
உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
விஷக்கடியை குணப்படுத்தும் விஷ ராஜா
நாகத்தை வாயில் கடித்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
காளத்தீஸ்வரர் கோவிலுக்கு வெளியில், நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத நாகராஜனின் அம்சமான விஷ ராஜா எழுந்தருளி இருக்கிறார். இவர் தனது வாயில் நாகத்தை கடித்தபடி காட்சி தருகிறார். விஷ பூச்சிகளால் கடிபட்டவர்கள் பௌர்ணமியன்று இவருக்கு பாலபிஷேகம் செய்வித்து வஸ்திரம் அணிவித்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் விஷக்கடிக்கு உள்ளானவர்கள் அதிலிருந்து குணமாகிறார்கள். இத்தலத்து விஷ ராஜாவை வழி பூஜை செய்து வழிபட்டவர்கள், எந்தவிதமான விஷக்கடிக்கும் உள்ளாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
காளிதேவியுடன் எழுந்தருளி இருக்கும் சப்த மாதர்கள்
பொதுவாக கோவில்களில் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய சப்த மாதர்கள் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் அஷ்ட மாதர்களை (எட்டு அம்பிகையர்) நாம் தரிசிக்கலாம. ஆதிசக்தியிலிருந்து ஏழு அம்சங்களாக ஏழு தேவியர் தோன்றினர் என்றும், அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றவர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவியும், சப்த மாதர்களுடன் சேர்ந்து காட்சி தருகிறாள் இவர்களது தரிசனம் விசேஷ பலன் தரக்கூடியது.

சென்னை வேளச்சேரி தண்டீசுவரர் கோவில்
எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற தலம்
திருக்கடையூருக்கு இணையாக ஆயுள் விருத்தி அளிக்கும் தலம்
சென்னை மாநகரின் ஒரு பகுதியான வேளச்சேரியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த தண்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் கருணாம்பிகை.
முதலாம் இராஜராஜசோழனின் தந்தையாகிய சுந்தரசோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது.
சோமாசுரன் என்னும் அசுரன், நான்கு வேதங்களையும் பிரம்மாவிடமிருந்து பறித்துச்சென்றான். அதனை திருமால் மீட்டு வந்தார். அசுரனிடம் தாங்கள் இருந்த தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வேண்டி தவமிருந்தன. வேதங்களின் சிவ வழிபாட்டிற்கிரங்கி காட்சி தந்த சிவபெருமான் வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருளினார்.
வேதங்கள் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால் 'வேதச்சேரி' என்றழைக்கப்பட்டு, பின்பு "வேளச்சேரி' என்று மருவியது. வேதஸ்ரேணி என்பது இத்தலத்தின் புராணப் பெயராகும்.
திருக்கடையூரில், 16 வயதே ஆயுள் பெற்றிருந்த சிவ பக்தன் மார்க்கண்டேயனின் ஆயுளை எடுக்கச் சென்ற எமதர்மனை, சிவபெருமான் காலால் எட்டி உதைத்து தண்டித்தார். எமதர்மனின் பதவியையும் பறித்தார். இழந்த பதவியைப் பெற எமதர்மன், பூலோகத்தில் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தான். அப்போது எமதர்மனுக்கு காட்சி தந்த சிவன், தண்டம் கொடுத்து பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், 'தண்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
பிரார்த்தனை
எமதர்மன் மீண்டும் தண்டம் பெற்ற திருத்தலம் என்பதால், இங்கு மக்கள் அறுபது, எண்பதாம் திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்து கொள்கிறார்கள்.
வேலை இழந்தவர்கள் நல்ல வேலை கிடைக்க தண்டீஸ்வரரை வேண்டிக் கொள்கிறார்கள். .

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்
தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு
சுழலும் தேங்காய்
தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.
இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.
இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.
இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்
இளம் கன்றாகத் தோற்றமளிக்கும் பால நந்தீசுவரர்
பால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாகும் அதிசயம்
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இத்தலத்து இறைவன் ஸ்ரீகாகஜண்ட சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்ட சித்தருக்கு பிரதோஷ காலத்தில் இறைவன் காட்சி கொடுத்ததால், இவ்வாலயம் பிரதோஷ ஆலயமாக அமையப் பெற்றுள்ளது.
இக்கோவிலில் அமைந்துள்ள நந்தியானவர், மிகவும் இளைய கன்றுக்குட்டியின் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், முகமோ அல்லது தலையோ ஏதேனும் ஒரு பக்கமாக சாய்ந்தது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இங்குள்ள நந்தியானது, இளங்கன்றாக இருப்பதால் இவருக்கு பால நந்தி என்று பெயர். இவர் பால நந்தியாக இருப்பதால், பிரதோஷ காலங்களில் கொம்புகள் இடையூறின்றி நேரடியாக நாம் சொர்ணபுரீசுவரரை தரிசிக்க முடியும்.
ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குளி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கரப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவது ஒரு அற்புதமான காட்சியாகும்.
இங்குள்ள பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால், நீலநிறமாக மாறிக் காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை:
விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், ராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம், கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று ராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நவநீத கிருஷ்ணன் கோவில்
யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி இருக்கும் அபூர்வ காட்சி
சென்னை, நங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் நவநீதகிருஷ்ணன் கோயில். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
நங்கையாகிய லட்சுமி தோன்றிய இந்த இடம், நங்கை நல்லூராகி இன்று நங்கநல்லூராய் திரிந்து உள்ளது.
இத்தலம், பரசுராமரின் தந்தை ஜமதக்னி முனிவர் மகா யக்ஞம் செய்த இடம். பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வந்த நரசிம்மரைத் தரிசிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக யாகம் நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிரமாகத் தோன்றினார் நரசிம்மர். அவரை சாந்தமாக இருக்கும்படியும் தான் பெற்ற தரிசனம் மற்றவர்களும் பெற வேண்டும் என்றும் வேண்டினார். அதனால் லட்சுமியை மடியில் ஏந்தி புன்னகைத்த திருக்கோலத்துடன் இங்கு எழுந்தருளினார்.
கருவறையில் மூலவர் லட்சுமி நரசிம்மர், தன் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் வலக்கரம் அபய முத்திரையுடனும், இடது கரத்தால் மடியில் உள்ள லட்சுமியை அணைத்தபடியும் காட்சி தருகிறார். வடக்குபுற சந்நிதியில் நர்த்தன கிருஷ்ணர் ஆடியபடி அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் சக்கரத்தாழ்வார் தனது 16 கரங்களில் பல்வேறு ஆயுதங்கள் ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் மேல் அமர்ந்தபடி காட்சி தருவது தனி சிறப்பாகும்.
பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் பிரார்த்தனை சக்கரம்
சக்கரத்தாழ்வார் சன்னதியின் எதிரில் ஒரு சிறு மேடையின் மேல் அமைந்திருக்கிறது பிரார்த்தனை சக்கரம். பிரயோக நிலையில் ஏவப்படுவது போல் காட்சி தரும் இந்த பிரார்த்தனை சக்கரம், இக்கோவிலில் நடந்த அகழ்வாய்வின்போது கிடைத்த பெருமாளின் சிலையில் இருந்தது. இந்த பிரார்த்தனை சக்கரம், இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். பக்தர்கள் பிரார்த்தனை சக்கரத்தை தொட்டு கண்களை மூடி தங்களின் பிரார்த்தனைகளைச் சொல்லிவிடுகிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள் நெய் தீபமிட்டு, நாற்பத்து எட்டு முறை வலம் வந்து ஸ்ரீ சுதர்சனரை வழிபட்டால் இடையூறுகள் மறையும், கவலைகள் நீங்கும் என்பது பலரின் அனுபவமாக உள்ளது.

மதுரை பழங்காநத்தம் காசி விசுவநாதர் கோவில்
சிவபெருமானின் தோற்றத்தில் காட்சியளிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பொதுவாக சிவாலயங்களில், இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில், தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் நான்கு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி, சிவபெருமானின் கோலத்தில் காட்சி தருகிறார். தெற்கு பார்த்து அருள் பாலிக்கும் இந்த சிவதட்சிணாமூர்த்தி, புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபய முத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல் கையில் நாகம், இடது மேல் கையில் அக்னி என சிவபெருமானின் கோலத்தில், தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவர் சிவ தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

திருக்கோட்டூர் கொழுந்துநாதர் கோவில்
சுவாமி, அம்பாள் எதிர் எதிரே அமைந்திருக்கும் அபூர்வ வடிவமைப்பு
மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கோட்டூர். இறைவன் திருநாமம் கொழுந்துநாதர். இறைவியின் திருநாமம் தேனாம்பிகை. இந்திரன் பூஜித்ததால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயர் உண்டு. இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது. கோடு என்றால் யானை. அதனால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.
மூலவர் கொழுந்துநாதர் மேற்கு திசை நோக்கி, பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை தேனாம்பிகை கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். இவ்வாறு சுவாமியும் அம்பாளும் எதிர் எதிர் திசையில் காட்சியளிப்பது ஒரு சில தலங்களில் மட்டுமே உள்ளதால், இந்த வடிவமைப்பு இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
பாலாபிஷேகத்தின் போது சிவலிங்கத் திருமேனியில், அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரியும் அரிய காட்சி
மாசி பௌர்ணமி அன்று இத்தலத்து இறைவனுக்கு பாலாபிஷேகம் செய்யும் போது சிவலிங்கத் திருமேனியில் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தெரிவது இத்தலத்தில் மட்டுமே நாம் காணக்கூடிய அரிய காட்சி ஆகும்.
பிரார்த்தனை
இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்
சின்னப் பழனி என்று போற்றப்படும் முருகன் தலம்
முருகப்பெருமானின் விசேஷமான திருக்கோலம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள வையப்பமலை ன்னும் ஊரில், மலை மீது அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோவில்.
கருவறையில் இரண்டு கரத்தினராக , இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில், இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று. குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன.
இத்தலத்திற்கு முற்காலத்தில் வைகை பொன்மலை என்று பெயர். அதன் பின்னணியில் பழனி முருகன் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று உள்ளது.
இந்த மலைக்கு அருகில் ‘அலவாய்மலை’ என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது. இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே, சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட, அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.
பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி, சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார். முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்ற வடிவத்தில், அவர்களிடம் சீடனாக சேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.
அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, ‘வை பொன்னை’, ‘வை பொன்னை’ எனக் கூவிக்கொண்டே துரத்தினர். ‘நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல், கல் மலையாக போகக் கடவது’ என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்த பொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியது.
சித்தர் மலையில் இருந்து முருகப்பெருமான் பொன்மலையை தூக்கிச் சென்ற போது ஒரு சிறு பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடம் தற்போது பொன்மலை என்று அழைக்கப்படுகின்றது.
முருகப்பெருமான் தற்போது உள்ள பொன்மலைக்கு வந்ததும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டு கொண்டு,’வைக,பொன் மலையை’ என்று வேண்டினார். அதற்குச் இசைந்த முருகன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலை மீது காட்சி அளித்து, உபதேசம் செய்து அருளினார். அதுமுதல், வைகைப்பொன்மலை என்றும், பேச்சு வழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
பழனி மூலவர் பீடத்தில், மூலவர் தண்டாயுதபாணி இல்லாததைக் கண்ட போகர், தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.
அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும், வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணியான முருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள். இதனால் தான் இத்தலம் சின்னபழனி என்று போற்றப்படுகின்றது.

ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில்
பார்ப்பவர்களை வியக்க வைக்கும் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் விக்கிரகம்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருக்கருகாவூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர்.
உற்சவர், காளிங்கன் மீது நர்த்தனமாடும் கோலத்தில் சேவை சாதிக்கிறார். .ஐம்பொன்னால் ஆன இந்த உற்சவமூர்த்தி, கோவிலின் பின்புறமுள்ள காளிங்கன் மடு என்ற குளத்தில் கண்டெடுக்கப்பட்டு, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்.
இத்தலத்தில் தேவலோகப் பசுவான காமதேனுவின் குழந்தைகளான நந்தினி, பட்டி என்கிற பசுக்களுக்கு, ஸ்ரீகிருஷ்ண பகவான் காளிங்க நர்த்தனத்தை மீண்டும் ஆடிக் காண்பித்தார். இந்த லீலையை ஸ்ரீ நாரத முனிவர் கண்ணாரக் கண்டுள்ளார். ஸ்ரீநாரதர் பிரார்த்தித்துக் கொண்டதற்கு இணங்கி, இந்த தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கெல்லாம் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
உற்சவர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலை காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த விக்கிரகத்தின் உயரம் சுமார் 30 அங்குலம். காளிங்கனின் தலை மீது கிருஷ்ணன் நடனமாடும் கோலத்தில் அமைந்துள்ளது. இவ் விக்கிரகத்தில், கிருஷ்ணரின் இடது கால் காளிங்கனின் தலையைத் தொடவில்லை. கிருஷ்ணரின் இடது பாதத்திற்கும், காளிங்கனின் சிரசுக்கும் நூல் விட்டு எடுக்கும் அளவு இடைவெளி உள்ளது. அவரது வலது கால் தூக்கியபடி, நர்த்தனக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணரின் இடது கை கட்டை விரல் மட்டுமே தொட்டு இருக்கும்படியாக, காளிங்கனின் வாலை பிடித்தபடி காட்சி தருகிறார். இது இரண்டு உருவங்களுக்கிடையில் உள்ள ஒரே இணைப்பாகும், மற்ற நான்கு விரல்கள் பாம்பின் வாலைத் தொடவில்லை. மேலும் கட்டைவிரல் -பாம்பின் வாலுக்கும் இடையே உள்ள இணைப்பானது மட்டுமே, முழு சிலைக்கும், சமநிலையை வழங்குகிறது (இந்த சிலையானது இரண்டு பேர் சேர்ந்தால் தான் நகர்த்தக் கூடிய எடை உள்ளது) . காளிங்கத்துடனான போரின் விளைவாக கிருஷ்ணரின் காலில் வடுக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.
விக்கிரகத்தின் சிறப்பை உணர்த்த மத்திய அரசு வெளியிட்ட தபால் தலை
இந்த விக்கிரகத்தில், பாம்பின் வாலிலும் பிடிமானமில்லை. கால் பாதத்திலும், பாம்பின் தலையிலும் பிடிமானம் இல்லை. இந்த விக்கிரகத்தின் தனிச்சிறப்பினை உணர்த்த, மத்திய அரசாங்கம் 1982-ம் ஆண்டில் மூன்று ருபாய் மதிப்புள்ள தபால் தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது..
தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர்
கிருஷ்ணரைப் போற்றி பல நூறு பாடல்கள் இயற்றிய தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடசுப்பையர். (1700 முதல் 1765) வாழ்ந்த தல்ம் இது. ‘அலைபாயுதே கண்ணா', 'தாயே யசோதா உந்தன் ஆயர் குலத் துதித்த' போன்ற, அவர் இயற்றிய பாடல்கள் இன்றளவும் மிகவும் பிரசித்தம். இத்தலத்து கிருஷ்ணனே, வேங்கடகவிக்கு இசையைப் பயிற்றுவித்ததாகச் சொல்வர். இதற்கு ஆதாரமாக வேங்கடகவியின், ஆபோகி ராகத்தில் அமைந்த 'குரு பாதாரவிந்தம் கோமளமு' எனும் பாடலைச் சொல்கிறார்கள். அதில் அவர் சொல்லும் கருத்து: 'நான் எந்த புராணங்களையோ, வரலாறுகளையோ படித்ததில்லை; படித்ததாக பாசாங்கும் செய்யவும் இல்லை. எனக்குத் தெரிந்த அனைத்துமே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்து, எனக்கு அளித்த பிச்சை' என்கிறார்.
ஸ்ரீநாரத் முனிவரின் மறு அவதாரமாக ஸ்ரீவேங்கடகவி கருதப்படுகிறார். இவருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
பிரார்த்தனை
ரோகினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ராகு, கேது, சர்ப்ப தோஷம் நீங்குவதற்கான பரிகார தலம். இசைக்கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் தங்கள் கலைகளில் அபிவிருத்தி பெற்று பிரகாசிக்க இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
திருவிழா
ஸ்ரீகிருஷ்ணரின் ஜயந்தித் திருவிழா இத்தலத்தில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சுமார் 800 லிட்டருக்கும் மேல் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாலபிஷேகம் அன்று நடைபெறும்.

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்
கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழா
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம்
தஞ்சையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரகூர் என்னும் ஊரில் இருக்கின்றது வெங்கடேச பெருமாள் கோவில். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது.
மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக் கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார்.
ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர்(1650-1745). இசையிலும், நாட்டியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். அவருடைய வயிற்று வலியை இத்தலத்து பெருமாள் தான் குணப்படுத்தினார். வயிற்று வலி குணமான பின்னர் நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கி மகாபாரதத்தில் உள்ள சாரத்தை உள்ளடக்கி கிருஷ்ணா லீலா தரங்கிணி என்ற காவியத்தை வடமொழியில் படைத்தார். நாராயணர் வரகூரில் தங்கி தான் இயற்றிய பாடல்களை பாடிய பொழுது திரைக்கு பின் பெருமாள் நடனமாடியதாகவும் ,சலங்கை சத்தம் கேட்டதாகவும், அனுமார் தாளம் தட்டி அதை ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் வரகூர் ஆஞ்சநேயருக்கு தாளம் தட்டி ஆஞ்சநேயர் என்று பெயர். நாராயண தீர்த்தர், தனது இறுதி காலம் வரை ஸ்ரீவேங்கடேசப் பெருமாளை பூஜித்து, பஜனை வழி முறைகளை தோற்றுவித்து, தரங்கிணி பாடல்களை பாடி, 'உறியடி' என்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழாவையும் தோற்றுவித்தார்.
நாராயண தீர்த்தருக்கு சுவாமி கிருஷ்ணராகக் காட்சி தந்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகி.றது. கோவிலின் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை உறியடி திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர். ஆனால் இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது, லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள். வரகூருக்கே பெருமை தரும் உறியடித் திருவிழாவில் 'ராஜாங்க சேவை' சிறப்பு அலங்காரம் கண் கொள்ளாக் காட்சியாகும். அன்றுதான் உறியடி ஆரோகணமும் மேற்கொள்ளப்படுகிறது.. அடுத்த நாள் ஸ்ரீவேணுகோபால சேவை, அதற்கடுத்த நாள் ஸ்ரீகாளிங்க நர்த்தன சேவை. மறுநாள் உறியடிக்கும் ஸ்ரீகிருஷ்ணர் சேவை, தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஸ்ரீபார்த்தசாரதி சேவை, ஸ்ரீசயன ரங்கநாதப் பெருமாள் சேவை, ஸ்ரீயசோதா கிருஷ்ணர் சேவை என்று கோலாகலமாக விழா வெகு சிறப்பாக நடந்தேறும்.
கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பர். சுவாமிக்கு முறுக்கு சீடை தட்டை பழம் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யமாகப் படைப்பர். மறுநாள் காலையில் சுவாமி கடுங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவில் அவர் வெண்ணெய்க் குடத்துடன், தவழும் கண்ணனாக கோயிலுக்குத் திரும்புவார். இவ்வேளையில் பக்தர்கள் அவரை பின்தொடர்ந்து விதிகளில் அங்கபிரதட்சணம் வருவர். அப்போது, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் ‘உறியடியோ கோவிந்தோ’ என்று கூச்சலிடுவர். அதாவது, கண்ணனின் அழகைக் காண கொட்டகையில் அடைக்கப்பட்ட பசு, கன்றுகளை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர. இவ்வேளையில் முறுக்கு, தட்டை, சீடைகள் வைத்த மண்பானையுடன் உள்ள மூங்கில் கூடை கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தில் உறியடி உற்சவம் நடக்கும். அந்தரத்தில் ஊசலாடிய உறியை பிடித்து அதன் உள்ளே இருக்கும் பிரசாதங்களை எடுப்பார்கள். பின் சுவாமி வழுக்கு மரம் உள்ள இடத்திற்குச் செல்வார். வழக்கு மரத்தில் சூழ்ந்து நின்ற மக்கள் வீசும் தண்ணீரை பொருட்படுத்தாமல் ஏறுவதற்கு இளைஞர்கள் பலர் முயற்சி செய்வார்கள். வழுக்கு மரத்தின் மேல் வேஷ்டிகளை சுற்றி கட்டி அதன் மீது காலை வைத்து மேலே ஏறி உச்சியில் கட்டப்பட்டுள்ள பிரசாதங்களை எடுத்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். வழுக்கு மரம் ஏறும் வைபவம் முடிந்ததும் சுவாமி கோயிலுக்குத் திரும்புவார். மறுநாள் கிருஷ்ணர் ருக்மிணி திருமணம் நடக்கும்.

குருவாயூர் குருவாயூரப்பன் கோவில்
சிறுபாலகனுக்காக, தயிர் சாதமும், வடுமாங்காயும் உண்ட கிருஷ்ணன்
கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது../ இத்தலத்து கிருஷ்ணன் பக்தர்களுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சிகள் ஏராளம். ஒரு சிறுபாலகனுக்காக, கிருஷ்ணன் தயிர் சாதமும், வடுமாங்காயும் உண்ட நிகழ்ச்சியைத்தான் இப்பதிவில் நாம் காணலாம்.
முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி,அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.
பாலகனும் அரிசியை சமைத்து குருவாயூரப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், 'கண்ணா! சாப்பிடு.' என்று கூறினான். கண்ணன் அசையவில்லை. உடனே அவன், றும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான். தயிரை சாதத்தில் கலக்கி, வடுமாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை. 'சாப்பிடு கண்ணா!' என்று கெஞ்சினான். தயிர் சாதம் அப்படியே இருந்தது. 'என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு' என்று சொல்லிக் கெஞ்சி அழுதான். குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான். அன்னத்தை உண்டான். குழந்தையும் சந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் (கோவில் பொறுப்பாளர்) கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. பிஷாரடி 'சாதம் எங்கே?' என்று கேட்டார். குழந்தையும், ‘கண்ணன் சாப்பிட்டு விட்டான்’ என்று சொன்னான்.
நம்பூதிரி வந்ததும், பிஷாரடி, 'நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்' என்று சொன்னார். நம்பூதிரி, 'நைவேத்தியத்தை என்ன செய்தாய்?' என்றுகேட்டார். மறுபடியும் குழந்தை, 'கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்' என்று சொன்னான். அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள். நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், 'தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல், கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டு விட்டான் என்று பொய் சொல்கிறாயா?' என்று அடித்தார்.
குழந்தை இடத்தை விட்டு நகரவில்லை. குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை. நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, 'நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்' என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர். நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, 'என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை! என் மகன் பாக்யசாலி!' என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.

பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்
மூலவர் விநாயகருடன், சிவபெருமானும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ராஜகணபதி விநாயகர் கோவில். இந்த கோவிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். இப்படி மூலவர் கணபதிக்கு இரு புறமும் சிவபெருமானும், கிருஷ்ணரும் உடன் எழுந்தருளி இருக்கும் கோலத்தை நாம் எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இத்தலத்து சிவபெருமான் திருநாமம் நாகலிங்கேசுவரர். கிருஷ்ணரின் திருநாமம் சந்தான கோபாலகிருஷ்ணன்.
இந்த ராஜ கணபதிக்கு அபிஷேகம் செய்து அவரை ஏழு அல்லது ஒன்பது முறை வலம் வந்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, இவருக்கு மஞ்சள் காப்பு செய்வித்தும், தேங்காய் மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்
சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி
திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருப்புகலூர். இறைவன் திருநாமம் அக்னிபுரீஸ்வரர், கோணபிரான். இறைவியின் திருநாமம் கருந்தார் குழலி, சூளிகாம்பாள்.
பொதுவாக சிவாலயங்களில் இறைவனின் கருவறையை சுற்றி வரும்போது, கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நிதியில் இருக்கும் சண்டிகேசுவரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருள்கள், சண்டிகேசுவரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. "சிவன் சொத்து குலநாசம்' என்பர். அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நிதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் சண்டிகேசுவரர் தனது மனைவி பவித்ரையுடன் எழுந்தருளி இருக்கிறார். இது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும்.

நாகந்தூர் பட்டாபிராமர் கோவில்
ராமர் தங்கிய ஊர்களில், அவர் மிகவும் விரும்பிய இடம்
இராமர், லட்சுமணன் வில்லில் மணி கட்டியிருக்கும் அரிய காட்சி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி ரயில் நிலையத்தில் இருந்து 7 கி. மீ., தூரத்தில், நாகந்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பட்டாபிராமர் கோவில் .இராமர் ராவண வதத்தை முடித்துக் கொண்டு சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்புகையில் பல இடங்களில் தங்கி பயணித்தார். அப்படி அவர்கள் தங்கிய ஊர்களில் இத்தலமும் ஒன்று. இங்கு தங்கி இருந்தபோது, இத்தலத்தின் இயற்கை அழகில் ராமர் மிகவும் மனம் லயித்து போனார். .சீதா தேவியிடம், தங்கிய இடங்களிலே 'நான் உகந்த ஊர்’ இது என்றார். ராமர் குறிப்பிட்டதே பின்னாளில் .நாகந்தூர் என மாறியது. மேலும் இக்கோவில் கருவறையில் ராமர் அயோத்தியில் பட்டாபிஷேகத்தின் போது எந்த வகையில் காட்சி தந்தாரோ, அதே நிலையில் இங்கும் காட்சி தருகிறார். மேலும், வேறெங்கும் இல்லாதவாறு இராமர், லட்சுமணன் வில்லில் மணி வடிவமைக்கப்பட்டுள்ளது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.
பிரார்த்தனை
இக்கோவிலின் முக்கிய சிறப்பாக இருப்பது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபட்டால், ஓரிரு வாரங்களிலேயே அவர்களது கிரக தோஷம் விலகுகிறது. பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, வியாபாரத்தில் நஷ்டம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டோரும், இக்கோவிலில் வழிபட்டால் முன்னேற்றம் காணலாம்.

நெடியமலை செங்கல்வராய சுவாமி கோவில்
திருத்தணிகை செல்வதற்கு முன்பு வணங்க வேண்டிய திருப்புகழ் தலம்
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியிலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள நெடியம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது செங்கல்வராய சுவாமி கோவில். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. யானை படுத்துக் கொண்டிருப்பது போல் இந்த மலை உள்ளதால், யானை மலை, கஜகிரி என்ற பெயர்களும், நெடியமலைக்கு உள்ளன. .அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது..
முருகனை இத்தலத்தில், இந்திரன் 'செங்கல்வம்' என்னும் நீலோத்பல மலரால் வழிபட்டமையால், முருகன் 'செங்கல்வராய சுவாமி' என்று போற்றப்படுகிறார். இங்கே முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு இருபுறமும் தேவிமார் சூழ, கடிஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
முருகப்பெருமான் வேடர்கள் அறியாமல் வள்ளியைக் கவர்ந்து வர, வேடர்கள் அவருடன் போருக்கு வர, முருகன் போர் புரிந்து சினம் அடங்காமல் நின்ற இடம் தான் இத்தலம். அவரது சினத்திற்கு இம்மலை தாங்காமல் ஆடவே, அருகிலுள்ள தணிகைமலையில் சென்று கோபம் தணிந்தாராம்.. முருகப்பெருமான் திருத்தணிக்கு செல்வதற்கு முன்பு சில காலம் இங்கு தங்கியிருந்ததால், பக்தர்கள் முதலில் செங்கல்வராய சுவாமியை வணங்கிவிட்டு பின்னர் திருத்தணிக்கு செல்லலாம்.
பிரார்த்தனை
கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மணிக்குடி பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்
புற்றுநோய்க்கு மருந்தாகும் அபிஷேகப் பால்
கும்பகோணம் அணைக்கரை சாலையில் அமைந்துள்ள திருப்பனந்தாள் என்னும் தேவாரத் தலத்திலிருந்து, தென்கிழக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மணிக்குடி கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகன் நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் இது.
ஒரு சமயம் சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜப் பெருமானுக்கும், காளி தேவிக்கும் நடனப் போட்டி ஏற்பட்டது. நடராஜப் பெருமான் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, அவரது கால் சிலம்பிலிருந்து ஒரு மரகதப் பச்சை மணி தெறித்து ஓடியது. அந்த மரகத பச்சை மணி விழுந்த இடம் தான் மணிக்குடி. விழுந்த மரகதப்பச்சை மணி சுயம்பு லிங்கமாக மாறியது. அந்த சுயம்பு லிங்கத் திருமேனியின் திருநாமம் தான் பஞ்சவர்ணேஸ்வரர். தான் சுயம்புவாக உருவாகி இருப்பதை சிவபெருமான் தேவர்களுக்கு அசரீரி மூலம் உணர்த்தினார். மேலும் அவர்களுக்கு ஐந்து வண்ணங்களோடு காட்சி தந்தார். இத்தலத்தில் விஷ்ணு ஏற்படுத்திய விஷ்ணு தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பஞ்சவர்ணேஸ்வரருக்கு காலை, மாலை இரு வேளையும் செய்யப்படும் பசும்பால் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படி அபிஷேகம் செய்து, அந்தப் பாலை சிறிது பிரசாதமாக உட்கொண்டால், கேன்சர் என்று சொல்லப்படும் புற்றுநோயின் பாதிப்பு வெகுவாக குறையும். அதுமட்டுமல்ல, எத்தகைய தீராத நோயால் அவதிப்படுபவர்களும் மணிக்குடி கிராமத்திற்கு வந்து இத்தல இறைவனுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து, அதை பிரசாதமாக பருகினால், அவர்களது நோயும் குணமாகிவிடும். இப்படி அபிஷேகப் பால், அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இதனால் ஏராளமான பக்தர்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இங்கு வந்து தங்கி, அபிஷேக பாலை பருகி தங்கள் புற்று நோயையும் மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட தீராத நோய்களையும், குணமாக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில்
மூலவராக, சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்து காட்சி தரும் ராஜதுர்க்கை அம்மன்
திருவாரூர் தியாகராஜர் கோவில் அருகில், திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது ராஜதுர்க்கை அம்மன் கோவில். பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மனை வடக்கு பிராகார கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் மூலவராக சிம்ம வாகனத்தின் மேல் அமர்ந்த கோலத்தில், நான்கு கரங்களில், சங்கு சக்கரம், கத்தி, சூலம் ஆகியவற்றை ஏந்தி, தலையில் சந்திர கலையை தரித்தவண்ணம் சாந்த சொரூபிணியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாகவும் இச்சை, கிரியை ஞானம் ஆகிய மூன்று சக்திகள் ஒருங்கே அமையப் பெற்ற சக்தியாகவும், வேதம் ஆகமம், புராணம் ஆகியவற்றில் வெற்றி என்ற நாமத்திற்கு பொருளுடையவளாகவும் விளங்குபவள் ஜெய துர்க்கா. இப்படி எங்கும், எதிலும், எந்நிலையிலும் வெற்றியைத் தரக்கூடிய ஜெயதுர்க்கா தேவியானவள், ராஜதுர்க்கை என்ற திருநாமத்துடன் இங்கு அருள்பாலிக்கிறாள்.
ராமபிரான் இலங்கைக்கு ராவணனை வதம் செய்யப் புறப்படும் முன் இவ்வன்னையை வழிபட்டுச் சென்று, அவனை வெற்றி கொண்டதாக மகாகவி காளிதாசர் ரகு வம்ச காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரார்த்தனை
பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, மகம் நட்சத்திரக்காரர்கள் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் அனைவருக்கும் யோகாதிபதியாக விளங்குகிறாள் இந்த ராஜ துர்க்கை. அனைத்து யோகங்களும் விரைவிலேயே கிடைக்க, தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடை நீங்க, இங்குள்ள துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர்.

உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
மனைவியருடன் ராகு, கேது அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தரும் அபூர்வ அமைப்பு
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
கோவில்களில் ராகு, கேது இருவரும் நவக்கிரக மண்டபத்தில்தான் காட்சி தருவர். திருநாகேஸ்வரத்தில் ராகுவும், கீழப்பெரும்பள்ளத்தில் கேதுவும் தனிச்சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இத்தலத்தில் அடுத்தடுத்த சன்னதிகளில் ராகுவும், கேதுவும் தம் மனைவியருடன் அருளுகின்றனர். இவர்கள் இருவரும் சுயரூபத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு. ஆவுடையாருடன் கூடிய சதுர பீடத்தில் ராகு, சிம்ஹிகையுடனும், கேது, சித்ரலேகாவுடனும் காட்சி தருகின்றனர்.
இவர்களது சன்னதிக்கு தனித்தனி துவாரபாலகர்களும் இருக்கின்றனர். ஏழு நாக தேவதைகளும் இவரது சன்னதியில் சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுவாதி நட்சத்திர நாட்களில் இவர்களுக்கு விசேஷ பாலபிஷேகம் செய்கின்றனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 - 6 மணி) இவர்களது சன்னதியில், "சர்ப்பதோஷ பரிகார ஹோமம்' நடக்கிறது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு, ராகு, கேதுவை தரிசித்தால் தோஷம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவர்களது சன்னதியில் ஹோமத்துடன் பரிகார பூஜையும், திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

நாச்சியார் கோயில் திருநறையூர் நம்பி கோவில்
தாயார் சொல் கேட்டு நடக்கும் பெருமாள்
கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கும் தாயார்
கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் உள்ள திவ்ய தேசம் நாச்சியார் கோயில். பெருமாளின் திருநாமம் சீனிவாசப் பெருமாள். தாயாரின் திருநாமம் வஞ்சுளாதேவி. இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் இக்கோவிலில் மிகவும் விசேஷமானது ஆகும். இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள்.
தாயார், இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, கோயில் நிர்வாகம் அனைத்தும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது.
கோயில் நிர்வாகம் அனைத்தும் தாயாரிடம்தான் என்பதை உணர்த்தும் வகையில் தாயாருடைய இடுப்பில் சாவிக்கொத்து தொங்குகிறது. இதன் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது.
மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இத்தலத்தில் உள்ள வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள்.
சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு வஞ்சுளாதேவி எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று வஞ்சுளாதேவியை தேடினர். மகாவிஷ்ணுவுடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைப் பற்றிக் கூறினார். உடனே மகாவிஷ்ணு அங்கு சென்று வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், தாங்கள் என் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும், என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.

திருமெய்ஞ்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்
தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் இருக்கும் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலுக்கு கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருக்கடவூர் மயானம். பிரம்மாவை அழித்து ஞானம் உபதேசித்த தலமென்பதால், கடவூர்மயானம் என்றும். திருமெய்ஞானம் என்றும் இத்தலத்திற்கு பெயர்கள் உண்டு. இறைவன் திருநாமம் பிரம்மபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் மலர்க்குழல் மின்னம்மை. திருக்கடையூரில் ஆயுஷ்ய ஹோமம், சதாபிஷேகம் செய்பவர்கள் இங்குள்ள சிவனுக்கும் பூஜை செய்து ஹோமத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
பொதுவாக சிவாலயங்களில் கருவறை சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழே, நான்கு சீடர்களுடன் உபதேசம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியுடன், ஆறு சீடர்களுடன் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.. மேலும் கல்லால மரமும் இல்லை. கல்வியில் சிறந்து விளங்க இத்தல சிவனையும் இங்குள்ள தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறப்பு.