
வைத்தியநாதசுவாமி கோவில்
குழிகளை நவகிரகங்களாக பாவித்து வழிபடும் தேவாரத் தவம்
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாகவும்
இந்த தலத்திற்கு செல்லலாம்.இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி.
பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர்.
இந்தத் தலத்தில் இருந்த நவகிரகங்களை ஈசன் தம் நெற்றிக்கண்ணால் அழித்துவிட்டராம். அதன் காரணமாக முக மண்டபத்தில் உள்ள மூன்று குழிகளையே நவகிரகங்களாக பாவித்து வழிபடுகின்றனர்.
சரும நோயினால் அவதிப்பட்ட சந்திரன், இந்தத் தலத்து இறைவனை வழிப்பட்டான். சந்திரனுக்குக் காட்சி அளித்த இறைவன், நவகிரகக் குழிகளில் நெய்விளக்கு ஏற்றி வழிபடும்படி கூறினார். சந்திரனும் அப்படியே செய்து சருமநோய் தீரப்பெற்றதாகத் தலவரலாறு. சிபி சக்கரவர்த்தியின் நவகிரக தோஷமும் நீங்கியதாகச் சொல்லப்படுகிறது.
சனிக்கிழமைகளில் இந்தக் குழிகளுக்கு முன்பாக எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மிளகு பிள்ளையார் கோவில்
மழையை வரவழைக்க பிள்ளையாருககுச் செய்யப்படும் மிளகு அபிஷேகம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில்.
திருநெல்வேலி மாவட்டத்தின் நீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைக்கட்டுகளில் இருந்து தண்ணீரை கொண்டு செல்ல பல்வேறு கால்வாய்களும் வெட்டப்பட்டு உள்ளன. அவற்றுள் முக்கியமானது கன்னடியன் கால்வாய். இந்த கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது மிளகுப் பிள்ளையாருக்கு மிளகரைத்து அபிஷேகம் செய்தால் மழை பெய்து கால்வாய் நிரம்பும் எஎன்பது ஐதீகம்.
மிளகுப் பிள்ளையாருக்கும் கன்னடியன் கால்வாய்க்கும் உள்ள தொடர்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது.
கேரள மன்னனின் முன் ஜென்ம பலன்
முன்னொரு காலத்தில், கேரள மன்னன் ஒருவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஒருநாள் மன்னரைக் காண ஒரு ஜோதிடர் வந்தார். ஜோதிடர் மன்னனின் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவனுடைய முன் ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி வேதனைப் படுத்துகிறது என்றார். அதற்கு ஜோதிடர் பரிகாரமாக மன்னன் உருவம் போன்ற அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து அதனை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் மன்னனுடைய முன் ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும் என்று கூறினார்.
மன்னனிடமிந்து பொம்மையை தானம் பெற்ற கன்னட பிரம்மச்சாரி
மன்னனும் ஜோதிடர் கூறியபடியே எள்ளு தானியத்தால் தனது உருவ அமைப்பில் ஒரு பொம்மையைச் செய்து அதனை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடிக் கொண்டிருந்தான். ஆனால் அதனை தானம் பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனால் அவனைச் சேர்ந்த பாவமும் தங்களை சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன் வரவில்லை. இதனால் மன்னன் தன்னிடம் தானம் பெறும் அந்தணருக்குப் பல பொன்னும் பொருளும் நிறைந்த முடிப்பை பரிசாகத் தருவதாக கூறி அறிவிப்பு செய்தான். இந்நிலையில் இது பற்றி அறிந்த கன்னட பிரம்மச்சாரி அந்தணன் ஒருவன், மன்னனை சந்தித்து தான் அந்த பொம்மையை பெற்றுக் கொள்வதாகக் கூறினான். இதனால் மன்னனை பிடித்திருந்த முன் ஜென்ம பாவ வினைகள் நீங்கியது. மன்னனும் தான் அறிவித்த பரிசுகளை கொடுத்தான்.
கன்னட பிரம்மச்சாரி உருவாக்கிய கால்வாய்
பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த பூஜையின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. 'அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது' என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி பூஜையின் பலனில் ஒரு பகுதியை கொடுத்து விட்டான்.
ஆனால் தானம் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது. 'வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக பூஜையின் பலனை தானம் செய்து விட்டோமே' என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க பொருட்களை பொது நலன் கருதி செலவழிப்பது என்று அவன் முடிவெடுத்தான்.
பொது மக்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என யோசனைக் கேட்பதற்காக பொதிகை மலையில் வசித்து வரும் தன் குருவான அகத்திய முனிவரிடம் சென்றான்.
அகத்தியர் அவனிடம், 'தானத்தில் தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து திரும்பி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அது போகும் வழிப்படி ஒரு கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு' என்றார்.
அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப் பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.
கன்னடியன் கால்வாய்
அந்த இளைஞனின் பெயர் இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு 'கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்து விட்டனர்.
பிள்ளையாருககு மிளகு அபிஷேகம்
அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப் பட்டான். அவன் கவலைப் பட்டது போலவே, ஒரு சமயம மழை பொய்த்ததால் கால்வாய் காய்ந்து போய் விட்டது.
உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது.
தமிழக அரசு கெஜட்டில் மிளகு பிள்ளையார் வழிபாடு
இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.
1916-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தமிழக அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் இந்த மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவாமிநாத சுவாமி கோவில்
பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்
இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாத சுவாமி கோவில்.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். இப்படி பதினொரு முகங்கள் கொண்ட முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மாறுபட்ட நிலையிலிருந்து தந்தைக்கு உபதேசம் செய்யும் முருகன்
மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனின் இந்த நிலை, இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
சுவாமிநாத சுவாமி கோவில் என பெயர் வந்த வரலாறு
300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார்.
ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.
ஐப்பசி கந்த சஷ்டி சந்தன காப்பு அலங்காரம்
மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படும். அன்று மட்டும் பதினோரு முகங்களுடன் தரிசனம் தரும் அவரது திருஉருவம் பார்ப்போரை பரவசம் அடையச் சேய்யும்.

வைத்தியநாத சுவாமி கோவில்
திருமலை நாயக்க மன்னரின் வயிற்று வலியை குணப்படுத்திய வைத்தியநாதர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மடவார் வளாகத்தில் அமைந்திருக்கிறது வைத்தியநாதசுவாமி திருக்கோவில்.
வைத்தியநாதசுவாமி நடத்திய திருவிளையாடல்கள்
இத்திருத்தலத்தில் துர்வாச முனிவர் சாபம் தீர வேண்டியபோது சாபவிமோசனம் தந்தது, அகஸ்தியரின் அகங்காரம் களைய தட்சிணா மூர்த்தியாக அவதாரம் எடுத்து அருள் தந்தது, வழிப்போக்கு முனிவர்கள் இருவருக்கு சிதம்பரம் நடராஜர் போன்று நடனக்கோலத்தில் காட்சி கொடுத்தது, தன்னை நெக்குருகி வேண்டி வீணை வாசிக்கும் சகோதரிகள் இருவருக்கு மன்னரின் கனவில் தோன்றி பரிசு கொடுக்கச் சொல்லியது போன்று மொத்தம் 24 திருவிளையாடல்களை இத்தலத்தில் வைத்தியநாதசுவாமி அரங்கேற்றியிருக்கிறார்.
திருமலை நாயக்கரின் வயிற்று வலியை தீர்த்த வைத்தியநாதர்
ஒரு சமயம், மதுரையின் மன்னர் திருமலை நாயக்கருக்கு 'குன்ம நோயினால்' பெரும் வயிற்று வலி ஏற்பட்டிருந்தபோது, இக்கோயிலில் தங்கியிருந்து வைத்தியநாதஸ்வாமியை வேண்டி குணமடைந்திருக்கிறார். அதற்குக் காணிக்கையாக திருமலை நாயக்கர், மதுரையிலிருந்து இறைவனை தரிசனம் செய்ய தான் வந்த பல்லக்கினை எம்பெருமானுக்கு தானம் செய்துள்ளார் . இன்றும் வைத்தியநாதர் சந்நிதியில் வைகாசி விசாகத்தின்போது நடைபெறும் 'பல்லக்கு ஊர்வலத்தில்' திருமலை நாயக்கர் வழங்கிய பல்லக்கே பயன்படுத்தப்படுகிறது.
திருமலை நாயக்கர் அமைத்த முரசு மண்டபங்கள்
திருமலை நாயக்கர், மடவார்வளாக வைத்திய நாத சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை நிறைவேறிய பின் தான் மதிய உணவே சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். உச்சி கால பூஜை நிறைவேறியதை தெரிந்து கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்து அவற்றில் இருந்து பூஜை நேரத்தில் முரசு முழங்கச்செய்து அந்த ஒலி மதுரையை எட்டிய பின் தான், மன்னர் வைத்தியநாதரை வணங்கி வழிபாடு செய்வார். அதற்குப் பிறகுதான் உணவருந்துவார். இதற்கு சான்றாக இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை நெடுஞ்சாலையில் பல கல் மண்டபங்கள் உள்ளதை காணலாம்.

சரணாகரட்சகர் கோவில்
கண் நோய் தீர்க்கும் தலம்
நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி.
விக்ரம சோழனின் ஆட்சிக் காலத்தில், அவனது மந்திரிகளில் ஒருவரான இளங்காரார் என்பவர் திருக்கடவூர் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதே நேரம், அந்த மந்திரி தில்லையாடி திருக்கோவிலையும் புதுப்பிக்க பொருளுதவி செய்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சிறிது காலம் கழித்தே மன்னனுக்கு தெரியவந்தது. உடனே மந்திரியை அழைத்து தில்லையாடி கோவிலின் திருப்பணிக்கான புண்ணிய பலனை தனக்கு தத்தம் செய்யும்படி கேட்டான்.
ஆனால் மந்திரி செய்து தர மறுத்தார். அதனால் கோபம் கொண்ட சோழ மன்னன். தன்னுடைய வாளால் மந்திரியின் கையை வெட்ட முயற்சித்தான். அப்போது «பரொளியுடன் அமைச்சருக்குக் காட்சி தந்தார் ஈஸ்வரன். ஆனால், அந்த திவ்விய தரிசனத்தைக் காண இயலாதவாறு மன்னணின் பார்வை பறிபோனது. தனது தவற்றை உணர்ந்த அரசன் கதறினான். இந்தக் தலத்துக்கு ஒடோடி வந்து, இறைவனைச் சரண் அடைந்து, அவரை பூஜித்து வழிபட்டு, மீண்டும் பார்வை கிடைக்கப் பெற்றான். இதனால் இந்தக் தலத்தின் இறைவன். சரணாகரட்சகர் (சார்ந்தாரைக் காத்த நாதர்) என்ற திருப்பெயர் பெற்றார் இத்தல இறைவனை வழிபட்டால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தை லரம் அருளும் பெரியநாயகி அம்மன்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடிப்பூரத்தன்று சந்தான பரமேஸ்வரி ஹோமத்தில் கலந்து கொண்டு அம்பாளுக்கு வளையல் சார்த்தியும், அவளின் சன்னதியில் தொட்டில் கட்டியும் பிரார்த்திக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் எடைக்கு எடை கற்கண்டு சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது போன்று நவராத்திரியின் போது அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கும்.

எமனேஸ்வரமுடையார் கோவில்
ஆயுளை விருத்தியாக்கும் எமனேஸ்வரமுடையார்
பரமக்குடியிலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தலம் எமனேஸ்வரம். ராமநாதபுரத்தில் இருந்து இத்தல, 37 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு பழமையான எமனேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் எமனேஸ்வரமுடையார். இறைவி சொர்ணகுஜாம்பிகை.
எமதர்மனை மன்னித்து அருளிய தலம்
சிவபக்தனான மார்க்கண்டேயருக்கு அவரது பதினாறாவது வயதில் ஆயுள் முடிந்து விடும் என்பது தலைவிதியாக இருந்தது. இறுதி காலத்தில் அவரது உயிரை பறிக்க எமதர்மர் பூலோகத்திற்கு வந்தார். இதனையறிந்த மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். மார்க்கண்டேயர் திருக்கடையூர் வந்த போது அவரது ஆயுள் முடிவடையயும் தருவாயில் இருந்தது. அதனால் அவர் மீது எமதர்மர் பாசக்கயிறை வீசினார். இதனால் பயந்த மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக தழுவிக் கொண்டார். இதனால் பாசக்கயிறு தவறுதலாக சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான், தனது பணியை சரியாக செய்யாத எமதர்மரை காலால் எட்டி உதைத்தார். இதில் எமதர்மர் பரமக்குடி அருகே உள்ள வனப்பகுதியில் வந்து விழுந்தார்.
தனது தவறை உணர்ந்த எமதர்மர், தான் விழுந்த பகுதியில் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார். பின்னர் தனது தவறை மன்னிக்குமாறு சிவலிங்கத்தை வேண்டி வழிபட்டார். இதனை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், எமதர்மரை மன்னித்ததுடன், அவரது வேண்டுதலுக்கு இணங்க அப்பகுதியில் எழுந்தருளினார்.
திருக்கடையூரில் சம்ஹார மூர்த்தியாக இருந்த சிவபெருமான் இத்தலத்தில் அனுக்கிரஹ மூர்த்தியாக திகழ்கிறார். அதனால் ஆயுள் விருத்தி பெறவும், சனி தோஷம் நீங்கவும் பக்தர்கள், இத்தலத்து இறைவனிடம் வேண்டுகின்றனர். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது மற்றும் எண்பதாம் திருமணங்கள் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இழந்த பதவி மற்றும் செல்வத்தை மீட்க எமனேஸ்வரமுடையாரை பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர்.
திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் சொர்ணகுஜாம்பிகை தாயார் சன்னதியில் தாலி மற்றும் வளையல் அணிந்து வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
நான்கு முகம் கொண்ட சதுர்முக முருகன்
திண்டுக்கலில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள சின்னாளப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். கருவறையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.
மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து காட்சியளிக்கிறார். இத்தகைய நான்கு முகங்கள் கொண்ட முருகனின் தோற்றத்தை நாம் வேறு எந்த தவத்திலும் தரிசிக்க முடியாது. அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரரும் காட்சியளிக்கிறார்கள்.
முருகப் பெருமான் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்னர் முருகப்பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அதை நினைவு கூறும் வகையில் இங்கே, முருக பெருமான் சதுர்முகத்துடன் இருப்பதாக தல புராணம் கூறுகின்றது.
குங்குமத துகள்களில் தோன்றிய சதுர்முக முருகன்
விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்காக கடும் தவம் செய்து கொண்டிருந்தார் . அப்போது விசுவாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி அம்பிகை, தனக்கு குங்குமப் பொட்டு வைக்கும்படி கேட்க, அந்த சிறுமியின் நெற்றியில் விசுவாமித்திரர் குங்குமப் பொட்டு வைத்தார். அவர் குங்குமம் இட்டதை சரி பார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில், சிறுமி பாலதிரிபுரசுந்தரி தன் பிம்பத்தைப் பார்த்தாள்.
குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்த குளத்தில் இருந்து சதுர்முக முருகன் தோன்றினார்.'இந்த சதுர்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்' என்று விசுவாமித்ரரிடம் தெரிவித்து விட்டு அந்த சிறுமி மறைந்தாள்.
சதுர்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோயிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார். விசுவாமித்திரரும் அருகில் உள்ள அந்த கோயிலுக்கு சென்றார். அங்கு பாலதிரிபுரசுந்தரியும், சதுர்முக முருகனும், ஒன்றாகக் காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். பின் இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேன் என்று வருந்தினார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விசுவாமித்ரருக்கு 'பிரம்மரிஷி' பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார்.
செம்பால் அபிஷேகம்
இத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த 'செம்பால் அபிஷேகம்' செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இப்படிப்பட்ட அபிஷேக நடைமுறை வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.
செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். மற்றும் இங்கே உள்ள பாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்.

வானமாமலை பெருமாள் கோவில்
நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் திவ்ய தேசம்
திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நான்குவழிச் சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 8 சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இத்தலத்தின் பெருமைகள் பற்றி நரசிம்ம புராணம், ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் பெருமாள் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக இவரை கொண்டாடுகின்றனர்.
பெருமாளுக்கு தினசரி நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம்
இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் 25 அடி நீளம், 15 அடி அகலமுள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட இந்த எண்ணெய், மழைக்கும், வெயிலுக்கும் திறந்த வெளியாக கிணற்றில் இருந்தாலும் கெட்டுப் போகாமல் இருப்பது விசேஷம் ஆகும். இந்த எண்ணெய் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
நோய்களைத் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்
இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.
இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய 'அகத்தியம்' என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.

வைத்தியநாதசுவாமி கோவில்
நாள் பட்ட சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை
திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தவம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி. இத்தலத்தில் சுந்தராம்பிகை மற்றும் பாலாம்பிகை என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கிறார்கள்.
இறைவி சுந்தராம்பிகை, அழகம்மை என்று அழகு தமிழிலும் அழைக்கப்படுகிறார். சரும நோய்களைப் போக்கும் வரப்பிரசாதி இந்த சுந்தராம்பிகை. நாள்பட்ட சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பங்குனி மாதம் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இந்தத் தலத்துக்கு வந்து, ஆற்றிலும் கோயில் தீர்த்தத்திலும் நீராடிவிட்டு, ஈர உடையுடன் ஒன்பது முறை அம்பாளை வலம்வந்து, உப்பும் மிளகும் போட்டு வேண்டிக் கொண்டால், நாள்பட்ட சரும நோய்களும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
குழந்தை பாக்கியம் வேண்டும் பக்தர்கள், கோயிலில் உள்ள சோமாஸ்கந்தருக்கு வெள்ளை வஸ்திரமும் ரோஜாப்பூ மாலையும் சாத்தி, 11 நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

லட்சுமி நரசிம்மர் கோவில்
சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் நரசிம்மர்
கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவில் உள்ள தவளக்குப்பம் வழியாக, மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் கனகவல்லி.
உக்கிர நரசிம்மரின் பிரம்மாண்டமான கம்பீரத் தோற்றம்
இங்கு பிரகலாதனின் விருப்பப்படி, நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் கோலத்தில், சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார். நரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும், நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் காட்சியளிக்கிறார்.
பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். குழந்தை பிரகலாதன், ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதி, அசுர குரு சுக்ராச்சாரியார், வசிஷ்ட மகரிஷி ஆகியோர் நரசிம்மரின் அருகில் காட்சியளிக்கிறார்கள்.
இரணியனை வதம் செய்யும் கோலத்தில் நரசிம்மர் காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களின் அரிதான காட்சி
இச்சன்னதியில் சிறிய வடிவில் பால நரசிம்மரும், யோக நரசிம்மரும் உடன் எழுந்து அருளியுள்ளார்கள். இப்படி ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களை தரிசிப்பது என்பது மிகவும் அரிதான காட்சியாகும்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.
நவக்கிரக தோஷ நிவர்த்தி தலம்
இத்தலத்தில் வழிபட்டால் .நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் எள்பது ஐதீகம். திருமண தடை, பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள், சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.

நாகநாதர் கோவில்
ராகு கிரக தோஷ பரிகார தலம்
கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருப்பெயர நாகநாதர். இறைவி கிரிஜா குஜாம்பிகை. ஜாதகத்தில் ராகு கிரக தோஷம் உள்ளவர்களுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
ராகு பகவான் சிவன் அருள் பெற்ற தலம்
பாம்பாக இருந்த ராகு பகவான் முனிவர் ஒருவரின் மகனை தீண்டியதால், அந்த முனிவரின் சாபம் பெற்று தன் சக்திகள் அனைத்தையும் இழந்தார். அதளால் ராகு பகவான், இத்தலத்தில் தவமிருந்து சிவபெருமானின் அருள் பெற்று மீண்டும் தன் சக்தியை பெற்றார் . நாகத்தின் வடிவில் இருந்த ராகு பகவானிற்கு அருள் புரிந்ததால் இங்குள்ள சிவ பெருமான் 'நாகநாதர்' என அழைக்கப்படுகிறார்.
அபிஷேகத்தின போது பால் நீல நிறமாக மாறும் அதிசியம்
இக்கோவிலிள் இரண்டாவது பிரகாரத்தில் ராகு பகவான் தன் இரு மளைவியர்களான நாகவல்லி, நாக்கன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு பகவான் பிற கோவில்களில் மனித தலையும், நாக பாம்பின் உடலும் கொண்ட தோற்றத்தில்தான் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில் ராகு பகவான் முழு மனிதனின் வடிவில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இக்கோவிலில் இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.

கழுகாசலமூர்த்தி கோயில்
முருகப்பெருமான் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம்
கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோயில் செல்லும் சாலையில், கோவில்பட்டியிலிருந்து 20 KM தொலைவில் உள்ளது.
இத்தலத்தில், இராவணனால் கொல்லப்பட்ட ஜடாயுவின் தம்பியான சம்பாதி என்ற கழுகு முக முனிவருக்கு முருகன் முக்தியளித்தார். அதனாலேயே, இத்தலம் முனிவரின் பெயரால் கழுகுமலை என்று அழைக்கப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய திருசெந்தூர் செல்லும் வழியில் இங்கு வந்து தங்கியிருந்தார் என்பது இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும்.
மேற்கு முகமாக காட்சி தரும் சிறப்பு
இத்தலத்தில் முருகப்பெருமான் நான்கு அடி உயரத்தில் ஒரு திருமுகமும், ஆறுகரங்களுடனும், இடது காலை தொஙக விட்டு மயிலின் மேல் வைத்தும், வலது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கந்த புராணத்தில் முருகன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும் அதில் முருகன் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்தில் இந்திரனே முருகனின் மயிலாக இருப்பது சிறப்பாகும். அதனால், மற்ற கோவில்களில் உள்ளது போல முருகனின் வாகனமான மயில், வலது பக்கம் அல்லாமல் இடது பக்கம் நோக்கி காட்சி அளிப்பது தனிச்சிறப்பு இத்தலத்தில் முருகனோடு குருவாகிய தக்ஷிணாமூர்த்தியும் இருப்பதால் குருமங்கள தலம் என்றும் அழைக்கபடுகிறது. இத்தலத்து இறைவனை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம்.
குடைவரைக் கோவில்
மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். இந்த குடைவரைக் கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.
இத்தலத்து முருகனை வேண்டினால் திருமணத் தடை நீங்குமென்பதும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.
இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றுள்ளது.

வைத்தியநாத சுவாமி கோவில்
பிரசவப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வைத்தியநாதர்
விருதுநகர் மாவட்டத்தின் மிகப் பெரிய சைவத்தலம் மடவார் விளாகம் ஆகும். இறைவன் திருப்பெயர வைத்தியநாத சுவாமி. இறைவி சிவகாமி.
ஸ்ரீவில்லிப்புத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இத்தலம் கைலாயத்திற்கு சமமாக கருதப்படுகிறது. இத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது.
மடவார் வளாகம் என பெயர் பெற்றதின் கதை
ஆடல் பாடல்களில் வல்லவரான இரு பெண்கள் இத்தல இறைவன் முன் ஆடிப்பாடி இறைவனை மகிழ்வித்ததால், இறைவனும் மகிழ்ந்து அவர்களுக்கு பொன், பொருள் தந்து வீடு கட்டித் தர ஆணையிட்டார். அன்று முதல் இந்த இடம் மடவார் வளாகம் என அழைக்கப்பட்டது. (மடவார்- பெண்கள், வளாகம்- இடம்).
தாயாய் வந்து பிரசவம் பார்த்த வைத்தியநாதர்
முனனொரு காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் ஒருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் அவள், தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் பத்து மாதம் முடிவடைந்த பிறகும் கூட தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய் இருக்குமிடத்திற்கு புறப்பட்டுச் சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள், ஈசனே! காப்பாற்று என அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப் பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார்.
அத்துடன், 'பெண்ணே உனது தவத்தினால் தான் யாமே உனக்கு பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் 'காயக்குடி ஆறு' என அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்' என்று அருளினார்.
வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்ப சம்பந்தமான நோய்களுக்கு, பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள்.

தியாகராஜர் கோவில்
ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் நவக்கிரகங்கள்
திருவாரூர் தலத்தில் நவக்கிரகங்கள் தியாகராஜப் பெருமானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஆதலால் திருவாருரிலுள்ள நவக்கிரகங்கள் அனுக்கிரக நவக்கிரகங்கள் ஆகும்.
ஒரு சமயம் சதயகுப்தன் என்ற அசுரனுக்கு சனி தோஷம் பீடிக்கவே, அவன நவக்கிரகங்களை எதிர்த்துப் போரிட்டான். அதனால் பயந்து போன நவக்கிரகங்கள், தியாகராஜப் பெருமானிடம் சரண் அடைந்தன. அவர்களக் காப்பாற்றிய தியாகராஜப் பெருமான், 'என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்தவித உபத்திரமும் செய்யக் கூடாது' என்று உத்தரவிட்டார்.
அதனால்தான் இத்தலத்தில், நவக்கிரகங்கள தங்கள் வக்கிரத்தைக் குறைத்துக் கொண்டு, ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நின்று, தியாகராஜப் பெருமானை நோக்கியபடி இருக்கின்றன. நவக்கிரகங்களின் இத்தகைய கோலம், ஒரு காண்பதற்கு அரிய காட்சியாகும்.

சரணாகரட்சகர் கோவில்
சனி பகவான் சன்னதியின் விசேட அமைப்பு
நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்கடையூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்ற ஊரில் அமைந்துள்ளது சரணாகரட்சகர் கோவில்.
இத்தலத்தில் சனி பகவான் சன்னதி, இறைவன சரணாகரட்சகர் சன்னதிக்கும் இறைவி பெரியநாயகி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது ஒரு விசேடமான அமைப் பாகும். இது போன்ற சனி பகவான் சன்னதி அமைப்பு திருநள்ளாறு தலத்தில்தான் இருக்கின்றது.
சனி பகவான் பூஜை செய்த தலம்
சனி பகவான் மக்களின கர்ம வினைகளை, ஒரு நீதிபதி போல் சீர் தூக்கிப் பார்த்து, அதற்கேற்ப பலன்களைத் தருபவர். ஆனால் கடமையை சரியாகச் செய்யும் அவருக்கு அவப்பெயர்தான் மிஞ்சுகின்றது. தனக்கு ஏற்படும் அபவாதத்தை நீக்கிக் கொள்ளவும், தன்னை வழிபடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் விரும்பிய சனி பகவான் இத்தலத்துக்கு வந்து இறைவன் சரணாகரட்சகரை வழிபட்டார். சனி பகவான் பூஜையினால் மனம் மகிழ்ந்த இறைவன, சனி பகவானை வழிபட்டவர்களுக்கு அவர் நற்பலன்களைக் கொடுக்கும் சக்தியைக் அளித்தார்.
இத்தலத்து சனி பகவானுக்கு ருத்ர ஹோமம், அபிஷேகம் செய்து வழிபடுவது தற்பலன்களைத் தரும். ஒன்பது வாரங்கள் தொடர்ந்து இவரை வழிபட்டால் சகல பிரச்சனைகளும் நீங்கும்.

ஆயிரங்காளியம்மன் கோவில்
ஐந்த ஆண்டிற்கு ஒரு முறை தரிசனம் தரும் அம்மன்
பாண்டிசேரி மாநிலம் காரைக்காலிற்கு அருகில் திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ளது ஆயிரங்காளியம்மன் கோவில்.
ஆயிரங்காளியம்மன் தல வரலாறு
அன்னை ஆயிரங்காளியம்மன் திருமலைராயன்பட்டினதிற்கு தானாக வந்தவள் ஆவாள். திருமலைராயன் எனும் அரசன் முதலில் தஞ்சைப் பகுதியை ஆண்டு வந்தான். பின்னர், இந்தப் பட்டினத்திற்கு தன் தலைநகரை மாற்றிக் கொண்டான். அவன் உருவாக்கிய நகரமாதலால் திருமலைராயன் பட்டினம் என்றழைக்கப்பட்டது.
முற்காலத்தில் வடதேசத்து மன்னன் ஒருவன் அன்னை காளியை திருவுருவம் வைத்து பூசித்து வந்தான். அன்னைக்கு எதை படைத்தாலும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து பூசித்தான். அவனுக்கு மனமிரங்கிய அன்னை காளி அவன் தேசம் செழிப்புடன் விளங்க அருள் புரிந்தாள். மன்னனின் இறுதிக் காலம் நெருங்கிய போது தன்னை ஒரு பெட்டியில் வைத்து கடலில் போட்டு விடும்படி ஆணையிட்டாள். பின் மன்னன் முன் ஒரு பேழை தோன்றியது அதில் அன்னையை வைத்து. வங்க கடலில் விட்டுவிட்டு. மன்னன் அன்னையின் திருவடி அடைந்தான்.
அன்னை காளி இருந்த பேழையும், மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன்பட்டினம் வந்தது. அருகில் இருந்த மீனவர்கள் பெட்டியை எடுக்க முயற்சித்தும் எடுக்க முடியவில்லை.
அன்றிரவு செங்குந்த முதலியார் மரபினரின் மூத்த சிவநேசர் ஒருவரின் கனவில் தோன்றி. தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.
விடிந்ததும் அவரும் ஊராரிடம் நடந்தவற்றை கூறி மேள தாள வாத்தியங்களோடு கடற்கரைக்கு அனைவருடனும் சென்றார். அவர் வந்தவுடன் யாருக்கும் அகப்படாத பெட்டி வேகமாக அவருக்கு அருகில் வர அவரும் பேழையை அணைத்து தூக்கி வந்தார். பின் அவ்வூரில் உள்ள தேவார வைப்புத் தலமான ராஜ சோழீஸ்வரமுடையார் கோவில் கீழ வீதி மடத்தில் பேழையை வைத்து திறந்தனர். அதில் அன்னையின் அற்புதமான திருவுருவமும் ஒரு ஓலையும் இருந்தது. அந்த ஓலையில்
"அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்
இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள்,
அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்
எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்
ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை
திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!"
என்று இருந்தது.
அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில்தான் படைக்கப்படுகிறது. எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.
பேழையில் இருந்து வெளிப்படும்போது ஏற்படும் அதிசய நிகழ்வுகள்
ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் வளர்பிறை பட்சத்தில் திங்கட்கிழமை இரவில் அம்மன் இருக்கும் பெட்டியை திறப்பார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும். ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும். மலர்ப் பாதங்களில் சிலம்பும், வளைக்கரங்களும், பட்டாடையும் நெற்றியில் திலகமோடு அழகுத் திருமுகத்துடன் காளியன்னை வீர வடிவம் கொள்கிறாள். மாதுளம்பூ மேனி கொண்ட அம்மனின் கம்பீரமான தோற்றத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். வீரகோலம் பூணுவதாலேயே வீரமாகாளி என்று அழைக்கப்படுகிறாள்.
ஆயிரம் எண்ணிக்கையில் சீர்வரிசைப் பொருட்கள்
மறுநாள் செவ்வாய்கிழமையன்று ஒவ்வொரு செங்குந்த குடும்பப் பெண்டிரும் காளியம்மன் மடத்திலிருந்து புதுப்பானையைப் பெற்று தங்கள் இல்லத்திலிருந்து பொங்கல் பொங்குவதற்கு உண்டான பொருள் யாவும் கொண்டு வந்து மடத்தினில் பொங்கல் வைப்பார்கள். இதனிடையே அன்று மாலை ஆறு மணிக்கு அபிராமி உடனுறை ராஜசோளீஸ்வரர் திருக்கோயிலிலிருந்து காளியம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருவார்கள். மாலைகள் ஆயிரம், கனிகள் ஆயிரம், தின்பண்டங்கள் ஆயிரம், இளநீர் ஆயிரம், மஞ்சள் ஆயிரம் என பலவகையான நிவேதனப் பொருட்கள் சீர்வரிசையில் இடம் பெறும்.
சீர்வரிசைப் பொருள்களை ஏற்றி வரும் ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வந்து கொண்டிருக்கும். வானத்திலிருந்து இந்த வரிசை ஊர்வலத்தைப் பார்த்தால், நீண்ட நெடிய ஆற்றில் நிவேதனங்கள் மிதந்து செல்வது போலிருக்கும். காளியம்மன் கோயிலை அடைந்ததும் சித்ரான்னங்கள் உள்ளிட்ட அனைத்தும் தேவியின் முன்பு சமர்ப்பிக்கப்படும். அன்னைக்கு படையல் போட்டு முடித்ததும் தீபாராதனை காட்டப்படும்.
அடுத்து புதன், வியாழக் கிழமை இரண்டு நாட்கள், இரவு பகலாக தொடர்ந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் அன்னையை தரிசித்தபடி இருப்பர். பிரசாதங்கள் நிவேதிக்கப்பட்டும், தொடர்ந்து விநியோகம் செய்தபடியும் இருக்கும். அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் விதம் பார்த்து பக்தர்கள் ஆச்சரியமடைந்தபடி இருப்பார்கள். வெள்ளிக்கிழமை விடிவதற்குள் அன்னையை மீண்டும் பெட்டிக்குள் வைத்து விடுவார்கள்.
கேட்ட வரம் தரும் ஆயிரம் காளியம்மன்
அன்னை ஆயிரங்காளி தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக கோவில் கொண்டுள்ளாள். இவளிடம் என்ன வரம் கேட்டாளும் வாரி வழங்குகிறாள். பக்தர்களும் தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர்.
இந்த ஆண்டு மீண்டும் ஆயிரங்காளியம்மன், ஜூன் மாதம் 6ம் தேதி திங்கட்கிழமை பேழையிலிருந்து வெளி வருகிறாள்.

பாடலாத்ரி நரசிம்மர் கோவில்
நெற்றிக்கண் உடைய நரசிம்மர்
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். இத்தலத்தில் சிறிய குன்றின் மீது கோயில் கொண்டிருக்கிறார் பாடலாத்ரி நரசிம்மர். 'பாடலாத்ரி' என்றால் செந்நிறக் குன்று என்று பொருள்.
இரணியனை வதம் செய்து விட்டு காட்சி தந்த தலம்
நரசிம்ம அவதாரக் காலத்தில், ஜபாலி என்னும் முனிவர் இத்தலத்தில் தவம் செய்து வந்தார். பெருமாளை நரசிம்மராகக் காண வேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவு செய்யும் வகையில் நரசிம்மர் இரணியனை வதம் செய்தவுடன் உக்கிர நரசிம்மராக முனிவருக்குக் காட்சி கொடுத்தார். ஜபாலி முனிவரின் ஆசைப்படி நரசிம்ம வடிவத்தோடு சிவனைப் போன்று முக்கண்ணுடன் (நெற்றிக்கண்) காட்சி கொடுத்தார் நரசிம்மர். மூலவரான நரசிம்ம மூர்த்தியின் நெற்றியிலுள்ள நாமத்தை விலக்கும் பொழுது நெற்றிக்கண்ணைத் தரிசனம் செய்யலாம். மூலவர் பஞ்ச மூலிகைகளால் உருவாக்கப் பட்டதால் அபிஷேகம் கிடையாது.
மிளகு தோசைப் பிரசாதம்
இத்தலத்தின் மிளகு தோசைப் பிரசாதம் மிகவும் பிரசித்தம். எண்ணெய்ப் பொடியுடன் வழங்ககப்படும் இப்பிரசாதத்தின் சுவையே அலாதியானது.
நரசிம்மரின் திருமேனியே மலையாக இருக்கும் தலம்
பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சுவாதி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.
இங்குள்ள பெருமாளை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகள் விரைவில் அனுகூலமாக தீரும். கடன் தொல்லைகள் அகலும். மகப்பேறு உண்டாகும். திருமணத்தடை நீங்கும். பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் குன்றினை ஒன்பது முறை சுற்றி வழிபாடு செய்கிறார்கள்.

அருணாசலேசுவரர் கோவில்
செந்தூர விநாயகர்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் பல விநாயகர் சன்னதிகள அமைந்துள்ளன. அவற்றில் பிரதானமாக விளங்குபவர் சம்பந்த விநாயகர்.
இவர் கொடி மரம் அருகே தனிச் சந்நதியில் சுமார் 6 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. பொதுவாக ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எநத கோவிலிலும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.
விநாயகருக்கு செந்தூரம் பூசுவதின் பின்னணிக் கதை
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அம்மளைக் கட்டுப்படுத்தி பலரையும் கொடுமை செய்தான்.
இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். அதை நினைவு படுத்தும் வகையில், சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இத்தல விநாயகருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்

தலத்தின் தனிச்சிறப்பு
நாகராஜன் வழிபட்ட தலங்கள்
நாகராஜன், பூலோகத்தின் அடியில் உள்ள நாகலோகத்தில் இருந்தபடி பூமியை பல காலம் தாங்கி வந்தார். அவர் பூமியின் பாரம் சுமக்க முடியாமல் சிரமப் பட்டார். அதனால் அவர் சிவபெருமானை வேண்டினார். மகாசிவராத்திரி அன்று கும்பகோணம் கீழ்கோட்டமான நாகேஸ்வரன் கோயிலில் முதல் காலத்திலும் திருநாகேஸ்வரத்தில் இரண்டாவது காலத்திலும் திருப்பாம்புரத்தில் மூன்றாவது காலத்திலும் நாகூர் நாக, நாதசுவாமி திருத்தலத்தில் நான்காவது காலத்திலும் தன்னை வழிபட்டால் பழைய வலிமை கிடைக்கும் என சிவபெருமான் அருளினார். அவ்வாறே நாகராஜன் தமது தேவிகளுடன் மகாசிவராத்திரி அன்று நான்கு காலங்களிலும் பூஜை செய்து பழைய வலிமைப் பெற்றார்
ராகு, கேது கிரக தோஷங்கள் உள்ளவர்கள் இந்த நான்கு தலங்களையும் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

திருவாப்புடையார் கோவில்
மர ஆப்பு சிவலிங்கமான அதிசயம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு வடக்கே செல்லூர் எஎன்னும் இடத்தில் , வைகைக் கரைக்கு அருகில் தேவாரத்தலமான திருவாப்புடையார். கோவில் அமைந்திருக்கிறது. இறைவன் திருநாமம் திருவாப்புடையார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை.
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தன். அவன் எப்போதும் சிவபூஜை செய்ந பின்தான் சாப்பிடுவான். ஒரு முறை அவன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். காட்டில் வெகு நேரம் வேட்டையாடியதால் களைப்படைந்து பசியால் வாடினான். மன்னனுடன் சென்ற அமைச்சர், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ' சிவபூஜை செய்த பின்பே உணவு சாப்பிடுவேன்' என்று சொல்லி மறுத்து விட்டான்.
அமைச்சர், மன்னன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ;அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்' என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது மர ஆப்பு என்று தெரிந்தது.
அதை நினைத்து வருந்திய மன்னன், 'இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்' என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு 'ஆப்புடையார்' என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் 'ஆப்பனூர்' என்றானது.
ஆற்று மணல் அன்னமாக மாறிய விநோதம்
இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.
சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு 'அன்னவிநோதன்' என்கிற பெயர் ஏற்பட்டது..
இத்தலத்தில் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பச்சரிசி சாதத்தை வடித்து, அதனை லிங்கத் திருமேனியில் சாற்றுவர். கருகுமணியால் காதணி, கழுத்தில் புடலங்காய் மாலை என லிங்கத் திருமேனியை அலங்கரிப்பார்கள். பூஜை முடிந்ததும் லிங்கத் திருமேனியின் சிரசில் உள்ள சாதத்தை எடுத்து வைகையில் கரைப்பார்கள். இதனால், அந்த நதி இன்னும் புண்ணியம் பெறுவதாக ஐதீகம். மீதமுள்ள சாதத்தைப் பிரசாதமாக வழங்குவர். இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட, வியாபாரம், விளைச்சல் பெருகும். குபேர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும் என்பது பக்தர்களின் நமபிக்கை.