அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

திருமணத்தடை, வாஸ்து குறைபாடு, கட்டிடம் கட்ட தடை ஆகியவற்றை நீக்கும் தேவாரத்தலம்

கும்பகோணம் – நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலை வழியில் உள்ள திருவீழிமிழலை என்னும் தலத்திலிருந்து, வடக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அன்னியூர். இத்தலத்து இறைவனின் திருநாமம் அக்னிபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் கௌரி பார்வதி.

வன்னி என்றால் அக்னி என்று பொருள். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலம் 'அன்னியூர்' ஆனது. இறைவன் 'அக்னிபுரீஸ்வரர்' ஆனார். தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆனது. பார்வதி தேவி காத்யாயன முனிவரின் மகளாகப்பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்து கொண்டார். எனவே இது திருமணத்தடை நீக்கும் தலமாகும்.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு அர்ச்சனை செய்து திருவீழிமிழலை சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வீடு, வியாபாரத்தலங்களில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலத்தை வாஸ்து பரிகார கோயில் என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால் ஏழு செங்கல் கொண்டு வந்து இங்கு வைத்து வழிபட்டு தொடங்கினால், தடையின்றி கட்டிடம் கட்டலாம் என்பது ஐதீகம்.

உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்த கொதிப்பு (உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.‌

Read More
பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்

பழனி மலைக்கு அன்னக்காவடி எடுத்த சென்னைக் கவிஞர்

45 நாட்கள் சாதத்தை சூடாக வைத்திருந்த முருகனின் அருட் கருணை

பழனிமலை தெய்வம் தண்டாயுதபாணிக்கு பிரார்த்தனை செய்து கொண்டு, தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். முருகப் பெருமானுக்கு தைப்பூசத் திருநாளில், மற்ற விசேஷ நாட்களைவிட, பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வருவார்கள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. தனக்கு காவடி எடுக்க விரும்பிய பக்தனுக்கு, முருகன் செய்த அருள் லீலைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை ராயபுரம் அங்காளம்மன் கோயிலின் அருகில், துரைசாமிக் கவிராயர் என்பவர் வாழ்ந்தார். பரம்பரையாக கவிபாடும் ஆற்றலும், பக்தியும் கொண்ட குடும்பம் அவருடையது. தினமும் பழனியாண்டவர் மீது பாடல் பாடி வழிபட்ட பிறகு துறவி, ஏழைகள் என அனைவருக்கும் உணவளித்து விட்டு, அதன் பிறகே உண்பது வழக்கம். இவ்வாறு அவர் வாழ்ந்து வரும் நாளில், அவரது வருமானம் குறைந்தது. ஒரு கட்டத்தில், கடன் தருவார் யாருமின்றி வருந்தினார். என்றாலும், தன் மனைவியின் திருமாங்கல்யத்தை விற்று அதனைக் கொண்டு அன்னதானத்தை விடாமல் செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு சமயம் அவரைக் கடுமையான நோய் தாக்கியது. ஒவ்வொரு நாளும் அவர் உடல் வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் பழனி முருகனை நினைந்து அரற்றிவிட்டுப் பின்பு உறங்கி விடுவார். ஒரு நாள் இரவில் அழகிய இளைஞன் ஒருவன் அவர் முன் தோன்றினான். தனது கையிலிருந்த ஒரு தைலத்தைப் பஞ்சில் தோய்த்து, அவரது உடலில் தடவினான். கவிராயர் பேச இயலாது கை குவித்தபோது, ”அன்பரே! கவலையற்க! நாளை குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தான். கவிராயர் திடுக்கிட்டு எழுந்தார். பழனிப் பரம்பொருளை எண்ணிக் கைகுவித்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பழனிமலை முருகன் அருளால் கவிராயரது நோயின் கடுமை குறைந்து, இரண்டொரு நாளில் நன்கு குணம் பெற்றார்.

மகிழ்ச்சி அடைந்த துரைசாமிக் கவிராயர், பழனி முருகனுக்கு 'அன்னக்காவடி' எடுத்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். ரயில் வசதிகூட சரியாக இல்லாத அந்தக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனையை எப்படிச் செலுத்துவது? மிகக் கடினமாயிற்றே! எனினும், அன்னக்காவடி செலுத்துவதில் உறுதியுடன் இருந்து, அதற்கு அருள முருகன் திருவருளை வேண்டித் துதித்தார். துரைசாமிக் கவிராயரது இந்த எண்ணத்தை நிறைவேற்ற பழனிக் குமரன் திருவுளம் கொண்டான். அதையொட்டி, கவிராயர் வீட்டருகில் வசித்த குயவர் ஒருவரது கனவில் தோன்றினான். 'துரைசாமிக் கவிராயர் பழனிக்கு அன்னக்காவடி எடுக்க விரும்புகிறார். அவருக்குச் சோறு வடிக்க பானை செய்து கொடு!' என்று உத்தரவிட்டு மறைந்தான். அதேபோல், அரிசி வியாபாரம் செய்யும் கந்தன் செட்டியார் கனவில் தோன்றி, கவிராயருக்கு அரிசி கொடுக்குமாறு கூறினான். 'பானையும் அரிசியும் வரும்; பெற்றுக்கொள்' என்று கவிராயர் கனவிலும் அருளினான் முருகன். அவ்வாறே பானையும் அரிசியும் வந்து சேர்ந்தன. சோறு வடித்து, அதை இரு பானைகளிலும் (குடுவை) நிரப்பி, அன்னக் காவடியாகக் கட்டினார் கவிராயர். பழனி முருகனைப் பிரார்த்தனை செய்துகொண்டு, அன்னக்காவடியுடன் புறப்பட்டார்.

அவர் பழனி சென்றடைய 45 நாட்களாயிற்று.'துரைசாமிக் கவிராயர் அன்னக்காவடி சமர்ப்பிக்க வருகிறார். அவரை மேளதாளம், கோயில் மரியாதைகளுடன் நன்கு வரவேற்க ஆவன செய்க!' என்று கோயில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் கனவில் பழனியாண்டவர் கட்டளையிட்டார். அவர்களும் கவிராயரது வருகையை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தனர். பழனிமலை அடிவாரத்தை அடைந்தார் கவிராயர். முரசு முழங்கியது; நாதஸ்வரம், தவில் ஆகியன ஒலித்தன. மாலை மரியாதைகளுடன் துரைசாமிக் கவிராயரை வரவேற்றனர் கோயில் அதிகாரிகள். அன்னக் காவடியைச் சுமந்துகொண்டு படியேறி பழனி தண்டாயுதபாணியின் சந்நிதியை அடைந்தார் கவிராயர்.

'பழனிப் பரமனே! அன்னக்காவடி செலுத்த எளியேன் விண்ணப்பித்தபோது, அதற்கு வேண்டிய அனைத்தையும் தந்து உதவிய உமது பேரருளை எப்படிப் புகழ்வது! எமது பிரார்த்தனையை நிறைவேற்றுவதில் உமக்கு இத்தனை இன்பமா? உன் கருணைக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்!' என்று கூறி, அன்னக் கலயத்தைத் திறந்தார். ஆஹா! ஆஹா! என்ன அதிசயம்! ஒன்றரை மாதத்துக்கு முன்பு சமைத்துக் கட்டிய சோற்றில் இருந்து ஆவி மேலெழுந்தது. அப்போதுதான் சமைத்த அன்னம் போல் சூடாக இருந்தது. பழனி முருகனின் திருவிளையாடலை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் கவிராயர்.

அப்போது துரைசாமிக் கவிராயர் பக்திப் பரவசம் பொங்க பின்வரும் பாடலைப் பாடினார்.

#பல்லவி

மகிமை பொய்யா? மலைக் குழந்தை வடிவேல் முருகையா (மகிமை)

#அனுபல்லவி

உன் மகிமை என் அளவினில் செல்லாதா? என் மனத்துயரை நின் அருள் வெல்லாதா? (மகிமை)

#சரணம்

சமைத்துக் காவடி தன்னில் காட்டிய சாதம்- நின் சன்னிதி வைத்துத் துதி செய்ய

அமைத்து நாள் சென்றும் அப்போது சமையலான அன்னமாய்க் காட்டும் அதிசயம்..! (மகிமை)

இந்த நிகழ்வை கண்ட அனைவரது உள்ளமும், உடலும் சிலிர்த்தது.

Read More
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

சனி பகவானின் முடக்கு வாதத்தை நீக்கிய தலம்

மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் திருவாதவூர். இறைவன் திருநாமம் திருமறைநாதர் . இறைவியின் திருநாமம் வேதநாயகி.

சிவபெருமான் சனி பகவானின் வாத நோயைத் தீர்த்த தலம் என்பதால், இந்தத் தலம் 'வாதவூர்' என்று பெயர் பெற்றது. இத்தல ஈசனை வழிபட்டால் கை, கால் முடம், பக்கவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான வாத நோய்களும் தீரும் என்று கூறப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் அவதரித்த தலம் இது.

சனி பகவானுக்கு, மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. தான் பெற்ற சாப நீக்கத்தை, பக்தர்களுக்கு அருளும் முகமாக இந்த ஆலயத்தில், சனி பகவான் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

வாத நோயை நீக்கும் அபிஷேக நல்லெண்ணெய்

கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

தங்கள் வாத நோய் தீர வேண்டும் என்பதற்காக பல வெளி மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.

Read More
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்

குடிசையில் வீற்றிருந்து சகல வளங்களையும் அள்ளித்தரும் அம்மன்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வடக்கே, அரை கிலோ மீட்டர் தொலைவில், மிகவும் தொன்மை வாய்ந்த முண்டகக்கண்ணி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வழிபடும் மகிமை வாய்ந்த புண்ணிய திருத்தலம் இதுவாகும். அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில், திருவிழாக் கோலம் பூண்டு விடும்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அப்பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது, அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி காட்சி தந்தாள் என்கிறது இத்தலத்தின் வரலாறு. மேலும் தாமரை மொட்டு வடிவத்திலேயே, தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாக இக்கோவில் புராணம் கூறுகிறது. முண்டகம் என்றால் தாமரை என்றும் பொருள் உண்டு. அம்மன் விரிந்த பெரிய விழிகளைக் கொண்டவள் என்ற பொருளில் 'முண்டகக் கண்ணியம்மன்' என்கின்றனர். அம்பிகை, தாமரை போன்ற கண்ணுடையாள் என்றும் கொண்டாடுகின்றனர்.

முண்டகக்கண்ணி அம்மன். வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி,எளிமைக்கு இலக்கணமாக ஓலைக் குடிசையில் எழுந்தருளியிருக்கிறாள். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இருந்தாலும், அன்னை வீற்றிருக்கும் கருவறையை அலங்கரிப்பதோ எளிமையான தென்னங்கீற்றால் வேயப்பட்ட கொட்டகைதான். தங்களுக்கு கேட்ட வரம் கொடுத்து அருள் பாலிக்கும் அன்னைக்கு, கருவறை கட்டிடம் கட்ட அவளின் பக்தர்கள் முயன்றபோது, அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், தனக்கு தென்னங்கீற்றால் அமைந்த கூரை மட்டுமே விருப்பம் என பக்தர்களின் கனவில் அம்பாள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. மேலும் தல வரலாறும் தனது மக்களை வெம்மையில் இருந்து காக்கவே, அன்னை இவ்வாறு குடிகொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. சுயம்புவாக அம்மன் தலையில் நாக கிரீடம் அணிந்து கொண்டு நடுவில் சூல வடிவம் கொண்டு இரண்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இடதுபுறமாக உற்சவர் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக காட்சி தருகின்றாள். முண்டகக்கண்ணி அம்மனை கருவறை என்பதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அடிக்கடி நீர் ஊற்றி ஈரமாகவே வைத்துள்ளனர். வெள்ளி கவசம் சாத்திய பெரிய சந்திரபிரபை கீழ் சுயம்பு அம்மன் ஆனந்தமாய் விற்றிருக்கிறாள்.

கருவறையின் பின்புறம் தல மரமான, ஆலம் விழுதுகள் இல்லாத, அபூர்வ மரமான கல்லால மரமும், புற்றுடன் மூன்றடி உயர கல் நாகமும் அமைந்துள்ளன. பின்புறம் உள்ள புற்றில் வாழும் நாகம், நாள்தோறும் இரவில் அன்னையை வணங்கி வழிபட்டு செல்கிறாள் என்பது ஐதீகம். இதனால் இத்தலத்தை ராகு கேது பரிகார தலம் என்று சொல்வார்கள் .

பிரார்த்தனைகள்

இக்கோவிலில் அம்பாளுக்கு பூஜித்த வேப்பிலை, மஞ்சள், எலுமிச்சை மற்றும் தீர்த்தமே பிரதான பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. அம்மை நோய், தீராப்பிணி, திருமணத்தடை, கல்வி, மகப்பேறு, வீடு வாகன வசதிகள் என வேண்டுவோர் வேண்டியதை வேண்டியவாறுக் கொடுக்கும் கற்பகத்தரு முண்டகக்கண்ணி அம்மன். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட, அவற்றிலிருந்து முழுமையாக விடுபடலாம். நாகதோஷம் இருப்பவர்கள், முண்டகக்கண்ணி அம்மனை வழிபட்டு, நாககன்னி சிலையை பிரதிஷ்டை செய்வதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்பிறகு, 48 நாள்களுக்கு நீரிலேயே நாககன்னியை வைத்திருந்து, பின் அதனை ஆலயத்தின் முகப்பில் இருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, அதற்கு அபிஷேகமும் செய்து வழிபடுகிறார்கள். கண் தொடர்பான நோய்கள் தீர முண்டகக்கண்ணியை வழிபட விரைவில் தீரும்.

Read More
பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

பெருங்குடி அகத்தீஸ்வரர் கோவில்

மங்களாம்பிகை லோக தட்சிணாமூர்த்தி

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் அமைந்துள்ளது பெருங்குடி கிராமம். இத்தலத்து இறைவனின் திருநாமம் அகத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சிவகாமசுந்தரி.

இக்கோவிலின் வெளிச்சுற்று சுவரில் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் கோலமானது மிகவும் சிறப்புடையது. அவர் மங்களாம்பிகை லோகத்தில் எந்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாரோ அதே கோலத்தில் இங்கு நமக்கு அருள்பாலிக்கிறார். அவர் காலின் கீழ் உள்ள பூதகனின் தலைப்பாகம், வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாதவாறு கிழக்கு திசை நோக்கி இருக்கின்றது. மேலும் அவருக்கு கீழே உள்ள நந்தியம்பெருமான் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் தன் தலையை மட்டும் மேற்கு திசை நோக்கி திருப்பி இருப்பதும், ஒரு அபூர்வமான தோற்றமாகும்.

Read More
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில்

ஆதிசேஷன் தனிச்சன்னதியில் எழுந்தருளியிருக்கும் ஒரே திவ்யதேசம்

சென்னைக்கு மேற்கே 29 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநின்றவூர். மூலவர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள். தாயார் 'என்னை பெற்ற தாயார்'. பக்தவத்சலப் பெருமாள் 11 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பஞ்சாயுதம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

ஒருசமயம் திருமாலிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு ‘திரு’ ஆகிய மகாலட்சுமி இத்தலத்தில் வந்து நின்றதால் 'திருநின்றவூர்' என்று ஆனது. மகாலட்சுமியை சமாதானம் செய்ய சமுத்திரராஜன் வந்திருந்தார். மகாலட்சுமி அதற்கு சமாதானம் ஆகவில்லை. உடனே சமுத்திரராஜன் வைகுண்டம் சென்று, திருமாலிடம் 'தாங்களே திருநின்றவூர் சென்று தேவியை இங்கு அழைத்து வர வேண்டும்'என்று கூறினார். சமுத்திரராஜன் இத்தலம் வந்து மகாலட்சுமியைப் பார்த்து, 'பாற்கடலில் நீ பிறந்ததால் நான் உனக்கு தந்தையாக இருந்தாலும் இப்போது நீ என்னைப் பெற்ற தாயார், அதனால் உடனே நீ வைகுண்டம் செல்வாயாக' என்று கூறினார், பெருமாளும் வந்து மகாலட்சுமியை சமாதானம் செய்கிறார். மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறார். பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் இத்தலம் வந்ததால், பெருமாளுக்கு பக்தவத்சலன் என்ற பெயர் வழங்கலாயிற்று. சமுத்திரராஜனும் மகாலட்சுமியை என்னைப் பெற்ற தாயே என்றதால் அப்பெயரே நிலைத்துவிட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

குபேரன் ஒரு சமயம் தன் நிதியை இழந்து வாடியபோது இத்தல தாயாரை வழிபட்டு மீண்டும் அனைத்தையும் பெற்றான்.

பொதுவாக பெருமாள் சயனித்திருக்கும் கோலத்தில் இருக்கும் போது, அவருடன் நாம் ஆதிசேஷனை தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில் ஆதிசேஷன் தனிச் சன்னதியில் எழுந்தருளி இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத விசேட அமைப்பாகும்.

ஆதிசேஷன் சந்நிதியில் புதன்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி பால் பாயாசம் படைத்து அவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய பலனும் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் அத்தடை நீங்கும்.

ஆதிசேஷன் சந்நிதியில் புதன்கிழமைதோறும் நெய்விளக்கு ஏற்றி பால் பாயாசம் படைத்து அவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மாங்கல்ய பலனும் கிட்டும். திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் அத்தடை நீங்கும்.

காணாமல் போன பொருளைக் கண்டு பிடிப்பதற்கும் - ஆட்களை தேடி பிடிப்பதற்கும், அநியாயமாக சொத்தை பிடுங்கி கொண்டவர்களிடமிருந்து இழந்த சொத்தை முறைப்படி மீட்பதற்கும், இழந்த பதவியை மீண்டும் பெறுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், வேலை கிடைப்பதற்கும், வியாபாரத்தில் இழந்த நஷ்டத்தை மீண்டும் லாபமாக மாற்றுவதற்கும், பெரியவர்கள் செய்யாமல் போன பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும் திருநின்றவூர் வந்து ஸ்ரீ பக்தவச்சலப் பெருமாளை மனமார பிரார்த்தனை செய்தால் நல்ல பலனை உடனே அடையலாம்.

Read More
கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில்

மயிலை வாகனமாகக் கொண்ட கணபதி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க, கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை 'அண்ணகோஷஸ்தலம்' என்று புராணங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன. இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்துக் காத்தருள்கிறார் மகா கணபதி. இந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் விளங்குகிறார்.

பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால், இக்கோயிலில் உள்ள கணபதிக்கும் மயில்தான் வாகனமாய்த் திகழ்கிறது. எனவே, இந்தக் கணபதியை மயூரிவாகனன் என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு சமயம், அகத்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் 'சல சல' என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம், அவரை கோபம் அடைய செய்தது. அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட, சோழ தேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவ பூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகத்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத் தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.

வினோதமான விநாயக சதுர்த்தி பூஜை

இவ்வூரில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவது சற்று வினோதமான வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று இந்த ஊர் மக்கள், களிமண்ணில் பிள்ளையார் செய்து வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருள்களை எடுத்துக் கொண்டு அனைவருமே மகா கணபதி ஆலயத்திற்கு வருகின்றனர். கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி பூஜை, நிவேதனம் எல்லாம் செய்கின்றார்கள்.

Read More
காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்

பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தலம் காங்கயம்பாளையம். இத்தலத்தில் காவேரி ஆற்றின் காவிரியின் நடுவில், நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. பாவம் நீக்கும் புண்ணியம்பதியாம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். நீர் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவைப் போன்றே, இங்கும் சிவபெருமான் காவேரி ஆறு சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.

ஒரு சமயம், கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான் - பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன் செய்ய சிவபெருமான் அகத்தியரை தென்புலம் அனுப்பினார். அத்துடன், வேறு சில அரும் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது, நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் தெரிவிக்கின்றன புராணங்கள்.

தென்புலம் வந்த அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள, காவிரி நதி நீர் ஓடும் பாதையின் மையப்புள்ளியில் மணல் லிங்கம் அமைத்து,சிவ பூஜை செய்தால் தன்னுடைய பாவங்கள் நீங்கும் என எண்ணினார். காவிரி நதி நீர் பாதையின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகப்பெருமான் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து நடு இடத்தைத் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான், இக்கோவிலில் முருகப்பெருமான், தெற்கு நோக்கிய பிரமச்சாரியாக வலது காலை முன்வைத்தும் இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் காட்சி தருகிறார். முருகப்பெருமானின் இந்தக் கோலம் , வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் ஆகும்.

கிளி ஏந்திய முருகப்பெருமான்

மேலும் முருகப் பெருமான் தனது இடக்கரத்தில் கிளி ஒன்றை வைத்திருக்கிறார். பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது மங்கலப் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில்தான் முருகப் பெருமான் அகத்தியரை சந்திக்கும் போது தன்னுடன் கிளியை எடுத்துக் கொண்டு சென்றார் என்று குறிப்பிடுகிறார்கள்.

Read More
திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

திலதர்ப்பணபுரி (திலதைப்பதி) முக்தீஸ்வரர் கோவில்

இப்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கும் பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள தேவாரத்தலம் திலதர்ப்பணபுரி . இத்தலம் தற்போது திலதைப்பதி என்று அழைக்கப்படுகிறது. திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி ஆகும். ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன. இறைவன் திருநாமம் முக்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் சொர்ணவல்லி.

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும். இக்கோவிலில் பித்ரு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் ஆகியவை பார்க்கத் தேவையில்லை. இத்தலத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.

பீஷ்மாஷ்டமி தர்ப்பணம்

தை மாதம் ரதசப்தமிக்கு மறுநாள் வரும் அஷ்டமி தினம், பீஷ்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். உலக நன்மைக்காகவும், தன்னுடைய தந்தைக்காகவும் செய்த தியாகத்திற்கு பிரதிபலனாக, பீஷ்மர் தான் விரும்பாமல் தன்னுடைய உயிர் உடலை விட்டு பிரியாது என்னும் வரத்தை பெற்றார். இதனால் பாண்டவர்கள்,கௌரவர்கள் என இரு தரப்புக்கும் பிரியமான பிதாமகர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.

மஹாபாரதப் போரில் , பீஷ்மர் அர்ச்சுனனின் அம்புகளால் வீழ்த்தப்பட்டு அம்புப்படுக்கையில் கிடந்தாலும், தான் பெற்ற வரத்தின் காரணமாக, மோட்ச காலமான உத்தராயண காலத்தில் உயிர் துறக்க விரும்பி தன் மரணத்தை தள்ளிப் போட்டு வந்தார். பீஷ்மர் மரணப் படுக்கையில் இருந்தபோது,மஹாவிஷ்ணுவை வேண்டிக் கொண்டார். அவருக்கு கிருஷ்ணபரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டி அருளினார். அந்த சமயத்தில் பீஷ்மர் அருளியதே விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகும். அப்போது மோட்சம் அளிக்கும் உத்தராயண காலம் ஆரம்பமாகிவிட்டதால், பீஷ்மர், தன்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆனால், உயிர் பிரியவில்லை. உத்தராயண காலம் தொடங்கியும் தன்னுடைய உயிர் பிரியாததைக் கண்டு மனம் வருந்தி வியாசரிடம் விளக்கம் கேட்டார் பீஷ்மர். அதற்கு வியாசர், பீஷ்மர் செய்த பாவச்செயலை, அதாவது திரௌபதியை கௌரவர்கள் மானபங்கப் படுத்தியபோது தடுக்காததை, அவரிடம் எடுத்துரைத்தார். தன்னுடைய மாபெரும் தவறை உணர்ந்து கொண்ட பீஷ்மர், தன்னுடைய உடலை எரிக்கும் சக்தியை, சூரிய தேவனிடம் இருந்து பெற்றுத் தருமாறு வியாசரிடம் கேட்டுக்கொண்டார். உடனே வியாசரும், சூரிய சக்திக்கு நிகரான எருக்க இலைகளைக் கொண்டு பீஷ்மரை அலங்கரித்தார். இதையடுத்து நிம்மதியடைந்த பீஷ்மர் தியான நிலைக்கு சென்று மோட்சம் பெற்றார்.

பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தைக் கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர். பீஷ்மர், ரதசப்தமி முடிந்த மறுநாளான அஷ்டமி திதியன்று தன்னுடைய உயிரைப் போக்கிக்கொண்டார். அந்த அஷ்டமியே பீஷ்மாஷ்டமி என்று கூறப்படுகிறது.

பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

Read More
திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

திருப்பதி ரத சப்தமி உற்சவம்

தை மாதத்தில், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சப்தமியையே ரத சப்தமி என்று அழைக்கிறார்கள். ரத சப்தமி நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன என விளக்குகிறது புராணம்.

திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் விசேஷமானது. இந்தத் திருவிழாவின்போது, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மலையப்பசாமி ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். ஆனால் தை மாதம் ரத சப்தமியன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும்,ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். ரதசப்தமி அன்று நடைபெறும் வாகன சேவைகள்

சூரிய பிரபை வாகனம் - அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை.

சிறிய சே‌ஷ வாகனம் - காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை

கருட வாகனம் - பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை

அனுமந்த வாகனம் - மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை

கல்ப விருட்ச வாகனம் - மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை

சர்வ பூபால வாகனம் - மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை

சந்திரபிரபை வாகனம் - இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ‘ரதசப்தமி’. ரத சப்தமி நாளில் சூரிய பகவானின் பெயரில் தானம் செய்யவது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஏழு வகையான பாவங்களைச் செய்கிறான் என்று கூறப்படுகிறது. இவை வேண்டுமென்றே, தற்செயலாக, வாய் வார்த்தையாலும், உடல் செயலாலும், மனதாலும், முற்பிறவியிலும் செய்த பாவங்கள். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபடுவதால் இந்த பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள் https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr-psams

2. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை

https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw

3. திருவேங்கடவனின் மாமனார்

https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr

Read More
தாயமங்கலம் முத்துமாரியம்மன கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தாயமங்கலம் முத்துமாரியம்மன கோவில்

தாலி பாக்கியம் தந்தருளும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இருக்கிறது தாயமங்கலம் முத்துமாரியம்மன கோயில். இந்தப் பகுதியிலிருக்கும் 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் தந்து மங்கல வரம் அருளும் நாயகியாகவும் திகழ்கின்றாள் முத்துமாரியம்மன. இந்த ஊர் 'தாய்மங்கலம்' என்றே அழைக்கப்பட்டு, காலப்போக்கில் தாயமங்கலம் என மருவியது. இங்குள்ள தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால், திருமண வரம் வேண்டுபவர்கள், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து, வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தக் கோயிலில் அம்பாள் நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் கேட்கும் வரங்களை வழங்கும் கற்பக விருட்சமாகத் திகழ்கின்றார்.

தல வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், முத்து செட்டியார் என்ற ஒரு வியாபாரி சிவகங்கையில் வசித்து இருந்தார். அவர் மதுரை மீனாட்சியம்மன் மீது மாறாத பக்திகொண்டவர். அவருக்கு நெடுநாள்களாகவே குழந்தை இல்லை. ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வியாபார நிமித்தமாக செல்லும் அவர், தவறாமல் மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் வழிபட்டு, குழந்தை வரம் வேண்டுவார்.

அப்படி ஒருமுறை, அவர் மதுரையிலிருந்து தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வந்த வழியில், சிறுமியான ஒரு பெண்குழந்தை பாதை தெரியாமல் அழுதுகொண்டிருந்தது. இதைப் பார்த்த அவருக்கோ மனம் மிகவும் வேதனைப்பட்டது. சிறுமியிடம் ''உன்னுடைய பெயர் என்னம்மா? ஏன் எவரும் இல்லாத இந்தக் காட்டு வழியில் அழுது கொண்டிருக்கிறாய்'' என விசாரித்தார். தனது பெயர் முத்துமாரி என்றும், தனது தாய் தந்தையிடமிருந்து பிரிந்துவிட்டேன் என்றும் எங்கு போவதென வழிதெரியவில்லை என்றும் கூறி தேம்பினாள். ''கவலைப்படாதே அம்மா! உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றேன்,' எனக்கூறி அந்தச் சிறுமியை தன்னுடன் அழைத்துப்போனார். மதுரை மீனாட்சியே இந்தக் குழந்தையை தனக்குத் தந்ததாக எண்ணினார்.

அவர்கள் சென்ற வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. பயணக்களைப்பாக இருந்ததால், சிறுமியை கரையில் உட்கார வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கப் போனார். ஆனால், குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்து பார்த்தால், குழந்தையைக் காணவில்லை. இதனால் ரொம்பவே மனம் வெறுத்துப்போன அந்த வணிகர் தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் கூறி வருந்தினார். இரவு உணவைகூட சாப்பிடாமல், படுக்கப்போனவர் அப்படியே கண்ணயர்ந்து விட்டார். அவரது கனவில், 'சிறுமியாக வந்தது நான்தான் என்றும் ஊருக்கு அருகாமையிலிருக்கும் கள்ளிக்காட்டில், நான் உறைய இருக்கிறேன் என்றும் கோயில் கட்டி வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களை அருளுவேன் என்றும் கூறி மறைந்தாள் முத்துமாரி. படுக்கையில் இருந்து எழுந்த வியாபாரி, தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறினார். மறுநாள் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக ஆற்று மணலில் அம்மன் சிலையை அமைத்து வழிபடத்தொடங்கினார். இவரைத் தொடர்ந்து ஊர் மக்களும் வழிபட்டனர். நாளடைவில் அந்தப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமானாள் முத்து மாரியம்மன்.

அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலுக்கு வந்து வணங்கி இங்கிருந்து தீர்த்தம் பெற்றுச்சென்றால் நோய் குணமாகும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதுதவிர திருமண வரம், குழந்தைபாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் வருவதையும், பிரார்த்தனை நிறைவேறி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களையும் இங்கு காணலாம்.

Read More
இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்

இலுப்பைக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில்

தலையில் கிரீடம் அணிந்து காட்சி தரும் அபூர்வ தட்சிணாமூர்த்தி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இலுப்பைக்குடி. இறைவன் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி.

சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடம் அணிந்து காட்சி கொடுப்பது, வேறு எந்த தலத்திலும் நாம் காணமுடியாத அரிய காட்சியாகும்.

நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட குட்டி விநாயகர்

சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.

Read More
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

புதன் கிரகத்திற்கான பரிகாரத் தலம்

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.இத்தலம் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது இக்கோவிலில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசித்து, பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.

உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம். புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம். புத பகவானின் ஸ்தான பலன் சரியாக அமையப் பெறாத ஜாதகர்கள், இந்தத் திருத்தலத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும், புத பகவானையும் தரிசித்து வழிபாடுகள் செய்ய வேண்டும். புத பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி, பாசிப்பருப்பு சேர்த்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க வேண்டும்.. இவ்வாறு செய்வதால் புத தோஷம் நீங்கப் பெறும். புத பகவான் அருளால், கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவை கிட்டும்.

திருவெண்காடு புதன் பகவானின் சன்னதியில் 17 தீபங்களை ஏற்றி, மற்றும் அந்த கோவிலை 18 முறை சுற்றி வந்து வழிபட்டால், நம் வாழ்வில் வரும் துன்பங்களை வராமல் தடுக்கலாம். மேலும் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

Read More
கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கஞ்சாம் நிமிஷாம்பாள் கோவில்

எதிரி பயம் போக்கும் நிமிஷாம்பாள்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். நிமிஷாம்பாள் 'என்பதற்கு கண நேரத்தில் வரம் அளிப்பவள்' என்பது பொருள். 'கிருஷ்ண சிலா' என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது.

பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்

முன்னொரு காலத்தில், முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.

பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி 'நிமிஷாம்பாள்' என பெயரிட்டான்.

கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் எதிரி பயம் நீங்கும். திருமணத் தடைகளால் பாதிப்புற்ற பிள்ளையையோ, பெண்ணையோ இந்தக் கோயிலுக்கு அழைத்து வந்து, வேண்டிச் சென்றால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர்.

Read More
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட தலம்

சிவலிங்கத்தின் பின்புற தரிசனம் கிடைக்கும் கோவில்

மதுரை மாநகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி இணையும் சந்திப்பில் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் அமைந்துள்ளது. மக்கள் இப்பிறப்பில் செய்த பாவங்களை சிவபெருமான் இந்த பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால் இக்கோவில் மூலவர் சொக்கநாதரை, இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கின்றனர். சிவபெருமான் தன்னை தானே அர்ச்சித்துக்கொண்ட சிறப்புடையது இந்தக் கோவிலாகும். அன்னை மீனாட்சி மத்தியபுரி அம்பாள் என்ற பெயரில் இக்கோவிலில் எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக செம்பில்தான் ஸ்ரீசக்கரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியில், கல் ஸ்ரீசக்கரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

எந்தக் கோவிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும் நமக்கு கிடைக்கிறது. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது.

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாக பிறந்த மீனாட்சியை, ஈசன் சுந்தரேஸ்வரராக வந்து மணந்து கொண்டார். பின் பாண்டிய மன்னராக பொறுப்பேற்க தயாரானார். அரசபீடத்தில் அமர்வதற்கு முன்தாக சிவபூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜை செய்தார். இதன் அடிப்படையில் இங்கு சிவனே, சிவலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார். இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது. லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.

திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் இக்கோயில் அம்மனுக்கு 'மாங்கல்ய வரபிரசாதினி' என்ற பெயருமுண்டு. மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பூமித் தலமென்பதால் புது கட்டிடம் கட்டத் துவங்குபவர்கள், பிடி மண்ணை எடுத்து வந்து வழிபடுவதுண்டு. தலைமை பதவி கிடைக்கவும், பணி உயர்வு பெறவும் சிவனுக்கு, 'ராஜ உபச்சார அர்ச்சனை' செய்து வேண்டி கொள்கிறார்கள்.

Read More
திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்

திருநாங்கூர் பதினொரு பெருமாள்கள் கருட சேவை

பெரிய திருவடி எனப்படும், கருடாழ்வார் மீது பெருமாள் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை'. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

108 திவ்ய தேசங்களில் திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. அவை

1. திருமணிமாடக் கோவில்

2. திருக்காவளம்பாடி

3. திருஅரிமேய விண்ணகரம்

4. திருவண்புருடோத்தமம்

5. திருச்செம்பொன்செய் கோவில்

6. திருவைகுந்த விண்ணகரம்

7. திருத்தேவனார்த் தொகை

8. திருத்தெற்றியம்பலம்

9. திருமணிக்கூடம்

10. திருவெள்ளக்குளம்

11. திருப்பார்த்தன்பள்ளி

தை அமாவாசைக்கு மறுதினம் மதிய வேளையில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திவ்ய தேசங்களில் இருந்து, ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோவில்), ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோவில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள், தங்க கருட வாகனத்தில் , திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருள்வார்கள். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி, ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார்.

அதையடுத்து, இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும்.

மேலும் பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசித்த புண்ணியம்

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது. அதாவது, இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால், அதற்கு ஈடான இன்னொரு திவ்யதேச பெருமாளை தரிசித்த புண்ணியமும் கிட்டும். மணிமாடக் கோவில் எம்பெருமானை வழிபடுவதால், இமயமலை பத்ரிநாத்திலுள்ள திருபத்ரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும். திருவைகுந்த விண்ணகரம் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீவைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர். அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரை பெருமாளை சேவித்த பாக்கியததை அருள்கிறார். திருத்தேவனார் தொகை பெருமாள், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தை பெருமாளை தரிசித்த பலனை அருள்கிறார். திருவண்புருஷோத்தம பெருமாளை தரிசித்தால் ராமன் அவதரித்த அயோத்தி திவ்ய தேசத்தை தரிசித்த பலன் கிட்டும். செம்பொன்செய் கோவில் பெருமாள் காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். திருத்தெற்றியம்பலம் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளைச் சேவித்த புண்ணியத்தைத் தருவார். திருவெள்ளக்குளம் பெருமாள் திருமலை வேங்கடநாதனை தரிசித்த புண்ணியம் தருவார். திருமணிக்கூடம் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வணங்கிய நற்பலன்களைத் தருவார். திருக்காவளம்பாடி பெருமாள், காஞ்சிபுரம் பாடக பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். திருபார்த்தன்பள்ளி பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வழிபட்ட பலனை தருகிறார்.

Read More
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்

தை அமாவாசை நாளில் முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்க வழிபட வேண்டிய தலம்

ஒவ்வோர் ஆண்டின் தொடக்கமான சித்திரை முதல்நாள், ஆடிமாதப் பிறப்பு, ஐப்பசி மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு மற்றும் அனைத்து அமாவாசை தினங்களும் புண்ணிய காலங்கள். அனைத்து அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம் என்ற போதும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை அனைத்து அமாவாசைகளிலும் வழிபாடு செய்ய இயலாதவர்களாக இருந்தால் தவறாமல் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாட்டைச் செய்ய வேண்டியது அவசியம். காரணம், ஆடிமாத அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்படுகிறார்கள். இரண்டு மாதப் பயணத்தில் புரட்டாசி மாதம் அவர்கள் பூமிக்கு வந்து சேர்கிறார்கள். புரட்டாசி மாதம் முன்னோர்கள் பூமியில் உறையும் காலம். அதனால்தான் அந்த மாதத்தைப் புனிதமான மாதமாகக் கருதிக் கடைப்பிடிக்கிறோம். உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கியிருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்லமுறையில் போற்றி அனுப்புவோமோ அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளைச் செய்து வழிபட்டு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

சீர்காழியிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலமாக திருவெண்காடு விளங்குகிறது. காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் ஆறு புண்ணிய க்ஷேத்திரங்களில், திருவெண்காடும் ஒன்று. இந்தக் கோயிலில் அக்னி தீர்ததம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.

சந்திர நீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில், ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியை விட மூன்று மடங்கு பலனைத் தரக்கூடிய இந்த ருத்ர பாதத்தை, முறையாக வழிபட்டால், நம்முடைய 21 தலைமுறை பாவ வினைகளை நீக்கும் என்பது இந்தக் கோவிலில் இருக்கும் ஐதீகமாகும் .

தை அமாவாசை நாளில் வழிபட்டால் நன்மை பயக்கும் பிற புண்ணியத் தலங்கள் திலதர்ப்பணபுரி, திருவிளமர், ராமேஸ்வரம், தீர்த்தாண்டதானம், பவானி கூடுதுறை, கருங்குளம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருக்கண்ணபுரம், திருப்புல்லாணி, திருப்புள்ளம் பூதங்குடி ஆகியவை ஆகும்.

Read More
சமயபுரம் மாரியம்மன்  கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

சமயபுரம் மாரியம்மன் கோவில்

ஆங்கிலேய படைத்தளபதி சுட்ட தோட்டாக்களைப் பூக்களாக ஏற்றுக் கொண்ட சமயபுரம் மாரியம்மன்

பதினெட்டாம் நூற்றாண்டில், திருச்சி நகரை கைப்பற்றுவதில் பிரஞ்ச் படைகளுக்கும், ஆங்கிலேய படைகளுக்கும் இடையே போர் மூண்டது. ஆங்கிலப் படைகளுக்கு ராபர்ட் கிளைவ் தலைமை ஏற்று நடத்தினார். ராபர்ட் கிளைவ் தலைமையின்கீழ் டால்டன், லாரன்ஸ், ஜின் ஜின் என்ற தளபதிகள் பணியாற்றினர். ஆங்கிலப் படை தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள், போர் தளவாடங்கள் ஆகியவற்றை சமயபுரத்தில் ஒரு கொட்டகை அமைத்து பாதுகாத்தனர். அதனால் இரவு நேரத்தில், ஊர் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று தடை உத்தரவு போட்டனர். அப்போது ராபர்ட் கிளைவ் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால், தளபதி ஜின் ஜின், நள்ளிரவில் ஆயுதக் கிடங்கை பாதுகாக்க சுற்றி வந்து கொண்டு இருந்தான்.

அப்போது மஞ்சள் ஆடை உடுத்தி, ஒரு பெண் இரண்டு கைகளிலும் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஜின் ஜின் நிற்குமாறு கட்டளையிட்டான். ஆனால், அந்தப் பெண்ணோ நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தாள். உடனே அந்தப் பெண்ணை நோக்கி தன் கைத் துப்பாக்கியால் சுட்டான். ஆனால் என்ன ஆச்சரியம் ! அவன் கை துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் எல்லாம் பூக்களாக மாறி அந்தப் பெண்ணின் தலை மீது விழுந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர் மக்கள்,'நீங்கள் சுட்டது எங்கள் தெய்வம் சமயபுரம் மாரியம்மனைத்தான். நீங்கள் பெரிய தெய்வ குற்றத்தை இழைத்து விட்டீர்கள்' என்றார்கள்.அதற்கு ஜின் ஜின், ' வந்தது உங்கள் தெய்வம் மாரியம்மன் என்றால் கோவிலுக்குள் இப்போது அந்த தெய்வம் இருக்க முடியாது. வாருங்கள் கோவிலுக்குள் சென்று பார்ப்போம்' என்று ஊர் மக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தான். அப்போது கருவறையில் அம்மனின் உருவத்தைக் காண முடியவில்லை. திடீரென ஒரு பேரொளி கருவறையை நிரப்பியது. அதன்பின்னர் மக்களால் அம்மன் உருவத்தைப் பார்க்க முடிந்தது. மக்கள் அனைவரும் சமயபுரம் மாரியம்மனை விழுந்து வணங்கினார்கள். தளபதி ஜின் ஜினுக்கு உடனே கண் பார்வை பறி போனது. பின்னர் ஊர் மக்களின் அறிவுரையை கேட்டு, ராபர்ட் கிளைவும், ஜின் ஜினும் சமயபுரம் மாரியம்மனிடம் மன்னிப்புக் கேட்டு வணங்கினர். மூன்று நாள் கழித்து தளபதி ஜின் ஜினுக்கு கண்பார்வை மீண்டும் கிடைத்தது. ராபர்ட் கிளைவிற்கு அம்மை நோயும் நீங்கியது.

இந்த நிகழ்விலிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Read More
புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்

புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்

சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அபூர்வ அமைப்பு

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தலம் புளியரை. இறைவன் திருநாமம் சதாசிவ மூர்த்தி. இறைவியின் திருநாமம் சிவகாமி. புளிய மரத்தடியில் சிவபெருமான் காட்சி அளித்ததால், இத்தலம் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.

கோவிலுக்கு செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பொதுவாக சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாகும். நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

மூலவராக சதாசிவ மூர்த்தி விளங்கினாலும், தட்சிணாமூர்த்திக்கே சிறப்புத் தலமாக பார்க்கப்படுகின்றது. யோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள், கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கே வந்து இவரை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். தாலி பாக்கியம் கிட்டும், தார தோஷம் நிவர்த்தியாகும், குழந்தைப்பேறு, தொழில் வளம் முதலான சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read More
ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்

குரு, இராகு, கேது தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம்

பெருமாள் தானாகவே, விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்வார்கள். வியக்தம் என்றால் வெளிப்படுதல் என்று பொருள். ஸ்வயம் வியக்தம் என்றால் இறைவன் சுயமாகவே வெளிப்பட்ட திருத்தலம் என்று பொருள். நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களாகும். ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டத்தில், விருத்தாசலத்தில் இருந்து 24 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ‘முஷணம்’ என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்தத் திருத்தலத்துக்கு வரும் அடியார்களின் பாபங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இவ்வூர் அபகரித்து விடுவதால் (முஷணம் செய்வதால்) இவ்வூர் ‘ஸ்ரீமுஷ்ணம்’ என்று பெயர் பெற்றது.

மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு. தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது.

கருவறையில், மேற்கு நோக்கியபடி பூவராக சுவாமியின், திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. பன்றிக்கு மிகவும் விருப்பமானதான கோரைக் கிழங்கு இப்பெருமாளுக்குச் சிறப்பு பிரசாதமாக நிவேதனம் செய்யப்படுகிறது. இப்பிரசாதத்திற்கு, முஸ்தாபி சூரணம் என்று பெயர்.

பூவராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன. குரு, இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும். தவிர புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது. இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள். தவிர விபத்துக்குள்ளான வாகனங்களை ரிப்பேர் செய்த பின்பு இங்கு ஓட்டி வந்து பூவராக பெருமாளிடம் வழிபட்ட பின்னர் ஓட்டுகின்றனர்.

Read More