
சங்குபாணி விநாயகர் கோவில்
சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் சங்குபாணி விநாயகர்
காஞ்சிபுரத்தில் உள்ள 16 விநாயகர்களை சங்குபாணி விநாயகர் மிகவும் முக்கியமானவர் சங்குபாணி விநாயகர். காஞ்சி சங்கராச்சாரியாரான மகா பெரியவர் காஞ்சியிலிருந்து வெளியூருக்கு புறப்படும்போதும் திரும்பி காஞ்சிக்கு வரும் போதும் இத்தலத்து விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்த பின்தான் செல்வார் என்பது இத்தலத்து சிறப்பாகும். இவர் கையில் சங்கு ஏந்தி அருள்பாலிப்பதால் சங்குபாணி விநாயகர் (பாணி என்றால் கை) என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது.
சங்கு பாணி விநாயகர் என்று பெயர் வந்த கதை
ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த போது தேவர்கள் வேதங்களை ஆயுதமாகக் கொண்டு அசுரர்களை தாக்கினர். இதனை முறியடிக்க அசுரர்கள், அசுரர்களில் பேராற்றல் படைத்தவனும், சங்கு வடிவில் தொன்றியவனுமான சங்காசுரனை அணுகினார்கள். சங்காசுரனும் தன் தம்பியான கமலாசுரனை அனுப்பி பிரம்மனிடமிருந்து வேதங்களை பறித்துவரச் செய்தான். பின்னர் வேதங்களை கடலுக்கடியில் மறைத்து வைத்து தானே காவல் நின்றான். இதனால் மூவுலகங்களில் வேத நெறி ஒழுக்கங்கள் மறைந்து போயின. படைப்பைத் தொடர இயலாமல் வருந்திய பிரம்மன், சிவனிடம் சரணடைந்தார். சிவன் விநாயகரால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூற, பிரம்மன் விநாயகரை வேண்டினார். விநாயகரும் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கர்க்க முனிவரின் வேள்வியிலிருந்து தோன்றிய மயில் மீதேறிச் சென்று சங்காசுரனை அழித்தார். வேதங்களையும் மீட்டெடுத்தார். சங்காசுரனை சங்கு வடிவில் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். அதனாலேயே இவருக்கு சங்குபாணி விநாயகர் என்ற பெயர் வந்தது. மயில் மீதேறி வந்ததால் மயூர விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்து விநாயகரை வழிபட்டால் சகல விதமான பிரச்சினைகளும் தீரும் என்பது ஐதீகம்.

பொது ஆவுடையார் கோவில்
திங்கட்கிழமை இரவு மட்டுமே திறந்திருக்கும் சிவன் கோவில்
முடி வளர்வதற்காக பெண்கள் அளிக்கும் விளக்குமாறு காணிக்கை
பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள பரக்கலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது.
சிவபெருமான், வான் கோபர், மகாகோபர் என்ற இரண்டு முனிவர்களுக்கு இடையே, இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என ஏற்பட்ட சந்தேகத்தை இங்குள்ள ஆலமரத்தில் குருவடிவில் உட்கார்ந்து தீர்த்து வைத்தாராம் . இரண்டு முனிவர்களுக்கும் பொதுவாக இருந்து, நடுநிலையாக இருந்து சிவனார் அருளியதால், இந்தத் தலத்து இறைவனுக்கு பொது ஆவுடையார் எனும் திருநாமம் அமைந்தது.
இந்த சம்பவம் திங்கட்கிழமையில் நடைபெற்றதால் பல வருடங்களாக திங்கட்கிழமை இரவு மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது. இங்கு மூலஸ்தானத்தில் உள்ள ஆலமரமே சிவனாக காட்சி அளிக்கிறார். வெள்ளால மரமே இங்கு மூலவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தில் கருவறைக் கதவு பித்தளைத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. திறந்ததும் வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். திங்கட்கிழமை இரவு மட்டுமே திறக்கப்படும் இந்த கோவில் இரவு நடுநிசி 12 மணி பூஜைக்கு பின்னர் நடை சாற்றப்படும். மீண்டும் மறுவாரம் தான் திறக்கப்படும். பிற நாட்களில் கருவறைக் கதவையே கடவுளாக எண்ணி வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள். இங்கு சிவபெருமானே பிரதானம் என்பதால் அம்பாள் சன்னதி கிடையாது.
பெண்கள் அளிக்கும் வினோதமான விளக்குமாறு காணிக்கை
பெண்கள் தங்களுக்கு முடி வளர வேண்டும் என்பதற்காக இக்கோயிலுக்கு விளக்குமாற்றை காணிக்கையாக வேண்டிக்கொள்கிறார்கள். தென்னங்கீற்றில் உள்ள குச்சிகளை கொண்டு தாங்களே விளக்குமாற்றை செய்து கோயிலுக்கு காணிக்கையாக வழங்குகிறார்கள். இப்படிச் செய்வதால் தென்னங்கீற்று போல தங்கள் முடியும் வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி காணிக்கையாகச் செலுத்தப்பட்ட விளக்குமாறுகள் ஆயிரக்கணக்கில் குவிந்து விடுகின்றன என்கிறார்கள்.
கார்த்திகை மாதம் சோமவாரத்துக்கு இங்கு அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருடம் ஒரு முறை தை பொங்கலன்று மட்டும்தான் இக்கோவில் நாள் முழுவதும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு இந்த கோவில் பூஜையில் கலந்து கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது நம்பிக்கை. இவரை வேண்டிக் கொண்டு, எந்த வியாபாரத்தை துவங்கினாலும் லாபம் அமோகமாக இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள் .

பக்தவத்சலேஸ்வரர் கோவில்
அம்பாளுக்கு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் தேவாரத் தலம்
பக்தவத்சலேஸ்வரர் செங்கல்பட்டு- மாமல்லபுரம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கழுக்குன்றம். மலைமேல் உள்ள கோவிலில் வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஊரில் அமைந்துள்ள கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசனின் திருநாமம் பக்தவத்சலேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி.
அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்பு திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்பாள் மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது. மற்ற நாட்களில் தினசரி நடைபெறும் அபிஷேகம், அம்பாளின் பாதத்திற்கு மட்டுமே செய்யப்படுகிறது

சித்திரகுப்தன் கோவில்
நம் பாபப் புண்ணிய கணக்கெடுக்கும் சித்ரகுப்தன்
அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன் தரும் தலம்
ஒவ்வொரு வீட்்டிலும் வரவு செலவுக் கணக்கு எழுதுவது என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்.ஆனால் நம் ஒவ்வொருடைய புண்ணியச் செயல்களையும் பாபக் காரியங்களையும் தனித் தனியே பட்டியலிட்டு அதை எமதர்மராஜனுக்குக் கொடுப்பவர் ஒருவர் இருக்கிறார்.அவர்தான் சித்திரகுப்தன். எமதர்மராஜன், சித்திரகுப்தன் தரும் நம் பாவப் புண்ணியக் கணக் கை ஆராய்ந்து, அதில், நாம் செய்திருந்த புண்ணியங்கள் அதிகமானால் நமக்கு மோட்சப் பதவியும் பாவக் காரியங்கள் மிகுதியானால் மறுபிறவியும் நமக்கு அளித்திடுவார்.
சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரகுப்தன் வலது காலைத் தொங்க விட்டும் இடது காலை மடித்தும் அமர்ந்த நிலையில் காட்சித் தருகின்றார்.அவர் வலக் கையில் எழுத்தாணியும் இடக் கையில் ஏடும் இருக்கின்றது.
சித்திரகுப்தனின் கதை
எமதர்மராஜன் சிவபெருமானை ஒரு நாள் கைலாயத்தில் சந்தித்து தனக்கு பூலோகத்திலுள்ள ஆன்மாக்களின் பாவப் புண்ணியங்களைப் பரிசீலித்து அந்த ஆன்மாக்களின் அடுத்த நிலை என்ன என்பதுப் பற்றி முடிவு எடுக்க மிகுந்த சிரமமாக உள்ளது என்றும் அதனால் பாவப் புண்ணியக் கணக்குகளை நிர்வகிக்க தனக்கு ஒரு உதவியாளர் வேண்டுமென்றும் வேண்டுகோள் வைத்தார். சிவபெருமான் பிரம்மதேவனிடம் எமதர்மராஜனின் வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு உத்திரவிட்டார்.
பிரம்மதேவன் எமதர்மனுக்கு ஒரு சகோதரனைப் படைத்து அச்சகோதரனே எமதர்மராஜனுக்குப் பாவப் புண்ணியக் கணக்கு எழுத உதவியாக இருக்கட்டும் என்று தீர்மானித்தார்,
பிரம்மதேவன் வானவில்லின் ஏழு வர்ணங்களிலிருந்து நீளாதேவி என்னும் பெண்ணைப் படைத்தார்.பின்னர நீளாதேவிக்கும் எமதர்மராஜனின் தந்தையான சூரிய தேவனுக்கும் திருமணம் நடந்தது.இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் சித்திரகுப்தன்.சித்திரை மாதம் சித்ரா பௌணர்மி தினத்தன்று பிறந்ததால் முதலில் சித்திரைப்புத்திரன் என்று பெயரிட்டார்கள்.பின்னர் சித்திரகுப்தன் என்று அழைக்க ஆரம்பிததார்கள். சித்திரகுப்தன் குழந்தையாய் பிறந்தபோது, அவன்பிற்காலத்தில் நிர்வகிக்கப் போகும் கணக்குப் பணியைக் குறிக்கும் விதத்தில், இடது கை உள்ளங்கை ரேகைகளில் ஏடு போன்ற அமைப்பும் வலது கை உள்ளங்கை ரேகைகளில் எழுத்தாணிப் போன்ற அமைப்பும் இருந்ததாம்.
சித்திரகுப்தன் வளர்ந்தபின் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டான்.அதன் பின்னர் தந்தை சூரியதேவனால் பாவப் புண்ணியக் கணக்கு எழுத,எமதர்மராஐனுக்கு உதவியாக இருப்பதற்காக, அனுப்பப் பட்டான்.
சித்திரகுப்தனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்
நவக்கிரகங்களில் கேது பகவான, ஒரு ஜாதகரின் மோட்சப் பதவியை தீர்மாணிப்பதால் அவருக்கு மோட்சகாரகன் என்ற பெயறும் உண்டு. நம் பாவப் புண்ணியக் கணக்கின் அடிப்படையில் நமக்கு மறுபிறவியா அல்லது மோட்சமா என்று தீர்மானிக்கும் சித்திரகுப்தன்தான் கேது பகவானின் அதிதேவதை ஆவார்.
எனவே சித்திரகுப்தனை வணங்கினால்,கேது பகவானால் ஏற்படக்கூடிய தீயப் பலன்களெல்லாம் விலகி நற்பலன்கள் உண்டாகும். ஐந்து பௌணர்மிகளில் சித்திரகுப்தனைத் தொடர்ந்து தரிசித்து அர்ச்சனை செய்தால், திருமணம் கைக்கூடும். இத்தலம் கேது நிவர்த்தி தலம் என்பதால், கேது திசை ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்களும் மற்றும் அசுவினி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இந்த ஆலயத்தில் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த நற்பலன்களக் கொடுக்கும்.

மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்
இச்சா சக்தியாய் விளங்கும் திரிபுரசுந்தரி அம்மன்
சென்னை மீஞ்சூர் சாலையில், சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேலூர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது திரிபுரசுந்தரி அம்மன் கோவில். இறைவன் திருநாமம் திருமணங்கீசர்,. அம்மனின் மற்றொரு திருநாமம் திருவுடை அம்மன்.
ஆலயத்துள் நுழைந்ததும் வலதுபுறத்தில் அம்பாள் சந்நதி, தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை தன் மேலிருகரங்களில் பாசாங்குசத்தைக் கொண்டிருக்கிறாள். கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைக் காட்டி அருள் காட்சித் தருகின்றாள். அம்பாளின் திருமுன் சிம்மமும், பலிபீடமும், கொடிமரமும் காணப்படுகின்றன.
மிளகு பயிறு ஆன அதிசயம்
அம்பாள் சந்நதிக்கும் கொடிமரத்துக்கும் இடையில் அமைந்துள்ள அழகிய மண்டபத்தை மிளகு மாற்றியான் மண்டபம் என குறிப்பிடுகிறார்கள். அதற்குப் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. நாயக்க மன்னராட்சிக் காலத்தில் மிளகுக்குச் சுங்கவரி வசூலிக்கும் வழக்கம் இருந்தது. இப்பகுதிக்கு ஒரு வணிகன் மிளகு மூட்டைகளுடன் வந்தான். வரி செலுத்த விரும்பாத அவன் தன் மூட்டைகளில் பயறு இருப்பதாக அதிகாரிகளிடம் பொய் சொன்னான். சந்தைக்குச் சென்று மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த வணிகன், மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாறி இருந்ததைக் கண்டு பதறித் துடித்தான். பின் மனம் வருந்தி இச்சா சக்தியாக அருள்புரியும் திரிபுர சுந்தரியிடம் மன்னிப்பு கேட்டான். மனம் திருந்திய வணிகனுக்கு அருள்புரிந்திட திருவுளம் கொண்ட தேவி பயறு மூட்டைகளை மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றினாள்.அன்னையின் மகிமையை அனுபவ பூர்வமாய் உணர்ந்த அந்த வணிகன் சுங்கவரியாக செலுத்த வேண்டிய பணத்தை ஆலயத்திற்கு காணிக்கையாகச் செலுத்தினான். அம்பாள் சந்நதிக்கு முன் மண்டபத்தையும் கட்டிக் கொடுத்தான். அதுதான் மிளகுமாற்றியான் மண்டபம்.
மூன்று அம்மன்களின் பௌர்ணமி தரிசனம்
இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகிய முப்பெரும் சக்திகளுக்குரிய திருத்தலங்களாக மேலூர், திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில் ஆகியன திகழ்கின்றன. பௌர்ணமி தினத்தில் மேலூர் திருவுடையம்மனை முதலில் இச்சா சக்தியாய் வழிபட்டு, அடுத்து ஞான சக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனைத் தரிசித்து, அடுத்து கிரியா சக்தியான திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிப்பதன் மூலம் மூவரின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மூன்று தேவியரின் திருவுருவச் சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடித்தாராம். பார்வதி பரமேஸ்வரர் அச்சிற்பிக்கு வரமருள முன் வந்தபோது, அச்சிற்பியோ, 'வெள்ளிக்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இம்மூன்று தேவியரையும் தரிசிப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டாராம்.
இத்தலத்து ஈசன் திருமணங்கீசரையும் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மனையும் வணங்கினால் திருமண வரம், மக்கட் செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தலத்தின் தனிச்சிறப்பு
பஞ்சரங்க தலங்கள்
108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் தரும் தலங்கள்
பஞ்சரங்க தலங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (பெருமாள்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். பஞ்ச ரங்க தலங்களில், பெருமாள் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
கீழ்க்கண்ட ஐந்து தலங்கள் பஞ்சரங்க தலங்கள் ஆகும்.
1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
2. அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),
3. மத்திய ரங்கம் – ஸ்ரீரங்கம் (திருச்சி),
4. சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
5. பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).
பஞ்ச ரங்கத் தலங்களை தரிசித்தால் 108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் பஞ்ச ரங்கத் தலங்களை வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.

வீரட்டேசுவரர் கோவில்
அவ்வையாரை தன் தும்பிக்கையால் கைலாயத்திற்கு தூக்கிவிட்ட விநாயகர்
விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கோயிலூர். இறைவன் திருநாமம் வீரட்டேசுவரர். இறைவி பெரியநாயகி. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் பெரிய யானை கணபதி குறித்து தமிழ் மூதாட்டி அவ்வையார் சீதக் களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார்.
சுந்தரர், சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வையார் இந்த தலத்து விநாயகர் பெரிய யானை கணபதியை பூஜை செய்து கொண்டிருந்தார். .தானும் கயிலை செல்ல எண்ணி அவசரம், அவசரமாக பூஜை செய்தார்..உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் கபை எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி அவ்வையார் பூஜை செய்த பிறகு, விநாயகர் விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கைலாயத்தில் சேர்த்துவிட்டார். இவ்விநாயகர், விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார்.

வில்வவனேசுவரர் கோவில்
பக்தர்களின் குறைகளுக்கு உடனே தீர்வு கூறும் அம்பிகை
கும்பகோணம் திருவையாறு சாலையில் தியாகசமுத்திரம் வழியாக புள்ளபூதங்குடி அடுத்து உள்ளது திருவைக்காவூர் என்னும் தேவாரத்தலம். ஆலயத்தின் மூலவர் வில்வவனேசுவரர், சுயம்புமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து இருக்க அவர் சன்னதியின் இடதுபுறம் வளைக்கைநாயகி எனும் பெயருடன் அம்பாள் தனி சன்னதியில் இருக்கின்றார்.
இந்த கோயிலில் உள்ள அம்பாள் வளைக்கை நாயகி மிகவும் அருள் வாய்ந்தவர். இங்கு அம்பாளுக்கு சர்வஜனரட்சகி என்ற பெயரும் உண்டு. அம்பாளிடம் தங்கள் குறை தீர்க்க தேடி வரும் பக்தர்கள், செவ்வாய் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு முதலில் அர்ச்சனை செய்கிறார்கள். பின்னர், தங்கள் குறைகள் எதுவென்றாலும் அதை அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும்போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அர்ச்சகர், அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். அவர் கூறியது போலவே எல்லா விஷயங்களும் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர்.

கவிகங்காதீஸ்வரர் கோவில்
அபிஷேகம் செய்யப்பட்ட நெய் வெண்ணெயாக மாறும் அதிசயம்
பெங்களூருவில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் தும்கூர் மாவட்டத்தில், சிவகங்கா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஒரு குகையில் லிங்க வடிவத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான். இத்தல இறைவனுக்கு 'கவிகங்காதீஸ்வரர்' என்று பெயர்.
5 அடி உயரமும், நல்ல பருமனும் கொண்ட இந்த லிங்கத்தை மிக அருகில் நின்று தரிசனம் செய்யலாம். இந்த ஆலயத்தில் இறைவழிபாடு செய்யவும், அபிஷேகத்திற்காகவும் நெய் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி அபிஷேகத்தின் போது அர்ச்சகரிடம் கொடுத்தால், அவர் மந்திரங்கள் சொல்லி நெய்யைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்.
மீண்டும் அந்த நெய் கொடுத்தவருக்கே பிரசாதமாக வந்து சேரும். ஆனால் அப்படி பிரசாதமாக வரும் நெய், வெண்ணெயாக மாறி இருக்கும் என்பதுதான் அதிசயம். இப்படி பிரசாதமாக அளிக்கப்படும் வெண்ணெய் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை

சதுர்புஜ கோதண்டராமர் கோவில்
மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தரும் ராமபிரான்
செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பொன்பதர் கூடம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது சதுர்புஜ கோதண்டராமர் கோவில்.
ராமபிரான், தன் தாய் கோசலை, பக்தன் ஆஞ்சநேயர், சீதையிடம் பரிவு காட்டிய திரிசடை, ராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியவராக, மகாவிஷ்ணு வடிவாய்க் காட்சி தந்தார். அதேபோல தனக்கும் மகாவிஷ்ணு காட்சி தர வேண்டமென தேவராஜ மகரிஷி பெருமானை வேண்டித் தவமிருந்தார். அதன்படி வழக்கமாக ஒரு கரத்தில் வில்லும் ஒரு கரத்தில் அம்புமாக காட்சி தரும் ராமர், இங்கு சதுர்புஜ ராமராக சங்கு, சக்கரம், கோதண்டம் மற்றும் பாணம் இவைகளை தரித்துக்கொண்டு காட்சி தந்தார்.
ராமபிரானின் மார்பில் மகாலட்சுமி
கருவறையில் ராமபிரான், வலது புறம் சீதையுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து, மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இடப்புறம் லட்சுமணர் நின்றிருக்க, எதிரே இம்மூவரையும் வணங்கியபடி, வலக்கரத்தை வாயில் வைத்துப் பொத்தியபடி, அனுமன் இருக்கிறார். ராமபிரான் இங்கே விஷ்ணுவாகக் காட்சி தந்த தலம் என்பதால், இவர் மார்பில் மகாலட்சுமி இருப்பது விசேஷம்.
அழகு ததும்பும் உத்ஸவ மூர்த்தி
சதுர்புஜ கோதண்டராமரின் உத்ஸவ மூர்த்தி, அதி அற்புத அழகுடன் திகழ்கிறார். உத்ஸவ மூர்த்தியின் விரல் நகம், கை ரேகைகள், கணுக்கால், முட்டி, உருண்டு திரண்ட கால் சதை, தோள்கள் என ஒவ்வொரு அங்கமும் தத்ரூபமாக உன்ன ராமனின் சுந்தர வடிவம் , தரிசிப்போரை பரவசமடையச் செய்யும். சீதையை மணந்து கொள்ளும்முன் ராமர், இடதுகாற் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்தபடி ஒடித்தார். அதை உணர்த்தும் விதமாக, இங்கு ராமர், இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.
இல்லறம் சிறக்க வழிபட வேண்டிய தலம்
தம்பதியர் ஒற்றுமை வேண்டியும், பிரிந்த தம்பதியர் சேரவும் இங்கே வேண்டிக் கொள்கின்றனர். மகான் தர்மதிஷ்டருக்கு ஒரு சாபத்தால் ஏற்பட்ட தோல் நோய் குணமாக இங்கே ராமனை வழிபட்டார். ராமனருளால் அவர் நோய் நீங்கியது. எனவே, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து நோய் குணமடைய வேண்டிக் கொள்கிறார்கள்.
பொன்பதர் கூடம் என்ற பெயர் ஏற்பட்ட கதை
ஒருசமயம், வைணவ ஆசார்ய புருஷர்களில் ஒருவரான சுவாமி தேசிகர் இப்பகுதிக்கு யாத்திரையாக வந்த தருணத்தில், ஒரு கடலை வியாபாரி வீட்டின் திண்ணையில், தான் பூஜைக்காக உடன் கொண்டு வந்திருந்த ஹயக்ரீவர் விக்கிரகத்துடன் தங்கினார். அன்றிரவு தன் நிலத்தை ஒரு குதிரை மேய்வதாக கடலை வியாபாரி கனவு கண்டார்.
மறுநாள் திண்ணையில் குதிரை முகம் மனித உடலுடன் கூடிய ஹயக்ரீவ விக்கிரகத்துடன் அமர்ந்திருந்த தேசிகரிடம் தன் கனவை வியாபாரி சொன்னார். அவருக்கு ஹயக்ரீவர் அருள் பரிபூர்ணமாக கிடைத்துவிட்டதாக கூறினார் தேசிகர்.
பிறகு வியாபாரி தன் நிலத்திற்கு போய் பார்த்தபோது குதிரை மேய்ந்ததாக கனவில் கண்ட தன் நிலத்தில் நெற்கதிர்கள் பொன்மணிகளாக விளைந்திருப்பதைக் கண்டு பிரமித்தார். அதிலிருந்து இத்தலம் 'பொன் உதிர்ந்த களத்தூர்' என்று அழைக்கப்பட்டு நாளடைவில் 'பொன்விளைந்த களத்தூர்' என்று மாறியது. இந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது இவற்றின் பொன் பதர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் போய் விழுந்ததாம். அப்படி பதர் விழுந்த இடமே ;பொன்பதர் கூடம்' என்றாகியது. இங்குதான் சதுர்புஜ ராமர் கோவில் உள்ளது.

யோகநந்தீஸ்வரர் கோவில்
பெண் சாபம் போக்கும் தலம்
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது. இத்தல இறைவனின் திருநாமம் யோகநந்தீஸ்வரர் என்பதாகும். இறைவி சவுந்திரநாயகி. பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம், பாவம் நீங்கும்.
நான்கு யுக பைரவர்கள்
இந்த ஆலயத்தில் 4 பைரவர்கள் ஒரே சன்னிதியில், யுகத்திற்கு ஒரு பைரவராக அருள்கின்றனர். எனவே இவர்களை சதுர்கால பைரவர்கள் என்று அழைக்கிறார்கள். ஞான கால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்பது இவர்களின் திருநாமங்கள்.

இடுக்கு பிள்ளையார் கோவில்
தவழ்ந்து சென்று தரிசிக்க வேண்டிய பிள்ளையார்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் குபேர லிங்கத்தை தாண்டியதும், வலது பக்கத்தில் இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளது.
இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள், படுத்த நிலையில் ஊர்ந்தபடி உடலை குறுக்கி கொண்டுதான் நுழைந்து வெளியே வரமுடியும். கோயிலில் பின் வாசல் வழியாக ஒருக்களித்துப் படுத்தவாறு உள்ளே நுழைய வேண்டும். மெதுவாக கையை ஊன்றி நகர்ந்து நகர்ந்து முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இதனால் பெண்களுக்கு கர்ப்பபை கோளாறுகள் நீங்குவதாக ஐதீகம். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தாலும் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்று வந்தால் பலன் கிடைக்கும்.
இந்த இடுக்கு பிள்ளையாருக்குள் இடைக்காட்டு சித்தர் மூன்று யந்திரங்களை பதித்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த யந்திரங்கள் தரும் அதிர்வு காரணமாகத்தான் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர.

பள்ளிகொண்டீஸ்வரர் கோவில்
தக்ஷிணாமூர்த்தி தன் மனைவியுடன் இருக்கும் அபூர்வ காட்சி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப்பள்ளியிலுள்ள பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பெரும்பான்மையான தெய்வங்கள், தம்பதி சமேதராக காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். மூலவர் பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர். இங்கு தட்சிணாமூர்த்தி தனது மனைவி தாராவுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், கல்வி, குழந்தைபேறு, திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பாரிஜாதவனேசுவரர் கோவில்
முருகப் பெருமான் சிவஸ்வரூபமாகத் திகழும் தலம்
திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ.. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருக்களர். இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் ஆறு முகங்களுடன் தனியே குரு மூர்த்தமாக மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறுமுகப் பெருமான் இங்கே சிவபெருமானின் கட்டளைக்கிணங்கி, துர்வாசரோடு 60,000 முனிவர்களுக்கும் நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர (ஐந்தெழுத்து) மந்திரத்தை உபதேசித்து அருளினார். சிவஸ்வரூபமாகத் திகழும் ஆறுமுகப் பெருமான் இங்கே இச்சா, கிரியா சக்திகளான வள்ளி-தெய்வானை அல்லாமல் குரு மூர்த்தமாக காட்சி அளிக்கின்றார்.
இவ்வாலயத்தின் அதிமுக்கிய விழாவாக 'பஞ்சாக்ஷர உபதேச விழா' விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது. வருடந்தோறும் மார்கழி மாதம் சஷ்டி திதி, சதய நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் மாலை 6 மணியளவில் கந்தன் குருமூர்த்தியாக எழுந்தருளி பஞ்சாக்ஷர மந்திரத்தை துர்வாசருக்கும், அடுத்து துர்வாசர் சகல உயிர்களுக்கும் உபதேசம் செய்வது இன்றுவரை வெகு சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. இத்தலம் முருகப் பெருமானின் திருப்புகழ் வைப்புத் தலமாக உள்ள

திருமுருகநாதர் கோவில்
கூப்பிடு விநாயகர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்.
ஒரு சமயம், தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தனது நண்பரான சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான் நாயனாரின் அழைப்பை ஏற்று சேர நாட்டிற்கு சென்று சில நாட்கள் தங்கி அங்குள்ள கோயில்களை தரிசித்தார். பின்னர் அவர் திருவாரூருக்கு திரும்பும் போது. சேரமான் பெருமான் பல பரிசு பொருட்களைக் கொடுத்து சுந்தரரை சிறந்த முறையில் வழியனுப்பினான்.
தனக்கு வேண்டியதை இறைவனிடம் முறையிட்டு பெறுவது சுந்தரரின் வழக்கம். ஆனால் தற்போது தன்னிடம் வேண்டாமல் சேரமான் பெருமானிடம் பரிசுப் பொருட்களைப் பெற்று வருகிறானே என எண்ணிய சிவபெருமான், பரிசுப் பொருள்களுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வரும் போது, தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி, சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார்.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சுந்தரரை, விநாயகப் பெருமான் கூப்பிட்டு சிவபெருமான் குடிகொண்டிருந்த கோவிலைச் சுட்டிக் காட்டி உதவினார். கூப்பிட்டு உதவியதால் அங்கிருந்த விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார். இன்றைக்கும் இழந்த பொருட்களை மீண்டும் பெறுவதற்கு இவரை வணங்கிப் பலன் பெறுகின்றனர்.
பொருள் இழந்த கவலையுடன் சுந்தரர் திருமுருகன்பூண்டி சென்று அங்குள்ள இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று சுந்தரர் சிவனைத் திட்டிப் பதிகம் பாட, அவரது பாடலில் மகிழ்ந்த சிவன் அவரது பொருட்களைத் திருப்பியளித்து ஆசி வழங்கியதாக தவரலாறு உள்ளது.
வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய(வேடுபறி நடந்த இடம்) கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.

பழனியப்பர் கோவில்
வேடன் கோலத்தில் முருகன்
முருகனின் மூக்கு, முகவாய், மார்பில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுககுறிச்சி என்னும் இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில், கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பழனியப்பர் கோவில். 240 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலைக் கோவிலுக்கு கார் மூலம் செல்ல ரோடு வசதியும் உண்டு. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி, தமிழ் மூதாட்டி அவ்வையார் ஆகியோர் வழிபட்டு இருக்கிறார்கள்.
முருகன் மும்மூர்த்திகளின் தொழிலை பூலோகத்தில் செய்த தலம்
ஒரு சமயம் முருகன், பிரம்மாவிடம் சென்று, ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டார். பிரம்மாவுக்கு அதன் பொருள் தெரியவில்லை. விஷ்ணு, சிவன் ஆகியோரிடமும் கேட்டார் முருகன். அவர்களும் சரியான பதில் சொல்லவில்லை. படைப்பது, காப்பது, அழிப்பது ஆகிய முக்கிய முத்தொழில்களைச் செய்யும் இந்த மூவரையும், முருகன், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஏனெனில், அவருக்கு ஓம் என்ற மந்திரத்தின் பொருள் தெரியும். எல்லாம் நானே என்பதுதான் அந்த மந்திரத்தின் எளிய பொருள். பிரம்ம சாஸ்தா என்னும் பெயருடன் பூலோகம் வந்து, மும்மூர்த்திகளின் தொழிலையும் முருகனே மேற்கொண்டார்..முருகன் தங்கிய தலம் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள பேளுக்குறிச்சி கூவை மலை. கூவை என்பது கழுகு போன்ற பெரிய பறவை. வானத்திலிருந்து கூவை மலையைப் பார்த்தால், கழுகு சிறகை விரித்திருப்பது போல காணப்படுவதால் இப்பெயர் வந்தது.
வேடன் கோலத்தில் கையி ல் சேவலுடன் காட்சி தரும் முருகன்
இத்தல முருகனுக்கு பழனியாண்டவர் எனப் பெயர். இங்குள்ள முருகனின் கையில் சேவல் கொடிக்கு பதிலாக, சேவலே இருப்பதைக் காணலாம். பழனியாண்டவரை நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று தரிசித்தால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால், பெண் வடிவமாகவும் காட்சி தருவது விசேஷத்திலும் விசேஷம். சக்தியும் - சிவனும் இணைந்த அர்த்தநாரீஸ்வர வடிவம் என இதைக் கொள்ளலாம். எனவே, இவருக்கு சக்தி அதிகம். மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலையைப் போலவே, பழனியில் நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார், போகர் சித்தர். முருகன், வேடன் கோலத்தில் இருப்பதால், தலையில் கொண்டையும், வேங்கை மலர்க்கிரீடமும், கொன்றை மலரும், ருத்திராட்ச மாலையும் சூடியபடி இருக்கிறார். காலில், காலணி, வீரதண்டை அணிந்திருக்கிறார். இடது கையில், வேலும், இடுப்பில், கத்தியும், வலது கையில், வஜ்ரவேலும் தாங்கியிருக்கிறார்.
மூலவர் பழனியப்பர் சிவபெருமான் பார்வதியின் அம்சம் என்பதால், அவர் நெற்றியில் இருக்கும் மூன்று பட்டை விபூதிக் கோடுகள் சிவனையும், விபூதியின் மேல் இருக்கும் குங்குமப்பொட்டு பார்வதியையும் குறிக்கிறது.
முருகனின் மூக்கு, முகவாய், மார்பில் வேர்வை துளிர்க்கும் அதிசயம்
இக்கோவிலில் நடக்கும் பவுர்ணமி பூஜை மிகவும் விஷேசமானதும் தனிச் சிறப்பும் கொண்டது..இரலில் முருகனுக்கு அபிஷேகம் முடிந்தவுடன், மூலவரின் மூக்கு, முகவாய் மற்றும் மார்பில் இருந்து வியர்வை துளிர்க்கும். அப்போது மூன்று விதமான நறுமண வாசனை முருகனின் திருமேனியிலி ருந்து வெளிப்படும்.
பின்னர் முருகனுக்கு அலங்காரம் செய்து நள்ளிரவு 11.50 மணிக்கு கருவறைக் கதவை மூடிவிடுவார்கள். பௌர்ணமி நள்ளிரவில் சித்தர்கள் வந்து முருகனை பூஜை செய்து வழிபடுவார்கள் என்பதால்தான் கருவறைக் கதவை அடைத்து விடுவார்கள். பின்னர் கதவை திறந்து பார்த்தால் முருகனுக்கு பூஜை நடந்த தடயங்களும், முருகனின் அலங்காரம் கலைந்த நிலையும் காணப்படும். இந்த அதிசயம் இன்றளவும், ஒவ்வொரு பௌர்ணமி பூஜையன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
யானைப்பாழி தீர்த்தம்
மலையடிவாரத்தில் யானை வடிவிலான வற்றாத சுனை காணப்படுகிறது. இதை, யானைப்பாழி தீர்த்தம் என்பர். திலுள்ள நீரை உடலில் தெளித்தால், தோல் மற்றும் எலும்பு நோய் நீங்கும் என்பர். இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கண்ணாயிரநாதர் கோவில்
இழந்த பொருள்களை மீட்டுத் தரும் சொர்ணாகர்ஷண கால பைரவர்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, பிரதான சாலை ஓரத்திலேயே திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில் உள்ளது.
இத்தலத்தில் மூன்று பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். மூன்று பைரவர்களுக்கு நேரெதிரில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாள். மகாலட்சுமி பார்த்துக் கொண்டே இருப்பதால், இவர்களை வணங்கினால் செல்வம் வந்து சேரும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

ஆண்டளக்கும் ஐயன் கோவில்
தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் ஐயன்
கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திவ்யதேசம் ஆதனூர்.. தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு 'ஆண்டளக்கும் ஐயன்' என்பதே திருநாமமாக விளங்குகிறது.
ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கனுக்கு திருமதில் எழுப்பும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார் திருமங்கையாழ்வார். அப்போது அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. தன் குறை நீங்கி பணி நிறைவு பெற உதவிடுமாறு, ஸ்ரீரங்கநாதனிடம் முறையிட்டார். அன்று அவரின் கனவில்தோன்றிய பெருமாள், ‘கொள்ளிடக்கரையில் வந்து தேவையான பொருளைப் பெற்றுக் கொள்’ என்று கூறினார்.
அதன்படி, கொள்ளிடக்கரை வந்த திருமங்கையாழ்வார், ஒரு வணிகரைச் சந்தித்தார். அந்த வணிகர், ‘உங்களுக்கு உதவி செய்ய எனக்கு கட்டளை வந்துள்ளது. நான் உங்களோடு வருகிறேன். வேலையாட்களுக்கு என்னிடம் உள்ள மரக்காலால் மண்ணை அளந்து தருவேன். உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு மண்ணாகவும் இருக்கும்’ என்று கூறினார்.
அந்த வணிகரிடம் ஒரு மரக்கால், ஏடு, எழுத்தாணி ஆகிய மூன்று பொருட்கள் இருந்தன.
ஸ்ரீரங்கத்தில் திருப்பணி செய்த வேலையாட்களுக்கு மரக்காலால் வணிகர் மணலை அளந்து தர, அது ஒருசிலருக்குப் பொன்னாகவும், சிலருக்கு மணலாகவும் இருந்தது. மணலை கூலியாகப் பெற்றவர்கள் வணிகரை அடிக்க முற்பட்டனர். வணிகர் ஓட, அவர் பின்னால் ஆழ்வாரும் ஓட, இருவரும் கொள்ளிடம் கரையில் உள்ள ஆதனூர் வந்து சேர்ந்தனர். அங்கே வணிகர், பெருமாளாக காட்சியளித்து மறைந்தார். இத்தலமே, இன்றைய ஆதனூர் என தலவரலாறு குறிப்பிடுகிறது.

பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்
ஒரே மண்டபத்தில் இரண்டு நந்திகள்
கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் வழியில் கீழக்கொருக்கை அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை. பூக்களை பூமியில் சிருஷ்டித்ததால், உமையவள் புஷ்பவல்லி எனும் திருநாமம் கொண்டாள். அம்பிகை சன்னதி தனியாக தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் கருவறையின் முன் இருக்க வேண்டிய நந்தியும் அம்மன் சன்னதி முன் இருக்க வேண்டிய நந்தியும் ஒன்றாக வெளி மண்டபத்தில் அமர்ந்து இருக்கின்றன. இப்படிப்பட்ட அமைப்பை வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாது. முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

காயாரோகணர் கோவில்
சிம்ம வாகனத்துடன் காட்சி தரும் பைரவர்
பொதுவாக சிவபெருமானின் அம்சமான பைரவர் நாய் வாகனத்துடன், கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி எழுந்தருளி நமக்கு காட்சி அளிப்பார்.
ஆனால் நாகப்பட்டினம் காயாரோகணர் கோவில் குளக்கரையில்(புண்டரீக தீர்த்தம்), தெற்கு திசை நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் பைரவர், சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இப்படிப்பட்ட பைரவரின் கோலத்தை நாம் காண்பது அரிது. இங்கு சிம்ம வாகன பைரவர் உக்கிர மூர்த்தியாக விளங்கியதால், இவருக்கு எதிரில் இரட்டை பிள்ளையார் பிரதிஷ்டை செய்து இவரை சாந்தப்படுத்தி இருக்கிறார்கள். இவருக்கு அருகில் இருக்கும் புண்டரீக தீர்த்தமானது மார்கழியில் கங்கையாக மாறி விடுவதாக ஐதிகம். அதனால் சிம்ம வாகன பைரவர், காசி காலபைரவருக்கு இணையானவர் என்று கருதப்படுகிறார்.தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தந்தருளும் மகாசக்தி கொண்டவர் பைரவர். சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். சுக்கிர தோஷம் விலகும்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த பலத்தைத் தரும். எதிர்ப்புகள் தவிடுபொடி யாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். பைரவரை, தேய்பிறை அஷ்டமி நாளில், வணங்கி னால், அஷ்டமத்து சனி உள்ளவர்களும், ஏழரைச் சனியால் பீடித்திருப்பவர்களும் கிரக தோஷம் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள்.
தெரு நாய்களுக்கு உணவளிப்பது நமக்கு பைரவரின் அருளைப் பெற்றுத் தரும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
பில்லி முதலான சூனியங்கள் அனைத்தும் விலகும். வீட்டின் வாஸ்து குறைபாடுகளும் நீங்கப் பெற்று, நிம்மதியும் முன்னேற்றமும் பெறலாம்.