கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில்

கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில்

குதிரை முகம் கொண்ட அபூர்வ நந்தி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி- சேத்துபட்டு வழியில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கெங்காபுரம் கெங்காதீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பங்கஜவல்லி. துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.

இத்தலத்து நந்தி குதிரை முகத்துடன் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது. ஒரு சமயம் இந்திரன் தன்னுடைய சாப விமோசனத்திற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். ஆனால் இறைவன் அவனுக்கு காட்சி தரவில்லை. சிவபெருமான் அசரீரி மூலமாக இந்திரனை கெங்காபுரம், விருபாட்சிபுரம் , கோனைப்புதூர் முதலிய தலங்களில் வழிபட்டு, பின்னர் இத்தலத்தில் பூஜை செய்தால் காட்சி கிடைக்கும் என்று அருளினார். இந்திரனும், அவ்வாறே செய்தான்.

சிவபெருமானும் இந்திரனுக்கு காட்சி தருவதற்காக ரிஷபத்தின் மேல் ஏறிக்கொண்டு கிளம்பினார். கிளம்புவதற்கு நேரம் ஆகிவிட்டதால், இந்த ரிஷபம் குறிப்பிட்ட நேரத்திற்குள் நம்மை அழைத்து செல்லுமா என்றும், அதே நேரம் இதுவே ஒரு குதிரையாக இருந்தால் நாம் விரைவில் இந்திரனுக்கு காட்சி தரலாமே என்றும் எண்ணினார். இது ரிஷபத்திற்கு தெரிந்து ஈசன் நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிட்டாரே என்று எண்ணி ஈசனின் எண்ணப்படி குதிரை முகத்துடன் வடிவெடுத்து, சிவபெருமானை குறிப்பிட்ட காலத்திற்குள் அழைத்து சென்று அவரது எண்ணத்தை பூர்த்தி செய்தது. எனவே தான் இத்தலத்தில் குதிரை வடிவுடன் கூடிய நந்தி அமைந்துள்ளது. இப்படி நந்தி குதிரை முகத்துடன் இருப்பது ஒரு அரிதான காட்சியாகும்.

துலாபாரம் காணிக்கை செலுத்தப்படும் ஒரே சிவாலயம்

பொதுவாக சிவன் கோயில்களில் துலாபாரம் காணிக்கை செலுத்தும் வழக்கம் கிடையாது ஆனால் இத்தலத்தில் துலாபார காணிக்கை செலுத்தும் வழக்கம் ஒரு தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

தலத்து இறைவன் சிறந்த வரப்பிரசாதி. இத்தலத்தில் வழிபட்டு திருமணத்தடை நீங்க பெற்றவர்களும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களும் அதிகம். இத்தலத்தில் குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ சந்தான கோபால யாகமும் , திருமண தடை நீங்க ஸ்ரீ ஸ்வயம்வர கலா பார்வதி யாகமும் நடைபெறுகின்றது.

Read More
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில்

இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிக்கும் அபூர்வ மூல கருடன்

காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான கோவில், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில். தாயார் திருநாமம் அலர்மேல் மங்கை தாயார்.. இங்கு வழிபடுதல், திருமலையில் வழிபடுவதற்கு சமம் என்பதால் இத்தலம் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கத்தில் இராமாநுஜர் ஆராதித்த பெருமாள் விக்கிரம், திருப்பதியிலிருந்து கொண்டு வந்த ஸ்ரீசடாரி, திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி ஆலபத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அக்னி ஆகிய மூன்றும் இக்கோயிலில் நிறுவப்பட்டுள்ளன.

அனைத்து வைணவ ஆலயங்களிலும் வெளிப் பிரகார மதில் சுவர்களின் மூலையில் சிறகுகளை விரித்த நிலையில் அமர்ந்த கோலக் கருடனின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோவிலைக் கருட பகவான் காவல் காப்பதாக ஐதீகம். இத்தலத்தின் ஈசானிய மூலையில் எழுந்தருளியுள்ள கருடன் விசேஷமாக ஆராதிக்கப்படுகின்றார். திருமதில் சுவரில் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால் இவர் 'மூலைக் கருடன், மூல கருடன், மதில் கருடன்' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். இவர் கோபுரத்துடன் கூடிய தனி சந்நிதியில், இரு புறமும் சிங்கங்கள் இருக்க காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி மாத மஹா சுவாதி அதி விசேஷம்.

மூல கருடனுக்கு சுவர் மீது சிதறு தேங்காய்களை உடைக்கும் வித்தியாசமான நடைமுறை

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை தரையில் உடைப்பதில்லை. வானில் வீசி உடைப்பது போலச் சுவர் மீது உயர வீசி உடைக்கின்றார். இவரைத் தரிசித்து வழிபட்டால், ஏவல் பில்லி சூனியம், மன வியாதி அகலும். சத்ருபயம் நீங்கி வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். பெரும்பாலான எல்லாக்‌ காணிக்கைகளும்‌ இந்த மூலக்‌ கருடனுக்கே செலுத்தப்படுகிறது.

Read More
சூலக்கல் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சூலக்கல் மாரியம்மன் கோவில்

கண்நோயை தீர்க்கும் மாரியம்மனின் அபிஷேக தீர்த்தம்

பொள்ளாச்சியில் இருந்து 11கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது. கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோவில்களில், சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று.

கருவறையில் மாரியம்மன் அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும், இடது கைகளில் சூலமும், கபாலமும் ஏந்தி அருள்பாலிக்கிறார். சூலக்கல் மாரியம்மன் வடக்கு நோக்கி அருள் புரிவதால், 'வடக்கு வாயிற் செல்வி' எனவும் அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை

சூலக்கல் மாரியம்மன், அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர். குழந்தைப்பேறு, இல்லாதவர்கள் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறது.

Read More
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்

நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, உயிரோட்டமுள்ள அபூர்வ சிற்பங்கள்

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.

தாயார் சன்னதியின் முன் உள்ள மண்டபத்தில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக்கலைக் கூடமாக திகழ்கின்றது. இங்குள்ள தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் உலகளந்த பெருமாள், நரசிம்மர், வைகுண்டநாதர், வேணு கோபாலர், கருடன் மீது அமர்ந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்த ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஊர்த்துவதாண்டவர், ஊர்த்துவகாளி, அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், கார்த்தவீரியார்ஜூனன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. தூணில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களின் நுண்ணிய வேலைப்பாடுகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும். சிற்பங்களில் தெரியும் நகத்தின் நுனி, தசைப்பிடிப்பு, நரம்பு ஓட்டம், இமைகள் என்று ஒவ்வொரு அங்கமும் சிற்பங்களில் மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால் இந்த சிற்பங்கள் கல்லினால் செதுக்கப்பட்ட வையா அல்லது உயிரோட்டமுள்ள உருவங்களா என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும். இரண்டு இசைத் தூண்களையும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

Read More
மதுரை புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவில்

மதுரை புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவில்

இரட்டை நாய் வாகனங்களுடன் இருக்கும் அபூர்வ பைரவர்

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ளது புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவில். இறைவி மீனாட்சி அம்மன் சொக்கநாதர் சன்னதிக்கு வலதுபுறம் எழுந்தருளி உள்ளார். சிவபெருமாளின்64 திருவிளையாடல்களில் ஒன்றான, ஏழை மூதாட்டி வந்தியம்மைக்கு சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட தலம் இது. மூதாட்டி வந்தியம்மைக்கும் தனி சன்னதி உள்ளது. ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் இங்கு புட்டு திருவிழா நடைபெறும். அன்றுமட்டுமே இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இக்கோவிலில் இரட்டை கால பைரவர் அருள்பாலிக்கிறார். பொதுவாக பைரவர் ஒரு நாய் வாகளத்துடனோ அல்லது நாய வாகனம் இல்லாமலோ அருள்பாலிப்பார். சில தலங்களில் இரண்டு,மூன்று மற்றும் எட்டு பைரவர் கூட இருப்பதுண்டு. ஆனால் இங்குள்ள பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் இருப்பது சிறப்பு. இதனால் இவர் இரட்டை கால பைரவர் என அழைககப்படுகிறார்.

பிரார்த்தனை

பக்தர்கள் தங்களது வறுமை நீங்கி செல்வம் பெருக, இழந்த பொருள்களையும், செல்வத்தையும் மீண்டும் பெற, குழந்தை பாக்கியம் கிடைக்க, நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் தீர இரட்டை கால பைரவரை பிரார்த்தனை செய்கிறார்கள்.

Read More
கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்

ஆறடி உயர திருமேனியுடன், கண்களில், ஒளிர் விடும் பிரகாசத்துடன் தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில். . இராமர் இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் ஆறடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், ஒளிர் விடும் பிரகாசம், தரிசிப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.

பிரார்த்தனை

சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.

Read More
நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்

நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்

யோகநிலையில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ கோலம்

திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள தலம் நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை. சுகப் பிரம்மரிஷி வழிபட்ட தலம் இது.

இக்கோவிலில் 64 சிவ மூர்த்தங்களில் ஒன்றான யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளி இருக்கிறார். பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார்.

பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக, சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். ஆனால் சனகாதி முனிவர்களுக்கு மனம் ஒருமுகப்படாததால் தெளிவு ஏற்படவில்லை.இதனால் சிவபெருமான் தாமே யோக நிலையில் அமா்ந்து மெளனத்தின் மூலமாக ஞானமும் நிஷ்டையும் கைகூடும் தன்மையை போதித்து அருளினாா். சிவபெருமானின் இத்திருக் கோலத்தை 'யோக தட்சிணாமூா்த்தி' என்று புராணங்கள் போற்றுகின்றன. யோக தட்சிணாமூர்த்தியின் கோலம் அரிதானது. இரு பாதங்களையும் குத்திட்டு, குறுக்காக வைத்து, யோகபட்டயம் தரித்து, முன் இரண்டு கரங்களையும் முழங்கால்கள் மீது நீட்டி, பின் இரண்டு திருக்கரங்களில் அட்சய மாலை மற்றும் கமண்டலம் ஏந்தி காட்சி தருகிறார்.

செவ்வாய் தோஷம் தீர்க்கும் யோக தட்சிணாமூர்த்தி

இந்த யோக தட்சிணாமூர்த்தியை இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். கல்வியில் மேன்மை பெறலாம்.

Read More
மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்

கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் ஏந்தியிருக்கும் விநாயகர்

சென்னையில் இருந்து 20 கி மீ.தொலைவில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெள்ளீஸ்வரர் கோவில். அசுரர்களின் குருவான சுக்கிரன் இவரை வழிபட்டு பேறு பெற்றதால் இவருக்கு வெள்ளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்களில் இது சுக்கிரனுக்குரிய பரிகார தலமாகும். இங்கு அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது.

இக்கோவிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருப்பது தனிச்சிறப்பாகும். இடது கீழ் கையில் மோதகத்திற்குப் பதிலாக மாம்பழத்தை வைத்திருப்பதால் இவருக்கு மாங்கனி விநாயகர் என்று திருநாமம் உண்டு. மேலும் இடது மேல் கையில் நெற்கதிர்களை ஏந்தி இருப்பதால், நெற்கதிர் விநாயகர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. இத்தலத்தைச் சுற்றி உள்ள விவசாயிகள், இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால் தங்களது விவசாயம் செழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

Read More
பவளமலை முத்துகுமார சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பவளமலை முத்துகுமார சுவாமி கோவில்

முருகன் பிரம்மச்சாரியாகவும், வள்ளி தெய்வானை தவக்கோலத்திலும் இருக்கும் தலம்

ஈரோட்டில் இருந்து 35 கி மீ தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 3 கி மீ. தூரத்தில் அமைந்துள்ளது பவளமலை முத்துகுமார சுவாமி கோவில். மலைமீது உள்ள கோவிலுக்கு செல்ல 60 படிக்கட்டுகள் உள்ளன. இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்வாச முனிவரால் உருவாக்கப்பட்டது.

மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானைமுருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம்

இக்கோவிலில் முருகப்பெருமானுக்கு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும். திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் சிவனைப் போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது. சூரசம்ஹாரம், வள்ளிதேவசேனா கல்யாணம், தந்தைக்கு உபதேசம், தேவர் குலம் காக்க, பிரம்ம சாஸ்திரம், பக்தர்களுக்கு அனுக்கிரஹம் ஆகிய ஆறு காரணங்களுக்காக முருகனுக்கு ஆறுமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் (சடாச்சரம்) உருவானது. கேடு மற்றும் இடையூறு நீங்க. ஒரு முகத்திற்கு 50 அர்ச்சனை வீதம் ஆறுமுகத்துக்கு 300 மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைக்கிறது. அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல் ஆகியவற்றுக்காகவும் இந்த அர்ச்சனையைச் செய்கின்றனர்.

பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர், பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. செவ்வாய் மாலை ஐந்து மணிக்கு பருப்பு பாயாசம், உளுந்தவடை நைவேத்தியமாக படைக்கப்பட்டு திரிசதார்ச்சனை நடக்கும். இதில் பங்கேற்றால், நினைத்தது நடக்குமென்பது ஐதீகம்.

Read More
திருவண்ணாமலை  பூதநாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில்

பால பருவத்து கிருஷ்ணன், பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் அபூர்வ தோற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ளது பூதநாராயணப் பெருமாள் கோவில். கருவறையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் பால பருவத்து கிருஷ்ணராக இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்திருப்பது தனிச்சிறப்பாகும்.

தல வரலாறு

வாசுதேவர், தேவகிக்கு எட்டாவது குழந்தையாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். அக்குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கம்சன் அதனைக் கொல்லப் பல வழிகளில் முயற்சித்தான். பூதகி எனும் அரக்கியை அழைத்து, குழந்தையை கொல்லுமாறு கட்டளையிட்டான். அதன்படி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று பூதகி கிருஷ்ணனைத் தனியாக அழைத்துப் பாலூட்டினாள். வந்திருப்பது யாரென்பதை அறிந்து கொண்ட மாயக்கண்ணன் பூதகியின் விஷப்பாலை அருந்துவது போல் பாவித்து, அவளைக் கொன்றான். பின்பொரு சமயம் அரக்கியை வதஞ்செய்த கிருஷ்ணாவதாரக் கோலத்தைத் தனக்கு காட்டியருளுமாறு பிருகு முனிவர், திருமாலிடம் வேண்டினார். அவ்வேண்டுதளுக்குச் செவி சாய்த்து, திருமால் திருவண்ணாமலையில் பூதநாரயணப் பெருமாளாகக் காட்சியளித்து அர்ச்சாரூபமாய் எழுந்தருளினார். காலமாற்றத்தால் அப்பெருமாளை மணல் மூடிற்று. வெகு நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு முனிவரின் கனவில் திருமால் தோன்றி, அருகில் உள்ள மணல் புற்றை முழுவதுமாக அகற்றுகையில், திருமாலின் அர்ச்சாரூபம் அங்கு உள்ளதைக் கண்டு, அதை கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்கி வரலாயினர்

பிரார்த்தனை

இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும். குணமுள்ள குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைகள் அறிவுப்பூர்வமாக இருக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்

Read More
திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்

பக்தர்கள் பூதகணம் வேடமிட்டு பங்கேற்கும் திருக்குவளை மாசிமகம் நெல் அட்டி திருவிழா

திருவாரூரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் வண்டமர் பூங்குழலம்மை. பிரம்மன் இத்தல இறைவனை வணங்கி படைப்புத்தொழில் கைவரப் பெற்றமையால், இறைவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. பிரம்மனால் வெண்மணலால் அமைக்கப்பட்டவர் என்பதால், மூலவருக்குக் குவளை சாற்றியே வழிபடப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று இரவு 6 மணிக்கு மட்டுமே குவளை நீக்கப்பட்டு, வெண்மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிக்குத் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

திருவாரூரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும், அவரது மனைவி பரவை நாச்சியாரும், தினந்தோறும் சிவனடியார்களுக்கு உணவு படைத்து வந்தார்கள். உணவு சமைப்பதற்கான பொருட்களை, திருக்குவளை அருகே உள்ள குண்டையூரைச் சேர்ந்த வேளாளரான குண்டையூர் கிழார் என்பவர். சுந்தரருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஒரு சமயம், திடீரென பஞ்சம் ஏற்பட்டது. அதனால், சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் கவலையுற்று, இறைவனை வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், குண்டையூர் கிழாரின் கனவில் தோன்றி. சுந்தரமூர்த்தி நாயனாருக்காக உமக்கு நெல் தந்தோம் என்றருளி மறைந்தார். குண்டையூர் கிழார் கண்விழித்துப் பார்க்கையில் நெல் மலை ஒன்றை இறைவன் அருளியிருப்பதை அறிந்தார். இந்த செய்தியை அறிந்த சுந்தரர் நெல்லைப் பெற்றுச் செல்ல குண்டையூர் வந்தார். அங்கு குவிந்திருந்த நெல் மலையைக் கண்டு வியந்த சுந்தரர். அந்த நெல் அனைத்தையும் தன்னால் கொண்டு செல்ல இயலாது என்பதை உணர்ந்து, நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, திருக்குவளைக்கு வந்து திருக்கோளிலி இறைவனை வேண்டி.

"....கோளிலி எம்பெரு மான் குண்டையூர்ச்

சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை

அட்டித் தரப்பணியே"

என்ற திருப்பதிகம் பாடினார். அன்றிரவே, சிவபெருமானின் அருளால் பூதகணங்கள், குண்டையூர் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சென்று ஊர் முழுவதும் நிரப்பின.

இக்கோவிலில், குண்டையூர் கிழார், சுந்தரருக்கு அளித்த நெல்லைத் திருவாருருக்குக் கொண்டு செல்ல சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா, மாசி மாதத்தில் நெல் மகோற்சவமாக, 5 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மக நட்சத்திர நாளில், திருக்குவளையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டையூருக்கு அருள்மிகு கோளிலிநாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது, பூதகணங்களைப் போல வேடமணிந்த பக்தர்கள் உடன் சென்று, குண்டையூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சியும், அங்கிருந்து திருவாருருக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இந்த மாசிமகம் நெல் அட்டி திருவிழா, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More
மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்

அம்பிகைக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.

இத்தலத்து இறைவி பெரிய நாயகி மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் புன்னகை தவழ நின்றகோலத்தில் காட்சிதருகிறாள். அம்பிகை, இவளை வணங்குவோர் குடும்பத்தில் நிம்மதி நிலவும். ஒற்றுமை நிலைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதனை நிரூபிப்பதுபோல், இந்த ஆலயத்தில் இவளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்படுகிறது. வழக்கமாக இறைவனின் உற்சவமூர்த்திக்கே செய்யப்படும் இந்த அலங்காரம், தேவியின் மூலமூர்த்திக்கே செய்யப்படுவது சிறப்பானது.

Read More
ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்

ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்

உன்னத குணநலன்களை அருளும் இறைவன்

செங்கல்பட்டிலிருந்து சுமார் 8 கி.மீ.தூரத்தில் உள்ளது ஒரக்காட்டுப் பேட்டை குணம் தந்த நாதா் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலத்து இறைவனின் திருநாமம் தனிச் சிறப்புக்குரியது. இந்தத் திருநாமம், இறைவனுக்கு வேறு எந்த தலத்திலும் கிடையாது. இத்தலத்தின் முந்தைய பெயர்உறைகாடு. உறைகாடு என்றால் உறைவதற்கு அல்லது வாழ்வதற்கு வளமான பூமி என்பது பொருளாகும். இதுவே பின்னர் உறைக்காட்டுப்பேட்டை என்றாகி பின்னர் மருவி, ஒரக்காட்டுப்பேட்டை என்றானது.

இத்தலத்து இறைவன் தன் மீது உண்மை யான பக்தி கொண்டு வழிபடும் அன்பா்களுக்கு எட்டு வகையான குணநலன்களை அளித்து அவா்களை இறைநிலையான பேரின்ப நிலைக்கு உயர்த்துகிறார். இவரை வழிபட்டால், மனமது செம்மையாகும். சிந்தை தெளிவுறும். நல் வழியைத் தேர்ந்தெடுப்பதில் தடுமாற்றம் இருக்காது. மது, புகை முதலான தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அதன் காரணமாக பாதிப்புக்கு ஆளானோர், தொடர்ந்து 11 பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டு, ஈசனின் சந்நிதியில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டால், விரைவில் கொடுமையான தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். தீய பழக்கங்களிலிருந்து விடுபடக்கூடிய மன உறுதியை அவா்களுக்கு அளிப்பார் குணம் தந்த நாதா் என்பது நம்பிக்கை. கருவுற்றிருக்கும் பெண்கள், தன் கணவருடன் சென்று ஒரக்காட்டுப்பேட்டைத் தலத்தில் அருளும் குணம்தந்த நாதரை தரிசித்து வழிபட்டால், நல்ல குணநலன்கள் கொண்ட மகவினை ஈன்றெடுப்பா் என்பது ஆன்றோர் வாக்காகும்.

பௌர்ணமியன்று கோவில் பிரகார வலம் - திருவண்ணாமலை கிரிவலம் செய்த புண்ணிய தரும்

திருவண்ணாமலை தலத்தில் மலையைச் சுற்றி அஷ்டலிங்கங்கள் அருள்பாலிப்பது போல், இத்தலத்திலும் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக அஷ்ட லிங்கங்கள் அருள் பாலிப்பது சிறப்பான ஒன்றாகும். உடல்நிலை, வயோதிகம் மற்றும் இதரச் சூழல்களின் காரணமாக திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல இயலாத நிலையில் இருப்பவர்கள், 21 பெளர்ணமி தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வலம் வந்து, குணம் தந்த நாதரையும், அம்பிகை திரிபுரசுந்தரியையும் வழிபட்டால், கிரிவலம் செய்த புண்ணியம் கிட்டும். பிறவியிலேயே பேச முடியாத நிலையிலிருந்த அன்பர் ஒருவர், 21 பெளர்ணமி தினங்கள் தொடர்ந்து வந்து குணம் தந்த நாதரை வழிபடுவது என்று தீர்மானித்து வழிபாட்டைத் தொடங்கினார். 7 பெளர்ணமி தினங்கள் வழிபாடு செய்த நிலையிலேயே அவருக்குப் பேச்சுத் திறன் வந்தது என்பது சமீப காலத்தில், இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதமாகும்.

Read More
இனாம் கிளியூர் மன்மதன் கோவில்

இனாம் கிளியூர் மன்மதன் கோவில்

காமன் பண்டிகை - திருமணத் தடை நீங்க கரும்பு அல்லது கரும்புச்சாறு நைவேத்தியம்

பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றான காமன் பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி மாசி பௌர்ணமி முடிந்து மூன்று நாட்கள் வரையில், காமன் பண்டிகை 15 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒரு பூஜைபோல் செய்கிற வழக்கம் இன்றைக்கும் பெரும்பாலான கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் அவர் மீது மலர்க்கணை தொடுத்த தினம் மாசி பௌர்ணமி ஆகும். இதனால் கோபமுற்ற சிவபெருமான், தன் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கி விட்டார். காமனை எரித்ததே, காமதகனம் மற்றும் காமன் பண்டிகை என்னும் விழாவாக நம் கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், மாசி மகத்துக்கு முன்னதாக, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் திருமணம்,

சிவபெருமானின் தவம், மலர்க்கணையால் சிவபெருமானின் தவம் கலைக்கும் மன்மதன், சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரிக்கும் காமதகனம், ரதிதேவி சிவபெருமானிடம் தன் கணவனை உயிர்பித்து தருமாறு வேண்டுதல், மன்மதன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து வருதல் என காமன் பண்டிகை தொடர்பான நிகழ்ச்சிகள் வில்லுப்பாட்டாகவும் நாடகமாகவும் அரங்கேறும். மாசி பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாள் மன்மதன் மீண்டும் உயிர்த்தெழுந்து ரதியினை அடைந்தான்.

மாசி பெளர்ணமியின் போது, ஊருக்கு நடுவே, ஒரு கரும்பை நட்டுவைப்பார்கள் மக்கள். மன்மதன் கையில் கரும்பு வைத்திருப்பான். அந்தக் கரும்பையே வில்லாக்கி மலர்க்கணை தொடுப்பான். அந்தக் கரும்பை மன்மதனாக பாவித்து, அந்தக் கரும்புக்கு தர்ப்பைகளும் மலர்களும் சார்த்துவார்கள். நன்றாக அழகுற அலங்கரிப்பார்கள். அப்போது ரதிதேவியின் உருவத்தையும் ஓவியமாக வரைந்து வைப்பார்கள். சில ஊர்களில் மரத்தால் செய்யப்பட்டு, மன்மதனுக்கும் ரதிதேவிக்கும் வர்ணம் பூசி, சிலைகளைப் போல் வைத்து பூஜிப்பதும் நடைபெறுகிறது. மன்மதனாக பாவித்து நட்டுவைக்கப்பட்ட கரும்பை, தீயிட்டுக் கொளுத்துவார்கள். பிறகு, அப்படி எரியும்போது, அந்தத் தீயைச் சுற்றி, அந்தக் கரும்பைச் சுற்றி, மன்மதனைச் சுற்றி வலம் வந்து வேண்டிக்கொள்வார்கள். அப்படி வேண்டிக்கொண்டால், பூமி செழிக்கும், விவசாயம் தழைக்கும், வம்சம் விருத்தியாகும், வாழையடிவாழையென பரம்பரை சீரும் சிறப்புமாக வளரும், வளரச்செய்வார் மன்மதன் என்பது நம்பிக்கை.

மாசி பெளர்ணமியில், காமதகனம் நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், வீட்டில் மன்மதனை நினைத்தும், ரதிதேவியை நினைத்தும் விளக்கேற்றி, கரும்பு அல்லது கரும்புச்சாறு நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தினருக்கு வழங்கினால், இல்லத்தில் தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்குக் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தாம்பத்திய பிரச்னைகள் தீரும்.

Read More
திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்

திருப்பாற்றுறை ஆதிமூலநாதர் கோவில்

திருப்பாற்கடலில் சயனம் கொண்டுள்ள சிவபெருமான்

திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பாற்றுறை. இறைவன் திருநாமம் ஆதிமூலநாதர். இறைவியின் திருநாமம் மேகலாம்பிகை, நித்யகல்யாணி. பால் பொங்கிய இடத்தில் இருந்து வெளிப்பட்டதால், சுவாமி ‘பாற்றுறை நாதர்’ என்றும், தலம் ‘பாற்றுறை’ (பால்துறை) என்றும் பெயர் பெற்றது.

திருப்பாற்கடல் என்பது இறைவனின் ஜீவ சக்தியாய், அமிர்த மயமாய் உலக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆதாரமாய்த் தோன்றியதாகும். அந்த அமிர்த சாகரத்தில் பள்ளி கொண்டவரே எம்பெருமான் ஆவார். ஆதியில், முதன்முதலில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் சிவபெருமானே என்று அகத்திய சித்த கிரந்தங்கள் உறுதிபட உரைக்கின்றன. இந்த சிவ அமிர்த புராணத்தை உலகிற்கு பறைசாற்றிய திருத்தலங்களுள் திருப்பாற்றுறை ஒன்றாகும். ஆதியில் முதன் முதலாக தோன்றிய பாற்கடலில் சிவபெருமான் ஏக மூர்த்தியாக,

திருப்பாற்கடலில் சயன நிலையில் எந்த வாகனமும் இன்றி , ஆதிசேஷனின் படுக்கையும் இன்றி பள்ளி கொண்ட நிலையில் அருள்பாலிக்கும் அற்புத திருக்கோலத்தை இன்றும் திருப்பாற்றுறை திருத்தலத்தில் நாம் தரிசித்திடலாம்.

Read More
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்

கருவறையில் ஊஞ்சலில் ஆடும் காளியம்மன்

சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் 'ராஜமாதங்கீசுவரி,

இக்கோவில் பிரகாரத்தின் வடக்கு புறத்தில் 'ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மரத்தினால் ஆன திருமேனி உடையவள். தனது எட்டு கைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இப்படி கருவறையில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தரும் அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஊஞ்சலில் ஆடும்போது இந்தக் காளியம்மனின் தரிசனம் பெறுவது விசேஷம். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். பத்ரகாளி அம்மனின் மூலவர் விக்கிரகமே விழாக்காலங்களில், வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

Read More
வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்

துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு பொடிக் கலவை பிரசாதமாக தரப்படும் பெருமாள் கோவில்

தஞ்சையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரகூர் என்னும் ஊரில் இருக்கின்றது வெங்கடேச பெருமாள் கோவில். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு முதலான மூலிகைகளைக் கொண்டு இடித்துச் செய்த பொடியானது, பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மூலிகை பொடி பிரசாதமானது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்

வெண் பன்றியாக வந்து பக்தருக்கு தன் கோவிலை காட்டி அருளிய பெருமாள்

ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர்(1650-1745). இசையிலும், நாட்டியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், 'திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்' என அசரீரி கேட்டது. இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார். சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. 'விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்' எனக் கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர். ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோவிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது. சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான 'ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.

இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியின் போது நடைபெறும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உற்சவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். கிருஷ்ண ஜயந்தி விழாவின் போது, சுவாமியின் மடியில் குழந்தை கிருஷ்ணரை கிடத்துவதும் பெருமாளையே, யசோதையாக அலங்கரிப்பதும் வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்று.

பிரார்த்தனை

தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். திருமண தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் . இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்

தாயின் வயிற்றில், குழந்தையின் வளர்ச்சியை விளக்கும் வியப்பூட்டும் சிற்பங்கள்

திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவில் தூண்களில். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, வெவ்வேறு காலகட்டங்களில், அதாவது குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இந்த விதமான நிலையில் (Position) இருக்கும் என்பதை சிற்பங்களாக தூணில் வடித்து வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்கேன் கருவி போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்து, அதை சிற்பத்திலும் வடித்து வைத்திருப்பது நம் முன்னோர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் துறையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை விளக்குகின்றது. நம் முன்னோர்கள் கட்டிடக்கலை, சிற்பக்கலை, அறிவியல் துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் அடைந்திருந்த வளர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

Read More
குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்

குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்

எமனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம்

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற தலம் குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் இறையார் வளையம்மை.. மறுபிறவி வேண்டாதவர்களுக்கு அருள்பாலிக்கும் தலம் இது, மகரிஷிகளின் சாபத்தால் வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் முட்டமாக (காகம்) பூலோகத்தில் பிறப்பெடுத்தனர். இதனால், மனம் வருந்திய மூவரும் திருக்கயிலாயம் சென்று உமையொருபாகனான சிவபெருமானை சரணடைந்து தங்களுக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டி நின்றனர். சிவபெருமானின் கட்டளையை ஏற்று இத்தலத்து இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

சனி தோஷ நிவர்த்தி தலம்

சனி கிரகத்தின் அதிபதியாக யமன் கருதப்படுகிறார். அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும். எமனுக்கே சாப விமோசனம் கிடைத்த தலம் இது என்பதால், சகலவிதமான சனி தோஷங்களும் இங்கு நிவர்த்தியாகும்.

Read More