புது அக்ரஹாரம் பட்டாபிராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

புது அக்ரஹாரம் பட்டாபிராமர் கோவில்

மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்கள் ஒரே கோலத்தில் இருக்கும் அரிய அமைப்பு

லட்சுமணன் தன்னுடைய வில்லோடு ராமருடைய வில்லையும் தாங்கி இருக்கும் அபூர்வ தோற்றம்

ஆஞ்சநேயர் ராமபிரானின் திருவடிகளை பிடித்தபடி இருக்கும் அரிய காட்சி

உற்சவர் ஆஞ்சநேயர் ஒரு கையில் ராமாயணத்தைப் பிடித்தபடியும், மற்றொரு கையை ஜபமாலை பிடித்திருப்பது போன்ற பாவனையிலும் காணப்படும் அபூர்வ காட்சி

தஞ்சை மாவட்டத்தில் கல்யாணபுரத்திற்கும் திருவையாற்றிற்கும் இடையில் அமைந்துள்ள கிராமம்  புது அக்ரஹாரம். இந்த கிராமத்தில் அமைந்துள்ளது ஸத்குரு தியாகராஜர் வழிபாடு செய்த பட்டாபிராமன் கோவில். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனின் மகாராணியான மோகனாம்பாள் அமைத்த கோவில் இது. இதனால் இந்த கிராமத்திற்கு பஞ்சநத மோகனாம்பாள்புரம் என்ற பெயரும் இருந்தது.

மூலவராக ராமபிரான் வீராசனத்தில் அமர்ந்த திருக்கோலத்திலும், இடப்புறம் சீதாபிராட்டியும். வலது புறம் பரதன் குடை பிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லட்சுமணர் ராமருடைய வில்லோடு தன் வில்லையும் தாங்கியவாறு காட்சி அளிக்கிறார்கள். லட்சுமணன் தன்னுடைய வில்லோடு ராமருடைய வில்லையும் தாங்கி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும்.சீதா தேவி ஒரு கையில் தாமரை மலரை ஏந்தியபடியும், மற்றொரு கை ஐஸ்வர்ய தான ஹஸ்தமாக அமைந்தபடியும் காணப்படுகிறார். பொதுவாக, ராமபிரானின் வலது புறத்தில் சீதாபிராட்டி இருப்பது வழக்கம். இந்தத் தலத்தில் சீதாபிராட்டி ராமனின் இடதுபுறத்தில் காணப்படுவது ஒரு தனித்துவமான அம்சமாகும். ஆஞ்சநேயர் தனது இறைவனின் தாமரைத் திருவடிகளை ஒரு கையால் பிடித்தபடியும், மற்றொரு கை தனது வாயருகே தாச பாவத்தில் வைக்கப்பட்டபடியும் காணப்படுகிறார். இதுவும் நாம் எந்த கோவிலும் காண முடியாத அரிய காட்சியாகும்

இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், மூலவரும் உற்சவ மூர்த்தியும் ஒரே கோலத்தில் இருப்பதுதான். பொதுவாக, மூலவர் மற்றும் உற்சவ விக்ரகங்கள் ஒரே கோலத்தில் இருக்கும் இந்த அமைப்பு, எந்தக் கோவிலிலும் காணப்படுவதில்லை. உற்சவ ஸ்ரீ ராமர், வீராசனத்தில் அமர்ந்து, தமது கையை 'தத்துவ ஞான' முத்திரையில் வைத்துக்கொண்டு, வியாக்கியானம் அருளும் கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரைச் சுற்றியுள்ள பரிவார மூர்த்திகளும் மேலே விவரிக்கப்பட்ட அதே கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த பரிவாரத்தில், ஆஞ்சநேயர் இடதுபுறம் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ஒரு கையில் ராமாயணத்தைப் பிடித்தபடியும், மற்றொரு கையை ஜபமாலை பிடித்திருப்பது போன்ற பாவனையிலும் வைத்திருக்கிறார். ஆஞ்சநேயரின் இந்த தோற்றமும் ஒரு அரிய காட்சியாகும்.

Read More
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்

அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.

கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி

இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

Read More
திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீசுவரர் கோவில்

திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீசுவரர் கோவில்

தர்மதேவதை நந்தி வடிவில் எழுந்தருளி இருக்கும் தேவாரத்தலம்

திருமண வரம் அருளும் நந்தி தேவர்

விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவெண்ணைநல்லூர். இறைவன் திருநாமம் கிருபாபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. சிவபெருமான் முதியவர் தோற்றத்தில் வந்திருந்து, சுந்தரரை ஆட்கொண்ட தலம் இது.

தர்மதேவதையே நந்தி வடிவில் இக்கோவிலில் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம். திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், தாங்களும் மாலை போட்டு, நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பூர்வ ஜென்ம பாவம் விலக இக்கோவிலில் யாகம் செய்கிறார்கள். உடல் ஆரோக்கியம், தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது. இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள்.

தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள் தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு சுற்றினால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். உடல் ஆரோக்கியம் தொழில் ஆகியவற்றுக்காக ஜப்பான் நாட்டிலிருந்தெல்லாம் இங்கு வந்து பக்தர்கள் யாகம் நடத்துகிறார்கள். பூர்வ ஜென்ம பாவம் விலக யாகம் செய்கிறார்கள். நவகிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் உள்ளது மேலும் ஒரு விசேசம். இங்குள்ள தலவிருட்சத்தை பூஜித்து பால் அபிசேகம் செய்து ஐந்து தீபம் ஏற்ற நவகோள்களான சூரியன் முதல் கேது வரையிலான திசா புத்திகளினால் ஏற்படும் எல்லா கஷ்டங்களும் நீங்கப்பெறுவார்கள்.

Read More
பதிமலை  பாலதண்டாதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பதிமலை பாலதண்டாதபாணி கோவில்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் வாழ்ந்த குன்றில் அமைந்திருக்கும் முருகன் கோவில்

ஆதி மனிதர்கள் வரைந்த யானை, யானை பாகன் முதலிய குகை ஓவியங்கள்

கோவை மாவட்டம், குமிட்டிபதி என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது பதிமலை பாலதண்டாதபாணி கோவில். இக்கோவில் மிகவும் சிறியது. இந்த கோவிலை அடைய 350 படிகள் உள்ளன. ஒரே சன்னதியை கொண்ட இக்கோவிலின் கருவறையில் முருகப்பெருமான், பாலமுருகனாக அருள்பாலிக்கிறார். வலது கையில் வேல் ஏந்தி, ஒய்யாரமாக நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோவிலில் இருந்து 100 மீட்டர் கீழே இறங்கி வந்தால், ஆதி மனிதர்கள் வாழ்ந்த பழங்கால குகைகளைக் காணலாம். இந்தக் குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்காக ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இக்குகை பாறைகளில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள். இந்த ஓவியங்கள் வெண்மை நிறத்தில் காட்சி தருகின்றன. இந்த ஓவியத்தில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன. சுமார் 4 அடி அகலமும், 2 அடி உயரத்திலும் உள்ள இந்த பாறை ஓவியம், அப்பகுதியில் யானைகள் வாழ்விடமாக இருந்ததற்கு அடையாளமாகக் கூறப்படுகிறது.

யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் யானை சந்தை நடைபெற்ற இடமாக இது இருக்கலாம் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். வழுக்குபாறை, குமிட்டிபதி, முருகன்பதி, புதுப்பதி, சின்னாம்பதி, நாச்சிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர், 'பாண்டியன் பள்ளி' என இந்தப் பகுதியை அழைக்கின்றனர். குமிட்டிபதிக்கு அருகே வேழந்தாவளம் எனும் இடம் உள்ளது. வேழம் என்றால் யானை, தாவளம் என்றால் விற்பனை சந்தை என்ற பொருள் கொள்வதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

வேழந்தாவளம் அருகே மாவுத்தம்பதி என்ற கிராமம் இருக்கிறது. யானை பாகனை மாவுத் என அழைப்பது வழக்கம். யானை பாகன்கள் வசிக்கும் இடமாக இருந்த இப்பகுதி மாவுத்தம்பதி என பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பாலக்காடு கணவாய் வழியாக ஏராளமான யானைகளை பிடித்து வந்து ஆனைமலையில் வைத்து வளர்த்துள்ளனர். இங்கே குமுட்டிபதி, மாவுத்தம்பதியில் யானை படை உருவாக்கப்பட்டுள்ளது. யானைகளை அடக்கிய வீரர்கள் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்துள்ளனர்.

Read More
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில்

சிறுவனாக வந்த பிரம்ம தேவனின் பூஜையை ஏற்றுக் கொள்வதற்காக தன் சிவலிங்க பாணத்தை தாழ்த்திய சிவபெருமான்

வேலூர் நகரத்திலிருந்து 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை.இக்கோவில் 1300 வருடங்கள் பழமையானது. ‘திருவிரிஞ்சை மதிலழகு' என்பது சொல் வழக்கு.

திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் ஆகும்.

பிரம்மதேவன், சாபவிமோசனம் பெற, இத்தலத்து கோவில் அர்ச்சகர் சிவநாதன்-நயினாநந்தினி தம்பதிக்கு, சிவசர்மன் என்ற பெயருடன் மகனாகப் பிறந்தார். சிவசர்மன் தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையை இழந்தார். சிவசர்மனுக்கு உரிய பருவம் வந்ததும், உபதேசமும், சிவ தீட்சையும் தம் மகனுக்குச் செய்விக்கும்படி அன்னை நயினாநந்தினி உறவினர்களிடம் கேட்டாள். அவர்கள் அதற்கு மறுத்ததுடன் பூஜா உரிமையையும், சொத்துக்களையும் தமக்கே எழுதித்தரக் கூறினர். வேறு வழியற்ற அவள் சிவபெருமானைச் சரணடைந்தாள்.

அவள் கனவில் தோன்றிய சிவபெருமான், பிரம்ம தீர்த்தக் கரையில் நாளை அதிகாலை உன் மகனை நீராட்டி வை என்று சொன்னார். ஈசன் சொன்னது கார்த்திகை மாத சனிக்கிழமை. மறுநாள் அதிகாலை (கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு) சிவபெருமான் சொன்னபடியே தன் மகனுடன் காத்திருந்தாள். வயோதிக அந்தணராக வந்த சிவபெருமான், சிறுவனுக்கு பிரும்மோபதேசமும், சிவ தீட்சையும் செய்வித்தார். கரையேறி வந்தவர் மகா லிங்கமாக மறைந்து விட்டார். ஈசன் கனவில் சொன்னபடியே சிறுவனை யானை மீது திருமஞ்சனக் குடத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மன்னர்கள் ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவு திறந்துகொண்டது. குடத்துடன் உள்ளே சென்ற சிறுவனோ, மரபு வழுவாமல் முறைப்படி பூஜைகளைச் செய்ய முற்பட்டான். அப்போதுதான், அபிஷேகம் செய்ய தன்னுடைய உயரம் போதாமையால் வருந்தினான். சிறுவனின் வருத்தம் அறிந்த பெருமான். சிவபாணத்தைச் சாய்த்து, அந்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். அதே கோலத்தில் இன்றும் முடி சாய்ந்த மகா லிங்கமாக மார்க்கபந்தீசுவரர் காட்சி அளிக்கிறார். சிருஷ்டிகர்த்தாவாக விளங்கும்போது பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, சிறுவனாக வந்து வருந்தியபோது காட்டி, அந்த அபிஷேகத்தையும் ஏற்றருளிய நாள் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு ஆகும்.

கார்த்திகை கடைசி ஞாயிறு தீர்த்தமாடி வழிபட்டால் குழந்தை பேறு அருளும் இறைவன்

கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறன்று, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு, விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் ஆலயத்தின் திருக்குளத்தில் நீராடி கோயிலில் உறங்குகிறார்கள். அவர்கள் கனவில் பெருமான் காட்சி தந்தால் அடுத்த வருடமே கட்டாயம் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 11-55 மணிக்கு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த சிம்மக்குள தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை.

முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம்.

இதனால் வெளிமாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

பனை காய்கள் ஒரு வருடம் கருப்பாகவும், மறுவருடம் வெள்ளையாகவும் காய்க்கும் அதிசய பனை மரம்

இக்கோவில் தலமரமாக பெண்பனை மரம் உள்ளது. இது ஒரு அதிசய பனைமரமாக உள்ளது. அதாவது இந்த பனைமரத்தில் காய்க்கும் பனை காய்கள் கறுப்பாக இருக்கிறது.மறுவருடம் காய்க்கும் பனை காய்கள் வெள்ளையாக இருக்கிறது.

Read More
சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் கோவில்

கருடன்களும், நாகங்களும் மற்றும் கிளிகளும் தாங்கி இருக்கும் அபூர்வ விளக்கு

சென்னையிலிருந்து கல்பாக்கம் செல்லும் பாதையில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது மலைமண்டல பெருமாள் கோவில். இத்தலம் சற்றே மலை போன்ற அமைப்பின் மேல் உள்ளதால் மலை மண்டல பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். மலைமண்டல பெருமாளுக்கு கிரி வரதராஜப் பெருமாள் என்ற திருநாமும் உண்டு. தாயார் திருநாமம் பெருந்தேவி. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மகான் ராகவேந்திரர் வழிபட்ட கோவில் இது என்பது இக்கோவிலின் மேலுமொரு சிறப்பாகும்.

இந்த கோவிலில் அமைந்துள்ள ஒரு விளக்கு மிகவும் மகிமை வாய்ந்ததாகவும், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. விளக்கின் மேற்பாகத்தில் கருடன்களும், நாகங்களும் தாங்குமாறு ஓர் அமைப்பு உள்ளது. கீழ் பாகத்திலோ கிளிகள் தாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. இவ்விளக்கில் நெய் ஊற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டால் நம் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது ஐதீகம்.

Read More
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில்

அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறும் தனிச்சிறப்பு

சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூர் நகரத்தில், புகழ்பெற்ற திவ்ய தேசமான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது தீர்த்தீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுர சுந்தரி அம்மன்.

கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் சாந்த சொரூபிணியாக நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். இந்த தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனுக்கு வேறு எந்த அம்பிகைக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. பொதுவாக எல்லா சிவன் கோவில்களிலும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது சிவபெருமானுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் அம்பிகை திரிபுராசுந்தரி அம்மனுக்கும் ஐப்பசி மாத பௌர்ணமியின்போது அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. இது இத்தலத்து அம்பிகை திரிபுரசுந்தரி அம்மனின் தனி சிறப்பாகும்.

Read More
ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்

ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்

பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.

இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.

பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Read More
திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்

பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் தம்பதி சமேதராக எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருக்கண்டியூர். திருவையாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த ஸ்தான கோவில்களில் இத்தலமும் ஒன்று. சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இறைவன் திருநாமம் பிரம்மசிரகண்டீசுவரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இங்கு பிரம்மதேவரின் அகந்தையை அகற்ற சிவபெருமான் அவரின் தலையை அகற்றி தண்டித்ததால், ‘சீரகண்டீஸ்வரர்’ என்ற திருநாமம் பெற்றார்.

இக்கோவிலில் பிரம்மதேவர் தவமிருந்து சிவனிடம் சாப விமோசனம் பெற்றார். இங்கு சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.மற்ற கோவில்களில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அல்லது கோஷ்டத்தில் வீற்றிருக்கும் நிலையில், இங்கு பிரம்மாவும் அவருடைய மனைவி சரஸ்வதியும் ஒன்றாக தம்பதி சமேதராகக் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். பிரம்மா சரஸ்வதியுடன் தம்பதி சமேதராக, புன்னகை தவழும் கோலத்தில் காட்சியளிக்கிறார், அவரது கரங்களில் பூ மற்றும் ஜெபமாலைகள் இருக்கின்றன.

இந்த தலத்தில் தரிசனம் செய்தால் பிரம்மா தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

Read More
ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில்

வாழ்வில் வளமை வழங்கும் முருகன்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், பழனியில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில். 300 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல 156 படிகள் உள்ளன. கருவறையில் தண்டம் ஏந்தி இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் நின்ற கோலத்தில் மலர் அலங்காரத்தில் வேலாயுத சுவாமி அருள் பாலிக்கிறார். அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமானைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

ஒருசமயம், காங்கய நாட்டில் மக்கள் பசியால் வாடுவதை அறிந்து இவர்கள் அங்கு சென்றனர். ஊர் மக்களை ஒன்று திரட்டி, மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீ வைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப் பெருமான் அங்கு எழுந்தருளி, மக்களுக்கு யாது வேண்டும் என்று கேட்டார். அவர்களும் அவர்கள் குறைகளைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முருகப் பெருமான் அவர்களின் வறுமையை நீக்கி, அவர்கள் வாழ்வில் வளமை பொங்கச் செய்தார். இதனால் இந்த மலைக்கு ஊதிமலை என்ற பெயர் பெற்றது. இன்றும் சித்தர்கள் ஒளிவடிவம் கொண்டு இரவு நேரங்களில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

அரிய மூலிகைகள் கொண்ட மலையாக ஊதிமலை இருப்பதால், பல நோய்களுக்குத் தீர்வாக இம்மலை உள்ளது. மேலைக் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்த உதியர்களின் குலச்சின்னமாக உதி மரம் விளங்கியது. இம்மரம் ஒதி மரம் என்றும், ஓதி மரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இம்மரத்தில் பூக்கும் பூக்கள் பொன் நிறத்தில் மின்னும். மலை முழுவதும் இம்மரங்களே நிறைந்திருந்து எங்கு திரும்பினாலும், இப்பூக்களே தென்படுவதால், இம்மலைக்கு 'பொன் ஊதிமலை' என்ற பெயர் வந்தது.

கொங்கு நாட்டுப் பகுதியில் பலருக்கு உத்தண்ட வேலாயுத சுவாமி குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்குகிறார். அதனால் இங்கு சுவாமி உத்தரவு கேட்கும் வழக்கம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அதற்கு முன்பாக வேலாயுத சுவாமியின் உத்தரவு கேட்டுத்தான் செயல்படுவர்.

Read More
திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்

எப்பொழுதும் மூடியே இருக்கும் குடைவரை காளி சன்னிதி

காளியின் உருவமாக விளங்கும் சூலம்

கண்ணாடி மூலம் சூலத்தை வணங்கும் நடைமுறை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டிய நாட்டு தேவார தலம் திருப்புனவாசல். இத்தலத்து இறைவன் திருநாமம் விருத்தபுரீசுவரர், பழம்பதிநாதர். இறைவியின் திருநாமம் பிருகந்நாயகி, பெரியநாயகி.

இக்கோவிலில் அம்பாள் பெரியநாயகி சன்னிதி எதிரே அமைந்துள்ளளது, குடைவரை காளி சன்னிதி. இந்த சன்னிதியின் நுழைவுவாசல் எப்பொழுதும் மூடியே இருக்கிறது. இதன் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.

ஒரு சமயம் சதுர கள்ளி வனத்தில் கார்கவ முனிவர் தியானத்தில் இருந்தார். அப்போது ஒரு அரக்கன் பசியில் உணவு தேடித் திரிந்தான். புலி உருவத்தில் முனிவரை கொல்ல முயன்றான். அதைக்கண்ட முனிவர், 'உனக்கு புலி உருவமே நிலைக்கட்டும்' என்று சாபமிட்டார். பசியின் காரணமாக இப்படிச் செய்து விட்டதாகவும், தனக்கு விமோசனம் அருளும்படியும் அசுரன் முனிவரை வேண்டினான். அதற்கு முனிவர், 'வஜ்ரவனம் என்ற திருப்புனவாசல் பகுதிக்கு பார்வதியும் சிவனும் வரும்போது, பார்வதியின் பார்வை பட்டு உன்னுடைய சாபம் நீங்கும்' என்றார்.

தன் சாப விமோசனத்திற்காக அந்தப் பகுதியில் புலியாகவே சுற்றி வந்தான், அசுரன். ஒரு முறை பார்வதி அந்த வனத்திற்கு வந்தார். அவர் மீது புலியாக இருந்த அசுரன் பாய்ந்தான். அப்போது காளியாக உக்கிர வடிவத்திற்கு மாறிய தேவியின் பார்வை பட்டு,அந்த அசுரனுக்கு சுய உருவம் கிடைத்தது. மேலும் இத்தல அம்பாளின் முன்பு நந்தியாக இருக்கும் வரமும் கிடைத்தது.

தனது உடலில் பாதி உருவத்தை கொடுத்த சிவபெருமானிடம், உக்கிரமான காளி உருவத்தை காட்டியதற்காக அம்பாள் மன்னிப்பு கேட்டாள். ஆனால் சிவபெருமான், 'உனக்கு இந்த உருவம் நன்றாகத்தான் உள்ளது. இருப்பினும், இந்த உருவத்தை உனக்கு துணையாக குடை வரையில் வைத்துக்கொள். சுயரூபத்தோடு வந்து என்னுடன் இரு' என்று கூறியதையடுத்து, அம்பாள் சுய உருவதை அடைந்தார். ஒரு உருவத்தில் இருந்து மறு உருவம் எடுத்ததால், காளியின் உருவ வழிபாடாக சூலம் உள்ளது. அம்பாளின் சன்னிதிக்கு எதிரே இந்த குடைவரை காளி சன்னிதி உள்ளது. காளியின் உக்கிரம் அதிகமாக இருந்ததால், இந்த சன்னிதியின் நுழைவு வாசல் கதவு மூடியே இருக்கும்.இதனால் அந்த சூலத்திற்கு எதிராக ஒரு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்துதான் சூலத்தை வணங்க வேண்டும்.

Read More
கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கோவிலூர் மந்திரபுரீசுவரர் கோவில்

இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்திய சூதவன விநாயகர்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துபேட்டையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோவிலூர். இறைவன் திருநாமம் மந்திரபுரீசுவரர், இறைவியின் திருநாமம் பெரிய நாயகி. மாமரம் இத்தல விருட்சமாதலால் இத்தலத்திற்கு சூதவனம் என்ற பெயரும் உண்டு.

கருடன் ஒரு முறை அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு இத்தலம் மீது வந்து கொண்டிருந்தபோது, அமுதத் துளிகள் சிந்திய இடங்களில் மாமரங்கள் தோன்றின. இங்கே வீற்றிருக்கும் இறைவன் மீது அமிர்தம் சிந்தியதால் அவர் வெண்னம நிறமாக காட்சி தருகிறார்.

சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள விநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இந்த விநாயகர் இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் . இப்படி மாவிலை கொத்துக்களையும், மாங்கனியையும் ஏந்திய விநாயகரை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

Read More
புன்னைநல்லூர் கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

புன்னைநல்லூர் கோதண்டராமர் கோவில்

ஆஞ்சநேயர் சன்னதி மண்டபத்தில் கூரையின் உட்புறத்தில் செதுக்கப்பட்ட பன்னிரண்டு ராசிகளின் அரிய காட்சி

பக்தர்கள், தரையில் வரையப்பட்ட, தங்கள் ராசி தொடர்பான வண்ண கட்டத்தில் நின்று ஆஞ்சநேயரை பிரார்த்திக்கும் முறை

தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். இந்த ஊரில் மிக பிரசித்திப் பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில், சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த கோதண்டராமர்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். கருவறையில் உள்ள விக்ரகங்கள் அனைத்தும் சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள். இத்தகைய விக்ரகத்தை வேறெங்கும் காண்பது அரிது.

இக் கோவிலில் தனி அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்’. ’வீர’ செயல் பல செய்து இலங்கை சென்று, அண்ணல் ஸ்ரீராமனின் மோதிரத்தை அன்னை ஸ்ரீசீதாப்பிராட்டியிடம் கொடுத்து தாயாரின் துயர் துடைத்தவர் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி. பின்பு அன்னையைக் கண்ட ’ஜய’ செய்தியினை ஸ்ரீராமபிரானிடம் கூற வருபவர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர்.

ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் தூக்கிய வலக்கையும், வெற்றிச் சின்னமாகிய தாமரை ஏந்திய இடக்கையுமாக விசுவ ரூபமாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். சாதிக்க முடியாதையும் சாதித்தவர் (அன்னையை காண கடலை தாண்டியவர்), வீரன் (எதிரியாம் இராவணனின் இலங்கையில் புகுந்தவர்), ஜயம் கொண்டவர்- கொடுப்பவர் (கடலை தாண்டி, எதிரியாம் இராவணனின் இலங்கையில் அன்னையை கண்டவர்).

இந்த ஜெய்வீரர் ஆஞ்சநேயர் சன்னதியின் எதிரில், கூரையின் உட்புறத்தில் முழுமையான ராசி மண்டலம், அதாவது ஜாதகக் கட்டத்தில் காணப்படும் பன்னிரண்டு வீடுகள் செதுக்கப்படுள்ளது. இந்த பன்னிரண்டு வீடுகளுக்கு சரியாக ஒத்திருக்கும் வகையில், தரையில் கீழே மற்றொரு விளக்கப்படம் உள்ளது. இந்த விளக்கப்படத்தில் பன்னிரண்டு வீடுகளும் வெவ்வேறு வண்ண கட்டங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள. அந்தந்த ராசிக்கான வண்ணங்கள் அந்த விளக்கப்படத்தில் உள்ளன. ஸ்ரீஜயவீர ஆஞ்சநேய மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்யும் போது, பக்தர்கள் தங்கள் ராசி தொடர்பான வண்ண கட்டத்தில் நின்றால், அவர்களின் விருப்பம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்த பன்னிரண்டு ராசி மண்டல கட்டம் வேறு எந்த பெருமாள் கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.

Read More
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோவில்

'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்களின் அரிய தோற்றம்

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில், 22 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கொள்ளிக்காடு. இறைவன் திருநாமம் அக்னீஸ்வரர். இறைவியின் திருநாமம் பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி.

இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக இரண்டாவது அவதாரம் எடுத்து, பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அதனால் இங்கு சனி பகவான் தன்னை வழிபடுபவர்களுக்கு வெறும் நற்பலன்களை மட்டுமே வாரி வழங்குகின்றார். அவரைப் போலவே மற்ற நவக்கிரகங்களும், இத்தலத்தில் தங்களுடைய காரகப் பலன்களை அளிக்காமல் சிவ தியானத்தில் இருக்கின்றன. இந்த காரணத்தினால் இத்தலத்தில் நவக்கிரகங்கள் மாறுபட்ட அமைப்பில் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் 'ப' என்ற தமிழ் எழுத்து வடிவ அமைப்பில் காட்சி அளிக்கிறார்கள். இத்தகைய வடிவமைப்பில் நவக்கிரகங்கள் எழுந்தருளி இருப்பதை நாம் வேறு எந்த கோவிலிலும் தரிசிக்க முடியாது.

நவக்கிரகங்களின் இந்த 'ப' எழுத்து வடிவமைப்பில், சூரியன், சந்திரன், அங்காரகன் ஆகிய மூவரும் பின்புறம் இருக்கிறார்கள். சந்திர பகவானுக்கு வலது புறம் குருபகவான், சனி பகவான், புதன் பகவான் ஆகிய மூவரும் இருக்கிறார்கள். அங்காரகனுக்கு இடது புறம் சுக்கிர பகவான், ராகு பகவான், கேது பகவான் ஆகியோர் இருக்கின்றார்கள்.

Read More
தென்குடி திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தென்குடி திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில்

மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை

அம்பிகை சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் இருக்கும் அரிய வடிவமைப்பு

கிரக தோஷங்களை நீக்கும் அம்பிகை

தஞ்சாவூரிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் தென்குடி திட்டை . இறைவன் திருநாமம் வசிஸ்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.

அன்னை சுகந்த குந்தளாம்பிகை தெற்கு நோக்கி நின்ற வடிவில் வசிஷ்டேஸ்வரருக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் உள்ளார் . பரம்பொருளுக்கு நிகரானவள் சக்தி என்பதால் தான், இறைவனுக்கு நிகரான உயர்ந்த பீடத்தில் அம்பாளும் வீற்றிருக்கிறார்.மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்றும், சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும் அழைக்கிறார்கள்.

கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் குடும்பத்துடன் தனது வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், 'உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’' எனக் கூறினார். அதைக் கேட்டு சோமநாதன் வருந்தினார். சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். ஒரு பவுர்ணமி தினத்தன்று மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, 'எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு' என கண்ணீர் மல்க வேண்டினாள். அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து 'இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாய்' என ஆசி கூறி மறைந்தார். மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். வந்த எமன் மறைந்தான். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

இந்த அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே மேல் கூரையில் 12 ராசிகளுக்குரிய சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி அம்மன் சன்னதி எதிரில் 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டிருப்பதை நாம் வேறு எந்த தலத்திலும் பார்க்க முடியாது. பக்தர்கள் தங்கள் ராசிக்குரிய கட்டத்தின் கீழ் நின்று அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டால், கிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Read More
திண்டுக்கல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திண்டுக்கல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில்

தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என இரண்டு கருவறைகளை கொண்ட வித்தியாசமான முருகன் கோவில்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என இரண்டு கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் பாதாளக் கருவறை. பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது. அதற்குள், 8-க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பாதாளத்தில் (பூமிக்கு அடியில்), செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் 'பாதாள செம்பு முருகன்' என்ற பெயர் ஏற்பட்டது.

பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் மறு அவதாரமாக, திருக்கோவிலூர் சித்தர் கருதப்படுகிறார். போகர் சித்தரையும், அவருடைய சீடர் புலிப்பாணியையும் மானசீக குருவாக போற்றி பூஜித்து வந்தவர் தான் திருக்கோவிலூர் சித்தர். இவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமலிங்கம்பட்டியில் வசித்து வந்திருக்கிறார். இவர்,முருகப்பெருமானுக்கு ஒன்றரை அடி உயரத்தில் ஐந்து உலகக் கலவையான தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு சிலையைச் செய்து, இங்கு பாதாள அறையில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார்.இந்த முருகர் சிலைக்கு தினமும் அபிஷேகம் செய்து வருவது உடல் நலத்தை அதிகரிக்கும். நாளடைவில் வழிபாடின்று போன இந்த ஆலயத்தில் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரம் சமஸ்தானத்தில் மன்னராக இருந்த பாஸ்கர சேதுபதியின் வம்சாவளியை சேர்ந்த கந்தமாறன் என்ற மிராசுதாரர், மீண்டும் பூஜைகள் நடைபெற செய்தார்.

பாதாள கருவறையில், முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார். இந்த சிலைக்கு முன்பு, திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் உள்ளது.

பாதாளத்தில் உள்ள செம்பு முருகன் கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகள் இறங்கிச் செல்கின்றனர். பொதுவாக, முருகன் கோவிலுக்குச் செல்லும்போது ஏற்றமாகவும் திரும்பி வரும்போது இறக்கமாகவும் இருக்கும். இதை நிறைய முருகன் கோயில்களில் கண்டிருக்கலாம். அதேபோல், பெரும்பாலான முருகன் கோவில்கள் மலையிலேயே அமைந்திருக்கும். ஆனால், இக்கோவிலில் முருகனின் தரிசனத்திற்கு வரும்போது இறக்கமாகவும், தரிசித்த பின் திரும்பும் போது ஏற்றமாகவும் இருக்கும். இதனால் இந்தக் கோவிலுக்கு சென்று வழிபடுவதால் வாழ்க்கையில் எப்போதும் ஏற்றமே கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்குத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சென்று வந்தால் நினைத்தது கைக்கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பாதாள முருகன் கோவிலில் கருங்காலி மாலையை முருகனின் திருப்பாதங்களில் வைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். கருங்காலி மாலை அணிவதால் செல்வ வளம் கிடைக்கும், ராகு-கேது தோஷம் நீங்கும், குழந்தைப் பேறு வாய்க்கும், மன அழுத்தம் குறையும், இரத்த அழுத்தம் சீராகும்.

Read More
காஞ்சிபுரம் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

காஞ்சிபுரம் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவில்

திருமால் ஒளி வடிவில் காட்சி தந்த திவ்ய தேசம்

கார்த்திகை தீபத் திருநாளன்று பக்தர்கள் பெருமாளுக்கு விளக்குகள் ஏற்றி வழிபடும் தலம்

திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி சொரூபமாக எழுந்தருளினார். அது போல வைணவ மரபில், காஞ்சிபுரத்தில் பெருமாள் விளக்கொளி பெருமாளாக (ஒளி வடிவிலான பெருமாளாக) அவதரித்தார். அவருக்கு தீபப் பிரகாசர் என்ற பெயரும் உண்டு. தர்ப்பை வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் ஒளி வடிவில் காட்சி தந்ததால், இப் பகுதிக்கு தூப்புல் எனவும், திருத்தண்கா எனவும் பெயர்.இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தாயார் திருநாமம் மரகதவல்லி.

108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். வைணவ ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகரின் அவதாரத் தலம் இது.

இத்தலத்தில் பெருமாள் ஒளியாகக் காட்சி தந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது. படைத்தல் கடவுளான பிரம்மதேவர், தனக்கு பூலோகத்தில் கோவில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு, சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால், அந்த யாகத் திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சரஸ்வதி, பிரம்மா நடத்தும் யாகம், வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடட்டும் என சாபம் இட்டாள். பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம், தனது யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் 'விளக்கொளி பெருமாள்' என்றும் 'தீபப்பிரகாசர்' என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்.

இந்தப் புராண நிகழ்வை முன்னிட்டுத்தான், கார்த்திகை தீபத் திருநாளன்று, பக்தர்கள் திருத்தண்கா (தூப்புல்) பகுதியில் அமைந்துள்ள விளக்கொளி பெருமாள் (தீபப் பிரகாசர்) கோவிலுக்கு வருகை தருகின்றனர். அங்கு அவர்கள் பெருமாளுக்கு விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.

Read More
திருவண்ணாமலை வடக்குவீதி ஆதி காமாட்சியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவண்ணாமலை வடக்குவீதி ஆதி காமாட்சியம்மன் கோவில்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த ஆதி காமாட்சியம்மன்

காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி, அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ள வடக்கு வீதியில் அமைந்திருக்கின்றது ஆதி காமாட்சி அம்மன் கோவில். இத்தலம் அருணாசலேஸ்வரர் கோவிலுடன் இணைந்த கோவிலாகும்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த, புராதன வரலாற்று சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஸ்ரீ காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் காட்சியளிப்பது உலகில் வேறெங்கும் காண இயலாத அபூர்வமான திருக்கோலமாகும். ஸ்ரீலலிதா ஸகஸ்ர நாமத்தில் நிறைவாக கூறியுள்ளது போல, ஸ்ரீசிவா சிவசக்தி ஐக்கிய ரூபினி லலிதாம்பிகா என்ற வாக்கியப்படி, சக்திக்குள் சிவம் ஒடுங்கி, சிவ ஜோதியுள் சக்தி இரண்டறக் கலந்தது இங்குதான். ஆகையால் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய முக்கிய பீடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை மூடிய பாவம் போக்க, பார்வதி தேவி காஞ்சி மாநகரில் காமாட்சியாக அவதரித்தார். காஞ்சிபுரத்தில் பார்வதி தேவி கம்பை நதிக்கரையில் மணலில் லிங்கம் அமைத்து சிவ பூஜை செய்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படிச் செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி, லிங்கத்தை அம்பிகை தழுவிக் கட்டிக்கொண்டார். அம்பிகையின் இந்த செயலால் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியின் பாவத்தை போக்கி அருளினார். அப்பொழுது பார்வதி தேவி 'உம்மை எப்பொழுதும் பிரியாமலிருக்க உமது மேனியில் இடப்பாகம் அளிக்க வேண்டும்' என சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் 'திருவண்ணாமலை சென்று என்னை நோக்கி தவமிரு. அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்' எனக் கூறி மறைந்தார். திருவண்ணாமலைக்கு வரும் வழியில் காமாட்சி அம்மையார், தவம் செய்ய ஏதுவாக மைந்தனாகிய முருகன், தன் தாய்க்காக வாழை இலை கொண்டு பந்தலமைத்தார். சேயாறு எனப்படும் செய்யாறை உருவாக்கினார். (இன்று கூட அந்த ஊர் வாழைப்பந்தல்” என்றழைக்கப்படுகிறது) பின்னர் திருவண்ணாமலை வந்தடைந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் நுழைந்து. கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை (பவழக்குன்று) வந்தடைந்தர். கௌதம மகரிஷியின் ஆலோசனையின்படி மலைக்கு நேர்கிழக்கு திசையில் பர்ணசாலை அமைத்து தவமியற்றினார்.

அன்னையின் தவத்தை கலைக்க முயன்ற மகிஷாசூரனை எதிர்த்து சப்தமாதர்களும், அஷ்டபைரவர்களும், காளியும், துந்துமியும், அருனைநாயகியும் கடும்போர்புரிந்தனர். ஆனாலும் எருமைதலை கொண்ட மகிஷாசூரனை அழிக்க இயலவில்லை. பின்னர் மகாசக்தி துர்க்கையம்மன், மகிடன் தலையை தனது வாளால் வெட்டி வீழ்த்தி, தனது காலால் அவனது தலையை மிதித்த பின்னர் மகிடன் உயிர் பிரிந்தது. உயிர் பிரிந்து தலையற்று கிடந்த மகிஷாசூரனுடைய அறுபட்ட கழுத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கொடிய அரக்கணுடைய கண்டத்தில் ஒரு சிவலிங்கமா என ஆச்சர்யத்துடன் அதனைக் கொண்டு வந்து காமாட்சி தேவியிடம் கொடுத்தாள் துர்க்கை. தேவியாரின் திருக்கரத்திலேயே ஓட்டிக்கொண்டுவிட்டது அந்த லிங்கம். தன் கையோடு சிவலிங்கம் ஒட்டிக் கொண்டதற்கான காரணம் என்னவென்று கௌதம மகரிஷியிடம் கேட்டார் காமாட்சி தேவியார். பல காலமாக மகிஷாசூரனுடைய கண்டத்தில் சிவலிங்கம் இருந்தபடியாலும், அவன் சிவகடாட்சபதவியை அடைந்தவன் என்பதாலும் அவனை கொன்ற இந்த பாவம் நிகழ்ந்தது.

பாவம் தீர நவதீர்த்தங்களில் நீராட்சி சிவபூஜை செய்ய வேண்டு என்று விவரித்தார் கௌதமர். துர்க்கையால் உருவாக்கப்பட்ட கட்க தீர்த்தத்தில் நீராடிய பின்னர் கையில் ஒட்டியிருந்த சிவலிங்கம் விடுபட்டது. அதனை கரை மீது பிரதிஷ்டை செய்து பாபவிநாசகர் என்று பெயரிட்டு பூஜித்து வந்தார்.பின்னர் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும்நன்நாளில் மலைமேல் ஓரு பிரகாசம் உண்டாகி 'பெண்ணே இம்மலையை இடமிருந்து வலமாக சுற்றி நடந்து வா' என்று சொல்லி அக்கணமே மறைந்தது. அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்தபோது சிவபெருமான். பார்வதியை அழைத்து தனது மேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரிஸ்வரராக ஜோதி ரூபமாக காட்சியளித்தார்.

இன்று கூட கார்த்திகை தீபத்திருநாளில் காமிக, ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்நாளில் சரியாக மாலை 6-00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் எழுந்தருளிய பின்னரே மலைமீது தீபஜோதி ரூபமாக காட்சி அளிக்கின்றார். அகிலமே போற்றும் கார்த்திகை தீபப்பெருவிழா தோன்ற காரணமாகஅமைந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது, இந்த வடக்குவீதி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தான் என்று ஸ்காந்தபுராணம் மற்றும் அருணாச்சலபுராண நூல்கள் சான்றளிக்கின்றன.

இந்த அம்மனை கணவனோடு கருத்தொற்றுமை வேண்டுகிற பெண்கள், கணவனது நலம் மேம்பட விரும்பும் பெண்கள் மற்றும் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இத்தலத்திற்கு வந்து தொடர்ந்து 5 வாரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

Read More
ராமகிரி வாலீஸ்வரர் கோவில்

ராமகிரி வாலீஸ்வரர் கோவில்

வருடம் முழுவதும் நந்தி வாயில் இருந்து தண்ணீர் அருவியாய் பாயும் அதிசயம்

சென்னை - திருப்பதி சாலையில், சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி என்ற கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் வாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. காரியாற்றின் கரையில் உள்ளதால் இவ்வூர் காரிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, 'கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார்.

இக்கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்தக் குளம் உள்ளது. இந்தத் தீர்த்தம் நந்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தீர்த்தக்குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து தண்ணீர், தீர்த்தக் குளத்துக்குள் விழுந்துகொண்டே இருக்கிறது. நந்தியின் வாயிலிருந்து நீர் அருவியாய் பாய்கிறது .இந்த நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீர் வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களும் அளவு மாறாமல் அதே அளவு நீர் வெளியேறுகின்றது. இந்த நீர் மிகவும் சுவை மிகுந்ததாகவும், இனிப்புத் தன்மை உடையதாகவும் இருக்கின்றது.

Read More
தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்

தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்

அந்தரத்தில் தொங்கும் 2000 கிலோ எடையுள்ள அதிசய கல் தூண்

தர்மபுரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் கல்யாண காமாட்சி கோவில். இந்த கோயில் கோட்டை கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் மல்லிகார்ஜுனேஸ்வரர். இறைவியின் திருநாமம் கல்யாண காமாட்சி.

சுவாமி சன்னதியின் அர்த்த மண்டபத்தில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்ட இரண்டு தூண்கள் காணப்படுகின்றன. இந்த தூணின் அடியில் ஒரு காகிதத்தை விட்டால், அது எந்த தடங்கலும் இன்றி மறு பக்கம் வந்துவிடும். அதாவது, அந்த தூண் தரையைத் தொடாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தூணின் எடை 2000 கிலோ. இதனால் இத்தூண் 'தொங்கும் தூண்' என்று அழைக்கப்படுகின்றது. இது நம் தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்து சொல்வதுபோல் உள்ளது . மண்டபத்தின் விதானத்தில் அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே கால் மாறி ஆடும் நடராஜர் அருள்புரிகிறார். மதுரையை அடுத்து இந்த தலத்தில் தான் நடராஜரின் கால்மாறி ஆடும் கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அஷ்டதிக் பாலகர்களின் உருவங்கள், வெவ்வேறு கோணங்களில் திரும்பிய வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய வடிவமைப்பு மற்ற ஆலயங்களில் காண முடியாத ஒன்றாகும்.

ஸ்ரீசக்கரத்தின் மீது எழுப்பப்பட்ட அம்மன் சன்னிதி

பொதுவாக அம்மன் கோவில்களில், ஸ்ரீசக்கரமானது அம்மன் சிலைக்கு முன்பாகவோ அல்லது அம்மன் சிலைக்கு அடியிலோ பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள அம்மன் சன்னிதியோ, ஸ்ரீசக்கரத்தின் மீதே எழுப்பப்பட்டுள்ளது, ஒரு தனிச்சிறப்பாகும். இந்த ஸ்ரீசக்கரத்தின் 18 முனைகளின் அடிப்பாகத்தில் சிற்ப வடிவில் யானையின் தலை மட்டும் உள்ளது. 18 யானைகள் அம்பாளின் சன்னதியை தாங்கிகொண்டுருக்கிற மாதிரி ஒரு அற்புதமான தோற்றம். இந்த 18 யானைகளுக்கு நடுவில், சன்னதியின் வெளிசுவற்றின் அடிப்பாகத்தில் இராமாயண காவியம் சிற்பவடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கோவிலின் வடிவமைப்பும் நம் முன்னோர்களின் கலைத்திறனுக்கும் அதில் அவர்கள் அடைந்திருந்த உன்னத நிலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

Read More