்கள் கைகள் நிலைபெற்று விட்டன. இதனால் மன்னன் அதிர்ந்து போனான். பின்னர், மன்னன் சித்தரிடம் பணிவாக பேசினான். 'சித்தரே, தாங்கள் தியான நிலையில் இங்கே அமர்ந்து இருப்பதன் நோக்கம் என்ன? மேலும் நீங்கள் சித்தர்தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?' என்றான்.
கண் விழித்த சித்தர், 'மன்னா! நான்தான் ஆதியும் அந்தமும். சஞ்சரிக்கும் வல்லமை எனக்கு உண்டு. தற்போது மதுரை மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி, அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என்பெயர் "எல்லாம் வல்ல சித்தர்" என்பதாகும்' என்று கூறினார். அதன்பின்னும் சித்தர் மேல் நம்பிக்கையில்லாத மன்னன், 'சித்தரே, தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானையை தின்னச் செய்யுங்கள்' என்று கூறி கரும்பை நீட்டினான். சித்தரும் அமைதியாக அருகில் இருந்த கல் யானையைப் பார்க்க, அது உயிர்ப்பெற்று, மன்னனின் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது. அத்துடன் அரசனின் கழுத்திலிருந்த மாலையையும் பறித்தது. அதன் பின்னர்தான் மன்னன், சித்தர் வடிவில் வந்தது சொக்கநாதர் என்பதை உணர்ந்தான்' மன்னன், சித்தரை அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டினான். மேலும் தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்றும் கேட்டான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால், அடுத்த ஒரு வருடத்தில் மன்னனுக்கு விக்கிரம பாண்டியன் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

சேங்கனூர் சீனிவாச பெருமாள் கோவில்
திருப்பதி பெருமாள் நேரில் வந்து சேவை சாதித்த தலம்
கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில், திருப்பனந்தாள் அருகில், சுமார் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் சேங்கனூர். இத்தலத்தில், சுவாமி பெரியவாச்சான் பிள்ளை வீதியில் அமைந்திருக்கிறது சீனிவாச பெருமாள் கோவில். சேங்கனூர், திருவெள்ளியங்குடி என்னும் திவ்ய தேசத்திற்கு வெகு அருகாமையில் உள்ளது. வைணவ உரைநடை ஆசிரியர்களில் முதன்மையானவரும் , 'வியாக்கியான சக்ரவர்த்தி ' எனப் போற்றப்படுபவருமான ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை, இத்தலத்தில்தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்தார். ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம் போன்ற பல நூல்களுக்கு, அவர் எழுதிய விளக்க உரை வைணவ ஆச்சாரியார்களால் பெரிதும் போற்றிக் கூறப்படுகின்றது.
ஒரு சமயம், சேங்கனுரில் வாழ்ந்த ஸ்ரீபெரிய வாச்சான் பிள்ளை தன் மனைவியுடன் திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய சென்றார். பெருமாளின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டு திருப்பதியில் தங்கி விட நினைக்க, எம்பெருமான் திரு உள்ளம் வேறெண்ணியது. தன்னுடைய சாளக்கிராம உருவத்தை அர்ச்சகர் மூலம் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையிடம் சேர்த்து, அவரால் இன்னும் பல தெய்வீக காரியங்கள் நடக்க வேண்டும் என கூறி செங்கனுர் செல்ல கூறினார். வழியில் சாளக்கிராமத்தை, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து விட்டு இருவரும் நீராடி விட்டு திரும்பும்போது அந்த சாளக்கிராமம் காணவில்லை. அதனால், அன்ன ஆகாரமில்லாமல் இருந்து தன் உயிரை விட்டுவிட முடிவு செய்தார். அவர் கனவில் சங்கு சக்ரதாரியாக தோன்றிய ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கூறியபடி, அவர் கிராம மக்களுடன் சாளக்கிராமம்
வைத்த இடத்தில் தேட, ஸ்ரீ வெங்கடேச பெருமாள் முழு உருவத்துடன் கிடைத்தார். அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்தான் சீனிவாச பெருமாள் கோவில். ஸ்ரீ சீனிவாச பெருமாளின் பாதத்தில் ஒரு சாளக்கிராம கல் இருக்கின்றது. பெரியவாச்சான் பிள்ளை தன் வாழ்நாள் முடிந்ததும், அந்த சாளக்கிராம கல்லில் ஐக்கியமாகி, பெருமாள் திருவடியில் சேர்ந்துவிட்டார் என்பது வரலாறு.

பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோவில்
சூலத்தில் காட்சி தரும் அபூர்வ அர்த்தநாரீஸ்வரர்
சேலம் சென்னை நெடுஞ்சாலையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது பெத்தநாயக்கன்பாளையம் என்னும் ஊர். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆட்கொண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார், தாமரை மலர் அமைப்பில் இருக்கிறது. லிங்கத்தின் நடுவில் நெற்றிக்கண் இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அநியாயம் செய்பவர்கள் பற்றி இவரிடம் முறையிட்டால், அவர்களைத் தண்டிப்பதுடன், தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை 'ஆட்கொண்டீஸ்வரர்' என்கின்றனர்.
சூல அர்த்தநாரீஸ்வரர்
சிவபெருமான், சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக, தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் இருந்தும் காட்சி தருகிறார். இப்படி சூலத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் விசேஷம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி எனும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார்.
தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.

திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோவில்
சிம்ம குரு தட்சிணாமூர்த்தி
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் திருப்புலிவனம். இறைவன் திருநாமம் வியாக்ரபுரீசுவரர். இறைவியின் திருநாமம் அபிதகுசாம்பாள், மூலவர் சுயம்பு மூர்த்தி. ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது காணப்படுகிறது. சிவலிங்கத் திருமேனியில், புலியின் பாதங்கள் காணப்படுகின்றன. லிங்கத்தின் மேல் பாகத்தில் ஜடாமுடி காணப்படுகிறது.இப்படி ஜடாமுடி தரித்த சிவலிங்கத் திருமேனியை நாம் திருவையாறு, சிவசைலம் ஆகிய ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். இந்த அம்சம் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத ஓர் அம்சமாகும். அதனால் இத்தல குருவிற்கு 'சிம்ம குரு தட்சிணாமூர்த்தி' என்று பெயர். தட்சிணாமூர்த்தியின் அருகில் சனகாதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது. இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார். அதனால் இவரை அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கின்றனர். இந்தப் பெயருக்கு காரணம், இவருடைய இடது கால் அம்மனின் வாகனமான சிம்மத்தின் மீதும், வலது கால் நடராஜப்பெருமானுக்கு இருப்பதுபோல் முயலகன் மீது உள்ளதாலும், ஆகும்.பெயருக்கு ஏற்றாற்போல், இவருடைய முகத்தில், ஆண்மையின் மிடுக்கையும் பெண்மையின் நளினத்தையும் நாம் காணலாம்.
சிம்ம ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்
இத்தலம் சிம்மராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. மன வேற்றுமை உடைய தம்பதியர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் இடையே ஒற்றுமை மேலோங்கும். இத்தலத்தை வழிபட்டால் திருமண வரம்,குழந்தை பாக்கியம், பதவி உயர்வு முதலிய நற்பலன்கள் கிட்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
கூடாரவல்லித் திருநாள்
பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், திருமாலான கண்ணனையே கரம் பிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பை கடைப்பிடித்தாள். அப்போது ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் கொண்ட தொகுப்பே திருப்பாவை ஆகும். இப்பாசுரங்கள் நாச்சியார் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இது நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் ஒரு பகுதி. அதில், கண்ணனையும், அழகரையும், அரங்கனையும் போற்றிப் பாடியிருக்கிறார் ஆண்டாள்.
இந்நூல், பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் கூறி, அந்நோன்பு நோற்க்கும் விதத்தை விளக்குகிறது. இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில், இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டலில் திருப்பாவை பாடப்படுகிறது.
கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள். பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான் கோவிந்தன். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்
"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"
என்று பாடி பரவசம் கொள்கிறாள். கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். ஆண்டாள் விண்ணப்பித்த சிறிது காலத்திலேயே அரங்கனுடன் இரண்டறக் கலந்தாள் கோதை. அதன் பின்னர், கோதையானவள் ஸ்ரீஆண்டாள் என்று அழைக்கப்படலானார் என்கிறது புராணம். எனவே, ஆசைப்படி, வேண்டுதல்படி, தங்கள் குலதெய்வமான கள்ளழகருக்கு, நேர்த்திக்கடனைச் செலுத்தமுடியவில்லை கோதையால்! அதாவது, அக்கார அடிசில் சமர்ப்பிக்கவில்லை.
ஆண்டாள் காலத்துக்குப் பின்னர் சில நூறு வருடங்களுக்குப் பின்னர் பிறந்த, உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜர், ஆண்டாளின் நேர்த்திக்கடனைத் தெரிந்து கொண்டு, அழகர்கோவிலில், அழகருக்கு முன்பாக வந்து அர்ச்சகரின் அனுமதியைப் பெற்று, 'நூறு தடா அக்கார அடிசில்' நூறு அண்டாக்களில் சமர்ப்பித்தார். பிறகு, அந்தப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கே ஸ்ரீவில்லிபுத்தூ திருத்தலத்தில், ஆண்டாள் வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல், உடையவரை 'அண்ணா...' என்று அழைத்தாராம். "பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" - ஒரு பாவையாக இருந்தபோது, அவளது மனோபீஷ்டத்தை பூர்த்தி செய்ய வேண்டியவர் தகப்பன். அதையடுத்து தமையன். எனவே ராமானுஜரை அண்ணா என்று அழைத்தாள் ஆண்டாள் என சொல்லி சிலாகிக்கிறது ஆண்டாள் புராணம்.
ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில், மார்கழி மாதம் வரும் கூடாரவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். ஆண்டாளை அன்றைய தினம் சேவிப்பது திருமகளை நேரிலேயே தரிசிப்பதற்கு நிகரானது. இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.
திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு முடிந்ததும், ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் உற்சவ சிலை சந்நிதியில் இல்லாமல், சந்நிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அவர் அன்றைய நாளில் ஸ்ரீராமாநுஜரை வரவேற்பதற்காகத்தான் என்கிறார்கள். கூடாரவல்லி நாளின்போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
கூடாரை கூட வைக்கும் இந்த திருநாளில் இந்த பாடலைப்பாடி, ஆண்டாளையும் அரங்கனையும் துதித்தால் வரன் கூடாத மகளிருக்கு நல்ல இடம் அமையும். நாம் விரும்பியவர்கள் மட்டுமில்லாமல் நம்மை விட்டு விலகிய உறவுகளையும் கூடச் செய்யும் அற்புதமான பாசுரம் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" பாடல்.

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்
கபால மாலையும், ஒட்டியாணமும் அணிந்த கபால கணபதி
கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், திருவிடைமருதூர் அருகே உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. இக்கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகும்.
இக்கோவிலின் கன்னி மூலையில், தனி சன்னிதியில் கபால கணபதி எழுந்தருளியுள்ளார் . இவர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக அணி செய்கின்றன. இந்த கபால கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. மனிதனுக்குத் தெரிவது போல், இவர் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார்.
ஒரு மகா பிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன், அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி, என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது, அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.
இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி
https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2-gcz2h
2. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்
https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2
3. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்
https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்
அங்க குறைபாடுகளை நீக்கும் தலம்
'மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், செவிடு, குருடு இன்றிப் பிறத்தல்' என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார். அதாவது மனிதன் உடலில் ஏதாவது ஒரு குறை என்று இருப்பது தவிர்க்க முடியாதது என்று கூறியிருக்கிறார். உடலில் குறையோடு பிறந்தவர்களுக்கு அருளும் தலம் தான் கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்.கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்றால், அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது கூனஞ்சேரி.
அஷ்டவக்ர கீதை
அஷ்டவக்ர கீதை, பகவத் கீதையைப் போல மகாபாரதத்தில் அமைந்திருக்கிறது.சுமார் முன்னூறு சுலோகங்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் அஷ்டவக்ர மகரிஷி. ரமண மகரிஷி, விவேகானந்தர் உட்பட பல மகான்கள், இந்நூலில் பொதிந்துள்ள நற் கருத்துக்களினால், இந்த நூலை ஞான பொக்கிஷமாக கருதுகிறார்கள்.
அஷ்டவக்ர மகரிஷியின் உடல் குறைபாட்டை நீக்கிய தலம்
முற்காலத்தில் தானவ மகரிஷி என்கிற முனிவர் இருந்தார். அவர் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். சிவபெருமான் தானவ முனிவர்,தான் அறிந்த வேத மந்திரங்களைக் குழந்தைகளுக்குக் கற்பித்தால் மகப்பேறு வாய்க்கும் என்று அருளினார்.
அதன்படியே அவர், தன் வீட்டுத் திண்ணையில் குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். அவருடைய மனைவியும் கருவுற்றார். தாயின் கருவில் இருந்தபடியே வேதங்களைக்கேட்டு, வேத ஞானத்தை அறிந்து கொண்டது குழந்தை. அதுதான் பின்னாளில் அஷ்டவக்ர மகரிஷியாக அவதரித்த திருக்குழந்தை. ஒருநாள், தானவ முனி வேதபாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பில் ஒரு மாணவன் தூங்குவதைக் கண்டு அவனை எழுப்பி, கடுஞ்சொற்களால் திட்டினார். அப்போது, அவருடைய மனைவியின் வயிற்றில் கருவிலிருந்த குழந்தை, 'இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து இப்படி பாடம் நடத்திக்கொண்டிருந்தால், சிறு பாலகன் தூங்காமல் என்ன செய்வான்?' என்று கேள்வி கேட்டது. இதைக் கேட்ட முனிவர், அது தன் குழந்தை என்பதையும் மறந்து, 'பிறக்கும் முன்னரே, அதிகப் பிரசங்கித் தனமாக என்னைக் கேள்விகேட்ட நீ, கேள்விக்குறி போல வளைந்து அஷ்ட கோணல்களுடன் பிறக்கக் கடவது!' என்று சாபமிட்டார். பின்னர் , தானவ முனிவரின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை, பன்னிரெண்டு வகை ஞானங்களையும் பெற்று, பிறவியிலேயே ஞானயோகியாகப் பிறந்தது. ஆனால், தந்தையின் சாபத்தால் உடலில் எட்டுவித கோணல்களுடன், முதுகில் கூன், கை கால்கள் வளைந்து நெளிந்து திகழப் பிறந்தது. எட்டு வளைவுகளுடன் அக்குழந்தையின் உடல் இருந்ததால், அக்குழந்தைக்கு அஷ்டவக்கிரன் என்ற பெயர் சூட்டினார்கள் அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் அஷ்டவக்ர மகரிஷி என்ற பெயர் பெற்றது.
தான் கொடுத்த சாபத்தால் பாதிக்கப்பட்டு, தன் குழந்தை ஊனமாகப் பிறந்ததால் உண்டான வருத்தத்துடன் அரசவைக்குச் சென்ற தானவ மகரிஷி, அங்கே அரசவைப் புலவருடன் ஒரு வாதத்தில் தோற்க நேரிட்டது. இதனால் அவர் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் போனது.
சில வருடங்களில் நன்கு வளர்ந்த குழந்தை அஷ்டவக்ரன், தன் தந்தையைப் பற்றி தாயிடம் வினவினான். அவர், அரசவைப் புலவருடன் தன் கணவர் போட்டியிட்டுத் தோற்றுப் போன சம்பவத்தை மகனிடம் விவரித்தார். உடனே அரசவைக்குக் கிளம்பிப் போனான் அஷ்டவக்ரன். அங்குசென்று 'என் தந்தையுடன் யார் போட்டி போட்டது? அவரை என்னுடன் விவாதத்தில் பங்கேற்கச் சொல்லுங்கள்' என்று அந்த பாலகன் கூற, வியப்பின் உச்சிக்குப்போன அரசர், சிறுவனின் உறுதி கண்டு, விவாதப் போட்டி நடத்த சம்மதித்தார். பின்னர், ஆஸ்தான புலவருடன் போட்டி தொடங்கியது. அனைத்து விவாதங்களிலும்,அஷ்டவக்ரன் ஆஸ்தான புலவரை தோற்கடித்தான். அதிசயித்துப் போன மன்னர், பல பரிசுகள் வழங்கினார். பிறகு அஷ்டவக்ரன், தன் தந்தையை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான். அவனின் கோணலான உடலமைப்பைக் கண்டு கண்ணீர் வடித்த தானவ மகரிஷி, 'தான் கொடுத்த சாபத்துக்கு விமோசனம் கிடையாதா?' என்று இறைவனிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்தார். சிவபெருமான், அவருக்கு 'கூனஞ்சேரி என்ற தலத்தில் இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்களை பூஜை செய்து வந்தால், உன் மகனுடைய குறைகள் நீங்கும்' என்று அருள் வழங்கினார். இறைவன் அருளியபடி தந்தையும் மகனும் கூனஞ்சேரி வந்து, அஷ்ட லிங்கங்களைப் பூஜிக்க, அஷ்டவக்ரனின் கூனல் நிமிர்ந்தது; குறைபாடுகள் நீங்கியது. இதனால் இவ்வூருக்கு 'கூனல் நிமிர்ந்த புரம்' என்றும் பெயர் உண்டு'
அஷ்ட பைரவ லிங்க வழிபாடு
இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவை ஆகும். உடல் ஊனம், முதுகில் கூன் போன்ற குறைபாடுகளை உடையவர்கள், தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்கே வந்து நல்லெண்ணெயால் அஷ்ட பைரவ லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து, பின்பு விபூதியால் அபிஷேகம் செய்து எட்டு வகை மலர்களால் (மல்லி, முல்லை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, பச்சை, மரிக்கொழுந்து, தாமரை, செவ்வந்தி) அர்ச்சனை செய்ய வேண்டும். இங்கே அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் மற்றும் விபூதியை பக்தர்கள் வாங்கிச் சென்று, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்துக் குளிக்க வேண்டும். பின்பு அபிஷேக விபூதியைப் பூசிக்கொள்ள வேண்டும்.. இதுபோல செய்துவந்தால், அவர்களின் உடல் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் என்பது ஆதிகாலம் தொட்டுவரும் நம்பிக்கை. திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து, அங்கே இருக்கும் அஷ்ட திக்கு லிங்கங்களைத் தரிசிக்க முடியாதவர்கள், கூனஞ்சேரி வந்து இந்த அஷ்ட பைரவ லிங்கங்களை வழிபாடு செய்தால், அதே பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் குறைபாடு மட்டும் அல்லாது எந்தவித நோய்ப்பிணியும் இந்தக் கயிலாசநாதர் கோயிலுக்கு வந்தால் தீரும் என்பது நம்பிக்கை.
உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது இத்தலத்தின் சிறப்பு.

வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்
சனி பகவான் கையில் வில்லுடன் இருக்கும் அபூர்வத் தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில், 9 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில். இறைவன் திருநாமம் கஜசம்ஹார மூர்த்தி. இறைவியின் திருநாமம் பாலாங்குராம்பிகை, அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர். பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார். அதனால் இவரை வழிபட்டால் நம்முடைய துன்பத்தை, பஞ்சத்தை போக்கி செழிப்புடன் நம்மை வாழ வைப்பார் என்பது ஐதீகம். சனீஸ்வரனின் ஏழரைச்சனி காலத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தோர், வில்லேந்திய வடிவில் உள்ள சனீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் நன்மை பெறலாம்.

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.
ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், நடராஜப் பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்கு வீதியுலா வருவது வழக்கம். ஆனால்,ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக, ஒரு பரிசலில் எழுந்தருளியும், அவருக்கு முன்னால் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் இசை முழங்கிக் கொண்டு செல்ல, காவிரி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.
இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் கோவில்
ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கயம்பாளையம் அமைந்துள்ளது. இங்குதான் காவிரியின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். இக்கோவில் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் நட்டாற்றீஸ்வரரும், கீழ் தளத்தில் நல்லநாயகி அம்பாளும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.
கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை, சிவபெருமான்தென்புலம் அனுப்பினார். அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு, சிவபெருமான் அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார். ஒரு சமயம், அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியாக உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய, பாவம் போகும் என அகத்தியர் உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து காவிரியில் நடு இடத்தைத் தேர்ந்தெடுத்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து அகத்தியர் பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சி இறைவனுக்குப் படைத்தார். அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால், அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
பிராத்தனை
நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடல், வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
நடராஜர் சன்னதியில் தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் தேவாரத்தலம்
திருவள்ளூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவாலங்காடு. இறைவன் திருநாமம் வடாரண்யேஸ்வரர். இறைவியின் திருநாமம் வண்டார்குழலி. மார்கழி திருவாதிரை தரிசனம் சிறப்பாக நடைபெறும் தலங்களில் திருவாலங்காடும் ஒன்றாகும்.
வடாரண்யேஸ்வரர் கோவில், நித்தமும் நடமாடும் நடராஜ பெருமானுக்கு உரிய ஐம்பெரும் அம்பலங்களில் முதல் தலமாக, இரத்தின சபையாகத் திகழ்கிறது. அதனால் இத்தலத்தில், நடராஜப்பெருமானுக்கு ரத்ன சபாபதி எனும் திருநாமம். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள நடராஜப் பெருமானின் திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் நடராஜப்பெருமானுக்கு அருகிலுள்ளன. ரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் உள்ளன.
பொதுவாக பெருமாள் கோயில்களில் தீர்த்தம் பிரசாதமாக தருவார்கள். ஆனால் இத்தலத்து நடராஜப் பெருமானின் சன்னதியில் தீர்த்தப் பிரசாதம் தருவது, இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் நடராஜப் பெருமான் தாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்க முடியாமல் தேவர்கள் மயக்கம் அடைந்தனர்.அவர்களது மயக்கத்தை தெளிவிக்க நடராஜப்பெருமான் கங்கை நீரை அவர்கள் மீது தெளித்தார். அதன் அடிப்படையில், இங்கு தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. மேலும், இந்திய தேசத்தின் வரைபடம் போல் நடராஜப் பெருமானின் திருவுருவம் அமைந்திருப்பதும் ஒரு சிறப்பு என்கின்றனர்.
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.
ஒருமுறை காளிக்கும், சிவபெருமானுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது.
நடனக் கலைகளில் தேர்ச்சி பெற விரும்பும் அன்பர்கள் வணங்க வேண்டிய திருத்தலம் இத்திருத்தலமாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. காளியை வழிபாடு செய்த பின்னர் மூலவரை வழிபட்டால் முழுப்பயணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்
பாம்பின் மேல் தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் அபூர்வக் கோலம்
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் 15 கி.மீ தூரத்தில் உள்ள தேவாரத்தலம் திருவாசி. இறைவன் திருநாமம் மாற்றுரைவரதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. இந்தக் கோவிலில் சிவன் சன்னிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கிய சன்னிதியில் நர்த்தனமாடும் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் முயலகன் மேல் காலை ஊன்றி தாண்டவமாடும் நடராஜப் பெருமானின் கோலத்தைத்தான் நாம் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், சர்ப்பத்தைக் காலடியில் போட்டு அதன்மேல் நின்று நடராஜப் பெருமான் ஆனந்தக் கூத்தாடும் கோலம், இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
முன்னொரு காலத்தில், மழவ நாட்டைச் சார்ந்த இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவன் என்ற மன்னனின் மகளுக்கு வலிப்பு நோய் எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்துபார்த்தும் மகளை குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, சிவபெருமான் அருள்புரியும் கோவிலில் அவளைக் கிடத்தி, அவள் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சிவபெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான். அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களை தரிசனம் செய்துகொண்டு, இத்தலத்திற்கு எழுந்தருளினார். இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். திருஞான சம்பந்தர், 'மங்கையை வாடவிடாதே, தையலை வாடவிடாதே, பைந்தொடியை வாடவிடாதே' என்ற ரீதியில் உள்ளத்தை உருக்கும் விதமாக பதிகங்களைப் பாடினார். அவர் சிவபெருமானை வேண்டி, 'துணிவளர் திங்கள் துலங்கி விளங்க...' எனும் பதிகம் பாடி, இத்தல இறைவனை வணங்க, வலிப்பு நோய் நீங்கி மன்னனின் மகள் குணமடைந்தாள்.
சிவபெருமான், மன்னன் மகளின் வலிப்பு நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில், இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நடராஜப் பெருமான் தனது திருவடியின் கீழ்
முயலகனுக்கு ப் பதிலாக, சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார். நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபட குணமாகும். தொடர்ந்து 48 நாட்கள் இத்தலத்திலுள்ள சர்ப்பத்தின்மீது ஆடும் நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை பூசி வந்தால் நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெறலாம்.