
வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்
கம்பருக்கு அருளிய துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கதிராமங்கலம் வன துர்க்கை அம்மன் கோவில். கதிராமங்கலம் தலத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. தேரழுந்தூரில் வாழ்ந்து வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அன்னை வனதுர்க்கையின் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்த ஒரு செயலையும் துவங்குவதில்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. வீட்டுக்குள் மழை நீர் கொட்டியது. அப்போது கம்பர் மனமுருகி, "அம்மா! அடைமழை இடைவிடாது பெய்கிறதே. ஒரு கூரைகூட இல்லாமல் நீயே நனைந்தபடி நிற்கிறாய்! உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும்' என்று மழையைப் பொருட்படுத்தாது ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீட்டுக் கூரை நெற்கதிர்களால் வேயப்பட்டு இருந்ததைக் கண்டு வியந்து, "கதிர்தேவி, கதிர்வேய்ந்த மங்களநாயகி' என பாடிப் பரவினார். கதிர் வேய்ந்த மங்கள நாயகி இருக்குமிடம் கதிர் வேய்ந்த மங்களம் என்று அழைக்கபடலாயிற்று. பின்னர், கதிர் வேய்ந்த மங்களம் என்பதே கதிராமங்கலம் என மருவியது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
போர் வீரன் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
மதுரையில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் (சுமார் 2 கி.மீ.) அமைந்திருக்கிறது புத்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் 'புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன், நாகாசுரன் என்ற கொள்ளையன் இப்பகுதி மக்களைத் துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறை நாகாசுரன் மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு போர் வீரன் கோலத்தில் வந்து அவனைத் தடுத்தார். கோபமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவர் மறைந்து விட்டார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார்.கோவில் கருவறையில்m மூலவர் சுப்பிரமணியர் போர் வீரன் கோலத்தில், இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்து காட்சி தருகிறார். இத்தகைய முருகனின் கோலம் வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாகும். முதலில் சுப்பிரமணியர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையைப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது முருகனின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலைப் பிரதிஷ்டை செய்தனர். பயந்த சுபாவம், மனக்குழப்பம் உள்ளவர்கள், அக்குறை நீங்க இத்தல முருகனைப் பிரார்த்திக்கிறார்கள்.

பாரிஜாதவனேசுவரர் கோவில்
நடராஜ பெருமானின் இரண்டாவது தாண்டவ தலம்
திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருக்களர். இறைவன் திருநாமம் : களர்முளை நாதர், பாரிஜாதவனேசுவரர். இறைவி : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேசுவரிதுர்வாச முனிவர், சிவபெருமானின் ஆனந்த தாண்டவ தரிசத்தைப் பெற விரும்பினார். திருக்களர் தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை கொண்டு வந்து இங்கு வளர்க்கலானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் பிரதிஷ்டை செய்து, தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எடுப்பித்தார். இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரம்ம தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது. சிவபெருமான் நர்த்தனக் கோலம் காட்டிய இடம் என்பதனால் களரி (நடன சபை) என இத்தலம் அழைக்கப்பட்டு, பின்பு களர் என மருவியது. இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

மீனாட்சி அம்மன் கோவில்
விநாயகப் பெருமானின் நான்காம் படைவீடு மதுரை சித்தி விநாயகர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதி, விநாயகரின் ஆறுபடைவீடுகளில் நான்காவது வீடாகும். மீனாட்சி அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் தரிசனத்தைப் பெறலாம். உருவில் சிறியவராக இருந்தாலும், அருள் தருபவரில் சக்தி மிக்கவர். தன்னை வழிபடுபவர்களுக்கு வாழ்வின் எல்லா சித்திகளையும் (வெற்றி) அருளும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும்.
மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் (நரியை பரியாக்கிய லீலை) இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

சுந்தரேசுவரர் கோயில்
குரு பகவானுக்கு 'குருபலம்' வழங்கிய உமாமகேஸ்வரர்
கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கி.மீ. தொலைவில் திருலோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் குரு பகவான் உமாமகேஸ்வரரை பூஜித்து மக்களுக்கு குருபலம் அருளும் வரம் பெற்றார்.நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. பொன்னுக்கு ஏமம் என்ற ஒரு பெயரும் உண்டு. இத்தலத்தில் குரு, ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் ஏமநல்லூர் என்ற பெயர் முற்காலத்தில் இந்த தலத்திற்கு இருந்தது. குரு பகவான் இத்தலத்தில் இறைவன் சுந்தரேசுவரரை உள்ளன்போடு பூஜை செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு அவருக்கு காட்சி தந்து,.'இந்த தலத்துக்கு வந்து உனது பார்வை பெறும் எல்லோரும் எல்லாவிதமான தோஷங்களும் விலகி 'குரு பலம்' பெற்று அவர்களது இனிய இல்லறம் சிறக்க ஆசிர்வதிக்கிறேன்; என்று அருளினார். இப்படி குரு பகவான் 'குருபலம்' பெற்ற நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். இந்த கோலத்தை தரிசித்த குரு பகவான் தனது வழக்கமான அபய முத்திரை விடுத்து, இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிக்கிறார்.
ரிஷப வாகன உமாமகேஸ்வரரின் அற்புத எழில் கோலம்
இக்கோவில் மகா மண்டபத்தில், ரிஷப வாகன உமாமகேஸ்வரரை நாம் தரிசிக்கலாம். அதி அற்புதமான அழகு உடைய இந்த வடிவம் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். ரிஷப வாகனத்தில் அம்பிகையை ஆலிங்கனம் செய்தபடி ஈசன் காட்சியளிக்கும் அழகே அலாதியானது. இடபத்தின் (காளையின்) முதுகின் மேலுள்ள அம்பாரியில் அமைந்திருக்கும் ஆசனத்தின் மீது ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் சடா மகுட தாரியாக ஒளிவட்டத்துடன் சிவபெருமான் அமர்ந்துள்ளார். அவரது வலப் பின்கரத்தில் திரிசூலம் உள்ளது. வலது முன்கரத்தால் அபயம் காட்டுகின்றார். இடக்கரங்களால் அருகே அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளார். அணிகலன்களும், உத்ரபந்தமும், புரிநூலும் தரித்துள்ள சிவபெருமானின் உடல் சற்றே வளைந்த நிலையில் தேவியைத் தாங்குகின்றதுசிவபெருமானுக்கு மேலே அழகிய மகர தோரணம் காணப் பெறுகின்றது. மகர தோரணத்திற்கு மேலே ஆணும் பெண்ணும் என எட்டு கந்தர்வர்கள் வீணை, உடுக்கை, மத்தளம், குழல், சிறுபறை, கைத்தாளம் போன்ற இசைக் கருவிகளை இசைத்தவாறு, மிதந்த வண்ணம் திகழ்கின்றனர்.உமாதேவி தன் இடக்காலைக் குத்திட்டவாறு, வலக்காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்துள்ளார். இடக்கரத்தில் மலர் ஒன்றினை ஏந்தியுள்ளார். நீண்ட கீழாடையுடன், ஒரு புறம் சரிந்த கொண்டையுடன் தன்னை அணைத்தவாறு அமர்ந்துள்ள சிவபெருமானின் முதுகினைத் தன் வலக்கரத்தால் பற்றியுள்ளார். பெருமானும், அம்மையும் அமர்ந்திருக்கும் மகர தோரணத்தோடு அமைந்துள்ள அம்பாரியின் பின்புறம் ஒரு சிவலிங்கம் புடைப்பு சிற்பமாக அமைந்துள்ளது.சிவபெருமான் உமாதேவி அமர்ந்திருக்கும் அம்பாரியானது, படுத்த நிலையில் உள்ள ஒரு காளையின் திமிலோடு இணைந்து ஒரே சிற்பமாக உள்ளது. காளை சிறிய கொம்புகள், விரிந்த காதுகள் ஆகியவற்றுடன் தோல் மடிப்புகளுடன் உள்ளது. பெரிய உருண்டை கோர்க்கப் பெற்ற கழுத்து கயிறு, சங்கிலி மாலை, மணிச்சக்கரங்கள் கோர்க்கப் பெற்ற பெரிய மாலை காளையின் கழுத்தை அணி செய்கின்றன. உமாமகேஸ்வரரின் அதி லாவண்ய ரூபத்தை தரிசிக்கவாவது, நாம் ஒரு முறை திருலோக்கி செல்ல வேண்டும்.
மன்மதன் மீண்டும் உயிர் பெற்ற தலம்
திருக்குறுக்கை தலத்தில், சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனை, அவனது மனைவி ரதிதேவியின் வேண்டுதலின் பேரில் சிவன் உயிர்ப்பித்து அளித்த சிறப்புக்குரிய தலம் இதுவாகும். ரதி - மன்மதன் இருவரும் உமாமகேச்வரருக்கு எதிரில், ஐந்தடி உயரத்தில், அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். உடனிருக்க காட்சி தருகிறார்கள். இந்த தெய்வீக காதலர்களின் சிலாரூபம் மிகுந்த நேர்த்தியும், கலைநயமும் உடையது ஆகும். இச்சிலையும் பார்ப்பவரின் மனதைக் கொள்ளை கொள்ளும்,
இல்லறம் அமைய, இனிக்க அருளும்
தலம்வரன் அமையாத இளைஞர்கள், இளம் பெண்கள், பிரிந்துபோன தம்பதிகள், திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்கள், விதி வசத்தால் முதல் திருமண வாழ்க்கை சரிவர அமையாதவர்கள் எல்லோரும் இங்கு வந்து உமாமகேச்வரப் பெருமானையும், குருபகவானையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள்.தனுசு ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய குரு பரிகாரத் தலம் இது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமான் சிவபூஜை செய்த தலம்
சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. 84 படிகள் கொண்ட குன்றின் மீது சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது.முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் 'கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் என்ற வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது.திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

நீர் வண்ணப் பெருமாள் கோவில்
பெருமாள் நான்கு நிலைகளில் காட்சி தரும் திவ்ய தேசம் சென்னை பல்லாவரத்திலிருந்து 6. கி.மீ. துரத்தில் இருக்கிறது திருநீர்மலை என்னும் திவ்ய தேசம்..இந்தத் தலத்தில் இரு நூறு அடி உயரமுள்ள ஓர் சிறிய மலை இருக்கிறது. மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.இந்தத் திவ்யதேசத்தில் பெருமாள் இருந்தான், நின்றான் கிடந்தான், நடந்தான்,என்று நான்கு கோலத்தில் காட்சி தருகிறார்.இந்த திருகோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் போல் சயன கோலத்தில் பெருமாளை காணலாம். மூலஸ்தானத்தின் வலது புறங்களில் நரசிம்ம பெருமாளும், வாமன அவதாரமான உலகலந்த பெருமாளும், மலையின் கீழே நீர் வண்ணப் பெருமாளும் காட்சி அளிக்கின்றனர்.நின்றான் என்பது மலையின் கீழ் உள்ள நீர்வண்ண பெருமாளையும், கிடந்தான் என்பது ரங்கநாதப் பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்திலும், நடந்தான் என்பது வாமன அவதாரமான உலகலந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையிலும், இருந்தான் என்பது நரசிம்மப் பெருமாள் சாந்தமாய் அமர்ந்த நிலையிலும் நான்கு விதமாகப் பெருமாள் காட்சி அளிக்கின்றார்.இத்தலத்தில் நரசிம்மப் பெருமாள் பால ரூபத்தில் காட்சி தருகிறார். இவரை "பால நரசிம்மர்' என்கின்றனர். இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் ரெங்கநாதரை அர்ச்சனை செய்து ,ஒரு துணியில் கருங்கல் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் வைத்து ,தல விருட்ச்சமான வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள் .இதனால் புத்ர பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம்

கண்ணாத்தாள் கோவில்
கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்
சிவகங்கையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாட்டரசன் கோட்டையில் அமைந்துள்ளது கண்ணாத்தாள் கோவில். இக்கோவில் கருவறையில் அன்னை கண்ணாத்தாள் சற்றே தலை சாய்த்து, சிலம்பணிந்த பாதத்தின் கீழ் அரக்கனை மிதித்தபடியும், மற்றொரு காலை மடித்து உயர்த்தியபடி காட்சி தருகிறாள். அம்மன், தன் எட்டு கரங்களில் கபாலம், அக்னி, சூலம், உடுக்கை, குறுவாள், கிளி, கேடயம், மணி ஆகியவற்றை தாங்கி இருக்கிறாள்.அம்மனுக்கு கண்ணாத்தாள் என்று பெயர் வரக் காரணம்பல ஆண்டுகளுக்கு முன், நாட்டரசன் கோட்டை ஊருக்கு வெளியில் காட்டுப் பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க, யாதவர் பலர் நாட்டரசன்கோட்டை வருவார்கள். அப்படி வரும்போது பிரண்டகுளம் கிராம எல்லையில் விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தாங்கள் வியாபாரத்திற்கு கொண்டு வந்ததை விற்க முடியாமல் போனதால் அவர்கள் வருமானமின்றி கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. அதனால் இந்த பிரச்சனையை சிவகங்கை மன்னரிடம் கொண்டு செல்ல முடிவு செய்தனர். சிவகங்கை மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன் எனக் கூறி மறைந்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில், மக்களிடம் தரையை தோண்டிப் பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள். அப்போது பள்ளம் தோண்டுபவரின் கடப்பாரையின் நுனி அவர் கண்ணில் பட்டு இரத்தம் கொட்டியது. அடுத்தவர் அந்த பணியை தொடர முற்பட்டார். அதை மறுத்த முதலாமவர் பணியைத் தொடர்ந்து செய்து அம்பாள் சிலையை மேலே கொண்டு வந்தார். அம்பாள் சிலை மேலே வந்த நிமிடத்திலேயே பாதிக்கப்பட்டவரின் கண் பார்வை சரியானது. அவருக்கு கண் கொடுத்த காரணத்தால், அம்மன் 'கண் கொடுத்த தெய்வம் கண்ணாத்தாள்' எனப் போற்றப்பட்டாள். பக்தர்கள் கண்ணுடைய நாயகி என்றும் அழைக்கத் தொடங்கினர்.கண்பார்வை பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரத் தலம்கண் பார்வை குறைபாடு உடையவர்கள், நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து அம்மனை தினமும் வழிபட்டு, அம்மனின் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண் பார்வை குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.

அமிர்தகடேஸ்வரர் கோவில்
விநாயகப் பெருமானின் மூன்றாம் படை வீடு
கள்ளவாரணப் பிள்ளையார்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிவன் சந்நிதிக்கு வலதுபுறத்தில், நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி கள்ளவாரணப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் சோர கணபதி என்பார்கள். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால், இந்தப் பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இத்தலம் விநாயகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு, விநாயகர் பூஜை செய்யும் முன்பாகவே அதை தேவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார். இதனால் விநாயகப் பெருமான் அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் கள்ள வாரண பிள்ளையார் எனப்படுகிறார். அந்த குடம் லிங்கமாக மாறி அமிர்தகடேஸ்வரர் ஆனது. இதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், பூஜைகள் இங்கு செய்வது சிறப்பாகும்.கள்ள வாரணப் பிள்ளையாரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிப்பார்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆங்கிலேய கலெக்டர் உணர்ந்த திருச்செந்தூர் முருகனின் தெய்வீக சக்தி
1803ம் ஆண்டில் ஆங்கிலேய கலெக்டராக திருநெல்வேலியில் பணிபுரிந்த லூசிங்க்டன் துரை, ஒரு முறை திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது முருகனுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாடுகளைக் கண்டார். அதில் முருகனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் 16 வகை உபசாரங்களைக் கண்டார். அதில் வெள்ளி விசிறியால் முருகனுக்கு வீசுதலும் ஒன்றாகும்.இதைப் பார்த்த லூசிங்க்டன் துரை, 'உங்கள் கடவுளுக்கு வியர்வை உண்டாகிறதோ' எனக், கேலி செய்து சிரித்தார். இதைக் கவனித்த அர்ச்சகர்கள், 'ஆமாம். எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்' என்றார்கள். பின்னர் லூசிங்க்டன் துரைக்கு முருகப் பெருமானின் சிறப்பை உணர்த்தும் விதத்தில் முருகப் பெருமானின் மேலிருந்த மாலைகளை எடுத்து விட்டு ஒரு புதிய துணியை முருகப் பெருமானின்மேல் போர்த்தினார்கள். கொஞ்சநேரத்தில் முருகப்பெருமான்மீது வியர்வை உருவாகி அந்த துணி முழுவதும் நனைந்தது. வியர்வை அதிகமாகி அது தரையிலும் ஓட ஆரம்பித்தது.இதற்குக் காரணம், திருச்செந்தூர் கோவில் முருகன் விக்ரகம் எப்போதும் மிகவும் சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால், அவர் திருமேனி எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது அதனால் அர்ச்சகர்கள் சந்தனைத்தை அரைத்து அதில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி அதனை, காலை நேரத்தில் முருகன் விக்ரகம் மீது முழுவதுமாக பூசி மூடி விடுவார்கள். விக்ரகத்தில் இப்படி பூசப்பட்டிருக்கும் சந்தனம், மாலை நேரத்தில் ஈரத்தினால் சொத சொதவென சிலை முழுக்க வழிந்து இருக்கும்.முருகப்பெருமானின் விக்ரகத்தில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டு லூசிங்டன் வியந்தர். வீடு திரும்பிய லூசிங்டன் கலெக்டருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவிக்கு திடீரென கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தார். தான் முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததாலேயே `தனக்கு இப்படி ஏற்பட்டதாக உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியாமல், தன்க்கு கீழே வேலை பார்க்கும் முருக பக்தர் ஒருவரிடம், முருகனின் கோபம் தணிய என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அவர் கூறிய யோசனையினபடி, முருகப்பெருமானிடம் தான் செய்தது தவறு, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அப்படி செய்தால் நான் என் சொந்த செலவால் உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறேன் என வேண்டினார். முருகனிடம் வேண்டி விட்டு வீடு திரும்பிய லூசிங்டன் பிரவு, மனைவியின் வயிறு வலி நீங்கியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார். உடனே அவர் முருகனுக்கு வேண்டிக் கொண்டபடி வெள்ளிப் பாத்திரத்தை கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுத்தார்.அவர் கொடுத்த வெள்ளிப் பாத்திரம் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 'லூசிங்க்டன் 1803' என்று பொறித்திருப்பதை நாம் காண முடியும்.

சாரங்கபாணி கோவில்
மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தாயாரின் திருநாமம் கோமளவல்லி ஆகும். இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கேற்றாற்போல், தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் கோவில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் காலை நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை, தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

பழமலைநாதர் கோயில்
விநாயகப் பெருமானின் இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் ஆழத்து விநாயகர்:
விநாயகரின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக அமைந்திருப்பது, திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில், .கோவில் நுழைவு வாயில் அருகே உள்ள முதல் வெளிப்பிராகாரத்தில், சுமார் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக, ஆழத்து விநாயகர் வீற்றிருக்கிறார். ஆழ் அகத்து விநாயகர் என்பதே ஆழத்து விநாயகர் என்று மருவி வழங்கப்படுகிறது. 16 படிக்கட்டுகள் இறங்கியே இவரைத் தரிசிக்க முடியும். இவருக்கு தனியாக கொடி மரம் அமைக்கப்பட்டுள்ளது. இவரை வழிபாடு செய்தபின், படியேறி மேலேறுவது போல் கல்வியுடன் சீரான செல்வமும் தந்து நம் வாழ்வினை மேன்மை அடையச் செய்வார்."

சுப்ரமணிய சுவாமி கோவில்
இரண்டு அடுக்கு கொண்ட முருகன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இரண்டு அடுக்காக அமைந்து இருக்கிறது.இந்தக் கோயிலைப் புதுப்பிக்கும்போது பழைய சிலையை எடுக்க முடியவில்லை.அதனால் பழைய முருகன் சிலை இருந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலை நிர்மாணித்து அதில் புதிதாக ஒரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோவில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது. இத்தலத்தில் முருகன் பாலகனாக தனித்து இருந்து அருள்புரிகிறார்.உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி” (கேணி – கிணறு) என்று பெயர் பெற்றது.

கோடீசுவரர் கோவில்
சனி பகவான் தலையில் சிவலிங்கம்
கும்பகோணத்துக்கு அருகில் திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோவில் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலம் உள்ளது.இங்குள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள சனி பகவான் தலையில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.இந்த சனி பகவான் 'பால சனி' என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக சனி பகவானுக்கு காகம்தான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்குள்ள சனி பகவானுக்கு கருடன் வாகனமாக அமைந்திருக்கிறது.மூலவர் கோடீசுவரர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இக்கோவிலில் சனீஸ்வரனை எமதர்மன்பார்ப்பது போன்றும் எமதர்மனை சனீஸ்வரர் பார்ப்பது போன்றும் அமைந்து இருக்கின்றது. இங்கு சுவாமியின் இடப்புறமாக சித்திரகுப்தன் இருக்கிறார் சனிபகவான், எமதர்மராஜன், சித்திரகுப்தன் இவர்கள் மூவரையும் தரிசித்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடியும்.சனி பகவானுடைய நீதிமன்றமாக திருக்கோடிக்காவல் அமையப் பெற்றுள்ளது.நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குப்படி, நமது பால்ய வயதில் அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, மரணச் சனி என்ற அனைத்து சனி திசைகளுக்கும், இத்தலமே நிவர்த்தி செய்யும் இடமாகும். நமது பால்ய வயதில் ஏற்பட்ட பாவ புண்ணிய வரவு-செலவு கணக்குகளை சரி பார்க்க கூடிய இடம் திருக்கோடிக்காவல். உலகத்தின் நீதிபதியாகிய பால சனீஸ்வரர் நமது பாவ புண்ணிய வரவு செலவு கணக்குகளை ஆராய்ந்து, அதை சித்திரகுப்தன் சரி பார்த்து எமதர்மனிடம் தீர்ப்பு சொல்லப்படுகிறது. தீர்ப்புக்கான பரிகார நிவர்த்தி இத்தலத்தில் செய்யப்படுகிறது. சாதாரணமாக இத்தலத்தில் யாரும் வழிபட்டு விடமுடியாது யாருக்கு எந்த வயதில் இந்த ஊழ்வினை கர்மா தீர்க்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே இத்தலத்திற்கு சென்று வழிபட முடியும். சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

கோடீசுவரர் கோவில்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, ;திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப்போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்,

கோடீசுவரர் கோவில்
சகல பாவங்களும் தொலைந்து போகும் திருக்கோடிக்காவல்
மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டதால், இத்தல இறைவனின் திருநாமம் 'கோடீசுவரர்’ ' என்றும், ஊர் 'திருக்கோடிக்கா' என்றும் ஏற்பட்டது. மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்றன. ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட பெருமை உடையது இத்தலம்.காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்று வரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள். இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம். தலத்தின் தீர்த்தமான் காவிரியில் கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.லோக காந்தா என்ற பெண்மணி, தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்தாள். அவள் தன் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், யம தூதர்கள்,, அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் சென்றார்கள். சிவ தூதர்கள், அவர்களை வழிமறித்தனர். உடனே யமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்.சிவபெருமான், தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிட்டார். பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று கூறி யமதர்மராஜன், இத்தலத்தை விட்டு நீங்கினான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைந்தாள்.

அருணாசலேஸ்வரர் கோவில்
விநாயகப் பெருமானி ன் முதல்படை வீடு
திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர்:
விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அல்லல்போம் விநாயகர், பஞ்சபூதத் திருத்தலங்களில் அக்னிக்குக்குரிய தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் கிழக்கு இராஜகோபுரத்திற்குள்ளேயே அல்லல்போம் விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த வினைதீர்க்கும் விநாயகர், தொன்மைச் சிறப்பு வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். இவர், நாம் செய்த தீவினைகள் யாவையும் அழித்து, நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை அருள்பவர். அண்ணாமலையாரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த விநாயகரையும் வழிபட்டால் துன்பம் அகலும் என்பது ஐதீகம்.

வேத நாராயண சுவாமி கோவில்
பாதி மனித உருவமும் மீதி மீன் வடிவமும் கொண்ட பெருமாள்
சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக்கோட்டையைத் தாண்டி, , ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தின, நாகலாபுரம் என்ற ஊரில் உள்ளது வேத நாராயண பெருமாள் கோவில். பெருமாளின் திருநாமம் வேத நாராயணப் பெருமாள். தாயாரின் திருநாமம் வேதவல்லித்தாயர். இத்தலத்தில், திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தருவது, இத்தலத்தின் சிறப்பாகும். திருமால், தலையிலிருந்து இடுப்பு வரை மனித வடிவமும், இடுப்புக்கு கிழே மீன் வடிவமும் கொண்டுள்ளார்.திருமாலின் தசாவதாரங்களில் முதல் அவதாரம், மச்ச அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன், பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி, மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . திருமால் மச்ச வடிவில் அவதாரம் எடுத்து, கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார். நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக, இத்தலத்து பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது.

பஞ்சமுகேஸ்வரர் கோவில்
ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்கம்
திருச்சியில் திருவானைக்காவல் கோவில் அருகே பஞ்சமுகேஸ்வரர் கோவில் உள்ளது. இறைவன் திருநாமம் பஞ்சமுகேஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி. கருவறையில் பஞ்சமுகேஸ்வரர் கிழக்கு திசையை நோக்கி ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் நான்குபுறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒருமுகமாக கணக்கிடப்பட்டு பஞ்ச முகமாக காட்சி தருகிறார். பஞ்சமுக லிங்கத்தின் ஆவுடையார், ஒ ரு தாமரைப் பீடத்தின் மேல் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். நான்கு திசைகளையும் பார்க்கும்படி முகங்கள் அமைந்திருப்பதால், எந்த திசையில் இருப்பவரையும் இவர் காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலில் பஞ்சமுகேஸ்வரர் சன்னதி எதிரிலேயே திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி அமைந்திருக்கிறது. இதனால் நாம் இருவரையும் ஒரு சேர தரிசிக்க முடியும். இப்படி இறைவன் இறைவி சன்னதிகள் எதிர் எதிரில் அமைந்திருப்பது அபூர்வமானது. இப்படி இருவரையும் தரிசிப்பதால், திருமணம் கைகூடும். மங்கலங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலில் சஷ்டி அப்த பூர்த்தியை செய்வது விசேஷமாகும்.

மீனாட்சி அம்மன் கோவில்
புலிக்கால் விநாயகர்
விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்ட தோற்றத்தில் தான் நாம் தரிசனம் செய்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் சன்னதிக்கு வெளியே உள்ள துவாரபாலகர்கள் உள்ள மண்டபத்தில் பெண் உருவ பிள்ளையார் இருக்கிறார். இவர் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி இருக்கிறார். யானை முகமும், கால் முதல் இடை வரை புலியின் உருவமும், இடை முதல் கழுத்து வரை பெண் உருவமும் கொண்டிருக்கிறார். இவருக்கு புலிக்கால் பாதங்கள் இருப்பதால், இவரைப் ‘புலிக்கால் விநாயகர்’ என்று அழைக்கின்றனர். வடமொழி நூல்களில் ‘வியாக்ரசக்தி கணபதி’ (வியாக்ரம் என்றால் புலி) என்று இவரைக் குறிப்பிடுகின்றனர். புலிக்கு இணையான சக்தி அளிப்பவர் என்று இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.