பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி  கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில்

சிம்ம யாளியின் வாயில் இருந்து தொங்கும் கல் சங்கிலி

நடுவில் தாமரை மலருடன் நுணுக்கமான வேலைப்பாடு உடைய ராசி சக்கரம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ளது 800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில். 'பொழில்வாய்ச்சி' (பொழில் வாய்ந்த ஊர் -மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது) என்ற பழமையான பெயர் கொண்ட இவ்வூர் 'முடிகொண்ட சோழநல்லூர்' என்று மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.

இக்கோவில் ஒரு சிற்பக் கலை பொக்கிஷமாக விளங்குகின்றது. முருகனது கருவறையையொட்டி, தென்புறத்தில் சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. இவற்றிற்கு முன்னால் 24 துாண்கள் கொண்ட திருமண மண்டபம் உள்ளது. இந்த தூண்களில் புடைப்புச் சிற்பங்களாக உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்,தடாதகைப்பிராட்டியார், கங்காளர், துர்க்கை, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

சிவன் சந்நதிக்கு நேர் மேலே விதானத்தில் ஒரே கல்லில் நடுவில் தாமரை மலருடன், 12 ராசிகள் உருவ வடிவில் சதுரமான அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன. அதனையொட்டி, ஒரே கல்லில் சிம்ம யாளியின் வாயினின்றும் மூன்று வளையங்கள் ஒன்றில் ஒன்றாக பிணைத்து, கல் சங்கிலி தொங்குகின்றது. மேற்கூரையில் உள்ள சிம்ம யாளி மிகுந்த கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கொடி போன்ற பூ வேலைப்பாடுகள், சிம்மத்தின் முன்னங்கால் பகுதி, பின்னங்கால் தொடைப்பகுதி, வால் பகுதிகளில் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலியை சிம்ம யாளி வாயில் கவ்விப் பிடிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. சங்கிலியின் கடைசி வளையத்தின் அடியில் அழகிய தாமரை மலர் நுட்பமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

உரலை இழுத்துச் செல்லும் கண்ணன்

நாரதர் அளித்த சாபத்தினால் இரு தேவர்கள், மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளர்ந்தனர். பிருந்தாவனத்தில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். உரலை இழுத்துக்கொண்டே கண்ணன், அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டது. கண்ணன் அதை பலமாக இழுத்த போது, மரங்கள் வேரோடு சாய்ந்து, அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள்.

தடாதகைப் பிராட்டி

தடாதகைப் பிராட்டி (ஸ்ரீ மீனாட்சி) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் அரிய சிற்பம் இவ்வாலயத் தூணில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் தூண்களில் இருக்கும் இது போன்ற பல பேரழகு புடைப்புச் சிற்பங்கள், பழங்கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Read More
நல்லிசேரி ஜம்புநாத சுவாமி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

நல்லிசேரி ஜம்புநாத சுவாமி கோவில்

இரட்டை விநாயகர்கள் எழுந்தருளியுள்ள தலம்

இடையூறுகளை ஏற்படுத்தும் நிக்கிரக விநாயகரும், துன்பங்களை போக்கும் அனுகிரக விநாயகரும் அருகருகே இருக்கும் அரிய காட்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லிசேரி கிராமம். இத்தலத்து இறைவன் ஜம்புநாத சுவாமி. இறைவியின் திருநாமம் அலங்கார வல்லி. சப்த கன்னியரில் வைஷ்ணவி தேவி வழிபட்ட தலம் இது. ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இக்கோவில். ஒரு காலத்தில் ஊரைச் சுற்றிலும் வயல்கள், வாய்க்கால்கள் நிறைந்திருந்தன. ஊரைச் சுற்றிய அனைத்துப் பகுதி அறுவடை நெல்லும் இங்கு கொண்டுவந்து குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதனால் இந்த ஊருக்கு நெல்லுச்சேரி என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அதுவே நல்லிச்சேரி என்று மருவியது.

கோவிலின் பிரதான தெற்கு வாசலில் உள்ளே நுழைந்ததும் நமக்கு இரட்டை விநாயகர்கள் காட்சி தருகிறார்கள். ஒருவர் நிக்கிரக விநாயகர், மற்றொருவர் அனுகிரக விநாயகர். நிக்கிரக விநாயகர் நமக்கு இடையூறுகளை, கஷ்டங்களை ஏற்படுத்தித் தருபவர். அனுகிரக விநாயகர் நம்முடைய துன்பங்களை, துயரங்களை நீக்குபவர். அதனால் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இந்த இரட்டை விநாயகருக்கு அதிக மதிப்பு உள்ளது. இனிமேல் எந்தக் கஷ்டத்தையும் தந்துவிடாதே என்று நிக்கரக விநாயகரிடமும், இதுவரை தந்துவரும் கஷ்டங்களைப் போக்கிவிடு என்று அனுக்கிரக விநாயகரிடமும் தோப்புக் கரணம் போட்டு பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
இரும்பை மாகாளேசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

இரும்பை மாகாளேசுவரர் கோவில்

இசைக்கலையில் சிறந்து விளங்க அம்பிகைக்கு தேன் அபிஷேகம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்தலத்து அம்பிகை மதுரசுந்தர நாயகி தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இங்கு கடுவெளி சித்தர் என்னும் சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் அம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவபெருமானிடம் சொல்வாளாம். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு 'குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
பாடி திருவலிதாயநாதர் கோவில்

பாடி திருவலிதாயநாதர் கோவில்

குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள தேவார தலம்

சிறப்பு வாய்ந்த குரு பரிகார தலம்

சென்னை மாநகரின் ஒரு பகுதியான பாடியில் அமைந்துள்ள தேவார தலம் திருவலிதாயநாதர் கோவில். இறைவன் திருநாமம் திருவலிதாயநாதர், திருவல்லீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஜெகதாம்பிகை, தாயம்மை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

குரு பகவான், தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை வழிபட்ட தலம் இது. குரு பகவான், சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால், இது குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் குரு பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இங்குள்ள குரு பகவானுக்கு, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, முல்லைப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தலத்தில் அருளும் குரு பகவானுக்கு, வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும், குருப்பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றது. இதில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தோஷங்கள் அனைத்தும் நீங்கி, நற்பலன்களை அடையலாம். திருமண தடை நீங்க, நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

Read More
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

நரசிம்மரின் யோக நிலையை கலைக்காமல் இருக்க நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாத மணிகள்

நோய்கள் நீங்குவதற்காக உப்பு, மிளகு காணிக்கை

சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். கருவறையில் மூலவர் பார்த்தசாரதி பெருமாள், தன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.

இக்கோவிலில் யோக நரசிம்மர் தனி சன்னதியில் யோக பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். தனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

Read More
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

பக்தனுக்காக, பொட்டு வைத்துக் கொள்ள சிரம் தாழ்த்திய சென்னி ஆண்டவர்

பெருந்துறையில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். 1749 அடி உயரம் உடைய இந்த மலைக்கு மேல் செல்ல வாகன வசதிகள் உண்டு. சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.

ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது . அதனால் இந்த மலைக்கு சிரகிரி என்ற பெயரும் உண்டு. (சிரகிரி - சிரம் - சென்னி, கிரி-மலை).அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். பால தேவராய சுவாமிகள் எழுதிய 'கந்த சஷ்டி கவசம்' அரங்கேற்றிய தலம்.

இங்கு முருகன் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். இந்த மலையின் ஒரு பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட பசுவின் உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் இருக்க, இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த சிலை மீது சிற்பி உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது, பின்பு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாறு கூறுகிறது. சிலை இடுப்புக்குக் கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் தயிரானது புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கத்துறையான் என்னும் குடியானவன், இங்கு பண்ணையாரிடம் மாடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். முருக பக்தனான அவரை தடுத்தாட் கொண்ட முருகன், அவர் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்தார். அவனுக்கு முருகன், நிலத்தம்பிரான் என்று நாமக்கரணம் சூட்டினார்.

ஒரு நாள் சிவாச்சார்யார் வராததால், சென்னியாண்டவருக்கு நிலத்தம்பிரானே பூஜை செய்தார். நிலத்தம்பிரான் பூஜையின் போது முருகனின் நெற்றியில் பொட்டு வைக்க முயற்சித்தபோது, அப்போது குள்ளமான தம்பிரானுக்கு ஆண்டவர் நெற்றி எட்டாததால், சென்னி ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தினாராம். அதனால் இன்றும் சென்னியாண்டவரின் தலை தாழ்ந்தபடியே இருக்கிறது.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

சிவ குடும்பத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

வருடத்திற்கு ஒருமுறை, வைகாசி விசாகத்தன்று மட்டும் வீதியுலா வரும் சோமநாத சுவாமி

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

சிவன் கோவில்களில், சிவபெருமான் பார்வதி தேவியோடும், இருவருக்கும் நடுவில் முருகனோடும், சோமாஸ்கந்த மூர்த்தியாக காட்சியளிப்பார். இக்கோவிலில் சிவபெருமான் குடும்ப சகிதமாக ஒரே இடத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இங்கு பிள்ளையார், சிவபெருமான், முருகன் மற்றும் பார்வதி தேவி சுதை வடிவில் வரிசையாக காட்சி அளிக்க, பிள்ளையாரின் வலதுபுறம் சண்டிகேஸ்வரரும், பார்வதி தேவியின் இடதுபுறம் மனோன்மணி (சிவபெருமானின் உபசக்தி) அம்பிகையும் உடன் இருக்கிறார்கள்.

இவர்கள் அறுவரின் உலோக திருமேனிகளும் இக்கோவிலில் உள்ளன. வைகாசி திருவிழாவின் போது, வைகாசி விசாகத்தன்று சோமநாதர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.திருக்கல்யாணம் முடிந்த பிறகு இந்த அறுவரும் வீதி உலாவுக்கு புறப்படுவார்கள். அப்போது உற்சவர் சோமநாத சுவாமியும், அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஒரு ஒரு மரப்படி சட்டத்திலும், சிவபெருமானின் உபசக்தி மனோன்மணி தனியாக ஒரு சப்பரத்திலும் எழுந்தருள்வார்கள்.

எப்படி திருவாரூர் தியாகராஜர் வருடத்திற்கு ஒருமுறை திருத்தேரில் உலா வருவாரோ, அது போல இத்தலத்து சோமநாத சுவாமியின் உற்சவத் திருமேனி, வைகாசி விசாகத்தன்று மட்டும்தான் வீதியுலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேசுவரர் கோவில்

பிரதோஷ நந்தி மற்றும் அதிகார நந்தி இரு வேறு திசைகளில் சாய்ந்தபடி இருக்கும் தேவார தலம்

திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. (விழுப்புரத்தில் இருந்து 37 கி.மீ.) தொலைவிலுள்ள தேவார தலம் திருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்). இறைவன் திருநாமம் அதுல்யநாதேசுவரர். இறைவியின் திருநாமம் அழகிய பொன்னம்மை. இக்கோவில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது.

இக்கோவிலில் அதிகார நந்தியும், பிரதோஷ நந்தியும் தங்கள் தலையை சாய்த்தவாறு இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, பிற சமயத்தினர் கோவிலை அடைத்து சுவாமி வழிபாட்டை நிறுத்தி வைத்திருந்தனர். திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கோவில் கதவை திறந்து மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது அவர் எளிதாக சுவாமியை தரிசனம் செய்ய, பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடது புறமாகவும் சற்று சாய்ந்து கொடுத்தது. இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள இரண்டு நந்திகளும் இரு வேறு திசைகளில் திரும்பியபடியே இருக்கின்றது.இப்படி இந்த இரு நந்திகளும் இருக்கும் கோலத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில்

மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கும் அரிய தலம்

சுக்கிர பகவானுக்குரிய பரிகார தலம்

திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சேரன்மாதேவிக்கு மிக அருகில் அமைந்துள்ள தலம் கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தின் மூலவராக சக்கரத்தாழ்வாரும், உற்சவராக பூதேவி ஸ்ரீதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளும் இருக்கின்றனர். இந்தியாவிலேயே மூலவர் சக்கரத்தாழ்வாராகவும் உற்சவர் வெங்கடாஜலபதியாகவும் காணப்படுகின்ற நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஓரிரு இடங்களில் தான் உள்ளன.

மூலவர் சுதர்சன சக்கரத்தில் முன்புறம் 16 திருக்கைகளுடன் கூடிய மகா சுதர்சன மூர்த்தியாகவும், பின்புறம் யோக நரசிம்மராகவும் காட்சியளிப்பது இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாகும்.முன்புறம் காட்சிதரும் ஸ்ரீ சுதர்சனர் சங்கு, சக்கரம், அங்குசம், மழு, ஈட்டி, தண்டு, கலப்பை, அக்னி, கத்தி, வேல், வில், பாசம், வஜ்ராயுதம், கதாயுதம், உலக்கை, சூலம் போன்ற ஆயுதங்களை தாங்கி பதினாறு கரங்களுடன் காட்சித் தருகிறார். இவருக்குப் பின்புறம் காணப்படும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி நான்கு கரங்களுடன் காட்சித் தருகிறார்.தசாவதாரங்களில் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆகியவற்றின் குணங்களை இவர் ஒருங்கே பெற்றவர். திருமால் இவரிடம் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அளிக்கும் உரிமையைத் தந்துள்ளார்.

சக்கரத்தாழ்வாராகிய சுதர்சன மூர்த்தி சுக்கிரனுக்கு அதிபதி. எனவே இத்தலம் சுக்கிரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகின்றது.

திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் இப் பெருமாள் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் செய்து சிறிய குழந்தைகளுக்கு தாமிரபரணி நதி படித்துறையில் பாயாசம் வழங்கினால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஆகும். . இங்குள்ள நரசிம்மருக்குப் பிரதோஷ காலங்களில் தொடர்ச்சியாகப் பதினொன்று பிரதோஷ நாட்களில் பானகம் படைத்து வழிபட்டால் பக்தர்கள் நினைத்து வேண்டியது நிறைவேறும்.

Read More
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோவில்

அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிபடும் வித்தியாசமான நடைமுறை

காரைக்குடி நகரின் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோவில். கருவறையில் முத்து மாரியம்மன் நின்ற கோலத்தில் கருணைப் பார்வையும்,கனிவு சிரிப்புமாகக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் . இக்கோவிலில் அம்மனுக்கு தக்காளியால் அர்ச்சனை செய்வதும், தக்காளி மாலை சாத்தியும் வழிபாடு செய்வது வேறு எந்த அம்மன் தலத்திலும் இல்லாத நடைமுறையாகும்.

அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிப்பட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது தனி சிறப்பாகும்.

Read More
திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

திருநெடுங்களம் நித்திய சுந்தரேசுவரர் கோவில்

இடக்காலைச் சுற்றியவாறு அமர்ந்து, இரண்டு முனிவர்களுடன் மட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான தோற்றம்

திருச்சி – தஞ்சாவூர் சாலையில் அமைந்துள்ள துவாக்குடி என்ற ஊரிலிருந்து, நான்கு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் நெடுங்களம். இறைவன் திருநாமம் நித்திய சுந்தரேசுவரர், திருநெடுங்களநாதர், இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி.

இக்கோவிலில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். கருவறையின் தெற்குப் பக்கத்திலுள்ள தேவ கோட்டத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். யோக தட்சிணாமூர்த்தி சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும், இடது கரத்தில் தீச்சுடரைத் தாங்கியவாறும், இடக்காலைச் சுற்றியவாறு யோகப் பட்டம் விளங்கவும் காட்சி தருகிறார். பொதுவாக நான்கு சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் இரண்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் இருப்பது வித்தியாசமான தோற்றமாகும்.

Read More
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்

ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து உருவாக்கிய தீர்த்தம்

உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகளை குணப்படுத்தும் சேஷ தீர்த்தம்

கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.

தேவர்களுக்கு தலைமை தாங்கியதால் பெருமாளுக்கு இங்கு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இத்தலத்திலே ஸ்ரீமந்நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் இங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர(ஆதிசேஷ)புரம் என பெயர் பெற்று விளங்கியது.

ஒரு சமயம் பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால், ஆதிசேஷனிடம் நீர் கொண்டு வருமாறு பணித்தார். ஆதிசேஷன் தன் வாலால் தரையில் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோவிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு, மிளகு , வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும்

Read More
வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில்

முருகன் இளமை, குடும்பஸ்தர், முதுமை என மூன்று கோலங்களில் காட்சி தரும் ஒரே தலம்

குருடராகவும், ஊமையாகவும் இருந்த சிற்பி குழந்தை வடிவ முருகன் சிலையை வடித்த அற்புதம்

சேலம் - கள்ளக்குறிச்சி சாலையில் 64 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுக்கோட்டை. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வட சென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவில். மலை மீது அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சாலை வசதி உண்டு.

இக்கோவிலில் முருகப் பெருமான் இளமை, முதுமை, குடும்பஸ்தர் என்று மூன்று கோலங்களில் காட்சி அருள்வது தனிச்சிறப்பாகும். முருகப் பெருமான், கருவறையில் பாலசுப்பிரமணியராக குழந்தை வடிவில் (இளமை) மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்தில் காட்சி அருள்கிறார். அவர் அருகில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி துறவற கோலத்தில் (முதுமை) அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தி வள்ளி, தெய்வயானையுடன் கிரகஸ்த கோலத்தில் (குடும்பஸ்தராக) அருள்பாலிக்கிறார்.

சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோவிலில் தொடக்கத்தில் ஐந்து நிலை ராஜ கோபுரம், சுயம்பு மூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. கடந்த நூற்றாண்டில்தான் குழந்தை வடிவ முருகன் சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பின்னணியில் முருகன் நடத்திய அற்புத திருவிளையாடல் உள்ளது.

அப்பன்ன சுவாமிகள் என்பவர் வைணவ பக்தர். இருப்பினும் வடசென்னிமலை முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். அவர் ஒரு குழந்தை வடிவ முருகன் சிலையை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மகாப்பெரியவரை நேரில் சந்தித்து, வடசென்னிமலை முருகன் கோவிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால், சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார். அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பி பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமையாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்ய முடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப் பெரியவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். அதற்கு சம்மதம் தெரிவித்த சிற்பி, அப்பன்ன சுவாமிகளை ஏழு நாட்கள் கழித்து வருமாறு சைகையில் தெரிவித்தார்.

ஏழு நாட்கள் கழித்து அப்பன்ன சுவாமிகள் சிற்பியை சந்தித்தபோது, அங்கு குழந்தை வேலன் விக்கிரகத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதற்குள்ளாக அற்புதமான குழந்தை வேலன் சிலையை அழகாக வடித்து முடித்திருந்தார் சிற்பி. இது எப்படி சாத்தியமானது என வியந்து நின்ற அப்பன்ன சுவாமிகள், குழந்தை வேலன் சிலையை பயபக்தியுடன் சிற்பியிடமிருந்து பெற்றுச் சென்று வடசென்னிமலை முருகன் கோவிலில் பிரதிஷ்டை செய்தார். சேலம் ஆத்தூரில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ள வடக்குமரை கிராமத்தில் அப்பன்ன சுவாமிகளது ஜீவ சமாதி உள்ளது.

ஒரே சமயத்தில் முருகப் பெருமானின் மூன்று கோலங்களையும் வணங்கினால், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்து முருகப் பெருமானை வணங்கினால் தீமைகள் விலகும் என்பது ஐதீகம்.இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Read More
நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்

நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில்

மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் தலம்

சிவன் கோவிலில் பிரசன்ன வெங்கடாசலபதியும், தாயாரும் எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு

கடலூரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெல்லிக்குப்பம் பூலோக நாதர் கோவில். இறைவியின் திருநாமம் புவனாம்பிகை. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

மண்ணுக்கு அதிபதி பூலோகநாதர் என்பதால் மண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எதுவானாலும் இந்த கோவில் மண்ணை எடுத்துச் சென்று வழிபட்டால் எளிதில் பிரச்னைகள் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும் தடைபட்ட கட்டுமான பணிகள் எதுவாகினும் இங்கு வந்த பூஜை நடத்தினால் அந்த கட்டிடம் நிவர்த்தி அடையும். வீடு கட்ட விரும்புவோர் இந்த ஆலயத்தில் கற்களை அடுக்கி வேண்டிக் கொண்டால் உடனே வீடு கட்டும் பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்சினை, ஜென்ம சாப பாவ தோஷம், வாஸ்து தோஷம், கண் திருஷ்டி தோஷம் உள்ளிட்ட 16 விதமான தோஷங்களையும் இக்கோவிலில் உள்ள பூலோகநாதர் நீக்குவதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இறைவி புவனாம்பிகை நாயகி முன் அமர்ந்து எந்த வரம் வேண்டினாலும் அது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அஷ்டோத்திர நாமவளி உச்சரித்து குங்குமம் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கூடும். திருமணத்தடை, குழந்தைபேறு உண்டாகுதல், குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான சங்கடங்கள் தீர்ந்து நல்வழி பெருகும் என்பது நம்பிக்கை.

சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் வகையில், இக்கோவிலில் தனிச்சன்னதியில் பிரசன்ன வெங்கடாசலபதியும், ஸ்ரீ அலமேலு மங்கை தாயாரும் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு ஒரே இடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் தரிசிப்பது தனிச்சிறப்பாகும். அலமேலு தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்.

Read More
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்

கலை நயத்துடன் அமைக்கப்பட்ட அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரை (பிரணாளம்)

கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.

நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்கள் இறை வழிபாட்டு தலங்களாக மட்டுமன்றி சிற்பக் கலைக் கூடங்களாகவும் விளங்குகின்றன. நம் கோவில்களின் கட்டிடக்கலை, அதன் தனித்துவமான பாணி, வடிவமைப்பு ஆகியவை நம் முன்னோர்களின் திறமையை வெளிக்காட்டுகின்றன. மூலவரின் கருவறை, மண்டபங்கள், தூண்கள், விதானங்கள், கோபுரங்கள், சிற்பங்கள் என்று ஒவ்வொரு பகுதியும் மிகுந்த கலைநயத்துடனும், கற்பனை திறனுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில், சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் சோழர் காலத்து கலைத்திறன் மிளிருகின்றது. இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் வெளியேறும் நீர் தாரையை கூட மிகுந்த கலை நயத்துடன் அமைத்திருக்கிறார்கள். இந்த நீர் தாரைக்கு பிரணாளம் என்று பெயர். இக்கோவிலில் உள்ள பிரணாளத்தின் அபிஷேக நீர் வெளியேறும் பகுதியில் காணப்பெறும் சிற்ப அமைப்பு கலை நயத்துடன் துலங்குகின்றது. பிரணாளத்தின் பக்கவாட்டில் சங்கு ஊதும் பூதகணம் திகழ, ஒரு பூதத்தின் பிளந்த வாயிலிருந்து நீர் வெளியே அபிஷேக நீர் கொட்டும் வகையில் அச்சிற்பம் காணப்பெறுகின்றது.

Read More
மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

மானந்தகுடி ஏகாம்பரேசுவரர் கோவில்

நவக்கிரகங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் திருவாசி இருக்கும் அபூர்வ அமைப்பு

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மானந்தகுடி. இறைவன் திருநாமம் ஏகாம்பரேசுவரர். இறைவியின் திருநாமம் காமாட்சி அம்மன். ஆஞ்சநேயர் இத்தலத்தில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால், இத்தலம் 'அனுமன் ஆனந்த குடி' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'மானந்தகுடி' என்று மருவியது.

இக்கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே நவக்கிரக சன்னதி உள்ளது. நவக்கிரகங்கள் மனைவியருடன் இங்கே எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். மேலும் இந்த நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக திருவாசி அமைந்திருப்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

ஆஞ்சநேயர், நவக்கிரகங்களை தனது வாலில் கட்டியிருப்பதாக ஐதீகம். ஆஞ்சநேயரது நேரடிப்பார்வையில் நவக்கிரகங்கள் குடும்பநிலையில் இருப்பதால், இங்கு கிரக தோஷங்கள் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. ஜாதக, கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் மட்டை தேங்காய் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.

Read More
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்

மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் தாயார் அமர்ந்திருக்கும் அபூர்வ காட்சி

சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இங்குள்ள பெருமாள் ஒரு பாதம் முன்னோக்கியும், ஒரு பாதம் பின்னோக்கியும் இருக்கும் நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

இத்தலத்தில் மட்டும் பெருந்தேவி தாயார் மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தில் அமர்ந்து சிம்மவாகினியாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக அம்பிகை அல்லது துர்க்கை தான் சிம்மவாகினியாக எழுந்தருள்வார்கள். ஆனால் இந்த கோவிலில் தாயார் சிம்ம பீடத்தில் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

Read More
மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மஞ்சக்குடி சீனிவாச பெருமாள் கோவில்

ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டிய நிலையில் இருக்கும் அபூர்வ தோற்றம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில், திருவாரூரில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள மஞ்சக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது சீனிவாச பெருமாள் கோவில். தாயார் ஸ்ரீதேவி, பூதேவி.

ராமபிரான் வனவாசம் மேற்கொண்டபோது, அவர் பத்தினியான சீதையும் உடன் செல்கிறாள். அப்போது காட்டில் தனிமையில் இருந்த போது, ராவணனின் மாமன் மாரீசன், மான் உருவில் வந்து மாயம் செய்கிறான். மானை பிடித்து தருமாறு சீதை கேட்டபோது, ராமன் துரத்தி சென்ற நிலையில், சீதை கடத்தப்பட்டாள். ராமபிரான் தன் மனைவியை காணாமல் துயரப்படும்போது ராமனின் மோதிரத்துடன் ஆஞ்சநேயர் இலங்கைக்கு சென்று சீதை இருக்கும் இடத்தை தெரிந்து வந்த ஆஞ்சநேயர் கண்டேன் சீதையை என இரு விரல் நீட்டி காட்டிய இடம் என்பதால் அப்பகுதியினர் ஆஞ்சநேயருக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.

இந்தியாவில் எந்தக் கோவிலிலும் இல்லாத வகையில் உற்சவரான ஆஞ்சநேயர் வலது கையை நீட்டி இரு விரல்களால் ‘கண்டேன் சீதையை’ என கூறிய நிலையில் அருள்பாலிப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.

ஆஞ்சநேயரை வேண்டி ஒருபடி தயிர், நான்கு முழ புது வேஷ்டி ஆஞ்சநேயர் மேனியில் சார்த்தி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலுக்கு அருகாமையில் வடக்கே சிறப்பு மிக்க திருத்தலையாலங்காடு பாலாம்பிகா சமேத ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோவிலும், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலும் உள்ளன.

Read More
திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோவில்

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூா்த்திகளை உள்ளடக்கிய பெருமான்

மும்மூர்த்திகளின் அடையாளமான தாமரை மலர், சங்கு சக்கரம்,நெற்றிக்கண் கொண்ட உற்சவ பெருமாள்

கடலூா் நகரத்திலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம் திருவந்திபுரம். பெருமாள் திருநாமம் தேவ நாதன்,தெய்வநாயகன்.தாயார் திருநாமம் வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). உற்சவர் திருநாமம் அச்சுதன், மூவராகிய ஒருவன்.

திருவந்திபுரத்தில் அருளும் தேவநாதப் பெருமாள் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூா்த்திகளையும் உள்ளடக்கிய பெருமானாகத் திருக்காட்சியளிக்கின்றாா். முன் ஒரு காலத்தில் அசுரா்களிடமிருந்து தேவா்களைக் காக்க பெருமான் எடுத்த திருக்கோலமே மூம்மூா்த்தி வடிவம். இதனால் இப்பெருமான் 'த்ரிமூா்த்தி” என்றும் “மூவராகிய ஒருவன்” என்றும் வணங்கப்படுகின்றாா்.

தேவா்களுக்குத் தலைவனாக (நாதனாக) இருந்து எம்பெருமான் போா் புரிந்ததால் இவருக்கு தெய்வநாயகன் மற்றும் தேவநாதன் என்ற திருநாமங்கள் வழங்கலாயிற்று. தேவா்களுக்கு மும்மூா்த்திகள் வடிவில் காட்சி தந்ததால் இத்தலத்தின் உற்சவ மூா்த்திக்கு மூவராகிய ஒருவன் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. பிரம்மனுக்கு அடையாளமான தாமரை மலரைத் தனது திருக்கரத்திலும் மஹா விஷ்ணுவிற்கு அடையாளமான சங்கு, சக்கரங்களைத் தாங்கியும் சிவபெருமானுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும் சடா முடியும் தரித்து தேவநாதப் பெருமான் திருக்காட்சி கொடுப்பதால் 'த்ரிமூா்த்தி' என்றும் 'மூவராகிய ஒருவன்' என்றும் வணங்கப்படுகின்றாா்.கருவறை விமானத் தின் கீழ், கிழக்கு திசையில் பெருமாளும், தெற்கில் ஈசனின் வடிவமான ஶ்ரீதெட்சிணாமூா்த்தியும் மேற்கு திசையில் ஶ்ரீநரசிம்மரும் வடக்கில் ஶ்ரீபிரம்மனும் அமைந்துள்ளது இத்தல பெருமான் 'மூவராகிய ஒருவன்' எனும் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. இத்தலத்து எம்பெருமானை வழிபாடு செய்ய, மும்மூா்த்திகளையும் ஒருங்கே வழிபட்ட பேறு அன்பா்களுக்குக் கிட்டும்.

திருமலைக்கு நோ்ந்து கொண்டு செல்லமுடியாதவா்கள் தேவநாதப் பெருமானுக்கு அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனா்.

Read More
தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில்

திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கான பரிகார தலம்

திருவாரூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது தேவர் கண்ட நல்லூர் குமாரசாமி கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில். இத்தலத்தில் தேவர்கள் இருப்பதை முனிவர்கள் கண்டு வணங்கியதால் தேவர்களை கண்ட ஊர் என்பதே பின்னாளில் தேவர் கண்ட நல்லூர் என மருவியது.

இக்கோவில் உருவானதற்கு பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. முன்னர் காலத்தில் இப்பகுதியை ஆண்ட வல்லால மகாராஜன் என்ற அரசனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது அவள் வயிற்றில் வளர்ந்த குழந்தை மண்ணில் பிறந்து விழுந்தால் நாட்டிற்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் குழந்தை கீழே விழாமல் குறிப்பாக உயிருடன் பிறக்காமல் இருக்க வேண்டும் என தேவர்கள் முனிவர்கள் பார்வதி தேவியிடம் வரம் கேட்டனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் பிறக்காமல் அழிக்க மருத்துவச்சி வேடம் பூண்டு பார்வதி தேவி நடந்து வருகிறார். அப்போது வல்லால மகாராஜன் அவரை அழைத்து வந்து தன்மனைவிக்கு மருத்துவம் பார்க்க கேட்கிறான். இதை சாதகமாக பயன்படுத்தி குழந்தையை அழித்து, ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே விழாமல் பார்வதி தேவி காத்தார். தன் பிள்ளையை மருத்துவச்சி கொன்று விட்டார் என்ற தகவலறிந்த வல்லால மகாராஜன் வாளால் வெட்ட முயன்ற நேரத்தில் ஆக்ரோஷமாக மாறிய பார்வதி தேவி அந்த மகாராஜா தலையை வெட்டி விடுகிறார். பார்வதி தேவியாரின் ஆக்ரோஷத்தை போக்க பெருமாள் பெத்தரான்ய ஈசனாகவும், ஈசன் உத்தராண்ட ராயராகவும், பல்வேறு தேவதைகள் உருமாற்றம் கொண்டு தேவியரின் ஆக்ரோஷத்தை தீர்த்தார்கள். இருப்பினும் தேவியார் ஆக்ரோஷம் அடங்காத நிலையில் முருகன் நேரில் சென்று தாயாரிடம் ஆக்ரோஷம் தீர்த்ததால் பின்நாளில் இத்தலத்தில் குமரன் கோவில் அமைத்துள்ளனர்.

திருமணத்தடை, புத்திரபாக்கியம், பதவி உயர்வு உள்ளிட்டவைக்கு சிறந்த பரிகார தலமாக, இப்பகுதியில் இந்த கோவில் விளங்குகின்றது.

Read More