
தலத்தின் தனிச்சிறப்பு
காசிக்கு சமமான சிவ தலஙகள்
இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க நினைப்பது காசி விஸ்வநாதர் கோவில்தான். அதிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் தங்களின் இறுதிக்காலத்தை காசிக்கு சென்று இக்கோவிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானை தரிசித்து கங்கைக் கரையிலேயே தங்களின் இறுதி நாட்களை முடித்துக்கொள்ள ஆசைப்படுவதுண்டு. தமிழகத்திலும் காசிக்கு நிகரான கோவில்கள் உள்ளன.
"ஸ்வேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம் சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ ஷேத்திர ஸமான ஷட்" என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகமும் உண்டு. அதன்படி திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை, சாயாவனம், ஸ்ரீவாஞ்சியம், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) என்ற இந்த ஏழு சிவன் கோவில்களும் காசிக்கு சமமான கோவில்களாகும். இங்கு சென்று வழிபட்டால், காசிக்குச் சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
.
பக்தனுக்காக கரும்பு தின்ற திருமலை வெங்கடேசப் பெருமாள்
ஹாதிராம் பாவாஜி என்ற ஒருவர் வடநாட்டைச் சேர்ந்தவர். திருப்பதி பெருமாளின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் பக்தியை ஏற்று வெங்கடேசப் பெருமாள், பாவாஜி தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். தன்னுடன் சொக்கட்டான் விளையாடி அருள் செய்ய வேண்டும் என்று ஹாதிராம் பாவாஜி, வெங்கடேசப் பெருமாளைக் கேட்டுக கொண்டார். வெங்கடேச பெருமாளும் அதையேற்று ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாடினார்.
ஒருநாள் ஹாதிராம் பாவாஜியுடன் சொக்கட்டான் விளைடாச் சென்ற பெருமாள் தான் அணித்திருந்த மாலை (ஹாரம்) ஒன்றை ஹாதிராம் பாலாஜி தங்கியிருந்த மடத்திலேயே விட்டுச் சென்று விட்டார். ஹாரத்தைக் கண்டெடுத்த ஹாதிராம் பாலாஜி, காலையில் திருப்பதி கோயிலுக்குச் சென்று கொடுத்து விடலாம் என்று எண்ணினார். காலையில் திருப்பதி கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற அர்ச்சகர்கள் ஹாரம் இல்லாததைக் கண்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஹாரத்தை வைத்திருந்த ஹாதிராம் பாலாஜியை, திருடன் என்று அதிகாரிகள் முடிவெடுத்து தண்டித்தனர். ஹாதிராம் பாலாஜி, பெருமாளே நேரில் வந்து சொக்கட்டான் விளளயாடிய உண்மையை சொல்லியும் யாரும் அவரை நம்புவதாக இல்லை. பாலாஜியை சிறை வைத்தனர். அவரிடம் நீங்கள் சொல்வது உண்மையானால் இந்த அறையிலுள்ள கரும்புக் கட்டுக்கள் அனைத்தையும் நீங்களே தின்று தீர்க்க வேண்டும். அப்படியில்லாவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நிபந்தனை விதித்தனர். ஹாதிராம் பாலாஜி பக்தியுடன் பெருமாளை தியானிக்கத் தொடங்கினார். நள்ளிரவில் யானையாக வந்த பெருமாள் அனைத்து கரும்புக் கட்டுகளையும் தின்று தீர்த்து தனது பக்தனின் பெருமையை உலகறியச் செய்தார்.
திருமலையிலிருந்து பாபவிநாச தீர்த்தம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோவிலில் ஹாதிராம் பாவாஜியின் அதிஷ்டானம் உள்ளது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw
2. திருவேங்கடவனின் மாமனார்
https://www.alayathuligal.com/blog/558mb2xzflf6tm53dbbpmw9z5yk2kr

அமிர்தகடேசுவரர் கோவில்
சிவபெருமான் ஒவ்வொருநாளும் நவக்கிரகங்களுக்குரிய வஸ்திரம் அணியும் தேவாரத் தலம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகாவில், வடவாற்றின் கரையில் உள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இத்தலம் செட்டிதாங்கல் வழியாக எய்யலூர், ஆயங்குடி, முட்டம் செல்லும் சாலையில் ஆறாவது கி.மீட்டரில் உள்ளது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.
அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும், தங்களுக்கான நாளில் இங்கு சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவபெருமான் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். அதனால் இந்த ஈசனுக்கு ஞாயிறு-சிவப்பு, திங்கள்-வெள்ளை, செவ்வாய்-சிவப்பு, புதன்-பச்சை, வியாழன்-மஞ்சள், வெள்ளி-வெள்ளை, சனி-நீலம் என ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகத்துக்குரிய வண்ண ஆடை அணிவிக்கப்படுகிறது.
எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. மேலும் இத்தலத்தில் அங்காரகன் வழிபட்டதால், இத்தலம் செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகின்றது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி
https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்
https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe
தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை
https://www.alayathuligal.com/blog/dmgrwag3jxzb57ged3gwfc4l5et5wk

சண்முகநாதர் கோவில்
கேட்ட வரத்தைக் கொடுக்கும் குன்றக்குடி குமரன்
காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலிருக்கிறது குன்றக்குடி. ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், குடைவரைக் கோவிலில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
தனித்தனி மயில் வாகனங்களில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை
மலைக்கோயில் கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, முருகப்பெருமான் சண்முகநாதர் என்ற திருநாமத்துடன், அழகிய மயில்மீது கம்பீரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருளாசி தருகிறார். முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் மயில் வடக்குப் பார்த்திருக்கிறது. ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும் தெய்வானையும் வீற்றிருக்கிறார்கள். இதுபோன்ற மூன்று மயில் வாகன தரிசனம் காண்பதற்கரியது. முருகனின் மயில் வாகனமும், முருகப்பெருமானை சூழ்ந்திருக்கும் திருவாசியும், மூலவர் மூர்த்தமும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும்.
மயில் வடிவில் தோன்றும் குன்றக்குடி மலை
ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்படி வந்தவர்கள் வணங்கிவிட்டு அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலிடம் 'முருகப்பெருமானின் வாகனமாக மாறவேண்டி சூரபதுமன் தனது தம்பியருடன் காஞ்சிபுரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்' என்ற விஷயத்தை கூறிச் சென்றுவிட்டார்கள். எங்கே தனக்கு பதிலாக சூரர்கள் முருகப்பெருமானை சுமக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிடுவார்களோ என்று தேவமயில் வருந்தியது. இதனால் தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும்விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.
சூரபதுமனும் அவனுடைய சகோதரர்களும் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முகனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலைவிட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொவினதால் மயில் கோபம் அடைந்தது அன்னத்தையும் கருடனையும் மயில் விழுங்கி விட்டது. நான்முகனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும் கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிவை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து குன்றக்குடிக்கு வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்கது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். சாபம் நீங்கப் பெற்ற மயில், 'முருகப் பெருமான் தொடர்ந்து அதே இடத்தில் எழுந்தருளி, வேண்டி வந்து வணங்குபவர்க்கு எல்லா வரமும் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது.பின் மயிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றம் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தருகிறார்.; மிகவும சிறப்பு வாய்ந்த இக்கோயில் திருப்புகழ் பாடன் பெற்ற திருத்தலமாகும்.
சிறப்பு வாய்ந்த பிரார்த்தனைத் தலம்
இக்தலம் தமிழ்நாட்டிலுள்ள, பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. குன்றக்குடி பெருமான் அருளாசி வழங்குவதிலும் தாராளச் சிந்தனைகொண்டவர். ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு கடுமையாக பாதித்த பெரிய மருதுபாண்டியரை காத்து ரட்சித்தவர் நோய்கள், துன்பங்கள் நீங்கவும், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி அறிவு, செல்வம் விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப் பெறவும் இக்கலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள் குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழ் பேச்சு வழக்கில் பரவியுள்ளது இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது எதிரிமறையாக வலியறுக்கப்படுகிறது.

இராமநாதர் கோவில்
காவி உடை அணியும் விநாயகர்கள்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில், தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர் லிங்க தலம் ராமேஸ்வரம். பாண்டிய நாட்டு தேவாரத் தலங்கள் பதிநான்கில் இத்தலமும் ஒன்று. இத்தலததில் இறைவன் ராமநாதசுவாமியுடன், அம்பிகை, பர்வதவர்த்தினி எனும் மலைவளர் காதலி அருள்பாலிக்கிறாள். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.
பர்வதவர்த்தினி அம்பாள் சந்நதி பிராகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருந்து அருள்பாலிக்கிறார்கள். இந்த விநாயகர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகப்பெருமான், பிரம்மச்சாரி என்பதால் இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துறவிகள் போல, பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
நல்லூர் அஷ்டபுஜமாகாளி
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநல்லூர். இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில்தான் நல்லூர் அஷ்டபுஜமாகாளி வீற்றிருக்கிறாள். இக்கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
பொதுவாக காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நம் நினைவுக்கு வரும். . ஆனால், இத்தலத்து அஷ்டபுஜமாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகியாய், மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவளாய், ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக பேரழகோடு அமர்ந்திருக்கிறாள். எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அவள் அமர்ந்துள்ள கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.
மழலைச் செல்வம் இல்லாதவர்கள் அஷ்டபுஜமாகாளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் தாய்மைப் பேற்றை அடைகிறார்கள்.கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள்.
Comments (0)Newest First

எறும்பீசுவரர் கோவில்
தேவர்கள் எறும்பு வடிவில் வழிபட்ட தேவாரத் தலம்
திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தேவாரத் தலம், திருவெறும்பூர். இறைவன் திருநாமம் எறும்பீஸ்வரர். இறைவி சௌந்தர நாயகி.
புற்று மண்ணால் ஆன சுயம்பு நாதரான இறைவன் எறும்பீஸ்வரர், வடக்கில் தலை சாய்ந்த நிலையில் வட்ட வடிவ ஆவுடையாராகக் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.
தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். அவர் 'தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப்(திருவெறும்பூர்) சிவபெருமானை வழிபடுவாயாக, அப்போது சூரனை அழிக்க ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்' என்று ஆலோசனை கூறினார்.
அதன்படி தான் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவன் விருப்பப்படி கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர். எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினையும் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் சிவபெருமான் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்கு அருள் வழங்கினார்.

வேணுகோபாலசுவாமி கோவில்
பத்மாசன கோலத்தில் வணங்கி நிற்கும் அபூர்வ கருடாழ்வார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார்.
இக்கோவில் கோபுர வாயிலைக் கடந்ததும், பலிபீடம் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வ கோலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்
https://www.alayathuligal.com/blog/e34gxzgbya2nzmgj7lssfl84dykkse

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்
திருவேங்கடவனின் மாமனார்
வைண மத ஆச்சார்யரான இராமானுசரின் சீடர்களில் ஒருவர் அனந்தாழ்வான். கர்நாடகத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் பிறந்த இவருடைய இயற் பெயர் அனந்தன். இவர் இராமானுசரின் விருப்பத்திற்கிணங்க, திருமலையில் நந்தவனம் அமைத்து, அதில் மலரும் பூக்களை பறித்து தினமும் மாலை தொடுத்து திருவேங்கடவனுக்கு சமர்பித்து வந்தார்.
இவரின் நந்தவனத்தில், திருமலை பட்டத்தரசியான அலர்மேல்மங்கை நாச்சியாரோடு திருவேங்கடவன் இரவு நேரங்களில் உலாவும் போது ஒருநாள் இதனை கண்ணுற்ற அனந்தாழ்வார் யாரோ ஒரு காதல் இணைகள் தன் நந்தவனத்தில் புகுந்து பாழ்ப்படுத்துவதாக எண்ணி பிடிக்க முயற்சித்தார். உடனிருந்த ஆண்மகன் தப்பிக்க பெண்மகள் மட்டும் அனந்தாழ்வரிடம் பிடிபட எப்படியும் இவளை மீட்க அவள் காதலன் வருவான் என அந்நந்தவனத்திலேயே அலர்மேல்மங்கை நாச்சியாரை பிணையாக சிறைப்படுத்தினார்.
பொழுது விடிந்து வழக்கம்போல் அன்றலர்ந்த மலர்களை மாலைகளாக்கி திருவேங்கடவன் சன்னதியடைய அங்கே மார்புறை நாச்சியாராகிய அலர்மேல்மங்கை திருவேங்கடவன் மார்பில் இல்லாதிருக்கக் கண்டு அஞ்சி நடுங்கினார். முன்னிரவில் தானே தன் மனைவியாளோடு நந்தவனத்திற்கு வந்ததுவும், அனந்தாழ்வாரின் பிணையாக நந்தவனத்தில் கட்டுண்டு இருப்பவள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாகிய அலர்மேல்மங்கை நாச்சியாரே என திருவேங்கடவன் தெரிவிக்க ஒரு நொடியும் ஐயனை அகலாத அன்னை தன் செய்கையால் ஒர் இரவு முழுதும் பிரிய நேரிட்டதை எண்ணி, அனந்தாழ்வார் மிக்க வருத்தம் கொண்டார். அதற்கு ஈடுசெய்யும் பொருட்டு அவரே நாச்சியாரின் தகப்பனாராக இருந்து மீண்டும் திருவேங்கடவனுக்கு மணம் முடித்து சேர்த்து வைத்தார். இச்செயலால் திருமலை உறையும் திருவேங்கடவனுக்கு இவர் மாமனார் என அன்றிலிருந்து அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
திருப்பதி பெருமாளுக்கு முகவாயில் பச்சைக் கற்பூரம் சாற்றும் வழக்கம் ஏற்பட காரணமாக இருந்த கடப்பாரை
https://www.alayathuligal.com/blog/8r2h5k9nc4zyxc85agwjcf5fww5jhw

அமிர்தகடேசுவரர் கோவில்
தினம் முப்பெருந்தேவியாக அருள் பாலிக்கும் அம்பிகை
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில், எய்யலூர் சாலையில் அமைந்துள்ள தேவாரத் தலம் மேலக்கடம்பூர். இக்கோவில் சுமார் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இறைவன் திருநாமம் அமிர்தகடேசுவரர். இறைவி வித்யூஜோதிநாயகி.
அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் (வித்யா) மதியம் யானையுடன் லக்ஷ்மியாகவும் (ஜோதி) இரவில் சூலத்துடன் துர்க்கையாகவும் (நாயகி) அருள் தருவதால் வித்யஜோதிநாயகி என்று அழைக்கிறார்கள். சோதிமின்னம்மை என்ற பெயரும் இவருக்கு உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக அவசியம் வணங்க வேண்டிய ஸ்தலம்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
சனி பகவான் கழுகு வாகனத்துடன் இருக்கும் அபூர்வக் காட்சி
https://www.alayathuligal.com/blog/8jbwz76aeb7drsnd59bggnn7emjd59
இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர்
https://www.alayathuligal.com/blog/xjneb5f8s4fffahndmmwkzp2ex4lxe

வரசித்தி விநாயகர் கோவில்
கடன் தீர்க்கும் கணபதி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள பாகலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது வரசித்தி விநாயகர் கோவில். இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.
கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியான மண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்குச் செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது. பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல், படிகளின் மீது ஏறிப் பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்கத் தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார்.
சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடையாரின் மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவருக்கு இருபுறமும் கற்பக விநாயகரும், மாணிக்க விநாயகரும் உள்ளனர். விநாயகரின் வலதுபுறத்தில் தாய் சொர்ணாம்பிகையும் அவளது இருபுறமும் மீனாட்சியும், விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.
கடன் தொடர்பான பிரச்னைகள் நீங்க இந்தப் பிள்ளையாருக்கு விசேஷ வழிபாடு செய்கிறார்கள் பக்தர்கள். அதாவது, சங்கடஹர சதுர்த்தி தினத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து, தங்களின் கடன் பிரச்னைகள் நீங்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, தேங்காய் எண்ணெய் அல்லது நெய் கொண்டு 12 அகல் விளக்குகள் ஏற்றி வழிபடவேண்டும். பின்னர், அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தியில் ஒரு விளக்கைக் குறைத்து 11 விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். இப்படியே, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்காகக் குறைத்து வந்து, கடைசி வழிபாட்டு நாளன்று ஒரு விளக்கு மட்டும் ஏற்றி வழிபடவேண்டும். இப்படி விளக்குகள் குறையக் குறைய கடன் சுமைகளும் படிப்படியாகக் குறையும். பிரார்த்தனை நிறைவடையும் நாளில் கடன் பிரச்னைகளும் முழுமையாக நீங்கிவிடும் என்பது பக்தர்களது நம்பிக்கை. எனவே இவரை 'கடன் தீர்க்கும் கணபதி' என்றும் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். உற்றார் உறவினருக்குக் கடன் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற இயலாமல் தவிக்கும் அன்பர்களும் இவரை வழிபட்டால் அவர்களுடைய அந்தப் பிரச்சனை தீரும்
மேலும், குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள், விநாயகர் சதுர்த்தித் திருநாளில் இந்தப் பிள்ளையாருக்கு பால்குடம் எடுத்து வந்து வழிபடுகிறார்கள். இதன் மூலம், விரைவில் குழந்தைப் பேறு வாய்க்கும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் பக்தர்கள்.

பகவதி அம்மன் கோவில்
தேவி கன்னியாகுமரி
இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது பகவதியம்மன் கோவில். இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் கட்டப்பட்டதாகும். தேவியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக, தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது குமரி சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் குமரி அம்மன் கன்னிப்பெண் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் அசுரர் தலைவனான பாணாசுரன் என்பவன் தேவர்களுக்கும் ,முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது தேவர்கள், பாணாசுரனுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று திருமாலிடம் விண்ணப்பித்தனர். திருமாலும் பாணாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனை கன்னிப்பெண் ஒருவரால் மட்டுமே அழிக்க முடியும். என்றார். அதனால் பார்வதி தேவியிடம் உங்கள் வேண்டுதலை சமர்ப்பியுங்கள் என்று அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள், பாணாசுரனை அழிப்பதற்காக பார்வதி தேவியை வணங்கி ஒரு பெரிய வேள்வி செய்தனர். வேள்வியால் மகிழ்ந்த பார்வதி தேவி, தேவர்கள் முன்பாக தோன்றி, பாணாசுரனை அழிப்பதாக உறுதி அளிக்கிறார்.
அதற்காக கன்னியாகுமரி வந்தடைந்த பார்வதி தேவி, அங்கு கடும்தவம் புரிந்தார். சிறிய பெண்ணாக இருந்த கன்னிதேவி, மணப்பருவம் அடைந்ததும், சுசீந்திரத்தில் கோயில் கொண்ட சிவபெருமான் (தாணுமாலவர்), அவரை மணமுடிக்க எண்ணினார். சிவபெருமான் தனது விருப்பத்தை தேவர்களிடம் கூறினார்.
சிவபெருமானுக்கும் கன்னிதேவிக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஒரு கன்னிப்பெண்ணால்தான் பாணாசுரனுக்கு அழிவு ஏற்படும் என்பதால், நாரத முனிவர் சற்று யோசித்தார். தேவர்களும், பாணாசுரனை வீழ்த்த வேண்டும் என்றால், அன்னையின் தவம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாரதரிடம் கூறினர். அதன்படி நாரதர், சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தை தடுத்து நிறுத்த எண்ணினார். அதேநேரத்தில், சிவபெருமானின் எண்ணத்தை மறுத்துரைக்காதபடி செயல்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொண்டார்.
அதனால், நள்ளிரவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் கூறினார் நாரதர். மேலும் கண்ணில்லா தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை, கணு இல்லா கரும்பு, இதழ் இல்லா மலர் ஆகியவற்றை திருமண சீராக வைக்க வேண்டும் என்று கூறினார்.
நாரதர் கூறிய நிபந்தனைகளை சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில், சீதனப் பொருட்களுடன் சுசீந்திரத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்டார் சிவபெருமான். போகும்வழியில் 'வழுக்கம் பாறை' என்ற இடத்தை அடைந்தபோது, நாரதர் சேவல் உருவம் கொண்டு உரக்கக் கூவினார். பொழுது புலர்ந்துவிட்டது, நள்ளிரவு நேரம் கடந்துவிட்டது என்று நினைத்த சிவபெருமான், கன்னியாகுமரி செல்லாமல், சுசீந்திரம் திரும்பினார். பார்வதி தேவியும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தார்.
திருமணத்துக்கு ஏற்பாடான உணவுகளும் சீதனப் பொருட்களும் மணலாக மாறின. அரிசி போன்ற வெண்மணலும், வெவ்வேறு வண்ண மணலும் குமரிக்கடல் துறையில் மிகுந்து கிடப்பதை இன்றும் காணலாம்.
இதனிடையே, கன்னிதேவியைப் பற்றி கேள்விப்பட்ட பாணாசுரன், தேவியை மணம்புரிய விரும்பினான். தேவி அதற்கு உடன்படாததால், தேவியை கவர்ந்து செல்ல முயன்றான். இதுதான் சமயம் என்று பார்வதி தேவி, தன் சக்கராயுதத்தால் பாணாசுரனை வீழ்த்தினார். மீண்டும் தன் தவத்தை தேவி தொடர்ந்தார்.
அன்னையின் தவக்கோலம்
கன்னியாகுமரி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் . இலுப்பைப் பூமாலையை ஒரு கரத்தில் தரித்து, மற்றொரு கரத்தை தன் தொடை மீது வைத்து தவக்கோல நாயகியாக காட்சி தருகிறர். அன்னையின் திருமுடி மீதுள்ள கீரிடத்தில் பிறைமதி அமைந்துள்ளது.
அன்னையின் மூக்குத்தி
பாணாசுரனை அழித்த பின்பு பகவதி அம்மன் மிகவும் உக்கிரமாக இருந்தார். சிவபெருமான் தன்னை மணக்காதது, பாணாசுரன் மீது இருந்த வெறுப்பு ஆகியவை சேர்ந்து மிகவும் கோபம் கொண்டு காணப்பட்டார் பகவதி அம்மன். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அம்மன் தன் கோபத்தை ஒரு மூக்குத்தியில் இறக்கி, சாந்தமானார். அன்னையின் மூக்குத்தி யோகசக்தியாக கருதப்படுகிறது.
கன்னித் தீர்த்தம்
மகாபாரதம், மணிமேகலை, புறநானூறு, நாராயண உபநிடதம், கிருஷ்ண யஜூர் வேதம், சம்ஹித வைஷ்ணவ வேதம் முதலானவற்றில் அம்மன் வழிபாடு பற்றி கூறப்பட்டுள்ளது.
இக்கோவிலில் அமைந்துள்ள கன்னித் தீர்த்தம் மிகவும் சிறப்புடையது. 'குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை காப்பியம் உரைக்கிறது. சீதையை மீட்க ராமபிரான் கிளம்பியபோது, இலங்கைக்குச் செல்ல சேதுபாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த சேதுபாலம் கன்னித் தீர்த்தத்தில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கன்னித் தீர்த்தம் ஆதிசேதுவாகவும் கருதப்படுகிறது. பாணாசுரனை அழிக்க கன்னிதேவி புறப்பட்ட இதே இடத்தில் இருந்து, ராவணனை அழிக்க ராமபிரான் புறப்பட்டுள்ளது சிறப்பு.
இத்தலத்தில் கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். தீர்த்தக் கரையில் நீராடினால் பாவம் தொலைந்து புண்ணியம் கிடைக்கும். காசி போகிறவர்களுக்கு நற்கதி கிடைக்க கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என்று கூறப்படுவதுண்டு.
புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள், வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு விஜயதசமியன்று
வெளியான பதிவு
திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன்
https://www.alayathuligal.com/blog/z2lt7re82mmwkk8243hldf6pjnk396

கொல்லூர் மூகாம்பிகை கோவில்
கொல்லூர் மூகாம்பிகை அம்மன்
அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகிய கொல்லூர் தலம், அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம் கர்நாடக மாநிலத்தின் தெற்கே, குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது. மங்களூரிலிருந்து நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்திருக்கிறது.
மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். கன்னியாகுமரியில் பகவதி தேவியின் மூக்கில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல் கொல்லூரில் அவள் மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. கருவறையின் விமானம் முழுவதும் கெட்டியான தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
இத்தலத்தில் முதன்முதலில் அம்பாள் மூகாம்பிகையானவள், சிலை வடிவில் இல்லை. மூலவராக சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமானின் லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வருகை தந்தபோது சுயம்பு லிங்கத்தை மட்டுமே தரிசனம் செய்தார். இந்த கோவிலில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தால். அந்த ரூபத்தை மூகாம்பிகை சிலையாக உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் மூகாம்பிகை மேல் தவம் புரிந்து எழ முயன்றார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்துக் கொடுத்தாள். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரமும், ஆராதனையும் மட்டுமே நடைபெறும். அபிஷேகங்கள் எல்லாம் லிங்கத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது.
காளி தேவியுடனும், சரஸ்வதி தேவியுடனும் காட்சி தரும் மூகாம்பிகை
இத்தலத்தில் இருக்கும் லிங்கத்தின் நடுவே தங்க நிற கோடு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தங்க நிற கோடு இருப்பதை அபிஷேக நேரத்தில் மட்டுமே காண முடியும். லிங்கத்திற்கு இடது பக்கமாக பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரும், வலது பக்கமாக சரஸ்வதி லட்சுமி பார்வதி இவர்கள் மூவரும் வீற்றிருப்பதாக இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் லிங்கத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
முதன்முதலாக இந்த லிங்கத்தை கோல மகரிஷி வழிபட்டதால் கொல்லூர் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்தது. இங்கு காட்சிதரும் ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னாலான காளி தேவியும், சரஸ்வதி தேவியும் காட்சி தருகின்றனர். இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகை
கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகையே வழிபட்டால் மிகவும் சிறந்தது.
நவராத்திரி திருவிழாவே இங்கு வெகு சிறப்பான விழாவாக விளங்குகிறது. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இங்கு விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். அம்பிகையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் மூகாம்பிகையை, சரஸ்வதி தேவியாக நினைத்து வணங்கி 'கால ரோகணம்' பாடி அருள் பெற்றார். இத்தலத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியின் சிலையானது, சரஸ்வதி பூஜை அன்று வீதி உலா எடுத்துச் செல்லப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்தியாரம்ப நிகழ்ச்சியும் சரஸ்வதி பூஜை அன்று சிறப்பாக இத்தலத்தில் நடத்தப்படுகிறது.
மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலா அஞ்சலி செய்கிறார்கள்.
தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட வடை நிவேதனம் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க மகாதிருமதுர நிவேதனம் செய்கிறார்கள்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஒன்பதாம் நாளன்று வெளியான பதிவு
கூத்தனூர் சரஸ்வதி கோவில்
https://www.alayathuligal.com/blog/s44nerac2p3waedbzhth84byfbe7k5

விஜயவாடா கனக துர்கா கோவில்
விஜயவாடா கனக துர்க்கையம்மன்
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத் தலைமையிடமான விஜயவாடா நகரத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள இந்திரநீலாத்திரி மலையில் அமைந்துள்ளது கனக துர்கா கோவில். விஜயவாடா நகர காவல் தெய்வமான கனக துர்க்கா எனப்படும் துர்க்கையம்மன் இந்த கோயிலில் வீற்றுள்ளார். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு.
கீலா என்ற அசுரன் துர்க்கையின் அருள் வேண்டி தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த துர்க்கை காட்சி கொடுக்க, 'அன்னையே! நீ எப்போதும் என் இதயத்திலேயே வாசம் செய்ய வேண்டும்' என வரம் கேட்டான். கீலாவின் வேண்டுகோளை ஏற்ற துர்க்கை, மகனே! நீ கிருஷ்ணா நதிப்படுகையில் மலையாக உயர்ந்து நில்' அரக்கர்களை அழித்த பின் நான் உன் இதயத்தில் இருப்பேன், என வரமளித்தாள். துர்க்கையின் ஆணைப்படி, கீலா மலையாக மாறினான். அன்னை துர்கா, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்தபின், கீலா மலை மீது அஷ்டகரங்களுடன் மகிஷாகரமர்த்தினி என்ற திருநாமத்துடன் வாசம் செய்தாள். மகிஷாசுரனை அழித்த சந்தோஷத்தில் இத்தலத்தில் தங்க மழை பொழிய செய்ததால் கனக துர்கா என்ற பெயர் பெற்றாள்.
அம்பாள் மூலஸ்தானத்தின் மேல் தங்ககூரை போடப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும். கருவறையில் அமைதியான புன்னகை மற்றும் இன்முகத்துடன் அம்மன் காட்சி தருகிறார். கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன.
நவராத்திரி விழா
இத்தலத்தில் நவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கனக துர்காதேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன. இத்தலத்தில் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகிலேயே இத்தலத்தில்தான் மூலவரான அம்மன் சரஸ்வதி, மகாலட்சுமி, பால திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, மகிஷாசூரமர்த்தினி, துர்கா தேவி, அன்னப்பூர்ணாதேவி, காயத்ரி, லலிதா திரிபுரசுந்தரி ஆகிய அலங்காரங்களில் நலராத்திரியின்போது காட்சி தருகிறார். விஜயதசமி அன்று அம்மனை, கிருஷ்ணா நதியில் அன்ன வடிவத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வரச் செய்வார்கள். இந்த விழாவிற்கு நவுக விஹாரம் என்று பெயர்.
சீனப்பயணி யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயில் குறித்து பதிவு செய்துள்ளார் கோயில் அருகே வரவாற்றை விளக்கும் பல்வேறு கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருந்து செல்வதுபோல, இந்த ஆலயத்தில் அருள் பாலிக்கும் கனகதுர்கா அன்னைக்கும், மாலை அணிந்து, விரதம் இருந்து யாத்திரையாகச் செல்கிறார்கள். எதிரிகளின் தொந்தரவு விலக, செல்வம் செழிக்க இந்த அம்பிகையை வழிபாடு செய்கிறார்கள். அன்னை கனக துர்காவை வணங்கினால், அவளது அருளால் பொன்மழையே பொழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி எட்டாம் நாளன்று வெளியான பதிவு
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்
https://www.alayathuligal.com/blog/5xn2r77m9f4g5kh9bmnmsgym8thmj8

வைத்தீசுவரன் கோவில்
தையல்நாயகி அம்மன்
சோழவள நாட்டில் அமைந்த சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர், 'வைத்தியநாதர்'. அம்பாள் பெயர் 'தையல்நாயகி' என்பதாகும்.
வைத்தியநாதப் பெருமாள், சுமார் 4,500 நோய்களையும், அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்லவராக இங்கு எழுந்தருளியுள்ளார். அம்பாளும், இறைவனுக்கு உதவியாக தனது கையில் தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடி மண் ஏந்தி இருக்கிறார். இப்படி அம்பாளும், சுவாமியும் தீவினை தீர்க்கும் சக்தி படைத்தவர்களாக அருள்பாலிக்கிறார்கள். சூரபத்மனை வெல்வதற்காக, இத்தல அம்பிகையை முருகப்பெருமான் வழிபாடு செய்தாராம்.
தையல்நாயகிக்கு புடவை சாத்துதல், அபிசேகம் மற்றும் சந்தனக்காப்பு செய்வது பக்தர்களின் முக்கிய வேண்டுதலாக உள்ளது. மற்றும் தீராத வயிற்று வலி உள்ளவர்கள் தாயாருக்கு மாவிளக்கு ஏற்றி வேண்டிக்கொள்வார்கள். இவரை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோஷம் என்ற குறை நீங்கும்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த மேற்கொள்ளும் பாதயாத்திரை
ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்க்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக,காரைக்குடி,கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி,மானாமதுரை,திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.
குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றி நடைபயணமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தங்கள் வேண்டுதல்களுக்காகவும், வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர். . மேலும் விளக்கேற்றியும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற வேண்டி அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இக்கோயில் சிதம்பரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஏழாம் நாளன்று வெளியான பதிவு
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்
https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

மாயூரநாதர் கோவில்
மயிலாடுதுறை அபயாம்பிகை
அம்பிகை மயில் வடிவில் ஈசனை வழிபட்ட இரண்டு தலங்கள் திருமயிலாப்பூர், திருமயிலாடுதுறை ஆகும். திருமயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கோவிலில் அம்பிகை மயில் வடிவிலும், இறைவன் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிக்கிறார்.
கௌரி தாண்டவம்
அம்பாள் இறைவனை மயில் வடிவில் வழிபட்டதாலும், மயில் வடிவாகவே ஆடியதாலும் இத்தலம் மயிலாடுதுறை என்றாயிற்று. அம்மை அவ்வாறு ஆடிய தாண்டவம் கௌரி தாண்டவம் எனப்படும். இதனால் இத்தலம் 'கௌரி மாயூரம்' என்றும் பெயர் பெற்றது.
அபயாம்பிகை என்று பெயர் வரக் காரணம்
பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார். வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார். பார்வதி மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு அவமானப்பட்டாள்.
இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார். அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது. நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம்பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள். சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி சபித்து விடுகிறார்.
அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், 'மாயூரநாதர்' என்றும் பெயர் பெற்றார்.
சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள் யாவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள் பெற்றனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி அமைந்துள்ளது. மயில் வடிவில் சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர். பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள் சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.
இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அன்னை அபயாம்பிகை மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும் காட்சி தருகிறாள். தேவாரத்தில் இந்த அம்பிகையை அம்சலாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அழகிய சொற்களைப் பேசுபவள் என்பது பொருளாகும்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஆறாம் நாளன்று வெளியான பதிவு
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில்
https://www.alayathuligal.com/blog/3nxzzk82pts7skpe7ekkc3b8gagw82

நெல்லையப்பர் கோவில்
திருநெல்வேலி காந்திமதி அம்மன்
நெல்லையப்பர் கோவிலில் அருள் பாலிக்கும் காந்திமதி அம்மன், வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகையின் சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது. காந்தசக்தி மிகுந்து, பிரகாசமாக அம்பிகை விளங்குவதாலும் இது காந்தி பீடமாயிற்று. இத்தலத்தில் அம்பிகைக்கும், ஈசனுக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
அன்னம் பரிமாறும் அம்பிகை
இக்கோயிலில் காந்திமதி அம்பாள், கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். ஒரு மனைவி கணவனையும் விருந்தினர்களையும் உபசரித்துப் போற்றும் விதிமுறையை இத்தல உச்சிக்கால பூஜை நிகழ்ச்சியில் நிலைநாட்டப்படுகிறது. மற்ற தலங்களில் சுத்த அன்னம் நைவேத்தியம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு சுவாமிக்கு சுத்த அன்னத்துடன் ஒரு கூட்டு, ஒரு பொரியல், ஒரு குழம்பு என அறுசுவையுடன் கூடிய உணவையே பிரசாதமாக நைவேத்தியம் செய்வது தனிச்சிறப்பு. கணவன் மனைவி எப்படி ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழவேண்டும் என்னும் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்தச் சடங்கு அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது காந்திமதி அன்னை நைவேத்திய தட்டுடன் ஈசனை நோக்கிப் புறப்படுவாள்.இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றை சிவனுக்கு படைக்கின்றனர். பின் ஆலயத்திலுள்ள அனைத்துப் பரிவார தேவதைகளுக்கும் நைவேத்தியம் செய்கிறாள். பின்னரே காந்திமதிக்கு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. கணவர் உணவு எடுத்துக்கொண்ட பின்னர் மனைவி உணவு புசிக்கும் பாரம்பரியத்தை இக்கோயிலில் அன்னை காந்திமதி தினந்தோறும் நிகழ்த்திக் காட்டுகிறாள்
அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணியும் அம்மன்
உலகம் அனைத்தும் இறுதிக் காலத்தில் அம்பிகையிடம் ஐக்கியமாவதை உணர்த்தும் விதமாக காந்திமதி அம்மனுக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளாபூஜை வரை அம்பிகை வெண்ணிற ஆடையிலேயே அருள்பாலிக்கிறார்.
காந்திமதி சீர்
இத்தலத்தில் நடக்கும் ஐப்பசி திருக்கல்யாணத்தின் 3ம் நாள் முதல் 7ம் நாள்வரை காந்திமதி அம்மன் கம்பை நதிக்கு நீராடச் செல்லுவது வழக்கம். அப்போது அங்கே வரும் பெண்களை எல்லாம் அம்பிகையின் தோழியராக பாவித்து அவர்கள் நீராட, ஆலயத்தின் சார்பில் நல்லெண்ணெயும் பாலும் வழங்கப்படுகின்றன. இரண்டையும் சிரசில் வைத்து நீராட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
மேலும்,பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது ஐப்பசி திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். 14ஆம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் சிவன் சன்னதிக்கு மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை காந்திமதி சீர் என்று அழைப்பார்கள். இந்த சீர் வரிசை பலகாரங்களை காணவே கண் கோடி வேண்டும்.
ஆடிப் பூரம் வளைகாப்பு
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆடிப் பூரம் விழாவின் 4-ம் நாளன்று, அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும். இந்த வைபவத்தின்போது, ஊறவைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும். இந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த வைபவத்தைக் காணும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
அம்பிகைக்கு பிரதோஷம்
பிரதோஷத்தின்போது, சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூஜை நடக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகிறாள். சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.
இந்த ஆலயத்தில் அம்மனுக்கென ஆடிப்பூர விழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனி மாதப் பெருவிழா போன்றவை விசேஷமானது.
தம்பதியர் அன்யோன்யத்திற்கு அருளும் அம்பிகை
சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். கணவனும், மனைவியும் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இந்த தலத்தில், தம்பதியர் வழிபட்டால், அவர்கள் உறவில் எந்த பிரச்னையும் வராது என்பது திண்ணம்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஐந்தாம் நாளன்று வெளியான பதிவு
திருவாரூர் கமலாம்பிகை
https://www.alayathuligal.com/blog/zk6z5ghrez6ekcnc9gg5r373rxmf5a

குற்றாலநாதர் கோவில்
குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன்
தென்காசி மாவட்டம்., தென்காசி நகரிலிருந்து மேற்கே சுமார் 5 கி. மீ தொலைவில். ஸ்ரீகுற்றாலநாதர் உடனுறை ஸ்ரீகுழல்வாய்மொழி ஆலயம் அமையப்பெற்றுள்ளது.
இங்குள்ள அம்பிகை குழல்வாய்மொழி. வடமொழியில் வேணுவாக்வாகினி என்றும் அழைக்கப்படுகிறாள். இதற்கு, மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலில் இருந்து எழும் இசையை காட்டிலும் இவளுடைய குரல் இனிமை வாய்ந்தது என்று பொருள்.
உயரமான கருவறையில் அம்பிகை நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறாள். வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடக்கரத்தை கீழே தொங்கவிட்டபடியும் புன்முறுவல் பூத்த முகத்தவளாய் காட்சிதருகிறாள்.
தரணி பீடம்
அம்பிகையின் சக்தி பீடங்களுள் இத்தலம் 'தரணி பீடம்' என்று சிறப்பிக்கப்படுகிறது. அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது திருமாலுக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி, குழல்வாய்மொழிநாயகியாகவும், பூதேவி, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இந்த பீடத்திற்கு, 'தரணி பீடம்' (தரணி – பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் 'நவசக்தி' பூஜை செய்கின்றனர். அப்போது, பால், வடை பிரதானமாக படைக்கப்படும். இவள் உக்கிரமாக இருப்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'காமகோடீஸ்வரர்' என்றழைக்கப்படுகிறார். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் அம்பாளுக்கு சந்தனக்காப்பு செய்யப்படுகிறது.இரவு எண்ணைய் தீப விளக்குகளின் ஒளியில் அம்பிகையின் தரிசனம் பார்ப்பவரை பரவசம் அடையச் செய்யும்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி நான்காம் நாளன்று வெளியான பதிவு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்
https://www.alayathuligal.com/blog/wl7ltlrte5zw89gr4xkt4kns3e974y

திருவெண்காடர் கோவில்
திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழித்தடத்தில், சீர்காழியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் திருவெண்காடு சிவத்தலம் இருக்கிறது.இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர். திருவெண்காடர், திருவெண்காட்டுத் தேவர், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான், அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.
பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்த அம்பிகை
பிரம்ம வித்யாம்பிகைக்கு, பெரியநாயகி, மாதங்கி, வேயனதோளி நாச்சியார் என பல திருநாமங்கள் உள்ளன. திருவெண்காடு திருத்தலத்துக்கு அருகில் திருநாங்கூர் எனும் வைணவ திருத்தலம் உள்ளது. அங்கே, மதங்காஸ்ரமத்தில், மதங்க முனிவருக்கு மாதங்கி எனும் பெயரில் மகளாக வளர்ந்து, திருவெண்காடரை நோக்கி கடும் தவம் புரிந்து, ஈசனை கணவராகப் பெற்றாள் என்று பத்மபுராணம் கூறுகிறது. பிரம்மாவுக்கு வித்தைகளை கற்றுக் கொடுத்ததால் அம்பாளுக்கு பிரம்ம வித்யாம்பிகை எனும் திருநாமம் அமைந்தது. 51 சக்தி பீடங்களில் இத்தலம் பிரணவபீடம் என போற்றப்படுகிறது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் தனி உள்பிரகாரத்துடன், அம்பிகை சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகையின் நான்கு திருக்கரங்களில், இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம். வலது கீழ்க்கரம் அபய கரம், இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.
திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த அம்பிகை
திருஞானசம்பந்தர், திரு வெண்காட்டின் வட எல்லைக்கு வந்த பொழுது அவருக்கு ஊரெல்லாம் சிவ லோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் காட்சியளிக்க, இத்தலத்தினை மிதிப்பதற்கு அஞ்சி அவர் 'அம்மா' என்றழைக்க, பிரம்மவித்யாம்பாள் அங்கு தோன்றி, தனது இடுப்பில் திருஞானசம்பந்தரை இடுக்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றாள். திருஞானசம்பந்தரை இடுப்பில் சுமந்த வடிவில் அம்பாள் சிலை கோயிலின் மேற்கு உட்பிராகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளை நின்று கூப்பிட்ட குளக்கரை குளம் 'கூப்பிட்டான் குளம்' என்று அழைக்கப்பட்டு, இன்று 'கோட்டான் குளம்' என்று மறுவிவிட்டது.
ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள்
தேவி கல்வி வரம் தருவதில் நிகரற்றவள். அருளும் பொருளும் அள்ளித்தரக்கூடியவள். அம்பிகை வரப்பிரசாதியாய் திகழ்ந்தருளும் திருத்தலம் இது. ஒருவரின் ஜாதகத்தில், புதன் நீச்சம் பெற்று இருந்தால் இங்கு வந்து வழிபட்டு, அம்பிகையை மனமுருகி வேண்டினால், அனைத்து குறைகளையும் நீக்குவாள் அம்பிகை. மனிதன் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஞானம், அறிவு, கலைகளில் மேன்மை இருந்தால்தான் வாழும் வாழ்க்கை இனிமையும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். அத்தகைய ஞானத்தையும் வித்தையையும் அருள்பவள் அன்னை பிரம்ம லிதயாம்பிகை
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி மூன்றாம் நாளன்று வெளியான பதிவு
நாகை நீலாயதாக்ஷி அம்மன்
https://www.alayathuligal.com/blog/3d8ght8lka6dy92dbtp8rramxpfljr

கும்பேஸ்வரர் கோவில்
கும்பகோணம் மங்களாம்பிகை அம்மன்
அம்மனின் சக்தி பீட வரிசையில், குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மன், விஷ்ணு சக்தி பீடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலம் மந்திரிணி சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது.
கும்பேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், மங்களாம்பிகை ஆகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தர் தனது பாடலில் மங்களாம்பிகையை 'வளர் மங்கை' என்று அழைக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது திருமேனியில் பாதியை வழங்கினார். அதே போல் தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை மங்களாம்பிகைக்கு வழங்கியுள்ளார். அதனால் மங்களாம்பிகை 'மந்திரபீடேஸ்வரி' என்றும் அழைக்கப்படுகிறார். மஞ்சள் பட்டுடுத்தி, மஞ்சள் பூசி, குங்குமத் திலகமிட்டு, அம்பாள் அருள்பாலிப்பதைக் காண பக்தர்கள் எப்போதும் இந்த கோயிலில் குவிவது வழக்கம்.
கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் நான்கு கரங்களுடன் மங்களாம்பிகை அருள்பாலிக்கிறார். வலது மேல்கரத்தில் அமுதக் கலசத்தையும், இடது மேல்கரத்தில் அட்சமாலையையும் தாங்கி அருள்பாலிக்கிறார். வலது கீழ் கரம் அபயகரமாகவும், இடது கீழ்க்கரம் ஊர்வ அஸ்தமாகவும் அமைந்துள்ளன.
கல்வியில் சிறந்து விளங்க, தொழிலில் மேம்பட, திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, செல்வம் பெருக இத்தலத்தில் பக்தர்கள் கூடி மங்களநாயகிக்கு வழிபாடு செய்வது வழக்கம். விநாயகப் பெருமான் அம்மையும் அப்பனுமே உலகம் என்று கூறுவதைப் போன்று, இக்கோயிலில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகை இருவரையும் சேர்த்தே வலம் வருவது போன்ற பிரகார அமைப்பு உள்ளது.
ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்
பொன்னூஞ்சல், நீராடல், அம்மானை, அம்புலி, வாரானை, முத்தம், சப்பாணி, தாலம், செங்கீரை, காப்பு ஆகிய பருவங்களை விளக்கி, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருக்குடந்தை மங்களாம்பிகை மீது பிள்ளைத் தமிழ் இலக்கியத்தை அருளியுள்ளார்.
தளர்நடை பயிலும் குழந்தையாக மங்களாம்பிகையை பாவித்துப் பாடும்போது, "கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி" என்கிறார். மங்களாம்பிகையைக் கண்டாலே, பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரம் அனைத்தும் பறந்தோடும் என்கிறார். பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல் ஆராவரிக்கும் என்று கூறி மகிழ்கிறார்.
சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷ தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். நவராத்திரி தினங்களில் கோயில் முழுவதும், கொலுவைக்கப்படுவதும் அதைக் காண பல ஊர்களிலிருந்து பக்தர்கள் இங்கு வருவதும் வழக்கம்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி இரண்டாம் நாளன்று வெளியான பதிவு
மதுரை மீனாட்சி அம்மன்
https://www.alayathuligal.com/blog/l6eks5ceh4mjgbcx42w4tamp656mnn