
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில்
இறைவனுக்கும் அம்மனுக்கும் சித்திரை முதல் ஏழு நாட்கள் சூரிய பூஜை நடக்கும் அதிசயத் தலம்
சென்னை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பனையபுரம். இறைவன் திருநாமம் பனங்காட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் சத்யாம்பிகை. சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஐந்து தலங்களுள் இதுவும் ஒன்று.
சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூரும் ஒன்றாகும். அதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால்,இறைவனையும் அம்மனையும் வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து இறைவனுக்கும் அம்மனுக்கும்
சூரிய வழிபாடு நடப்பது வேறு எந்த தலத்திலும் கிடையாது. சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் இராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி,மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் இறைவனின் சிரசில் பட்டு வணங்குகிறது. இதன் பின் அது மெல்ல கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது. பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது. வானவியல் சாஸ்திர நுட்பத்தை உணர்ந்து, கோவிலின் கட்டிட வடிவமைப்பை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும், தொழில்நுட்பத்திறனையும் உலகத்துக்கு பறைசாற்றுகின்றது.
கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்
புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம் இது. பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.
குழந்தை வரம் அருளும் பனம் பழம்
இக்கோவிலில், தலமரமான பனை மரங்களில் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்
நவகைலாய தலங்களில் குரு தலம்
திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில், 15 கி.மீ தொலைவில் உள்ள தலம் முறப்பநாடு. இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவியின் திருநாமம் சிவகாமி அம்மன்.
இந்தியாவில் கங்கை நதியும், முறப்பநாடு தலத்தில் தாமிரபரணி நதியும் மட்டுமே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகின்றது. இதனால் இவ்விடம் தட்சிண கங்கை என்று போற்றப்படுகிறது. முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்தால் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும்.
முறப்பநாடு, திருநெல்வேலி/ தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவகைலாய தலங்களில் ஐந்தாவது இடத்தை (நடுக் கைலாயம்) பெறுகின்றது. இந்த கோவில், நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்கு கைலாசநாதர், குரு அம்சமாக இருப்பதால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வழிபடும் வழக்கம். எனவே, குருபகவானின் அருள் பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.
வியாழ பகவானின் அனைத்து சக்திகளையும் இத்தலம் பெற்றிருப்பதால், பக்தர்கள் இந்த கோவிலில் வித்தியாசமான முறையில் தக்ஷிணாமூர்த்தி முன்பும், சனி பகவான் முன்பும் ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள். இப்படிச் செய்தால், நவகிரகங்களையும் சுற்றி வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இரட்டை பைரவர்
கோவிலின் வடகிழக்கு பகுதியில் தனிச்சந்நிதியில் இரண்டு பைரவர்கள் அருள்பாலிக்கின்றனர். நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீர பைரவர் என்றும் அழைக்கின்றனர். இது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்
குருவின் ஆதிக்கம் பெற்ற ராசி/நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இது. கையில் பணம் தங்குவதில்லை என வருந்துபவர்களும், வீட்டில் சுப காரியங்கள் நடப்பதில்லை என வருந்துபவர்களும் சென்று வணங்க வேண்டிய கோவில் இது தான். இது வியாழனுக்குரிய பரிகார தலம் என்பதால், திருமண தடை உள்ளவர்கள் இக்கோவிலில் சென்று வணங்கினால், சுப காரிய தடை

கட்டவாக்கம் விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ள விஸ்வரூப லட்சுமி நரசிம்மர்
காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில், விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெருமாள் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல், பதினாறு அடி உயர திருமேனியுடன், லட்சுமி தாயாரை தன் மடியில் இருத்தி வீற்றிருக்கிறார். அவரின் மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் வடிவமைப்பானது ஆறு அவதாரங்களையும், அவர் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் நான்கு அவதாரங்களையும் குறிப்பிடுகின்றது. கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது.
இந்த நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
நவக்கிரக பரிகார தலம்
இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மருக்கு பன்னிரண்டு பற்கள் அமைந்திருக்கின்றன. இது இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால், இது ஒரு நவக்கிரக பரிகார தலமாக விளங்குகிறது.

நாகப்பட்டினம் குமரன் கோவில்
மயிலுக்கு பதில் யானை வாகனமாக விளங்கும் முருகன் தலம்
நாகப்பட்டினம் நகரத்தில், நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ளது குமரன் கோவில். இக்கோவிலில் மூலவராக, முருகப் பெருமான் வள்ளி தேவசேனாபதியாக 'மெய்கண்ட மூர்த்தி' என்னும் நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித்தான். இதன் காரணமாக, மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் சிதிலமடைந்து பூமியில் புதைந்து விட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.
தோல் நோய் தீர்க்கும் முருகன்
இந்தக் கோவிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். பின்னர் அவர் பல தலங்களுக்குச் சென்று அங்கு தமிழில் கவி பாடி வழிபட்டு வந்தார். அவர் சிதம்பரம் கோவிலில் உயிர் நீத்தார். அப்போது இக்கோவிலில் மாலை வேளை பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது முருகன் அசரீரியாக, அழகு முத்துவின் ஆன்மா என்னுடன் ஐக்கியமாக இங்கே வந்து கொண்டு இருக்கிறது. எல்லோரும் வழி விடுங்கள் என்று உத்தரவிட்டார். இந்த நிகழ்வு இன்றும் வைகாசி விசாகத்தன்று இங்கு அனுசரிக்கப்படுகின்றது.
தோல்நோய் மற்றும் தொழுநோய் உடையவர்கள் கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக பக்தர்களின் நம்பிக்கை.
செல்வ விருத்தி அளிக்கும் குபேரன் தலம்
இக்கோவிலின் வடக்கு பிரகாரத்தில் குபேரனுக்காக தனி சன்னதி அமைந்துள்ளது. அதனால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில்
பட்டத்து யானைக்கு மீண்டும் கண்பார்வை அளித்த நஞ்சுண்டேஸ்வரர்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 23 கி.மீ., தொலைவில், அமைந்துள்ள தலம் நஞ்சன்கூடு. இறைவன் திருநாமம் நஞ்சுண்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் பார்வதி.
ஒரு சமயம், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானிற்கு மிகவும் பிரியமான பட்டத்து யானைக்கு திடீரென கண் பார்வை பறி போனது. அமைச்சர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நடக்கும் பூஜைகளில், நாற்பத்தி எட்டு நாட்கள் கலந்து கொள்ள தனது பட்டத்து யானையை அனுப்பி வைத்தார் திப்பு சுல்தான். நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை நிறைவடைந்த போது, யானைக்கு மீண்டும் கண் பார்வை திரும்பியது. இதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான், மரகத லிங்கம் ஒன்றை இக்கோவிலில் பிரதிஷ்டை செய்தார். மரகத ஆரம் ஒன்றையும் காணிக்கையாகக் கொடுத்தார். இந்த சிவலிங்கம், ஹக்கீம் நஞ்சுண்டா என்று பெயரால் அழைக்கப்படுகிறது.

காரைக்குடி நூற்றியெட்டு பிள்ளையார் கோவில்
ஒரே கோவிலில், பல கோலங்களில் காட்சிதரும் நூற்றியெட்டு பிள்ளையார்கள்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி நகரத்தில் அமைந்துள்ளது நூற்றியெட்டு பிள்ளையார் கோயில். இக்கோவிலில் 108 பிள்ளையார் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 54 பிள்ளையார் விக்ரகங்கள் மேல் வரிசையிலும், மீதி 54 விக்கிரகங்கள் கீழ் வரிசையிலும் அமைந்துள்ளன. மேல் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை இடது பக்கம் சுழித்தும், கீழ் வரிசையில் உள்ள பிள்ளையார்களின் தும்பிக்கை வலது பக்கம் சுழித்தும் இருக்கின்றன.
தாமரை மலர் மேல் நிற்கும் பிள்ளையார், வல்லப கணபதி, மகா கணபதி, சித்தி புத்தி விநாயகர், மூஷிக கணபதி, சிம்ம வாகனத்தின் மேல் வீற்றிருக்கும் ஹேரம்ப கணபதி, சங்கு சக்கரம் ஏந்திய விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகியவை இங்கு எழுந்தருளி இருக்கும் விநாயகரின் சில கோலங்கள் ஆகும். நூற்றியெட்டு பிள்ளையார்களை ஒரு சேர தரிசிக்க முடியும் என்பதால், பல வெளியூர் மக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றார்கள்
பிள்ளையார், அவரை வழிபடுவோரின், வாழ்வில் வரக்கூடிய அனைத்து இன்னல்களையும், தீர்க்கவல்லவர் என்று நம்பப்படுவதால், இங்கு உள்ளூர் மக்களும் அதிக அளவில் வருகின்றனர். அதனால், மக்கள் புது முயற்சிகள் எதுவும் எடுப்பதற்கு முன், இங்கு வந்து பிள்ளையாரை பிரார்த்தித்து விட்டு, அதற்குப் பின்பே ஆரம்பிக்கின்றனர். புது முயற்சிகள் ஆரம்பிப்பதற்கு முன் பிள்ளையாரை வழிபட்டால், அம்முயற்சிகள் தடங்கல்கள் ஏதுமின்றி, நல்ல பலனைக் கொடுக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இங்கு பிள்ளையாரை குளிர்விப்பதற்கு, பக்தர்கள், அவருக்கு மிக விருப்பமான லட்டு மற்றும் மோதகம் ஆகியவைகளை காணிக்கையாகப் படைக்கின்றனர்.

கல்பட்டு சனீஸ்வரன் கோவில்
21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் சனி பகவான்
விழுப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் கல்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ள தனிக்கோவிலில், மூலவராக சனி பகவான், வேறெங்கும் இல்லாத வண்ணம் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். நான்கு திருக்கரத்துடன், கரங்களில் சூலம், கத்தி, வில் மற்றும் அம்பு தாங்கி, வலது காலை காகத்தின் மீது ஊன்றி நின்ற வண்ணம் காட்சி தருகிறார். மேலும் இவர் யோகநிலையில் இருப்பது இன்னும் சிறப்பான விஷேசமாகும்.
சனி பகவானின் வலது காலில் உள்ள ஊனத்தால் அவரால் வேகமாக நடக்க இயலாது எனவே தான் மந்தன் என்ற திருநாமம் கொண்டார். இதை உணர்த்தும் வகையில் வலது கால் சற்று சிறியதாகவும் இடக்கால் நீண்டு இருக்கும் வண்ணம் மூலவர் விக்கிரகம் அமைந்துள்ளது.
ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி தரும் மீனாட்சி அம்மன்
மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள். முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும் அம்பிகையை வணங்கிய பின்னரே இறைவனை வணங்கி வருகின்றனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் தினமும் எட்டு விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். அதனால், அம்பிகை தினமும் எட்டு விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.
அவை
1. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி
2. ப்ராத சந்தியில் – பாலா
3. 6 – 8 நாழிகை வரையில் – புவனேஸ்வரி
4. 12 – 15 நாழிகை வரையில் – கெளரி
5. மத்யானத்தில் – சியாமளா
6. சாயரக்ஷையில் – மாதங்கி
7. அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி
8. பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி
மீனாட்சி அம்மனுக்கு ஐந்து கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும். ஒரேநாளில் புவனேஸ்வரி, கௌரி, சியாமளா, மாதங்கி, பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.
காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் தங்க கவசமும், வைரக்கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.
குழந்தை வரம் வேண்டுவோர் அன்னை மீனாட்சியைக் காலை வேளையில் பாலசுந்தரியாகக் காட்சி கொடுக்கும் கோலத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கணவன் மனைவி ஒற்றுமைக்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தல் நல்ல பயனைக் கொடுக்கும்.
வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
பங்குனி உத்திரத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும் அதிசயம்!
பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், நமது திருமண வாழ்க்கை இனிமை நிறைந்ததாக மாறும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
பொதுவாக பங்குனி உத்திரம் தினத்தன்று ஒவ்வொரு கோவிலிலும் ஒரே ஒரு தடவைதான், அதுவும் உற்சவருக்குத்தான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் பங்குனி உத்திரம் தினத்தன்று இரண்டு தடவை திருக்கல்யாணம் நடைபெறும். முதலில் மூலவரான அண்ணாமலையாருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு உற்சவரான பெரிய நாயகருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டுமே பின்பற்றப்படும் அதிசயமான நடைமுறையாகும். தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை. குறிப்பாக மூலவருக்கு எந்த ஆலயத்திலும் திருக்கல்யாணம் நடத்த மாட்டார்கள்.
பொதுவாக எல்லா கோவில்களிலும் பங்குனி உத்திர திருமண விழா ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மொத்தம் ஆறு நாட்கள் இந்த திருமண விழா நடைபெறும். நமது கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து திருமண சடங்குகளும் செய்யப்படும். மாலை மாற்றுவது, நலங்கு வைப்பது, பூப்பந்து வீசி விளையாடுவது, மரு வீட்டுக்கு செல்வது, மீண்டும் தாய் வீட்டில் இருந்து வருவது, நலங்கு ஊஞ்சல் உற்சவம், பாலிகை விடுதல் என்று முழுமையான திருமண விழாவாக அந்த அண்ணாமலையார் கல்யாண உற்சவம் நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோவில்
ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம்
தெய்வத் திருமணங்கள் பல நடைபெறும் திருநாள்தான் பங்குனி உத்திரம். இந்நாளில் நடைபெறும் ஆண்டாள் - ஸ்ரீரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றிய 12 ஆழ்வார்களில், பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த தலம் திருவில்லிபுத்தூர். ஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் - ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.பங்குனி உத்திரத்தன்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வருவார்கள். மாலையில் பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன், ஆண்டாளும் ரங்க மன்னாரும் திருமண வைபவம் நடைபெறும் ஆடிப்பூர கொட்டகைக்கு எழுந்தருளுவார்கள். கல்யாணத்திற்கான சீர்வரிசைகளை பெரியாழ்வாரின் சார்பில் கோவில் நிர்வாகத்தினர் மணமேடைக்கு கொண்டுவர, அதன்பின் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கும். தொடர்ந்து கன்னிகாதானம் நடைபெற்ற நிலையில் பக்தர்களின் முன்னிலையில் திருமாங்கல்ய தாரணம் நடைபெறும்.
ஆண்டாள் மார்கழி மாதம் பாவை நோன்பிருந்து கண்ணனை நினைத்து அருளிய . 'வாரணமாயிரம்' என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி, பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்.
என்ற இந்தப் பாசுரம், வைணவர்கள் வீட்டு திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஓதப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறும். வைணவத் திருத்தலங்களில் செய்யப்படும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் இந்தப் பாசுரம் கட்டாயம் இடம் பெறும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். ஆகவே திருப்பரங்குன்றத்தை, 'திருமணத் திருத்தலம்' என்று கூறுவார்கள். எனவே பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த தலத்தில் திருமணம் செய்ய விரும்புகிறார்கள். அதனால் தென் மாவட்டத்திலேயே, அதிக திருமண மண்டபங்கள் உள்ள ஊராக திருப்பரங்குன்றம் விளங்குகின்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களிலும் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5 பங்குனி உத்திரத்தன்று, முருகப் பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஏப்ரல் 6ல் இரவு 7 மணியளவில் சூரசம்ஹார லீலை, ஏப்ரல் 7ம் தேதி இரவு 7.45 மணியளவில் பட்டாபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 8ல், பகல் 12.20 மணியளவில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.
முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைக்க, மதுரையிலிருந்து சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனி பல்லக்கில் புறப்பட்டு திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள். அவர்களை முருகப்பெருமான் வரவேற்று திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அழைத்து வருவார். பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை திருமணத்தை, சுந்தரரேசுவரரும், மீனாட்சி அம்மனும் நடத்தி வைப்பார்கள்.
திருக்கல்யாணம் முடிந்ததும், சுமங்கலிப்பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்வார்கள். திருக்கல்யாணத்துக்கு. முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையிலிருந்து சீர்வரிசை கொண்டு வரப்படும்.
முருகப்பெருமான் திருக்கல்யாண வைபோகத்துக்கு மீனாட்சி அம்மன் சென்றிருக்கும் வேளையில், மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். அப்போது பக்தர்கள் வேறு வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி தேர் திருவிழா
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாம் நாள் காலை தேரோட்டம் நடைபெறும். முதலாவதாக சிறிய தேரில் விநாயகர் உலா வர, அதை தொடர்ந்து பெரிய தேரில் கபாலீஸ்வரர் பவனி வருவார். அவரைப் பின்தொடர்ந்து கற்பகாம்பாள், வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேரில் வருவார்கள்.
கபாலீஸ்வரர், கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி பார் வேட்டைக்குச் செல்லும் கோலத்தில், மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே நான்கு மாட வீதிகளிலும் தேரில் பவனி வருவார். கபாலீஸ்வரரின் தேரோட்டத்தை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
சகட தோஷத்தை நீக்கும் தேரோட்டம்
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். இந்த யோகம் இருப்பவர்கள் சில நேரங்களில் உச்சத்திலும் சில நேரங்களில் துன்பப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள். தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடும். அதுபோல, திருக்கோவில்களின் தேரோட்டத்தை தரிசிப்பது, ஒருவரின் சகட தோஷத்தை போக்கி, ஏற்ற இறக்கங்களை நீக்கி, நிலையான வாழ்வை தந்துவிடும் என்பது நம்பிக்கை. கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும், சகடதோஷம் நீங்கி நிலையான வாழ்வு பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில்
ராகு-கேது இணைந்து ஒரே வடிவாக காட்சி தரும் அபூர்வ தோற்றம்
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாஞ்சியம். இறைவனின் திருநாமம் வாஞ்சிநாதர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி.
ராகு பகவான் மனித தலையும்,பாம்பு உடலும் கொண்டவர். கேது பகவான் பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர். திருவாஞ்சியத்தில் மட்டுமே ராகுவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில், பாம்பு உடலாகவும் மனித முகமாகவும், ஓரே நிலையில் காட்சி தருகின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம், காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம். ராகு-கேதுவிற்கு பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேதுவுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் இருந்தால், அவருக்கு 'காலசர்ப்ப தோஷம்' என்று கூறப்படுகிறது. திருவாஞ்சியம் தலம் என்பது ராகு, கேது மற்றும் காலசர்ப்ப தோஷத்திற்கு அதிகம் அறியப்படாத பரிகார தலமாகும். .
இத்தலத்திலுள்ள லக்ஷ்மி தீர்த்தம், நாக தீர்த்தம் மற்றும் சக்கர தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றன. இவை மூன்றும் முறையே லக்ஷ்மி, ஆதிசேஷன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. லக்ஷ்மி தீர்த்தத்தில் ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமை நீராடுவதால் ஒருவன் தான் பிரிந்து வந்த குடும்பத்துடன் மீண்டும் சேருவான் என்றும், நாக தீர்த்தத்தில் வைகாசி மாதம் திருவோணம் நடசத்திர நாளன்று நீராடுதல் நாக தோஷத்தைப் போக்கும் என்றும் ஆவணி மாதம் ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் சக்கர தீர்த்தத்தில் நீராடுதல் பிரம்மஹத்தி தோஷத்தை போக்குமென்றும் தலபுராணம் கூறுகின்றது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - வெள்ளி ரிஷப வாகன காட்சி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு, இறைவன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மயிலாப்பூர் மாடவீதிகளில் பவனி வருவார். அவருடன் கற்பகாம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் தங்க மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வலம் வருவார்கள். பஞ்சமூர்த்திகளும் மறு நாள் காலையில்தான் கோவிலுக்குத் திரும்புவார்கள்.
இந்த ஆண்டு வெள்ளி ரிஷப வாகன காட்சி, 1.4.2023, சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு தொடங்க உள்ளது.
வெள்ளி ரிஷப வாகன காட்சியை தரிசித்தால், திருஞானசம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டியதுபோல் ஞானம் வேண்டி நிற்பவருக்கெல்லாம் ஞானப்பால் கிட்டிவிடும் என்பது நிச்சயம்.

விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்
குளிர்ச்சியான நெற்றிக்கண் உடைய அம்பிகை
திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் விளமல் இறைவனின் திருநாமம் பதஞ்சலி மனோகரர் . இறைவியின் திருநாமம் மதுரபாஷிணி. தமிழில் 'யாழினும் மென் மொழியம்மை' என்று புகழப்படுகிறார். தெற்குமுகம் பார்த்த சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன், மதுரபாஷிணி அம்மன் வீற்றிருக்கிறார். பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படை, இந்த அம்பிகைதான்.
சிவபெருமானுக்கு வெப்பத்தை வெளிப்படுத்தும் நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷிணிக்கு, சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது.
இங்கு அம்பிகை ஸ்ரீசக்கரம் தாங்கி ஆதி அம்பிகையாகவும், மஞ்சுளாவாணியாகவும் இருந்து சகல சௌபாக்கியங்களையும் அருள்கிறாள்.இத்தல அம்பிகையை, மனிதனுக்கு தேவையான 34 சௌபாக்கியங்களையும் தரும் தேவியாக கண்டு, அகத்தியர் ஸ்ரீரதாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார்.
பேச்சு குறைபாட்டை தீர்க்கும் அபிஷேகத் தேன்
மதுரபாஷிணி அம்மன், கல்விக்கு அரசியாக இருந்து அருளுவதால், சக்தி பீடங்களில் இத்தலம் வித்யா பீடமாகக் கருதப்படுகின்றது. அம்பிகைக்கு தேன் அபிஷேகம் செய்வது சிறப்புக்குரியதாகும். அபிஷேகத் தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது. இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.
பேச்சுத்திறனில் குறைபாடு உள்ளவர்களும், நா குழறுபவர்களும், இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையை உள்ளம் உருக வழிபட்டு, அபிஷேகத் தேனை தினமும் பக்தியுடன் சுவைத்தால் குறைகள் தீரும்.
திருமணத் தடை நீக்கும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை
இங்கு வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீவித்யா சக்தி பூஜை நடைபெறுகின்றது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இந்த பூஜையை நடத்தினால், திருமணத் தடை நீங்கும். வியாபாரம் பெருகுவதுடன் கலை, கல்வி, ஞானம் சிறக்கும்

பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்
கோவில் கட்டுவதற்காக பக்தன் செலவழித்த பணத்தை நவாபிடம் திருப்பி செலுத்திய ராமன், லட்சுமணன்
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் , கம்மம் நகரிலிருந்து 120 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில். இக்கோவிலில் ராமர், சீதாபிராட்டியை தனது இடது மடியில் இருத்தி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். தனது நான்கு கரங்களில் இரண்டில் சங்கு, சக்கரமும், மற்ற இரண்டு கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி இருக்கிறார். ராமருக்கு இடது பக்கம் லட்சுமணன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆண்டு தோறும் இராமநவமியன்று, இத்தலத்தில் ராமருக்கும், சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாண உற்சவம் மிகுந்த சிறப்புடன் நடத்தப்படுகிறது.
இந்தக் கோவிலானது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கஞ்சர்ல கோபண்ணா என்பவரால் கட்டப்பட்டது. கோபண்ணா என்பவர் பத்ராச்சலத்தில் தாசில்தாராக இருந்தார். அரசின் பணியாளரான இவர், அரசாங்க பணத்தை எடுத்து இந்த கோவிலை கட்டி முடித்து விட்டார். இதை அறிந்த ராஜ்யத்தின் நவாப் தானீஷா, அவருக்கு 12 வருட சிறைத் தண்டனை விதித்து, கோல்கொண்டா சிறையில் அடைத்து விட்டான். கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். தனது பக்தனை காப்பாற்றுவதற்காக ராமர் தனது தம்பி லட்சுமணனுடன், ராமோஜி மற்றும் லக்ஷமோஜி என்ற உருவில் வந்து கோபண்ணா செலவழித்த ஆறு லட்சம் முஹர்களை நவாப் தானீஷாவிடம் திரும்பச் செலுத்தி, பணம் பெற்றுக்கொண்டதற்கான இரசீதினை வாங்கிக்கொண்டு அதை சிறையில் இருந்த கோபண்ணாவின் படுக்கைக்கு அடியில் வைத்து விட்டார்கள். மறுநாள் இதையறிந்த நவாப் தானீஷா, தம்மிடம் வந்து இரசீது பெற்றுச்சென்றது வேறு யாருமல்ல, இராமனும் லட்சுமணனுமே என்று உணர்ந்தார். உடனே கோபண்ணாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். கோபண்ணாவைப் பணிந்து வணங்கி மன்னிப்புக் கோரினர். தாம் பெற்ற தங்க முஹர்களை அவர் காலடியில் வைத்துக் காணிக்கையாக்கினார். ஆனால் கோபண்ணாவோ, தங்க முஹர்களை திரும்ப வாங்க மறுத்துவிட்டார். என்றாலும் இரண்டே இரண்டு தங்க நாணயங்களை மட்டும் ராமரின் திருவிளையாடலை நினைவு கூறும் பொருட்டு பெற்றுக் கொண்டார். இந்த இரண்டு தங்க நாணயங்களை இன்றும் பத்திராசலம் கோவிலில் நாம் காணலாம். கோபண்ணா, 'பக்த இராமதாஸ்' என்று எல்லோராலும் போற்றப்பட்டார். அவர் சிறையில் வாடிய போது ராமபிரானை எண்ணி, தெலுங்கில் பல பாடல்களை இராமரைப் போற்றும் வகையில் பாடியுள்ளார். உணர்ச்சி மயமான இந்தப் பாடல்கள், தாசரதி சதகம் மற்றும் கீர்த்தனைகள் என்ற பெயரில் புகழ்பெற்றன.
இராம நவமி திருக்கல்யாண உற்சவத்திற்கு முத்துக்கள் அளித்த நவாப்
இராமனின் சக்தியினை உணர்ந்த கோல்கொண்டா அரசன் தானிஷா, பல்வோஞ்ச பரகானா கிராமத்தில் கிடைக்கும் வருமானத்தை கோவில் பராமரிப்பு செலவுகளுக்கென்று ஒதுக்கி ஆணையிட்டார். இது மட்டுமல்லாமல் கோவிலில் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தன்று மூலவருக்கு அணிவிக்க சிறப்பு அலுவலர் மூலம் முத்துக்களை யானையில் ஏற்றி அனுப்பி வைத்தார். இன்றும் கூட ஆந்திர அரசு, இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழா - அதிகார நந்தி சேவை
'மயிலையே கயிலை' என்னும் பெருமையுடையது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றத. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று நடைபெறும் அதிகார நந்தி சேவை, ஐந்தாம் நாள் அன்று இரவு நடைபெறும் வெள்ளி ரிஷப வாகன காட்சி, ஏழாம் நாள் திருத்தேர், எட்டாம் நாள் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா, பத்தாம் நாள் இரவு நடைபெறும் திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
சென்னைக்கு பெருமை மயிலை என்றால், மயிலை கபாலீஸ்வரருக்குப் பெருமை அதிகார நந்தி சேவை. இந்த ஆண்டு அதிகார நந்தி சேவை 30.3.2023, வியாழனன்று காலை 5.45 மணிக்கு தொடங்க உள்ளது.
ரிஷபத்தின் முகமும் (காளையின் முகம்) சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் வாகனமான நந்தி பகவான். வேதங்களின் முதல்வனாகப் போற்றப்படுகின்றார். 'நந்தி' என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன், நந்தி தேவருக்குத்தான் முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
வெள்ளியாலான அதிகார நந்தி வாகனம்
இக்கோவில் அதிகார நந்தி வாகனம் 106 ஆண்டுகள் பழமையானது. அதற்கு முன்னால் மரத்தாலான அதிகார நந்தி வாகனம்தான். பயன்பாட்டில் இருந்தது. இப்போதைய நந்தி வாகனத்தை வழங்கியவர், வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ .குமாரசாமி என்பவர். இவரின் குடும்பம், ஆயுர்வேத சித்த மருத்துவத்தை பாரம்பரியமாக, பல தலைமுறைகளாக செய்து வந்தனர். வெள்ளியாலான இந்த அதிகார நந்தி வாகனம் உருவாக்கும் பணி, 1912ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1917 ல் நிறைவு பெற்றது. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான இந்த அதிகார நந்தி வாகனத்தின் தற்போதைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய் ஆகும்.

திருமழப்பாடி வைத்தியநாதசுவாமி கோவில்
திருமழப்பாடி நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம்
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமழப்பாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் அருள்பாலிக்கும் இரண்டு அம்பிகைகள் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை ஆவர். இந்த ஆலயத்தில் நடைபெறும் நந்தி திருமணம் மிக விசேஷமானது.
நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. அதாவது திருமழப்பாடி கோவிலில், பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நடைபெறும் நந்தி திருக்கல்யாணத்தைப் பார்ப்பவர்களுக்கு முந்தி திருமணம் ஆகும் என்பது தான் இதன் பொருள். அதன்படி திருமழப்பாடி நந்தி திருக்கல்யாணம் பார்த்தால், அடுத்த ஆண்டு நந்தி கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமண வரம் வேண்டுவோருக்குத் திருமணம் நடந்து முடியும் என்கின்றனர்.
சிலாத முனிவர் என்பவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான், 'நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்' என்று அருளினார். சிலாத முனிவர், பெட்டகத்தில் கண்டெடுத்த அந்தக் குழந்தைக்கு 'செப்பேசன்' என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.
செப்பேசன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து துயருற்றார். இதையறிந்த செப்பேசன், திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், திருக் கயிலையின் தலைவாயிலைக் காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.
இதையடுத்து , சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் , தவம் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவையாற்றில் இருந்து நந்தியம்பெருமான், வெள்ளித் தலைப்பாகை, பட்டு வேட்டி துண்டு, வெள்ளிச் செங்கோலுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
இந்த ஆண்டு நந்தியம்பெருமான் - சுயசாம்பிகை திருக்கல்யாணம், 30.3.2023 வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. திருமண வயதில் இருக்கும் ஆண், பெண் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

மப்பேடு சிங்கீஸ்வரர் கோவில்
ஆஞ்சநேயர் வீணையை இசைத்து சிவபெருமானை வழிபட்ட தலம்
சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் மப்பேடு. இறைவனின் திருநாமம் சிங்கீஸ்வரர். இறைவியின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, தன் உண்மையான ரூபத்தை மீண்டும் பெற இங்கு வந்து சிவனை வழிபட்டார். பெண் வடிவில் திருமால் வழிபட்டதால், (மால் - திருமால்; பேடு - பெண்), `மால் பேடு' என்றும், மீண்டும் சுய உருவம் பெற்றதால் (மெய் உருக் கொண்டதால்) `மெய்ப்பேடு' என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் சிவபெருமான் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். தன் இசையில் கவனம் செலுத்திய அவரால், ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஈசன். ஆகவே அவருக்கு இத்தலத்தில், சிங்கீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இக்கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியா மல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள், இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
இக்கோவில், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.
மூல நட்சத்திரக்காரர்களின் பரிகாரக் கோவில்
அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்
தரிசிப்பவர்களின் மனநிலைக்கேற்ப குழந்தையாய், இளைஞனாய்,முதியவராய் காட்சி தரும் முருகன்
திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே அமைந்துள்ள முருகன் தலம் எட்டுக்குடி. எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர் என்பதால் எட்டுக்குடி என்ற பெயர் வந்தது.முருகனின் அறுபடை கோவில்கள் தவிர, புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இங்கு முருகன், வள்ளி தெய்வானை உடன் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். இவர் அமர்ந்திருக்கும் மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே என்பது ஆச்சரியமும் , அதிசயமுமான விஷயம் ஆகும். பொரவாச்சேரி மற்றும் எண்கண் முருகன் தலங்களிலும் இதேபோன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை நாம் தரிசிக்கலாம். அற்புத அழகுடன் கூடிய இந்த மூன்று முருகன் சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.
இந்த கோவிலில், முருகன் தன்னை தரிசிக்கும் பக்தர்களின் மனநிலைக்கேற்ப மூன்று விதமான கோலங்களில் காட்சி தருகிறார். முருகனை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், இளைஞனாக பார்த்தால் இளைஞனாகவும், முதியவராக வடிவேலவனை பார்த்தால் முதியவனாகவும் காட்சி தருவதாக பக்தர்கள் தங்கள் அனுபவத்தில் அனுபவித்து சொல்கிறார்கள்.
சித்ரா பௌர்ணமி திருவிழா
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் அபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாலை தொடங்கும் இந்த அபிஷேகம் , மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். சித்ரா பௌர்ணமி திருவிழாவில் 25 ஆயிரம் பால்காவடிகள் வந்து சேரும்.
பிரார்த்தனை
குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்கிறார்கள். பயந்த சுபாவமுடைய குழந்தைகளை இத்தலத்துக்கு அழைத்து வந்தால் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஏனெனில் இங்கு முருகன் அம்பறாத் துணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் வீர சவுந்தரியம் உடையவனாக திகழ்கிறான். சூரனை அழிப்பதற்காக உள்ள இக்கோலம் பற்றி குழந்தைகளுக்கு விளக்கி சொன்னால் அவர்கள் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.